Tuesday, February 05, 2013

636. ஒச்சப்பனும் நானும் .. நம் தாய்மொழிகளும்









*
 எனக்கும்  ஒச்சப்பனுக்கும் நடந்த சில கருத்துப் பரிமாற்றங்களை, தேவை கருதி, உங்கள் முன் வைக்கிறேன்.

 

1830-ல் உருவான பெல்ஜியத்தின் அண்டை நாடுகள் நெதர்லேண்டு. ஜெர்மனி,. ப்ரான்ஸ், லக்ஸம்பெர்க். கிறித்துவர்களின் இரு கூறுகளின் நடுவே நடந்த குழப்பங்களால் இந்நாடு தனியாகப் பிரிந்தது. அப்போது பிரஞ்சு மொழிதான் அரசியல் மொழியாக இருந்தது. அரசியல், வகுப்பு வாத வேறுபாடுகள் பலவும் இருந்த இந்த நாட்டில் பின்னாளில் மொழியும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தின. 

1970 வரை ஒன்றாக இருந்த பெல்ஜியம் இந்தப் பிரச்சனைகளால் எழுந்த பல அரசியல் சிக்கல்களினால் பெடரல் ஸ்டேட்டாக மாறியது. இப்போது இது மூன்று பிரிவுகளாக உள்ளன: வடக்குப் பகுதியில் டச் மொழி பேசும் ஃபாளண்டர்ஸ்; தெற்குப் பகுதியில் பிரஞ்சு மொழி பேசும் வல்லோனியா; இரண்டிற்கும் நடுவில் இரு மொழி பேசும் ப்ருசல்ஸ். பிரிவுகளாக இருந்தாலும் பெல்ஜியம் ஐரோப்பிய யூனியனில் நல்ல பொருளாதார மேம்பாட்டோடு இருக்கிறது.

ஃப்ளாண்டர் மொழி பேசுவோர் ஃப்ளெமிஷ் என்று அழைக்கப்படுகிறார்கள். (நம் ஒச்சப்பன் இந்தக் குழுவைச் சார்ந்தவர்.) தங்கள் மொழி அதிகம் பேசப்படாமல், போற்றப்படாமல் பிரஞ்சு மொழிக்கே அதிக முக்கியத்துவம் இருந்த நிலையை தங்களது மொழிப்பற்றால்  முற்றாக மாற்றினர். இப்போது பிரஞ்சு மொழிக்கு முக்கியத்துவம் இழந்து ஃப்ளாண்டர்ஸ் மொழியே முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஒச்சப்பன் ஒருவன் தன் மொழியை இழந்தால் அவனது பழம் பண்பாடு, சமூகக் கட்டுக்கோப்பு, ஒற்றுமை, கலாச்சாரம் எல்லாவற்றையும் இழந்து விடுவான். அது அந்த சமூகத்தினை முற்றாக அழித்து விடும் என்கிறார். இந்த உணர்வுகளை ஊக்குவித்த பின்பே ஃப்ளாண்டர்ஸ் மொழி வலுப்பெற்று இன்று எங்களின் தாய்மொழியை நாங்கள் காப்பாற்றியுள்ளோம் என்கிறார்.
அவர் எங்கள் நாட்டில் நடந்த மொழிப் பரிணாம வளர்ச்சி அப்படியே மாறி, எதிர்த் திசையில் உங்கள் தமிழ்நாட்டில் நடக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். இங்கே ஆங்கிலத்தின் பின்னாலேயே எல்லோரும் ஓடுகிறீர்கள். அது மட்டுமின்றி ஆங்கிலம் அறிந்தோர் தமிழ் மட்டும் தெரிந்த தமிழர்களை குறைவாகக் கருதுகிறீர்கள். அந்த பாவப்பட்ட தமிழர்களும் ஆங்கிலத்தைப் போற்றுவதையும் பார்க்க முடிகிறது. இது ஒரு சமூகத்தின், அதன் கலாச்சாரத்திற்கு அடிக்கப்படும் ஒரு சாவு மணி என்பதை உங்கள் சமூகம் புரிந்து கொள்வது நல்லது.

அரசு இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தமிழ் பயிற்று மொழியாக வேண்டும். தமிழ் தெரிந்தோருக்கே அரசு வேலைகள் என்ற கொள்கையை அரசு எடுக்க வேண்டும் என்கிறார். இதற்காக அவர் எனக்கு எழுதிய மயிலின் நகலை இங்கே கீழே கொடுத்துள்ளேன்.



