நல்ல வேளை ...
அதன் பின் எதுவும் நடக்கவில்லை.
இந்தக் கிழடுகளுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தால் தங்கள் பழைய காலத்துக் கதைகளை
எடுத்து விடுவார்களாமே ... ஆகவே நானும் சில பல கதைகளைச் சொல்லட்டுமா? ரெண்டு பழசு; ஒண்ணு
புதுசுன்னு வச்சுகுவோம்.
முதல் கதை:
பற்பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது, மதுரையிலிருந்து எங்கள் கல்லூரியின் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தில்
நடந்த ஒரு பன்னாட்டுக் கருதரங்கிற்கு வந்திருந்தேன். எங்கள் கல்லூரியில் என்னுடன்
பணிசெய்து கொண்டிருந்த பேரா. சோமசுந்தரம் அப்போது அங்கு தன் முனைவர் ஆய்வை
மேற்கொண்டிருந்தார். அந்த மூன்று நாளும் என்னோடு இருந்து கம்பெனி கொடுத்தார்.
முதல் நாளின் முதல் அமர்வில் கருத்தரங்கை நடத்தியப் பேராசிரியர் அனைவரையும்
அந்த HUMAN ETHICS கருத்தரங்கிற்கு வந்தமைக்கு
வரவேற்று, அதன்பின் வரும் நாட்களில் Hindu ethics,
Christian ethics and Islamic ethics என்ற தலைப்புகளில் யார் யார் பேசுவார்கள் என்ற
அறிமுகம் கொடுத்தார். அதன் பின் கேள்வி நேரம் என்பது போல் சிறிது நேரமளித்தார்கள்.
பேசாமல் இருந்திருக்கலாம்.
நானெழுந்து ethics என்பது
அனைத்து மனிதருக்க்கும் பொதுவானது; அதை மதங்களை வைத்துத்
தனித்தனியாகப் பிரிப்பது சரியா? என்றேன்.
அப்போதிருந்து வந்திருந்த அனைவருக்கும் எதிரியாகி விட்டேன் என்றே தோன்றியது.
அடுத்து காபி டைம். நானும் சோமுவும் ஒரு டீ குடித்துக் கொண்டு நின்றோம். இஸ்ரேலிலிருந்து
வந்திருந்த ஒரு தத்துவப் பேராசிரியர் எங்களோடு சேர்ந்து கொண்டார். அவர் ஏதேதோ
பேசினார். நமக்கும் தத்துவத்திற்கும் என்ன தொடர்பு. தலையாட்டிக் கொண்டிருந்தேன்.
நம்மூர் மாயா பற்றிப் பேசினார். டீ குடித்துக் கொண்டே, எதிரில் தெரியும் கட்டிடத்தைக் கையால்
காண்பித்து “What’s it?”
என்றார்.
நமக்குத்தான் விடை தெரியுமே. “It is just a building”, என்றேன்.
‘No.. the building is not there. It is here..” என்று சொல்லி, தன்
சுட்டு விரலால் தன் முன் நெற்றியைச் சுட்டிக் கொண்டு, the building is here in your brain.. not
there”, என்றார்.
சட்டென்று ஒரு பதில் சொன்னேன்: “go and hit it with your head; you will find
whether it is there or inside your brain”.
உறைந்தார். அடுத்த வினாடி காலி டீ கப்பை வைப்பது போல் அங்கிருந்து சென்று
விட்டார்.
சோமு என்னை முறைத்தார்.
நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.
இரண்டாம் கதை:
1991. Desert Storm என்ற பெயரில் மத்தியகிழக்குப் பகுதியில் நடந்த போரை ஒட்டிய
ஒரு நிகழ்வு அது. அதில் அமெரிக்கா patriot என்ற SAM (Surface air missile) என்ற ஏவுகணைகளையும், அந்நாடு எதிர்த்து நின்ற ஈராக் நாடு Scud என்ற ஏவுகணைகளையும் அப்போரில்
பயன்படுத்தின. இதில் ஸ்கட் ஏவுகணையின் திறம் மிகவும் மட்டமாக இருந்தது. அதனால்
அந்த ஏவுகணைகள் சவுதியையும், இஸ்ரேலையும்
நோக்கி வீசப்பட்டாலும் அவைகளால் இந்த இரு நாட்டிலும் அதிக சேதமில்லை. இஸ்ரேலில் நோய்வாய்பட்டிருந்த என்னைப் போன்ற ஒரு கிழவன்
குண்டு வெடித்த சத்தத்தில் பயந்து உயிரை விட்டதாகச் சொன்னார்கள். வேறு சேதமில்லை.
பிப்ரவரி மாதத்தில் நடந்த போர் அது.
