Showing posts with label எங்க காலத்திலெல்லாம் .... Show all posts
Showing posts with label எங்க காலத்திலெல்லாம் .... Show all posts

Sunday, January 24, 2021

1148. எங்க காலத்திலெல்லாம் …. 8 - சோறு




*



என் வயதுக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டசாலிகள். வாழ்க்கையில் எத்தனை பெரும் மாற்றங்களைத் தொடர்ந்து இன்னும் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். பல மாற்றங்களையெல்லாம் நாங்கள் ஒரு காலத்தில் நினைத்தும் பார்த்ததில்லை. உதாரணமாக, அந்தக் காலத்தில் எல்லாம் யாரோடாவது தொலைபேசியில் பேசிய பிறகு அதைப் பிறரிடம் சொல்லும் போது யாராவது ஒருவர், அவர் எப்படிப் பேசினார்? .. கோபமாகப் பேசினாரா..? என்றெல்லாம் கேட்பாளர்கள். ஆனால் தொலைபேசியில் பேசியவர் உடனே, “நானென்ன அவர் மூஞ்சிய பார்த்தா பேசினேன்” என்பார்கள். ஆனால் இன்று மிகச் சாதாரணமாக வீடியோ காலில் முகம் பார்த்துப் பேசுகிறோம். பிறந்த நாளிலிருந்து செல்போனோடு விளையாடும் சின்னப் பசங்களான(??!!) உங்களுக்கு இதெல்லாம் பெரிதாகத் தெரியாது. ஆனால் நடந்து வந்த மாற்றங்களைப் பார்க்கும் போது எங்களை மாதிரி ‘பெருசு’களுக்கு ஆச்சரியம் .. அதிசயம் … இப்படி எவ்வளவோ. எங்கள் வாழ்க்கை அந்தக் காலத்தில் எப்படி இருந்தது என்று சொன்னால் தானே உங்களுக்குப் புரியும்.

கொஞ்சம் சொல்கிறேன் .. ஒவ்வொன்றாய். ஆனால் எல்லாம் என் அனுபவத்தில் நான் பார்த்தவைகள் .. கேட்டவைகள் -- செய்தவைகள் தான். ஒரு மத்தியதரத்துப் பையனாக வளர்ந்தவனின் அனுபவங்கள். மேல்தட்டு மக்கள் யாரும் வாசித்து, இதெல்லாம் இப்படியெல்லாம் இல்லையேன்னு நினைக்கலாம். அப்படி நினைத்தால் அவர்களுக்கு அந்தக் காலத்து மிடில் க்ளாஸ் பற்றித் தெரியவில்லை என்று கொள்ளலாம். (ஏற்கெனவே இதே தலைப்பில் ஏழெட்டுப் பதிவுகள் போட்டிருக்கிறேன். இது ஒரு தொடர்ச்சி...)

Future shock என்ற நூலின் ஆசிரியரான Alvin Toffler முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை fashions மாறி மாறி வருமென்றார். அதோடு மாற்றங்களுக்கு நாம் நம்மைத் தயாரான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வரும் மாற்றங்கள் பல மிகுந்த அதிர்ச்சியளிக்கும். அதற்குத் தயாராக நம்மைத் தயார்செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லியுள்ளார், அவரது மூன்று நூல்களும் - trilogy - Future Shock; Third Wave and Power Shift - தொடர்ந்து நடைபெறப்போகும் மாற்றங்களைப் பற்றி எழுதப்பட்ட சிறந்த நூல்களாக பெயர் பெற்றன. இது போன்ற மாற்றங்கள் பலவற்றை நேரில் பார்த்த என்னைப் போன்ற ஒருவன் சொல்லும் ‘பழைய காலத்துக் கதை’ இது.

முதன் முதல் எதைப் பற்றி எழுதலாமென யோசித்த போது சோறு பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. சாப்பாட்டிலிருந்து ஆரம்பிக்க ஆசை. வேறொன்றுமில்லை ..  சமீபத்தில் பழைய வார இதழ்கள் சில கண்ணில் பட்டன. அம்மா சமைக்கும் படங்கள். அதில் பார்த்த ஒரு படம். அம்மா ஒருவர் அரிசியில் கல் பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒரு படம். 






சுளவு - அப்படின்னா என்னன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமா? - அதன் இன்னொரு பெயர் முறம். இப்போதெல்லாம் இந்த சுளவு ப்ளாஸ்டிக் / நெகிழியில் வருகிறது. 

                                                   

இதன் பயன் இப்போதெல்லாம் அதிகமில்லை, ஆனால் அந்தக் காலத்தில் கட்டாயமாக ஒவ்வொரு சமையலறையின் சுவற்றிலும் ஒரு ஆணியில் தொங்கிக் கொண்டிருக்கும். பனை நாறில் செய்வார்கள். தானியங்களை அந்தக் காலத்தில் இதை வைத்துப் ‘புடைப்பார்கள்’. சரி … நாம் சோற்றுக்கு வருவோம் …

சோறு ஆக்குவதற்கு முன் அரிசியில் அம்மாமார்கள் கட்டாயம் கல் பார்க்க வேண்டும். இப்போதெல்லாம் வரும் அரிசியில் எந்தக் கல்லும் மண்ணும் இருப்பதில்லை. அட .. ரேஷன் அரிசியில் கூட கல் இருப்பதில்லை. அந்தக் காலத்தில் கல்லில்லாத அரிசி இருந்ததில்லை. அரிசியின் ஊடே நிறைய கல் கிடக்கும். சுளவில் அன்றைய அளவிற்கு அரிசி எடுத்து அம்மாமார்கள் உன்னிப்பாக அதிலிருக்கும் கல்லை எடுப்பார்கள். ஏன் தட்டில் வைத்துப் பார்ப்பதை விட அந்தக் காலத்தில் சுளவில் வைத்து தான் பார்ப்பார்கள். அதன் முரட்டு மேற்பரப்பு ஒரு வேளை கல்லையும் அரிசியையும் பிரிக்க ஏதுவாக இருந்திருக்கலாம்.

இந்தக் கல்லிலும் பல வகை உண்டு. அரிசி மாதிரியே பொடிக் கற்கள் உண்டு. அநேகமாக இது அம்மாமார்கள் கைகளில் சிக்காது. ஆனால் மிகச் சரியாக அப்பாமார்கள் பல்லில் தான் இது கடி படும். அப்போதெல்லாம் ஒரு வழக்கமான ஜோக் ஒன்றினை அப்பாமார்கள் அடிப்பது வழக்கம். “வீடு கட்டணும்னு சொல்லிக் கிட்டே இருக்கியே. இந்தா .. இந்தக் கல்லை எடுத்துப் பத்திரமாக வை. வீடு கட்டும் போது உபயோகமாகும்”. சில கற்கள் நன்றாகப் பெரிதாக இருக்கும். கறுப்பு அரிசிகளும் இருக்கும். அம்மாமார்கள் இதை அத்தனைப் பொறுமையாக உட்கார்ந்து பொறிக்கியெடுக்க வேண்டும். எப்படி எடுத்தாலும் கற்கள் கண்களுக்குத் தப்பி விடும். அதுவும் பழைய சோறு சாப்பிடும்போது கடைசி மிச்ச சோற்றில் நிச்சயம் பொடிக் கற்கள் ஓரிரண்டாவது கிடைக்கும். ‘கும்பா’ - (அது என்னவென்று தெரியுமா? நான்



வாழ்ந்த நெல்லை மாவட்டத்தில் ‘சம்சாரிகள்’ வீட்டில் ( அட .. சம்சாரின்னா யாருன்னு தெரியுமா? விவசாயிகளை அப்படி சொல்வார்கள்.) பித்தளையில் அரைவட்ட வடிவில் இருக்கும். அடியில் வட்டமான base இருக்கும்.) விளக்குபவர்கள் விளக்கி வைத்தால் தங்கம் போல் ஜொலிக்கும். இதில் சாப்பிட்டால் நிச்சயம் கடைசியில் உள்ள சோற்றில் நிறைய பொடிக் கற்கள் கிடக்கும். கும்பாவில் ஒரு பிரச்சனை உண்டு. அது என்னவென்றால் உங்கள் side dish வைக்க அதில் இடமிருக்காது. வேண்டுமானால் அதைத் தனித் தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இளம் வயதில் இதில் சாப்பிடுவது தான் எனக்குப் பிடிக்கும். ஊருக்கும் போகும் போது அப்பம்மா தட்டில் சோறு போடுவார்கள். நானோ கும்பாவில் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவேன். கல்லூரி நாட்களில் சொந்த ஊர் போகும்போது எப்படியாவது ஒரு கும்பா வேண்டும் என்று அப்பா, அம்மா இருவர் வீடுகளிலும் தேடினேன். மேலே இருக்கும் பழைய பாத்திரங்களையெல்லாம் உருட்டித் தேடிப் பார்த்தேன். எல்லாம் காணாமல் போய்விட்டது. ஒரு antique value-வுக்காகவாவது ஒன்று வேண்டும் என்று தேடியும் கிடைக்காமல் போய் விட்டது.

ஏன் அப்போது அரிசியில் கல் இருந்தது; பின் எப்படி அது இப்போதெல்லாம் இருப்பதில்லை என்பது எனக்கு ஒரு பெரிய கேள்வி. இளைஞனாக இருந்த போது எனக்குத் தெரிந்த ஒரு அரிசிக் கடைக்காரர், ‘எடை கூடணும் என்பதற்காக கற்களைக் கலப்பார்கள்’ என்றார். அதோடு இன்னொரு செய்தியையும் - நான் நம்ப முடியாத செய்தியாக எனக்குத் தோன்றியது - அரிசியில் கலப்பதற்காகவே மெஷின் வைத்து பொடிக் கற்களைச் செய்து விற்கிறார்கள் என்றார்.

எப்படியோ அன்றைய கல் நிறைந்த அரிசிக்கும், இன்று கிடைக்கும் கல்லில்லாத அரிசிக்கும் காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் .. கேட்டுக் கொள்கிறேன்.



பி.கு.  சோறு  என்பதற்குப் பதிலாக ‘சாதம்’ என்று ஆரம்பித்து வைத்தது யாருங்க ....?







Sunday, August 18, 2019

1061. எங்க காலத்திலெல்லாம் ..., 7 --நல்லவேளை .. அந்த போலீஸ்காரங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க. பாகம்: 2


*
முந்திய பதிவு; https://dharumi.blogspot.com/2019/08/1060.html

*

மதுரையில் ஒரு தியேட்டர் இருந்தது. தங்கம் தியேட்டர். ஆசியாவிலேயே பெரிய தியேட்டர் என்ற பெயருடன் இருந்தது. பெரிய கால்பந்து மைதானம் மாதிரி பெரிய்ய்ய்ய்ய தியேட்டர். நானும் நண்பன் ஆல்பர்ட்டும் படம் பார்க்கப் போனோம். பால்கனி - அதை பால்கனின்னே சொல்லக்கூடாது; ஏன்னா அது அத்தனை பெருசா இருக்கும். - மெத்தை டிக்கெட். கூட்டமே இல்லாத படம். 

 

அந்தக் காலத்தில் தியேட்டரில்  சிகரெட் குடிக்கலாம். திடீர்னு ஒரு சட்டம் போட்டாங்க .. தியேட்டரில் புகையை நீங்க பிடிச்சா நாங்க உங்களைப்  பிடிப்போம்னாங்க காவல் துறை. இதுக்காக அப்பப்போ போலீஸ்காரங்க தியேட்டருக்கு திடீர் விஜயம் பண்ணுவாங்க. பிடிச்சா பிடுச்சிருவாங்க. அதனால் அப்போ சில தியேட்டர்ல எங்கள மாதிரி குற்றவாளிகளைத் தப்பிக்க வைப்பதற்காக ஒரு சிக்னல் கொடுப்பார்கள். தங்கம் தியேட்டரில் ஸ்க்ரீனுக்கு வலது பக்கம் ஒரு சிகப்பு லைட் ரெண்டு மூணு தடவை விட்டு விட்டு எரியும். புகை  பிடிப்பவர்களுக்கான சிக்னல் அது. போலீஸ்காரங்க வர்ராங்கன்னு அர்த்தம். நானும் நண்பனும் சிகரெட் குடிச்சிக்கிட்டு இருந்தோமா .. அப்போ லைட் எரிஞ்சிது. உடனே வெளிய வெராண்டாவிற்கு வந்துட்டோம். 

 

அந்த வெராண்டாவே அம்புட்டு அகலமா இருக்கும். போலீஸ்காரர் வந்தார். நாங்க வெளிய நின்னு சிகரெட்டு குடிச்சிக்கிட்டு இருந்தோம். அவருக்கு அன்னைக்கி கீழ ரெண்டே ரெண்டு கேஸ் மட்டும் கிடைச்சிருந்தது போலும், மேலே வந்தார். ஆட்களும் கம்மி. நாங்களும் வெளிய நின்னு குடிச்சிக்கிட்டு இருந்தோம். பாத்துட்டு திரும்பிப் போனார். இப்படி கேஸ் கிடைக்கலையேன்னு வருத்தம்னு நினைக்கிறேன். போனவர் திரும்பி எங்ககிட்ட வந்தார். ’வாங்க’ன்னு எங்களைக் கூப்பிட்டார். ‘சார், நாங்க எதுக்கு’ன்னு கேட்டேன். ‘சிகரெட் குடிச்சதுக்கு’ன்னார். நான் உடனே ‘Sir, we are smoking only in the verandah' என்றேன். அவர் உடனே ‘But all புகை went inside' என்றார். கொஞ்சம் சிரிச்சிக்கிட்டார் - அவர் ஆங்கிலத்திற்காக அது இருக்கலாம்னு நினச்சேன். அப்படி இங்கிலீஸ் பேசினதுனால தொடர்ந்து அவர்ட்ட ஆங்கிலத்திலேயே சம்சாரிச்சேன். 

