Showing posts with label ”பூங்கா”. Show all posts
Showing posts with label ”பூங்கா”. Show all posts

Monday, July 02, 2007

226. மதுரைத் தேர்தல் துளிகள்

ஆளே ரொம்ப நாளா காணாம போயிருந்தாலும் வந்ததும் சுடச் சுட ரெண்டு பதிவு போட்டிருக்கிற தமிழினி தன் பதிவில் சொல்லியிருந்த ஒரு 'வசனம்' இது:
//கைநீட்டீ காசை வாங்கிட்டா சரியா குத்திடறான்.பண விஷயத்தில் துரோகம் செய்ய தமிழன் நினைக்கறதேயில்லை//

இதப் படிச்சதும் நம்ம நேரடி அனுபவத்தைச் சொல்லணும்னு நினப்பு வந்திருச்சி. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பே இந்த காசு விவகாரம் தெரிய ஆரம்பிச்சது. மொதல்ல சொன்ன ரேட்டு 500 ரூபாய்தான். ரெண்டு பெரிய கட்சி பெயரையும் சொல்லியிருக்காங்க தங்கமணிட்ட படிக்கிற பசங்க. தங்கமணி வேலை பார்க்கிற பள்ளிக்கூடம் மதுரை மேற்குத் தொகுதியின் முக்கிய இடத்தில் இருக்கிறது. நாள் நெருங்க நெருங்க பணம் குடுக்கிறதில் ஆளும் கட்சியின் பெயர் மட்டுமே வந்தது. தங்கமணியுடன் வேலைபார்க்கும் ஒருவரே சொன்னாராம் அவங்க வீட்டுக்கு ரூபாய் 1500 பட்டுவாடா செய்யப் பட்டது என்று. பிக்ஸ் பண்ணினது ரூபாய் 2000; அதில் 'நெல்லுக்கு பாயும் நீர் புசியுமாமே அங்கே உள்ள புல்லுக்கும்' என்ற தத்துவத்தில் 1500 மட்டுமே இறுதியாகக் கொடுக்கப் பட்டது என்ற பேச்சும் இருந்தது.

எஸ். எஸ். காலனின்னு இன்னொரு பகுதி. அங்கிருக்கும் ஒரு நண்பர் சொன்னது: 'எங்க ஏரியாவில் யாரும் பணம் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி விட்டோம்.' முதல்ல சொன்னது கொஞ்சம் ஏழைபாழைங்க இருக்கிற இடம்; இரண்டாவது மிடில்க்ளாஸ் & வசதிப் பட்டவங்க இருக்கிற இடம். பரவாயில்லையேன்னு நினச்சுக்கிட்டேன்.

காசு கொடுக்கிறதுக்கும் கட்சிகளுக்குள் ஒரு அக்ரிமென்ட் போட்டுக்கிட்டது மாதிரி முதல் சொன்ன பகுதியை ஆளுங்கட்சி எடுத்துக் கொண்டதாகவும், வேறு சில ஏரியாக்களை அடுத்த கட்சி தத்து எடுத்துக் கொண்டதாகவும், முதலில் இரு பெருங்கட்சிகளுக்கும் பணம் கொடுப்பதில் போட்டி இருந்தாலும் பின்னால் எதிர்க்கட்சி போட்டியில் பின் தங்கிவிட்டது / காசை அவர்களே வைத்துக் கொண்டார்கள் என்று பேச்சும் வந்தது.

தேர்தலுக்கு முந்திய நாள் பழக்கப்பட்ட ஆட்டோகாரர் தன் குடும்பத்துக்கும் மொத்தமா 1500 வந்ததாகச் சொன்னார். நான் ரொம்ப மேதாவித்தனமா, கொடுத்ததை வாங்கிகிட்டு ஓட்டை மாற்றிப் போட்டுவிட வேண்டியதுதானே என்றேன். அது சரியில்லை என்றார்.

"காசு கொடுக்கிறவங்களை அப்படித்தான் தண்டிக்கணும்; அப்பதான் அடுத்ததடவை காசு யாரும் கொடுக்க மாட்டாங்க".

"இல்ல சார், அது தப்பு".

"காசு கொடுக்கிறது தப்பு இல்லையா?", என்றேன்.

"காசு வாங்குறதும் தப்புதானே!", என்றார் பதிலடியாக.

அவரின் நியாய உணர்ச்சியும், அதனால் வாங்குன காசுக்கு ஓட்டு போட்டே ஆகணும் அப்டிங்கிற உணர்ச்சியையும் பார்த்து, எனக்குப் பேசுவதற்கு ஒன்றுமில்லாமல் நின்றேன்.

அதன்பிறகு அவரே சொன்னார்: "நீங்க சொல்றது மாதிரியும் சில பேர் சொல்றாங்க; அதிலேயும் அந்த மாதிரி சொல்றவங்க, அவனுக்கும் வேண்டாம்; இவனுக்கும் வேண்டாம்; விஜயகாந்த கட்சிக்கு போடலாம்'னு சொல்றாங்க. பார்ப்போம் என்ன ஆகுதுன்னு" என்றார்.

இந்த நியாய உணர்வின் தாக்கமே 75 விழுக்காடு ஓட்டு விழுந்ததற்கும், விஜயகாந்த் கட்சிக்கு இந்த அளவு ஓட்டு விழுந்ததற்கும் உரிய காரணங்களாக இருக்கலாம். என்னென்னமோ நடக்குதுங்க அரசியலில்.

வாழ்க ஜனநாயகம்!

Tuesday, May 22, 2007

217. குண்டு எல்லாம் எதற்கு...?***

camping at chennai ...

சென்னைக்கு வந்துவிட்டு தி.நகர் கடைவீதிகளில் ஒரு சுற்று சுற்றாவிட்டால் நாடும், நகரமும் நம்மை தூற்றாதா? அதனால் சென்ற வெள்ளிக் கிழமை ஒரு வழக்கமான "தி.நகர் சுற்றுலா"விற்கு மகளோடும், தங்கமணியோடும் சென்றேன். சென்று என்ன வாங்கினோம்; வாங்க மறந்தோம்; பேரம் செய்தோம் என்பதைச் சொல்ல அல்ல இந்தப் பதிவு. அங்கு பார்த்த ஒரு நிகழ்வைப் பற்றிய ஒன்றும், அதற்கு அடுத்த நாள் ஹைதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கும் உள்ள தொடர்பு பற்றியதாகும். ... இரண்டுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இந்த மாதிரி குண்டுவெடிப்புகள் நம் காஷ்மீரப் பிரச்சனைகளோடு தொடர்பு கொண்டவைகளாமே; வெளிநாட்டு பயங்கரவாதிகளின் சதித் திட்டமாமே .. அப்படித்தான் செய்தித்தாள்களில் செய்திகள் வருகின்றன. வெளிநாட்டு சதிகாரர்கள் இங்கு வந்து இந்த சதிகளையும், குண்டு வெடிப்புகளையும் செய்ய வேண்டுமா என்ன, 'நமக்கு நாமே' அதைச் செய்து கொள்ள முடியாதா என்ன? நம்மால் நிச்சயமாக முடியும் என்றுதான் அன்றைய தி.நகரில் பார்த்த ஒன்றால் எனக்குத் தோன்றியது.

தி.நகர் உஸ்மான் ரோட்டின் நெரிசல் யாருக்குத்தான் தெரியாது. அந்த நெரிசலான தெருவில் ஒரு பள்ளிவாசல். நாங்கள் போனதும் வெள்ளிக் கிழமை மதியம். தொழுகை நேரம் போலும். மசூதியின் தரைத் தளத்திலும், இரண்டுமாடிகளிலும் மக்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். இடம் பற்றாத காரணத்தால் தெருவில், அகலத்தில் ரோட்டின் பாதிவரையிலும், நீளத்தில் பள்ளிவாசலின் நீளத்தையும் தாண்டி, தரையில் செய்தித் தாள்களை விரித்து தொழுகையில் இருந்தனர். ஒரேமாதிரி அவர்கள் குனிந்து எழுந்து தொழுகை செய்வதைப் பார்த்துக்கொண்டு மக்கள் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களின் சூழல் மறந்த தொழுகை ஆச்சரியத்தைக் கொடுத்த அதே நேரம், எனக்குள் எனக்குப் பிடித்த சொலவடை ஒன்று நினவுக்கு வந்ததைத் தடுக்க முடியவில்லை. அது: 'அடுத்தவனுக்கு உபகாரமாக இல்லாவிட்டாலும், உபத்திரமாக இராதே.'

உள்ளதே இடைஞ்சல் மிகுந்த இந்தப் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து -அது வெள்ளிக் கிழமைகளில் மட்டுமா, எல்லா நாளுமா என்பது தெரியாது - தொழுகை நடத்துவது பொதுமக்களுக்கு இடைஞ்சல் என்பது யாருக்கும் தெரியாதா? தொழுகை செய்து புண்ணியம் தேடும் அந்த நேரத்தில் அடுத்தவருக்கு இடைஞ்சல் தருவதால் தொழுகையின் பயன் குறையாதா என்று தோன்றியது.

ஆனால் இந்த மாதிரி எண்ணமே தவறு என்பதே பலருக்கும் தோன்றும். ஏனெனில், மதம் முதலாவதாகவும், சாதி இரண்டாவது காரணியமாகவும், ஏழ்மை மூன்றாவது காரணமாகவும் நம் மக்களால் சட்டங்களைப் புறந்தள்ள பயன்படுத்தப் படுகின்றன. இப்படி தெருவை அடைத்து தொழுவதோ, நாட்கணக்கில் ரோட்டை அடைத்து கோயில் விழா எடுப்பதையோ, மார்கழி மாதத்தில் யார் தூங்கினால் என்ன, யாருக்கு என்ன இடைஞ்சல் என்றால் என்ன என்ற கவலை ஏதுமின்றி, இந்துக் கோவில்களில் காலை 4 மணிக்கே இறையஞ்சலிப் பாட்டுக்கள் என்ற பெயரில் அலறும் ஒலிபெருக்கிகளையோ, 'பாவிகளைத்' தெருமுனைகளிலெல்லாம் இருந்தோ, இல்லை ஞாயிற்றுக் கிழமை அல்லது ஏதோ ஒரு வார நாளில் அலறும் ஒலிபெருக்கிகளையோ, மசூதிகளிலிருந்து நாளைக்கு ஐந்துமுறை வரும் அழைப்பொலியையோ நாம் நம் சமூகத்தில் குறை சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னாலே தப்பு, அவன் அநியாயக்காரன் என்ற எண்ணம்தான் எல்லோர் மனதிலும் எழும். adjust செய்து போகணும் அப்டின்றது நல்ல தத்துவம்தான். ஆனால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கக் கூடாதே என்ற அடிப்படை எண்ணம் நம் எல்லோர் மனதிலும் ஏன் தப்பித் தவறியும் வருவதில்லை?