அந்த ஆண்டில், அநேகமாக
அது ஈஸ்டர் திருநாளாக இருந்திருக்க வேண்டும். அன்று இரவுப் பூசை விசேஷமாக
இருக்குமில்லையா? அன்று கோவிலில் இல்லாமல் மதுரை பிரிட்டோ
பள்ளி வளாகத்தில் இரவுப்பூசை நடந்தது. குடும்பம் முன்னால் உட்கார்ந்திருக்க நான் கூட்டத்திற்குப்
பின்னால் உட்கார்ந்திருந்தேன். அப்போது நண்பர் அருளானந்தர் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரும்
என்னோடு உட்கார்ந்திருந்தார். அப்போது பூசையில் பிரசங்கம் கொடுத்த சாமியார் எப்படி
ஏசுநாதர் தம் இனத்தவரான யூதர்களைக் காப்பாற்றினார் என்று கூறிக்கொண்டிருந்தார். கோழிகள்
குஞ்சுகளைத் தன் செட்டையின் கீழ் வைத்துக் காத்தது போல் கடவுள் தன் பிள்ளைகளைக்
காத்துவிட்டார் என்று உணர்ச்சி பொங்கப் பிரசங்கித்துக் கொண்டார். dramatize செய்து அனைவரையும் காப்பாற்றினார் என்பதை விலாவாரியாகக் கூறி, ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார். கடவுளுக்கு
தம் இனத்தவரின் மீது அத்தனை அன்பு. இது ஒரு பெரிய அற்புதமில்லையா ... என்று
கூறிக்கொண்டிருந்தார்.
நண்பர் என் பக்கம் திரும்பி, “ஆச்சரியமாக
இருக்குல்ல ..?”
“ஆமாம்”.
“அத்தனைப் பத்திரமாக இஸ்ரவேலர்களைக்
காப்பாற்றியிருக்கிறாரே!” என்று வியந்து சொன்னார்.
“விழித்திருந்து காத்திருக்கிறார். அல்லேலூயா”என்றேன். அதோடு
நிறுத்தியிருக்கலாம்.
“ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது 60
லட்சம் யூதர்களை ஹிட்லர் கொல்லும் போது மட்டும் எப்படியோ கடவுள் அப்படியே தூங்கிவிட்டார்
போலும்!” என்றேன்.
நண்பர் என்னைப் பார்த்து முறைத்தார்.
நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.
மூன்றாம் கதை:
அண்மையில் நடந்தது. 2025. ஜூன் 12. அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து. புறப்பட்ட
சில விநாடிகளில் வெடித்துச் சிதறி, அதிலிருந்த அனைத்துப் பயணிகளும், விமானம் விழுந்த
இடத்திலிருந்த 17 பேரும், மொத்தத்தில் 260 பேரும் செத்து
மடிந்தனர். ஒரே ஒருவர் - விஷ்வாசகுமார் ரமேஷ் - என்பவர் 11 A
சீட்டில் இருந்தவர் மட்டும் தப்பிப் பிழைத்தார்.
அமெரிக்காவில் இருந்து நம் நாட்டின் கிழக்கு மாநிலங்களில் கள ஆய்விற்காக வந்த
ஒரு பேராசிரியர் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார். அந்த விமானத்தில் அவர்
ஏறுவதற்குக் கடும் முயற்சியெடுத்தும், அவரால் சரியான நேரத்தில் விமானத்திற்கு வந்து சேர முடியாமல் அவர்
விமானத்தைத் தவற விட்டு விட்டார். சில நிமிடங்களால் அவர் உயிர்பிழைத்தார். ஏசு
தன்னைச் சரியான நேரத்தில் வர முடியாதபடி செய்து தன்னைக் காப்பாற்றியுள்ளார்.
இதிலும் அவர் உண்மையில் ஓர் இறைமறுப்பாளர். இருந்தும் கடவுளின் கருணையால் அவர்
பிழைத்து விட்டார். இதை அந்தக் காணொளியில் அவர் இதைக் கூறி,
தன்னைக் காப்பாற்றிய ஏசுவின் கருணை பற்றிக் கூறியிருந்தார்.
உடன் பணியாற்றிய ஒரு பேராசிரியர் பெங்களூரிலிருந்து எனக்கு இதை
அனுப்பியிருந்தார். எல்லாம் என்னைத் ‘திருத்தி, நேர்வழிப் படுத்தும்’ முயற்சிதான். அவரும் கடவுளின் கருணையைப் புகழ்ந்து எழுதினார்.
குரல் அஞ்சலில் பதில் சொன்னேன். “ஆமால்ல ...கடவுளின் கருணையே கருணை. அதனால் தான் அந்த மனிதர்
உயிரோடு இருக்கிறார். ஆனால் இதில் ஒரு சின்ன சந்தேகம். இந்த மனிதர் டிக்கெட்
எடுத்தும் விமானத்தில் அவர் ஏற முடியாத அளவு டிலே செய்து அவரை அதில் ஏறவிடாமல்
தடுத்து, அவரை லார்ட் ஜீசஸ் காப்பாற்றிவிட்டார்.
ஆனால் இன்னொருவர் டிக்கெட் எடுத்து, விமானத்தில் ஏறி,
அதில் உள்ள அனைவரும் இறந்த பிறகும் 11 A சீட்காரரை
மட்டும் கடவுள் மிக மிக ஆச்சரியாகக் காப்பாற்றி விட்டாரே! அதிசயம் தான். ஆனால்
அவர் கும்பிட்ட சாமி லார்ட் சிவா!”
“இப்போ எனக்கு ஒரு சந்தேகம். அந்த
இரண்டு லார்ட்களில் லார்ட் சிவா செய்ததுதான் அதிக ஆச்சரியம். விமானத்தில் ஏறி அமர்ந்தும் அந்த மனிதரை
லார்ட் சிவா காப்பாற்றி விட்டார். இதனால் அந்த இரு லார்ட்களில் சிவா is much better than Lord Jesus. இல்லியா?” என்றேன்.
இவன் தேறமாட்டான் என்பது நண்பருக்குப் புரிந்திருக்கும். டூ போட்டு விட்டார்.
நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.