 

அவர் கூடவே போனோம். கீழ ஒரு சைக்கிள் ரிக்‌ஷாவில் ரெண்டு பேரு பிடிச்சி ஏத்தி வச்சிருந்தார். எங்களையும் அதில் ஏறச் சொன்னார். நான் 'Sir, we have our vehicle' என்றேன். சரி, அதில ஏறி வாங்கன்னு சொன்னார். அவர் அவர் சைக்கிளில் ஏறினார். நாங்களும் சைக்கிளில் வருவோம்னு எதிர்பாத்திருந்திருப்பார். நாங்கள் ஜாவா பைக்கில் ஏறியதும் ஒரு மாதிரியாக எங்களைப் பார்த்தார். அப்போதெல்லாம் ஊர்ல, நாட்ல பைக் வச்சிருக்கிற ஆளுக கொஞ்சம் கம்மி தானே. நாங்க அவர் கூடவே அப்பப்போ (ஆங்கிலத்திலேயே) பேசிக்கிட்டு வந்தோம். தங்கம் தியேட்டருக்குப் பக்கத்தில் இருந்த ஞாயிற்றுக் கிழமைச் சந்தைக்குப் பக்கத்தில் அல்லது பழைய தேவி தியேட்டருக்குப் பக்கத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷன். அங்கே போனோம். வண்டியை நிறுத்தியதும் மீண்டும் வெராண்டாவில் தானே சிகரெட் குடித்தோம் அப்டின்ற லா பாயிண்டை மீண்டும் எடுத்து உட்டேன் - ஆங்கிலத்தில தான். ஸ்டேஷன் வரை வந்ததும் அந்த ரிக்‌ஷாவில் இருந்த ஆட்களை உள்ளே போகச் சொன்னார். நாங்கள் வெளியே இருந்தோம். அந்த ஆட்கள் உள்ளே போனதும் பயங்கர ஒரு புன்னகையோடு ‘நீங்க போகலாம். 'But I leave you only for your English!' என்றார். (எனது ஆங்கிலத்தின் முதல் வெற்றி என்று ‘பொன்னெழுத்து’களால் என் வரலாற்றில் இடம் பெற வேண்டிய வசனம் அது!!!) நான் கைநீட்டி shake hand  கொடுத்தேன். என் பெயரைச் சொன்னேன். அவரும் அவர் பெயரைச் சொல்லி விடை கொடுத்தார். பல வருஷம் அவர் பெயரை நினைவில் வைத்திருந்தேன். ஏதோ ஒரு நல்ல சாமிப் பெயர். வெங்கடசாமி மாதிரி ஒரு பேரு.  இப்போ மறன்னு போயி!

 

 

அவர் போகச் சொன்னதும் அப்படியே வீட்டுக்கா போக முடியும். தியேட்டரில் இருந்தவர்களுக்கு நாங்கள் ‘விடுதலை’ ஆனதைச் சொல்ல வேண்டாமா? பார்க்கிங் லாட்டில் இருந்த ஆளுக்கு எங்களையும் தெரிந்திருந்தது. ஆகவே வண்டியை வச்சிட்டு, கேட்ல இருந்த ஆளுககிட்டயும் சொல்லிட்டு, பாதி டிக்கட்டை காமிச்சிட்டு - எல்லோரும் எங்களை ரொம்ப ஆச்சரியமாகப் பார்த்தார்கள்; அதற்காகத்தானே நாங்களும் மீண்டும் தியேட்டருக்கு வந்தோம்! - மீதிப் படத்தைப் பார்த்துட்டு வந்தோம்.

 

 

 

 

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxW9jHYvapGLN1J6wQWx4HwFxF-WAfsc7cka7L2kWWKz0N8nchufxRlSRFxyyR1KAjJlf3OkWEnKmrO8CGw-E6PzKSnjCfIPhtIZrOLkVwPnyqFUSNrEdquxZ-2Rj_4VShLhXWIQ/s1600/mano.jpg

 

 

R.S. மனோகர் அப்டின்னு ஒரு நடிகர். சினிமாவில் நடித்தாலும் அதை விட நாடகக் காதலர். ஒரு பெரிய நாடகக் கம்பெனி நடத்தினார். புராணக் கதைகள் தான் அவர் கதைக் களங்கள். அவருடைய செட்டிங்ஸ் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். நாடக மேடையிலேயே பல வித்தைகள் செய்பவர். மதுரையில் அவரது நாடகக் கம்பெனியிலிருந்து வரிசையாக சில நாடகங்கள்.  டிக்கட் வாங்கிட்டு நானும் நண்பன் ஆல்பர்ட்டும் நாடகம் பார்க்கப் போனோம். நாடகத் தலைப்பு மறந்து போச்சு. முதல் சீன் மட்டும் நன்கு நினைவில் இருக்கு. ஏழு லோகம் காண்பிக்க வேண்டும். ஒருவர் ஸ்டேஜ் ஆரம்பத்திலிருந்து நடந்து கொண்டே போக, அங்கங்கே சீன் மாறி, பல லோகங்களைக் காண்பிப்பார்கள். மெய்மறந்து பார்த்தோம். ஆனால் அது வருண பகவானுக்குப் பிடிக்காமல் போனது. மழை சட்டென்று ஆரம்பித்தது. நனைந்து சில நிமிடங்கள் பார்த்தோம். பெரு மழை. ஆகவே நாடகம் நிறுத்தப் பட்டது. அப்போது ஓர் அறிவுப்பு. இந்த நாடகம் நாளைக்கு நடக்கும் என்று.

 

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFcm_P3gkyhRrwuIn1uPrULjJa59LlmQpWSLqkiREeLyLCD0L7_8TOt1lh_4DQU6SI7Ag1Bpll2TKQwCNnafniY-qXPO_uJhah9NFeha0BDZLA_rLpIxVmrpncbhYiq-bbgK1CPw/s1600/manohar.jpghttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg3pMTr1tQQLCKAIMyWWgaOPhTjXlsZZWSDk_mDGjUdPxXDdmrWgIOQxyOtHdOKMlmAT4-VhWzE81y4to6E59-9cx0JzDAh7JJcTHhqseM8oPrrXNDJJkaPhrYORd-UfcbqC5ing/s1600/manao2.jpg

 

 

அடுத்த நாள் நாடகம் பார்க்கப் போனோம். அனுமதித்தால் பார்ப்போம்; இல்லாவிட்டால் ஏதாவது ஒரு சினிமா போவோம்னு திட்டம் போட்டுக்கிட்டு போனோம். பழைய டிக்கெட் என்பதால கேட்டில் நிறுத்தி வைத்து விட்டார்கள். பழைய டிக்கட் செல்லாது என்றார்கள். எங்களது லா பாயிண்ட் என்னென்னா ... ’நேத்து என்ன சொன்னீங்க? நேத்தைய ட்ராமா இன்னைக்கி இருக்கும்னு சொன்னீங்க.  இந்த டிக்கெட் செல்லாதுன்னு சொன்னீங்களா? சொல்லியிருந்தா நாங்க வந்திருக்கவே மாட்டோம்.அதுனால இன்னைக்கி எங்களை அனுமதிக்க வேண்டும்’ என்றோம். எங்களை மாதிரி பத்து இருபது பேர் சேர்ந்து விட்டோம். நம்ம லா பாயிண்டை எல்லோரும் பிடிச்சிக்கிட்டாங்க. கேட்டில் தகராறு மாதிரி இல்லாவிட்டாலும் கொஞ்சம் கூட்டம் சேர்ந்து போச்சு. போலீஸ் படை வந்தது. எங்களை அப்புறப் படுத்த முயற்சித்தார்கள். 

 

நானும் நண்பனும் முன்னுக்கு போய் ‘எங்களை நாடகக்காரர்களோடு பேச அனுமதிக்கணும்’ என்றோம். You are making a law & order problem’ என்றார் இன்ஸ்பெக்டர். நான் சொன்னேன்: ‘ சார், இது law & order problem இல்லை; but a problem of justice' என்றேன். ஏன் என்று கேட்க நாங்கள் எல்லோரும் அந்த ஒரே பாயிண்டைப் பிடித்துக் கொண்டோம். நான் இன்னும் கொஞ்சம் மசாலா சேர்த்தேன்.’நாங்கல்லாம் சும்மா கேட்கவில்லை; எல்லாரும் டிக்கெட் வாங்கினவங்க... ஓசி ticket ஏதும் கிடையாது. Tickets .. bought from our hard earned money...'  நான் மேலும் ‘எங்களை கம்பெனி மேனேஜர் யாரையாவது பேசச் சொல்லுங்கள். அது தான் சரி’ என்றேன். எங்கள் கூட்டமும் அதை ஆதரித்தது. 

 

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYvy9yWZmsIqLRdK1byudzJ88ZhQotSo72GDqA3q77qSkTBbph52rEuCTQ1doKGYovQiAcULsL-1__sRJDSNJnsXSSCRorMs6cxxiVtru_EKZnH0BlgRi8e5hAS-l_aPQbPqpPSg/s1600/mano1.jpg

 

 

இன்ஸ்பெக்டர் மேனேஜரோ..யாரோ ஒரு பொறுப்பான ஆளைப் பார்க்க உள்ளே போனார். எங்கள் புரட்சிக் கூட்டம் அனைவரும் போனவர் என்ன சொல்வாரோ என்ற ஆர்வத்தில் காத்திருந்தோம். போலீஸ்காரர் ஒருவரை அழைத்துக் கொண்டு  கேட் வரை வந்தார். ’யாராவது இவரிடம் வந்து பேசுங்கள்’ என்றார் இன்ஸ்பெக்டர். புரட்சிக் கூட்டம் பின் தங்க ஆரம்பித்தது. சரி .. துணிஞ்சி போவோம்னு நானும் நண்பனும் உள்ளே போய் எங்கள் கட்சியைச் சொன்னோம். வந்தவர் எங்களையும் மீதி வெளியே நின்றிருந்த புரட்சி வீரர்களையும் ஒரு பார்வை பார்த்தார். இன்ஸ்பெக்டரிடம் சொல்லி பு.வீ.களை உள்ளே அனுப்ப சொன்னார். எங்கள் இருவரையும் இங்கேயே நில்லுங்கள் என்றார். நாங்களும் சரி, பு.வீ.களும் சரி கடைசி வகுப்பு டிக்கட் தான் வாங்கியிருந்தோம். பு.வீ. எல்லோரும் கடைசி வரிசைக்குப் போனார்கள். நாங்களோ வெயிட்டிங்கில் இருந்தோம். ஆனாலும் எங்களை single out பண்ணி வச்சிருக்கிறதைப் பார்த்ததும் ஒரு சின்ன சந்தேகமும் பயமும் வந்தது. காத்திருந்தோம். 

 

போலீஸ்காரர்கள் எங்களை மானேஜரிடம் விட்டு விட்டுப் போய் விட்டார்கள்.

பு.வீ.கள் போய் அமர்ந்ததும் எங்கள் இருவரையும் அந்த மானேஜர் அழைத்துக் கொண்டு ஸ்டேஜ் பக்கம் சென்றார். தனியா கூட்டிட்டு போய் ... இப்படி ஒரு கற்பனை ஓடியது. ஆனாலும் தைரியத்தை கைவிடும் ஆட்களா நாங்கள்! அவரோடு சென்றோம். கூட்டிட்டு ஏறத்தாழ ஸ்டேஜ் வரை போய் விட்டோம். அங்கே போனதும் முதல் வரிசையில் உள்ள இரு சீட்களில் உட்காரச் சொன்னார். எங்களுக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. இல்லைன்னு சொல்லிட்டு மூணாவது நாலாவது வரிசையில் உட்கார்கிறோம் என்று சொல்லி அங்கே அமரப் போனோம். பின்னாலிலிருந்து ஒரு பெரிய விசில் சத்தம். திரும்பிப் பார்த்தோம். எங்கள் பு.வீ.கள் எங்களுக்கு கையை ஆட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். நாங்களும் கை ஆட்டி விட்டு உட்கார்ந்தோம். தற்செயலாகவோ வேண்டுமென்றோ இன்ஸ்பெக்டர் அந்தப் பக்கம் வந்து எங்களைப் பார்த்து சிரித்து தன் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார்.

