Showing posts with label கொரோனாவும் நானும். Show all posts
Showing posts with label கொரோனாவும் நானும். Show all posts

Thursday, September 03, 2020

1107. கொரோனாவும் நானும் ... 4


*

ஏனைய பதிவுகள் …….

1. https://dharumi.blogspot.com/2020/08/1103-1.html

3. https://dharumi.blogspot.com/2020/08/1105-3.html

4. https://dharumi.blogspot.com/2020/09/1107-4.html

 

*

கைத்தொலைபேசி கையோடு இருந்ததால் நேரம் பார்க்க முடிந்தது. யார் கண்டது தேதியையும், நாளையும்? இது பற்றாது என்பதுபோல் நினைவுகளும் அப்போது அத்தனை துல்லியமாக இல்லை. நாட்கணக்கு, கிழமைக் கணக்கு என்று ஏதும் தெரியாது. இரண்டு நாட்கள் இந்த வார்டில் இருந்திருப்பேன். வேறு நல்லதொரு அறைக்கு மாற்றலாம் என்று என்னை இரண்டாவது மாடியில் உள்ள அறைக்குச் செல்ல, தள்ளு நாற்காலியில் வைத்து அழைத்துச் சென்றனர். ஒரு நடு வயது பெண்மணி அழைத்துச் சென்றார்கள். சமூக இடைவெளிக்காக மின்தூக்கி வேலை செய்யாது என்று என்னை வைத்துத் தள்ளிக்கொண்டே சென்றார்கள். பாவம் அவர்கள்.. மூச்சு அப்படி வாங்கியது. தள்ளிக் கொண்டு ஒரு ஹாலுக்குள் நுழைந்தார்கள். கீழே நானிருந்தது போலவே இதுவும் ஒரு நீண்ட ஹால்.. மத்தியில் மருத்துவர்களுக்கான சிற்றறை இங்கே இல்லை. கட்டில்கள் அனைத்தும் ஓர் ஓரத்தில் கிடந்தன.  ஒரு கட்டிலைத் தேர்ந்தெடுத்து மின் விசிறிக்கு அடியில் நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்து எனக்காகத் தயார் செய்தார்கள். எல்லாம் முடிந்து நான் கட்டிலில் உட்கார்ந்ததும் ஆக்சிஜன் மாஸ்க் போட தயாராகும் போது தான் தெரிந்தது - அந்த ஹாலில் ஆக்சிஜன் கொடுப்பதற்கான வசதிகள் கிடையாது  என்பது. உடனே மீண்டும் பழைய ஹாலுக்குஏ திரும்பி வந்தோம். ஏறத்தாழ இந்த ‘பயணத்திற்கு’ 30 நிமிடங்கள் எடுத்திருக்கலாம். ஆனால் அதற்குள் நான் படுத்திருந்த கட்டிலில் வேறு யாரோ “பால் காய்த்து” குடியேறிவிட்டார்கள்.

நல்ல வேளை இன்னொரு இடம் உடனே கிடைத்தது. அதுவும் முதலில் இருந்ததை விட நல்ல இடம். மருத்துவ சிற்றறைக்கு ஒட்டிய கட்டில்; முன்பு போலவே சிற்றறைக்கு மேற்கு புறத்தில் கிடைத்தது. பழைய சூழல். ஆனால் என்ன .. முன்பு கட்டிலின் இரு புறமும் என்னைப் போன்ற நோயாளிகள். இப்போது ஒரு புறம் மட்டும் அந்தத் ‘தாக்குதல்’ இருக்கும்; இன்னொரு பக்கம் மருத்துவ அறைப் பக்கம் திரும்பியிருந்து கொள்ளலாம். இன்னொரு நாள் அங்கே கழிந்தது. அடுத்து சென்றது வசதியான இன்னொரு வார்டு. அதன் பெயர் எல்லாம் சொல்ல மாட்டேன். எதற்கு இதை வாசிக்கும் (எண்ணிக்கையில் மிக சிலரே இதை வாசிக்கிறீர்கள்; மற்றவர்கள் எல்லோருக்கும் வாசிக்க அச்சம் போலும்!)  எல்லோரையும் அச்சுறுத்த வேண்டும்.

அந்த வார்டுக்குள் நுழைந்ததும் அத்தனை அழகாக இருந்தது அது. ஹாலிவுட் படங்களில் வரும் அமைப்பில் இருந்தது. நட்ட நடுவே மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்குமான வட்ட வடிவமான Doctors' Well. உள்ளே அவர்களுக்கான செயலிடங்கள் அழகாக இருந்தன. அந்த வட்டத்தைச் சுற்றி இன்னொரு பெரிய வட்டமாக இருந்தது. படுக்கைகளும் ஒரு பக்கம் வரிசையாக இருந்தன. ஏ.சி. இருந்தது. ஆனால் படுக்கைகளுக்கு நடுவே மிக மிகச் சிறிய இடம் மட்டுமே இருந்தது.அடுத்த கட்டிலில் படுத்திருப்பவரைத் தொட்டுக் கொள்ளக் கூடிய அளவில் அருகாமை. அவ்வளவு வசதியிருந்தும் கழிவறையில் இந்திய வகை மட்டுமே இருந்தது. ஜெகன் அதற்கு உடனே மாற்று ஏற்பாட்டுக்கான வழியைக் கண்டு அதை வாங்கி வந்து விட்டார். இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் கோவிட் மட்டுமில்லாது அனைத்து நோயாளிகளும் இங்கு வருவார்கள் போலும்; அதனால் தான் death rate அதிகமாகக் கண்ணில் பட்டது .. சில சமயங்களில் அருகருகே…

