Showing posts with label மொழிபெயர்ப்புகள். Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்புகள். Show all posts

Sunday, September 30, 2018

1005. அண்மையில் படித்த புத்தகம் : கடவுள் என்னும் மாயை...தருமி



*

எனது இரண்டாம் புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனப் பார்வை

                       முனைவர் வா. நேரு அவர்கள் எழுதிய கட்டுரை










*


அண்மையில் படித்த புத்தகம் : கடவுள் என்னும் மாயை...தருமி


ஆசிரியர்                   : தருமி
வெளியீடு                  : எதிர் வெளியீடு ,பொள்ளாச்சி- 624 002,99425 11302
முதல் பதிப்பு               : டிசம்பர் 2017
மொத்த பக்கங்கள்           :  328,  விலை ரூ 350 .

                                கடவுள் என்னும் மாயை என்னும் இந்தப்புத்தகம் அண்மையில் புத்தகக் கண்காட்சியில் வாங்கியது.இந்நூலை எழுதிய தருமி அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர். தமிழ் வலைத்தளத்தில் சக பதிவாளர். தொடர்ந்து பதிவுகளைப் பதிவிடக்கூடியவர். ஓய்வு வாழ்க்கையை புத்தகங்களை வாசிப்பதிலும்,அதனை பதிவிடுவதிலும், ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதிலும் செலவழித்து மிக அர்த்தமுள்ள வாழ்க்கையாக தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளவர். அவரால் அண்மையில் எழுதப்பட்டு வெளிவந்துள்ள புத்தகம் இந்த 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகம்.



                                நீங்கள் எந்த மதத்து நம்பிக்கையாளராகவும் இருக்கலாம். இந்துவாக, கிறித்துவராக,இஸ்லாமியராக இருக்கலாம்,நீங்கள் நேர்மையான,திறந்து மனதோடு இந்தப் புத்தகத்தைப் படித்தால், இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது உங்களுக்குள் உங்கள் கடவுள் பற்றி ஆயிரமாயிரம் கேள்விகள் வருவதை உணர்வீர்கள். எந்த வயதுக்காரராக நீங்கள் இருந்தாலும், இந்த வயதுவரை நமக்கு இருந்த கடவுள் நம்பிக்கை சரிதானா? என்னும் கேள்வி ஆழமாகப் பதிவதை நீங்கள் மறுக்க இயலாது. எல்லா மதங்களைப் பற்றியும் , எல்லாக் கடவுள்கள் பற்றியும் ஆதாரபூர்வமான கேள்விகளை வைக்கின்ற, நேர்மையானவர்களாக இருந்தால் கடவுள் நம்பிக்கையாளர்களிடமிருந்து கேள்விகளுக்கு பதிலினை எதிர்பார்க்கின்ற புத்தகம். இந்த நூலுக்கான வாழ்த்துரையை "புதிய வெளிச்சம் தரும் இந்நூலை எழுதியவரைப் பாராட்டுவதற்கான ஓர் அரிய வாய்ப்பு என மகிழ்ந்தேன் " என ஜீவானந்தம் கொடுத்திருக்கின்றார்.

                               ஆசிரியர் முன்னுரையை ' புலியின் வாலைப் பிடித்த கதையாகி விட்டது என் பிழைப்பு ' என ஆரம்பிக்கின்றார். அப்போது வாசிப்பதில் ஏற்படும் ஈர்ப்பு புத்தகத்தின் கடைசி வரை ஈர்ப்பாகவே இருக்கின்றது. தான் படித்த 12 புத்தகங்களைப் பற்றிய (9 ஆங்கில நூல்கள், 3 தமிழ் நூல்கள்) தொகுப்புதான் இந்த நூல் என்றாலும், ஒவ்வொரு நூலும் ஒரு நம்பிக்கையாளனின் கடவுள் நம்பிக்கையை போட்டு தாக்கித் தகர்க்கும் அணுகுண்டைப் போன்ற வலிமை மிக்க நூல்கள். மிகப் பொறுமையாகப் படித்து, அதன் கருத்துக்களைப் புரிந்து அதனை தமிழாக்கம் செய்து, தனது கருத்துக்களையும் இணைத்து இந்த நூலை நமக்குக் கொடுத்திருக்கின்றார் தருமி.

                  கிறித்துவமத நம்பிக்கைகளை  கேள்விகேட்கும் வகையில் வந்துள்ள 6 நூல்களை முதலில் நூல் ஆசிரியர் கொடுத்துள்ளார். நூல், நூல் ஆசிரியர் அறிமுகம், நூலில் உள்ள செய்திகள் பற்றிய விளக்கம் என்ற வகையில்தான் இந்த நூல் முழுக்க அமைந்துள்ளது.தருமி கொடுத்திருக்கும் முதல் நூல் 'கடவுள் என்னும் மாயை ' என்னும் ரிச்சர்டு டாக்கின்ஸ் நூல். தமிழில் கு.வெ.கி. ஆசான் அவர்களால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு,திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டு  இன்றும் விற்பனையில் சாதனை படைக்கும் நூல். ரிச்சர்டு டாக்கின்ஸ் அவர்களைப் பற்றிய குறிப்புகளை, அவர் எழுதிய புத்தகங்கள் பட்டியலைக் கொடுத்திருக்கின்றார். பின்பு அந்தப் புத்தகத்தின் கருத்துக்களை 10 தலைப்புகளில் கொடுத்திருக்கின்றார்.

                             இரண்டாவது நூல் அன்னை தெரசா அவர்களைப் பற்றியது. " அன்னை தெரசா ஒளியே வருவாய் என்னிடம் கொல்கத்தா புனிதையின் தனிப்பட்ட கடிதங்கள் .." என்னும் புத்தகம் ப்ரையன் கோலோடைசுக் M.C. என்பவர் எழுதியது. " இந்த நூலில் அன்னையின் வாழ்வின் பெரும்பகுதியில் ஆன்மிக வாழ்வில் அவருக்கு நடந்த கடினமான, மனதுக்குள் நடந்த நீண்ட போராட்டமான வாழ்க்கை தெளிவெனத் தெரிகிறது. இறை நம்பிக்கைகளில் இருந்த குழப்பத்தை அவர் தனது சமூக வாழ்க்கையில் வெளிக்காண்பிக்காது,தன் சேவைகளைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்......இப்பதிவை மிகவும் யோசித்தபிறகே வலையேற்றுகிறேன் " என இந்த நூல் ஆசிரியர் குறிப்பிடுவதும் வேறுபட்ட கோணத்தில் அன்னை தெரசாவின் ஆன்மிகத்தைப் பார்ப்பதுவும் வாசிக்கும் நமக்கு மிகவும் புதிய கோணமாக இருக்கின்றது.பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர்களின் ' நான் ஏன் கிறித்துவனல்ல '  என்னும் நூல் 3-வது நூலாகும். இது பெரும்பாலான நாத்திகர்கள் படித்திருக்கக்கூடிய புத்தகம்.நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் பற்றியும் அவரின் கருத்துகள் பற்றியும் எழுதியுள்ளார்.