 

 

இப்படியெல்லாம் இருந்தது. ஆனால் என் திருமணத்திற்குப் பின்னால் ஒரு நாள் மனைவியோடு கடைப் பக்கம் சுத்தி விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்போது விளக்குத் தூண் பக்கத்தில் உள்ள மொட்டைப் பிள்ளையார் கோவில் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் முன்னால் ஒரு சிறு கூட்டம். காவல் கோட்டத்தில் கூட இந்த இடம் பற்றி வருமே. அந்த இடத்தில் ஒரு சிறு குழந்தையோடு ஒரு பெண் நின்று அழுது கொண்டிருந்தாள். என்னவென்று கேட்டேன். அந்தப் பெண்ணும் கணவரும் குழந்தையோடு தெருவில் நடந்து போகும் போது ஒரு போலீஸ் ஜீப் அவர்களைக் கடந்து போயிருக்கிறது. அந்த ஜீப்களில் பக்கவாட்டில் தான் ஸ்டெப்னி இருக்கும். குழந்தையோடு போனவரின் கையில் அந்த டயர் ஒட்டி உறசியிருக்கிறது. பயத்தில் அவர் ஒரு கெட்ட வார்த்தையைச் சொல்லி விட்டார். திரும்பிப் பார்த்திருக்கிறார். போலீஸ் ஜீப். மன்னிப்பும் கேட்டிருக்கிறார். அவரை ஸ்டேஷன் வரை இழுத்துக் கொண்டு போய் உள்ளே வைத்து போலீஸ்காரனையே கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவாயா என்று சொல்லி அவரை வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். அங்கிருந்து நான் என் மனைவியால் கடத்தப் பட்டேன். அதோடு ஒரு பயங்கர வார்னிங் வந்தது. யார்ட்ட விளையாண்டாலும் போலீஸ்காரங்க கிட்ட விளையாடாதீங்க அப்டின்னு.

அப்பீல் உண்டா என்ன? நானும் கேட்டு “நல்ல பையனாக” அன்றிலிருந்து மாறி விட்டேன் அல்லது மாற்றி விட்டார்கள். 

 

ஆனாலும் போலீஸிற்கும் நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் எப்படியும் ஒரு ஒட்டு ஏதாவது ஒரு சமயத்தில் வந்து விடுமல்லவா? போன ஆண்டு கூட எங்கள் குடியிருப்பில் உள்ள பூங்காவைப் பற்றிய ஒரு சின்ன தகராறில் போலீஸ் நல்லாவே உரசினாங்க. என்ன பண்ண .. அனுபவிச்சி தான ஆகணும். அதிலும் ஒரு சின்ன வயது போலீஸ்காரர் ... அடேயப்பா .. அம்புட்டு அதிகாரமும் அவர் பைக்குள் என்பது போல் அடாவடித்தனமாக பேசினார். எனக்கும் பழைய வேகம் கொஞ்சம் வந்தது. நண்பர்கள் என்னை அள்ளிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே கொண்டு போய் விட்டார்கள். போலீஸ் போலீஸ் தான். இல்லீங்களா?! ஏதோ என் ராசி.. அந்தக் காலத்தில .. நான் பார்த்த போலீஸ்காரங்க அம்புட்டு நல்லவங்களா இருந்திருக்காங்க.

 

 

பி.கு. எனக்குத் தெரிந்து காவல் துறையில் british legacy என்று சொல்வார்களே அந்த அடிமைத்தனம் உறைந்து நின்று விட்டது. ஆர்டர்லிகள் இருப்பதைப் பார்த்தாலே தெரியும். அதோடு கீழே உள்ளவர்களின் தலையில் தான் அதற்கு மேல் பதவியில் இருப்பவர்களின் கால்கள் இருக்கும். இந்த அடிமைத்தனத்தால் தான் அவர்களால் பொது மக்களின் நண்பராக இருப்பதற்கு முடியவே முடியவில்லை என்று நினைக்கின்றேன். அந்த காக்கியை அணிந்ததும் கீழே உள்ளவர்களைத் துச்சமாகக் கருதும் வழக்கம் இன்னும் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது. 

 

வாழ்க காவல் துறை. அவர்களிடமிருந்து விலகியே இருந்தால் நாமளும் வாழ்க ..

 

 

 

 



Friday, August 16, 2019

1060. எங்க காலத்திலெல்லாம் ... 6 - நல்லவேளை .. அந்த போலீஸ்காரங்கெல்லாம் ரொம்ப நல்லவங்க. பாகம்: 1




*
அடுத்த பதிவு: 
https://dharumi.blogspot.com/2019/08/1061-2.html   

*


நெருப்போடு பழகிறது மாதிரி ராசாக்கள் கூட பழகணுமாம். சொல்லியிருக்காங்க. ஆனா நாம எங்கே ராசா கூட பழகிறது. அட மந்திரியோடு கூட பழக முடியாது. முடிஞ்சதெல்லாம் போலீஸ்காரங்க கிட்ட மட்டும் கொஞ்சம் பழகியிருக்கோம்... கஷ்டப்பட்டிருக்கிறோம். ஆனா அப்படியே ரீவைண்ட் பண்ணப்போ ஒரு காலத்தில் நம்ம ராசி செமயா இருந்திருக்கு. போலீஸ்காரங்க கிட்ட கொஞ்சம் உரசல் அது இதுன்னு இருந்தாலும் ‘சூடு’ எதுவும் வாங்காம பொழச்சிக்கிட்டேன். நல்ல காலமா .. இல்ல அந்தக் காலத்தில இருந்த போலீஸ்காரவுங்க அம்புட்டு நல்லவங்களான்னு தெரியலை.




 கொஞ்சூண்டு ரீ வைண்ட் பண்ணினேன். போலீஸ்காரங்க கிட்ட உரசினதெல்லாம் நாலஞ்சி ஞாபகத்துக்கு வந்தது. அதெல்லாம் இப்போ பண்ணியிருந்தேன்னா உசிரு பொழச்சிருக்காதுன்னு தெரிஞ்சது.  யோசிக்கும் போது . இன்னொண்ணும் நினைவுக்கு வந்திச்சி. என்னன்னா .. ரீ வைண்ட்ல வந்த நிகழ்ச்சி எல்லாமே என் கல்யாணத்துக்கு முந்தினது. அதாவது 1973க்கு முந்தினது. இதுல ஒரு சின்ன குழப்பம் ... கல்யாணத்துக்கு முந்தி தைரியமா இருந்து போலீஸ்காரங்கட்ட கூட தைரியமா இருந்திருக்கிறேன். ஆனால் கல்யாணத்துக்குப் பிறகு அந்த தைரியமெல்லாம் ஒரேயடியாகப் போயிருச்சோன்னு தோணுச்சி. எப்படியோ பொழப்ப ஓட்டிட்டு இருக்கேன். ஓடட்டும் ...





அந்தக் கால பஸ்ஸில கடைசி வரிசையில் ஆறு பேர் உட்கார்ரது மாதிரி நீள சீட் ஒண்ணு இருக்கும். பஸ்ஸில் ஏறுவதற்கான வாசல் இந்த வரிசைக்கு முன்னல தான் இருக்கும். இந்த சீட் ரொம்ப அடக்கமான சீட்.  எவ்வளவு கூட்டம் வந்தாலும் நமக்குத் தொந்தரவு கிடையாது. கதவு பக்கத்தில இருக்கிறதுனால காத்து சும்மா ஜில்லுன்னு வரும். காலை கைய யாரும் மிதிக்க மாட்டாங்க. ஏன்னா ஏறும் படியை ஒட்டி ஒரு அடைப்பு இருக்கும். அதற்குள் தான் சொன்ன அந்த கார்னர் சீட். ராசா மாதிரி உக்காந்துட்டு வரலாம். அதனால் தனியா வர்ரவங்க, சுமை ஏதும் இல்லாதவங்க டக்குன்னு மொதல்ல பிடிக்கிற சீட் இது தான். ஒரு நாள் எங்கிருந்தோ மதுரைக்குப் போகும் பயணம். முதல்ல ஏறினதுனால அந்த சீட் கிடைச்சிது. ஏறி உக்காந்திட்டேன். ஆட்களும் ஓரளவு  வந்திட்டாங்க. 

அப்போ ஒரு போலீஸ்காரர் - முழுக்கால்சட்டை போட்டிருந்தார். ஏன்னா அப்போவெல்லாம் கான்ஸ்டேபிள்களுக்கெல்லாம் அரைக்கால் சட்டை தான் - அவரு இன்ஸ்பெக்டராக இருந்திருக்கணும். பஸ்ஸில ஏறினார் . ஒரு லுக் உட்டார். பாதிக்கு மேல் பஸ்ஸில ஆட்கள் இருந்தாங்க. எனக்கு அடுத்த சீட்டும் காலியாக இருந்தது. ஏறியவர் என்னைப் பார்த்து ‘அங்க தள்ளி உக்காருங்க’ன்னு சொல்லிட்டு என் சீட்டைப் பிடிக்கப் பார்த்தார். நான் நல்லா தள்ளி நான் இருந்த சீட்டில் உக்காந்திட்டு, பக்கத்து சீட்டைக் காண்பிச்சேன். ‘அங்க உட்காருங்க’ன்றதை அப்படி செஞ்சேன். அவருக்குக் கோபம் வருமா வராதா? வந்திச்சி. ‘ஏன் நீங்க அங்க உட்கார மாட்டீங்களா?’ன்னார். நான் உடனே “ஏன் நீங்க அங்க உட்கார மாட்டீங்களா!’ன்னு கேட்டேன். அது இன்னைக்கி நடந்திருந்தா ... சரி.. அந்தக் கற்பனை இப்போது எதுக்கு? அன்னைக்கி என்ன நடந்திதுன்னா ... இன்ஸ்பெக்டர் முன்னால ஒரு ஜன்னல் சீட் பார்த்து அங்க உக்காரப் போய்ட்டாரு. நல்லவரு தானே?




அடுத்து, அந்தக் காலத்தில மதுரையில கால்பந்து வருஷா வருஷம் நடக்கும். அண்ணா பத்தி அப்டின்ற கம்பெனி நடத்தும். எங்களுக்கெல்லாம் அது திருவிழாக் காலம். மாலையில பஸ்ஸைப் பிடித்து தமுக்கம் மைதானத்துக்குப் போய் அந்தக் காலரியில் உக்காந்து பார்த்தா ... அடடே..! அதிலும் அந்தப் பக்கத்தில் தேர்முட்டியில் கடை வச்சிருக்கிற கூட்டம் நிறைஞ்சி இருக்கும். எல்லாம் கடை முதலாளிகள். வயசும் நாப்பதைத் தாண்டி இருக்கும். அவங்க பக்கத்தில இருந்து மேட்ச் பார்க்கிறது ரொம்ப நல்லா இருக்கும். அப்படி லூட்டி அடிப்பாங்க. எல்லா டீம் பற்றியும் தெரிஞ்சி வச்சிருப்பாங்க. பிளேயர்களின் பெயர்களெல்லாம் அத்து படி. மதுரைக் கூட்டத்திற்கே அப்போ கூர்க்கா டீம், அடுத்து பெங்களுரிலிருந்து வரும் H.M.T. டீமிற்குத்தான் விசிறிகள் அதிகம். எங்க காலேஜ் விளையாட்டு வாத்தியார் லைன் அம்பயரா வருவார். அவருக்கு தலை வழுக்கை. அத வச்சி அவருக்கு ஒரு பட்டப் பெயர் - டைனமோ தலையான்னு கத்துவாங்க. 

சரி .. விளையாட்டு ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம கதைக்கு வருவோம். ஒரு நாள் டைம் ஆகிப் போச்சு. கீழ வெளி வீதியில பஸ்ஸில அவசரமா போறோம். பஸ்ஸில நிறைய கால்பந்து ரசிகர்கள் தான். கீழவாசல் ஸ்டாப். அப்போவெல்லாம் டிவிஎஸ் தான் பஸ் ஓட்டிச்சின்னு நினைக்கிறேன். அவங்க பஸ் ஓட்டும் போது யாராயிருந்தாலும் பின்னால் இருந்து தான் ஏறணும்... முன் வழியில தான் இறங்கணும். அன்னைக்கி பாவம் ஒரு பிள்ளைதாய்ச்சி. பெரிய வயிறோடு கஷ்டப்பட்டு, முன் பக்கம் ஏற பார்த்தாங்க. நடத்துனர் கண்டிஷனா சொல்லிட்டார். பின்னால் போய் ஏறும்மா என்றார். அந்த அம்மாவால நடக்க முடியலை. பஸ்ஸும் கிளம்பியிருச்சி. அடுத்த ஸ்டாப். அப்போதிருந்த சிந்தாமணி தியேட்டர். இப்போ அங்க ராஜ்மகல் துணிக்கடை. அங்க பஸ் நின்னுது. பஸ் புறப்படும் போது முன் வழியா ஒரு போலீஸ்கார அய்யா - அரைக்கால் சட்டையோடு - முன்னால ஏறினார். நடத்துனர் என் பக்கம் நின்று கொண்டிருந்தார். அவர் அதைத் தடுக்கவில்லை. பஸ் புறப்படப் போச்சு. நான் சத்தமா நடத்துனரிடம் ’பாவம் அந்தப் பொம்பிளைய ஏத்தலை; இப்போ இவரை மட்டும் ஏத்துறீங்க’ன்னு கேட்டேன். இது நடந்தது அந்தக் காலத்தில இல்லையா? இப்போன்னா எல்லோரும் அவரவர் வேலையப் பார்த்துக்கிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. ஆனால் அப்போவெல்லாம் அப்படியெல்லாம் கிடையாது. பலபேர் எனக்கு சப்போர்ட் பண்ணி சவுண்டு உட்டாங்க. போலீஸ்காரர் என்னன்னு கேட்டார். சொன்னோம். நான் இறங்கிக்கிறேன் சொல்லி அவரே இறங்கி விட்டார். 


