Wednesday, September 14, 2005

ஓர் இடைச்செருகல்...

நான் ஏன் மதம் மாறினேன்...?..7 - என்றில்லாமல் அடுத்த கடைசிப் பகுதியை "எனக்கு மதம்பிடிப்பதில்லை" என்ற தலைப்பில் தருவதாக எண்ணம்.

வசதி கருதி இதுவரை எழுதிய பதிவுகளை 'உல்ட்டா' பண்ணுவதாக உத்தேசம். முதல் பகுதியிலிருந்து கடைசிப் பகுதிவரை வருவது மாதிரி 1 to 7 என்று மாற்றிப் பதிகிறேன். குழப்பமாயிருக்காதென்றே எண்ணுகிறேன்.

au revoir..!

175. நான் ஏன் மதம்/மனம் மாறினேன்..7

*

*

தொடர்புடைய மற்றைய பதிவுகள்:

1.
2.
3.
4.
5.
6.
7.
8.



இஸ்லாம் மதத்தைப் பற்றிய என் ஐயங்களை என் மதங்களைப்பற்றிய 6-ம் பதிவில் எழுப்பியிருந்தேன். பொதுவான சிலவற்றைப் பற்றிப் பேசிவிட்டு ‘இனி என் ஐயங்கள்’ என்று தலைப்பிட்டு 21 ஐயங்களைப் பட்டியலிட்டிருந்தேன். இதற்கு விளக்கமளிக்க வந்த பதிவுகளில் என் முதல் கேள்விக்குப் பதிலளிக்கப்பட்டுவிட்டது. நன்றி.

1.)பழைய ஏற்பாடு இரு (கிறித்துவம், இஸ்லாம்)மதத்தினருக்கும் பொது எனப்படுகின்றது. கிறித்துவர்களின் பைபிளில் ஆதாம் - ஏவாள் படைப்பைப் பற்றி சொல்லும்போது ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்பதை, இது ஓர் ஆணாதிக்க விளக்கம் என்று கூறியிருந்தேன். ஆனால், முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ? - இது என் கேள்வி.

(கேட்டிருக்கும் கேள்விகளில் இந்த முதல் கேள்வியை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். ஏனெனில் அக்கேள்விக்கு நண்பர்கள் பதில் கொடுத்துவிட்டார்கள். அந்த முதல் பெண்ணுக்கு ‘அவ்வா’ (AWWA) என்று பெயர் குரானில் சொல்லியுள்ளதாக விளக்கியுள்ளார்கள். விளக்கத்திற்கு நன்றி. )

இதன் பிறகு சில பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவைகளை நான் கேள்விகளாகவே பொதுவில் வைக்கவில்லை. நான் அறிந்தவரையில் சொன்ன சில காரியங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அவற்றைப் பொறுத்தவரை எனக்கு அவைகள் அவ்வளவு முக்கியமானவைகளாகத் தெரியவில்லை. .

1) குர்ஆன் குகையில் கொடுக்கப்பட்டதா? - குரான் எப்படி எங்கே கொடுக்கப்பட்டது என்பது எனக்கு முக்கியமாகப் படவில்லை. கொடுத்தவைகளாகக் கருதப்படுபவைகளில் எனக்கு வந்த ஐயங்களைத்தான் நான் தொகுத்திருக்கிறேன்.

2) முஹம்மது நபி எழுதப்படிக்கத் தெரிந்த வர்த்தகரா ? - சில கருத்து வேறுபாடுகள் உண்டென்று படித்ததைக் கூறியுள்ளேன். அவர் கற்றவரா கல்லாதவரா என்ற விவாதத்தை நான் வைக்கவில்லை. எப்படியிருந்திருந்தாலும் அது எனக்கு உடன்பாடே.

3) சில போர்களில் தோற்றது ஏன்? god is always on the side of bigger battalion என்று சொல்லப்படுவது நினைவுக்கு வந்தது!