சரி .. சொல்ல வந்ததிலிருந்து கொஞ்சம் விலகி விட்டேன். அந்த இடையூறை யாரும் அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை; அதுவே எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது -பரவாயில்லை நம் மக்கள் adjust செய்து கொள்ளுகிறார்களே என்று. ஒரு தெரு ஓரக்கடைக்கு நாங்கள் செல்லும் சமயம் சரியாக தொழுகை முடிந்தது. எல்லோரும் கலையத் தொடங்கினார்கள். நாங்கள் நின்றிருந்த கடைக்குப் பக்கத்தில் ஒரு 'இசைக் கடை' இருந்தது. பாடல் குறுந்தகடுகள் விற்கும் கடை. அதிலிருந்து தொழுகை முடிந்ததும் பாட்டு சத்தம் கேட்டது. வடமொழியில் இறை வணக்கமோ, இல்லை 'மந்திரமோ' ஒரு பாடல் சத்தமாக ஒலிக்கத் தொடங்கியது. முதலில் எதற்கு இந்த தொழுகை முடிந்து மக்கள் புறப்படும்போது சரியாக இந்த மாற்று மதப் பாடல் என்றுதான் தோன்றியது. ஆனாலும், பரவாயில்லையே, தொழுகை முடியும் வரை பொறுத்திருந்து பிறகு இந்த மாதிரி பாடல்களைப் போடுகிறார்களே என்ற் கொஞ்சம் சந்தோஷப் பட்டேன்.

அதற்குள் நாங்கள் நின்றிருந்த கடைக்காரப் பையனும் தொழுகையிலிருந்து திரும்பி வந்தான். வரும்போதே அந்த இசைக்கடையைப் பார்த்து கொஞ்சம் முகம் கோணலாக வந்தது மாதிரி தோன்றியது. நானும் நம்மால் ஆன ஒரு மத நல்லிணக்க முயற்சியாக, அந்தப் பையனிடம், 'தொழுகை முடிவதற்கு வரை பொறுத்திருந்து அதன் பின் பாடல்களைப் போடுகிறார்களே பரவாயில்லை அல்லவா?' என்றேன். பையன், 'அட போங்க சார், தொழுகை நடக்கும்போதும் அவர்கள் எப்போதுமே பாட்டு, அதுவும் அவங்க சாமி பாட்டா போடுவாங்க சார். இதுவரை சொல்லியும் கேட்பதில்லை' என்றான். 'அடப் பாவமே' அப்டின்னுதான் சொல்ல முடிஞ்சுது.

இதில்,
- மதக் காரணங்களுக்காக சட்டம் எப்போதும் எங்கேயும் கண் மூடித் தூங்கப் போய்விடுவதென்பதற்காகக் கவலைப் படுவதா?
- மதத்தின் பெயரால் எந்த மதக்காரர்களும் செய்யும் சட்டமீறல்கள் எல்லாமே புனிதமாக்கப் பட வேண்டுமா?
- ஒருவருக்கொருவர் கொஞ்சம் adjust செய்து கொள்ளக் கூடாதா? அந்தப் பாட்டுக் கடைக்காரர்கள் ஒரு அரைமணி நேரம் பாட்டு போடாமல் இருந்தாலென்ன?

சாதிகளின் பெயரைச் சொல்லி விட்டால் இங்கே பல நியாயங்கள் தூங்கப் போய் விடுகின்றன. அடுத்து, எழ்மையின் பெயரிலும் பல நியாயங்கள் ஓரங்கட்டப் படுகின்றன. குடிசைகள், புறம்போக்கு வளைப்புகள் எல்லாமே ஏழ்மை என்னும் போர்வைக்குள் வைக்கப் பட்டால் நாம் எல்லோருமே 'அய்யோ பாவம்; அரசாங்கத்துக்கு இரக்கமே இல்லை' என்று கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பளிக்கிறோம். பணக்காரர்கள் வளைத்துபோட்டு கல்லூரிகளும், கடைகளும் கட்டியதை இடித்துத் தள்ளும்போது சந்தோஷப் படும் பொதுமக்கள், குடிசைகளை சகட்டு மேனிக்குக் கட்டியபின் அவைகளை அகற்றும்போதுமட்டும் ஏன் எதிர்ப்பு காண்பித்து தங்கள் மனிதாபிமானத்தை அந்த நேரங்களில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்? இரண்டாவது தரப்பினருக்காக வருத்தம் கொள்வது வேறு; அவைகளை நியாயப் படுத்துவது வேறு.

சாதிகளையும், எழ்மையையும் விட வலிமை நம் நாட்டில் மதங்களுக்குக் கொடுக்கப் பட்டு விட்டன. அவைகள் sacred cows! ஒன்றும் செய்து விட முடியாது. கடவுளையே காப்பாற்றுவதை எப்போது நம் மத நம்பிக்கையாளர்கள் கைவிடுவார்கள்? அது எப்போதும் நடக்கப் போவதில்லை. அவரவர் கடவுளர்களை அந்தந்த நம்பிக்கையாளர்கள்தான் காக்கும் பணியைச் செய்கிறார்கள். இதில் எந்த மதக்காரர்களும் 'தாழ்ந்தவர்கள்' அல்ல; ஒருவருக்கொருவரோடு போட்டி போட்டுக்கொண்டு தங்கள் தங்கள் கடவுளர்களைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். "எங்களைக் கும்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; எங்களை நாங்களே 'எப்படியாவது' காப்பாற்றிக் கொள்கிறோம்' என்று அந்தக் கடவுளர்களா இந்த நம்பிக்கையாளர்களிடம் வந்து சொல்லப் போகிறார்கள்? அப்படியே சொன்னாலும்கூட கேட்கும் கூட்டமா இது?

நடப்புகளைப் பார்க்கும்போது நம்மை அழித்துக் கொள்ள வெளிநாட்டு தீவிரவாதிகள் வேண்டுமா என்ன என்றுதான் தோன்றுகிறது.

Thank god! I am an atheist !



*** பூங்காவில் இடம் பெற்ற பதிவு மே,21, 07

Tuesday, December 26, 2006

194. LET'S HIT THE NAIL....***

*


*


Let's hit the nail....
right on its head !


No..no..

Let us hit the nailS
right on their headS



*

'I believe that there will ultimately be a clash between the oppressed and those that do the oppressing. I believe that there will be a clash between those who want freedom, justice and equality for everyone and those who want to continue the systems of exploitation'
-Malcolm X-


*

பார்ப்பனீயமே இன்றுள்ள சாதீயக் கொடுமைகளுக்கு அடிமைத்தளம் அமைத்துக் கொடுத்த சனாதன தர்மத்தை அன்றிலிருந்து இன்றுவரையும் கட்டிக் காத்து, நிலைத்து நிற்க வைத்துள்ளது என்பது ஒரு வரலாற்று உண்மை. கல்வியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முதலிடத்தைத் தங்களுக்கென்றே வைத்துக் கொண்டு அக்கல்வியால் சமூகத்தில் ஓர் உயர்ந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள் என்பதும் ஒரு மறுக்க முடியா உண்மை.

சுதந்திரத்திற்குப் பின் ஏற்பட்ட சமூக மாற்றங்களினாலும், ஓரளவு சமூகத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வுகளாலும் தங்கள் வெளிப்படையான (overt) அடக்கு முறைகளை விடுத்து, புதிய வியூகம் வகுத்து தங்கள் சமூக உயர் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் எடுத்த புது முயற்சிகள் அவர்களைப் பொறுத்தவரையில் சரியானதே. அரசாங்க வேலைகள் என்பதிலிருந்து ஆசிரியர், வழக்கறிஞர்கள் என்று பெருவாரியாக இருந்த இந்த சமூகத்தினரின் அடுத்த குறி மருத்துவர்கள் என்று ஆகி, பின் ஆடிட்டிங், வங்கி வேலைகள் என்று மாறி, பெரும் வியாபரங்களில் தொடர்ந்து, ஆடல் பாடல் என்றிருந்து, இன்று மென் பொருளாளர்களாகவும் நிரந்து நிறைந்து இருப்பது அவர்களது flexibility - கால மாற்றங்களுக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி எப்போதும் தங்கள் முன்னிலையை தக்க வைத்துக் கொள்ளும் திறமைக்குச் சான்றுகளாகும். அவர்களைப் பொறுத்தவரை இதைத் தவறென்று கூற இயலாதுதான். ஏற்கெனவே கிடைத்த கல்வியறிவால் இந்த தகவமைப்பை (adaptability) பெற்று தங்கள் சமூகத் தரத்தைக் காப்பாற்றிக் கொண்டுள்ளதைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

ஆனால், அன்று அப்படி இருந்தவர்கள் இன்றும் AIMS- களில் IIT- களில் மற்றவர் வந்து விடக்கூடாதென்பதில் மிகத்தீவிர மனப்பான்மையோடும், UPSC தேர்வுகளில் தங்கள் சாதிக்கு வழக்கமாகக் கிடைத்து வரும் விழுக்காடு விழுந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் காட்டும் அதி அக்கறையும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். மீடியாக்களின் ஆளுமையை முழுவதுமாகக் கைக்குள் வைத்துக் கொண்டு சமூக அளவு கோல்களையும், மொத்த சமூகத்திற்கான கருத்துப் படிமானங்களையும் வகுக்கும் அவர்களது திறமை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

NAIL: 1

இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியதே இப்போதைய கால கட்டத்தில் மிக மிக அவசியமாகிறது. ஆனால் இது தெருவில் நடக்கும் சண்டையல்ல. இதனை எதிர்கொள்ள வேண்டிய இடமும், முறையும் முழுமையாக வேறு. பாராளுமன்றங்களிலும், நீதிமன்றங்களிலும், இன்னும் வேகமாக வெகுசன ஊடகங்களிலும் செய்ய வேண்டியவை நம்முன் மலையென நிற்கின்றன.