நல்ல போலீஸ்காரர். 

நியாயத்துக்கு ஆதரவளிக்கும் மக்கள்

அன்று அப்படி ... இன்று எப்படி ...?


இன்னும் தொடரும் ....

*

Saturday, May 11, 2019

1047. எங்க காலத்திலெல்லாம் ... 5 (மீசைகளின் பரிணாமம்)





*
Alvin Toffler எழுதிய Future Shock என்ற எதிர்காலவியல் நூல் வெளிவந்த போது  அது ஒரு பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. 'நாளை’ வரப்போகும் knowledge explosion பற்றிய ஒரு எச்சரிக்கையை அது தந்தது. எப்படிக் காலங்களும் கருத்துகளும் மாறிப் போகும். அதற்காக தயாராக இல்லாத அனைவருக்கும் மாற்றங்கள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கும் என்ற பொதுக் கருத்தில் நிறைய சான்றுகளோடு அந்த நூலை வெளியிட்டிருப்பார்.

ஒரு பகுதியில் நம்முடைய நாகரீகங்கள் - fashions - இப்படி தொடர்ந்து மாறும் என்றும் கூறியுள்ளார்.

உண்மை தானே. நம்மூர் பெண்களின் ஜாக்கெட்டின் கை நீளம் மட்டும் எடுத்துப் பாருங்களேன். மேலே போகும் .. கீழே வரும். மேலே போகும்போது puff வரும் ... கீழே வரும்போது இப்போதுள்ளது மாதிரி மெல்லிய துணிவரும். தோளுக்கும் மணிக்கட்டுக்கும் நடுவில் பல இடங்களில் பஸ் ஸ்டாப் மாதிரி அங்கங்கே நின்று .. நீண்டு .. என்னென்னமோ நடக்கும். தமிழில் ஒரு சொலவடை சொல்வார்கள்: முப்பது ஆண்டுகள் தொடர்ந்து தாழ்ந்த குடும்பமும் கிடையாது; வாழ்ந்ததும் கிடையாது என்பார்கள். அது மாதிரி தான் fashions.

ஆண்களின் உடையில் நமது நீள் கால்சட்டைகளுக்குத்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்? அறுபதுகளில் skin tight என்று ஒரு fashion. அதுவும் அந்தக் காலத்தில் ஏறத்தாழ முழுமையாக பருத்தித் துணியில் தான் அதிகம் தைப்போம்.60களின் கடைசியில் தான் மெல்ல டெர்லின், நைலான், டெர்ரி காட்டன், ஷார்க் ஸ்கின் ... என்று மெல்ல வகை வகையாகத் துணிகள் வர ஆரம்பித்தன. ட்வீட், உல்லன் எல்லாம் கொஞ்சம் எட்டாத உயரம். அந்த சமயத்தில்  ரொம்ப காஸ்ட்லியான துணியாக நான் நினைத்திருந்தது gaberdine என்றொரு வழுவழுப்பான, பளபளக்கும் ஒரு பருத்தித் துணி தான்.


இந்த மாதிரி பருத்தி ஆடைகள் மட்டுமே அதிகமாக இருந்த நாளில் skin tight என்று ஒரு fashion வந்தது. நான் ஒன்றே ஒன்று தைத்தேன். பிரச்சனை என்னவென்றால் உடை அணிய ஆரம்பிக்கும் போது  கால்களை ஒரு வழியாக உள்ளே நுழைத்துப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் கழற்றுதற்கு தனியொரு  டெக்னிக் இருந்தது. மிகவும் இறுக்கமாக இருக்குமா .. அதனால் குதிகாலில் ஒரு நோட்டுப் பேப்பரை வைத்துக் கொண்டு கால்சட்டையில் முதல் கீழ்பகுதியை இழுத்து பேப்பர் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வீட்டில் தம்பி, தங்கை என்று யாரையாவது நயந்து வைத்துக் கொள்ள வேண்டும். first step-ல் கால்சட்டையை இப்படி வைத்துக் கொண்டு ஒரு கைலியை மேலாகக் கட்டிக் கொண்டு தம்பி / தங்கைகளைக் கூப்பிட்டு, நயந்து பேசி கால்சட்டையை உருவி எடுக்கச் சொல்ல வேண்டும். அப்போது நிற்க முடியாதில்லையா ... கட்டில் மல்லாந்து படுத்துக் கொண்டு ... அம்மாடி ஒரு வழியா இப்படித்தான் அதைக் கழற்றணும். ஆனால் இப்படி ஒரு தடவை அல்லது ஒரு முறைதான்  போட முடியும். எல்லாம் பருத்தித் துணியா .. ஒரு தடவை போட்டுக் கழட்டினாலே கசங்கி சுருக்கங்களோடு இருக்கும். இப்படி ஒரு கால்சட்டை தைத்து அதனோடு  மல்லுக் கட்டியதிலிருந்து அதன் மேலுள்ள ஆசை போய் விட்டது.

ஆனால் இன்னொரு நண்பர் இருக்கிறார். அவர் இதிலெல்லாம் கில்லாடி. அவரைப் பற்றி கொஞ்சம் பொருத்து சொல்கிறேன்.

1964-66 முதுகலை படித்த ஆண்டுகள். நான் தியாகராஜர் கல்லூரியில் இளம் கலை முடித்து அங்கேயே முதுலை தொடர்ந்தேன். மதுரையில் - மதுரையில் என்ன.. தென் தமிழகத்திலேயே - மதுரையில் மட்டும் இரு கல்லூரிகளில் முதுகலை இருந்தன. இவைகளை விட்டால் சென்னையில் 3 கல்லூரிகள் என்றுதான் இருந்தன மொத்தம் மாநிலத்திலேயே 5 கல்லூரிகளில் மட்டும் எங்கள் பாடத்திட்டம் முதுகலையில் இருந்தது. அப்போது. ஒரு வழக்கம். நாங்கள் இன்னொரு கல்லூரியான அமெரிக்கன் கல்லூரிக்கு ஒரு நாளும், பல்கலைக்கு ஒரு நாளும் வகுப்பிற்குப் போக வேண்டும். அதே போல் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் எங்கள் கல்லூரிக்கு வரவேண்டும். Inter-collegiate classes.  ஒரு கல்லூரியில் மாணவர்கள் ... ஆனால் மூன்று கல்லூரி ஆசிரியர்கள். ஒட்டு மொத்தமாக அங்கங்கு போவோம். அதில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மீது எனக்கும் என் வகுப்புத் தோழர்களுக்கும் எப்போதும் ஒரு பொறாமை. பல காரணங்கள். அட .. ஒண்ணே ஒண்ணு சொல்றேனே .. எங்கள் வகுப்பில் மாணவிகளோடு நாங்கள் கொஞ்சம் பேசினாலே எங்கள் பேராசிரியர்கள் முறைப்பார்கள். ஆனால் பொதுவாக அந்த பழைய பஞ்சாங்கத்தனம் அமெரிக்கன் கல்லூரியில் கிடையாதாம்.ஆனால் நாங்கள் மாணவர்களாக இருந்தபோது அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர்  எஸ். ஆப்ரஹாம் அத்தனை நல்ல மனிதர். மாணவர்கள் எல்லோரும் அவருக்குச் செல்லப் பிள்ளைகள். அவர் மதியச் சாப்பாட்டை சுவை பார்க்க மாணவர் கூட்டம் சுற்றி நிற்கும். நாங்கள் ஜெயில் பறவைகள். அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் சுதந்திரப் பறவைகள்- எல்லா விஷயத்திலும்!

இதனால் என் வகுப்புத் தோழர்கள் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களிடம் அதிகமாகப் பழக மாட்டார்கள். ஆனால் எனக்கு அதில் இரு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவர் Tagore.  சிலரின் பெயர்கள் அவர்களுக்கு சில கஷ்டங்கள் தரும். என் பெயரை ஷியாம், ஷாம் என்று இஷ்டப்படி உச்சரிக்கும் போது கஷ்டமாக இருக்கும். அதைப் பற்றி கூட இங்கே எழுதியுள்ளேன்... வாசித்துக் கொள்ளுங்கள். அதே மாதிரி தான் Tagore-க்கும். அவர் பெயரை தாகூர் என்று நாம் வழக்கமாகத் தமிழில் சொல்வோமே .. அதே மாதிரி சொன்னால் மனுஷனுக்குப் பிடிக்காது. ஆங்கிலத்தில் சொல்வது போல் சொல்லுங்கள் என்று கராறாகப் பேசி விடுவார். அவரிடம் தான் முதலில் பழகினேன்.  முனைவர் பட்டம் எல்லாம் பெற்று இளம் வயதிலேயே இறந்து விட்டார்.

அவர் மூலமாக இன்னொரு நண்பர் கிடைத்தார். பெயர் ப்ரின்ஸ். பயங்கர ஸ்டைல் மன்னன். தலைமுடி வெட்டிலிருந்து கால்களில் போடும் பாதணி (காலணி) வரை எல்லாமே தனி ஸ்டைல் தான். அதனால் தானோ என்னவோ என் வகுப்புத் தோழர்களுக்கு அவர் மேல் எப்போதும்  ஒரு கண். அதுவும் அந்தக் காலத்தில் skin tight போடுபவர்களே மிகக் கொஞ்சம். அதிலும் அந்த pants  போடும்போது அதோடு இடையில் கட்டியிருக்கும் இடை வார் - belt- அந்தக் காலத்து fashion  படி மிக மிக அகலம் குறைந்ததாக இருக்க வேண்டும். நானெல்லாம் அந்த பெல்ட் வாங்கவில்லை. ஆனால் இந்த ஸ்டைல் மன்னன் ஒரு பெல்ட் போட்டிருப்பார். அவரும் ஒல்லி .. அவர் பெல்ட்டும் அத்தனை ஒல்லி. அவர் மேல் என் வகுப்பு மாணவர்கள் ஏதாவது comment அடித்துக் கொண்டிருப்பார்கள்.என்னிடம். “ இங்க பார்ரா ... அரைஞாண் கயிரு மாதிரி இத்தனூண்டு பெல்ட் போட்டு வர்ராண்டா உங்க ஆளு” என்பார்கள்.

அட .. சொல்ல நினைத்தது மீசை பற்றியது. எங்கெங்கோ போய் விட்டேன். உண்மையிலேயே Alvin Tofflerசொன்னது போலவே இந்த மீசை தாடியெல்லாம் எனக்கு நிறையவே ஷாக் கொடுத்திருக்கிறது.  ஒரு சின்ன சான்று: எங்க காலத்தில எல்லாம் கல்யாண மாப்பிள்ளை வழு வழுன்னு ஷேவ் பண்ணியிருக்கணும். முதலில் சில மாப்பிள்ளைகளை ட்ரிம் பண்ணிய குட்டித் தாடியோடு பார்த்த போது Alvin Toffler சொன்ன ஷாக் எனக்கும் ஆனது. கர்ணன் அப்டின்னு ஒரு பெரிய cinematographer இருந்தார். அவர் கட்டபொம்மன் படத்தில சிவாஜி வச்சிருந்த மீசை மாதிரியே வச்சிருந்தார். It was an exception... so it became a very familiar one. ஆனால் தேவர்மகன் வந்த பிறகு தான் அந்த மீசை யார் வேணும்னாலும் வச்சிக்கலாம் என்ற நிலைக்கு வர முடிந்தது. முந்தியெல்லாம் “படிச்சவங்க” அந்த மாதிரி மீசையெல்லாம் வைக்கவே முடியாது. No social recognition. இப்போ இது சாதாரணமா ஆயிரிச்சி.




STEPHEN
PRINCE  '60s


நானே நான் .. ‘72

எங்க அறுபதுல நாங்க வச்சிருந்த மீசைக்கு மூணு சாம்பிள் மேலே கொடுத்திருக்கிறேன்.

அந்தக் காலத்து கதாசிரியர்கள்  ஒரு கதாநாயகனை வர்ணிக்கும் போது ”பென்சிலால் வரைந்தது போன்ற மெல்லிய மீசை” என்றுதான் எழுதுவார்கள். எம்ஜிஆருக்கெல்லாம் மீசை ரொம்ப சிம்பிள். நடுவில் கொஞ்சம் இடம் விட்டு பென்சிலால் அந்தப் பக்கம் ஒரு கோடு... இந்தப் பக்கம் இன்னொரு கோடு. முடிஞ்சிது. நம்ம ஜெயசங்கரைப் பாருங்க. அதே மாதிரி தான். நாங்களும் அப்படித்தான் வைத்திருந்தோம். அதில் மீசை சரியாக சைஸ் செய்வது ஒரு பெரிய கலை. பிளேடைத் தனியாகக் கையில் எடுத்து ஒவ்வொரு முடியாகச் சரி செய்வோம். செய்வோமோ என்னவோ .. நான் செய்தேன்.ப்ரின்ஸ் வைத்திருப்பது போல் நடுவில் கோட்டு மீசை. முடியும் இடத்தில் கொஞ்சம் கூடுதல். இது ஒரு டைப்! அல்லது ஸ்டீபன் மாதிரி கொஞ்சம் கீழே இழுத்துக் கொள்வது இன்னொரு ரகம்.