Dear Sam,

The Sint-Lievens College was founded in 1930 for the insight and the deployment of Lieven Gevaert (Afga-Gevaert), an industrialist with an eye for social and Flemish needs for Dutch school education. The pride of your own mother-tongue, Dutch was the key for the revival of the Flemish culture, dominated for years by French invasions and domination, which chased away very famous Dutch writers from Antwerp (Belgium) to the Netherlands. Nowadays Flanders grew out to a strong region at the top of world technology, proud leaving behind the French hegemony.

Remarkable reverse evolution happens in Tamil Nadu, people are dominated by the foreign language, English. It is considered English-speaking ones are  the elite of Tamil society. Many such are not able anymore to read or write their own mother-tongue Tamil,  making  them foreigners in their own land, alienated from their own culture, looking down on their origin and the common Tamilians as lower caste, copying the English, and exploiting other non-English-speaking Tamils in a worse way. They can't be called proud Tamilians anymore as they chose to reject all Tamil values and its tradition and culture, not aware that they lost their personal-identity. They may praise themselves lucky for the tolerance of the majority Tamils.

Only the Tamil government can preserve their culture by making Tamil a compulsory medium of education. Tamil is one of the oldest languages and still remains as a spoken classical language, with its great Tamil culture, traditions and great jewels of Tamil literature. The more languages you know the more cultures you understand. But  you have an identity only when you master your own mother-tongue. A proud Tamil should know his language and his culture.


Greetings
Henk










*



Monday, January 21, 2013

635. காணாமல் போன நண்பர்கள் - 12 - கருப்பு ராமசாமி






*

 அதீதம் இணைய இதழில் வெளியான என் கட்டுரையின் மறு பதிப்பு


*


1961-'64 ம் ஆண்டுகளில் ...


1961-ல் P.U.C. படிப்பை முடித்து விட்டு, அந்த சேவியர் கல்லூரியிலேயே எனக்குப் பிடித்த பொருளாதாரத்திலும் சேர்ந்து விட்டேன். அது B.A.வகுப்பு. எனக்கு அப்போது மிகவும் பிடித்த பாடம். ஆனால் என் அப்பாவுக்கு நான் B.Sc. வகுப்பில் சேர வேண்டுமென்ற ஒரு ‘தவறான’ ஆசை. ஆசிரியராக இருந்தும் B.A.-யை விட B.Sc. பெரிது என்ற எண்ணம் அவர்களுக்கு. மறுத்தும் கேளாமல், மதுரை தியாகராஜர் கல்லூரியில் மிகவும் கடைசி நேரத்தில் எது கிடைத்ததோ அதில் சேர வேண்டுமென்ற கட்டாயத்தில், கிடைத்த ஒரே இடமான விலங்கியலில் சேர்க்கப்பட்டேன். (‘சின்னூண்டு நெத்தியில் ஆண்டவன் எப்படியெல்லாம் எழுதி வச்சிர்ரான் – காதலிக்க நேரமில்லை.)

பிடித்ததோ பிடிக்கவில்லையோ .. தலைவிதியேன்னு வகுப்பில் சேர்ந்தேன். நான் சேரும் போது கல்லூரி ஆரம்பித்து வெகு நாட்கள் ஆகியிருந்தது. வகுப்பில் சேர்ப்பதற்கான கடைசி நாளன்று தான் நான் சேர்ந்தேன். இதற்குள் கல்லூரி வகுப்பில் எல்லோரும் நண்பர்களாக இருந்தார்கள் - என்னையும் எனக்கு முன் ஓரிரு நாட்களுக்கு முன் சேர்ந்த யோகேந்திரனையும் தவிர. யோகேந்திரன் இலங்கையிலிருந்து வந்தவர். பெரிய ஆள். நல்ல திடகாத்திரமான உடம்பு. எங்களை விட எல்லாம் வயது அவருக்கு அதிகமாக இருக்கும். எனக்கு வகுப்பில் கடைசி எண். எனக்கு முந்திய எண் அவருடையது. செய்முறை வகுப்புகளில் நானும் அவரும் ஒன்றாக இருப்போம், அதனால் எங்களுக்குள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நட்பு உண்டு. இன்னொரு காரணமும் பின்னால் வந்து சேர்ந்தது. கல்லூரியில் இருக்கும் போதே வைகை ஆற்றுக்குள்ளிருந்து சினிமா பாட்டு சத்தம் அடிக்கடி கேட்கும். நம்ம நண்பருக்கு சரோஜாதேவின்னா அப்படி ஒரு உசுரு. அதுவும் அவர் நடக்கிறதை பின்னால இருந்து காண்பிப்பாங்களே ... அதுன்னா தலைவருக்கு அம்புட்டு ‘இது’ ! அவர் நடித்த பாட்டுன்னா போதும் ... என்னைக் கூப்பிடுவார் ... எப்டி என்பார் .. இசை மயக்கத்தில் கொஞ்ச நேரம் இருப்பார்.

