Monday, October 10, 2016

909. ஆண்டவன் கட்டளை





*



 இந்தப் படத்தைப் பற்றி ரிவர்சில் சொல்லப் போகிறேன்.


படம் முடிந்து வெளியே வந்ததும் ஒரே ஆச்சரியம். அத்தனை இருசக்கர வாகனங்கள் வெளியே இருந்தன. ரொம்ப நாளாச்சு ... இத்தனை வாகனங்களை தியேட்டரில் பார்ப்பது. ஒரே தியேட்டர் காம்ப்ளக்சில்  இரண்டு படம் .. ஒரு வேளை அதனால் கூட இருக்கலாம்!

படம் முடியும் போது “சுபம்” அப்டின்னு திரையில் எழுத்துகள் வந்தன. அந்தக் காலத்தில சுபம் / வணக்கம் அப்டின்னு தான் படங்கள் முடியும். இப்போவெல்லாம் A film by ….. அப்டின்னு டைரடக்கர் பெயர் தானே வரும். ரொம்ப காலத்திற்குப் பிறகு படம் முடிஞ்சி வெளிய வரும்போது சுபம்னு வாசிச்சது சுகமாக இருந்தது.

படம் முடியிற சமயத்தில திடிர்னு எனக்கே ஆச்சரியம். என் வாய் ‘ஈ” என்று இளித்துக் கொண்டிருந்தது. எனக்கே ஆச்சரியம் ... படத்தோடு அப்படி ஒன்றிவிட்டேன் போலும். கதையோடு ஒட்டி இணைஞ்சிட்டேன். படத்தின் மகிழ்ச்சி மனதில் ஊறி ஒன்றி விட்டது என்பதை உணர்ந்து மறுபடி முகத்தைச் சாதாரணமாக்கிக் கொண்டேன். படம் முடிஞ்சி வெளியே போகும்போது அப்படி “ஈ”ன்னு இளிச்சிக்கிட்டே போனா நல்லாவா இருக்கும்?

படத்தில romance கடைசி ஐந்து நிமிடம் மட்டுமே. நம்ம தமிழ்ப் படங்களில் இதுவே ஒரு பெரும் புரட்சிதான். கடைசி சீனில் காதலிக்கு ‘காந்தி’ – அதான் கதாநாயகனின் பெயர் – விமான நிலையத்தில் டாட்டா சொல்லும்போது மாமியார் ஒரு வினாடி முகத்தை, அதைக் கண்டு கொள்ளாதது போல் வெட்கத்தோடு மறுபக்கம் திருப்பும் வினாடி அழகு.

இந்தக் கதாநாயகி உலகப் பெரும் ஆச்சரியமாக இருக்கிறார். முதல் படத்தில் குத்துச் சண்டை என்பதால் நன்கு நடித்தாரோ என்று நினைத்தேன். இந்தப் படத்திலும் அவரது ஸ்கோர் செமையாக இருக்கிறது. புது நடிகை .. புது மொழி.. என்று எந்த தடையும் இன்றி இயல்பாக, அழகாக நடிக்கிறார் ... இல்லை... இல்லை ... வாழ்ந்து விடுகிறார். இவரோடு நடித்தால் கதாநாயகர்கள் ஜாக்கிரதையாக ஒழுங்காக நடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் இவர் அவர்களைத் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவார் போலும்.

Passport officer ஒரே வினாடியில் பிரச்சனையை அனுசரணையாக முடித்து விடுவது கொஞ்சம் அதிகமாகத் தோன்றியது. ஒரு வேளை அதுதான் ஆண்டவன் கட்டளையோ என்னவோ!