நாளாக நாளாக நாளொரு மேனியும் பொழுதொரு சைசுமாக அது வளர்ந்து மூக்கிற்கும் வாய்க்கும் நடுவில் உள்ள இடத்தை முழுவதாக இப்போது ஆக்கிரமித்துக் கொண்டது. எங்கள் வயசுக்கார ஆளுக பலபேர் இன்னும் அந்தக் கோட்டு மீசையோடு போவதைப் பார்க்கும் போது அந்த காலத்து நினைவு வரும். ஆனாலும் சில மீசைகள் மட்டும் மிகப் பிரபலமாகி விடும்.நம்ம ஊருக்கு கட்டபொம்மன் மீசை ஒரு தனி ரகம். ஆனால் உலகத்துக்கே ராட்சசன் ஹிட்லரின் பில்ட்டர் மீசை தனி ரகமாக நின்றது. அச்சமூட்டும் அந்த மீசையை வேணுமென்ற நகைப்பதற்குரிய ஒன்றாக மாற்றினார் சார்லி சாப்ளின்!

மீசை அளவு பெருத்தது. ஆனால் சைட் பர்ன் பல உருவமெடுத்துள்ளது. பல ஏற்ற இறக்கங்கள். இப்போது ஏறத்தாழ மக்களுடைய concentration எல்லாம் தாடிப்பக்கம் வந்து விட்டது என்று நினைக்கின்றேன்.பல ஆண்டுகளாக சைட் பர்ன் பற்றி யாரும் மெனக் கெடுவதில்லை. ஆனால் எழுபதுகளில் அதுவும் பல உருவம் எடுத்தது. சைட் பர்ன் அப்படியே வளர்ந்து தாடியோடு இணைந்து விடும். அல்லது மீசையோடு ஒட்டி விடும். இப்போது யாரும் அந்த ஏரியாவில் மெனக்கெடுவது இல்லை போலும். தாடி தான் இப்போதைக்கு ஓங்கிய நிலையில் உள்ளது.  ட்ரிம்மர் வேறு வந்து விட்டதா? மோடி மாதிரி ஒழுங்காக ஷேப் செய்த தாடிகள் இப்போதைய fashion.

அவரு சொன்னது மாதிரி 30 ஆண்டுகளுக்குள் எத்தனை மாற்றங்கள். மீசையைக் கோடா வச்சா என்ன ... முழுசா வச்சா என்ன? ஆனாலும் காலத்திற்கு ஒரு கோலமாக அவை மாறுகின்றன. ஆனால் எப்படி யாரால் அது மாறுகின்றது என்று யாராலும் சொல்ல முடியாது. எப்படியோ மாறுகின்றன.


பாருங்க இப்போது எங்க மூணுபேர் மீசையையும்.
முதலில் உள்ள நண்பர் பிரின்ஸ். நான் சொன்ன அந்த ஸ்டைல்காரர். பாத்தீங்கல்ல .. அப்போ மட்டுமில்லை... தல இன்னைக்கும் ஸ்டைல்காரர் தான்.









அடுத்த நண்பர் ஸ்டீபன் எனக்கும் பிரின்ஸிற்கும் அமெரிக்கன் கல்லூரியில்ஓராண்டு ஜூனியர். ;படித்த காலத்தில் அதிக தொடர்பில்லை. ஆனால் அவரது மெல்லிய வளர்ந்த உடல் எனக்கு அப்போதே பிடிக்கும். கொஞ்சம் majestic look கொடுப்பார். இப்போதும் பாருங்களேன் .. என்னை மாதிரி தொப்பையெல்லாம் இல்லாமல் ‘கச்சின்னு’ இருக்கிறார். எல்லாம் ஒரு கொடுப்பினை! அமெரிக்கன் கல்லூரியில் ஒரு பேராசிரியர் - - J.C.B.Abraham. - பரிணாமத் துறையில் வல்லுநர்.  இவருக்கு அவர் ஓர் ஆதர்சன ஆசிரியர். அதனால் அத்துறையில் இவரும் ஒரு பெரும் புள்ளி.. அரசுக்கல்லூரிப் பேராசிரியர். இவர் சமீபத்தில் தன் இரு படங்களையும் முகநூலில் போட்டிருந்தார். அவரும் ஒரு பரிணாம அவதானியா. அதனால் எனக்கு இந்த மீசையின் பரிணாமம் நினைவுக்கு வந்தது. 

அதன் பலன் தான் இந்தப் பதிவு.




STEPHEN

























Saturday, April 13, 2019

1038. எங்க காலத்திலெல்லாம் ... 4 ... காசுக்கு காலம் காலமாக ஓட்டுப் போட்ட திராபைகள் நாம்.






*




என்னமோ காசு வாங்கிட்டு ஓட்டு போடுறது புதுசு மாதிரி எல்லாரும் பேசுறாங்க. அதிலும் திருமங்கலமும், R.K. நகரும் முன்மாதிரியா வச்சுப் பேசுவாங்க. ஆனால் சின்னப் பிள்ளையிலேயே இதைப் பற்றிக் கேட்டிருக்கேன்.

அந்தக் காலத்தில அப்பாவும் நானும் ஒரே பள்ளியில் தான் இருந்தோம் - அவர் ஆசிரியராக .. நான் மாணவனாக. அப்பா நாள் முழுவதும் ஓடி உழைக்கிற ஆளு. காலையில நாலரை மணிக்கு எழுந்து ஐந்து மணி பூசைக்குக் கோவிலுக்கு அம்மாவோட போயிருவார். அவரும் மெனக்கெட்டு என்னை எழுப்பி உட்டுட்டு போவார். அவங்க அந்தப் பக்கம் போனதும் நான் படுத்துத் தூங்கிடுவேன். அப்பா கோவிலுக்கும் போய்ட்டு அப்படியே ‘வீட்டு ட்யூஷன்’ எடுக்க போயிருவாங்க, இதெல்லாம் பசையான ஆட்களுடைய வீடாக இருக்கும். அதிலும் பல சமயங்களில் அப்பாவிடம் படித்தவர் தன் பிள்ளைக்கு வீட்டுக்கு வந்து பாடம் சொல்லித்தர அழைப்பார்கள். அவர்களிடமெல்லாம் பொதுவாக மாதா மாதம் ட்யூஷனுக்கு காசு வாங்க மாட்டார்கள். மொத்தமாக ஆண்டு இறுதியில் வரும். அது ஒரு சேவிங்க்ஸ் என்பார்கள். 7 மணிக்கு வீட்டுக்கு வந்தால் வீட்டு மெத்தையில் அடுத்த செட் மாணவர்களுக்கு ட்யூஷன். அப்பாவின் குளிப்பு, சாப்பாடு எல்லாமே interludeல் நடந்து விடும்,  மாலையும் இதே மாதிரி இரண்டு அல்லது மூன்று பேட்சாக ட்யூஷன் நடக்கும்.

மதியம் ஒன்றாக அப்பாவோடு உட்கார்ந்து சாப்பிடுவேன். அப்போது அப்பா அம்மாவிடம் ஏதாவது சொல்லிக் கொண்டே சாப்பிடுவார். அவர் ஒருவேளை எனக்கும் சேர்த்தே சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் அவர் சொன்னதில் பல இன்னும் நினைவில் இருக்கிறது. சான்றாக, முதன் முதல் ஹவாய் செருப்பு வந்ததே... அந்த சமயம் அப்பா அம்மாவிடம் அந்த செருப்பைப் பற்றி பேசினார். முடிவில் வாழை மட்டையில் கிராமத்தில் செருப்பு செஞ்சு போடுவேமே அச்சு அசலா அதே மாதிரி இருக்கிறது என்றார். ஹீல்ஸ் இல்லை என்பதையும் சொன்னார். எங்களுக்கு அப்போ அது புதுசு. யாரோ வெளி நாட்டில் இருந்து கொண்டு வந்தது என்றார்கள்.

அப்படி ஒரு நாள் பேசிக்கொண்டே சாப்பிடும்போது அப்பா அப்போது நடந்த தேர்தல் - முனிசிபாலிடி தேர்தல் - பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் ‘ஓட்டுப் பெட்டிகள்” கலர் கலரா இருக்கும். சிகப்பு, பச்சை, மஞ்சள் என்ற வண்ணங்களில் பெட்டிகள் இருக்கும். அந்தப் பெட்டிக்கு ஓட்டு போடு .. இந்தக் கலர் பெட்டிக்கு ஓட்டு போடு என்றுதான் பிரச்சாரம் நடக்கும். நான் சொல்கிற காலத்தில் கட்சி பெயர் சொல்லி ஓட்டுக் கேட்டதாக எனக்கு நினைவில்லை.

ஓட்டு கேட்கும் போது அந்தந்த ஏரியாவில் உள்ள பெரிய மனுஷங்களை உடனே அழைத்துக் கொண்டு அந்த ஏரியாவைச் சுற்றி வந்து வீட்டுக்கு வீடு போய் ஓட்டுக் கேட்பார்கள். நாங்கள் இருந்த தெற்கு வாசலில் இஸ்லாமியர்கள் அதிகம். என் கூட சண்டை போட்ட தாவூத்தின் சொந்தக்காரர் ஒருவர் தேர்தலில் நின்றார். அப்பாவையும் அழைத்திருக்கிறார்கள், ஒரு நாள் அவர்களோடு சென்று வந்தவர் அடுத்த நாள் மதியச் சாப்பாட்டு நேரத்தில் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘எல்லோருமா போனோமா .. தேர்தலில் நின்றவருக்குப் பக்கத்தில் ஒருத்தர். அவர் கையில் ஒரு தாம்பாளம். அதில் வெற்றிலை வைத்து சூடக்கட்டியும் வைத்திருந்தார்கள். எந்தக் கலர் பெட்டி என்று சொல்லிவிட்டு வெற்றிலை மேல் காசு வைத்துக் கொடுத்தார்கள்”/ அம்மா ‘எவ்வளவு காசு வச்சாங்க?’ அது சிலருக்கு நாலணா ... சிலருக்கு எட்டணா வைத்தார்கள்’ என்றார் அப்பா. சூடத்தோடும் வெற்றிலையோடும் வைத்துக் கொடுத்தால் அது அவர்களைக் “கட்டிப் போடும்” என்றார்கள். சூடம் அடித்து சத்தியம் செய்வது போல் அது என்றார்கள்.

ஆக காசு வாங்கிட்டு ஓட்டு போடுறது பரம்பரையா அந்தக் காலத்திலிருந்து வருது. ஏதோ நேத்தோ முந்தா நாளோன்னு சொல்லிக்கிட்டு நம்மளையே ஏமாத்திக்க வேணாம்.

இதெல்லாம் எப்போ நடந்ததுன்னு எந்த வருஷமின்னு ஞாபகமில்லை, ஆனால் இதோடு கேட்ட சில விஷயங்களை வச்சா ஓரளவு வருஷத்தைக் கண்டு பிடிச்சிரலாம். ஏன்னா அப்பா இதைப் பற்றி பேசுறது மாதிரி ஒரு நாள் ’பாத்திமா காலேஜ் அப்டின்னு பொம்பிளைப் பிள்ளைகளுக்கு ஒரு காலேஜ் சிஸ்டர்ஸ் கட்டப் போறாங்களாம் ... ஆனால் புத்தி கெட்ட தனமா எங்கேயோ மதுரை டவுனை விட்டுத் தள்ளி கட்டுறாங்களாம். பொம்பிளைப் பிள்ளைகளுக்கு கட்டுறதை ஊருக்குள்ள கட்டணும்னு இந்த சிஸ்டர்களுக்குப் புரியலையே’ என்று கவலைப்பட்டார் அப்பா. இப்போ எடுத்துப் பார்த்தேன். அந்தக் கல்லூரி ஆரம்பித்தது 1953. ஆக அதுக்கு ஒன்று அல்லது இரு ஆண்டுகளுக்கு முன்பு அப்பா அப்படி சொல்லியிருக்க வேண்டும். நீங்களே கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள் - எப்போது அந்த தேர்தல் நடந்திருக்க வேண்டுமென்று.

நானும் பாத்துட்டேன். காசுக்கு மடியிற ஆட்கள் ரொம்ப ஈசியா நாம் தான். கேடு கெட்டவர்கள் நாம். இதைப் பற்றி முக நூலில் எழுதவா என்று பெர்மிஷன் கேட்டேன். பெரியவங்க நிறைய பேர் எழுதுங்க அப்டின்னாங்க. அதுக்கு வரலாற்றிலிருந்து சில சான்றுகள் எடுத்தேன்; ஆனால் எழுதவில்லை. (எழுதணும் - நம்ம வண்ட வாளம் பத்தி)  பல முறை போர்களில் காசுக்குக் காட்டிக் கொடுத்த நாய்கள் நம்மில் அதிகம். அதிலும் வெளிநாட்டுக்காரன் வரும் போது கூட காசு, பதவி .. இப்படி எதற்காகவாவது காட்டிக் கொடுத்து வந்தவனை வெற்றியடையச் செய்திருக்கிறார்கள்.

காசுக்காக நாயா அலைஞ்சிருக்காங்க நம்ம முன்னோர்கள்.

நாமும் தொடர்கிறோம் ...






*





Thursday, March 28, 2019

1036. எங்க காலத்திலெல்லாம் ... 3 -- சைக்கிள் ஓட்டுவோமா?