                          எலைன் பேஜல்ஸ் என்பவர் எழுதிய 'ஞான மரபு நற்செய்திகள் ' என்பது 4-வது நூல். என்னைப் போன்றவர்கள் கேள்விப்பட்டிராத நூல். "கிறிஸ்துவ மதத்தின் ஆரம்ப காலங்களில் இருந்த உட்பிரிவினைகள்,யூத,கிறித்துவ சமயங்களின் ஆரம்பகாலத்தில் பெண்கள் கையாளப்பட்ட விதம் போன்றவைகளை இந்த நூலில் எழுதியுள்ளார். மிகவும் முக்கியமான ஓர் இடத்தை அந்த நூல் விரைவில் பெற்றது. 20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நூறு புத்தகங்களில் இதுவும் ஒன்று என Modern Library என்ற அமெரிக்க வெளியீட்டாளர் தேர்ந்தெடுத்தனர் " (பக்கம் 72 ) எனக்குறிப்பிட்டு அந்த நூல் எழுப்பும் கேள்விகள் கடந்த 2000 ஆண்டுகளாக இருப்பதை கடைசியில் சுட்டிக்காட்டுகின்றார்.

                          யூதாசின் நற்செய்தி என்பது அடுத்த நூல். இதனைத் தொகுத்தவர்கள் மூன்று பேர்.யூதாஸ் என்பவர் வில்லன் அல்ல, யேசுவின் மிக நெருங்கிய நண்பர். யேசுவால் மிகவும் நம்பப்பட்டவர். யேசு சொல்லியே அவர் எதிரிகளிடம் யேசுவை யூதாஸ்  காட்டிக்கொடுத்தார் என்பதற்கு ஆதாரமாகக் கிடைத்திருக்கும், 1600 ஆண்டுகளாக மறைத்துவைக்கப்பட்டிருந்து, இப்போது கிடைத்திருக்கும் புத்தகத்தின் வழியாகக் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றார்.

                          கிற்ஸ்டோபர் ஹிட்சன்ஸ் எழுதிய 'கடவுள் என்பது பெரிதொன்றுமில்லை( God is not great ) என்பது ஆறாவது நூலாகும்.அவரது நூலைப் பற்றி சில குறிப்புகள் எனக்குறிப்பிட்டு பக்கம் 125-ல் " கட்டுப்பாடுள்ள மதங்கள் மிகவும் வன்முறையான,அறிவுக்குப் பொருந்தாத, நல்லிணக்கமற்ற தன்மைகளைக் கொண்டுள்ளன.மேலும் அவை இனவெறி,குழுவெறி,மதவெறி போன்ற தேவையற்றவைகளைத் தூண்டி விடும் தன்மை வாய்ந்தவை.மதங்களின் முக்கிய முதலீடுகளே அறியாமையும், அறிவுத்தேடலுக்கு எதிர்ப்பும்,பெண்களை அடிமைப்படுத்துவதும், குழந்தைகளை வலிந்து இழுத்து வைத்திருப்பதும்தான்.பிளவுபடுத்துதலே அவைகளின் முதன்முதல் குறிக்கோளாக உள்ளது " விவரிக்கின்றார். நூலினைப் பற்றி சுருக்கமாக புரிந்துகொள்ளும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

                        இஸ்லாம் மதத்தை விமர்சனம் செய்யும் இரண்டு நூல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. இப்னு வராக் என்பவர் எழுதிய " நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல? ' என்னும் புத்தகமும்,ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய 'இஸ்லாமியத் தத்துவ இயல் ' என்பதுவுமாகும். நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல என்னும் புத்தகம் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. முதலில் படிப்பவருக்கு பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் -இஸ்லாம் மதத்தைப் பற்றி இந்த நூலில் உள்ளன. " மதங்களில் இருக்க வேண்டிய சுதந்திரத்தை வராக் வலியுறுத்துகிறார். அவர் இஸ்லாத்தில் அம்மதத்தை விட்டு விலகும் சுதந்திரம் இல்லவே இல்லை. முஸ்லிமாகப் பிறந்தால் அதுவே முடிவு.அதை எதற்காகவும் உன்னால் மறுக்க, விட்டுச்செல்ல முடியாது. முயன்றால் நீ மரண தண்டனைக்குரியவனாக ஆகின்றாய் " என்று சொல்கின்றார். உண்மைதான். இன்றைக்கும் நாத்திகம் பேசினால் மரணதண்டனை கொடுக்கும் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. ஆனால் உண்மை, உண்மைதானே.....சல்மான் ரஷ்டி பிரச்சனையின் மூலமாகவே எழுத வேண்டும் என்ற உணர்வு தோன்றியதாக இப்னு வராக் எழுதுகின்றார்.குரான் பற்றி, முகமது நபி அவர்களைப் பற்றி எழுப்பப்படும் பல கேள்விகளை இப்னு வராக் எழுதியிருக்கின்றார். அதனைத் தமிழில் தருமி அவர்கள் மொழிபெயர்த்து , இஸ்லாமிய மதம் எப்படி எப்படியெல்லாம்  மனித உரிமைகளுக்கும் , பெண் உரிமைகளுக்கும் எதிரானது என்னும் பட்டியலைத் தருகின்றார். ராகுல்ஜியின் 'இஸ்லாமியத் தத்துவ இயல் ' என்னும் புத்தகம் மிகச்சுருக்கமாக 5 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது.

                     இந்து மதத்தை விமர்சனம் செய்யும் காஞ்சா அய்லய்யா என்னும் தலித் தத்துவ அறிஞர் எழுதிய " நான் ஏன் இந்து அல்ல " என்னும் புத்தகமும், அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியார் எழுதிய 'இந்து மதம் எங்கே போகிறது " என்னும் புத்தகமும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே என்னைப் போன்றவர்கள் படித்த புத்தகங்கள் இவை.மீண்டும் அதன் கருத்துக்களை சுருக்கமாகக் காண்பதற்கான வாய்ப்பாக இந்த 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகம் அமைந்தது.

                     கடைசி இரண்டு நூல்களும் புனைவுகள். பிலிப் புல்மேன் எழுதிய " ஜீசஸ் என்ற நல்லவரும் கிறிஸ்து என்னும் போக்கிரியும் " என்னும் புத்தகம் வாங்கிய கதையை தருமி விவரிக்கின்றார். " பெயரைக் கேள்விப்பட்டவுடன் வாங்கிய நூல்.வாங்கிய பிறகே இது ஒரு கதை என்பது தெரிந்தது. கிறிஸ்துவைப் பற்றி,கிறித்துவத்தைப் பற்றிய நூலாக இருக்குமென நினைத்தேன். வாங்கிய பின் பின்னட்டையிலேயே 'இது ஒரு கதை ' என்று தெளிவாகப் போட்டிருந்தது " பக்கம் 309 எனக் குறிப்பிடுகின்றார். இந்த நூலின் கதையைச்சொல்லி விளக்கும் நூல் ஆசிரியர் தருமி தனது கருத்துக்களை மிகவும் மனம் திறந்து பேசும் பகுதியாக இந்தப் பகுதி இருக்கின்றது எனலாம்.