4) இஸ்லாத்தில் பெண்களின் நிலை:

Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி; வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் இப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார் . - தருமி

இதுவும் நான் கேள்வியாக வைக்காத ஒன்று. ஆயினும், நான் சொன்னதையும், அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலையும் (கீழே கொடுக்கப்படுள்ளது) படித்துவிட்டு, படித்தவர்கள் அவர்களே ஒரு தீர்மானத்திற்கு வந்து கொள்ளட்டும். அதில் எனக்கு விவாதத்திற்கு இடமோ தேவையோ இல்லை. ஆனால், நிச்சயமாக எனக்கு இந்த விளக்கம் சரியானதாக இல்லை. வளர்ப்பு மகனின் விவாகரத்திற்குப் பின் அந்தப் பெண்ணையே வளர்ப்புத் தந்தை மணம் புரிவது தவறல்ல என்ற இந்த கூற்று எனக்கு வியப்பையே அளிக்கிறது.

“இதில் என்ன குற்றம் கண்டீர்? ஒரு பெண்ணை கணவன் விவாக ரத்து செய்தபின் இன்னொருவர் மறுமணம் செய்யக் கூடாது என்கிறீர்களா? அல்லது வளர்ப்பு மகன் உண்மையான மகனாவான் என்கிறீர்களா ?”

5) படைப்புக்கொள்கை - “இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால் , நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான் ? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?”

- இதற்கும் நான் பதில் சொல்லத் தயாரில்லை. முற்றிலும் குரானுக்கு எதிர்மறையான விவாதம் அது; முடிவிருக்காது; விவாதிப்பதில் எந்த பயனும் இருக்காது.ஆயினும் என் இரண்டாவது கேள்விக்குரிய பதிலாக இதை எடுத்துக் கொள்கிறேன்.

-. 3-வது கேள்விக்கு அது கிறித்துவ மத நூல்களில் நடுவில் ஏற்பட்ட மாற்றங்களையும், திரிபுகளையும் பொருத்தது என்று கூறப்படலாம். அதனையும் ஒதுக்கி விடுவோம்.

- 6-வது கேள்வி சுவனம் பற்றியது. நேரடி பதில் இதற்குக் கொடுக்கப்பட்டு விட்டதா என்பதை நடுநிலை நோக்கர்கள்தான் கூற வேண்டும். எனக்கு அந்தப் பதிலில் ஒப்புதல் இல்லை.

“56:22 (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்” அவர்கள் பெண்கள் என்பதானாலும், சுவனம் செல்லும் ஆண்களுக்கு “44:54 இவ்வாறே (அங்கு நடைபெறும்). மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.” என்பதனாலும் - ஆண்களுக்கு இத்தகைய சுவனம் காத்திருக்கிறதென்றால் பெண்களுக்கு எப்படிப்பட்ட சுவனம் என்று கேட்டிருந்தேன். குதர்க்க விவாதம் என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டு விட்டது !

ஆக, என் 21 கேள்விகளில், முதல் கேள்வி, கேள்வியே தவறானது என்று ஒப்புக்கொள்கிறேன். இரண்டாவது, மூன்றாவது, ஆறாவது கேள்விகளுக்குப் பதில் தரப்பட்டுள்ளன. அந்தப் பதில்களை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேனா என்பது வேறு விஷயம். 4-வது கேள்வி, அதன்பின் முக்கியமாக 5-வது கேள்வி - அது எனக்கு மிக முக்கியமாகப்படுகிறது. (இந்த வன்முறை கடவுளுக்கும்-மனிதனுக்கும் நடுவே வருவது ஆச்சரியம் மட்டுமல்ல; அதி பயங்கரமும் கூட.)மீதிக் கேள்விகளும் இருக்கின்றன.

இந்த நிலையில் புதிதாக ஒரு கேள்வியும் சேர்ந்து விட்டது. அதை பட்டியலில் சேர்த்து விடுகிறேன். திருப்திகரமான பதில் கிடைத்த முதல் கேள்வியை விட்டுவிட்டு இந்தக் கேள்வியை என் அந்தப் பழைய பதிவில் சேர்த்துள்ளேன். just an updating.