*

நம் எல்லோர் வாழ்க்கையிலும் நிச்சயமாக நடந்திருக்கும், நடக்கும் ஒரு விஷயம் சைக்கிள் ஓட்டப் பழகுவது. ஆனால் அது எப்படி நடந்தது .. எத்தனை நாள் நடந்தது ... எத்தனை தடவை விழுந்து எழுந்தோம் என்பதெல்லாம் வேறு வேறு தான். ஆனால் தட்டுத் தடுமாறி பழக ஆரம்பித்து எப்படியெல்லாமோ செய்து கடைசியில் சைக்கிள் ஓட்ட பழகி விட்டோம்.

எனக்குத் தெரிந்து சைக்கிள் ஓட்டத் தெரியாத ஆண் ஒரே ஒருவரை மட்டும் என் வாழ் நாளில் எனக்குத் தெரியும். எத்தனை தூரமானாலும் நடந்தே தான் போவார். இப்போதாவது சைக்கிளைப் பழகலாமே என்று கேட்டேன். இதுவரை நடந்தே பழகி விட்டது. இப்படியே இருக்கட்டும் என்றார். இவர் எங்கள் கல்லூரியில் ஒரு பேராசிரியர். இன்னொருவரும் கல்லூரியில் இருந்தார். அவரிடம் சைக்கிள் பழகச் சொல்லி நண்பர்கள் வற்புறுத்தியதில் அவரும் சரி என்றார். அப்போது அவருக்கு வயது ஐம்பதுக்கும் மேல். அவர் ஒரு ஆய்வக உதவியாளர். கல்லூரி வளாகத்தில் கோடை விடுமுறையில் இளைஞர்கள் சிலர் அவருக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். கொஞ்சம் பாவமான ஆள் அவர். பழக ரொம்ப கஷ்டப்பட்டார்.

 ஒரு நாள் மதிய நேரம். அந்தப் பேராசிரியர் நடந்து வந்து கொண்டிருந்தார். எங்கள் கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள நாற்சந்தியில் அப்போது போக்குவரத்து போலீஸ் வாகனத்தை ஒழுங்கு படுத்த நிற்பார்கள், அன்று மதியம் வயதான ஒருவர் சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு சைக்கிள் ஓட்டிக் கொண்டு காவல்துறைக்காரரைத் தாண்டி போயிருந்திருக்கிறார். பார்த்த போலீஸ்காரருக்கு வந்ததே கோபம். விசில் ஊதி அவரை நிற்க வைத்து யார், என்ன ஏது என்று கேட்டிருக்கிறார். அந்த மனுஷனும் அவருக்கு ஏன் கோபம் வந்தது என்று புரியாமல் பதில் சொல்லியிருக்கிறார். இந்தக் கல்லூரியில் தான் வேலை பார்க்கிறேன் என்றும் சொல்லியுள்ளார். போலீஸ்காரருக்கு நம்பிக்கையில்லை. தற்செயலாக சைக்கிள் ஓட்டத் தெரியாத பேராசிரியர் அந்த இடத்தைத் தாண்டும் போது போலீசிடம் மாட்டியவர் பரிதாபமாகக் கூப்பிட்டிருக்கிறார். அவர் போய் மீட்டு வந்திருக்கிறார். அப்போது போலீஸ்காரரும் பேராசிரியரும் ஏன் அப்படி சைக்கிளைச் சின்னப் பசங்க மாதிரி பின்னாலிலிருந்து ஓட்டி வந்தீர்கள் என்று கேட்க, அவர் பரிதாபமாக, இப்போது தான் சைக்கிள் ஓட்ட பழகிக்கொண்டிருக்கிறேன்; இன்னும் முழுதாகப் பழகவில்லை; ஏற இறங்க தெரியாது; அதனால் இப்படி ஓட்டி வந்தேன் என்றாராம். காவல் துறை ஆளும் சிரித்துக் கொண்டே விட்டு விட்டாராம்.

சரி.. இந்தக் கதை இப்போது இங்கே எதற்கு? அதாவது ஒவ்வொருவரும் சைக்கிள் பழகும் விதம், அதற்கெடுக்கும் நேரம் என்றெல்லாம் வித்தியாச வித்தியாசமாக இருக்கும்னு சொல்லணும்னு சொல்ல நினச்சி ... அப்போ இந்தக் கதை நினைவுக்கு வர அதைச் சொல்லிட்டேன். சரி... இனி என் கதைக்கு வருவோம்.
அந்தக் காலத்தில இப்போவெல்லாம் இருக்கிற மாதிரி சைக்கிளெல்லாம் வீட்டுக்கு ஒண்ணு என்றெல்லாம் இருக்காது. எல்லோரிடமும் சைக்கிள் இருக்காது; இருக்க முடியாது. ஏன்னா அதெல்லாம் அப்போ அது ஒரு rare commodity! அதே மாதிரி இப்போ குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் முன்பே சைக்கிள் வாங்கிக் கொடுக்கிறோமே ... அதெல்லாம் அப்போ கிடையாது. சின்னப் பசங்க - பசங்க மட்டும் தான்; பெண்களுக்கெல்லாம் சைக்கிள்  வாசனை கூட கிடைக்காது - சைக்கிள் பழகணும்னா வாடகை வண்டி தான். பலரும் அப்போவே சின்ன சைக்கிளில் ஓட்ட பழகிடுவாங்க. ஆனா நான் ஒரு வாத்தியார் மகன் தானே. வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்வாங்கல்ல .. அதை நான் அப்போவே prove பண்ண ஆரம்பிச்சிட்டேன். அட.. அதான் சின்ன வயசில அப்படி என்றாலும் வளர்ந்த பிறகும் என் வயதுக்காரர்கள் சைக்கிள் ஓட்டப் பழகியும் என்னால் முடியவில்லை.

அப்போதெல்லாம் பெரிய சைக்கிள்கள் என்றால் அவை 3 வகைப்படும்: 24 இஞ்ச், 22 இஞ்ச், 18 இஞ்ச் என்ற ரேஞ்சில் இருக்கும். எல்லாம் அந்த முக்கோண பார் இருக்கே .. அதில் முன்னால் உள்ள இரு பார்களும் சேரும் உயரம் இப்படி மூணு வகையாக இருக்கும். 24 இஞ்ச் வண்டி பார்க்கவே ரொம்ப உயரமா இருக்கும். அடுத்ததுதான் சாதா சைக்கிள். அடுத்து சின்ன சைக்கிள்கள். பையன்களுக்கானது. ஆனால் 24ம், 18ம் எப்போதாவது தான் கண்ணில் படும். அதுவும் 18 இஞ்ச் சைக்கிள் வச்சிருந்தா கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம் அந்தப் பையன் பணக்கார வீட்டுப் பையன் என்று.

யார் யாரோவெல்லாம் சைக்கிள் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். “மிடியலை” என்றாகிப் போனது. ஒரு வழியாக குரங்கு பெடல் போடப் பழகினேன். அப்டின்னா என்னன்னு உங்களுக்குத் தெரியுமா? முக்கோண பார் வழியே வலது காலை போட்டுக் கொண்டு, இடது காலை பெடலில் வைத்து ஓட்டணும். பொதுவாக பழகும் போது அரைப் பெடல் தான் போட முடியும். சடக்கு ... சடக்குன்னு பெடல் போட்டு ஓட்டுவோம். பொதுவா பொது ஜனங்களுக்கு இப்படி வர்ர பசங்களைக் கண்டாலே பிடிக்காது. நாங்க பேசாம ஓட்டிக் கொண்டு போனாலும் திட்டுவார்கள். ஆனால் அரைப் பெடல்  என்றாலே கேசு இப்போது தான் பழகுதுன்னு தெரியுமே ... அதனால் திட்டுவார்கள். ஆனால் எங்கள் காதில் பொதுஜனத் திட்டுகள் விழவே விழாது.

அப்பாவிடம் - நல்ல வாத்தியார்; ஆங்கிலம், கணக்கும் சொல்லித் தருவதில் வித்தகர்’ பெரிய உழைப்பாளி; டியூஷன் படிக்க வரிசை கட்டி மக்கள் (பரம்பரையாகக் கூட) வருவார்கள் - ஒரு மாணவன் வருவார். 18 இஞ்ச் சைக்கிளில் வருவார். திண்டுக்கல் ரோட்டில் பரம்பரையாக பிரபலமாக இருந்த பேக்கரி கடைக்காரரின் மகன். என்னைவிட ஒரிரு வயது அதிகமாக இருக்கலாம். அவர் ஒரு நாள் சைக்கிளை எங்கள் வீட்டின் முன் நிறுத்திக் கொண்டிருந்தார். நான் அவரையும் சைக்கிளையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். என் மூஞ்சில சோக ரேகை ஓடியிருக்கும் போலும்! என்னைப் பார்த்து சைக்கிள் வேணுமா என்று கேட்டார். வேணும்னு கேட்டு அது நயினாவுக்குத் தெரிஞ்சா .. அம்புட்டு தான். அதனால் யோசிச்சி நின்றேன். அப்பாட்ட சொல்லலை என்றார் அந்த அன்பு அண்ணன். ஒரே சிரிப்பு. சைக்கிளைக் கொடுத்து விட்டு மாடியேறிப் போய் விட்டார்,

சைக்கிளை எடுத்தேன். இதுவரை அரை பெடல் மட்டும், அதுவும் 22 இஞ்ச் சைக்கிளில் ஓட்டியிருக்கிறேன். ஆனால் இது 18 இஞ்ச். அரை பெடல் போட்டா கால் தட்டும்,.  ஆனால் நமக்குத் தெரிஞ்சது அது மட்டும் தானே. அதுவும் முதல் முறையா 18 இஞ்ச் சைக்கிள். அதுவே ஒரு பெரிய கிக்! சைக்கிளில் இதுவரை ஒழுங்காக சீட்டில் உட்கார்ந்து ஓட்டியதே இல்லை. சரி... என்று சந்தோஷத்தில் சைக்கிளில் பெடலைக் கொஞ்ச தூரம் உதைத்துக் கொண்டு ஓடணும். (ப்ளேன் டேக் ஆப் ஆவதற்கு முன் தரையில் ஓடி பிறகு மேலெழும்புமே .. அது மாதிரி) அப்படியே அரைப்பெடலா மாறணும். நானும் ஓடி அரைப்பெடல் போட்டுட்டேன். வண்டி எளிதாக ஓடியது. நமது ஆய்வக உதவியாளர் மாதிரி ஓட்டினேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். தடுமாற்றம் ஏதுமில்லை. ஒரே மகிழ்ச்சி! அப்படியே அந்த மகிழ்ச்சியில் வலது காலை எடுத்து பார் மேல் சந்தோஷமா வச்சேன். அடப் பாவமே ... என்ன ஆச்சு தெரியுமா? பார்ல இருந்து கால் வழுக்கி பாருக்கு மேல கால் போயிருச்சி. அதாவது சாதாரணமா சைக்கிள் ஓட்டுவோமே... அதே மாதிரி கால் போயிருச்சி. என்ன பண்றதுன்னு தெரியலை. ஆனால் சீட் குட்டையா பக்கத்திலே இருந்ததா ...அதில் ஏறி உட்கார்ந்து விட்டேன். என்ன ஆச்சரியம். அப்படியே சைக்கிள் ஓட்டி விட்டேன்.

ஆக ... நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன். அப்பாடா ...!

அதென்னவோ .. அத்தனை பேர் சொல்லிக் கொடுத்து வராததை நானே கண்டு பிடித்ததாக எனக்கொரு நினைப்பு.

இதிலென்ன ஆச்சரியம் என்றால் நான் நீச்சல் படித்ததும் இதே மாதிரி தான். வயித்தைச் சுத்தி கயிறு கட்டி, குளத்தில இடுப்பைப் பிடிச்சி காலை அடிக்க வைத்து, .. இன்னும் என்னென்னமோ நடந்தது. ஆனால் நீச்சல் வரவேயில்லை. ஆனால் ஒரு விடுமுறையில் அப்பாதுரை - அந்த வயதில் என்னைப் போல் பொன்னியின் செல்வனின் விசிறியாக இருந்தவன். ஆனால் நான் அதிலிருந்து வெளி வந்த பின்னும், அப்பாதுரை தன் மூத்த மகளுக்கு பூங்குழலி என்று பெயர் வைத்தான் - என்னை சும்மா பேச்சுத் துணைக்கு அவன் குளிக்கப் போகும் கிணற்றுக்குக் கூட்டிப் போனான். ஒண்ணு சொல்லணுமே ... இப்போவெல்லாம் அது மாதிரி எங்கே தண்ணி கிணத்தில இருக்கும்! தரை மட்டத்திற்கு தண்ணீர் தளும்பி நின்னுது. கொஞ்சம் சின்ன கிணறு. மூலைப்படி இருந்தன. அப்பாதுரை ஒரு மூலைப்படியில் இறங்கி குளி என்றான். பயந்து போய் ஆனாலும் துணிந்து இறங்கிக் குளித்தேன். அங்கிருந்து எதிர்த்த மூலைப்படிக்கு கொஞ்ச தூரம் தான் இருந்தது. அப்பாதுரை ’சும்மா ஒரு உந்து உந்தி வாடா’ என்று தைரியம் கொடுத்தான். என்னமோ நல்ல நேரம் .. தைரியம் வந்து ஒரு உந்து தான். எதிர்ப் பக்கம் போய் விட்டேன். அப்பாதுரை கை கொடுத்து தூக்கி விட்டான். அடுத்து எதிர்ப் பக்கம் போ என்றான். முதலிலாவது அவன் மூலைப் படியில் நின்றான். இப்போது ஆளில்லை மூலைப் படி. உந்தினேன். கல்லைப் பிடித்துக் கரையேறினேன்.