 மேஜர் வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளில் எங்களோடு Physics, Chemistry பசங்களுக்கும் ஒன்றாக தமிழ் ஆங்கில வகுப்புகள் இருக்கும். நாங்கள் அந்த வகுப்புகளில் உட்காருவதை வைத்தே யார் நல்லா படிக்கிற பசங்கன்னு சொல்லிடலாம்! ஏன்னா ... இரு வரிசை பெஞ்சுகளில் Physics மொதல்ல உக்காந்திருப்பாங்க; அடுத்து Chemistry; நாங்க எல்லோரும் கடைசி பெஞ்சுகளில். எங்களைப் பார்த்தால் அந்தப் பசங்களுக்கே கொஞ்சம் தெனாவெட்டாக இருக்கும்.

நான் சேர்ந்து சில நாட்களிலேயே எங்களுக்குக் காலாண்டுத் தேர்வு வந்து விட்டது. வகுப்பில் இதுவரை நான் ஒரு தனிக்காட்டுப் பறவை மாதிரிதான். அதிகம் நண்பர்கள் கிடையாது. இரண்டே இரண்டு நண்பர்கள். ஒருவர் பக்கத்துத் தெரு. பெயர் மாணிக்க வாசகம். நாங்கள் இருவரும் சைக்கிளில் கல்லூரிக்கு ஒன்றாக வர ஆரம்பித்தோம். அதன் மூலம் நண்பரானார். (ரொம்ப வருஷத்துக்கு முன்பே அவர் இறந்த செய்தி வந்தது.) இன்னொருவன் ராமசாமி. எங்கள் வகுப்பில் அப்போது மொத்தம் 3 ராமசாமிகள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பெயர் வைத்தோம். நம்ம தோஸ்த் ராமசாமி நல்ல கருப்பு. அதனால் அவனுக்குப் பெயர் கருப்பு ராமசாமி. இன்னொருத்தர் சிகப்பா இருப்பார். கொஞ்சம் வயது எங்களை விட கூட இருக்கலாம். அதிகமாக யாரோடும் பேச மாட்டார். ஆனால் எப்போதும் சிரித்த முகம். அவருக்குப் பெயர் சிகப்பு ராமசாமி. இன்னொருத்தன். அவனுக்கு வைத்த பெயர் scientist ராமசாமி; ஏன்னா எல்லா வாத்தியாரிடமும் நிறைய கேள்வி கேட்பான். நல்லா படிக்கணும் ... முதுகலை போகணும் ... க்ல்லூரி வாத்தியாராக வேண்டும் ... இதெல்லாம் அவனது ஆசைகள். எல்லோரிடமும் இதைச் சொல்வான். சரி ... அவன் என்ன ஆனான் என்பதை பிறகு சொல்கிறேன்.

 காலாண்டுத் தேர்வு நடந்தது. அதில் நான் பயந்தது zoology practical-க்கு மட்டும் தான். ஏனெனில் தேர்வுக்குள் எனக்கு இரண்டே இரு வகுப்புகள் மட்டுமே இருந்தன. அதில் ஒரே ஒரு practical - தவளையில் arterial system & venous system இரண்டு மட்டுமே செய்திருந்தார்கள். ஆனால் இதில் நான் venous system மட்டும் செய்திருந்தேன். அதிலும் எனக்கு ஒரு தகராறு. நான் செய்தது அதுவா .. இதுவான்னு ஒரு தகராறு. அதாவது எது arteries எது veins என்று குழப்பம். தவக்காளையில் எது மேல் பக்கம் (dorsal) எது கீழ் பக்கம் (ventral) என்றும் ஒரு தகராறு. எது எதுன்னு தெரியாம எது எதை நான் செய்றது அப்டின்னு ஒரே குழப்பம். தேர்வு அன்னைக்கி யோகேந்திரனிடம் சொல்லியிருந்தேன். சந்தேகம் கேட்பேன் என்று சொல்லியிருந்தேன். arterial system செய்யச் சொல்லிக் கேள்வி வந்ததும் யோகேந்திரனிடம் எதைச் செய்யணும்; மேலேயா கீழேயா என்று கேட்டேன். அவர் மேலே என்றார். அதாவது அவர் dorsal என்ற பொருளில் சொல்ல, நான் தவக்காளையை ஓப்பன் செய்ததும் மேலே உள்ள (ventral) உள்ள venous system செய்து வைத்து விட்டு வந்திட்டேன்.