                  12-வது நூல் டான் பிரவுன் என்பவர் எழுதிய டா வின்சி கோட் என்னும் நூல். " 44 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு,8 கோடி நூல்கள் உலகம் முழுவதும் விற்கப்பட்டு,அக்கதையை திரைப்படமாகவும் வெற்றிகரமாக எடுக்கப்பட்டு மிகவும் புகழ் சேர்த்த புனைவு நூல் " என தருமி இந்த நூலை அறிமுகம் செய்கின்றார். " மிக முக்கியமானதாகவும்,கிறித்துவர்களுக்கு அதிர்ச்சி தரும் சேதியாகவும் கதையில் வருவது ;ஜீசஸ் திருமணமானவர் என்பது.திருமணம் என்பது தன்னிலே தவறாக இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கிறித்தவருக்கும் இது அதிர்ச்சி தரும் சேதி என்பதே உண்மையாக இருக்கும் " பக்கம் (325) எனக் குறிப்பிடுகின்றார்.

                  கட்டுடைத்தல் என்பது இன்றைய தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான கோட்பாடு. அந்தக் கட்டுடைத்தல் என்பது மனித நேயத்தினையும் அன்பையும் அடிப்படையாகக் கொள்ளும்போது பழமைகள் காற்றுப்போன டயர்கள் போல வலுவிழந்து போகின்றன. ஆனால் பழமைவாதிகள் தங்களிடம் இருக்கும் பிரச்சார பலத்தால் மட்டுமல்லாது, வன்முறையாலும் மதங்களைக் காப்பாற்றிட முனைகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் " மதவாதிகளின் கோட்பாடுகள், பிரச்ச்சாரம் எல்லாம் பெரிய பலூன் போன்றவை .அவற்றை பகுத்தறிவு என்னும் ஊசி கொண்டு குத்தும்போது எவ்வளவு பெரிய பலூனும் வற்றிப்போய்விடும் ' என்பார். உண்மைதான் இந்த நூலின் கட்டுரை ஒவ்வொன்றும் மிக வலிமையான பகுத்தறிவு ஊசிகள்தான்.அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள் பகுத்தறிவு ஊசிகளைப் பயன்படுத்தும்போது மதங்கள் என்னும் பலூன்கள் காணாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

                 இந்த நூலின் ஆசிரியர் தருமி அவர்கள் ஒரு காலத்தில் மிகுந்த நம்பிக்கையாளராக கிறித்துவ மதத்தில் இருந்தவர். இன்றைக்கும் உற்றார்,உறவினர்கள் எல்லோரும் கிறித்துவமதத்தில் பற்றுடைவர்களாக, பரப்புவர்களாக இருப்பவர்கள். ஆனால் தன்னுடைய மனதில் எழுந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்காதபோது, கடவுள் என்னும் கருத்தினை சந்தேகிக்க ஆரம்பித்து, கேள்விகள் கேட்டு கேட்டு கடவுள் இல்லை என்னும் நாத்திகராக மாறியவர். தான் மாறியது மட்டுமல்லாமல் , தான் மாறியதற்கான காரணங்களை 'மதங்கள்-சில விவாதங்கள் ' என்னும் நூல் மூலம் மற்றவர்கள் மாறுவதற்கும் வழி காட்டியவர். இப்போது ஓர் அருமையான நூலினை 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகத்தை அளித்துள்ளார். எனது சார்பாகவும், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும். எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் தொடரும் இவரின் எழுத்துப்பணி தொடர, நாம் அளிக்கும் ஆதரவு என்பது இவரது எழுத்துக்களைப் படிப்பதுவும், அதனை மற்றவர்களையும் படிக்க வைப்பதுமே ஆகும். செய்வோம்..



*


Saturday, December 07, 2013

700. மொழியாக்கத்தில் அடுத்த நூல் -- அசோகர்





*

முதன் முதலாக ஒரு நவீனத்தை மொழி மாற்றம் செய்து பதிப்பித்தது ஒரு பெரும் புது அனுபவமாக இருந்தது. அந்த ‘ஒரே நூலுக்கு இரு பரிசுகள்’ பெற்றது என்னை வானத்துக்குத் தூக்கிச் சென்றது என்று சொன்னால் அது முழு உண்மை. கொஞ்சம் நாள் வானத்தில் மிதந்து கொண்டிருந்தேன். ஏற்கெனவே நானாக ஒரு நூலை  எடுத்து பெரும்பாகத்தை மொழி பெயர்த்துக் கொண்டிருக்கும் போது அந்நவீனம் பதிப்பாக வெளி வந்து விட்டது. ஆர்வத்தோடு ஆரம்பித்த முதல் முயற்சி இப்படியானதே என்ற சோகத்தை அமினா தான் குணப்படுத்தியது. 

அமினா ‘வெற்றி’ பெற்றதும். ‘ஆஹா ... இனி மொழி பெயர்ப்பு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும்’ என்று வானத்தைப் பார்த்து நின்றேன். வானம் பொய்த்து வரண்டு போய் இருந்தது. சோகத்தில் நின்றேன். அப்போது அடுத்த வாய்ப்பு வந்தது.

இம்முறை வந்தது ஒரு நவீனமல்ல. வரலாற்று நூல். படிக்கிற காலத்தில் வரலாறு கொஞ்சம் அல்ல; நிறையவே உதைத்தது. வரலாற்று நிகழ்வுகளை ஆண்டுகளோடு நினைவு வைத்திருப்பது எனக்கு எளிதாகவா இருக்கும்! முதல் முறையாக இந்த நூலை வாசிக்கும் போது Robert Ludlum என்ற ஆங்கில ஆசிரியர் நினைவுக்கு வந்தார். நம்மூர் ‘கஜினி’யின் மூலமான The Bourne Identity என்ற நூலின் ஆசிரியர். இவரது கதைகளை முன்பொரு காலத்தில் நிறைய வாசித்திருக்கிறேன். இவரது கதைகளின் முதல் எழுபது, எண்பது பக்கங்களுக்கு கதை ஒன்றுமே புரியாது. பல ’நூல்கள்’ அங்கங்கே ஆரம்பிக்கும். ஏறத்தாழ எண்பது பக்கங்களுக்கு மேல் ‘நூல்கள்’ எல்லாம் ஒன்று சேர்ந்து, திரிந்து ஒரு கதையாக உருவெடுக்கும். இதே கதை தான் இங்கே. 20 x 20 மேட்ச் நடக்கும் தில்லியின் கிரிக்கெட் கிரவுண்டில் நூல்  ஆரம்பித்து. முகமது கோரிக்குப் போய், அவரைத் தாண்டி அலெக்சாண்டருக்குப் போய் ... வரலாற்றை அழகாக rewind  போய், அதன் பின் வேகமாக் forward செய்து இன்றைய நிலைக்கு வருகிறார். புத்த மதமும், அதை வேரூன்றச் செய்த பெருமன்னன் அசோகரும் ஆச்சரியமாகக் கண்முன் விரிகிறார்கள். வாசிக்கவும், வாசித்த பின் மொழியாக்கம் செய்யவும் மிகவும் நன்றாக இருந்தது. ஆனாலும் ஒரு நவீனத்தை மொழி பெயர்ப்பது போல், இந்த நூல் எளிதாக இல்லை. சிரமம் அதிகம் தான். அதனால் மொழி பெயர்க்க எடுத்த நேரமும் அதிகம்.