ஆஹா .... நீச்சலும் சைக்கிள் மாதிரியே பழகி விட்டேன்.

ஒரே சுயம்பு தான்.


*     *     *

எனக்கு ஒரு சந்தேகம். இப்போவெல்லாம் சின்னப் பசங்க நமக்கு முன்னால் கையை விட்டுட்டு சைக்கிள் ஓட்டும் போது, ‘என்னடா இது... சின்னப்பிள்ளைத் தனமா இருக்கு; இதெல்லாம் தப்பில்லையா?’ அப்டின்னு நம்ம பழைய காலத்தை மறந்திட்டு திட்டுவோம்ல. ஆனாலும் நாமளும் ஒரு காலத்தில் அப்படி ஓட்டின பசங்க தானே!

சந்தேகம் என்னன்னா ...

கையை விட்டுட்டு சைக்கிள் ஓட்டாத ஆளுக யாருமே இருக்க முடியாது என்பது என் தியரி.

இது சரியா?

இதுவரை யாராவது சின்ன வயசில கையை விட்டுட்டு சைக்கிள் ஓட்டாமல் இருந்திருந்தால் அவர்கள் பின்னூட்டத்தில் “ஆமென்” என்று போடவும்.






 *




Sunday, March 24, 2019

1035, எங்க காலத்திலெல்லாம் ... 2 FROM A CLEAN SLATE .......





*
பென்சிலைப் பத்தி எழுதிட்டு அதோட  உட்டுட்டா   நம்ம சிலேட்டுக்குக் கோபம் வருமா வராதா? வருமில்ல ... அதான் அதப் பத்தியும் இப்பதிவு. ஆனால் இந்தப் பதிவு 2014 அக்டோபர் மாதத்தில் எழுதியது. தேடிப்பிடித்து மறுபடியும் போட்டுருவோம்னு போட்டிருக்கேன்... ஒரு தொடர்சிக்காக.

                                                              *        *            *

FROM A CLEAN SLATE .......






*
to start with a clean slate - என்று ஆங்கிலத்தில்  ஒர் idiom சொல்வார்கள். இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு tablet என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். ஆனால் slate என்றால் என்னவென்று தெரியுமா என்பது சந்தேகமே. எங்கள் காலத்தில் எங்களின் முதல் கல்வித் துணையே இது தான். இப்போவெல்லாம் பெரிய புத்தக மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு பிஞ்சுக் குழந்தைகள் பள்ளிக்குப் போவது போல் நாங்கள்


போனதில்லை. ஒரு சின்னத் துணிப்பை. அதற்குள் ஒரு ஸ்லேட். இரண்டு மூன்று புத்தகங்களும் நோட்டுகளும் மட்டுமே எங்களுக்கு இருந்தன. இதில் ஸ்லேட் மட்டுமே எங்கள் கல்விக்கு முதல் பிள்ளையார் சுழி.

இது எதனால் செய்யப்பட்டது என்றெல்லாம் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு கல்லிருந்து செதுக்கி எடுத்திருப்பார்கள் போலும். கருப்புக் கலரில் இருக்கும். சுற்றிலும் மரத்தால் ஆன ப்ரேம் இருக்கும். அப்பா ஸ்லேட் வாங்கியதும் என் பெயரை தமிழில் ஒரு பக்கமும், ஆங்கிலத்தில் இன்னொரு பக்கமும் ப்ரேமில் எழுதி விடுவார்கள். முதலில் இந்த ஸ்லேட்டில் எழுத  ஸ்லேட் குச்சி இருக்கும். இந்தக் குச்சியும் ஸ்லேட் செய்ற பொருளிலிருந்தே செய்வார்களோ என்னவோ .. அதுவும் கருப்பாக இருக்கும். பொதுவாக இந்தக் குச்சிகள் வழு வழுன்னு எழுதாது. நடுவில ‘கல்லுக் கோடு’ எழுதும் போது விழும். அதாவது சொற சொறன்னு எழுதிவிடும்.

சில ஆண்டுகள் கழித்து இந்த ஸ்லேட் போய் தகர ஸ்லேட் வழக்கிற்கு வந்தது. பழைய ஸ்லேட் கீழே விழுந்தால் எளிதாக உடைந்து விடும். அநேகமாக எங்கள் ஸ்லேட்கள் இது போல் கீழே விழுந்து கீறிப் போயிருக்கும். சுற்றியிருக்கும் ப்ரேமினால் பிழைத்திருக்கும். நாங்களென்ன use & throw காலத்திலா வாழ்ந்தோம்?  அதனால் கீழே விழுந்தாலும் உடையாத தகரத்தில் ஸ்லேட் வந்தது. ஆனால் இந்த ஸ்லேட் கணக்கில் இரண்டு நஷ்டக் கணக்கு உண்டு. முதல் நட்டம் - எளிதாக இதன் மேல் அடித்துள்ள கருப்பு பெயிண்ட் போய், ஸ்லேட் வழு வழுன்னு ஆகிவிடும். எழுதினால் எழுத்துகளே பதியாது. இரண்டாம் நட்டம் கொஞ்சம் சீரியஸானது. ப்ரேம் கழண்டு போனாலும் ஸ்லேட்டைத் தூரத் தூக்கிப் போட முடியாது. தகர ஸ்லேட் இல்லையா.. உடையாமல் முழுசாக இருக்கும். இதனால் வெறும் மொட்டையான ஸ்லேட் கையில் இருக்கும். பல பசங்கள் தீவிரவாதிகளாக மாறி மொட்டை ஸ்லேட்டை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். யாரையாவது இதை வைத்து மண்டையில் போட்டால் பெரிய வெட்டே விழும்.

இப்போ இதெல்லாம் போய் plastic slate வந்து விட்டது. இன்னொண்ணு... எழுதி அழிச்சிக்கலாம்னு ஒரு ஸ்லேட்  -magic slate அப்டின்னு வந்திருச்சு. ஆனால் இப்போ ஸ்லேட் என்றாலே என்னென்ன தெரியாத மாதிரி ஆகிப் போச்சு. ஸ்லேட்  ... குச்சிகள் எல்லாம் தொல்பொருளாக மாறி விட்டன.

எங்கள் ஸ்லேட்டை refurbish செய்ய வேண்டியது முக்கிய கடமை. அதுவும் தேர்வுக் காலத்திற்கு முன்பு ஸ்லேட்டைப் புதுசாக்க முழு முயற்சியெடுப்போம். அதிலும் இரண்டு மூன்று grades இருந்தது. முதல் முறை ரொம்ப சிம்பிள். வீட்டின் அடுப்படியில்  இருக்கும் கட்டைக் கரியை எடுத்து வைத்துக் கொண்டு ஸ்லேட்டை நன்கு கழுவிக்கொண்டு அதன் பின் எடுத்து வந்த கரியின் மெதுவான பாகம் வைத்து ஸ்லேட்டில் அழுத்தித் தேய்ப்போம். அதன் பின் காய வைத்து விடுவோம். காய்ந்த பின் கழுவினால் ஸ்லேட் ரெடி. 

இன்னொரு advanced method ஒன்றும் இருந்தது. இதில் கரித்துண்டுகள் சிலவற்றை ஊமத்தங்காய் என்று ஒரு செடி இருக்கும். அதன் காய்களோடுசேர்த்து அம்மியில் வைத்து அரைத்து, அதனை எடுத்து எங்கள் ஸ்லேட்டில் தேய்ப்போம். ஆனாலும் இது முக்கியமாக பள்ளியில் உள்ள கரும்பலகைக்கு மட்டுமே பொதுவாக இந்த  advanced process நடந்தேறும். அம்மிக் கல்லுக்குப் பதில் பள்ளிக்கூடத்தில் எங்காவது ஒரு மூலையில் உடைந்த அம்மிக் குழவி ஒன்று கட்டாயம் கிடைக்கும். ஆசிரியர்கள் கரும்பலகைக்கு ஒரு நாள் ஓய்வு கொடித்து, இந்த வேலை மேற்கொள்ளப்படும். கரி கொண்டு வர சிலர் ... ஊமத்தங்காய் பறித்து வர சிலர் ... அரைத்துக் கொடுக்க சிலர் .... கரும்பலகையில் தேய்க்க சிலர் ... கடைசியில் கரும்பலகையைக் கழுவ சிலர்.  அப்பாடா ...ஒரு பெரிய division of labour ! சட்டையெல்லாம் கரியாக்கி  வீட்டில் கிடைத்த அடிகளைப் பற்றிய விளக்கம் அடுத்த நாள் கட்டாயம் கிடைக்கும்!

ஸ்லேட் ரெடின்னா குச்சியும் ரெடியாக வேண்டுமே. அந்த கருப்புக் குச்சிக்கு மட்டும் தான் இந்த மெதட் பயன் படுத்துவோம். குச்சி மேல் லேசாக நல்லெண்ணெய் தேய்த்து. நல்ல கல் தரை மேல் குச்சியை வைத்து பாதத்தை வளைத்து அதன் மேல் வைத்து லேசாக மேலும் கீழும் குச்சியைத் தரையில் தேய்ப்போம். இதில் ஒரு பிரச்சனை. எவ்வளவு மெல்ல தேய்த்தாலும் குச்சி உடைந்து விடும். ஒரு முழு நீளக் குச்சி இந்த மெக்கானிசத்தால் துண்டு துண்டாக உடைந்து விடும். ஆனாலும் ‘மாப்போல’ எழுதும்ல ..! அதாவது மாவு மாதிரி எழுதும்ல ..! அதைவிட குச்சி உடைந்து விடக்கூடாதென்பதற்காக, குச்சியை அதிகமாக அழுத்தாமல் மெல்ல மெல்ல அதனைத் தேய்க்க வேண்டும். அப்படித் தேய்க்கும் போது நமது கடமையில் கண்ணாக .. அல்லது காலாக இருக்க வேண்டும். நினைவு வேறு எங்கு திரும்பினாலும் காலின் அழுத்தம் கூடி குச்சி உடைந்து விடும் என்ற அபாயகரமான நிலை. உண்மையிலேயே இது ஒரு மோன தவம் மாதிரி. அம்புட்டு ஜாக்கிரதையாக செய்யணும்!

ஸ்லேட் பரிமாண வளர்ச்சில் கட்டை ஸ்லேட்டிலிருந்து தகர ஸ்லேட் வந்தது. இதே போல் எழுதும் குச்சிகளிலும் பரிணாம வளர்ச்சி இருந்தது. முதலில் கருப்புக் குச்சி மட்டும் தான் கிடைக்கும். கொஞ்ச நாள் கழித்து மாவில் செய்த கலர் குச்சிகள் கிடைத்தன. பழையதுக்குப் பெயர் ஸ்லேட் குச்சி. இப்போ இருவகை குச்சி வந்ததால் இந்தப் புதிய குச்சிக்கு ’மாக்குச்சி’ என்று நாமகரணமிட்டோம். பழைய ஸ்லேட் குச்சி மாதிரி இதுவும் அதே நீளத்தில் கிடைக்கும். அதுவும் குச்சியின் சைடில் கலர் கலரா கோடுகள் இருக்கும். ஆனாலும் சோகம் என்னன்னா ... குச்சியில் கலர்க் கோடுகள் இருக்கும். ஆனால் எழுதும் போது ஒரே வெள்ளைக் கலரில் தான் எழுதும்.  only B & w; no colour at all!   :(

இந்த ஸ்லேட் & குச்சிகளோடு வேறு சில accessories அதிர்ஷ்டம் இருந்தால் அவ்வப்போது கிடைக்கும். அவைகள் கடல்நுரையும், கடல் குச்சிகளும்.



"கடல் நுரை”

கடல் அலைகள் கரையில் வந்து மோதும் போது நுரையாக இருக்கும். இந்த நுரையெல்லாம் ஒண்ணா சேர்ந்து, அதன் பின் வெயிலில் காய்ந்து இது உருவாவது என்று எங்கள் ‘ஆராய்ச்சி மூளை’ சொல்லியதால் இதை கடல் நுரை என்று எல்லோரும் சொல்வோம். இது நாகணவாய் - ஆக்டோபஸ்ஸிற்கு க்ளோஸ் சொந்தக்காரர் - என்ற கடல்வாழ் உயிரின் ஷெல்.  பரிணாமத்தில் உடலின் உள்ளே சென்று விட்டதாம். இதன் உட்புறம் மெதுவாக இருக்கும். இந்தக் ‘கடல் நுரை’ வைத்து அழித்தால் ஸ்லேட் நன்றாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.