 மதிப்பெண்கள் வந்தன. மேஜரில் ஆசிரியர் சொல்லும் போது fifty and fifteen என்றார். அதாவது தியரியில் 50; செய்முறையில் வெறும் 15. ஊத்திக்கிரிச்சி. ஆனாலும் நம்ம புகழ் அதற்குள் ‘திசையெங்கும்’ பறந்து விட்டது. ஏன்னா .. தமிழில் எல்லோரும் ஓரளவு மதிப்பெண்கள் வாங்கியிருந்தோம் . ஆனால் ஆங்கிலத்தில் பலருக்கும் ‘ஊத்திக்கிச்சி’! எங்கள் வகுப்பில் நிறைய பேருக்கு ஆங்கிலத்தில் ரொம்ப மோசமான மார்க். ஆனா ... நான் மட்டும் இரண்டாவது மார்க் - அதாவது Physics, Chemistry, zoology மூன்று வகுப்பிலும் இரண்டாவது மார்க். முதல் மார்க் ஒரு Physics பயல். மேஜரில் 50 மார்க் நல்ல மார்க்காகவே இருந்தது. (ஐம்பது மார்க் என்பதெல்லாம் நல்ல மதிப்பெண்கள் என்று இந்தக் காலத்து ஆட்களுக்கு எங்கே தெரியப் போகுது!)

என்னடா .. நேத்து வந்த பயல் இப்படி மார்க் வாங்கிட்டானேன்னு எங்க வகுப்பில் எல்லோருக்கும் ரொம்ப ‘இது’! அதுவும் ஆங்கிலத்தில் நல்ல மார்க் வாங்கினது நம்மள எங்கேயோ தூக்கிட்டுப் போயிரிச்சி. நம்ம கருப்பு ராமசாமிக்கு இப்போ இன்னும் கூட நெருங்கிட்டான். பால சுப்ரமணியன் என்ற பாலு என்பவனுக்கும் ஆசிரியர் ஆக வேண்டுமென்ற ஆவல் நிறைய. அதற்காகவே அவன் அடிக்கடி ஆங்கிலத்தில் பேச முயல்வான். (அவன் படித்து முடித்து ஆசிரியராக ஆனான் என்பதும் தெரியும்.) அவனுக்கும் என்னிடம் புதியதாக நட்பு பிறந்தது.

நானும் சும்மா சொல்லக் கூடாது. மொழிப்பற்று எக்கச் சக்கம் தான். நான் ஆங்கிலம், தமிழ் இரண்டிற்கும் எடுத்த முயற்சிகளை என் மேஜர் பாடத்திற்குக் கொடுத்திருந்தால் ஒரு வேளை கொஞ்சம் பெரிய ஆளாக ஆயிருந்திருப்பேன். ஆனால் எனக்கோ ஆங்கிலத்தில் எல்லோருக்கும் வழக்கமாக இறுதித் தேர்வில C Grade தான் போடுவார்கள். B grade கிடைப்பது மிகவும் அரிது. எனக்கு ஆங்கிலத்தில் B grade; தமிழில் A grade வாங்கி விட வேண்டுமென்று ஆவல் அதிகம். அதற்காகவே இரு பாடங்களில் மிகுந்த சிரத்தை எடுத்தேன்.

தமிழ், ஆங்கில வகுப்புகள் அனேகமாக எல்லோரும் சேர்ந்து பெரிய வகுப்பாக இருப்பதால் கொஞ்சம் கலாட்டாக்கள் இருக்கும். அதுவும் தமிழ் வகுப்புகளில் இன்னும் கொஞ்சம் அதிகம். ஆனால் எனக்கு வந்ததில் செய்யுள் எடுத்த ஆசிரியரிடம் பாச்சா பலிக்காது. ரொம்ப அழகாகப் பாடி பாடம் எடுப்பார். ஒரு செய்யுளை ராகத்தோடு பாடிவிட்டு, அதே ராகத்தில் உள்ள ஒரு சினிமாப் பாட்டையும் பாடுவார். இன்னொரு ஆசிரியர். அவர் பின்னாளில் கல்லூரியின் முதல்வரானார். அவர் வகுப்பில் கொஞ்சம் கலகலப்பு இருக்கும் - மாணவர்களிடையே. ஒரு நாள் எல்லோரும் ஏதேதோ கத்திக் கலாட்டா செய்து கொண்டிருந்தோம். ஆசிரியர் நான் உட்கார்ந்திருந்த பெஞ்சின் பக்கத்தில் வந்து என் அருகில் நின்று, என்னைப் பார்க்காமலேயே, ‘நீங்கள் எல்லாம் முதல் வகுப்பு வாங்கக் கூடிய மாணவன் என்று நினைத்திருந்தேன் ... நீங்களுமா இப்படி’, என்றார். அதிலிருந்து அவர் வகுப்பில் ரொம்ப நல்ல மாணவன்.