அப்படியும் ஒன்று நடந்தது. மாலை ஒருவர் பக்கத்து கட்டிலுக்கு வந்தார். அவருக்கு ஆக்சிஜன் மாஸ்க் வைக்க மருத்துவர்களும் உறவினர்களும் முயற்சித்தும் முடியவில்லை. நான் தூங்கி விட்டேன். திடீரென்று இரவு கண் விழித்தேன். என்னைச் சுற்றி கூட்டமாக மருத்துவர்களும், செவிலியர்களும் நிற்பது போல் தெரிந்தது. பிறகுதான் தெரிந்தது… பக்கத்துக் கட்டில் நோயாளிக்காக நிற்கிறார்கள் என்று.  அப்போது இரண்டரை மணி.  அவருக்கான சிகிச்சை அடுத்த நாளும் தொடர்ந்து கொண்டிருந்தது. அடுத்த நாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று மருத்துவர் ஒருவர் வேகமாக ஓடி வந்து எனது கட்டிலுக்கும் அடுத்த கட்டிலுக்கும் இடையில் இருந்த சிறு இடைவெளியில் நுழைந்து CPR கொடுக்க முனைந்தார். அந்த முயற்சியில் என் கட்டிலும் சேர்ந்தே ஆடியது. எங்கே இனி சாப்பிட முடியும். சிறிது நேரத்தில் கட்டில் ஆடியதும் நின்றது; அவரது வாழ்வும் முடிந்தது.

நல்ல வேளை. இது நடந்து முடிந்த அடுத்த நாள் காலை மறுபடி என்னை பழைய green zone வார்டுக்கு அழைத்துச் சென்றார்கள். இம்முறை மருத்துவச் சிற்றறைக்குக் கிழக்குப் பக்கம், அந்த மருத்துவ அறைக்குப் பக்கத்திலேயே கட்டில் கிடைத்தது. இதில் அடுத்த இரு நாள் கழிந்தது. ஏனோ இப்பகுதி அமைதியாகவும், அதிக இழப்பும் இல்லாமல் இருந்தது. என்னால் இப்போது ஓரளவு ஆக்சிஜன் இல்லாமல் இருக்க முடிந்தது. தேவையான நேரத்தில் வைத்தால் போதும் என்பது போல் இருந்ததால் பக்கத்து கட்டில் நடப்புகளையும் பார்க்க முடிந்தது.

பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சுற்றி நடந்தன. இதே வார்டில் இரு நாட்களுக்கு முன் நானிருந்த போது பக்கத்து கட்டிலில் இருந்த கணவன் மனைவி இருவரிடமும் யாரோ ஏஜென்ட் ஒருவர் ஒரு மருத்துவமனையைப் பற்றிச் சொல்லி, 4 லட்சம் வேண்டுமென்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது என் உடல் அந்த அளவு நன்றாக இல்லை. அவர்களிடம் நான் ஏதும் பேசவில்லை. ஆனால் இப்போது உடல் கொஞ்சம் நலமாக இருந்ததால் இரண்டாவது  கட்டிலில் இருந்த ஒரு தம்பதியிடம் நடந்த உரையாடலைக் கேட்க முடிந்தது. ஒரு ஆட்டோரிக்‌ஷா ட்ரைவர் வந்து பேசியிருப்பார் போலும். ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கொடுத்தால், சுகமாக்கி விடுவார்கள் என்று கூறியிருப்பார் போலும். கணவனுக்குத்தான் உடல் நலமில்லை; இளம் வயது தான். அவரின் மனைவி கடன் வாங்க தொலைபேசியில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த அளவு வசதியில்லாத ஆட்கள். கடனுக்காக அலை மோதிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முடிவு தவறாகப் பட்டது. அந்தப் பெண்ணை அழைத்து உங்கள் முடிவு சரியில்லை; அவருக்கு இன்னும் கட்டாயம் ஆக்சிஜன் தேவைப் பட்டது. அதுவே அந்தப் பெண்ணுக்கான கவலை. அவரிடம் நான் இரு நாட்களுக்கு முன்பு அதே நிலையில் இருந்தேன். அதே போல் அவருக்கும் சுகமாகிவிடும். மருத்துவம் மிகவும் சரியாகச் செய்கிறார்கள். யாரோ சொன்னதை நம்புவதை விட இங்கே இத்தனை பேர் மருத்துவம் பார்க்கிறார்களே அவர்களை நம்புவது மேல் என்று சொல்லி விட்டு, ஆனால் முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்திருக்கும் என்று நம்பினேன். அவர்களிடம் பேசிய சில மணி நேரங்களில் என்னை மூன்றாவது மாடியில் உள்ள தனி அறைக்கு எடுத்துச் சென்றார்கள். நல்ல வேளை இப்போது மின் தூக்கி வேலை செய்தது. அங்கே தனி அறை. ஒரு மாலையும் இரவும் அங்கே தங்கியிருந்தேன். அங்கேயும் தொடர்ந்து மருத்துவக் கவனிப்பு இருந்தது. வழக்கமாக இரவு இரண்டிலிருந்து இரண்டரை மணிக்குள் மருத்துவர்கள் வந்து ஆக்சிஜன் அளவு அல்லது ஊசி மருந்து கொடுப்பது என்று கவனிப்பார்கள். இங்கும் அதே கவனிப்பு இருந்தது.