ஒரு வழியாக மொழி பெயர்ப்பு முடியும் தருவாயில் அந்த நூலின் ஆசிரியரே இங்கிலாந்திலிருந்து, இந்தியாவிற்கு, அதுவும் மதுரைக்கு வருகிறார் என்ற தகவல் கிடைத்தது. சந்திக்க வாய்ப்பும் கிடைத்தது. என்னை விட நாலு வயது சீனியர்! உடல் நலக் குறைபாடுகள் என்றான பின்பும், மருத்துவத்திற்குப் பிறகு நாடு கடந்து நாடு வந்து, அடுத்த  நூலுக்கு தயாராகும் அவரைப் பார்க்கும்

CHARLES  ALLEN

போது எனக்குக்  கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது. ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவரைப் பற்றி ஏற்கெனவே இணையத்தில் பார்த்து விட்டுச் சென்றிருந்தேன். ஆங்கிலோ-இந்தியர். ஆனாலும் இப்போது இங்கிலாந்து சென்று விட்டார். பல நூல்களின் ஆசிரியர். கடைசியாக - சென்ற ஆண்டு, 2012-ல் - எழுதிய நூலைத்தான் நான் மொழி பெயர்த்துள்ளேன். நூல்: ASHOKA; THE SEARCH FOR INDIA'S LOST EMPEROR.. நானூறு பக்கங்களைத் தாண்டிய நூல். மிக அதிகமான

ஆதாரங்களை வைத்து தன் நூலைப் படைத்துள்ளார். மிக மிக அழகான படங்கள். எப்படி அந்தக் காலத்தில் எடுத்த படங்கள் இவ்வளவு அழகு என்று தோன்றும் கலைப் பொக்கிஷங்கள்.

நூலின் போக்கில், நன்கு சிலரை இடித்துரைக்கிறார். கலைப் பொக்கிஷங்களையும், கோவில்களையும் இடித்து எரிக்கும் அந்நியப் படையெடுப்பாளர்கள்; பழைய அந்நிய கலைப்பொருட்களின் அருமை தெரியாமல் அவைகளை இடித்துப் போட்ட ஆங்கிலேய  அதிகாரிகள்; நம் கலைப்பொருட்களின் பெருமை புரியாத மக்கள்; ஆனாலும் எல்லோரையும் விட,  இவற்றின் அருமை தெரியாத நமது Archaeological Survey of India - ASI - என்று யாரையும் அவர் விடவில்லை. நூலை வாசிக்கும் போது வாசகனுக்கே வயித்தெரிச்சல் தரும் இவர்களைப் பற்றி ஆங்காங்கே சொல்லிச் சென்றுள்ளார்.

 உலகத்தையே ஆட்டிப் படைத்து, இன்றைய பல உலகப் பிரச்ச்னைகளுக்குக் காரணமாக உள்ளார்களே என்று எனக்கு எப்போதும் ஆங்கிலேயர்கள் மீது கோபம் உண்டு. என்னைப் போல் பலரை ஆசிரியர் சந்திருத்திருப்பார் போலும். அப்படி கோபம் உள்ளவர்களும் கூட கட்டாயம் பெருமைப் படுத்த வேண்டிய பல ஆங்கிலேய அதிகாரிகள், உயிரையும், உடல் நலத்தையும் பொருட்டாகக் கருதாது வரலாற்றுத் தடங்களைத் தேடிக் கண்டுபிடித்த பலரைப் பற்றிக் கூறும்போது அவர் கூறியது போல் அவர்களெல்லோரும் மிகவும் பெருமைக்குரியவர்கள் என்று நெஞ்சாரத் தோன்றியது. நாம் நன்றி செலுத்த வேண்டிய பெரும் மனிதர்கள் அவர்கள். நம் வரலாற்றை நாம் அறிய அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், தியாகமும் அளவில் அவ்வளவு பெரிது; உயர்ந்தது. ”உயிரை மதிக்காத பெரும் முயற்சிகள்” என்று வழக்கமாக எழுதுவோமே ... அப்படிப்பட்ட முயற்சிகளை உண்மையிலேயே மேற்கொண்ட பல நல்ல ஆங்கிலேயே வரலாற்று ஆய்வாளர்களை இந்த நூலின் நெடுகிலும் கண்டேன்.இந்தியாவிற்கும், இலங்கைக்கும் உள்ள தொடர்புகள் வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதை எடுத்துத் தந்துள்ளார். இலங்கையில் படைக்கப்பட்ட வரலாற்று ஏடுகள் நம் நாட்டு வரலாறு பற்றிக் கூறுவதும் நம்மை ஆச்சரியப் படுத்துகின்றன.

‘எதிர் வெளியீடு’ இந்நூலைத் தேர்ந்தெடுத்தமைக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் ஆசிரியர்  தன் நூலைப் பற்றிச் சொல்லும் போது, இங்கிலாந்தில் விற்றதை விட, இந்த நூல் வட இந்தியாவில் பல மடங்கு அதிக நூல்கள் விற்றதாகக் கூறினார். உண்மை தானே. நமது நாட்டு வரலாற்றை, இதுவரை தெரியாத, நாம் அறியாத வரலாற்றுப் பகுதியை, அதுவும் இஸ்லாமியர் படையெடுப்பிற்கு முன்புள்ள மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை, சான்றுகளோடு இந்நூலில் தருகிறார்.

நூலை வாசித்து முடிக்கும் போது, நம்மையறியாமலேயே நமது நாட்டின் மீது, நம் நாட்டு பழங்காலத்து வரலாற்றின் மீது, நூலின் நாயகன் அசோகன் மீது நமக்கு பெருமையும் மகிழ்ச்சியும் பெருகுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்ன அசோகரின் வார்த்தைகளின் நிஜம் நம்மை இன்றும் சுடும்; திருத்தும். அவனது பரந்த சிந்தனைகள் எவருக்கும் நிச்சயம் ஆச்சரியமளிக்கும்.நூலின் ஆசிரியர் சொல்வது போல், வரலாற்றில் இது போன்ற ஒரு “பெரும் சிந்தனையும், மக்களை வழி நடத்துவதும்” எந்த மன்னனிடமிருந்தும் உலகத்தில் வந்ததேயில்லை என்பது நமது பெருமைக்குரிய விஷயம். நாட்டின் வழியெங்கும் கிணறுகள் வெட்டினான் என்று சிறு வயதில் ப்டித்திருப்போம். கிணற்றுக்குப் பக்கத்தில் மரங்களை நட்டு மக்கள் அவ்விடங்களைத் தங்குமிடங்களாக - motels !!  - மாற்று எண்ணம் அப்பெருமன்னனுக்கு வந்ததே என்பதே ஆச்சரியம்!

