Friday, August 21, 2026

1390.மாசாத்துவான் கதை - கோவி

பின் நவீனத்துவக்கதையை கல்லூரி மாணவர்களுக்கு வைக்க வேண்டும் அவர்கள் பின்நவீனத்துவம் என்றால் என்ன என்பதற்கு உரிய எடுத்துக் காட்டு எளிதில் புரியும் அருமை. அருமை. தெக்குத்தி ஆட்களுக்கே உள்ள எள்ளல் புதுமைப்பித்தன் தான் உச்சம் தற்போது பேராசிரியர் கிண்டலில் திளைக்கிறது.

1389. என் கதை - ஒரு செய்தி

இளங்கோ கண்ணன்  எழுதியது  ...


ஐயா வணக்கம். நலமா?

தங்களின் 'என் கதை'யை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

முன்னும் பின்னுமாக நகர்ந்தாலும் படிப்பதற்கு விறுவிறுப்பான ஒரு புதினத்தைப் போலவே இருக்கிறது. 

என்னுடைய எழுத்து சிந்தனையும் தங்களுடையதும் ஒன்று போலவே இருக்கின்றன. அதற்காக நான் என்னை தங்களுக்கு இணையாகச் சொல்கிறேன் என்று நினைத்து விட வேண்டாம். எனக்கு அதில் ஒரு சிறு மகிழ்ச்சி, அவ்வளவுதான்.

அங்கங்கே சிறு பிழைகளும் தென்படுகின்றன; அவற்றைக் குறித்துக் கொண்டு வருகிறேன்.

'தருமி'யிடம் குறை காண்பதால் நான் நக்கீரன் அல்ல! புத்தகம் மேலும் மெருகேற வேண்டும் எனும் நோக்கத்தில்தான்.

'திராபை' எனும் சொல்லை, சில நாட்களுக்கு முன் சொக்கன் அவர்களின் 'நல்ல தமிழில் எழுதுவோம்' நூலிலும் பார்த்தேன். தங்கள் நூலிலும் அந்தச் சொல் வருகிறது.

க்ரியா தமிழ் அகராதியைத் துழாவியபோது, பயனற்றது / கழிசடை எனும் பொருளை அதன் மூலம் …

Monday, August 17, 2026

1388. பின் நவீனத்துவத்தில் மாசாத்துவான் கதை




  பின் நவீனத்துவத்தில் மாசாத்துவான் கதை




என்ன இது .. நவீனத்துவம் என்றெல்லாம் பேசுகிறேனே என்று யோசிக்கிறீர்களா? வேறொன்றுமில்லை சிறிது வித்தியாசமாக இருந்தால் அது பின் நவினத்துவம் என்று நான் இதுவரை கருதி வந்திருக்கிறேன். இங்கே மாசாத்துவானைப் பற்றி பேசப் போகிறோம். ஆகவே இந்தத் தலைப்பை வைத்தேன். சரியா தவறா என்று கடைசியில் சொல்லுங்கள்.


கோவலன் மிகவும் பிரபலமான செல்வந்தன். நகரச் செல்வந்தர்கள் குழுவின் தலைவனாகவும் இருந்தவன். செல்வத்திற்குக் குறைச்சல் இல்லை. செல்வம் சேரும்போது இளைஞர்களுக்கு வரும் பல்வேறு புதிய பழக்க வழக்கங்களும் அவன் மேல் ஏறி உட்கார்ந்தன. அதில் ஒன்று நாட்டியக் கலையின் மேல் அவனுக்கு அப்படி ஒரு அபிமானம். அந்த ஆட்டம் அவனுக்குப் பிடித்தது. ஆனால் நாளாவட்டத்தில் ஆடிய ஒரு பெண்ணையும் அவனுக்குப் பிடித்தது. தொல்லை என்னவென்றால் அந்தப் பெண்ணுக்கும் அவனைப் பிடித்தது. வீட்டிலோ கண்ணகி. பதிவிரதை. அடங்கிய மனைவியாக வீட்டில் இருந்தாள். அதைவிட தன் மாமியார் மாமனாருக்கு ஒரு மகளாகவே இருந்தார். மாமனாருக்கு தன் மருமகள் மேல் அத்தனை பாசம்.


