தருமி எழுதிய "என் கதை" தன் வரலாறு புத்தகம் | Tharumi's En Kathai Tamil Biography Book Review | ச.வின்சென்ட் | www.bookday.in

தருமி எழுதிய “என் கதை” – நூல் அறிமுகம்

“என் கதை” – நூல் அறிமுகம்

தன் வரலாறு என்பது ஒருவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுவதாகும். அவர் பிறந்து வளர்ந்த நாளிலிருந்து அவர் இந்த நூலை அல்லது வாழ்க்கைத் தொடரை எழுதுவது வரையிலான நிகழ்வுகளை இந்தத் தன் வரலாறு கொடுக்கும். இது பெரும்பாலும் கால வரிசைப்படி ஒருவரது வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும். சில வேளைகளில் தன்வரலாற்று ஆசிரியர் கால வரிசைப் பிரகாரம் போவார். சில வேளைகளில் முன்னும் பின்னுமாகப் போவார். அதாவது, இப்போது நடக்கின்ற நிகழ்ச்சியைச் சொல்லிவிட்டு பிறகு பழைய நிகழ்ச்சிக்குப் போய்த் திரும்பவும் இடைப்பட்ட காலத்திலுள்ள நிகழ்ச்சிக்கு வருவார். இது ஒரு வகை.

நாம் இன்று எடுத்துக் கொண்டிருக்கின்ற நூல் தருமி எழுதிய என் கதை என்பதாகும். இதில் தருமி தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார். அது ஒரு நேர்கோட்டில் இல்லை. கால வரிசையில் முன்னும் பின்னுமாகப் போய் வருகிறது. தருமி என்ற புனைபெயரில் எழுதுகின்ற பேராசிரியர் சாம் ஜார்ஜ் பல தருணங்களில் தனது வலைப்பூவில் எழுதி வந்த வாழ்க்கை நினைவுகளைத் தொகுத்து என் கதையாக வெளியிட்டிருக்கிறார்.

சாம் ஜார்ஜ் பிறந்த சிறிது காலத்தில் அவருடைய அன்னையார் இறந்து விடுகிறார். கிராமத்திலுள்ள தன்னுடைய பாட்டியின் வீட்டில் வளர்கிறார். தொடக்கப் பள்ளிப்படிப்பு அங்கேதான். அந்தக் கிராமத்து அனுபவங்கள் அவரை உருவாக்குகின்றன என்று கூடச் சொல்லலாம். அதன் பிறகு அவருடைய தந்தை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். அவருடைய தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். அவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிறகு தன்னுடைய மகனைத் தன்னோடு அழைத்துக் கொள்கிறார். அவர் பணியாற்றிய, சாம் ஜார்ஜ் படித்த, தூய மரியன்னைப் பள்ளியருகில் ஒரு வீட்டில் குடியிருக்கிறார்கள். அப்போது எல்லாம் ஆசிரியர்களுக்கு மிகக் குறைவான சம்பளம். அதனால் அவர்கள் கொஞ்சம் சிக்கனமாக இருக்க வேண்டியிருந்தது. இந்த அனுபவத்தை பதினாறு ஆண்டுகள் அந்த ராஜமாளிகையில் வாழ்ந்ததாக அவர் நகைச்சுவை உணர்வோடு விளக்குகிறார்.

அவருடைய வாழ்வில் நடந்த பல விஷயங்களை எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொல்லி வருகிறார். திடீரென்று அவர் கல்லூரியில் பணியாற்றியபோது அவருக்கு நடந்த இதய அறுவைச் சிகிச்சைகளைப் பற்றி விவரிக்கத் தொடங்குவார். அறுவைச் சிகிச்சை மூன்று முறை நடந்திருக்கிறது. மூன்று முறையும் அவர் பிழைத்திருக்கிறார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதைப் பற்றியும் அவர் சொல்கிறார். இவற்றை எல்லாம் நம்மிடத்தில் ஓர் இரக்க உணர்வை ஏற்படுத்தக்கூடிய முறையில் அவர் சொல்லவில்லை. இவற்றை அன்றாட நிகழ்ச்சிகள் போலப் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்.

அவர் கல்லூரிப் படிப்பை முடித்து, பூண்டி வாண்டையார் கல்லூரியில் ஒரு விளக்குநராகத் தனது ஆசிரியர் பணியைத் தொடங்குகின்றார். பிறகு மதுரைக்கு வந்து விடுகிறார். மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றுகிறார். அந்தக் காலகட்டத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்குகிறார்கள். அந்தப் போராட்டத்தின் போது பல ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால் சிறை Open சிறை. திறந்த வெளிச்சிறை. ஏனென்றால், அத்தனை பேரையும் அடைக்க மதுரைச் சிறைச் சாலையில் இடம் இல்லை. சாமும் போராட்டத்தில் இறங்கி சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார். அந்த அனுபவத்தையும் தருமி எழுதுகிறார். அவருடைய நடிகனாக ஆக வேண்டும் என்ற ஆசை எப்படி நிறைவேறிற்று என்பதை இரண்டு கட்டுரைகளில் விவரிக்கிறார்.

விலங்கியலில் பட்டம் பெற்ற பிறகு மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டுமென்று நேர்முகத் தேர்வுக்குப் போனார். இடம் கிடைக்கவில்லை. ஆனால் மருத்துவராக வேண்டும் என்ற அவரது ஆசை திரைப்படத்தில் மருத்துவராக நடித்தபோது நிறைவேறிற்று.