ஆனால் இதை விட்டு விட்டு இன்று நடக்கும் சாதீய பூசல்கள் எல்லாவற்றிற்கும் காரணம் என்று அச்சாதியினரைக் கை காண்பிப்பதும், அதற்காக அவர்களைச் சாடுவதும் எந்த அளவு சரியாக இருக்கும்? தலித்துகளுக்குக் கிடைக்க வேண்டியவைகள் இன்னும் அவர்களைப் போய் சேருவதில்லை. அரசு தரும் உதவிகளைப் பற்றிய அறிவும், புரிதலும் இல்லாத தலித் மக்களையே நாம் காண்கிறோம். அதோடு அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளோ சொல்லி மாளாதவை.

சமீபத்தில் மகாராட்டியத்தில் கலியாஞ்சியில் நடந்த கொலைவெறியாட்டங்கள், பீகாரில் செத்த பசுவின் தோலையுரித்ததற்காகக் கொல்லப்பட்ட நான்கு தலித் இளைஞர்கள், நம்ம ஊரில் நடந்த திண்ணியம், வெண்மணி வெறியாட்டங்கள், அவ்வளவு ஏன் 10 ஆண்டுகளாக தலித்கள் என்பதாலேயே பஞ்சாயத்துத் தலைவர்களாக அவர்களை வரவிடாதிருக்க வைத்த அரசியல் விளையாட்டுக்கள் - இவை
எல்லாவற்றிற்குமா பார்ப்பனீயத்தையும், அந்த சாதிக்காரர்களையும் காரணம் காட்டிக் கொண்டிருக்கப்
போகிறோம். That will be absolutely like whipping the wrong horse.
அவர்கள் ஆதி காரண கர்த்தாக்கள் என்றே வைத்துக் கொண்டாலும் இன்னும் எத்தனைக் காலத்திற்கு அந்த வரலாற்றுக் காரணத்தை மட்டும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? இதனால் ஏற்படுவது இன்னொரு மிகப்பெரிய தவறான பின் விளைவு: பார்ப்பனீயத்தைத் திட்டிக் கொண்டே, இன்று அதைவிடவும் கீழ்த்தரமாகவும், கொடூரமாகவும் தலித்துகளை சிறுமைப்படுத்துவதும், கொடுமைப் படுத்துவதும் மற்ற 'நடு' சாதியினர் என்பதே மறைந்து விடுகிறது; மறைக்கப்பட்டு விடுகிறது. முன்பே ஒரு பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளேன்.

கல்லெறியும், கண்டனமும் வேறு சாதியினர் மேல்தான் விழும் என்பதாலோ என்னவோ, இந்த நடு சாதியினர் தலித்துகளை இன்றும் மிகக் கடுமையாக நடத்தி வருவதே கண்கூடு. செய்வதைச் செய்து விட்டு, கூட்டத்தோடு கூட்டமாக உயர்த்திக் கொண்டவர்களைத் தாக்கி அவர்களும் எல்லோருடன் சேர்ந்து கோஷங்கள் போடுவதாகத்தான் தெரிகிறது! அதோடு நான் எனது அந்த முந்தியப் பதிவில் சொன்னது போல, எப்போதுமே ஓட்டப்பந்தயத்தில் போட்டியின் கடுமை அடுத்தடுத்து ஓடுபவர்களுக்கு நடுவில்தான். தன்னைவிட தாழ்ந்தேயிருந்த 'இவர்கள்' தங்களைத் தாண்டிவிடுவார்களோ, தாண்டுகிறார்களோ, தாண்டிவிட்டார்களோ என்ற அச்சம் காரணமாகவே இந்தப் போராட்டம். Hierarchy-ல் அடுத்தடுத்த நிலையில் உள்ளோருக்குள் ஏற்படும் பொறாமையின் விளைவே இது. இந்த மனப்பான்மைதான் இந்த 'நடு' சாதியினரை தலித்துகளைப் போட்டி மனப்பான்மையோடும், அதனால் விளைந்த பொறாமைக் கண்ணோட்டத்தோடும் பார்க்க வைக்கிறது. இதன் விளைவுகளாகவே தலித்துகளின் மேல் நடக்கும் வன்முறைகளை நான் காண்கிறேன்.

உயர்த்திக் கொண்டவர்கள் 'தங்கள் வேலையைப்' பார்த்துக் கொண்டு போய்க் கொண்டிருக்க,
மற்ற சாதிக்காரர்கள் தங்களுக்குள் பொறாமை கொண்டு, பொருது கொண்டு ஒவ்வொருவரும் தங்கள்
தங்கள் சமூக நிலைக்குக் கீழேயுள்ளவர்களை நோக்கி தங்கள் வன்மத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பதும்தான் இன்றைய நிலை.

இந்த நிலையில் இந்தக் கீழ்த்தரச் செயல்களுக்கு மூவாயிர, நான்காயிர ஆண்டு வரலாற்றைச் சொல்லி அந்த உயர்த்திக் கொண்டவர்களையே சாடிக்கொண்டிருப்பதை விடவும், இன்றைய தேவை யார் ஒரு கொடுமையைத் தலித்துகளுக்கு எதிராகச் செய்கிறார்களோ அவர்களைப் "பெயரிட்டு", அவர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும். நமது மீடியாக்களிலும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியே தெரியாதபடி 'பாதுகாத்து' விடுகிறார்கள். நம் சமூகத்தின் உண்மை முகங்கள் நமக்கே தெரியாமல் போய்விடுகின்றன. மீடியாக்களில் தலித்துகளின் மீது "caste hindus" / "ஜாதி இந்துக்களின்" வெறியாட்டம் என்றுதான் வரும். (அப்படியானால், தலித்துகள் என்ன சாதியில்லா இந்துக்களா? அல்லது அவர்கள் இந்துக்களே இல்லையா? இரண்டாவதுதான் சரியென்பது என் எண்ணம்.) யார் இந்த "caste hindus" / "ஜாதி இந்துக்கள்" என்று யாருக்கும் தெரியாமலே போய்விடுகிறது. இது போன்ற தவறு செய்தவர்களே இன்னொரு
இடத்தில் மனித உரிமை, தலித்துகளின் தளையறுப்பு, சாதி வெறிக்கு எதிர்ப்பு - என்று பல வெத்துக் கோஷங்களைப் போட்டுக்கொண்டு உத்தமர்களாக வேடமிட அனுமதிக்கக் கூடாது. குற்றம் செய்தவர்களின் சாதிய முகத்திரைகள் கிழிக்கப்பட்டு அவர்களின் நிஜ முகங்களை எல்லோருக்கும் காட்ட வேண்டும்.

NAIL: 2

'குற்றமே செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்' என்ற கதை போலல்லாமல் இனியாவது குற்றம் செய்தவர்களை வெளியே சமூகத்திற்குத் தெரியும்படி கொண்டுவர வேண்டுவது அவசியம். குற்றம் செய்தவர்களைச் சமூகத்தின் முன் காண்பிப்பதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் குற்றம் புரியும் சாதிக்காரர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர மாட்டார்களா? அந்தச் சாதி அமைப்பிலே உள்ள சிலரேனும் மனசாட்சியின் உறுத்தலால் தங்கள் மற்ற சாதிக்காரர்கள் வரம்பு மீறுவதை கண்டித்து அவர்களை மாற்ற முயலமாட்டார்களா? பல ஆண்டுகளாக பாப்பாபட்டி இன்னும் மற்ற இடங்களில் பஞ்சாயத்துத் தேர்தலே நடக்க விடாமல் செய்து வந்தும் அந்த கிராமங்களில் 'பெரும்பான்மை சாதி'யினரின் எதிர்ப்பு என்றே எழுதி வந்தனர். இப்போதுதான் ஓரிரு ஆண்டுகளாக கள்ளர் இன மக்களே இதற்குக் காரணம் என்பது வெளிப்படையாகப் பேசவும், எழுதப்படவும் செய்யப்பட்டது.இப்போது நடந்த மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணியாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்றே தோன்றுகிறது.

இப்படி சாதியைக் குறிப்பிட்டுப் பேசுவதால் ஒரு சில விருப்பமில்லா பின் விளைவுகளும் ஏற்படலாம். ஆயினும் இதைச் செய்தே ஆக வேண்டும்; அதுவே குற்றமிழைப்பவர்களை ஓரளவேனும் கட்டுக்குள் கொண்டு வரும்.

சாதிகளை நம் சமூகத்திலிருந்து ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நம் சமுதாயத்தின் நீண்டு, நிலைபெற்ற களங்கமாக இன்னும் எத்தனை எத்தனை காலம் இருக்கப் போகிறதோ..? ஆகவே, சாதீய வேறு பாடுகளைக் களைய நினைப்பவர்கள் செய்ய வேண்டியவைகளில் முன்னால் நிற்பது இரு வேறு பட்ட நிலைக் களன்கள். ஒன்றில், ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டியவைகளை யாரும் நிறுத்தவோ, தடுக்கவோ விடாதபடி கண்காணிக்க வேண்டும்; இன்னொன்று, அவர்களைக் கீழ்படுத்திச் சிறுமைபடுத்தும், கொடுமை படுத்தும் மற்ற சாதியினரிடமிருந்தும் காக்க வேண்டும். இருமுனைப் போராட்டம் இது. இதில் இரண்டு பட்ட பார்வை தேவை. ஒன்றின் மீது மட்டும் "கண் வைத்து" மற்றொன்றை கண்டு கொள்ளாமல் செல்வதும் தவறாகப் போய்விடும். முதலாவதற்கு வார்த்தைகளும் வம்புகளும் தேவையில்லை; 'சத்தமில்லாமல்' நடந்தேறும் காரியங்களைக் கவனித்து எதிர்வினைகளை முறையாக ஆற்ற வேண்டிய தேவை அதிகம். இரண்டாமாவதில்தான் எழுத்துக்களுக்குப் பயன் இருக்கும்.