இதையும் விட மனிதர்களுக்கு நலமளிக்க மருந்துச் செடிகளை தன் சாம்ராஜ்யம் முழுமையும் பயிரிட்டிருக்கிறான். எனக்கு வியப்பளித்த மற்றொன்று - சில பிராணிகளைக் கொல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளான். - red list of threatened species !! மதங்களைப் பற்றி அவன் சொல்லும் கருத்துகள் மனித ஜன்மம் இந்த உலகில் இருக்கும் வரை நம்மோடு இருக்க வேண்டிய உயர் கருத்துகளாகும்.

அசோகர் பெரும் மன்னன் மட்டுமல்ல; அவன் பெரும் மனிதன்.

இந்நூலை மொழி பெயர்த்தமைக்காக எனக்குப் பெரும் மகிழ்ச்சி.வரலாற்றின் நாமறியாத ஒரு புதிய பகுதியை, நம் மொழியில், அதனை  உங்களோடு பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சி இது.



*


Monday, January 31, 2011

471. அமினா - ஒரு பார்வை

*


எப்படியோ, ஒரு நூலை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக இரு விருதுகளும் (1... , 2...) கிடைத்தன. மனதுக்கு மிக்க மகிழ்ச்சி.

Monday, November 29, 2010

459. அமினா - த.மு.எ.க.சங்கத்தின் விருது பெற்ற விழா

*

அமினாவிற்கு "திசைஎட்டும்" அளித்த விருது விழா ...


*
Image and video hosting by TinyPic




27.11.2010 அன்று மாலை 6 மணிக்கு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் 2009 ஆண்டிற்கான மாநில இலக்கியப் பரிசளிப்பு விழா வெளியலங்காரங்கள் ஏதும் இல்லாமல் ஆனால்  அழகாக, இனிதாக நடந்தது. பதினெட்டு பேருக்கு மேல் பேச இருந்தும் கால அளவுகளை அழகாக அமைத்து கூட்டம் முறையாக நடந்தது.

Thursday, November 18, 2010

456. அமினா - இன்னொரு விருது

*

முந்திய விருது: “திசை எட்டும்”
*

என்னால் மொழியாக்கம் செய்யப்பட்ட “அமினா” என்ற புதினத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2009-ம் ஆண்டிற்கான த.மு.எ.க.ச. மாநில இலக்கியப் பரிசை - வ. சுப. மாணிக்கனார் நினைவு மொழி பெயர்ப்பு: இலக்கியப் பரிசை - அளிக்கிறது.

என் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Image and video hosting by TinyPic

Monday, August 30, 2010

429. அமினா -- பொள்ளாச்சியில் பரிசளிப்பு விழா




*
முந்திய பதிவு காண ...
*

நான் ஒரு பெரிய  பொறாமைக்காரன். குறிப்பாக,  இசை, எழுத்து, ஓவியம் சார்ந்த படைப்பாளிகளைப் பார்த்தாலே ரொம்ப பொறாமையாக இருக்கும்.

Saturday, August 21, 2010

428. பொள்ளாச்சி to ஆழியார்





*
பழைய கார் இருக்கும்போதே வெளியூருக்கெல்லாம் காரோட்டிச் சென்று வர ஆசை. தங்ஸிடம் பெர்மிஷன் கிடைக்கவேயில்லை. கார் மாற்றியதும் கட்டாயமாக ஊர் சுற்றிவர ஆசை.

Tuesday, July 20, 2010

419. ஒரு விருது - மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்

*

சென்ற வாரம் கிழக்குப் பதிப்பகத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அப்பதிகத்திற்காக நான் மொழிமாற்றிய "அமினா" என்ற புதினத்திற்கு மொழியாக்க விருது ஒன்று எனக்குக் கிடைத்திருப்பதாக ஒரு செய்தி.

Monday, June 28, 2010

406. அமினா - ஒரு 'திருட்டுப் பதிவு'

*

பதிவர் கபீஷ் நான் மொழிபெயர்த்த அமினாவைப் பற்றிய பதிவொன்றை 'போகிற போக்கில்' என்ற தன் கூட்டுப் பதிவில் இட்டிருந்தார்.  

அப்பதிவை அவரின் அனுமதியோடு இங்கு மறுபதிப்பாக இடுக்கிறேன். அவருக்கும் சஞ்சய்க்கும் மிக்க நன்றி.

முன்னுரை:

நூலகத்தில் இந்த புத்தகத்தை எடுக்கும்போது தருமி என்பது வலைப்பதிவர் தருமி என்று தோன்றவில்லை. யாரும் எனக்கு பரிந்துரைக்காத நூலை எடுத்து படிக்க வேண்டுமா என்று யோசித்தேன். 29 மொழிகளில் வெளிவந்து உலக கவனத்தை கவர்ந்த நூல் என்று அட்டையில் இருந்ததாலும், கிழக்கு பதிப்பக நூலானதாலும், எப்படியும் மோசமாக இருக்காது என்று எண்ணி எடுத்துவந்தேன். (காசு கொடுக்கமால் நூலகத்தில் இருந்து புத்தகத்தை எடுக்க எவ்வளவு யோசனை) புத்தகத்தின் முதல் பக்கத்தைப் படித்திருந்தால் வலைப்பதிவர் தருமி தான் நூலாசிரியர் என்று தெரிந்திருப்பேன். அவசரக் குடுக்கையாக நாவலைப் படிக்க ஆரம்பித்து விட்டேன். வேறு நாட்டைக் கதைக்களமாக கொண்டாலும் அந்நியத் தன்மை, ஆசிரியர் கருத்து இடைச்செருகல், தேவைக்கதிகமான விவரணை இல்லாதது, எளிமையான நடை மற்றும் பெரும்பாலும் உரையாடல் மூலமாக கதை இருந்தது நாவலை சுவாரசியமாக்கியது. ஒரு வேளை பதிவர் தருமியா இருக்குமோ என்று அவரிடம் கேட்டேன் ஆமாம் என்றார். ஒரு வேளை தருமி எழுதியது என்று தெரிந்து படித்திருந்தால் எதோ ஒரு முன்முடிவுடன் படித்திருப்பேனோ என்னவோ தெரியாது. முக்கியமாக தருமி என் வங்கிக்கணக்குக்குப் பணம் எதுவும் இதுவரை அனுப்பவில்லை :-(((

பதிவர் தருமியின் அமினா 

ஆங்கிலத்தில் முகம்மது உமர் எழுதி, தருமி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நண்பரின் நூலைப் பற்றிய அறிமுகம், விமர்சனம் இல்லை :-))

நாவலின் பெயர், கதையின் நாயகியின் பெயரே, அமினா. நைஜீரியாவின் பக்காரோ நகரின், அழகான மேல்தட்டு வர்க்கப் பெண். பணக்கார, ஆளும் கட்சி அரசியல்வாதி கணவன் ஹாருணாவுக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு வெற்றியின் போதும் ஒரு கல்யாணம் செய்யும் பழக்கம், அமினா நாலாவது மனைவி. அமினாவின் கல்லூரி கால நெருங்கிய தோழி ஃபாத்திமா, ஒரு பணக்காரருக்கு மூன்றாவது மனைவியாகி, கணவர் கொடுமையின் காரணம் விவகாரத்து செய்து, வழக்கறிஞர் படிப்பைத் தொடர்கிறாள், மாணவ இயக்கத்தில் சேர்ந்து சமூகத்துக்காகப் போராடுகிறாள். அமினாவுக்கு, பெரிய தொழிலபதிராகி, நாட்டிலேயே பெரிய பணக்காரியாவது தான் நோக்கமாக இருக்கிறது, கணவர் ஹருணாதான் அமினா தொழில் செய்ய தூண்டுகோலாய் இருக்கிறார்.