இன்னும் இரு பேராசிரியரர்கள். அவர்கள் இருவரும் அப்பா, பிள்ளைகள். பிள்ளை ஆசிரியர் கல்லூரி விட்டு விலகி சென்னை சென்று இறுதியில் துணை வேந்தர் ஆனார். அப்பா-ஆசிரியர் நிறைய நூல்கள் எல்லாம் எழுதியவர் தான். ஆனாலும் அவர் வகுப்பென்றால் எங்களுக்குக் கொண்டாட்டம் தான்.

ஆங்கில ஆசிரியர்களில் நான் மாடலாக எடுத்துக் கொண்ட ஆசிரியர் பேரா. சக்தி வேல். வகுப்பில் பாடம் மட்டும் இருக்காது. அவர் வகுப்பில் அமர்ந்திருப்பதே நன்கிருக்கும். இவரை நான் பதினைந்து ஆண்டுகள் கழித்துப் பார்த்த போது என் பெயரைச் சொல்லி எப்படி இருக்கீங்க என்று கேட்டார். ஜன்மம் சாபல்யமடைந்தது! அவ்வளவு மகிழ்ச்சி. அத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னை நினைவில் வைத்திருக்கிறாரே என்று மிக சந்தோஷப்பட்டேன்.

இவரையும் இன்னொருஆசிரியரையும் நான் ரொம்ப கொடுமைப் படுத்துவேன் ! வேறொன்றுமில்லை. ஆங்கிலத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமென்பதற்காக இரு bazar notes வாங்கி, அதை வைத்து நானாக essays எழுதி திருத்தி வாங்குவேன். ஒரு நோட்ஸ் - EASY GUIDE - சுப்ரமணியன் B.A., L.T. - இவர் பள்ளிக்கூடங்களில் நோட்ஸ் போடுவதில் வல்லவர். கல்லூரிக்கு போடும் நோட்ஸ் ரொம்ப ரொம்ப சிம்பிளாக இருக்கும். இன்னொரு நோட்ஸ் - MINERVA GUIDE - பரசுராமன் M.A. - இவரது நோட்ஸ் ரொம்ப ரொம்ப கஷ்டம். ஒவ்வொரு வாக்கியத்திலும் நாலைந்து வர்த்தைகள் புரியாத வார்த்தைகளாக இருக்கும் படி ‘ப்யங்கரமா‘ எழுதியிருப்பார். Shakespeare-க்கு Banerji அப்டின்னு பெரிய ஆளு .. அதோடு இன்னொரு நோட்ஸ். ஆசிரியர் BARNES என்றோ என்னவோ ஒரு பெயர். திருவள்ளுவருக்கு பரிமேலழகர் மாதிரி Shakespeare-க்கு இவர் என்பார்கள். இவைகளையெல்லாம் வாங்கி எல்லாவற்றையும் வாசித்து, நானாக ஒரு கட்டுரை எழுதி ஆசிரியர்களிடம் எழுதிக் கொடுத்து, அவர்களை அனத்து என்று அனத்தி திருத்தி வாங்குவேன்.

ஆங்கிலத்திற்கு இத்தனை நோட்ஸ் வாங்குவேன். அப்போது தமிழுக்கு கோனார் நோட்ஸ் மிகப் பிரபல்யம். நான் தமிழுக்கு மட்டும் எந்த நோட்ஸும் வாங்க மாட்டேன். தமிழுக்குத் தனி நோட்டு போட்டு நானே பொழிப்புரையும் மற்றவைகளையும் எழுதிய சிரத்தையுள்ள ஒரே தமிழ் மாணவனாக இருந்திருப்பேன் என்று நினைத்துக் கொள்வேன். தேர்வுகளிலும் முதல் பக்கத்தில் ஐந்து இலக்கணக் குறிப்புகள் கேட்பார்கள். அதில் மார்க் குறைக்க முடியாது. ஐந்தும் முதல் பக்கதில் எழுதி சுளையாக 10 மார்க் வாங்குவது ஒரு வழக்கம்.





இப்படியெல்லாம் இரு மொழிகளுக்கும் சிரத்தை எடுத்துப் படித்தேன்....




ஆனாலும் இவ்வளவு சிரத்தை எடுத்தும் இறுதியில் பாதிக் கிணறு தான் தாண்டினேன். ஆங்கிலத்தில் C Grade தான். ஆனால் தமிழில் கல்லூரியிலேயே இருவர் மட்டும் முதல் வகுப்பு - A grade - வாங்கினோம். இன்னொருவர் ஆங்கிலத் துறை மாணவன். அவர் இன்னும் நன்கு படித்து I.A.S. ஆனதாக அறிந்தேன். நான் வழக்கம் போல தரிசு ஆய்ட்டேன்.