NAIL: 3

இதையெல்லாம் விடவும் தலித்துகள் தங்களுக்குள் உயர்வு தாழ்வு சொல்லி ஒற்றுமையின்றி இருக்கும் வரை அவர்களின் முயற்சிகள் எந்தப் பயனுமில்லாமல்தான் இருக்கும். அவர்கள் முதலில் தங்கள் 'வீட்டைச்' சீர்செய்து கொண்டு ஒரே முனைப்போடு தங்கள் உயர்வுக்காகப் போராடினாலே அதில் அர்த்தமும் இருக்கும்; பலனும் இருக்கும். அவர்களுக்காக மற்றவர்கள் போராடுவது என்ற நிலை மாறி, தாங்கள் எழ வேண்டும் என்ற தீவிரம் அவர்கள் மனத்தில் எழவேண்டும். அவர்களை ஒன்றுபட்டு எழ வைப்பதற்கு அவர்கள் மனத்தில் அந்த அக்கினிக் குஞ்சு எப்போது விழுமோ ...?


*
டிசம்பர் 26, 2006-ல் பதிவு செய்து. இன்று (08.01.2007 நேரம்: இரவு 9.40) 86 பின்னூட்டங்களுக்குப் பிறகு இப்பதிவைப் பொருத்தவரை என் ஏமாற்றத்தை ஒரு பின் குறிப்பாக சேர்க்கிறேன்.

இப்பதிவில் என் நோக்கம் நாமெல்லோருமே ஏதோ ஒரு வகையில் சாதிப்பிரச்சனைகளுக்குக் காரணமாயுள்ளோம். அதில் தீர்வு காண முதலில் நாம் செய்த, செய்யும் தவறுகளைக் கண்டு பிடித்து அவைகளை நிறுத்தும்வரை, திருத்தும் வரை விடிவில்லை என்பதால் சாதிய மூன்று படிநிலையைச் சார்ந்தவர்கள் முன்னால் உள்ளவைகளாக நான் நினைத்தவைகளை இங்கு பதிந்தேன். அதிலும் இரண்டாம் நிலை பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் தரப்பட
வேண்டும் என் நினைத்தேன்.

ஆனால், முதல் பிரிவினரைப் பற்றிய என் இரு பகுதிகளில் வரலாற்று உண்மைகள் என நான் நினைக்கும் முதல் பகுதி மட்டுமே விவாதப் பொருளாகப் பார்க்கப்பட்டு அதனையொட்டிய பின்னூட்டங்களே நிறைய வந்துள்ளன. ஆச்சரியமாயிருக்கிறது.

ஏறத்தாழ இரண்டாம் மூன்றாம் ஆணிப் பகுதிகள் பற்றி பேச ஆளே காணோம். இதுவும் ஆச்சரியமும், வருத்தமுமாயிருக்கிறது.

விடியலுக்கு இன்னும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டும் என்றுதான் தெரிகிறது.


*

***இப்பதிவு 01.01.2007 பூங்கா இதழில் இடம் பெற்றுள்ளது. (7)

*


*

Monday, December 18, 2006

192. FOR THE EYES OF SENIOR CITIZENS ONLY***

*

*
ஒரு சீரியஸான கேள்வியைப் பற்றித்தான் இந்தப் பதிவு.

தெக்கிக்காட்டான் 'புதைக்கணுமா? எரிக்கணுமா?' அப்டின்னு கேட்டு ஒரு பதிவு போட்டார். எரிக்கணும் அப்டிங்கிறதுக்கு ஓட்டுப் போட்டாச்சு. அது எல்லாம் முடிஞ்ச பிறகு நடக்கிறதுக்கு உள்ள விஷயம். இப்போ அதுக்கு முந்தி நடக்கிற விஷயம் பத்தினது.

கொஞ்ச நாளைக்கு முன்பு என் வயதொத்த ஒருவர், இன்னும் இரு இளைஞர்களோடு எனக்கு ஒரு விவாதம். அதப் பத்தி உங்க கிட்டயும் சொல்லி, உங்க கருத்தையும் தெரிந்து கொள்ளலாமேன்னு ஒரு நினப்புல இந்தப் பதிவு.

வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கலாமா கூடாதா என்பதுதான் விவாதப் பொருள். ஒரு இளைஞர் மட்டும் என்னோடு கொஞ்சம் உடன்பட்டார். ஆக 50:50 கூட இல்லை; ஒரு 75:25 -ன்னு வச்சுக்குவோம்.


*


* உங்களைப் பெத்து, சீராட்டி, வளர்த்து, ஆளாக்கின பெற்றோரை கடைசிக் காலத்தில் கூடவே வைத்திருந்து காப்பாத்துறத விடவும் பிள்ளைகளுக்கு வேறு என்ன பெரிய கடமை இருக்கு?

* பெத்தவங்களை இல்லங்களுக்கு அனுப்புவது செய்நன்றி கொல்றது இல்லியா?

* அப்படி அனுப்பிச்சா அந்த வயசான காலத்தில அவங்க மனசு என்ன பாடு படும்?

* இதே மாதிரி நீங்க பொறந்ததும் உங்கள அனாதை விடுதியில் சேர்த்திருந்தா நீங்க என்ன ஆயிருப்பீங்க?

* பெத்த குழந்தைகளை நல்லா வளர்க்கிறது பெத்தவங்களோட கடமைன்னா, பெத்தவங்களை கடைசிக் காலத்தில் மனங்கோணாம நல்லா வச்சுக்கவேண்டியது பிள்ளைகள் கடமையில்லையா?

-- இப்படியெல்லாம் ஒரு கட்சி.


*


இன்னொரு கட்சியில் --

* பெத்தவங்க பிள்ளைகளை உருவாக்கணும் அப்டிங்கிறதையும், கடைசிக் காலத்தில் பெத்தவங்களை பிள்ளைகள் தங்களோடு வைத்துப் பராமரிக்கணும் அப்டிங்கிறதும் ஒன்றல்ல. வெறு செண்டிமென்ட் வச்சுக்கிட்டு இதைப் பேசக்கூடாது.

* பிள்ளைகளை வளர்க்கிறது, அதுவும் அவங்க சின்ன வயசுல அவங்கள சுமக்கிறதில் பெற்றோருக்கு வலியிருப்பதில்லை; சந்தோஷம்தான். படுத்துக் கொண்டு பிள்ளையை தன் நெஞ்சின்மேல் வைத்துக் கொண்டிருக்கும்போது பிள்ளை அசிங்கம் செய்தாலும் எந்தப் பெற்றோரும் முகம் சுளிப்பதுண்டா என்ன? அதை நினைவில் வைத்து பிள்ளை வளர்ந்த பிறகு அதை சந்தோஷமாய் பிள்ளையிடம் பகிர்ந்து கொள்ளாத பெற்றோர் யார்? ஆனால் வயதான தாயோ தகப்பனோ படுக்கையே எல்லாமுமாய் ஆகும்போது அதை சாதாரணமாய் - சந்தோஷமாக இல்லாவிட்டாலும் - எடுத்துக் கொள்ள முடியுமா? எடுத்துக் கொண்டாலும் எத்தனை நாளைக்கு அந்தப் பணியை முகம் சுளிக்காமல் செய்ய முடியும்?

* பிள்ளைகளைக் கூட விடுங்கள்; பேரப் பிள்ளைகளை நல்லாயிருக்கும்போது கொஞ்சி விளையாடிய தாத்தா, பாட்டி நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையானால் எந்த பேரப்பிள்ளை இப்போதும் தாத்தா பாட்டியைக் கொஞ்சும்?

* அதைவிடவும் அவர்கள் காலத்துக்குப் பிறகு தாத்தா பாட்டி நினைவு வந்தாலே அந்தக் கஷ்டமான காலங்கள் அதற்கு முந்திய நல்ல இனிய நினைவுகளைக் கூட அழித்து விடுமே. தாத்தா பாட்டி என்றாலே பின்னாளில் அந்தக் கஷ்டப் படுத்திய நாட்கள்தானே பேரப்பிள்ளைகளின் நினைவில் வரும்.அது தேவையா? அதைவிடவும் இனிய நினைவுகளை மட்டுமே பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மனதில் தங்க வைக்கவேண்டியது பெரியவர்களின் கடமையல்லவா?

* வயதான காலத்தில் எதற்காக மற்றவர்களுக்குப் பாரமாக இருக்க வேண்டும்? காசு கொஞ்சம் கொடுத்து இல்லங்களில் இருந்தால் நாம் பிள்ளைகளுக்குப் பாரமாக இல்லை என்ற நினைவே சந்தோஷம் கொடுக்காதா?

* பிள்ளைகள் சிறுசுகளாக இருக்கும்போது அவர்களுக்காகப் பெற்றோர்கள் பல 'தியாகங்கள்' செய்திருக்கலாம். அதற்காக இன்று பிள்ளைகளும் அதேபோல் தியாகங்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் வாழ்க்கையும், பாசமும் வெறும் வியாபாரமாகி விடாதா? நேற்று உனக்குக் கொடுத்தேன்; இன்று நீ எனக்குக் கொடு என்பதா வாழ்க்கை. நேற்று உன்னைத் தாங்கினேன்; இன்றும் நான் உனக்குப் பாரமாக இருக்க மாட்டேன் என்பது தானே நல்ல உறவாக, பாசமாக இருக்க முடியும்?

* இல்லத்தில் இருந்து கொண்டு பிள்ளைகளோடு பாசமாக இருக்க முடியாதா, என்ன? படிக்கிற காலத்தில் பிள்ளைகளின் நலன் கருதி பள்ளி, கல்லூரி விடுதிகளில் பிள்ளைகளை விடுவதைப் போலத்தானே இதுவும்.

* ஒரு காலத்தில் நம் சமூகத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை இருந்தது. அப்போது வயதான பெற்றோரை வீட்டோடு வைத்திருப்பது எளிதாயுமிருந்திருக்கும். அப்போது அதுதான் சரியானதாயிருந்திருக்கும். ஆனால் இன்று nuclear family என்றான பிறகு, வாழக்கை ஒரு விரைந்த ஒன்றான ஆன பிறகு என்னையும் உன் தோளில் தூக்கி கொண்டே போ என்று பிள்ளைகளைப் பார்த்து பெற்றோர் சொல்வது எந்த அளவு சரி? மாறி வரும் காலத்திற்கு ஏற்றாற்போல் மக்கள் மனநிலையும் மாற வேண்டாமா?

* உண்மையிலேயே பிள்ளைகள் மேல் பாசம் உள்ள பெற்றோர் முதியோர் இல்லங்களில் தங்குவதற்கு தாங்களாகவே பிள்ளைகளக் கட்டாயப்படுத்தியாவது தயாராக வேண்டாமா?