அடுத்த நாள் காலையில் இன்று வீட்டுக்குப் போகலாம் என்றார்கள். (இதன் தொடர்ச்சி முதல் கட்டுரையில் …)

வீட்டிலும் ஆக்சிஜன் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். முதல் இரண்டு மூன்று நாள் அவ்வப்போது அது தேவையாக இருந்தது. இரவு நேரமாகினும் மகள் உதவியோடு சிறிது நேரம் தேவைப்படும் போது வைத்துக் கொண்டேன். சிறிது நடந்தாலும் ஏறத்தாழ 15-20 நிமிடத்திற்கு மூச்சு வாங்கும். மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்குது என்பார்களே, எனக்கு வயிற்றுக்குள் பெருச்சாளி ஓடும். நாளாக நாளாக பெருச்சாளி மெல்ல எலியாக,மூஞ்சூராக மாறியது.

ஆனாலும் அனைத்து மருத்துவர்களும் என் வயதைக் காரணமாகச்சொல்லி முழுமையான குணம் பெற இரண்டு மூன்று மாதங்கள் எடுக்கும் என்று கூறியுள்ளார்கள்.

வண்டியைத் தள்ளிச் செல்ல வேண்டும்…..


(என் 3வது கட்டுரையை அதிகமாக யாரும் வாசிக்க விழையவில்லை போலும். ‘எத்ற்கு இந்தக் கழுதையை வாசிக்க வேண்டு’மென்று நீங்கள் நினைத்திருக்கலாம். அதனால் சிறிது விவரணைகளைச் சுருக்கி இதோடு முடித்துக் கொள்கிறேன்.

முக்கியமாக இதை எழுத இரு காரணங்கள்:

வீட்டோடு முழுமையாக இருந்தும் எனக்கு வந்து விட்டது -- 

1. கொரோனாவைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

2. அரசு மருத்துவ மனையில் நான் பெற்ற மருத்துவம் முழுமையாகவும், சிறப்பாகவும் இருந்தது. 

3. ஆனால் தனி மருத்துவ மனைகளுக்கு இது ‘காசு பார்க்கும்’ நேரமாக ஆகிவிட்டது. ஒரு ஊசி 60,000 ரூபாய் என்று மூன்று ஊசி போட்டு முதல் 3 நாளிலேயே நண்பர் ஒருவரிடம் இதற்கான 1.80,000  வாங்கி விட்டார்கள். எனக்கும் முதல் நாள் போட்ட ஊசி கொஞ்சம் விலை அதிகமானது என்றார்கள். ஆனால் இப்படி ஒரு பகல் கொள்ளை அங்கு ஏதுமில்லை. நானும் யோசித்துப் பார்த்தேன்... 60,000 ரூபாய்க்கு ஒரு ஊசி. ஒரு வேளை உலகிலேயே மிக அதிகமான விலையுள்ள PLACEBO  என்ற மருந்தாக இருக்குமோ? (PLACEBO பொருள் தெரியாதவர்கள் அகராதியைப் பார்த்துக் கொள்ளுங்கள்.  இதுபோன்ற பகல் கொள்ளைகள், ஏஜெண்டுகள் என்பவையிலிருந்து சிலர் தற்காத்துக் கொள்ள முடியும் என்ற காரணத்தால் இதை எழுதினேன். கசப்பாக, நீண்டதாக போனமைக்கு மன்னிக்கவும்.)

 




*

Sunday, August 30, 2020

1105. கொரோனாவும் நானும் ... 3




*

ஏனைய பதிவுகள் …….

1. https://dharumi.blogspot.com/2020/08/1103-1.html

3. https://dharumi.blogspot.com/2020/08/1105-3.html

4. https://dharumi.blogspot.com/2020/09/1107-4.html

 

மருத்துவ மனையில் சேர்ந்த முதல் நாள் இரவில்தான் முதல் ஷாக் வந்தது. ஆனால் அடுத்த நாளே இந்த ஷாக்குகள் பழகிப் போக ஆரம்பித்து விட்டன.  புதுக் கட்டிடத்தில் தான் green zone என்று பெயரிடப்பட்ட எங்கள் வார்டு இருந்தது. பழைய மருத்துவ மனையை ஏறத்தாழ 25-30 ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்கிறேன். ஒரு வாழும் நரகம் போல் தோன்றும். எங்கும் அழுக்கு .. எச்சில்.. கழிவு நீர்… வெராண்டாவில் படுத்திருக்கும் நோயாளிகள் என்று அச்சமுறுத்தியன அந்தக் காலத்தில். ஆனால் இப்போது அப்படியேதும் அச்சம் தரும் நிலையில்லை. சுத்தம் இருந்தது; அதிகக் கூட்டமில்லை. ஆனாலும் வார்டுக்குள் நுழைந்ததும் முதலில் சிறிது பயம் தான் வந்தது. நீண்ட ஹால் .. எதிர் எதிராக இரு வரிசையாகப் படுக்கைகள்; படுக்கைகளுக்கு நடுவே ஒன்று அல்லது ஒன்றரை அடி இடைவெளி தானிருந்தது. ஹாலின் நடுவே மருத்துவர்களுக்கான சிறிய அறை. அதனால் ஹால் இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தன. எனக்கு முதலில் அந்தச் சின்ன மருத்துவ அறையின் மேற்குப் பக்கத்தில் இருந்த பகுதியில், வடக்குப் பக்கம் இருந்த வரிசையில்.. நட்ட நடுவே எனக்கு ஒரு கட்டில் கிடைத்தது. (நிலைமை அப்படித்தான்… ஏதோ ஒரு நோயாளி ஏதோ ஒரு நிலையில் - அதாவது உயிரோடு அல்லது அது இல்லாமலே ‘வெளியே’ சென்றால் தான் அடுத்தவருக்கு இடம் என்ற நிலை!) அப்படிப்பட்ட கூட்டத்திலும் எனக்கென்னவோ எளிதாக அட்மிஷன் கிடைத்தது - என் நண்பர்களின் முனைப்புகளினால் எளிதாக அமைந்தது. ரவியும் வைத்தியும் என்னை வார்டில் என்னைச் சேர்த்து விட்டு அடுத்த நாள் மதியம் வரை ஊண், உறக்கம் இல்லாமல் மருத்துவ மனையிலேயே இருந்திருக்கின்றனர். பாவம் பசங்க …