அந்தக் கேள்வி:

குர்ஆன் 25 : 68: ‘அவர்கள் எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்.(காரணத்தோடு கொல்லலாம் என்று பொருள் படுகிறதே?’ - கொலை செய்பவனுக்கு ஒரு காரணம் கண்டுபிடிப்பதா பெரிது?)

5:32: “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலுடைய மக்களின் மீது நாம் விதியாக்கினோம்.

5:33 அல்லாஹ்வுடனும், அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு, பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது அவர்கள் கொல்லப்படுதல், அல்லது அவர்கள் தூக்கிலிடப்படுதல்; அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்படுதல் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுதல்…

கிறித்துவத்தில் ‘கொலை செய்யாதே’ என்பது ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளது; சமணத்தில் நுண்ணுயிர்களைக் கூட கொல்லக் கூடாதென்ற தத்துவம்; பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்கிறது தமிழ்மறை; எல்லா உயிரும் ஒன்றே, உயிர்க்கொலை தவறு என்கிறது இந்து மதம். இந்த கோட்பாடுகளில் எந்த clasue, sub-clause-ம் கிடையாது, அதாவது இந்தந்த மாதிரி நேரங்களில் மட்டும் கொலை செய்யலாம் என்ற விலக்குகள் தரப்படவில்லை. கொலை என்பது ஒட்டுமொத்தமாக தவறு; பாவம் என்றுதான எல்லா மதங்களும் போதிக்கின்றன. இந்த இடத்தில், நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர்களையும், மனிதர்களுக்கு நடுவில் நடக்கும் சண்டைகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாதென நினைக்கிறேன். நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர் என்றால் அங்கு 'கீதையின் விதிகள்தான்' எங்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால் மனிதர்களுக்குள்ளும் அந்த விதிகள் பொருத்தமாகக் கூடாது.

இஸ்லாமியத்தில் மட்டும் கொலை செய்வதற்கு ஏன் சில விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எப்போதெல்லாம் மனிதர்கள் கொலை செய்யலாம் -

ஏதாவது ஒரு சரியான காரணம் கொண்டு -
கொலைக்குப் பழியாக -
குழப்பத்தைத் தடுக்க -
அல்லாஹுடனும், அவன் ரஸுலுடன் போர் செய்பவர்களை -
குழப்பத்தை உண்டாக்குபவர்களை -

இந்த சமயங்களில் எல்லாம் கொலை செய்வது சரி என்பது தெய்வ கட்டளையானால்
...

கொடூரக் கொலைகாரர்கள்கூட தாங்கள் செய்யும் கொலைக்குக் கூட இதில் ஏதாவது ஒரு "சரியான" காரணத்தைக் காட்ட முடியுமே - கோட்சே ஒரு உதாரணம் போதுமே! ஒவ்வொரு கொலையும் யாரோ ஒருவரால் - நிச்சயமாக கொலை செய்தவனால் - காரண காரியங்களோடு நியாயப்படுத்த முடியுமே! அதோடு பழி வாங்குவது, அதற்காகக் கொலை செய்வது அனுமதிக்கப்படுகிறதே! இவைகள் எப்படி சரியாகும்.

புரிதலுக்காகவே இந்தக் கேள்வி.


*

அடுத்த பதிவுக்கு: 8ம் பதிவுக்கு.

*

Friday, September 09, 2005

65. வந்தாச்சு...வந்தாச்சு

வந்தாச்சு...வந்தாச்சு... broad band வந்தாச்சு.

இரண்டு நாள்ல வந்திடும்னு பணம் கட்டும்போது சொன்னாங்க; ஒரு வாரம் ஆனதும், தொலைபேசியில் அழைத்துக் கேட்டபோது ' நாங்கள் என்ன செய்யமுடியும்' என்று சொல்லி, பிறகு, modem வரலைன்னு சொல்லி, அதன் பிறகு password வரலை software வரலைன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இப்ப என்னடான்னா, திடீரென்று ஒரு மாருதி ஆம்னி வந்து நிற்க, மூன்று பேர் வந்து எல்லாத்தையும் முடிச்சுக்கொடுத்திட்டாங்க. கொடுத்த grape juice-யைக் (நானே செஞ்சதாக்கும்)குடித்து முடிக்கும் நேரத்தில் இணைப்பையும் கொடுத்திட்டாங்க.