நம்முடைய மொழிப்புலமையால் (!) என்னிடம் கருப்பு ராமசாமிக்கு ஏக ஈர்ப்பு. ரிகார்ட் நோட்ல படமும் அவனை விட நல்லா நான் வரைவேன். படிப்பில் உதவி கேட்பான். டிகிரி முடித்ததும் B.Ed. முடித்து ஆசிரியரானான். நான் கல்லூரி செல்லும் சந்தைப் பேட்டையில் தான் குடியிருந்தான். அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தோம். ஆனால் படிப்போடு இருவருக்கும் தொடர்பின்றிப் போனது. படிக்கும் போது அடிக்கடி வீட்டிற்கும் வருவான். என் வீட்டிற்குப் பக்கத்தில் எனக்கு இருந்த distraction அவனுக்கும் தெரிந்ததா ...

அப்போ கேட்டான்: ‘ஏண்டா ... இதையெல்லாம் வச்சிக்கிட்டே இப்படி படிக்கிறியே .. இதுவும் இல்லாட்டி ரொம்ப நல்லா படிப்பியோ?’

தெரியலையே ’ப்பா ... !



*

Friday, January 18, 2013

634. இலங்கைப் பயணம் - 17 - வீடு திரும்பல்











*







’வீடு செல்லும் போது ...’ என்ற ஒரு தொடர்சங்கிலிக் கடைகளின் பெயராக இலங்கையில் பல இடங்களில் பார்த்தேன். இந்தத் தலைப்பு எனக்குப் பிடித்துப் போயிற்று.




கொழும்புவில் கலைப் பொருள் விற்கும் கடை ஒன்றிற்குச் சென்றிந்தேன். ஊர் வந்து சென்ற  நினைவாக இருக்கட்டுமே ஏன்று மேலேயுள்ள முகமூடிகளில் ஒன்றை (இடது பக்கம் மேலிருந்து கீழாக இரண்டாவது முகமூடி) வாங்கினேன். அந்த முகமூடிகளின் பட்டியல் மிகப் பெரிது போலும். காட்சிக்காக விமான நிலையத்தில் இருந்த பட்டியலின் படம் இது.


ஆயுதங்கள் ஏந்தும் சிப்பாயகளைப் பார்க்கும் நேரமெல்லாம் ஒரு படபடப்பு  ...



நம் சூரியக் குடும்ப வாகனம் ரெடி ...
இலங்கைக் கரை



மேகக் கூட்டம்...........


விமானத்தில் ‘ட்ரைவர் சீட்டுக்குப் பக்கத்திலேயே’ சீட் கிடைத்தது. ஆனால் பாதி விமானம் காலி. அதுனால் எப்போதும் போல் வழக்கமா உக்கார்ரது மாதிரி ’கடைசி பெஞ்சுக்கு’ நானும் நண்பனும் போய் விட்டோம்., அங்கே இருந்து படம் எடுக்க வசதியாக இருந்தது.

விமானப் பணிப்பெண் ஒருவர் ‘என்னை மாதிரியே நீங்களும் படம் எடுக்கும் ஆவல் உள்ளவர் போலிருக்கே’ என்று சொல்லி நண்பராயிட்டாங்க.
 

நாடு விட்டு நாடு போய் .....



















இந்திய மண் கண்ணுக்குத் தெரிய

ஆரம்பித்தது.








 
மதுரை மண் கண்ணுக்குத் தெரிந்தது. ஆனால் எனக்கு வெறும் வயலும் வரப்பும் மட்டும் தெரிந்தது.



அடுத்த ஜன்னல் வழியே படம் எடுத்த நண்பனுக்கு மதுரையின் கட்டிடங்கள் எல்லாம் நன்கு தெரிந்ததாம்.   ... ஓசி வாங்கி இங்கே சேர்க்கணும் ...



இனிய பயணம் இனிதே முடிந்தது.

*



தலைப்பை (மோகன் குமாரிடமிருந்து) திருடியிருக்கிறேன். அவருக்கு நன்றி.





*





Thursday, January 17, 2013

633.. இலங்கைப் பயணம் - 16 - கண்டதும் .. கேட்டதும் ...(3)




*



*  கட்டுமானங்கள் பல நடக்கின்றன. சைனா போடும் சாலைகள், கட்டும் கட்டிடங்கள் எல்லாமே கடன் உதவியால் கட்டப்படுபவைகளாம்.

* அதேபோல் இந்தியக் கட்டுமானங்களும் நிறைய நடை பெறுகின்றன. ஆனால், அவை யாவும் இந்தியாவின் ‘உதவும் கரங்களால்’ கட்டப்படுபவைகளாம். எல்லாம் ‘உதவி’ தானாம்! என்னே தாராளம்!