அதோடு மருத்துவ மனையிலிருந்து வெளி வந்து பல நாட்கள் வரை மக்கள் ரகசியமாக வைத்திருந்த செய்திகள் இப்போது தான் மெல்ல கசிந்து எனக்கு வருகின்றன. நிமோனியாவில் அடுத்தடுத்து ஆறு நிலைகள் இருக்குமாம். எனது நோயின் நிலை ஐந்தாவது நிலையில் இருந்திருக்கிறது. நல்ல சீரியஸ் கேஸ் தான் போலும்; இப்போது தான் தெரிகிறது. அதனால் தானோ என்னவோ, மருத்துவ மனையில் சேர்ந்த சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஒரு S.O.S. voice mail கொடுத்து அவர்களை ‘அலற’ வைத்திருப்பேன் போலும். அதைப் பற்றி அவர்கள் என்னிடம் இப்போது பேசிய போது, அப்படி ஒரு மெயில் கொடுத்த நினைவே எனக்கில்லை. அது தான் சொன்னேனே … எது நிஜம் .. எது கனவு .. என்றே தெரியாத ஒரு நிலையில் முதல் சில நாட்கள் இருந்திருக்கிறேன்.


அந்த வார்டில் இருந்த நோயாளிகளில் ஏறத்தாழ 80% விழுக்காட்டிற்கு மேல் ஆண்கள் தான் நோயாளிகளாக இருந்தார்கள். The "weaker" sex were so low in number!!  Reason..? அம்மாமார்களும், மனைவிமார்களும் நோயாளிகளை அக்கறையாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். பெண்குலத்திற்கே என் மனமார்ந்த வணக்கம்.


முதலில் மிரட்சி. மணி பத்து பதினொன்றுக்கு மேலிருக்கும். என் வரிசையின் வலது பக்கக் கடைசியில் இருந்த ஓரிரு கட்டில்கள் முன் கூட்டமாக இருந்தது. மெல்லிய அழுகை ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தது. யாருக்கோ இறுதிப் போராட்டமாக இருந்திருக்க வேண்டும். அங்கே படுத்துத் தூங்கி விடுவேனா என்றும் தோன்றியது. ஆனால் இதுவரை இருந்தது போன்ற அசதியில் தூங்கி விட்டேன். நடுநிசி தாண்டி ஏதோ ஒரு நேரத்தில் சிறுநீர் கழிக்க எழுந்தேன். கழிவறை என்று எங்கே என்று கேட்டு முதன் முறையாக அங்கே சென்றேன். சுத்தமாகவே இருந்தது. ஆனாலும் தரையை சமமாகப் போடாத கொத்தனார்களைத் திட்டிக் கொண்டேன் - ஏனெனில் அறைகளின் நடுவில் இருந்த பகுதி அதற்குள் பள்ளமாக தண்ணீர் - என்ன தண்ணீரோ? - தேங்கி நின்றது. வெஸ்டர்ன் டாய்லட்டில் பழகியாகி விட்டது. அது இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்று இருந்தது. ஆனால் மேல்பாகமெல்லாம் காணாமல் போய் உடைந்து நின்றது. சமாளித்து வந்த வேலையை முடித்து விட்டு, ஹால் பக்கம் நடந்தேன். இரவிலும் ஆள் நடமாட்டம் இருந்தது. ஹாலின் வாசலுக்கு வரும் போது தான் அந்த முதல் ஷாக் கிடைத்தது. வாசலுக்கு அடுத்தாற்போல் ஒரு இரும்பு ஸ்ட்ரெட்சர் … அதில் நீளப் பொட்டலம் போல் வெள்ளைத் துணியில் கட்டப்பட்ட இறந்த உடலொன்று கிடந்தது. வர வேண்டியவர்கள் இன்னும் வரவில்லை போலும் .. கேட்பாரற்று சுவரோரம் ஒதுங்கிக் கிடந்தது. ஆனால் அடுத்த இரு நாளில் பார்த்த மரணங்கள் - என் கணக்கின்படி எட்டு அல்லது ஒன்பது - மெல்ல என்னைப் பழக்கிக் கொண்டிருந்தன. I was getting adapted to those sad but continuous events.