கோவலன் சிறிதாகவே திசை மாறும் பொழுதுமே அவரது தந்தை மாசாத்துவானுக்கு அது அறவே பிடிக்காத ஒன்றாக ஆகிவிட்டது. மகனைக் கூப்பிட்டுப் பேசினாராம். பையனோ இப்போது வளர்ந்த பிள்ளை. கட்டுக்குள் அடங்குவானா? அதுவும் பெரிய செல்வந்தன். நாடெல்லாம் அவன் பேச்சை நம்புகிறது அவனை மிகவும் உயரத்தில் வைத்து அவனது சமூகம் களித்துக் கொண்டிருக்கிறது. அவன் காதில் தந்தையின் மந்திரம் எப்படி ஏறும். ஏறவில்லை. தந்தை கோபித்தார். பையன் தான் விரும்பிய நாட்டியக்காரியான மாதவியின் பக்கம் முழுவதுமாக ஒதுங்கி விட்டான்.

 

மாசாத்துவானுக்கு பெரிதும் மன அழுத்தம் வந்தது. தான் எதிர்த்து பேசியதாலே தன் மகன் இவ்வாறு தன் மனைவியை விட்டுவிட்டு மாதவியின் பக்கம் சென்று விட்டானோ என்ற மனப்பழு அவருக்கு அதிகமாக இருந்தது. இதனால் கண்ணகியின் மேல் அவர் ஏற்கனவே வைத்திருந்த பாசம் மேலும் வளர்ந்து, என் மகள் வாழ்க்கையை நானே கெடுத்து விட்டேனோ என்று தன்னைத்தானே நொந்துகொள்ளும் அளவுக்கு அவர் மாறிவிட்டார்.

 

ஆனால் கோவலன் இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. தன் வியாபாரத்தை செழிப்பாக்கினான் பெருக்கினான் ஆனால் அதோடு மாதவியோடு இருந்த தொடர்பையும் மேலும் இறுக்க மாக்கிக்கொண்டான்.


ஏற்கனவே மாதவியின் நாட்டியம் அனைவரையும் மிக எளிதாக கவரக்கூடிய ஒன்றாக இருந்தது. இப்போது கோவலனோடு சேர்ந்த பிறகும் அவள் சோர்ந்து போகவில்லை இன்னும் நடனத்தில் மேலும் மேலும் நெருகேற்றிக் கொண்டிருந்தாள். அந்தக் கலையின் உச்சத்திற்குச் சென்ற அந்தப் பெண் நாட்டிய விழா ஒன்றை எடுத்தாள். நடுநாயகமாக தன்னை வைத்து அந்த விழாவை பெருமளவில் நடத்திக் காண்பித்தாள். கோவலன் தன் தாயையும் தந்தையையும் வற்புறுத்தி அந்த விழாவுக்கு அழைத்திருந்தான். மாதவி ஆடினாள். வந்த அனைவரையும் தன் ஆட்டத்தினால் அவள் சொக்க வைத்தாள்

விழா முடிந்த நேரத்தில் மேடையை விட்டு இறங்கிய மாதவி தன்னை கௌரவிக்க வந்திருந்த பெரியவர்கள் அனைவரையும் நேரிடையாக சந்தித்து அவர்களுடைய வாழ்த்தை பெற்றுக் கொண்டிருந்தாள். வரிசையாக அவள் வந்து கொண்டிருந்த பொழுது அங்கே மாசாத்துவானும் அவனது திருமதியும் நின்று கொண்டிருந்தார்கள். மாசாத்துவான் அவள் வரும்பொழுது தன் தலையைத் திருப்பி வேறெங்கோ பார்ப்பது போல் அவள் கண்களைச் சந்திக்காமல் தவிர்த்தார். ஆனால் திருமதி மாசாத்துவான் மாதவியை வாழ்த்திக் கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டு முதுகில் தட்டிக் கொடுத்து தன் அன்பை எல்லாம் வெளிக்காட்டினார்..