இதுவரை தமிழ் சினிமாவில் இப்படி தத்ருபமாக ஒரு கோர்ட் சீனைக் காண்பித்ததாக நினைவில் இல்லை. அப்படியே அச்சு அசலாக இருக்குமே .. அப்படி ஒரு thickly packed dingy and dirty room. Thank you art director. அந்த அறையில் இருக்கும் கூட்டம் ... கண்ணில் படும் ஆ ட்கள் ... பல வகை வகையான முகங்கள்  .. மேசை மேல் குவிந்திருக்கும் பைல்களின் குவியல்கள் .. இடமில்லாத மக்கள் நெருக்கம் .... டைரக்டர் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றியது போல் என்பார்களே அது போல் உன்னிப்பாகக் கவனித்து செய்திருப்பது நன்கு தெரிகிறது.

கூத்துப்பட்டறை ஆட்கள் படத்தில் நிறைய என்று நினைக்கிறேன். அங்குள்ள அரங்கம், ஓப்பனை, ஒத்திகை, ‘ஐயா’வின் மேல் உள்ள பக்தி.. மரியாதை... எல்லாமே கூத்துப்பட்டறை இப்படித்தான் இருக்கும் என்று நானே உருவகப்படுத்திக் கொண்டேன். வக்கீலாக வருபவரை கூத்துப்பட்டறை  நிகழ்ச்சி ஒன்றில் எங்கள் கல்லூரியில் பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். அப்போது அவர் நன்கு வளர்ந்து விடுவார் என நினைத்திருந்தேன்.

இந்தப் படத்தில் அவரும் அவரது அழகான ஜூனியரும் அசத்தலான மேட்ச். ஜூனியருக்கு சின்ன ரோல் தான் .. ஆனால் .. அசத்தி விட்டார். இலங்கை அகதியாக வரும் அரவிந்தனிலிருந்து ஒவ்வொரு சின்ன சின்ன பாத்திரங்களிலும் வருபவர்கள் என்று எல்லோரும் ஒட்டு மொத்தமாக நன்கு நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். கள்ளக் கையெழுத்து போடும் பெரியவர் கூட மனதில் பதியும்படி செய்திருக்கின்றனர். யோகி பாபு எனக்கு ஏமாற்றம் தான்.

முதல்பாதி பார்க்கும் போது நடுவில் சிறிது சுணக்கமாகத் தோன்றியது. ஆனால் அதன் பின் படம் டாப் கியர் தான்.

விஜயசேதுபதி பற்றி என்னத்தைச் சொல்ல? அந்த மனுஷனுக்கு நடிப்பு இயற்கையாக வருகிறது. எதைச் செய்தாலும் அது இயல்பாகத் தெரிகிறது. அவர் தமிழ் சினிமாவின் பெரிய லாபம். இன்னும் உயரணும்... உயர்வார். நல்ல இயக்குனர்களும் அவரை நன்கு “குறி” வைக்கிறார்கள். நமக்கு லாபம்தானே!

பலப்பல ஆண்டுகளுக்குப் பிறகு பழைய அனுபவம் கிடைத்தது. ஞயிற்றுக் (Sunday என்று தமிழில் அடிக்கத் தெரியவில்லையே!) கிழமை.  போன வெள்ளிக்கிழமை வந்த படமாச்சே ... இன்னும் படம் ஓடிக்கொண்டிருக்குமா என்று நினைத்துப் போனேன். ஆனாலும் கூட்டம் இருந்தது. அட ...டிக்கெட் எடுக்க வரிசையில் போக வேண்டுமோவென நினைத்தேன். நல்ல வேளை .. அப்படி எல்லாம் இல்லை. ஆனால் டிக்கெட்டு எடுத்த பிறகு உள்ளே செல்ல கொஞ்சம் கூட்டம். கூட்டத்துக்குள் போய் இடித்துப் பிடித்துப் படம் பார்த்த பழைய நினைவுகள் எட்டிப் பார்த்தன.