கணவர் திடீரென அமீனாவின் நடத்தையின் மீது சந்தேகம் கொண்டு அடித்த தருணத்தில், ஃபாத்திமா கொடுத்த ஒரு புத்தகத்தை படிக்க நேர்ந்து, அவள் நோக்கத்தில் மாறுதல் ஏற்படுகிறது. ஃபாத்திமாவின் தூண்டுதலால், மற்ற பணக்காரப் பெண்களை உடன் சேர்த்து பெண்கள் இயக்கம் ஆரம்பித்து ஏழைப் பெண்கள் கல்வி கற்க உதவி செய்ய ஆரம்பிக்கிறாள், கல்வியின் மூலமே சமூகத்தில் மாறுதல் ஏற்படும் என்பதால். சமூகத்தின் மீது எந்தவித அக்கறையும் இல்லாமல் இருந்த அமினா படிப்படியாக பெண்களுக்காக போராட ஆரம்பித்து, பெண்களுக்கு எதிராக சட்டமியற்றும் அரசாங்கத்தை எதிர்க்க நேர்ந்து பக்காரோ நகரின் பெண்களுக்கு வழிகாட்டியாகி, ஐ நா சபை பாராட்டும் அளவுக்கு உயர்கிறாள்.

நைஜீரியாவின் அரசியல் நிலைமையையும் முஸ்லிம் பெண்களின் நிலைமையையும் இந்நாவல் அழகாகச் சொல்கிறது. நைஜீரியாவின் இயற்கை வளம் எவ்வாறு அன்னாட்டு அரசியல்வாதிகள் துணையுடன் ஏகாதிபத்திய அரசுகளால் சுரண்டப்படுகிறது என்பதை பாட்டூர் என்னும் கதாபாத்திரம் மூலம் விளக்குகிறார். பாட்டூர், லண்டனிலிருந்து நைஜிரீயாவில் குடியேறிய அரசின் தொழில் ஆலோசகர். அரசியல்வாதிகள் ஊழலில் சம்பாதித்த பணத்தை அவர்கள் சார்பாக ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்யும் சேவையை செய்து வருகிறார். நைஜீரியாவின் கல்வித்திட்டம் தொழில்நுட்பத்தை கற்க, ஆராய்ச்சி செய்ய ஏதுவாகவில்லை. முன்னேறிய நாடுகளில் உள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நைஜிரியாவிலுள்ள இயற்கை வளங்களை ஆராய்ச்சி செய்து, அரசியல் வாதிகள் உதவியுடன் மற்ற நாடுகளுக்கு அவை குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. இதற்கு பிரதிபலனாக அரசியல் வாதிகளுக்கு உள் நாட்டில் அரண்மணை போன்ற வீடுகளும், வெளிநாட்டில் விலையுயர்ந்த வீடுகள், வெளிநாட்டுச் சுற்றுலா, வெளி நாட்டு வங்கியில் பணம் முதலானவை கிடைக்கிறது, பாட்டூர் மூலம்.

நைஜீரியாவில் மேல்த்தட்டு முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளலாம். இந்திய பெண்களின் நிலை போலத்தான் இருக்கிறது, குறிப்பாக சொன்னால் இந்தியப் பெண்களைவிட இந்த நாவலில் காட்டப்பட்ட நைஜீரிய முஸ்லிம்கள் நிலை பரவாயில்லை போல என்று தோன்றுகிறது. ஒரு வேளை பணக்கார பெண்ணின் நிலையை மட்டும் ஆழமாக விவரித்ததன் மூலம் இப்படித் தோன்றியிருக்கலாம். கணவன் வந்தவுடன் அமினாவும் அவள் தோழி ஃபாத்திமாவும் முழந்தாளிட்டு முகமன் சொல்கிறார்கள்(இது இந்தியாவில் நடப்பதில்லை என்று நினைக்கிறேன்) சமையல் வேலை அமினாவுக்கு கிடையாது, நாவலின் சந்தோசமான இடம் இது.:-) ஒரே ஓர் இடத்தில் அவள் சமைப்பதற்காகச் சீக்கிரம் செல்ல வேண்டும் என்று ஒரு பொதுக்கூட்டத்திலிருந்து செல்கிறாள், தருமியிடம் ஏனென்று கேட்க முடியாது, உமரிடம் கேட்க வேண்டிய கேள்வி.:-)))


அமினா வீட்டிலிருந்து வெளியே செல்ல காரில் ஏறும் போதும், இறங்கும் போதும், அவளைத் துதித்து பாட்டு பாடி சில நாய்ராக்கள் பெறும் சிறு கூட்டம், அமினாவின் கணவனின் ஒரு மனைவியின் மகனான அப்துல்லாஹியுடன் ஃபாத்திமா செய்யும் சீண்டல்கள், அமினாவின் கல்லூரி கால ஒரு தலைக் காதல், அமினாவின் பெண்கள் அமைப்பு தோழி பில்கிசு, குலு, "பக்கோரோவின் ரேடியோ" என்று அழைக்கப்படும் மைரோ, இதுபோல சுவாரசியமான சம்பவங்களும், பாத்திரங்களும் நாவல் வறண்டு போகாமல் இருக்கச் செய்கின்றன.

அமினா பெண்கள் அமைப்பைத் தொடங்கி உரையாற்றும் போது இவ்வாறு முடிக்கிறாள்

"ஒரு சொலவடை உண்டு:
ஓராண்டுக்குத் திட்டமிட்டால் சோளம் விதை;
பத்தாண்டுக்குத் திட்டமிட்டால் ஒரு மரம் நடு;
நீண்ட நெடு வாழ்க்கைக்குத் திட்டமிட்டால் கல்வி கொடு.

பெண்கள் நாங்கள் பக்காரோவின் எதிர்காலத்தைத் திட்டமிட ஆரம்பித்திருக்கிறோம் வளமான, சந்தோஷமான, ஒளிமயமான, எதிர்காலத்தை பக்காரோ காணவேண்டும். அதற்காகவே பெண் கல்வியோடு எங்கள் திட்டத்தை ஆரம்பிக்கிறோம். பெண்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்ந்தாலே, நகரம், மாநிலம், நாடும் வளம் பெறும். நன்றி ! "



ஆங்கிலத்தில் படிக்கவில்லை. தமிழில் இயல்பாக, படிக்கத் தொய்வில்லாமல் இருக்கிறது. அமினாவின் அழகை விவரித்து சொல்லும் இடங்களில் என் தோழி ஞாபகத்துக்கு வந்தாள். நம் நாட்டு நிலைமையுடன் பெரிதும் ஒப்புமைப் படுத்தி பார்க்கும் விதமான சூழலைக் கொண்டது நைஜிரியா என்று எனக்குத் தோன்றுகிறது. என்னுடைய சில ஆஃப்பிரிக்க தோழிகள் சொல்லியிருக்கிறார்கள் எங்கள் நாடும் உங்கள் நாட்டைப்போல இயற்கை வளங்கள் அதிகம் கொண்ட, அரசியல்வாதிகள் மற்றும் முன்னேறிய நாடுகளால் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்ட, பட்டுக்கொண்டிருக்கும் நாடு என்று. உண்மை தான் என்று தோன்றுகிறது. இங்குள்ள (இங்கிலாந்து) அருங்காட்சியகங்களில் பெரும்பாலான பழம்பொருட்களின் கீழ், ஆஃப்ரிக்காவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் ராணிக்கு அன்பளிப்பாக கிடைத்தவை என்ற குறிப்பு இருக்கும்.