விழா முடிந்தது. வீட்டிற்கு வந்த மாசாத்துவான் தன் மனைவியை பார்த்து இதெல்லாம் உனக்குத் தேவையா? நீ செய்தது சரியா என்று கேட்டார். அவரது மனைவிக்கு முதலில் புரியவில்லை ஏன் என்ன செய்து விட்டேன் என்று கேட்டார் மாதவியை இவ்வாறு பொதுவெளியில் அணைத்து உன் அன்பை வெளிக்காண்பிக்க வேண்டுமா என்று கேட்டார். இல்லை... எதிரில் வந்து நின்றாள் ஆகவே அப்படி செய்தேன் என்று அசடு வழிந்தார். மாசாத்துவான் பொது வெளியில்  அவளை அணைத்தாய்; வாழ்த்தினாய்; எந்த முறுமுறுப்பும், எதிர்ப்பும் நீ காண்பிக்கவில்லை. ஆகவே மக்கள் என்னவென்று நினைப்பார்கள் கண்ணகி இருக்கும் பொழுது மாதவியிடம் சென்ற தன் மகனை இந்தத் தாய் அதனை ஒரு குற்றமாகக் காணவில்லை. அதையும் விட அந்த உறவை அவர் ஒத்துக் கொண்டு ரசிக்கிறாள் என்று தானே அனைவரும் யோசிப்பார் கள். She is not worth it. இது உனக்குப் புரியவில்லையா என்று கேட்டார். மனதிற்குள் என்ன நினைத்தாரோ திருமதி மாசாத்துவான். பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.. உன்னைத்தான் மட்டமாக மக்கள் எடை போடுவார்கள் என்றார் மாசாத்துவா
ன். அதோடு உன்  மீதான character assassination நிச்சயமாக அதிகமாக நடக்கும்; பார்த்துக் கொண்டேயிரு என்றார் மாசாத்துவான்.

 

ஒரு பழைய இதிகாசக் கதைக்கு ஒரு ஆங்கிலச் சொற்றொடரை சேர்த்து இந்தக் கதையை ஒரு பின்னவீனத்துவக் கதையாக மாற்றி விட்டேனே. பார்த்தீர்களா? இதைத்தான் நான் முன்பே தலைப்பில் சொன்னேன் இது ஒரு பெரிய பின் நவீனத்துவக் கதை என்றேன்.


கதையின் முழு சாராம்சம் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். புரிந்து விட்டதா?

 

பி.கு. யாரப்பா அது? ஏதோ தப்பான ஒரு படத்தை இக்கதையோடு இணைத்து விட்டார்களே?


 

 


Wednesday, August 12, 2026

1387. என் கதை





















Sunday, August 02, 2026

1386. நீட் தேர்வுகளின் நீட்சி மாறுமோ?

நீட் தேர்வுகளின் நீட்சி மாறுமோ?

 

· 


    தொடர்ந்து நமது அரசியல்வாதிகளின் தவறுகளால் நாமும், நம்  குடியரசும் பல்வேறு பள்ளங்களில் விழுந்தெழ வேண்டிய சூழல் தொடர்ந்து உருவாகிக் கொண்டே வருகின்றது. இந்த குற்றவாளிப் பட்டியலில் நான் அம்பேத்கரையும் அடக்கியுள்ளேன். நமக்குக் கிடைத்த அரசியல் சட்டமைப்புச் சட்டம் பெருங்குறைகளுடன் உள்ளதால் அதன்  எதிரொலி இன்று நடைமுறையில் நம்மைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. நாம் வாக்களித்து நமது முதலமைச்சரைக் கொண்டு வருகிறோம். ஆனால் அவரை விட ஒன்றிய அரசின் ஏஜெண்டாக இருக்கும் ஆளுநர் அதிக அதிகாரமும், அரசியல் வலிமையும் கொண்டவராக உள்ளார். இது எப்படி ஒரு அரசியல் நியாயமாக இருக்க முடியும். மெட்ரோ ரயிலுக்குப் பிச்சை எடுத்தாலும், இல்லையென்ற பதிலே திரும்பவும் வருகிறதே; ஏன்? இந்தக் கேள்வியை. அம்பேத்கரும் அவர் எழுதிய நமது அரசியலமைப்புச் சட்டமும்NEE (https://dharumi.blogspot.com/2021/05/1167.html) என்ற எனது பழைய கட்டுரை ஒன்றில் முன் வைத்துள்ளேன். கூகிளில் தேடிப் படிக்க அழைக்கிறேன்.

** அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் கல்வி நமது மாநில விருப்புப் பட்டியலில் இருந்தது. மொழிகளால், இனங்களால் வேறுபட்ட பல்வேறு மக்கள் வாழும் இந்த நாட்டில் இது மிகச் சரியான ஒன்றாக இருந்தது, ஆனால் இந்திரா காந்தி அவரது நெருக்கடி கால நடவடிக்கைகளில் ஒன்றாக அதை பொதுப் பட்டியலுக்கு மாற்றினார். அதன் இறுதி நடவடிக்கையாக இப்போது நம்மைத் துன்புறுத்துவது நீட் தேர்வுகள். ஏனெனில் இப்போது நம்மிடம் இருக்க வேண்டிய கல்வி அதிகாரம் முழுமையாக ஒன்றிய அரசிடம் போய்ச் சேர்ந்து விட்டது.