அந்தக் காலத்தில் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் முட்டை போண்டாவும், பாப்கார்னும் ரொம்ப பேமஸ். அந்த இரண்டும் இல்லாமல் அங்கு அந்தக் காலத்தில் ஆங்கிலப் படங்களை அந்த தியேட்டரில் பார்த்த நினைவு இல்லை. பழைய நினைவில் இரண்டும் வாங்க நினைத்தேன். தங்ஸ் உருவம் கண்முன் வந்ததால் போண்டாவிற்கு முட்டை போட்டுவிட்டு வெறும் பாப்கார்னோடு ஆசையை அடக்கிக் கொண்டேன்.

*

வானத்தில் பறக்கும் விமானத்தை முதல் பாதியில் அடிக்கடி காண்பிப்பது பற்றியும் சொல்ல மறந்து போனேனே. அதுவும் இன்னும் பலவும் ... மணிகண்டனின் touch தான்.

 *

Wednesday, October 05, 2016

908. பேத்தி வரைந்த படங்கள்




U.K.G. படிக்கும் சின்ன பேத்தி எங்கள் பொறுப்பில் மூன்று நாட்கள் இருந்தாள். வரும்போதே crayons, sketch pens, one new drawing note என்று கனக்கச்சிதமாக வந்தாள். drawing note முடிந்து அதன் பின் கையில் கிடைக்கும் பேப்பரில் எல்லாம் படம் தான்.
அக்காளுக்கு நல்ல போட்டிதான்.
கடைசிப்படம் அவளதுஅக்கா தனது முதல் வகுப்பில் படிக்கும் போது வரைந்த படம்.










அம்மா.. அக்கா .. நான்

A  BIG  BOAT

A  BIG BOAT ON  THE  WAVES


அம்மா.. அக்கா .. நான்

அம்மா &  அப்பா

Tuesday, September 27, 2016

907. மதுரை தினமலரில் என் நூலைப் பற்றிய குறிப்பு


சென்னை தினமலரில் என் நூலைப் பற்றிய ஒரு குறிப்பு வெளி வந்திருந்தது. அதே குறிப்பு இப்போது மதுரை தினமலரிலும் வந்துள்ளது.



*







 ***

Friday, August 19, 2016

906. தினமலரில் என் நூல் பற்றிய ஒரு சிறு குறிப்பு






*





அதிக எண்ணிக்கையில் உள்ள மத நம்பிக்கையாளர்களுக்கு ’எரிச்சல்’ தரும் நம் புத்தகத்தைப் பற்றி எந்த பத்திரிகையும் செய்தி வெளியிடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு தமிழ் நாளிதழில்,.. அதுவும் off all dailies தினமலரிலேயே என் நூல் பற்றிய செய்தி வந்ததும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 

மகிழ்ச்சி!

நன்றி

*




Wednesday, August 17, 2016

905. சினிமாவுக்குப் போன சின்னப் பையன்





*

'திண்ணையில உட்காரச் சொன்னா கெடக்கி இரண்டு ஆடு கேட்பானாம்' அப்டின்னு ஒரு பழமொழி உண்டு அல்லவா? நம்ம கேசும் அதே தான். இதுவரைக்கு வாழ்க்கையில் கிடைக்காத ஒரு வசதியான அறை. ஏற்கெனவே சொன்னது போல் இது வரை பார்க்காத மேசை, நாற்காலி வசதி, தலைக்குமேல் சுற்றும் விசிறி … இப்படி எல்லா வசதியும் கிடைத்தது.இத்தனை வசதிக்கு நல்லா படிக்கிற ஒரு நல்ல பையனுக்குக் கிடச்சிருந்தா .. .. படிப்பில பின்னியிருந்திருப்பான்.

நான் இந்த அறைக்கு வந்த பின் என் சீனியர் ஒருவரும் வந்து சேர்ந்து கொண்டார். அவர் ரொம்ப நல்லவரு. அதிகம் பேசமாட்டார். அவர் வீட்டில் ஐந்து பிள்ளைகளாம். இவர் தான் மூத்தவர். இவர் மட்டும் படிப்பில் மட்டம். மற்ற பிள்ளைகள் எல்லோரும் மகா சுட்டிகளாம். வீட்டில் இதனால் இவருக்கு ‘திகுடு ..முகுடா’ நிறைய கிடைக்கும் போலும். ஆகவே இப்படியாவது படிப்போம் என்று சாமியாரிடம் கேட்டு சேர்ந்து கொண்டார்.