நான் நினைக்கிறேன் - கேப்டன் எனக்குக் கொடுத்த கொ.ப.செ. பற்றி எப்படியோ அவங்களுக்கு நியூஸ் போயிரிச்சி; அதுதான் அவசர அவசரமா கொண்டு வந்து மாட்டிட்டாங்கன்னு. எப்படி அந்த நியூஸ் வெளியே போச்சு? இதுதான் இந்த வலைப்பதிவாளர்களோட; இந்த நியூஸை வெளிய சொல்லிராதீங்கன்னு நான் சொல்லியும் யாரோ வெளிய் லீக் அவுட் பண்ணீட்டாங்க போல.

14-ம் தேதி நெருங்குது. அதுக்குப் பிறகுதான் வேலை நிறைய இருக்கு.

Thursday, September 08, 2005

புதுசு...கண்ணா/கண்ணி...புதுசு...

பெருசா ஒண்ணும் இல்லீங்க. ஒரு சின்ன இடைச்செருகல்தான். நம்ம ப்ளாக்ல நேத்து சில பழைய படங்கள் கொஞ்சம் சேத்திருக்கேன். பாருங்க.

எவ்வளவு பழசுன்னா, அதில ஒரு சின்னப்பொண்ணு படம் இருக்கே, அந்த பொண்ணுக்கு இப்போ ரெண்டு பசங்க இருக்காங்க; என் பேரப்பசங்க!

Sunday, September 04, 2005

63. முதன் முதலாய் பறந்தபோது...

ஒரு இந்தி தெரியாதவனின் வடநாட்டுப் பயணம்...3
(அல்லது)
முதன் முதல் பறந்தபோது...


நான் முன்பே ஒரு பதிவில் சொன்னபடி, நான் அப்போது அமெரிக்கன் கல்லூரியில்
'சித்தாளு வேலை' பார்த்து வந்தேன். முதலில் லெக்சரர் பதவி வந்தபின் கல்யாணம் என்று சொல்லி வந்தேன். ஆனால் அது நடப்பது போல் தெரியாததால், சரி, இரண்டில் ஒன்றையாவது முடிப்போமே என்று வீட்டில கல்யாணத்திற்குச் சரி என்றிருந்தேன். அதே நேரம் மதுரைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் லெக்சரர் பதவிக்கு கொஞ்சம் முயற்சி எடுத்திருந்தேன். இந்த நிலையில்தான் வட நாட்டுப் பயணம். இப்போது அந்தக் கல்லூரியிலிருந்து நேர்முகத்தேர்வுக்கு நாள் குறித்துவந்த சேதியைத்தான் அப்பா தந்தி மூலம் அனுப்பியிருந்தார்கள். அந்த தந்தி இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வந்திருந்தால் ரயில் மூலம் மதுரைக்குச் சரியான நேரத்தில் போய்ச் சேர்ந்திருக்கலாம். தந்தி வந்த நேரத்தால் அந்த வாய்ப்பு நழுவிப் போச்சு. என்ன செய்வது என்றறியாத நிலையில் இருந்தேன். உறவினர் விமானத்தில் போய்விடு என்றார். அப்போதெல்லாம் என்னைப் போன்ற lower middle class ஆட்களுக்கு விமானம் என்பதெல்லாம் கனவே. அதை நாங்கள் நினைத்தும் பார்ப்பதில்லை. ஆனாலும் அவர் சொன்னதும் சரி போய் விடுவோம் என நினைத்தேன். இதுவரை, எல்லாம் பம்பாயில் வாங்கிக்கொள்ளலாமென நினைத்து பணம் அதிகம் செலவு செய்யாமல் வைத்திருந்தேன். அந்த பணம் போதுமா என்றும் தெரியாது. விமானப் பயணத்திற்கு என்ன செலவாகும் என்று யாருக்குத் தெரியும்? உறவினர் அந்த விவரத்தைக் கேட்டுச் சொன்னார். டிக்கெட் வாங்க பணம் தேறும்போல் தோன்றியது. மீதி 40-50 ரூபாய் தேறும். அதில் மதராஸ்-மதுரை பஸ் டிக்கெட் போக 10-15 மீதும். அது போதும் வழிச்செலவுக்கு என்று கணக்குப் போட்டாகி விட்டது. அரை மனதோடு திட்டம் போட்டாகிவிட்டது.