*** R.S.S. Syndrome  இப்போது நம் நாட்டை ஒட்டிப் பிடித்திருக்கும் நோய்.  இந்த அமைப்பே நம் நாட்டில் இப்போது தன் அசுர ஆட்சியை நடத்திக்  கொண்டிருக்கிறது. பா.ஜ.க. அதன் ஊரறிந்த ரகசியப் பிள்ளை. R.S.S. கொள்கைகளையை வழி நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே மோதியும், அமித் ஷாவும், இந்த அமைப்பின் உள்ளார்ந்த கொள்கைகள்  அகண்ட பாரதம்; ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே இனம்; ஒரே உணவு; ஒரே கலாச்சாரம் ... இதையும் தாண்டி 3:97 தத்துவம் வேறு உண்டு. (புரிகிறதா?)  இந்த சாதிப் பிரச்சனையில் மட்டும் “ஒரே சாதி”  என்ற நிலைமையில்லை; பதிலாக,  சாதியப் படிநிலைகளை உறுதியாக வைக்க வேண்டும் என்பதே இவ்வமைப்பின் அடிப்படைக் கொள்கை. இப்படியே நீண்டு செல்லும் அந்தப் பட்டியல்.  இங்கிலாந்து. பிரான்ஸ் போன்ற நாடுகளில் அண்மையில் குடியேறிய ஆட்களைத் தவிர்த்தால் அங்குள்ள மக்கள் பொதுவாக அனைவரும்  ஒரே மொழி பேசும் ஒரே இனத்து மக்கள். அங்கு மொழிப்பிரச்சனை கிடையாது, இனப் பிரச்சனைகள் கிடையாதுல் சாதிப் பிரிவினைகள் கிடையாது. ஆனால் நாம் பல்வேறு மொழி பேசும் பல்வேறு இனத்து, பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் நிறைந்த ஓர் ஐக்கிய நாட்டில் வாழ்கிறோம். இங்கு ஒற்றைத் தன்மையைக் கொண்டு வரவேண்டும்; அதில் தலைமக்களாக 3% இருக்க வேண்டும் என்பது விஷமத் தனமானது என்பதை விட விஷத் தனமானது என்றே கூற வேண்டும்.

நாட்டில் நடக்கும் அனைத்திற்கும் ஒரே ஒரு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் எப்று இந்த அரசு வலியுறுத்துகிறது. இந்த முயற்சிகளின் இப்போதைய குவியமாக நீட் தேர்வுகள் இருக்கின்றன. இந்தத் தேர்வுகளுக்கு முன்பு பற்பல நுழைவுத் தேர்வுகள் நடந்தன; capitation fees என்ற பெயரில் பணப் பர்மாற்றங்கள் இருந்தன; தனியார் கல்லூரிகள் பணம் கொழிக்கும் இடங்களாக இருந்தன; இந்த இடர்பாடுகளை நீக்கும் என்று ஒரு தேசிய நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு அனைத்து மாநில மக்கள் மீது திணித்துள்ளது. இதை தமிழ்நாடும் அதன் அரசும் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்துள்ளன.

ஒரே தேர்வு என்று கொண்டு வந்து அதற்கு CBSC பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்தது. இதுவே முதல் தவறு. ஓர் அனைத்திந்திய திட்டம் என்றால் அதை இப்படி நட்ட நடுவில் ஏதோ ஒரு வகைப் படிப்பை அடிப்படையாக வைப்பது தவறு. நம் மாநிலத்தைப் பொறுத்தவரை இந்த CBSC பாடத்திட்டம் தனியார் பள்ளிகளிலும், அதிகப் பணம் கட்டிப் படிக்கும் “உயர்தரப்” பள்ளிகளிலும் மட்டுமே நடைமுறைப்படுத்துகின்றன. சாதாரண மக்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளை நம்பியிருக்கும் போது உயர்கல்விக்கு அவர்கள் இத்தகைய நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வது ஏறக்குறைய முடியாத ஒன்று.  இடுக்கில் நுழைவது போல் திடீர்ரென்று CBSC தரம் என்று கொண்டுவந்தால் இங்குள்ள சாதாரண பள்ளிகள், அங்கு பயிலும் பிள்ளைகள் நிலை என்று எதுவும் யோசிக்காமல் கொண்டு வந்த திட்டம். இதனால் கொழித்தது நீட் தேர்வுகளுக்காக நடத்தும் தனியார் பயிற்சிக் கூடங்கள். லட்சக் கணக்கில் பணம் கட்டி, ஓராண்டிற்கும் மேலாக அங்கு பயிற்சி எடுக்க வண்டிய கட்டாயம் வந்தது. செல்வந்தர்களால் பணம் செலவு செய்ய முடியும். மற்றவர்கள் ..?