பிறகு மீண்டும் அவருடைய கல்லூரி வாழ்க்கையின் போது அல்லது பள்ளிக்கூட வாழ்க்கையின் போது அவர் பழகிய இடங்களைப் பற்றிச் சொல்லுகிறார். அப்போது அந்தக் காலத்தில் அவருக்கு ஏற்பட்ட நட்பு வட்டம் வருகிறது. அந்த நண்பர்கள் எல்லாம் எத்தனை பேர் இன்னும் இருக்கிறார்கள், எத்தனை பேர் காணவில்லை என்பதைக் கொஞ்சம் நெகிழ்ச்சியோடு சொல்லுகின்றார். காணாமல் போனவர்கள், இல்லாமல் போனவர்கள், தொடர்பில் இல்லாதவர்கள் ஆகியோரைப் பற்றி nostalgic நினைவுகள். அவர் சிறு குழந்தையாக இருக்கின்ற போது அவருடைய அன்னையார் இறந்ததை நினைவு கொண்டபோது ஏற்பட்ட நெகிழ்ச்சி போன்றது இது. இவற்றை உணர்ச்சியத் தூண்டுவதாக ஒரு sentiment ஐத் தூண்டுவதாக ஆவர் ஆக்கவில்லை. அவருடைய பிறந்த ஊருக்குப் போனதைப்பற்றிய அனுபவங்களைச் சொல்லுகிறார். பிறகு, அவருடைய கல்லூரிப் பேராசிரியர் வாழ்க்கை நிகழ்ச்சிகள், அங்கே ஏற்பட்ட நட்புகள், அவர் பல வேலைகளிலே மேற்கொண்ட செயல்பாடுகள் ஆகியவையெல்லாம் வருகின்றன. அவர் எப்படிப் பெரியாரால் ஈர்க்கப்பட்டார், கடவுள் மறுப்புக் கொள்கையை ஏன் ஏற்றுக்கொண்டார் என்பவற்றை விளக்குகிறார்.

ஆக, இருபத்தைந்து இயல்களிலே இவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார். இந்த வாழ்க்கை வரலாறு நான் சொன்னது போல முன்னும் பின்னும் போவதினாலே, நமக்கு அதைப் படிப்பதில் ஓர் ஆர்வம் ஏற்படுகிறது என்று நான் சொல்லுவேன். ஏனென்றால் வரிசைப் பிரகாரம் போனால், Chronological orderல் போனால் அது வரலாறு படிக்கிறது மாதிரி ஆகிடும்.

தன்னுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் துணுக்குகளாகத் தரும்போதே அன்று இருக்கிற அரசியல் சூழ்நிலையைச் சொல்கிறார். அப்புறம் அவர் வாழ்ந்த இடத்திலுள்ள முக்கியமான இடங்கள். அவர் அடிக்கடி போய் வந்த திருமலை, நாயக்கர் மஹால் திரைப்படக் கொட்டகைகள் அன்றிருந்த மாடர்ன் லாட்ஜ், தங்கம் தியேட்டர் இவையெல்லாம் திரைப்படக் காட்சிகள்போல வந்து போகின்றன. ரீகல் டாக்கீசுக்கு வெளியில் Zam Zam Tea stall இல் தேநீர் குடித்ததைச் சொல்லும்போதே நயாப் பைசா நுழைந்த வரலாறு இருக்கும்.

அவருக்கு அனுபவங்கள் தந்த பல இடங்களைப் பற்றியும், மதுரை நகரத்தினுடைய சிறப்புகளைப் பற்றியும் தல புராணமாக வடிக்கிறார். மதுரையில் அந்தக் காலத்தில் இருந்த இடங்கள், இப்போது காணாமல் போய்விட்ட சில இடங்களெல்லாம் வருகின்றன. மதுரை வரலாற்றை இதிலிருந்து படித்துக் கொள்ளலாம். ஆகவே இந்த நூலைப் படிக்கின்ற பொழுது நமக்கு இருபதாம் நூற்றாண்டு மதுரையின் வரலாறு ஓரளவுக்குத் தெரிந்துவிடுகிறது. அதே சமயத்திலே ஒரு கிராமத்திலே பிறந்து, வளர்ந்து, நகரத்திற்கு வந்து படித்து, கல்லூரியில் பேராசிரியராக ஆகி, நல்லதோர் எழுத்தாளராகப் பரிமாணித்தது ஆகியவற்றை எல்லாம் எழுதும்போது அன்றைய அரசியல், சமுதாயச் சூழலையும் அவர் கொண்டு வந்து சேர்க்கிறார். நான் சொன்னது போல எல்லாவற்றிலும் ஒரு நகைச்சுவை உணர்வு இழையோடிக் கொண்டிருக்கும். அதனால்தான் அவருடைய துயர நிகழ்வுகள் கூடப் படிப்பதற்கு இதமாக இருக்கின்றன. இது அவருடைய வாழ்க்கை வரலாறு என்று சொல்லுகின்ற பொழுது பல நூல்களை அவர் எழுதிய அனுபவங்களைப் பதிவிடாதது குறைதான். அவருடைய மொழிபெயர்ப்பு நூல்களான அமீனாவும் பேரரசர் அசோகரரும் அவருக்கு விருதுகளையும் பரிசுகளையும் தந்திருக்கின்றன. அவர் என் கதை நூலுக்கும் விருது பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நூலைப் பன்முக மேடை சிறப்பாக வடிவமைத்திருக்கிறது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:என் கதை
ஆசிரியர்:தருமி
வெளியீடு:
 பன்முக மேடை
விலை:₹.500
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 ச.வின்சென்ட்