விமான டிக்கெட் எடுக்கப் போனேன். இனிமே எப்போ விமானம் ஏறப்போகிறோம்; இந்த ஒரு தடவை போவதிலாவது ஜன்னல் ஓரமா உக்காந்து போனா நல்லாயிருக்குமே என்று நினைப்பு. ஆனால், 'எனக்கு ஜன்னல் பக்கத்தில் ஒரு சீட் கொடுங்க'ன்னு கேக்கலாமான்னு தெரியாது. டிக்கெட் கொடுப்பவரும் ஏதோ கூட்டம் அலை மோதுவது போல என்னென்னமோ பாத்து பாத்து டிக்கெட் கொடுத்தார். சரி, நம்ம அதிர்ஷ்டத்தைதான் பார்ப்போமே என்று சாமி மேல பாரத்தைப் போட்டுவிட்டு டிக்கெட் எடுத்தாச்சு. அப்படி இப்படி ஒரு வழியா சரியான நேரத்திற்கு விமான நிலையம் வந்தாச்சு.. அங்கு வந்தபின் ஒரு சந்தேகம். கையில் ஒரு சின்ன சூட்கேஸ் வைத்திருந்தேன். அதுக்கு தனியாக ஏதும் பணம் கொடுக்க வேண்டியதிருக்குமா என்றொரு ஐயம். யார்கிட்ட போய் கேட்க? என்ன செய்வது என்று முழிச்சிக்கிட்டு இருந்தேன். அங்கே நம்மள மாதிரியே அச்சு அசலா ஒரு சூட்கேஸ் வ்ச்சுக்கிட்டு ஒரு இளைஞர் உட்கார்ந்திருந்தார். மெல்ல அந்தப் பக்கம் போய், ரொம்ப casualஆக இருக்கிறது மாதிரி pose கொடுத்துக்கிட்டு, ஒரு 'சார்மினாரை'ப் பத்த வச்சிக்கிட்டு ரொம்ப styleஆக 'Excuse me, do you have to pay anything for this?' அப்டின்னு எடுத்து விட்டேன். அவர் உடனே, 'ஹி..ஹி..I am also going by flight for the first time'அப்டின்னு வழிஞ்சார். அப்போதான் நானும் அப்படிதான் வழிஞ்சிருப்பேன்னு தெரிஞ்சது. அவரும் நம்மள மாதிரி டென்ஷன் பார்ட்டிதான்னு புரிஞ்சுது. ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கலாமாவென பார்த்தா அவர் கல்கத்தா போற பார்ட்டி. சரி விடு, (என்ன பார்த்திபன்-வடிவேலு ஜோக் மாதிரி) நம்மள என்ன நடுவழியில இறக்கியா உட முடியும்; பாத்துக்கலாம். இனி வேற வழியும் இல்ல அப்டின்னு நினைச்சுக்கிட்டேன். கடனோ உடனோ சொல்லி சமாளிச்சிதான் ஆகணும் என்றும், அந்த இளைஞரைப் பார்த்ததால் வந்த தைரியமுமாக இருந்தேன்.