*

இதில் நான் இரண்டாவது கட்சி..
இப்போ சொல்லுங்கள்.. நீங்கள் எந்த கட்சி?


*
***இப்பதிவு 25 Dec. 06 பூங்காவில் இடம் பெற்றுள்ளது. (6)
*

Wednesday, December 06, 2006

191. திரு. மாசிலாமணிக்கு சமர்ப்பணம்***

*


*


இந்தப் பதிவை எழுத ஆரம்பித்த போது, இதைப் பதிவேற்றியதும் அதனை திரு.மாசிலாமணி அவர்களின் பார்வைக்குக் கொண்டு வரவேண்டுமென நினைத்திருந்தேன். நிச்சயமாக ஏதாவது அதற்குப் பயனிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பதிவேற்றும் முன்பே அவரது மரணச் செய்தி வந்து விட்டது. ஆராதனா,தெக்கிக்காட்டான் இவர்களது பதிவுகளின் மூலம் இன்னும் கொஞ்சம் தெரிந்து கொண்டது அவர்மேல் நான் வைத்த மரியாதையைக் கூட்டுவதாக இருந்தது. அவரது ஆங்கிலப் பதிவில் ஒரிரு முறை பின்னூட்டம் மூலம் சந்தித்தது மட்டுமே அவரோடு என் தொடர்பு. இருப்பினும்,"லஞ்சம் தவிர்; நெஞ்சு நிமிர்" என்ற அவரது தமிழ்ப் பதிப்பின் தலைப்பே அவர்பால் எனக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது.

அவரது அகால மரணத்தால் கவலையுற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்தப் பதிவை அன்னாரின் நினைவுக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* * * * * * *


*

*

சமீபத்தில் காஞ்சி அருகே ஆட்டோ ஒன்று ரயிலில் மோதி 15 பேர் அந்த இடத்திலேயே உயிரழந்தார்கள். அந்த சமயத்தில் எழுத நினைத்து விட்டுப் போனது இது. மிகவும் சோகமான ஒரு விஷயம். குடும்பமாகப் பலர் இறந்தது மிக்க வேதனையாக இருந்தது. எப்படி நாமெல்லோருமே ஒட்டு மொத்தமாக சட்ட திட்டங்களை மீறுவதையே ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளோம் என்பதே அப்போது என் நினைவுக்கு வந்தது. ரயில் வரும்போதும் தாண்டிப் போனது அந்த ஆட்டோ ட்ரைவரின் தவறு என்று மேலோட்டமாகச் சொல்லுவதை விடவும் இந்தப் புத்தி நம் எல்லோரிலும் நீக்கமற நிறைந்திருப்பதையே நினைவுபடுத்துகிறது. respecting the law of the land என்ற ஒரு மனப்போங்கு நம்மில் வெகு சிலருக்கே உள்ளது. போக்குவரத்து அடையாள விளக்குகளுக்குக் காத்திருக்கும்போது இதை நன்றாகவே பார்க்க முடியும். பச்சை விளக்கு வரும் வரை நீங்கள் நின்றால் அங்கு நிற்கும் போலீஸ்காரர் முதல் அனைவருமே உங்களை ஏதோ ஒரு அபூர்வ பிராணியைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். ஆக, அந்த ஆட்டோ ட்ரைவர் விதியை மீறி தன் விதியையும், தன்னோடு இருந்த மிகப் பலரின் விதியையும் முடித்துவிட்டார். இறந்தவர்கள் பாவம்தான்; அவர்களின் உறவினர்களும் பாவமே.

ஆனால் மாநில அரசு ஐம்பதாயிரமும், ரயில்வே பத்தாயிரமும் இறந்தவர்களின் உறவினர்களுக்குக் கொடுப்பது எதற்காக? ரயில்வே கொடுத்ததைக் கூட குறை சொல்லவில்லை; மாநில அரசு எதற்காக இந்த வள்ளல் தன்மையைக் காண்பித்துள்ளது?

அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு விபத்திற்கும் - என்ன காரணத்தால் ஏற்பட்ட விபத்தானாலும் அரசு இதுபோல் நஷ்ட ஈடு தருமா? தரணுமா? மழை பெய்யும்போது காருக்குள்ளேயிருந்து இறந்து போன அந்த நான்கு மென்பொருள் துறை ஆட்களுக்கும் கொடுக்கலாமே.

இதுபோன்ற விபத்துக்கள் நடக்கும்போது அரசு பணம் கொடுப்பதற்குப் பதில் அந்த நேரத்திலாவது நாம் எல்லோரும் எப்படி சிறு சிறு விதிகளை, அதுவும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பது போன்ற செய்திகளை மக்களினூடே பரப்புவது நல்ல சில விளைவுகளை ஏற்படுத்தலாம். அதை விட்டு விட்டு இந்த தாராள மனப்பான்மையைக் காண்பிப்பது தேவையில்லா விஷயமாயிருக்கிறது. நிச்சயமாக அத்தகைய உதவிகள் கிடைக்க வேண்டியவர்களுக்குச் சரியாகக் கூட கிடைக்காமல் போகலாம் - நெல்லுக்குப் போவதற்கு முன் எத்தனை புற்களோ..?!

பொதுவாக இந்த respecting the law of the land என்பது நம்மிடையே இல்லாது இருப்பது குறித்து சமுதாயத்தில் எந்த நிலையினருக்கும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையென்பது என் மனக் குறை. என் சின்ன வயதிலும் நாங்கள் no entry பாதைகளில் சைக்கிளை வேக வேகமாக உருட்டிச் செல்வதுண்டு. அப்போது இரு வகை எண்ணங்கள் மனத்திலிருக்கும்: ஒன்று, தப்பு செய்கிறோமே என்ற குற்ற மனப்பான்மை; இரண்டு, மாட்டிக்கொள்ளக் கூடாதே யென்ற பயம். இப்போது நம் யாவருக்கும் முதல் எண்ணம் நிச்சயமாக இல்லை; இரண்டாவதற்கு ஏதாவது ஒரு வழி வச்சிருப்போம்... மாட்டிக்கிட்டா பாத்துக்குவோம் என்ற எண்ணம்.. எப்படி, யாரை பாத்துக்குவோம் என்று ஆளுக்கொரு வழி.

எனக்கு ஒரு நினைப்பு: இந்த விதிகளை மதிக்கும் புத்தியை வர வைக்க ஏற்ற இடம் ரோடுகள்தான் என்று நினைக்கிறேன். stop என்று ஒரு கோடு ரோடுகளில் போட்டிருக்குமே அங்கு யாராவது சரியாக நிற்கிறோமா? அப்படி நிற்பது ஏதோ பயந்த சுபாவம் என்பது போலவும், நான் ஒரு தைரியமான ஆள் என்றோ அல்லது ஒரு புரட்சிக்காரன் போல் காட்டிக்கொள்வது போலவுமோ எல்லோரும் அந்த கோட்டிற்கு ஓரடி அளவாவது தாண்டி நிற்பதுதான் வழமை. அதுக்கு அடுத்து, பச்சை விளக்கு விழ 5-7 வினாடிகள் இருக்கும்போதே புறப்பட்டு விடவேண்டும் என்பதும் ஒரு இன்னொரு விதி. இதில் எந்த வித்தியாசமும் இருக்காது; எல்லா வயசுக்காரர்களும், படித்தவர்கள் படிக்காதவர்கள் என்பது போன்ற எந்த வேற்றுமையோ இன்றி பாய்ந்து விடுகிறோம். இதில் அங்கு நிற்கும் போலீஸ்காரர்களின் பங்களிப்பு வேறு. நாம் நின்று கொண்டிருந்தாலும் அவர்களே கிளம்புங்க என்று ஒட்டு மொத்தமாகச் சொல்கிறார்கள். இந்த இரண்டு விஷயமுமே நம் மனத்தில் ஒரு தவறான தத்துவத்தை நம்மையும் அறியாமலேயே ஊட்டி விடுமின்றது. விதிகளை மீறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை; விதிகள் மீறுவதற்கே உள்ளன என்பன போன்ற கருத்துக்கள் மனதில் நிலை பெறத்தான் இந்த வழக்கம் வழி வகைக்கும். அதே போல காத்திருக்கும் இடங்களில் வரிசையில் நிற்பது என்பது ஒரு கேவலமான விஷயமாகவே பார்க்கப் படுகிறது. இது போன்று சின்னச் சின்ன விஷயங்களாக நினைப்பவைகள் மக்கள் மனத்தில் ஒரு தவறான மனப்போங்கை ஏற்படுத்தாதா? சிறு வயதிலேயே stop என்றால் stop என்பதும், பச்சை விளக்கு வந்த பிறகே புறப்படவேண்டுமென்பதும் ஒருவரின் மனத்தில் பதிந்து விட்டால் அதே நினைப்பு பெரிய விதிகளைப் பொறுத்தவரையும் வந்துவிடாதா?

எனவேதான் இந்த "படிப்பு" ரோட்டில் ஆரம்பிக்க வேண்டுமென்றேன். இதைப் பள்ளிகளில் சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதென்னவோ சரிதான். ஆனால் அந்த சிறு பிள்ளை ரோட்டிற்கு வந்து நம்மைப் பார்த்த பிறகு 'உண்மையை'ப் புரிந்து கொள்ளாதா? அதை விடவும் சரியான பள்ளி ரோடுகள்தான். அதை எப்படி செய்வது என்றெண்ணிப் பார்த்தேன். தண்டனை என்பது போல் நல்ல ஆசான் யார்? ஸ்டாப் கோட்டைத் தாண்டுகிறாயா?; பச்சை விளக்கைத் தாண்டுகிறாயா?; வண்டி ஓட்டும்போதே செல் பேசுகிறாயா? - spot fine என்று ஒன்று இருந்தால், அதையும் ஒழுங்காகச் செய்தால் நமக்கு ஒரு பயம் இருக்காதா? ஆனால் நம்மூரில் இதில் ஒரு பெரிய பிரச்ச்னை. பச்சை விளக்கைத் தாண்டினால் 100 ரூபாய் அபராதம் என்று வைத்துக் கொள்ளுவோம். மாட்டிக் கொண்டால் நாமெல்லாம் எப்படி ஆட்கள் .. அங்கேயே பேரம் பேச ஆரம்பித்து விட மாட்டோமா? நூறுக்குப் பதில் 25 வச்சுக்கங்கன்னு நாம் ஆசை காட்டினா, பாவம் காவல்துறை ஆட்கள் என்ன ஆவார்கள் .. ஆனானப்பட்ட விசுவாமித்திரருக்கே ஒரு வீக பாய்ண்ட் உண்டே.. ஆக பிள்ளையார் பிடிக்க குரங்காகி விடுமே என்று தோன்றியது. ஆனாலும், உண்மையில் செய்ய வேண்டுமென நினைத்தால் இதைச் சாதிக்க முடியும். 3 - 5 பேர் அடங்கிய குழுக்கள் நகரின் அங்கங்கே - எங்கே எப்போது என்று யாருக்கும் தெரியக்கூடாது; எங்கு வேண்டுமானாலும் இருப்பார்கள் என்ற நிலை வருமாறு இருக்க வேண்டும் - இந்த தண்ட வசூலிப்பைச் செய்ய வேண்டும். லஞ்சம் வராமலிருக்க ஒவ்வொரு குழுவிலும் ஓரிரு காவல்துறை ஆட்களும், ஒரு home guard போன்ற அமைப்புகளிலிருந்து ஒருவரும், கல்லூரிகளிலிருந்து N.S.S., N.C.C. போன்றவைகளிலிருந்து ஒரு மாணவனையும் வைத்து இக்குழுக்கள் அமைக்கப் பட்டால் ஊழல் என்று பேச்சு வராமல் நடத்த முடியும்.