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறை அந்த காம்பஸின் கடைசியில், மேற்கு மூலையில் இருந்தது. அதை ஒட்டி காம்பவுண்டு சுவர். எங்கள் ‘முன்னோர்கள்’ எங்களுக்கு வைத்து விட்டுப் போயிருந்த இன்னொரு வசதி என்னவென்றால், எங்கள் அறையை ஒட்டிய காம்பவுண்ட் சுவற்றில் ஏறிக் குதிப்பதற்குரியவாறு அங்கங்கே செங்கல்கள் பெயர்ந்திருக்கும். நாங்கள் அந்த காம்பஸுக்குள் வருவதற்கு இதுவே சுலப வழி எங்களுக்கு. ஒரு டீ குடிக்கணுமா, ஒரு ‘இழுப்பு’ இழுக்கணுமா, சும்மா ஒரு ஜம்ப்; அவ்வளவுதான். எங்களுக்குத்தான் அத்தனை சுலபம். எல்லாருக்கும் அப்படியெல்லாம் முடியாது. எங்கெங்கே செங்கல்லில் ஓட்டை, இன்னும் பல விஷயம் அதில…லேசுப்பட்ட டெக்னிக் இல்ல.

இப்படியெல்லாம் ஏறிக் குதித்து, டீ & தம் அடித்து அதோடு சேர்த்து ஏதோ போனா போகுதுன்னு, அப்பப்போ கொஞ்சம் படிக்கவும் செய்வேன். இதுக்கும் மேலே இன்னொரு சோதனையும் சேர்ந்து கொண்டது. பள்ளிப்படிப்பு முடியும் வரை வீட்டுக்குத் தெரியாமல் கள்ளத் தனமாக சினிமா ஏதும் பார்த்த்தில்லை. கல்லூரி வந்த பிறகும் இதே மாதிரி ‘நல்ல பிள்ளை’யாகத்தானிருந்தேன். வீட்டிலும் ‘படிக்கப்’ போனாலும் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்து விட வேண்டுமென்ற கண்டிப்பு உண்டு. சினிமாவிற்குப் போக வேண்டுமெனில் வீட்டிலிருந்து 6 மணிக்கு முன்பே புறப்படணும் … படம் முடிந்து வீட்டுக்கு எவ்வளவு வேகமாக சைக்கிளில் வந்தாலும் ஒன்பதரையைத் தாண்டி விடும்.

இந்தப் பிரச்சனையை நண்பன் ஒருவனிடம் சொல்லிக் கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு ‘ஞானோதயம்’! ஆங்கில சினிமாவின் நல்லதும் கெட்டதும் அப்டின்னு ஒரு பிரசங்கம் கொடுத்தான். அப்போதெல்லாம் ஆங்கிலப்படம் என்றால் ரீகல் தியேட்டர் மட்டும் தான். நியூஸ் போட்டு 7 அல்லது ஏழே கால் மணிக்குப் பிறகு தான் மெயின் படம் ஆரம்பிக்கும். எப்படியும் எட்டேமுக்காலுக்குள் படம் முடிந்து விடும். என் வீட்டுக்கும் தியேட்டருக்கும் அந்தக் காலத்தில் 10 நிமிஷத்தில் விரட்டிப் போய்ச் சேர்ந்து விடலாம். இப்படி ஒரு ஐடியா கொடுத்தான். எனக்கு ஒரு பெரிய சந்தேகம். ஒன்றிரண்டு ஆங்கிலப் படம் பார்த்த போது வர்ர ஆளுக மூஞ்சியெல்லாம் ஒரே மாதிரியாகவே தெரியும். ஆக, போன சீன்ல செத்துட்டான்னு நினச்சவன் அடுத்த சீன்ல தலையைக் காட்டுவான். இந்தக் குழப்பம் வேற இருந்தது. அதெல்லாம் பார்க்க சரியாகி விடும் என்றான் நண்பன்.