மருத்துவ மனை செல்வதற்கு முன்னும் பின்னும் ஏறத்தாழ பல நாட்களுக்கு இரவுப் பொழுதுகள் கனவிற்கும், நினைவிற்கும் நடுவில் ஊடாடிக்கொண்டே கழிகின்றன. விழித்துப் பார்த்தால் எது கனவு.. எது நிஜமென ஏதும் புரிவதில்லை. குழப்பம் தான் மிஞ்சி நின்றது. Meet the Spartans என்று ஒரு நகைச்சுவைப் படம். அதில் ராஜாவின் அரண்மனைக்குள் ஒரு இருண்ட குழி இருக்கும். ராஜா வேண்டாதவர்களை அதில் தள்ளி விடுவார். ஆழம் தெரியாத குழி. படத்தில் அந்தக் குழியில் வட்ட மேடை ஒன்றைச் சுற்றியிருக்கும். எனக்கென்னவோ மருத்துவ மனையில் சேர்ந்த முதல் மூன்று நான்கு நாட்களுக்கு நான் அந்த மேடையில் இருப்பது போன்ற நினைவே கனவில் வரும். எந்தப் பக்கம் விழுவது என்ற ஒரு திரிசங்கு நிலையில் இருந்தேன்.


இரண்டாவது நாள் நிகழ்ச்சி. என்னை அது ஏதோ ஒரு சமநிலைக்குக் கொண்டு வந்தது. பதினோரு மணியிருக்கும். எனக்கு எதிர்த்த வரிசையில் ஏறத்தாழ எனக்கு நேரெதிரே படுத்திருந்த ஒரு வயதான பெண்மணி உயிரிழந்தார். கோரோனாவா என்று கொஞ்சம் சந்தேகம் தான். அழுகை ஏதும் இல்லை. அதன் பின் ஓரிரு மணியளவில் என்னைப் பார்க்க வைத்தி, ரவி என் படுக்கையருகே இருந்தார்கள். ஏதோ ஒரு ‘சதி’ செய்து, அவர்கள் முதுகிற்குப் பின்னால், என் கட்டிலிலிருந்து நாலாவது கட்டிலில் ஓர் உயிர் பிரிந்திருக்கிறது. அந்தக் கடைசி நிமிடங்கள் என் கண்ணில் படாதவாறு மறைத்து நின்று கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் அதன் பின் இறந்தவர்களின் உறவினர்கள் இரண்டு மூன்று பேர் வந்து அழுத போது தான் அந்த இறப்பு என் பார்வைக்கு வந்தது. ஆனால் இதில் இருந்த பெரும் அதிர்ச்சி  என்னவெனில் அந்த இரு உடல்களையும் அப்புறப்படுத்த ஐந்தாறு மணிகளாகி விட்டது. ஆள் பற்றாக்குறையோ என்னவோ…  அந்த இரு உடல்களையும் அதுவரை பார்க்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அது முடியவில்லை.


நான் அங்கிருந்த நாட்களில் இன்னொரு விஷயம் எனக்குக் கொஞ்சம் ஆச்சரியத்தையும் கொடுத்தது. இறந்ததும் உறவினர்கள், முக்கியமாக மனைவிமார்களின் அழுகை மிக மெல்லியதாக, சில நிமிடங்களுக்கு இருக்கும். அதன்பின் அவர்களில் பலர் ஏதாவது ஒரு சுவற்று மூலையில் சாய்ந்து விசித்துக் கொண்டிருப்பார்கள். சூழ்நிலை அடக்கி வைத்து விட்டதா .. இல்லை அவர்களாகவே அடங்கி விட்டார்களா என்று தெரியவில்லை.


தொடர்ந்து நடந்து வந்த மரணங்கள்.. நானும் என்னையே அந்த மரணக் கிணற்றின் விளிம்பில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த நினைவு .. எல்லாமே இணைந்து உலக  அரசுகள் அனைத்தும் வேறெந்த வேலையும் செய்யாமல் அனைத்தையும் துடைத்தெறிந்து விட்டு, மக்கள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டுவந்து கொரோனாவை மட்டும் எதிர்த்துப் போரிட வேண்டும் என்று மனதிற்குள் தோன்றியது. இப்படி ஏதேதோ எண்ணங்கள் .. அவைகளைத் தவிர்க்கவும் முடியவில்லை. திருவிளையாடல் படத்தில் …

எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
என் இசை நின்றால் அடங்கும் உலகே..   என்று பாடியதும் அனைத்தும் உறைந்து நிற்குமே, அது போல் உலகத்தையும் ஒரு frozen stageக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் சில நினைவுகள். மூளை மந்தமாக ஆனால் வேகமாகவே வேலை செய்து கொண்டிருந்தது போலும் !!


பிள்ளைகளும், நண்பர்களும் என்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்து விட்டதைப் பற்றி என்னிடம் அடிக்கடி பேசினார்கள். அது ஒரு மிகப் பெரும் நல்ல முடிவு என்பது எனக்குப் பின்னால் தான் நன்கு தெரிந்தது. ஒரு முக்கிய காரணத்தைப் பிறகு அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.