ஆனாலும் இந்த டென்ஷனில் நாக்கெல்லாம் காஞ்சு போச்சு. அங்க இருந்த கடைப் பக்கம் போனேன். அதைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம். எல்லாரும் full suit-ல இருந்தாங்க. நானோ தனியாளா பயணம் வந்ததாலே அநேகமா எல்லாமே T-shirtsதான்; காலில் ஒரு சாண்டல். ஒரு பக்கிரிமாதிரி இருந்ததாக ஞாபகம். எக்கச் சக்கமா காம்ப்ளக்ஸ் ஆயிப்போச்சு. உடம்பெல்லாம் ஒரே கூச்சம். அந்தக் கூட்டத்துக்குள் செல்லவே தயக்கம். ஒரு வழியா அந்தக் கூட்டம் நகர்ந்துச்சு அந்த இடத்த விட்டு. ஆனாலும் இன்னும் தயங்கி நின்றேன். பிறகு என்ன கையிலிருந்த காசுக்கு கோகோ கோலாவா குடிக்கமுடியும்? (அப்போ கோகோ கோலா இங்க இருந்திச்சு). என்ன செய்யலாம் என்று யோசனையில இருக்கும்போது, 'இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே'. அந்தக் கடை ஆட்கள் எல்லாம் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். பத்தாதா நமக்கு. ஒரு தமிழ்ச்சங்கமே ஆரம்பிச்சிர மாட்டோமா; மதுரக்காரனா, கொக்கா. 'அண்ணன் கொஞ்சம் தண்ணி கொடுங்க' என்றேன். ஆஹா, என்னே நம் தமிழுணர்வு. முதலாளி, 'டேய், சாருக்கு ஐஸ் வாட்டர் எடுத்துக்கொடு' என்றார். வாழ்க அவர்தம் தமிழுணர்வு!

ஒருவழியா விமானத்தில் ஏறும் நேரம் வந்தது. விமான வாயிலில் சேலை கட்டிய அப்சரஸ் ஒன்று -அதாங்க, விமானப் பணிப்பெண் - நின்று கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் நான் முதன் முதலாக ப்ளேனில் ஏறப்போவதைத் தெரிந்து வைத்திருப்பதுபோல எனக்குள் ஒரு வெட்கம். தகுதிக்கு மீறிச் செயல் படுவதுபோல ஒரு தயக்கம். அந்த அம்மாவைப் பார்க்காமலேயே உள்ளே வந்தாச்சு. இந்தக்காலத்து ஆளுங்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் too much அப்டின்னு தோணும்; நான் சொல்றது மிகைப்படுத்திக் கூறுவதுமாதிரி தெரியும். உண்மைதான். அதேமாதிரி அன்றைக்கு எனக்கு இருந்த மனப்பாங்கும் உண்மைதான். இப்போ விமானப்பயணம் அப்படி ஒன்றும் பெரிய விதயம் இல்லைதான். ஆனால், அன்று நிலை வேறு. ஜாவா மகாத்மியத்தில் சொன்னது மாதிரி அப்போவெல்லாம் பைக் வைத்துக்கொள்வதே ஒரு பெரிய காரியம் மட்டுமல்ல; வைத்துக்கொண்டால் என்ன என்ற mind set கூட கிடையாது. காசு இருந்தால்கூட அதெல்லாம் நமக்கு எதுக்கு என்ற மனப்பாங்கு. அந்த நேரத்தில் எனக்கு விமானப்பயணம் அதுமாதிரி; அதுவும் திடுமென்று முன்னால் குதிச்சு வந்து நின்றது அந்த வாய்ப்பு. எல்லாம் அதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள்தான்.

உள்ளே ஆளுங்களே ரொம்ப கம்மியா இருந்தோம். நம்ம வரிசையில ஆளே இல்ல. ஆஹா, வசதியா போச்சுன்னு ஜன்னல் பக்கம் உக்காந்துட்டேன். ஜெயகாந்தன் ஒரு இடத்தில சொல்லியிருக்கிறார்: பிரச்சனைகளைத் தீர்ப்பது மட்டுமல்ல வாழ்க்கை; பிரச்சனைகளைத் தீர்ப்பதும், புதிய பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்டு அவைகளைத் தீர்ப்பதும்தான் வாழ்க்கைன்னு'. அதுதாங்க இப்ப எனக்கு. உள்ளே ஏறுவது ஒரு பிரச்சனை; அதை தீர்த்தாச்ச்சு. இப்ப அடுத்த பிரச்சனை: இடுப்புக்கு பெல்ட் போடறது. இது என்ன பெரிய விதயம்ன்னு சொல்லிடுவீங்க உங்களுக்கென்ன தெரியும் நான் பட்ட கஷ்டம்.