விதி மீறல் தவறு என்று ரோட்டில் 'சொல்லிக் கொடுக்கப் பட்டால்' நாளாவட்டத்தில் நமக்கு இன்னும் கொஞ்சம் நல்ல புத்தி வந்துவிடாதா என்ற ஆதங்கம்தான். அப்படி ஒவ்வொன்றாக கற்றுக் கொடுக்கப்பட்டு நாம் எல்லோரும் நல்ல civic sense-உள்ளவர்களாக மாறிவிட மாட்டோமா? இது கனவோ என்னவோ... ஆனால் நடந்து விட்டால்..நடந்து விட்டால் என்பதையும் விட நடந்தே ஆகணும்..

இதோடு தொடர்புடைய பழைய பதிவொன்று இங்கே...

நடத்திக் காண்பிக்ககூடிய இடத்தில் இருப்போர் யார் கண்களுக்கேனும் இது போய் சேர்ந்துவிடாதா என்ற நம்பிக்கையில்...


.
*** இப்பதிவு இப்பதிவு 11.12.2006 தேதியிட்ட பூங்காவில் இடம் பெற்றது. (5)

Monday, October 16, 2006

180. (கொஞ்சம்) நேரடியாக ஒரு ELECTION REPORT***

நேற்று எங்கள் ஊர் மதுரையில் மாநகராட்சி ஓட்டுப் பதிவு. துணைவியாருக்கு PO1 பொறுப்பு ஒரு பூத்தில். கொஞ்சம் பதட்டத்தோடுதான் எல்லோருமே இருந்தார்கள் - சென்னை பற்றிய சேதி பரவியிருந்ததால். மதியம் உணவுக்கு ஏற்பாடு செய்யப் போகும்போதே பக்கத்து பூத்தில்தால் பிரச்சனை; எங்கள் பூத்தில் பிரச்சனையேதும் இதுவரை இல்லை என்றார்கள். மாலை கூப்பிடச் சென்றால் பூத் கதவுகள் இறுகப் பூட்டப்பட்டு தேர்தல் தளவாடங்களோடு தளவாடங்களாக மக்களும் பூத்துக்குள் பத்திரமாக வைக்கப்பட்ட்டிருந்தார்கள். மாலை ஆறு மணிக்கு மேல் 'ரிலீசா'னார்கள். அதன்பின் அருகாமையிலிலிருந்த மாநகராட்சி அலுவலகத்தில் ஒரு இரண்டரை மணி நேரம், செய்த வேலைக்குரிய பணப் பட்டுவாடாவிற்காகத் தேவுடு காக்க வேண்டியதாப் போச்சு. அவர்களோடு நானும் அந்த அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தேன். அந்த ஏரியாவிலுள்ள 20 பூத்துகளில் தேர்தல் வேலை செய்தவர்கள் யாவரும் குழுமினர்.

பலரிடமும் பகல் நேரத்தில் நடந்தவைகளின் தாக்கம் என்னவோ குறையாமலிருந்தது. ஒவ்வொருவரும் தாங்கள் தப்பிப் பிழைத்தது பற்றியும், தங்கள் பூத்துகளில் நடந்தவை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். என் துணைவியார் இருந்த பூத்தில் - பெண்களுக்கான பூத் என்பதலா என்னவோ - கலாட்டா கொஞ்சம் குறைவாகவே இருந்திருக்கும் போலும். நான்கைந்து பேர் உள்ளே நுழைந்து 'இப்போ ஒரு 25 பேர் வருவாங்க; எந்த கேள்வியுமில்லாமல் ஓட்டுப் போட விடுங்க 'என்ற ஒரு தெளிவான உத்தரவு தேர்தல் ஆபிசருக்கு. அந்தக் கட்டளை நல்லபடியாக நிறைவேற்றணுமே; அதுக்காக மட்டும் அங்கிருந்த நாற்காலி, மேசை எல்லாவற்றையும் கொஞ்சம் போல் உதைத்து, தள்ளி விட்டு, அடையாள மை வைத்திருந்தவரிடமிருந்து மையைக் கீழே தட்டிவிட்டு அவருக்குக் கொஞ்சம் போல அந்த மையால் அபிஷேகம் பண்ணிவிட்டுப் போனார்களாம். இதில் PO4 PO5 இருவரும் பெண்கள். முதல்வர் இவ்வளவு கலாட்டாவிலும் ஓட்டளிக்கக் கொடுக்கப்பட்டிருந்த முத்திரையைப் பாதுகாப்பாக முந்தானைக்குள் எடுத்து வைத்துக் கொள்ள, அடுத்தவரோ இந்தக் களேபர நேரத்திலும் வாக்குப் பெட்டியை அணைத்துப் பாதுகாத்தார்களாம். என் துணைவியாரிடம் 'உனக்கு என்னவாயிற்று' என்று கேட்டேன். 'என்னமோ, என்னைப் பார்த்து என்ன பரிதாபமோ, என் மேசையை தட்டி விடவில்லை; நானும் உட்கார்ந்த இடத்திலே ஆணி அடித்ததுமாதிரி இருந்திட்டேன்; பத்து நிமிஷம்னாலும் வேர்த்து விறு விறுத்துப் போச்சு' என்றார்கள். அதைச் சொல்லும்போதுவரையும் கூட அந்த ஆசுவாசம் நீடித்தது; தணிய இன்னொரு மணி நேரம் ஆச்சு.

ஏறக்குறைய அங்கு குழுமியிருந்தவர்கள் பலரும் ஆசிரியர்களே; அதுவும் இரண்டே இரண்டு பள்ளிகளில் இருந்து வந்தவர்கள். ஆகவே, இப்படி காத்திருந்த போதும் எல்லோரும் ஒருவரை ஒருவர் 'நலம்' விசாரிக்கவும், பகலில் நடந்தது பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பூத்தில் PO மட்டும் - அவர் ஒரு தலைமைஆசிரியர் - ஆண்; மற்றவர்கள் அனைவரும் பெண்கள். அவர் கதைதான் இருப்பதில் பயங்கரமா இருந்தது.ஒரு பெரிய கூட்டம் உள்ளே நுழைய, எல்லா பெண் தேர்தல் ஊழியர்களும் அவருக்குப் பின்னால் பதுங்க, வந்த கூட்டத்தில் ஒருவன் அவர் கழுத்தில் கத்தி ஒன்றை வைத்துக் கொள்ள 50 ஓட்டுகள் போல அந்தக் கூட்டம் போட்டுவிட்டுச் சென்றதாம். இன்னொருவர் பூத்தில் கத்தியெல்லாம் ஒன்றுமில்லையாம்...! ஆனால் உள்ளே நுழைந்து அதே வேகத்தில் பூத்தில் இருந்த இரண்டு குழல் விளக்குகளை உடைக்க, அதன் சத்தமும்,தெறித்த கண்ணாடி தலையில் விழவும்...அதற்கு மேல் கூட்டத்தின் அராஜகம்தானாம்.

இந்த பூத்துகள் இருந்த தொகுதியின் தி.மு.க. ஒரு பெண் உறுப்பினர்; இம்முறை மதுரைக்குப் பெண் மேயர் என்பதால், இந்த வேட்பாளர் வென்றால் அவர்தான் எங்கள் "வணக்கத்துக்குரிய மேயராக" ஆகும் வாய்ப்புள்ளதாலேயே இப்பகுதியில் இந்த அளவு வன்முறை என்றார்கள். அதோடு இந்தக் கட்சி வேட்பாளரை எதிர்த்து தி.மு.க.வின் போட்டி வேட்பாளராக இன்னொருவர் - கட்சி வேட்பாளரை விடவும் கட்சித் தொண்டர்களிடம் நல்ல பெயர் பெற்றவர் - போட்டியிட்டதும் இன்னொரு காரணமாம்.

ஒவ்வொருவரும் அவரவர்கள் 'கதை' சொல்லிக் கொண்டிருக்கும்போதே அருகில் ஒரு post-election commotion நடந்தது. எல்லாம் அந்தப் பெண் வேட்பாளரும் அவரது தொண்டர்கள் செய்யும் கலாட்டா என்று சேதி வந்தது.

இந்த அனுபவ பகிர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு பூத்தில் இருந்தவர்களும் சொன்ன ஒரு சேதி ஒரே மாதிரியாகவே இருந்தது: எல்லா பூத்துகளிலும் இந்தக் கலாட்டாக்கள் நடந்தேறும்போது, போலீஸ்காரர்கள் "பத்திரமாக" வெளியில் சென்று நின்று கொண்டார்களாம்.

சென்றைய ஆட்சியில் அரசு ஊழியர்களை - ஆணென்றும் பெண்ணென்றும் பாராது, சுவர் ஏறிக்குதித்து உயிருக்குப் பயந்து ஓடிய அரசுப் பணியாளர்களைக் கூட - இதே போலீஸ் ஓடஓட விரட்டியக் காட்சிகளைக் கண்டது இன்னும் நன்றாக நினைவிலிருக்கிறது. நம் காவல் துறையினரை வாட்டுவது என்ன? - a sick psychology and lousy philosophy?