இதைவிட இன்னொரு மிக மோசமான முறையும் உள்ளது.  சென்ற ஆண்டு தேர்வு நடந்து அதிலிருந்து கிடைத்த தரவுகள்:

Stage

Candidates

Registered

22,79,743

Actually appeared

19,99,895

Qualified NEET

11,21,185

Total MBBS seats (Govt + Private)

1,36,939

Government MBBS seats

63,297

Private MBBS seats

73,643

22 லட்சம் பேர் எழுதி, பதினோரு லட்சம் பேர் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் மருத்துவ இடங்கள் வெறும் 1 லட்சத்து முப்பத்தியாறு பேர் மட்டுமே.  அதில் 63 ஆயிரம் பேர் மட்டுமே அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடம் பெறுவார்கள். இந்த இடத்திற்கு மட்டும் வெற்றி பெற்ற மாணவர்கள் தர வரிசைப்படி இடம் பெறுவார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 73 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு  தகுதி பெற்ற பட்டியலிலிருந்து எந்த தரத்திலும் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் பணம் பெற்று சேர்க்க முடியும். capitation fees என்ற பெயரில் நடந்த பழைய முறை மீண்டும் இங்கு எளிதாக, சட்ட பூர்வமாக நடந்தேறும் அவலம் நடக்கும். புதுப் புது “கல்வித் தந்தைகள்”  தோன்றுவார்கள். ஏன் இங்கும் தரம் பார்க்கப் படக் கூடாது; தேவையில்லை என்பது என்ன நியாயமோ தெரியவில்லை. அதிகப் பணம் .. அது மட்டும் தான் மீதியுள்ள 73 ஆயிரம் இடங்களுக்கான தேவை.இதனால் கல்வி பணக்காரர்களுக்கு மட்டுமே என்கிற வலதுசாரிக் கொள்கை, R.S.S. கொள்கை வலுப் பெறுகிறது.

நமது ஒன்றிய அரசு நடத்தும் பல்வேறு முயற்சிகள் பொதுவாகவே பணக்காரர்களுக்கான அரசு இது என்பதை நிலை நாட்டுகின்றன. தேசியச் சொத்துகளை விற்பதோ, பல்வேறு தடங்கல்களை கல்வித் துறைக்குள் கொண்டுவருவதோ ஒரு சில சாதியனருக்குத் தோதாக அமைந்து விடுகிறது. பனியாக்கள் செல்வந்தர்கள் ஆகிறார்கள். 3% மக்களின் கருத்துகளுக்கு ஏதுவாக கல்வி அடித்தட்டு மக்களுக்குச் செல்லாமல் அதிலும் சாதிய வேறுபாடுகளைக் கொண்டு வந்து அடிபட்ட மக்களை மேலும் அடித்து மேலே வர முடியாமல் செய்யும் திறன் இந்தத் திட்டங்களுக்கு உண்டு.

நீட் தேர்வுக்கு எதிரான கருத்துகள் இன்னும் நிறையவே உண்டு. அதில் ஒரு முக்கியமான கருத்தை மட்டும் இங்கே சொல்ல ஆசைப்படுகிறேன். மாணவர்களின் 16-18 வயதில் இந்தத் தடங்கல்களுக்கு உள்ளாகிறார்கள். ஆசையோடு விருப்பப்பட்டதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் போய் அனைத்துக் கோணங்களிலிருந்தும் அவர்களுக்கு வரும் அழுத்தங்களை நினைக்கும் போதும், இந்தப் படிப்பு படிக்கணும் என்ற பெற்றோரின் வெறி அவர்களை அழுத்தும் போதும் ... பாவம், இந்தப் பிள்ளைகள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

நம் பிள்ளைகளுக்கு விடியும் பொழுது எப்போது வருமோ?