அதோடு நிற்காமல் ஒரு படம் இப்போ ஓடுது. கட்டாயம் பார்த்து விடு என்றான். நானும் முதன் முதல்ல ஒரு ஆங்கிலப் படம் வீட்டுக்குத் தெரியாமல் ரீகல் தியேட்டருக்குப் போனேன். இந்த தியேட்டரில் அந்தக் காலத்தில் படம் பார்ப்பதே ஒரு பெரிய experience. நிறைய ஆச்சரியங்கள் அங்கிருக்கும். அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள இங்கே கொஞ்சம் போய்ப் பாருங்களேன்.  Rank Organization… Norman Wisdom நடித்த On The Beat  என்ற படம் தான் வீட்டுக்குத் தெரியாமல் நான் பார்த்த முதல் ஆங்கிலப்படம்.




பார்த்த்துமே ‘பச்சக்’குன்னு படம் பிடிச்சிப் போச்சு … என்னா காமெடி .. நாகேஷ் காதலிக்க நேரமில்லை படத்தில் தன் மேசையில் இன்னொரு பெரிய ஹாலிவுட் காமெடி நடிகரான Jerry Lewis பட்த்தை மட்டும் தான் வைத்திருப்பார். ஆனால் அவரின் நடிப்பில் Norman Wisdom சாயல் நிறையவே இருக்கும். A stitch in time என்று நினைக்கிறேன். Norman Wisdom நர்ஸாக நடித்திருப்பார். நாகேஷின் நீர்க்குமிழி படம் என்றும் நினைக்கிறேன். ஏறத்தாழ அதே கதை… ஒரு சிறு குழந்தையோடு – குட்டி பத்மினி? ரொம்ப ஒற்றுமையாக இருக்கும். 

அடேயப்பா … On The Beat ஆங்கிலப் படம் பார்த்ததே முதல் பெரிய வெற்றி. நல்ல ஆரம்பம். படம் பிடித்துப் போய் அப்பாவுடன் அடுத்த நாள் மதிய சாப்பாடு சாப்பிடும் போது ஒரு நல்ல சீன் நினைவுக்கு வந்து நான் சிரிக்க … அப்பா என்ன என்று கேட்டதும் எதையோ ஒரு பொய் சொல்லிச் சமாளித்ததும் நினைவுக்கு வருகிறது. முதல் வெற்றிக்குப் பிறகு அடிக்கடி ரீகல் போவது பழக்கமாகி விட்டது.

இப்போது தமிழ்ப்படம் ஓடுவது போல் அப்போது ஆங்கிலப்படங்கள் ஓடின. அதாவது இப்போதெல்லாம் தமிழ்ப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளிவரும். அடுத்த திங்கட்கிழமை அதே படம் ஓடுமா என்பது நிச்சயமில்லை. இது மாதிரி அந்தக் காலத்தில் வெள்ளி வரும் ஆங்கிலப் படம் ஒரு வாரப் படமாக இருக்கலாம். அல்லது இரு நாட்களுக்கோ மூன்று நாட்களுக்கோ ஓடும். ஒரு வாரத்திற்கு மேல் ஆங்கிலப்படம் ஓடுவது கிடையாது. ஆக வாரத்தில் எப்படியும் ஒரு படமாவது பார்த்திடலாம்.

 கல்லூரி வாழ்க்கையில் ஆங்கிலப்படம் பார்ப்பது மாமூல் விஷயமாகிப் போனது. காமெடி பட்த்தில் ஆரம்பமாகி, war படம் அது இதுன்னு வளர்ந்து போச்சு.

படிப்பு ஒரு ஓரமா ஒதுங்கி நடந்து வந்தது.




*