கேப்டன் சொல்லியாச்சு பெல்ட்டெல்லாம் போட்டுக்குங்கன்னு. முன்னால இருந்து பணிப்பெண் ஒவ்வொருவரா பாத்துக்கிட்டே வர்ராங்க. பெல்ட் போடமுடியலைன்னா ஒருவேளை அவுகளே போட்டு விடுவாகளோன்னு ஒரு ஜில்லு நினப்பு வரத்தான் செஞ்சுது. இருந்தாலும் நம்ம first timer-ன்னு அவுகளுக்கு எதுக்கு தெரியணும்னு ஒரு நினப்பு. அவுக அங்க முன்னால இருந்து வந்துக்கிட்டு இருக்காக. நான் வேகமா பெல்ட்டை மாட்டி ஒரு இழு இழுத்தேன். என் ராசி, முக்கால்வாசி வந்த பெல்ட் அதற்கு மேல் வருவேனா என்றது. நான் இழுத்து இழுத்துப் பாக்கிறேன்; வரமாட்டேங்குது. அந்த அம்மா வந்துகிட்டே இருக்காக. பார்த்தேன். ஜன்னல் எனக்கு வலது பக்கம் இருந்திச்சு. மீதி லூசா இருந்த பெல்ட்டை வலது விலாப் பக்கம் மடிச்சு கையைவச்சு விலாவோட அமுக்கி வச்சுக்கிட்டு, 'நமக்கு இதல்லாம் சகஜமப்பா'ன்ற மாதிரி ஜன்னல் பக்கம் வெளியே பாத்துக்கிட்டு, அந்த அம்மா வர்ரதே நமக்கு தெரியாதமாதிரி உக்காந்திட்டேன். என்ன அப்டியா ப்ளேன்ல இருந்து கீழேயா விழுந்திடப்போறோம் அப்டிங்கிற தைரியம்தான்.

அதுக்குப்பிறகு ஒரு 20 நிமிடம் பறந்த பிறகு ஏதோ எஞ்சின் பிரச்சனைன்னு மறுபடி பம்பாய் போய் இரண்டு மூன்று மணி நேரம் உட்கார வச்சிட்டு மறுபடியும் அதே மாதிரி 'அழிச்சி கிழிச்சி' புதுசா பயணம் ஆரம்பிச்சது. அந்தக் கதையை இப்ப உட்ருவோம். என்ன, ஒரு தடவை கொடுத்த காசுக்கு இரண்டு தடவை take off and landing கிடச்சுது.

இப்ப மறுபடியும் பறக்கிறோம். இனி மறுபடி எப்ப பறக்க முடியுமோ முடியாதோ, அதனால இந்த தடவையே 'அதை' செஞ்சு பாத்திடணும்னு ஒரு ஆசை; ஆனாலும் அதே தயக்கம். என்ன ஆசைன்னு கேக்கலியே. ஓடுற...இல்ல..இல்ல.. பறக்கிற விமானத்தில 'மூச்சா' போயிடணும்னுதான்; தப்பா நினச்சுக்காதீங்க; 'லூ'வுக்கு போய் அங்கதான். மனசு கேக்குது; ஆனாலும் உடம்போ மறுக்குது. இந்த போராட்டம் முடியறதுக்குள்ள மதராஸ் வந்திருச்சி. அதனால 29 வருஷம் நான் மூச்சா போகாம அடக்கிக்கிட்டேன் - என்ன சொல்லவந்தேன்னா, 29 வருஷம் பறக்கிற ப்ளேனில் மூச்சா போகணுங்ற ஆசையை அடக்கிக்கிட்டேன்னு சொல்ல வந்தேன். நடுவில ஒரு நல்ல விதயம். ஜன்னல் வழியா பாத்துக்கிட்டே வந்தேனா. அதுக்குப்பிறகு பறந்த நேரங்களில் பார்க்காத காட்சி ஒன்று இன்றும் அப்படியே நெஞ்சில் பதிந்த ஓவியமாய்... வேற ஒண்ணுமில்ல. கீழே பார்த்த பஞ்சுக்குவியல். அதில் ஒன்று: ஆரஞ்சுப்பழத்தை உரித்து, பின் அதன் மேல் பகுதியில் சுளைகளை விரித்து வைத்தால் எப்படி இருக்குமோ அது மாதிரி ஒரு மேகப் பொதி. இன்றும் என் ஜன்னலின் வழியே பார்க்கும்போது அதை என் கண்முன்னால் கொண்டுவர முடிகிறது.