மொத்தத்தில், அமினாவின் மூலம் சின்ன குழுவின் மூலமே பெரிய மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்திவிட முடியும் என்ற நேர்மறைச் சிந்தனையைத் தருகிறார் நாவலாசிரியர். தனி மனிதன் நினைத்தாலே மாற்றம் வரும் என்பதற்கு 2004 ல் நோபல் பரிசு வென்ற கென்ய நாட்டு வாங்கரி முடா மாத்தாய் (Wangari Muta Maathai) மற்றும் தமிழக்தின் கிருஷ்ணம்மா முதலிய சமூக ஆர்வலர்கள் வாழும் சாட்சிகளாய் இருக்கிறார்கள்.

இந்த புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனத்தில் இது ஒரு பெண்ணீய நாவல் என்று படித்தேன். முதல் முறையாக பெண்ணீயத்தின் பொருள் தேடினேன் கூகிளில். இதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.


மூல ஆசிரியர்: முகம்மது உமர்
தமிழில்: தருமி
பதிப்பகம்: கிழக்கு
விலை : Rs. 200/-

Post by : Kabheesh

பின்னூட்டங்கள்:
ரோகிணிசிவா – (June 24, 2010 7:22 PM)
i have not read the book u have shared , but u have put it in good way, i wil seek to read it, thank u for sharing

முத்துலெட்சுமி/muthuletchumi – (June 24, 2010 7:22 PM)
நல்லதொரு அறிமுகம் கபீஷ்..வாசிக்க ஆவலைத்தூண்டுகிறது.

வினையூக்கி – (June 24, 2010 7:23 PM)
அக்கா நல்லதொரு அறிமுகம் !! நன்றி

அதிஷா – (June 24, 2010 7:25 PM)
பிம்பிலிக்கி!

Thekkikattan|தெகா – (June 24, 2010 7:28 PM)
நல்ல அறிமுகம், சீராக சென்றது - வாசிப்பதற்கு. நன்றி!

அத்திவெட்டி ஜோதிபாரதி – (June 24, 2010 7:50 PM)
GOOD

ஆதிமூலகிருஷ்ணன் – (June 24, 2010 10:33 PM)
தருமி ஐயாவுக்கு வாழ்த்துகள்.

Chitra – (June 25, 2010 1:46 AM)
Seems to be an interesting book. பகிர்வுக்கு நன்றி.

ராஜ நடராஜன் – (June 25, 2010 2:18 AM)
அறிமுகத்திற்கு நன்றி கபீஷ்!
இது மாதிரி இன்னும் நிறைய சொல்லலாமே?

cheena (சீனா) – (June 25, 2010 8:22 AM)
அன்பின் கபீஷ்
புத்தகம் வாங்கி விட்டேன் - படிக்கிறேன் - கருத்து சொல்கிறேன்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

SanjaiGandhi™ – (June 25, 2010 9:09 AM)
சூப்பரப்பு.. படிக்கும் ஆவலைத் தூண்டுது..
//இது மாதிரி இன்னும் நிறைய சொல்லலாமே?//
நல்லா சொல்லுங்க நடராஜன்.. நான் சொல்லி சொல்லி களைச்சிட்டேன்.. கேக்க மாட்டேங்கறா..

Bharath – (June 25, 2010 2:22 PM)
pretty crisp review rather intro. :)

//இந்த புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனத்தில் இது ஒரு பெண்ணீய நாவல் என்று படித்தேன். முதல் முறையாக பெண்ணீயத்தின் பொருள் தேடினேன் கூகிளில். இதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.
//
பொம்பளை, சாதனை, பாராட்டுனாலே பெண்ணியம்ன்னு ப்ராக்கெட் போட்டுர்றாங்கப்பா.. கூகிள் என்ன சொல்லிச்சுன்னு தெரிஞ்சுக்க ஆசயா இருக்கோம்..




Thursday, June 10, 2010

400. அமினா - ஒரு திறனாய்வு

*
அமினா பற்றிய முந்திய பதிவு ..... 

*
மதுரையிலிருந்து பேரா. ஜேம்ஸ் என்பவரால் நடத்தப்படும் சிறு மாத இதழ் "மனித நேயம்". வழக்கமாக இவ்விதழில் எழுதி வரும் முனைவர் பேரா.டாக்டர் வின்சென்ட் இவ்வாண்டின் மே மாத இதழில் அமினா என்ற என் மொழிபெயர்ப்பு நூலின் மீது ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். டாக். வின்சென்ட் நைஜீரிய புதின எழுத்தாளர் சினு அச்சிபி்யின் புதினங்கள் மீது Ph.D.க்கான தன் ஆய்வுக்கட்டுரை எழுதியவர். அவரது கட்டுரை:






நூல் :         அமினா 
ஆசிரியர்: முகமது உமர்

தமிழில்: தருமி 
பதிப்பு: கிழக்கு

பக்கம்: 368 
விலை: ரூ. 200

ஆப்ரிக்க நாடுகளின் ஆங்கிலப் படைப்புகள் உலக இலக்கியத்தில் உயர்வாக மதிக்கப்படுபவை. குறிப்பாக நைஜீரிய நாட்டின் வளமான இலக்கியப் படைப்புகள் அரை நூற்றாண்டிற்கு மேல் வாசகர்களையும் திறனாய்வாளர்களையும் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. சினு அச்சிபியும், நோபெல் பரிசு பெற்ற ஓலே சோயிக்காவும் உலகப் பெரும் எழுத்தாளர்கள் வரிசையிலே இடம் பெற்றவர்கள். எனினும் வடக்கு நைஜீரியாவிலிருந்து இப்போதுதான் ஆங்கிலத்தில் படைப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. அவற்றில் முதன்மையாகக் கருதப்பட வேண்டியது முகமது உமர் எழுதிய அமினா என்ற நூல்.