மருத்துவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டையும், நன்றியையும் சொல்ல வேண்டும். PPE உடை போட்டிருக்கிறார்கள். மருத்துவர்களுக்கு வெள்ளை நிறம்; மற்றவர்களுக்கு ஊதா. மணிக்கணக்காக அந்த உடையைப் போட்டிருப்பதற்காகவே அவர்களைப் பாராட்ட வேண்டும். தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தார்கள், இரவில் கூட யாரும் அமர்ந்தோ, தூங்கிக்கொண்டோ இருந்ததைப் பார்க்கவில்லை. மிகச் சரியாக இரவு இரண்டு, இரண்டரை மணிக்கு வார்ட் முழுவதையும் சுற்றி ஒவ்வொரு நோயாளியையும் கவனித்து, முக்கியமாக ஆக்சிஜன் அளவு சரியாக உள்ளதா என்று தொடர்ந்து கவனித்துக் கொண்டும், ஊசி மருந்துகள் போடுவதும் என்று மிகுந்த அக்கறையோடு எல்லோரையும் கவனித்தார்கள். அவர்களுக்கு என் மனமுவந்த பாராட்டுகள். வழக்கமாக அரசாங்க மருத்துவ மனை மருத்துவர்கள் விட்டேற்றியாக இருப்பார்கள் என்ற நமது வழக்கமான எண்ணத்தை முற்றிலுமாக துடைத்தெடுத்து விட்டார்கள். மனமுவந்த பாராட்டுகளும், தலை தாழ்ந்த வணக்கமும் அவர்களுக்கு உரித்தாகட்டும்.


செவிலியர்களும், துப்புறவுத் தொழிலாளர்களும் நம் பாராட்டுக்குரியவர்களே. அதிலும் ’வசூல் ராஜா, எம்.பி.பி.எஸ்.’ படத்தில் ஒரு துப்புறவு தொழிலாளர் இருப்பாரே, அதே போல் பலரும் இருந்ததைப் பார்த்தேன். ஆனால், பாவம் அவர்கள்… கட்டிப்பிடி வைத்தியம் பார்க்க அங்கு யாருமில்லை!

 

 











*


Thursday, August 13, 2020

1104. கொரோனாவும் நானும் ... 2


ஏனைய பதிவுகள் …….

1. https://dharumi.blogspot.com/2020/08/1103-1.html

3. https://dharumi.blogspot.com/2020/08/1105-3.html

4. https://dharumi.blogspot.com/2020/09/1107-4.html

 



pix not for viewing ... only to record my days with corona....


in GH ward ....



back at home ...on a shaving day!!!




Sunday, August 09, 2020

1103. கொரானாவும் நானும் ….. 1


*

ஏனைய பதிவுகள் …….

1. https://dharumi.blogspot.com/2020/08/1103-1.html

3. https://dharumi.blogspot.com/2020/08/1105-3.html

4. https://dharumi.blogspot.com/2020/09/1107-4.html

 

,*

                          

 

எழுத ஆரம்பித்த நாள்: 4.8.20

வலைக்கு வந்தே ஒரு மாதத்திற்கு மேல் ஓடிவிட்டது.   ஏழுமலை ... ஏழுகடல் தாண்டிய அனுபவம்தான்  இதுவரை.   என்னென்னவோ நடந்தது ..எப்படி எப்படியோ இருந்ததுஎல்லாம்  ஆங்காங்கே  நினைவுகளாக ஒட்டிக் கொண்டு நிற்கின்றன. துடைத்துப் போடவும் முடியவில்லைதொகுத்துத் தரவும் முடியவில்லை

தொடர்ந்து எழுத முடியவில்லை. தொடரணும் …

 

 5.8.20

பெற்று வளர்த்த இரண்டு பிள்ளைகளும்பெறாமல் வந்து சேர்ந்த மூன்று பிள்ளைகளும் கட்டி இழுத்து வந்து இதுவரை கொண்டு வந்து விட்டார்கள்அவர்கள் மட்டும்தானாபெரிய படையே அல்லவா  திரண்டு என் பின்னால்  நின்றதுஎத்தனை கரிசனம்எத்தனை அன்புஎங்கெங்கிருந்தோ உதவி.  

 

உங்களையெல்லாம்  மீண்டும் என் மனதிற்குள்  ஒரு தரிசனம்  செய்ய ஆசை. அதுவே இந்த எழுத்துக்களின் நோக்கம்.

 

6.8.20

ஜூன் மாத கடைசி வாரம்வலது பக்கம் தோள்பட்டை வலிஅத்தனை அசதிபாரசிட்டமால்  வாங்கப் போனால் கடையில் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள்விற்பனைக்கு இல்லையாம். ICMR ல் வேலை பார்க்கும் நண்பனுக்கு ( இக்கட்டுரையில் இனி ‘நண்பன்’ என்றால் அனேகமாக அவன் ஒரு மாணவ நண்பன் என்று கொள்ளவும்.).  சில மாத்திரைகள் சொன்னான்இரண்டு நாள் சாப்பிட்டேன்பயனேதுமில்லைஅவனுக்கு வாட்ஸ்அப்பில்  வாய்ஸ் மெசேஜ் கொடுத்தேன்என்னப்பா பண்றது என்று கேட்டிருந்தேன்மூன்று நாளாகியும் பதில் இல்லைஆச்சரியம்இன்னொரு நண்பனுக்கு செய்தி சொன்னேன்சிறிது நேரத்தில் ICMR நண்பரிடமிருந்து  போன் வந்தது. “அக்காவிடம் கொடுங்கள்என்றான்மனைவியிடம் கொடுத்தேன்அவன் பேச ஆரம்பித்ததும் மனைவி என்னிடம் சைக்கினையில்  அழுகிறான் என்றாள். வாங்கி நான் பேச ஆரம்பித்தேன்அவன் நான்கு நாட்களாகாக குவாரண்ட்டையினில்  இருக்கிறான்அதனால் என் செய்தியை வாசிக்கவில்லைஅதற்கு அத்தனை கவலை அவனுக்கு. அவனுக்கு நான் ஆறுதல் சொல்ல வேண்டியதாகிவிட்டது. 