* இங்கிலாந்து உலகமெல்லாம் சுற்றிச் சுற்றி வந்து காலனிகள் அமைத்ததாலேயே இன்று உலகில் பல பிரச்சனைகள் தோன்றிவிட்டன என்பது எப்போதுமே என் எண்ணம். உலகின் நம்பர் 1 வில்லன்கள் அவர்கள்தான் என்றொரு எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

* எப்படியோ இருந்த இந்தியாவை இரண்டாகப் பிரித்து இரு நாடுகளாக்கியது. இரண்டிற்கும் எப்போதும் சண்டை; எங்கேயும் சண்டை இன்றுவரை. மத்திய கிழக்கில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சனை ...

* அதே போல் பிரிந்திருந்த இரு மரபுக் குழுவினரை இணைத்து ஒரே நாடாக்கி இலங்கையிலும் தகராறு. புண்ணியவான்கள் .... நல்லா இருக்கட்டும்! 

* ராஜபக்சே இலங்கை அதிபருக்கான தேர்தலில் அவரது கட்சியான S.L.F.A.-உடன் L.T.T.E. ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. 2% அதிகமான ஓட்டு பெற்று அவர் வெற்றி பெற்றதற்கான காரணமாக அது அமைந்தது. அந்த ஒப்பந்தம நடக்காதிருந்தால் வரலாற்றின் பக்கங்கள் வேறு மாதிரியாக எழுதப்பட்டிருக்கலாம். 

* ரணில் விக்ரமசிங்கே வேறு கட்சிகளுடன் எந்த உடன்பாடும் கொள்ள மாட்டார்.

* ராஜபக்சேயின் உறவினர்கள் பலரும் அரசியல் பலமிக்கவர்களாக இருக்கிறார்கள்.

* அரசில் மிக தாராளமயமான ஊழல்கள். ஆனாலும் இன்றைய அரசியல் நிலையில் இன்னும் 20 ஆண்டுகளுக்கு ராஜபக்சேயை இலங்கையில் அசைக்க முடியாது.
கும்பிடுகிறார் .....

* ராஜிவ் காந்தி – ஜெயவர்தனே இருவரின் பேச்சு வார்த்தையில் உருவானது இலங்கையின் 13 வது சட்ட திருத்தம். அதில் வடக்குப் பகுதிகளுக்கு தன்னாட்சி தருவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஆனால் இப்போது அந்தத் திருத்தத்தை பின்னுக்குத் தள்ளும் முயற்சியில் ராஜபக்சே அரசு முனைந்துள்ளது.

* தற்பொழுது மொத்தம் 9 மாகாணங்கள் – Provinces – இருக்கின்றன. இவைகளை 5 மாகாணங்களாகத் திருத்தும் முனைப்பில் ராஜபக்சே அரசு உள்ளது.

* அவ்வாறு திருத்தி அமைக்க படும் 5 மகாணங்களில் எதிலுமே தமிழர் தனிப்பெரும்பான்மை இல்லாதவாறு செய்யவுள்ளனர். இதனால் தமிழருக்கென்று தனிப்பகுதி என்று ஏதும் இல்லாமல் போகும்.

* ஜாப்னா மக்களுக்குத் தேவையான் அடீப்படைத் தேவைகள் மட்டும் கிடைத்தால் இன்னும் சில ஆண்டுகளிலேயே அதனை ஒரு சிங்கப்பூராக தமிழர்கள் மாற்றி விடுவார்கள்.

* அவர்களுக்கு முதலீடு செய்ய பல நாட்டு இலங்கைத் தமிழர்கள் போட்டி போடுவார்கள்.

* ஆனால் அந்த அடிப்படை வசதிகளை இலங்கை அரசு செய்வதற்கான அறிகுறிகள் ஏதும் இன்னும் இல்லை.


 * தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களச் சிப்பாய்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்து அங்கு குடியேற்றுகிறார்கள்.

* இந்த நிலத்தை நாலைந்து ஆண்டுகளில் அவர்கள் தமிழர்களுக்கே விற்று விட்டு சிங்களப் பகுதிக்குள் திரும்பிச் சென்று விடும் வாய்ப்புண்டு.

* இப்படிக் குடியேறும் மக்களும் இன்னும் ஒரு வித அச்சத்தோடு தான் குடியேறுகிறார்கள்.
*

* இந்துவில் சமீபத்தில் வந்த ஒரு கட்டுரையிலிருந்து ...


http://www.thehindu.com/opinion/op-ed/in-postwar-jaffna-a-slow-piecing-back-of-life/article4041231.ece 

2012....