மதராஸ் வந்தாச்சு. விமானப் பயணிகளிலே நான் ஒருவன் மட்டுமே நடந்தே வெளியே வந்து பஸ் ஸ்டாப்புக்கு வந்தவன். அங்கிருந்த ஒருவரிடம் பாரிஸுக்கு எந்த பஸ் என்று கேட்டதும் கொஞ்ச நேரம் என்னையும் என் பெட்டியையும் பார்த்துவிட்டுப் பின் பதில் சொன்னார். மதுரை பஸ்ஸில் அருகில் இருந்தவர் பேச்சுக்கொடுத்தபடி வந்தார். எங்கிருந்து வருகிறீர்கள் என்றார். பம்பாயிலிருந்து, விமானத்திலிருந்து என்றெல்லாம் கதைவிடாமல் அடக்கி வாசிச்சேன். மதுரைக்கு வந்த பிறகும் அப்பாவிடம் சொல்லாமல், மைத்துனரிடம் மட்டும் சொல்லிவிட்டு நேர்முகத்தேர்வுக்கு விரைந்தேன். அந்தக் கல்லூரியில் சேர ஒரு 'தகுதி' வேண்டியதிருந்தது. ஜாதி. அதுகூட என்னிடம் இருந்தது. ஆனாலும், மதமும் சேர்ந்துவிட்டதால் என் பழைய மாணவர் ஒருவருக்கே அந்த பதவி கிடைத்தது. நல்ல வேளை எனக்கு அங்கு கிடைக்கவில்லை.

திரும்பி வீடு வந்ததும் அப்பா 'என்னடா, எப்படியிருந்தது விமானப்பயணம்' என்றார். மைத்துனர் அதற்குள் 'ஊதி வைத்திருந்தார்'போலும். ஆனால், நான் நினைத்தபடி அப்பா ஒன்றும் சொல்லவில்லை. அதற்குப் பதில் நான் நேர்முகத் தேர்வுக்குப் போனபின் ஏதோ வேலை இருப்பதுபோல் பெண் வீட்டுக்குச் சென்று வேறு ஏதோ பேசுவதுபோல் அப்படியே 'மகன் வந்திட்டான்; இன்னைக்கு காலைலதான்; flight-ல வந்திட்டான் போல' அப்டின்னு ஏதோ பய நித்தம் நித்தம் இப்படிதான் விமானத்தில போய்ட்டு போய்ட்டு வந்துக்கிட்டு இருக்கான் அப்டிங்றது மாதிரி ஒரு build up கொடுத்து நம்ம image-யை ஒரு தூக்கு தூக்கி விட்டுட்டு வந்திட்டாங்க.

என்ன, கல்யாணத்துக்குப் பிறகு 'இவ்வளவு ஊருக்கெல்லாம் போய்ட்டு வந்த ஆளுக்கு எனக்கு ஏதாவது வாங்கிட்டு வரணும்னு தோணலியே'ன்னு இடிச்சப்போ செங்கோட்டையில எச்சரிச்ச அந்த அம்மா ஞாபகம்தான் வந்தது. ஒண்ணும் வாங்காம வந்ததுக்கு 'வாங்கின'தென்னவோ வாங்கினதுதானே...!