 

 9.8.20 (இன்று எழுதி முடித்து விட வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கணினி முன் அமர்கிறேன் ….)

 

அடுத்த நாள் காலை. நண்பன் அனுப்பிய மாநகராட்சி ஊழியர் ஒருவர் வந்து கொரோனா டெஸ்ட் எடுத்துப் போனார். எப்போ ரிசல்ட் தெரியும் என்றேன். தினமும் 1500 டெஸ்ட் செய்ய முடியும்; ஆனால் 2000க்கும் அதிகமாக வருகின்றன; நாலைந்து நாட்களாகலாம் என்றார். நண்பனிருக்க நமக்கேன் கவலை என்பது போல் இரண்டாம்  நாளே ரிப்போர்ட் வந்தது. கொரோனா நெகட்டிவ். மகிழ்ச்சி. ஆனால் குடும்ப மருத்துவர் உடனே ஒரு ஸ்கேன் எடுத்து விடுங்கள் என்றார். மாலை போனோம். மீண்டும் எப்படியோ, மக்களெல்லாம் காத்திருக்க நான் போனதும் பத்து நிமிடங்களுக்குள் என்னை அழைத்தார்கள். ஸ்கேன் எடுத்ததும் ரிசல்ட் மாலை 8 மணிக்குக் கிடைக்கும் என்றார்கள். ரிசல்டிற்காகக் காத்திருந்தேன்.

 

அதற்குள் நண்பர்கள் என் பிள்ளைகளோடும், சென்னையில் பெரிய பதவியில் உள்ள இன்னொரு நண்பனிடமும் கலந்து பேசி பல முடிவுகளை எடுத்துள்ளார்கள். (அந்த “இன்னொரு நண்பன்” படிக்கிற காலத்தில், அதாவது 40 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் எல்லோருக்கும், அதுவும் என் மனைவிக்குப் பிடித்த விளையாட்டுப் பிள்ளை..) தேவையானால் அரசாங்க மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் என்பது சென்னை நண்பனின் பெரிய மருத்துவ நண்பர் கொடுத்த அறிவுரை. மருத்துவம் முடிந்ததும் சென்னைக்குப் பிள்ளைகள் வீட்டிற்குச் சென்றுவிட வேண்டுமென முடிவெடுத்திருக்கிறார்கள்.

 

8 மணியாயிற்று. தகவல் இல்லை. 8.30 மணிக்கு நண்பர்கள் வந்தார்கள். மருத்துவ மனைக்குப் போக வேண்டும் என்று தகவல் சொன்னார்கள். உங்கள் காரில் தானே என்றேன். இல்லை .. ஆம்புலென்ஸ் வந்திருக்கிறது என்றார்கள். கொஞ்சம் பக் என்றிருந்தது. இல்லை .. அதுதான் வழக்கம் என்றார்கள். அத்தனை குறுகிய காலத்தில் ஆம்புலென்ஸை உடனே வரவழைத்தது மட்டுமில்லாமல் சென்னை நண்பன் மதுரை அரசு மருத்துவ மனையில் நோயாளிகளை அனுமதிப்பதை மேற்பார்வையிடும் மருத்துவரிடம் பேசி ஏற்பாடு செய்திருந்தான். சென்றேன்; உடனே அனுமதிக்கப்பட்டேன். மற்றவர்கள் படும் சிரமத்தை நான் உள்ளே சென்ற பிறகுதான் புரிந்துகொண்டேன்.

 

மருத்துவமனைப் பொறுப்பை மூன்றாவது மகன், அதாவது என் மருமகன் எடுத்துக் கொண்டார். சாப்பாடு எடுத்து வருவது, மருத்துவர்களைப் பார்ப்பது … அதெல்லாம் சரி .. ஆனால் மூத்திர பாட்டிலைக் காலி செய்து கொடுப்பதும், கழிவறைக்கு வெஸ்டர்ன் டாய்லட்டிற்கு உரிய நாற்காலையைத் தூக்கி உடன் வருவதும், டையாப்பர் மாட்டி விடுவதும் … அம்மாடி! … அவனின் கன்னத்தை இரு விரல்களால் கிள்ளி ஒரு முறை முத்தமிட்டேன். வேறென்ன செய்ய முடியும் என்னால்!

 

மருத்துவமனையில் சேர்ந்த அடுத்த நாளே ஒரு பெரிய மருத்துவ அதிகாரியிடமிருந்து தொலைபேசி வந்தது. யாரென்று தெரியாமல் கேட்டேன். யார் என்பதைச் சொன்னார். தொடர்ந்து உங்களுக்கான மருத்துவத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். மதுரையிலுள்ள மாணவி நான் அரசு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறேன் என்று தன் வகுப்புத் தோழன் - அவன் இப்போது ஒரு மாவட்ட ஆட்சியர் - தகவல் தெரிவித்திருக்கிறாள். அவன் உடனே இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளான். அதன் பின் மனைவியிடம் பேசியிருக்கிறான். ஆனால் அதன் பின் பல நண்பர்கள் நாங்களும் அவரிடம் பேசியுள்ளேன் என்றார்கள். எனக்குக் கொஞ்சம் பயம் தான். அவருக்கே அலுப்பு வந்து விடக் கூடாதே என்று. சில முறை என்னிடம் பேசினார். பேசும் போதெல்லாம் “நீங்களே எல்லாவற்றையும் முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று கூறினேன்.