இந்தப் புதினம் நைஜீரியாவில் இஸ்லாமியர் நிறைந்த பக்காவோ நகரினைப் பின்புலமாகக் கொண்டு இஸ்லாமியப் பெண்களின் அவலநிலையை சிந்திக்கிறது. கதைத் தலைவி அமீனா மாநில மக்களவை உறுப்பினர் ஹமணாவின் நான்காவது மனைவி. படித்தவள். தொடக்கத்தில் தன் அழகு, செல்வம், கணவரின் பதவி தந்த செருக்கில் மிதந்தவள்.  ஆனால் அவளுடைய தோழி பாத்திமா என்ற பெண் விடுதலைப் போராளி அவளைத் தன் பக்கம் ஈர்க்கிறாள்.  ஹருணாவின் வீட்டில் பாத்திமாவின் கூட்டாளிகள் சந்திக்கிறார்கள். முதலில் அவர்களுடைய வழியில் செல்லாத அமீனா, பிறகு தன்னையும் அவர்களோடு இணைத்துக் கொண்டாள்.  அவளுடைய நடத்தையில் சந்தேகப்படும் கணவன், அவனுடைய பெண்ணடிமைக் கொள்கையை எதிர்த்துப் போராடும் கூட்டம் என்று அலைக்கழிக்கப்படுகிற அமீனா பெண்கள் இயக்கத்தில் தலைவியாகிறாள். அவளுடைய கணவன் மக்களவையில் கொண்டு வந்த பெண்ணடிமைத் தீர்மானத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்துகிறார், அவள் காப்பாற்றி வளர்த்த பெண் லாராய் துப்பாகிச் சூட்டில் இறக்கிறாள். அமீனாவும் தாக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறாள். வழக்கு மன்றத்தில் அமீனாவே தனக்காக வாதாடுகிறாள். வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற பாத்திமா அமீனாவிற்கு ஐ.நா. சபை மாநாட்டுப் பத்திரம் தரப் போவதாக அவளுக்குத் தெரிவிக்கிறாள். இந்தப் போராட்டம் தோற்றாலும், அடுத்த போராட்டம் வெற்றி தரும். "ஒளிமயமான எதிர்காலம் கைக்கெட்டும் தூரத்தில் தான்" என்ற் நம்பிக்கைச் சொற்களோடு நாவல் முடிகிறது.

நைஜீரியாவில் பரவி இருக்கும் ஊழல், பதவிப்போர் ஆகியவற்றைப் படம், பிடித்துக் காட்டும் இந்நாவல் இஸ்லாமியப் பெண்களின் அவல நிலையை நெஞ்சுருகச் சொல்லுகின்றது. பலதாரமணம், பெண்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள், பெண்களை அடித்துத் துன்புறுத்துதல் முதலியன நைஜீரிய இஸ்லாமிய சமூகம் அங்கீகரித்தவை. மகன் ரஷித்தின் உயிரைக் காப்பாற்றக் கதறியழும் அமீனாவை ஹருணா சந்தேகத்தின் பேரில் கண்மண் தெரியாமல் அடித்துத் துன்புறுத்துவது கொடூரமான சோகம்.

நைஜீரியாவின் பெண்ணடிமைத்தனத்தையும், ஊழலையும் விவரிக்கும் முயற்சியில் உயர்நாவலின் கட்டமைப்பை மறந்து விடுகிறார். பாத்திரப்படைப்பில் அழுத்தமில்லை. எனினும் ஒரு பெண் போராளியின் கதை என்ற முறையில் நைஜீரிய இஸ்லாமிய சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிற புதினம் இது. 'தருமி' என்ற புனைப்பெயரில் எழுதுகின்ற பேராசிரியர் சாம் ஜார்ஜ் நாவலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.  ஆற்றொழுக்கான நடை. ஒரு சில இடங்களில் சொற்களில் தடுமாற்றம் இருந்தாலும், கதை சொல்லும் பாணி மிக நன்று. பெண்ணிய ஆர்வலர் அவசியம் படிக்க வேண்டும்.

.................... பேராசிரியர் ச. வின்சென்ட்


*










Thursday, September 10, 2009

334. அமினா

*

அமினா*


ஒரு நைஜீரிய பெண் போராளியின் உணர்ச்சிகரமான வாழ்க்கை.

29 மொழிகளில் வெளிவந்து உலக கவனத்தை ஈர்த்த முக்கியமான நாவல்.


ஆசிரியர்: முகமது உமர்

தமிழில்: தருமி





பின்பக்க அட்டையில் உள்ள சிறு குறிப்பு:

சிறுமியோ, வயதான கிழவியோ எல்லோரும் முகத்திரை அணிந்துதான் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். உடைக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். வியாபாரமோ தொழிலோ செய்ய முடியாது. தனியாக வசிப்பவர்களுக்கு வேலை கிடையாது. வேலையில் இருப்பவர்கள் வரி செலுத்த வேண்டும். திருமணமானவர்களுக்கு பேறுகால விடுப்பு கிடையாது. நிலம், சொத்து வாங்க முடியாது. இப்படித் தொடர்கிற அடக்கு முறைக்கு ஒரே காரணம் அவர்கள் பெண்கள். அதுவும் இஸ்லாமியப் பெண்கள்.

எங்கோ நைஜீரியாவில் ஒரு பொந்தில் வசிக்கும் அமினா, பெண்களுக்கு எதிரான ஆதிக்கப் போக்கையும் கடுமையான சட்ட திட்டங்களையும் எதிர்கொள்ளத் துணிகிறாள். முடிவற்றுத் தொடர்கிறது அவளது உணர்ச்சி பூர்வமான போராட்டம். நைஜீரியாவையும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையையும் கண் முன் நிறுத்தும் அபூர்வமான படைப்பு இது.





*
"புத்துணர்ச்சி அளிக்கும் புத்திசாலித்தனமான படைப்பு."

Malak Zaalouk, Author and Sociologist.


*

"நம்பிக்கையூட்டும் பாஸிடிவ் கதை. உத்வேகம் அளிக்கும் ஒரு புதிய உலகத்துக்கு வாசகர்களை அழைத்துச் செல்கிறது இந்நாவல்."

Anne - Marie Smith, Canadian critic



*

"ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஓர் உலகில் ஒரு பெண்ணாக இருப்பதன் பொருள் என்ன என்பதை முகமது உமர் இந்நாவலில் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் இஸ்லாமியப் பெண்களுக்கு இந்நாவல் நம்பிக்கையளிக்கும் தீபமாகத் திகழ்கிறது.

Kholood Alqahatani, Journalist, Arab News (Saudi Arabia)



*

*16ம் நூற்றாண்டில் இன்றைய நைஜீரியாவின் ஒரு பகுதியில் அரசாண்ட இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த அமினா தன் போர்குணத்திற்காகவும், வீரத்துடன் தன் நாட்டை விரிவு படுத்தியமைக்காவும் வரலாற்றில் தனியிடம் பெற்றவள். அப்போர்க் குணத்திற்காகவே இப்பெயரைத் தன் கதாநாயகிக்கு வைத்துள்ளார் ஆசிரியர்.


*

AMINA

Kizakku,
New Horizon Media Pvt. Ltd;
No. 33/15 Eldams Road,
Alwarpet, Chennai -18

e-mail: support@nhm.in

பக்கங்கள்: 368

விலை: Rs. 200


*


இந்த நூலைப்பற்றி ஒரு குறிப்பு தருகிறார் ஸ்ரீதர்.


*

*