போருக்குப் பின் ஜாப்னாவில மிகப் பெரிய மாற்றங்கள் நடந்து வருகின்றன. அப்படி நடக்கும் பல மாற்றங்களில் ஒன்று துரையப்பா விளையாட்டு மைதானத்திற்கு அருகில் புதியதாகத் தோன்றியுள்ள ஹோட்டல். திலக் தியாகராஜா என்ற ஒரு பெரும் முதலீட்டாளர் ஒருவரால் கட்டப்பட்டுள்ளது. 17 வயதிலேயே ஜாப்னாவை விட்டுச் சென்று, இங்கிலாந்தில் பெரும் நில விற்பனையாளரான இவர் இந்த விடுதியைக் கட்டியுள்ளார்.  பழைய ஜாப்னாவின் முக்கியத்துவம் விரைவில் மீண்டும் வந்து விடும் என்ற நம்பிக்கையில் இவர் உள்ளார். தமிழர்களால் ஜாப்னாவை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமென்கிறார். 

ஆனால் இவர் எதிர்பார்த்த மாற்றம் இன்னும் ஏதும் இங்கு நடந்தேறவில்லை. புதிதாக வரும் நெடுஞ்சாலைகள் வடக்குப் பகுதியையும் சிங்களவர் வசிக்க எளிதாக்குவதற்கே என்று பல தமிழர்கள் நினைக்கிறார்கள்.  

எங்களுக்கு இப்போது வேண்டியது சாலைகளல்ல. வளர்ச்சி வேண்டும். ஆனால அது நாங்கள் விரும்புவது போல் வேண்டும். நல்ல அரசியல்  முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தமிழரின் எண்ணம். 




இன்னும் சில (பழைய ) துண்டுச் செய்திகள் ... 

2009 ...

http://lrrp.wordpress.com/2009/09/14/sri-lanka-goes-after-ltte-assets-in-eritrea/



இலங்கை அரசு புதிய அரசியல் தொடர்பை எரிட்ரியா என்ற நாட்டோடு ஏற்படுத்திக் கொள்கிறது. புலிகள் அந்த நாட்டிலிருந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முறியடிக்கவே இந்த முயற்சி. இலங்கையின் போர்ப்படையின் உளவுத் தலைமையில் இருக்கும் மேஜ்ர் அமல் கருணாசேகரா இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தோன்றுகிறது. இலங்கையில் தோற்றுப் போன புலிகளை முற்றுமாக ஒழிக்க அவர்களின் பல்நாட்டு முயற்சிகளைத் தோற்கடிக்கவே இந்த ஏற்பாடு. பல அயல்நாடுகளில் புலிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் இலங்கையில் மீண்டும் பிரச்சனைகள் வரக்கூடும் என்ற அச்சமே இதற்கான காரணம்.

கொழும்பு நகரிலும் ஜாப்னா நகரிலும் அடுத்த ஒரு போருக்குத் தயாராகும்படி செயற்கைக்கோள் மூலம் நடக்கும் செய்திகள் பரிமாற்றப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. களங்களில் நடந்த் ஒரு போர் இப்போது உளவு வேலைகள் மூலமாகத் தொடர்வதாகத் தெரிகிறது. 


*
*

http://asmarino.com/en/news/290-sla-finds-12-ltte-fighters-planes-at-eritrea
 
28 August 2009  -  கொழும்புவிலிருந்து வெளியாகும் லங்கதீபம் என்ற நாளிதழில் இலங்கைப் படையினர் எரிட்ரியாவின் விமான தளத்தில் புலிகளின் பன்னிரண்டு போர்விமான்ங்களைக் கண்டுபிடித்த்தாகக் கூறுகிறது.


*

2013 ...

  http://tamilleader.com/mukiaya/8438-2013-01-03-01-52-51.html

கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் கற்பிப்பதற்கு கல்வி வலயங்களுக்கு ஊடாக இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்களத்தைத் திணிக்கும் இந்த முயற்சி வடபகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ....

2013 ஆம் ஆண்டு 1 ஆம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளுக்கும், கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்திலுள்ள பாடசாலைக்கும் படையினர் சீருடைகளுடன் கற்பித்தலுக்காகச் சென்றிருக்கின்றனர்.

இவ்விடயம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்திருக்கின்றனர். எனினும் இது குறித்து அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

*

இன்னும் அங்கே முழு அமைதியோ, நிம்மதியோ பிறக்கவில்லை ....



*


ஒரு குறும்படம். 

பிடித்தது. 

பல கேள்விக்குறிகள் .....




எனக்கு ஒரு சந்தேகம்:

நம் மத்திய அரசு   மெளன புத்தனாக இலங்கை விஷயத்தில் இருப்பது ......

சீனா-இலங்கை சம்பந்தப்பட்ட உலக அரசியல் தொடர்பானதா ...?

அன்னை, ராகுல் et al  தொடர்புள்ள உள் அரசியல் தொடர்பானதா ...?





*