 

இன்னொரு பெரிய மருத்துவ அதிகாரியிடமிருந்தும் என்னிடம் சில சமயமும், மருமகனிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி என் உடல் நிலை முன்னேறி வருவது பற்றி அவ்வப்போது தெரிவித்துக் கொண்டிருந்தார். இந்தக் கவனிப்பும் சென்னை நண்பன் மூலமாகவே வந்தது.

 

ஏறத்தாழ ஒரு வாரம் மருத்துமனை வாசம். மறக்க முடியாத பல கொடூரமான நிகழ்வுகளும் நடந்தன. மறக்க நினைத்தும் முடியாதவைகள். பிறகு தனியே தொகுத்து எழுத வேண்டும்.

 

20.7.20 மருத்துவ மனையிலிருந்து அனுப்பப்பட்டேன். மருமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார். காரின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்ப வந்து கொண்டிருந்தேன். முகத்தில் வேகமாக வீசிய காற்று சுகமாக இருந்தது. திரும்பி வந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைவில் அத்தனை மகிழ்ச்சி. எங்கள் புறநகர்ப் பகுதியில் வந்ததும் மகிழ்ச்சி இரட்டிப்பானது. வீட்டிற்கு அருகில் நெருங்கிக் கொண்டிருந்தோம்.

 

முக்கிய வீதியில் வந்து கொண்டிருந்தோம். இதில் இரு வினாடிகள் … சாலை இடது பக்கம் திரும்பியதும் அடுத்த மூன்று வினாடிகள். அவ்வளவே வீட்டிற்கான தொலைவு. அந்தக் கடைசி 5 வினாடிகள். They started moving in slow motion. முதல் இரு வினாடிகளில் “என் வீட்டை”ப் பார்த்தேன். பச்சைப் பசேலென்ற மரங்கள் சூழ்ந்த ஒரு சின்ன வீடு. அதுவும் பெரிய சாலையிலிருந்து பார்க்கும் போது … தனியான ஓரழகுப் பச்சை வண்ணத்தில் கொன்றைப் பூவின் இலைகள் … அவைகளின் ஊடே அத்தனைச் சிவப்பாக கொன்றைப் பூக்கள். இலையும் மரங்களும் அத்தனை அழகூட்டின. கார் இடது பக்கம் திரும்புகிறது … அடுத்த மூன்று வினாடிகளில் பிள்ளைகளும், நண்பர்களும் எனக்காக.. என் நாளைய பொழுதிற்காக எடுத்திருக்கும் முடிவுகள் நினைவுக்கு வந்தன. இது தான் ”என்” வீடு… வாழ் நாளெல்லாம் இங்கு தான் என்று நினைத்து வைத்திருந்த எண்ணங்களை நான் நினைத்ததை விட எளிதாக அப்படியே மறந்து… புறந்தள்ளி விட்டு “அந்த” வீட்டிற்குள் நுழைந்தேன்.

 

வீட்டிற்கு வந்ததும் இன்னும் ஒரு பிரச்சனை -- மூச்சு வாங்குவது. சின்ன வேலை செய்தாலும், நான்கடிகள் நடந்தாலும் மூச்சு வாங்கும். நான்காவது நாள். நானும் பிள்ளைகளும், மனைவியும் உட்கார்ந்து ஒரு flash back ஓட்டினோம். கொரோனா ஆரம்பித்த காலத்தில் எப்படி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பக்கத்து வீட்டுக்கார்களின் உதவி பற்றியெழுதியிருந்தேன். ஆனால் இந்தக் கடைசி சில நாட்களில் எனக்குக் கிடைத்த அன்பு என்னை நிச்சயமாக நிலை குலைய வைத்து விட்டது. அதுவும் நண்பர்களின் உதவி… அம்மம்மா … நேரடி உதவி செய்யாவிட்டாலும், தங்கள் குறுஞ் செய்திகள், தொலைபேசி அழைப்புகள்… அதில் இருந்த உண்மையான அன்பு. ஓரளவு என் மாணவர்களின் அன்பு எனக்குப் பழகியது தான். ஆனால் இந்த முறை.. ஆனால் இந்த உணர்வு எனக்கு மட்டுமல்ல… மனைவியும். பிள்ளைகளையும் இந்த உணர்வு உண்மையிலேயே உலுக்கி எடுத்து விட்டது. அப்பாவின் மீது இத்தனை பேருக்கு இத்தனை அன்பா .. என்று பிள்ளைகளே வியந்து நின்றனர். ’என்னோடு பேசும் போது எத்தனைக் கலங்கி பேசினார்கள்’ என்றார்கள்.

 

(என்ன பிரச்சனை என்றால் இதைப் பற்றி கண்ணீர் மல்க பேசி கொண்டிருந்தோமா… - இப்போதெல்லாம் நான் மிக எளிதாக உடைந்து விடுகிறேன் - எனக்கு மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது. சில நிமிடங்களே இருக்கும் இந்தப் பிரச்சனை அன்று முடிய ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. மருத்துவர்கள் கொடுத்த கடுமையான அறிவுரை : TALK LESS.)

 

 














*