*
எனது உளுத்துப் போன கட்டுரைகள் பற்றி ....
*
ஒன்பதரை ஆண்டுகள் ... 800 பதிவுகள் ... வேலையிலிருந்து ஓய்வு பெற்றவனுக்கு மறு வாழ்வு போல் இணையம் உதவியது. சிறிது குறைந்திருந்த வாசிப்பு ஒரு கட்டாயமானது. வாசித்ததை ’நாலு பேருக்குச் சொல்லும் வழியும் கிடைத்தது. எழுத ஆரம்பித்த பின் எழுதியாக வேண்டிய கட்டாயங்களும் உருவாகி, தொடர்ந்து எழுதி ... திருப்திகரமாகவே சென்று கொண்டிருந்தேன்.
எழுதியவைகளில் சிலவற்றிற்குக் கிடைத்த ஆதரவுகளும், எழுதியவைகளின் பேரில் வந்த விமர்சனங்களும், விவாதங்களும் செல்லும் வழி நன்றாகவே இருக்கிறது என்று எண்ண வைத்தது.
2005ல்
என் பதிவில் - - ’மனிதன்’ என்ற புனைப்பெயரில் வந்த ஒருவன் பின்னூட்டப் பகுதியில் மடத்தனமாக சில சொல்லிச் சென்றான். அது ஒன்று மட்டுமே இத்தனை ஆண்டுகளில் ஒரு பதிவனாக நான் அனுபவித்த ஒரே ஒரு கஷ்டமான விஷயம்; மனதைப் புண்படுத்திய ஒரே விஷயம்.
ஆனால் ஒன்பதைரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சில பின்னூட்டங்கள் மனதை மிகவும் பாதித்தன. --- இப்படி
எனது 804வது பதிவில் எழுத வேண்டியதாகி விட்டது.
என் பதிவுகளை விட அந்தப் பதிவுகளை ஒட்டியெழுந்த பின்னூட்டங்கள் பொருள் பொதிந்தவை என்ற பெருமை எனக்கு எப்போதும் உண்டு. ஆகவே பின்னூட்டங்களுக்கு ’மரியாதை’ கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்!
அப்பதிவில் நான் எப்படி எம்.எஸ்.வீ. பாடல்களைக் கேட்டேன். பின்பு இளையராஜா மிகவும் பிடித்தவரானார். அதன் பின் அந்த சிம்மாசனத்தில் யாரையும் வைக்கவில்லை என்று எழுதியிருந்தேன். சிவாஜிக்குத் தந்த சிம்மாசனமும், கண்ணதாசனுக்குத் தந்த சிம்மாசனமும் இன்னும் காலியாக இருப்பது போல் இதுவும். சார்லஸ் பதிவில் பதிவர்களிடையே மிகக் கடுமையான வாக்குவாதம் இருந்ததால் விவாதங்களை மென்மையாக்கவே நான் என் பதிவை இட்டேன். அதுவும் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனை //
சொம்ப உள்ள வைங்கப்பா என்றெல்லாம் நகைச்சுவையாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு உங்களின் தரத்தை தயவு செய்து குறைத்துக்கொள்ளவேண்டாம் பேராசிரியரே.// என்று ஒரு பின்னூட்டம் காரிகனிடமிருந்து வந்தது. பரவாயில்லை... நான் கஷ்டப்பட்டு நகைச்சுவையாக எழுதுவதை அவரும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்து விட்டார் போலும்!
இங்கிலிபீசு என்று நான் எழுதியது அவருக்கு சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றுகிறது. கோபித்துக் கொண்டார்.
//பதில் சொல்லியாகிவிட்டது. மீண்டும் ஒரே வாந்தி எடுக்கவேண்டாம்.....//
- இந்த வார்த்தைகள் நாகரீகம் இல்லாத எழுத்துக்கள் என்றேன். அதற்குப் பதிலாக --
//என் நாகரீகம் பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. மதம் பிடித்த பதிவுகளை எழுதும் உங்களுக்கு நாகரீகம் பற்றி பேச தகுதி இருக்கிறதா என்று introspect செய்துகொள்ளுங்கள். //
இந்த விவாதம் மிகவும் வேடிக்கையான விவாதமாகத் தோன்றியது. மதங்களைப் பற்றி எழுதுவது நாகரீகமற்ற ஒரு செயல் என்பதும், அதை எந்த தொடர்புமில்லாமல் இப்பதிவில் கூறியிருப்பதும் அவரை நான் ஒரு ‘ஆன்மீகவாதியாக’ நினைக்க வைத்தது. ஆனால் அவரோ தன்னை ஒரு மத மறுப்பாளராகக் கூறியுள்ளார். ஆனால் மதங்களை மறுக்கும் என் நாகரீகம் பற்றி ஏனிப்படிப் பேசுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. அவருக்குப் புரிந்திருந்தால் சரி.......
என் பதிவுகளை வாசித்து ஒரு ’நல்ல’ சான்றிதழ் வேறு கொடுத்து விட்டார்.......... நான் என் பதிவுகளுக்கு முதலிலிருந்தே எண்ணிட்டிருந்தேன். அதற்கும் சேர்த்து இப்படி ’வாசித்திருக்கிறார்’.
/
/ஏதாவது மதத் தொடர்பான உளுத்துப் போன கட்டுரை ஒன்றை காப்பி பேஸ்ட் செய்து தருமி 805 என்று வெளியிடுங்கள். இப்போதுதான் தெரிகிறது எப்படி இந்த 800 சாத்தியமாயிற்று என்று.//
ஏனய்யா என்றா நான் கேட்க முடியும். மெத்த தெரிந்த அவருக்கு என் பதிவுகள் உளுத்துப் போனவைகளாக இருந்தால் அதற்கு நானென்ன செய்ய முடியும் - அவரிடம் சென்று இதற்காகத் தனிப்பயிற்சியா மேற்கொள்ள முடியும்? அவரைப் போல் அழகாக எழுத என்னால் எப்படி முடியும் என்ற ஆதங்கம் எனக்கு!
// உங்களின் பதிவுகள் படித்திருக்கிறேன். ஆனால் அவற்றிலிருந்து எந்த கருத்தும் என்னை சிந்திக்க வைத்ததில்லை. ஒரு மாதிரியான மேலோட்டமான எழுத்து உங்களது. .....
இதில் நீங்கள் 800எழுதினால் என்ன 1000 எழுதினால் என்ன?// நல்ல கேள்வி.
அவர் சொல்வதும் நியாயம் தான்.... உளுத்துப் போன கட்டுரைகள் எத்தனை எழுதினால் தான் என்ன...? யாருக்கு என்ன லாபம்?
உங்கள் நல்ல பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி காரிகன்............
*