SEA URCHIN
அடுத்து இன்னொரு கடல்வாழ் உயிரியின் மேல் தோலில் உள்ள சின்ன மெல்லிய குச்சிகள் - நாங்கள் இதைக் கடல் குச்சி என்று சொல்வோம். ஆனால் சுண்ணாம்பினால் ஆன இந்தக் குச்சிகள் பெரும்பாலும் கீச் ..கீச்.. என்று தான் எழுதும். இருந்தாலும் கிடைத்தற்கரிய பொருள் என்பதால் எங்களுக்கு அதன் மேல் ஒரு கிக் உண்டு


"கடல் குச்சி”

பெரியப்பாவின் மகன் - அண்ணன் ஒருவன் உண்டு. என்னைவிட இரு வயது மூத்தவன். எல்லா நல்ல விஷயமும் "ஏனைய விஷயமும்" (இதையும் வாசித்துப் பாருங்களேன்!) காதில் முதலில் ஓதியவன் இவனே. நானும் இவனும் சேர்ந்தே பள்ளிக்கூடம் செல்வதுண்டு. அவன் ஐந்தாவது படிக்கும் போது ஒரு நாள் நடந்து போய்க்கொண்டிருந்தோம். (அப்புறம் என்ன ஆட்டோவிலோ... காரிலோவா போயிருக்க முடியும்?!) அப்போது தனது ஸ்லேட்டை எடுத்து ஏதோ எழுதுவது போல் செய்தான். பின் மெல்ல கையால் எழுதியதை அரையும் குறையுமாக அழித்தான். கீழே தன் பெயரை முழுவதுமாக எழுதினான். என்ன பண்ற? அப்டின்னு கேட்டேன். ’வீட்டுப்பாடம் எழுதலை ... அதான் இப்போ எழுதினேன்’ என்றான். ஸ்லேட்டில் எழுத்து இருந்தது மாதிரியும் இல்லாதது மாதிரியும் தெரிந்தது. என்னன்னு கேட்டேன். ‘நான் வீட்டுப்பாடம் எழுதுறதெல்லாம் இப்படித் தான்’ என்றான்.  நான் முயற்சித்தேன். execution சரியாக வரவில்லை. உட்டுட்டேன்!



அதீதம் இதழில் வந்த பதிவின் மறு பதிப்பு


*

Saturday, March 23, 2019

1034.. எங்க காலத்திலெல்லாம் .... 1 “புழுக்கைப் பென்சில்”







ஆச்சு .. எப்படியும் கணக்குப் பண்ணிப் பார்த்தால் இது மாதிரி ஒரு குட்டைப் பென்சில் ஒன்றைப் பார்த்து 65 வருஷம் ஆகியிருக்கும். அதற்குப் பிறகு இப்படி ஒரு பென்சிலைப் பார்த்ததே இல்லை. நேற்று நண்பர் ஒருவரைப் பார்க்க அவர் அலுவலகத்திற்குப் போயிருந்தேன். இந்தப் பென்சிலுக்கு ஒரு நெகிழி மூடியையும் போட்டு மேசை மேல் வைத்திருந்தார். பார்த்ததும் எனக்கு எங்க காலம் நினைவுக்கு வந்தது.

 மொதல்ல எங்க காலத்தில இந்த மாதிரி பட்டை போட்ட பென்சிலைப் பார்க்க முடியாது. எல்லாமே ரவுண்டான பென்சில்கள் தான்.அழகு அழகு வண்ணத்தில் எல்லாம் பார்க்க முடியாது. அப்போ பென்சில்களின் பின்பக்கத்தில் அழிப்பான் - ரப்பர் - இருக்காது. ஒரு வேளை நாங்க அந்தக் காலத்தில் தப்பே இல்லாம எழுதியிருப்போமோ? அதான் ரப்பர் வைக்கவில்லையோ? இருக்கும்.

ரப்பர் இல்லாதது மாதிரி அப்போவெல்லாம் பென்சில் சீவி .. அதாங்க .. sharpener - ஏதும் இருந்த மாதிரி நினைவில் இல்லை. பின்னாளில் தான் வந்தது. நாங்கள் பென்சில் சீவுவதற்கு ஏற்றது மாதிரி அப்போ வர்ர ப்ளேடுகள் இருக்கும். அதை வச்சி தான் பென்சில் சீவுவோம். ஒரு தடவை என் அப்பாவின் சவரப் பெட்டியிலிருந்து ஒரு ப்ளேடு எடுத்து பென்சில் சீவிட்டு அப்பா பெட்டியில்  திருப்பி வைத்து விட்டேன். அடுத்த நாள் அப்பா ஷேவ் பண்ணும் போது சரியாக சிரைக்க முடியவில்லை. அப்பா கழட்டிப் பார்த்த போது அதில் பென்சில் சீவும் போது விழும் கோடுகள் இருந்தன. அப்பா என்னைக் கூப்பிட்டு இத வச்சி பென்சில் சீவினியா? என்றார். ஆம் என்றேன். அப்பா அம்மாவிடம் ‘இந்தப் பயலைப் பாரு. ஒரு ப்ளேடைக் கெடுத்துட்டான். முடிய வெட்டவே மாட்டேங்குது’ என்று கம்ப்ளெயின்ட் வாசித்தார்கள். அப்போது நான் ஆரம்பப் பள்ளியில் படித்திருப்பேன் என்று நினைக்கின்றேன். அப்போ எனக்கு ஒரு ஆச்சரியம். என்னடா இது .. ஒரு பென்சிலையே அழகா சீவுது. இத்தனூண்டு சின்ன முடியை அது வெட்டாதான்னு ஒரு பெரிய கேள்வி. அதுக்குப் பதில் தெரிய சில வருசங்கள் ஆச்சு!

ஆனா அந்தக் காலத்திற்குப் பிறகு வந்த ப்ளேடுகள் எல்லாம் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் ப்ளேடுகள். அதை வைத்துப் பென்சில் சீவ முடியாது. ஒரு வேளை இந்தக் காலத்தின் கட்டாயத்தினால் தான் புதிதாகப் பென்சில்  sharpener 
கண்டு பிடித்திருபார்களோ ... இருக்கும்; அப்படிதான் இருக்கும். அது காலத்தின் கட்டாயம். ஆனால் ப்ளேடு காலத்தில் இன்னொரு பழக்கம் இருந்தது.  பென்சிலைச் சீவி அந்த மரத்தூள்களைப் புத்தகங்களுக்கு நடுவில் சேமித்து வைப்போம். அது நிறையாகச் சேர்ந்ததும் அதைப் பாலில் ஊற வைத்தால் ‘அழி ரப்பர்’ கிடைக்கும் என்ற விஞ்ஞான மூளை எங்களுக்குள் உறங்கிக் கொண்டிருந்தது. மயிலிறகை புத்தகத்திற்குள் ஒழித்து வைத்தால் அந்த ஒற்றை மயிலிறகுகள் ‘குட்டி’ போடும் என்பது போன்ற விஞ்ஞான உண்மை அது!

எங்களுக்கு அந்தக் காலத்தில் ஐந்தாம் வகுப்பு வரை பென்சில் மட்டும் தான். அப்போது பால் பாய்ண்ட் பேனா, ஜெல் பேனா போன்றவைகள் ஏதுமில்லை, இருந்தது பென்சிலும். பேனாவும் - அதுவும் மை ஊத்தி எழுதும் fountain pen மட்டும் தான். பேனா ஐந்தாம் வகுப்பிற்குப் பிறகுதான் பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி அனுமதிப்படும். ஆகவே ஐந்தாம் வகுப்பு வரை எங்களுக்குப் பென்சில் மட்டும் தான். இப்போது மாதிரி மொத்தமா பென்சிலை வாங்கிப் போட்டோமா .. பிள்ளைகள் ஒவ்வொன்றாக எடுத்துப் பயன்படுத்துவார்கள் என்ற மாதிரி எல்லாம் அப்போது கிடையாது. ஒரு பென்சில் வாங்கிக் கொடுப்பார்கள். தொலைந்து போகாமல் வைத்திருக்க வேண்டும். இப்போது பென்சில் டப்பா இருக்கிறதே .. அதெல்லாம எங்க காலத்தில இல்லை. அதனால் ரொம்ப பத்திரமாக வைத்திருப்போம். இப்போவெல்லாம் அங்கங்க நிறைய குட்டிப் பைகள் வைத்து Back bag இருக்குமே .. அது எல்லாம் ஏது எங்களுக்கு. காக்கித் துணி மாதிரி முரட்டுத் துணியில் கைப்படி வைத்து ஒரு பை. அதில் ஒரு மூலையில் பென்சில் தூங்கும்.

பென்சில் கதை அதோடு முடிந்ததா என்ன? பென்சிலை அடிக்கடி சீவுவோம். பென்சில் கொஞ்சம் கொஞ்சமாக வேறு வேறு அவதாரம் எடுக்கும்.  இப்போதெல்லாம் அரை நீளத்திற்குக் குறைவான பென்சில்களை  நான் பார்த்ததே இல்லை. எங்க காலத்தில் ‘இத்தனூண்டு’ பென்சிலாகும் வரை அதை விட மாட்டோம். பெத்தவங்களும் அப்படித்தான். அட .. இன்னும் இவ்வளவு நீளம் இருக்கேன்னு சொல்லிருவாங்க. ஆக பென்சில் கால்வாசி சைஸுக்கு வரும் வரை பிரச்சனையில்லை. ஆனால் அதைவிட சின்னதாகப் போனால் வாத்தியார்கள் கோவிச்சுக்குவாங்க. நம்ம நோட்டைத் திருத்தும் போது நம்ம பென்சில்களைத்தான் வாத்தியார்கள் கேட்பார்கள். அப்போது நம் பென்சில் ரொம்பக் குட்டையாக இருந்தால் அதை வகுப்பின் ஓரத்திற்கோ அல்லது ஜன்னல் வழியாகவோ தூர எறிந்து விடுவார்கள். இந்தப் பென்சிலை வைத்து எழுதினால் கையெழுத்து மோசமாகி விடும் என்பது அவர்களது சரியான விஞ்ஞான அறிவு. அந்த மாதிரி இத்தனூண்டு குட்டிப் பென்சிலுக்கு அப்போது வழங்கி வந்த slang என்னவென்று தெரியுமா? “புழுக்கைப் பென்சில்” 

அந்த மாதிரி ஒரு புழுக்கைப் பென்சிலைப் பார்த்ததும் உடனே பழைய்ய்ய நினைவுகள் வந்தன. நம்மளும் நம்ம பென்சில்களும் ... அப்டின்னு ஒரு நினைப்பு வந்தது. ஏன்னா ... படிச்சது ( எங்க படிச்சேன்!?) zoology ... நிறைய படம் வரையணும். அதுனால பென்சிலுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ரொம்ப நாள் நீடித்தது. பென்சில் ஊக்கை நம்ம இஷ்டத்துக்கு வைத்திருக்க வேண்டியதிருக்கும். ஊசியா ... தடிப்பா .. ஷேட் கொடுக்க கொஞ்சம் நீளமா... இப்படிப் பல மாதிரி இருக்கிறதுனால sharpener இல்லாம பழையபடி ப்ளேடுக்குப் போயாச்சு. ஆனால் அப்ப என்னவோ ஒரு கிக் .. என்னன்னா, sharpener இல்லாம ஆனா அழகா பென்சில் சீவி வச்சிருப்பேன். பைனல் டச்சிற்காக ப்ளேடு வைத்து பென்சில் முனை மீது நெடுங்குத்தா ப்ளேடை வச்சி, ஷேவ் பண்றது மாதிரி தேய்த்து,  பாலிஷா கொண்டு வருவேன். 

ஆனால் அப்போவெல்லாம் சாதாரண பென்சில்கள் கிடையாது. ட்ராயிங் பென்சில்னு விற்கும். அதைத் தான் வாங்குவோம். அதில் 2B, B, HB, 2H, 4H .. என்ற வகைப் பென்சில்களைத் தயார் நிலையில் வைத்திருப்பேன். கருப்பா கண்ணெல்லாம் வரைய  2B பென்சில்; லேசா செதில் மாதிரி வரைய  2H / 4H பென்சில்கள்.  இந்தப் பென்சில்களை கல்லூரிக்கு எடுத்துக் கொண்டு போவதேயில்லை. ஏன்னா ... பென்சில் அம்புட்டு காஸ்ட்லி! 

அப்போ சாதாரண பென்சில் நாலணா / 25 பைசாவாக இருந்தது. இந்த ட்ராயிங் பென்சில்கள் விலை  ஒண்ணே கால் ரூபாய் / ஒண்ணரை ரூபாய். அதுவும் எல்லா கடைகளிலும் கிடைக்காது. கிழக்கு ஆவணி மூல வீதியும், அம்மன் சன்னதி தெருவும் சந்திக்கும் இடத்தில் கிழக்கு ஆவணி வீதியின் முனையில் இருந்த குழாய்க்குப் பக்கதிலிருந்த சுலைமான் பாய் கடையில் தான் அந்தப் பென்சில்கள் கிடைக்கும். பென்சில் பெயர் வீனஸ். இங்கிலாந்தில் செய்யபட்ட பென்சில். பச்சைக் கலரில் இருக்கும். பச்சைக்கலரில் மெல்லியதாக cracks விழுவதுபோல் கோடுகள் இருக்கும்.  

அதன் பின் முதுகலை படிக்கும் போது ஒரு இந்தியன் பென்சில் கிடைக்க ஆரம்பித்தது. பெயர் Engineer. விலை கொஞ்சம் குறைவு. மரக்கட்டை கலரில் மட்டும் தான் இருக்கும். ஆனாலும் வீனஸ் பென்சில்கள் மீது தான் எப்போதும் ஒரு கண்.  





*