முதல் நாள் பயமும்,பதட்டமும் முழுசாக விலகி, அடுத்த நாள் என் துணைவியார் என்னிடம் சொன்னது: 'நல்ல adventureதான், இல்ல? அந்தக் காலத்திலன்னு... பேரப்பிள்ளைகளுக்குக் கதை சொல்லலாம்'. அதோடு இன்னும் அடுத்த தேர்தல் வருவதற்குள் ஓய்வு பெற்றுவிடலாமென - இன்னுமொரு ஆண்டுதானே - சொன்னார்கள். ஆனால் எனக்கு என்னவோ நம்பிக்கையில்லை; நடக்கிற நடப்பில அடுத்த தேர்தல் எப்போ வேண்ணாலும் வரலாமோ என்னவோ?!


*
*** இப்பதிவு 30.10.'06 "பூங்கா"வில் இடம் பெற்றது. (3)

*

Monday, October 09, 2006

179. அப்சலும், அறிவு ஜீவிகளும்...***

நானும் வேண்டாமென்றுதான் நினைத்தேன். ஆயினும் நட்பு நிறைந்த பதிவர்கள் சிலரும் இந்த விஷயம் பற்றி எழுதியதைப் படித்ததும் என் பொறுமை எல்லை மீறியது. நாமும் ஜோதியில் கலந்துவிட வேண்டியதுதான் என்று நினைத்துக் களத்தில் இறங்கி விட்டேன்.

எல்லாம் அப்சல் விஷயம்தான். பதிவர்கள் பலரின் மனித நேயம் இப்போதுதான் இந்த அளவு பீறிட்டு வருவதைப் பார்க்கிறேன். ஒருவனுக்கு மரண தண்டனை என்றதும் எவ்வளவு பச்சாதாபத்துடன் பரிந்து பரிந்து வரிந்து கட்டிக் கொண்டு பதிவர்கள் வரிசை கட்டி வருகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது ....

சரி, இவ்வள்வு பச்சாதாபத்தோடு வருகிறார்களே அவர்கள் எல்லோரும் இதுவரை இந்த விஷயத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இதற்கு முன்பு வங்காளத்தில் கற்பழிப்புக் குற்றத்திற்காக ஒருவனுக்கு மரண தண்டனை கொடுத்ததும் அரற்றிய கூட்டம்தானே இது. அப்போது கொஞ்சம் கீழ் ஸ்தாயியில் பாடிய பாட்டை இப்போது இன்னும் கொஞ்சம் உச்ச ஸ்தாயியில் அரற்றுகிறார்கள். நடுவில் ஏன் பாட்டை நிப்பாட்டியிருந்தார்களோ தெரியவில்லை. நிப்பாட்டாது தொடர்ந்து அந்தப் பாட்டை நடுவிலும் பாடிக்கொண்டிய்ருந்தாலாவது அவர்கள் பாட்டில் ஏதாவது அர்த்தம் இருந்திருக்கும். அதையெல்லாம விட்டு விட்டு அந்தரத்தில் பாட்டை நிறுத்திவிட்டு இப்போது மிக முக்கியமான ஒரு மனித ஜீவனுக்காகப் பரிந்து கொண்டு வருகிறார்கள்.

இப்போது நம் முன் உள்ள விஷயம் என்ன? நம் நாட்டில் இன்னும் தூக்குத்தண்டனை வழக்கில், சட்டப் படி உள்ளது. அது rarest of the rare cases-ஆக இருக்கட்டும். ஒருவன் நம் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் அளவிற்கு நம் பாராளுமன்றக் கூட்டம் நடக்கும் நேரத்தில் திட்டமிட்ட ஒரு தாக்குதலுக்கு தீவிரவாதிகளுக்கு உதவினான் என்று உயர் நீதி மன்றத்தில் நிறுவப்படுகிறது. நீதிபதிகளும் rarest of the rare cases என்ற முறையில் தூக்குத்தண்டனை விதிக்கிறார்கள். அரசியல்வாதிகளே முதல் கல்லை எறிகிறார்கள் - இந்த தண்டனையிலிருந்து அவனை விடுவிக்க வேண்டுமென்று. அடுத்த படையெடுப்பு நம் அறிவுஜீவிகளிடமிருந்து. ஒரு ஜனநாயக நாட்டில், மரண தண்டனையை இன்னும் வைத்திருக்கும் ஒரு நாட்டில் ஒரு முக்கிய தீவிரவாதத்தைச் சேர்ந்த ஒரு குற்றவாளிக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை. மரணதண்டனைக்கு எதிர்ப்பாளரா நீங்கள். கொஞ்சம் பொறுங்கள்; 20-ம் தேதிக்குப் பிறகு உங்கள் 'பாட்டை'த் தொடங்குங்கள். மரணதண்டனை வேண்டாமென முடிவெடுக்க அரசை நிர்ப்பந்தியுங்கள். மரண தண்டனை இருக்க வேண்டும் என்று நினைக்கும் என் போன்றோரும்கூட உங்களை உங்கள் போக்கில் விட்டு விடுகிறோம். ஆனால் இப்போது ஏன் இந்த கூக்குரல். குற்றவாளி எந்த மதம்; எந்த பகுதியைச் சேர்ந்தவன்; ஏன் அவன் இதைச் செய்தான் என்ற கேள்விகள் இப்போது ஏன்? இந்தக் கேடுகெட்ட சமூகநிர்ப்பந்தமே இதற்குக் காரணம் என்பதெல்லாம் இப்போது ஏன்?

இப்போதைக்கு நம் கண்முன்னால் நிற்பது அப்சலும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தண்டனையுமே. நமக்குத் தீவிரவாதியாக இருப்பவன், மற்ற ஒரு சாராருக்குப் பெரிய தியாகியாக இருக்கலாம். ஆனால் நமக்கு அவன் யார் , அவன் நமக்கு என்ன செய்தான் என்பதே இப்போதைய நமது 'ஆராய்ச்சியில்' இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு குற்றவாளியின் பின்புலம், காரண காரியம் என்று பேச ஆரம்பித்தால், இருக்கவே இருக்கிறது - human genomics. ஒவ்வொருவரின் ஜீன்களின் பட்டியல் போட்டு aggression-க்கு உரிய gene இவனுக்கு இருப்பதால்தான் இப்படி செய்தான். பாவம் அவன் என்ன செய்ய முடியும்; அவன் ஜீன் அப்படி; ஆகவே அவனைக்கு எந்த தண்டனையும் விதிக்கக்கூடாது என்றுகூட விவாதிக்கலாம். சமூகமே அவனை இக்குற்றம் செய்யத் தூண்டியது. நாம்தான் அவன் குற்றங்களூக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சொல்லலாம். சீரியல் கொலைகாரனைக்கூட அவன் ஜீன்கள் செய்த வேலையென்று அவனை விட்டு விடலாமா? ஜீன்கள் வேண்டாமென்றால், இருக்கவே இருக்கிறது கீதை: 'கொல்பவனும் நானே; கொல்லப்படுபவனும் நானே' என்பது போல எல்லாம் 'அவன் செயல்' என்று விட்டு விடலாமே.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் பின்னால் நடக்கக்கூடியவைகள் என்று ஒரு பட்டியலும் பல பதிவர்கள் கொடுத்துள்ளார்கள். அவனைக் கொன்றால் அவன் சாவுக்குப் பிறகு அவன் ஒரு தியாகியாகக் கருதப்பட்டு மேலும் பலரும் அவன் வழியில் செல்லக்கூடும் என்றொரு வாதம். உண்மைதான். இது வெட்ட வெட்ட வளரும் ஹைட்ரா தான். பெருமளவில் இதை எதிர் கொள்ள நம் அரசு இதுவரை முயலவில்லை. அடுத்து, ஒரு குற்றவாளியைத் திருத்துவதே தண்டனையின் நோக்கமாக இருக்கவேண்டுமாம்.அடித்துப் பிடித்து விளையாடும் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம். திட்டமிட்டு இது போன்ற வன்செயல்களில் இறங்குவோருக்கு இது ஏற்றதல்ல. அவர்களைக் கொன்றாலும் தீமைதான்; உயிரோடு சிறைக்குள் வைத்திருந்தாலும் தீமைதான். இதில் முதலாவதைச் செய்தால் கொஞ்சம் கூட நன்மை; வசதி. இல்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் இன்னும் பலர் அந்த ஒருவனுக்காக உயிரை இழக்கவேண்டி வரும்.

நீதிபதிகளின் தீர்ப்பில் அவர்கள் எழுதியுள்ள வாசகங்களை வைத்தும் ஒரு விவாதம். பழிவாங்குதலுக்காக தண்டனை இருக்கக்கூடாது; திருத்தும் நோக்கோடு தண்டனை தரப்பட வேண்டுமாம். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் திருந்துகிற ரகமா? இவர்களுக்கு ஆயுள் தண்டனை என்று சொல்லி ஏழெட்டு வருஷம் சிறையில் போட்டாலும், இவர்கள் திருந்தவா போகிறார்கள்? அப்படி வெறும் ஆயுள் தண்டனை கொடுத்தால் இவர்களைத் தலைவர்களாக, தியாகிகளாக கருதாமல் அவர்கள் கூட்டம் இருந்துவிடப் போகிறதா?

விசாரணை ஒழுங்காக நடத்தப்படவில்லை என்றொரு கூற்று. சொல்லுவது யார்? அப்சலுக்கு மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் மட்டுமே இந்த விவாதத்தைக் கொடுக்கிறார்கள். அது இயற்கையே. குற்றவாளி முதலில் ஒப்புதல் வாக்குமூலம் தருவதும், பின் அதை மறுதலிப்பதும் எப்போதும் நடக்கும் ஒன்று. அவன் இக்குற்றத்தில் தொடர்புள்ளவன் என்பதற்கு நான் வாசித்த வரை சான்றுகள் உள்ளன. ஒன்றுக்கு மூன்று கோர்ட்டுகள் அவனைக் குற்றவாளியாகவே முடிவெடுத்துள்ளன.

அப்சலுக்கு மரண தண்டனை கூடாது என்று வாதிக்கும் பதிவர்களிடம் ஒரு ஒற்றுமை காண்கிறேன்: நல்ல விவாதத் திறமை; பெரும் வார்த்தைப் பிரயோகங்கள். அந்தப் பதிவாளர்கள் எல்லோருக்கும் என் வேண்டுகோள்: நிச்சயமாக நான் பொறுமையிழந்து தான் இதை எழுதியுள்ளேன். நிச்சயம் உங்களில் பலரை என் வார்த்தைகள் புண்படுத்தியிருக்கும். அதற்காக மன்னித்துவிடுங்கள். ஆனாலும் ஒரு ஆதங்கம். தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாத ஒரு மனிதனுக்கு தேவையில்லாத வீண் விவாதங்கள் நடத்துவதாகத் தோன்றியதால் ஏற்பட்ட ஒரு ஆதங்கம்.

கடைசியாக, பாலா அவர்களின் பதிவில் வந்துள்ள ஒரு பின்னூட்டம் (நல்லதொரு பின்னூட்டம்; இருப்பினும் அந்த பின்னூட்டத்தைக் கொடுத்தவர் ஏன் அனானியாக வந்துள்ளார் என்பதை அவர் தான் சொல்லணும்.)ஒரு நல்ல கேள்வியை எழுப்புகிறது. அதுவும் தினமலரில் இப்படி ஒரு கருத்து வந்துள்ளது ஆச்சரியமே. சரி, நம் பதிவாளர்களில் நாம் உண்மையான அறிவு ஜீவி என்று நினைக்கும் ஒருவர் தடாலென்று பொதுப்புத்திக்காரராக மாறிவிடுகிறாரல்லவா, அது போல இருக்கும். இதோ அந்தப் பின்னூட்டம்; அப்சலை தூக்கிலிட வேண்டாம் என்று சொல்லும் ஒவ்வொருவரும் அதற்கு முன் பதிலளிக்க வேண்டிய ஒரு செய்தி இது:

http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html


இன்று தினமலரில் வந்த ஒரு செய்தி கீழே...

-----------------------------------
ஆதரவற்ற சகோதரர்கள் இருவருக்கு விதிக்கப்பட்ட துõக்கு தண்டனையை எதிர்த்து போலீஸ் தரப்பினரே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் இன்னும் மனிதாபிமானம் சாகவில்லை என்பதை உணர முடிகிறது.

பஞ்சாபைச் சேர்ந்த சகோதரர்கள் குர்வெய்ல் சிங் மற்றும் ஜட்ஜ் சிங். கடந்த 2000ம் ஆண்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரை கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த பிறகு, அமிர்தசரஸ் கோர்ட் இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை, பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டும் உறுதி செய்தது. அதன்படி, வரும் 16ம் தேதி இவர்கள் இருவரும் துõக்கிலிடப்பட உள்ளனர்.

படிப்பறிவு இல்லாத, ஏழ்மை நிலையிலுள்ள இந்த சகோதரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவில்லை. எந்த மனித உரிமை அமைப்பும் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில், போலீஸ் தரப்பினரே இவர்களுக்காக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த மனு, இந்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. அதன் மூலம், இவர்களை வரும் 16ம் தேதி துõக்கில் போடுவதற்கு, இடைக்கால தடை பெற முடியும் என்று நம்பப்படுகிறது.

பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, ஐந்து போலீசார் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். அந்த வழக்கில், "முக்கிய குற்றவாளி'யாக குற்றம் சாட்டப்பட்ட முகமது அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பரித்து வருகின்றன. ஆனால், ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற இந்த சகோதரர்களுக்கு எந்தவொரு மனித உரிமை அமைப்பும் உதவ முன்வரவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.
-----------------------------------


கீழே இந்த விஷயம் தொடர்பாக நான் வாசித்த சில பதிவுகளும், அவைகளில் நானிட்ட அல்லது பின்னூட்டமிட நினைத்த பின்னூட்டங்களும்:

kumaran ennam
http://kathalregai.blogspot.com/2006/10/blog-post_07.html

இந்த மரண தண்டனைகள் கொடுக்கப் படுவதால் ஒரு வெற்றியும் கிட்டுவதாக//

இதில் என்ன 'வெற்றி/ தோல்வி'. செய்த செயலுக்குக் கொடுக்கப்படும் தண்டனை; அவ்வளவே.
---------------

muthu thamizini
http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116020914804334117.html

திருத்தமாக எழுதவில்லைபோல் தெரிகிறதே!

---------------------
selvan
http://holyox.blogspot.com/2006/10/184.html

முழுமையாக நான் ஆமோதித்த பதிவு

------------------------
சமுத்ரா -
http://vettri.blogspot.com/2006/10/blog-post_05.html

ஆர்பாட்டங்களில் மிஞ்சி போனால் ஐநூறு கஷ்மீரிகள் கலந்து
கொண்டு 'போராடி' இருப்பார்கள். அதுவும் ஸ்ரீநகரில் மட்டும் தான்.//
=====================

meena
http://www.tamiloviam.com/unicode/09280601.asp
தூக்கில் போடுங்கள் அப்சலை

=============
நல்லடியார்
http://athusari.blogspot.com/2006/10/blog-post_07.html

முதல் நான்கு பத்திகளும் மிக நன்றாக எழுதிவிட்டு, பிறகு வழுக்கி விட்டீர்கள். இப்போதைக்கு நம் முன் உள்ள கேள்வி அப்சலுக்கு தண்டனை சரியா இல்லையா? என்பதுதான்.
அவனை நிறுத்தச் சொல்; இவரும் நிறுத்துவார் என்பதற்கெல்லாம் இப்போதுதானா நேரம்
==========
ரோசா வசந்த்
http://rozavasanth.blogspot.com/2006/10/blog-post_116013846931461247.html
//வழக்கம் போல மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. அஃப்சலின் தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் அதை செய்வதாக சொல்வது; இன்று இருக்கும் தேசியம் சார்ந்த ஜுரத்தின் இடையில், இந்திய பாராளுமன்றத்தை தாக்கியதாக தீர்ப்பளிக்கப் பட்ட நபருக்கு ஆதாரவாக குரல் கொடுத்தால், வசையும் தேசத்துரோகி பட்டமும், உளவுத்துறையின் கண்காணிப்பும், பொதுமக்களின் கண்டனமும் வந்து குவியுமா, விளம்பரமும் ஆதாயமும் வந்து குவியுமா என்பது மேலோட்டமான சிந்தனை கொண்ட அவர்களுக்கே மிக நன்றாக தெரியும். எதிராளியின் நேர்மையை அங்கீகரிக்கும் உன்னத மனநிலையை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், குறைந்த பட்சம் பொருந்த புளுகும் தன்மைகூட இவர்களிடம் கிடையாது என்பதற்கான உதாரணம் இது//

உங்கள் பதிவுக்கு உங்கள் வார்த்தைகளாலேயே பின்னூட்டமிட ஆவல்:

மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது
=====================

http://kuzhali.blogspot.com/2006/10/blog-post_07.html

அப்ப அதுவும் இதுவும் ஒன்னுங்குறீங்க. வெளங்குனாப்புலதான்.
so sad. never expected such a post from you.
i strongly suggest that you remove this post.


=====================

http://nunippul.blogspot.com/2006/10/blog-post_06.html

ஆனால் அரசியல் சார்ந்த குற்றங்களுக்கு மரண தண்டனை சரியில்லை என்பது என் அபிப்ராயம்.
நாகரீகம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஒரு மனிதனின் உயிரைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்த கற்கால பழக்கம் தேவையா என்ன?

//தேவை//
======================

http://ravisrinivas.blogspot.com/2006/10/blog-post.html
மன்னிப்பு வழங்குவது என்பது இந்தியாவைத் தாக்குங்கள்,இந்தியர்களை கொல்லுங்கள், நாட்டில் குழப்பம் விளைவியுங்கள், சேதம் ஏற்படுத்துங்கள் என்றுதீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுவதற்கு சமம்.

i fully endorse this view.
========================
prapuraajadurai
http://marchoflaw.blogspot.com/2006/10/blog-post_07.html
தாக்குதலில் இறந்த பதினொரு நபர்களின் உயிருக்கு என்ன பதில்?’ என்ற கேள்வியில் ஆதி நோக்கமான பழிவாங்குதலே மிகுந்திருப்பதை உணர்ந்தேன்
இந்திய நாட்டின் மீதான் போர் தொடுத்தது உட்பட அனைத்து குற்றங்களுக்காகவும் முகமது அப்சல் குற்றவாளி என்று தீர்க்கப்படுவதும், தண்டிக்கப்படுவதும் சட்டரீதியில் தவறான செயல் அல்ல!//

உங்கள் முடிவு என்ன என்பதற்கு ஒரு தனி விளக்கம் தேவையாக் இருக்கிறது. why not you people call a spade a spade?

if my views on this is to be known, no other case could be more appropriate than this to have the culprit hanged.

=========================
சிறில்
http://theyn.blogspot.com/2006/10/blog-post_116017075313200990.html
===================

http://abumuhai.blogspot.com/

குற்றவாளிகளை தண்டிப்பதில் குறுக்கே நிற்கும் ''கருணை மனு'' மற்றும் ''பொது மன்னிப்பு'' போன்ற சமாச்சாரங்கள் குற்றவாளிகளை ஊக்கப்படுத்துமே தவிர குற்றங்களை குறைக்க உதவாது. நீதி தன் கடமையைச் செய்வதற்கு இதெல்லாம் தடைக்கல்லாகத்தான் இருக்கிறது!
===========================


http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116020914804334117.html
திருத்தமாக எழுதவில்லை
=============================

http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html

அரசும், சட்டமும், சமூகமும் நம்பிக்கையூட்டும் வண்ணம் செயலாற்றுவது மிக அவசியம் ! //

ஆகவே, இந்த தூக்குத் தண்டனை எனக்குச் சரியாகவே தோன்றுகிறது....என்று நான் முடித்துக் கொள்ளலாமா....?

=================

http://wethepeopleindia.blogspot.com/2006/10/blog-post.html
அப்சலுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க ப்ளீஸ்!
=================

http://selvanayaki.blogspot.com/2006/10/blog-post_09.html


================
http://thekkikattan.blogspot.com/2006/10/blog-post_09.html

அந்த தளம் இப்போது தேவைதானா என்பது என் கேள்வி.
================



***இப்பதிவு 16.10.'06 "பூங்கா"வில் இடம் பெற்றது. (2)


*