Monday, July 13, 2026

1381. QF – ARGENTINA – SWITZERLAND

*
*

QF – ARGENTINA – SWITZERLAND


அர்ஜென்டினாவின் மெஸ்ஸியின் மேலும், FIFA மேலும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கால்பந்து ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கின்றன. நான் முழுவதுமாக அதில்  விழுந்து விடவில்லை. இருந்தும் நடப்பவைகள் பலவும் அந்தக் கேள்விகளுக்கு உரம் கொடுக்கின்றன.

ஸ்விஸ் வீரர் முதல் சில நிமிடங்களிலேயே கோல் அடித்தார். அதற்கு ஈடான கோலை அடிக்க அர்ஜென்டினா 67 நிமிடங்கள் எடுத்து ஈடு செய்தது. இரு பாதிகள் முடிந்த நிலையில் தலா ஒரு கோல் என்ற நிலை இருந்தது. ஆனால் அதற்குள் அந்த இறுதி நிமிடங்களில் ஸ்விஸ் அணியின் எம்போலா, இன்னொரு ஸ்விஸ் வீரர் இருவரும் ஒரு அர்ஜென்டினா வீரரும் foul ஒன்றில் மாட்டிக் கொண்டனர், எம்போலா அந்த foulலை வைத்து அர்ஜென்டினா வீரருக்குத் தண்டனை கொடுக்க நடுவரிடம் கேட்டார். அவர் VAR பார்த்து விட்டு, அந்த அர்ஜென்டினா வீரருக்கு முன்பே எம்போலா தவறு செய்துள்ளார்  அல்லது போலியாக அடிப்பட்டது போல் நடித்துள்ளார் என்று அவருக்கு மஞ்சள் அட்டை காண்பித்தார், இதில் சோகம் என்னவென்றால், எம்போலாவிற்கு ஏற்கெனவே மஞ்சள் அட்டை கொடுத்திருந்ததால் இப்போது அவருக்கு சிகப்பு அட்டை என்றாகி விட்டது. ஆகவே அடுத்து வரும் extra timeல் அவர் விளையாட முடியாது. இப்போது 11 அர்ஜென்டினா வீரர்களுக்கு எதிராக 10 ஸ்விஸ் வீரர்கள் விளையாடுவார்கள். அதிக ஆள் பலத்தினாலோ என்னவோ அப்பகுதியில் இரு கோல்களைப் போட்டு 3 : 1 என்ற கணக்கில் அர்ஜென்டினா வென்றது.

 என்னைப் பொறுத்தவரை இரண்டாவது மஞ்சள் அட்டை  கொடுப்பதற்கு முன் நடுவர்கள் கொஞ்சம் யோசித்தே கொடுப்பார்கள். இங்கே விளையாட்டு வீரர் foul  செய்யவில்லை. ஆனால் foul நடந்ததுபோல் நடித்தார் என்பதற்காக இரண்டாவது அட்டையைக் கொடுத்தது எனக்கு அதிக பட்ச தண்டனையாகத் தோன்றியது.

மெஸ்ஸியின் எதிராளிகள் சொல்வது போல் மெஸ்ஸிக்கு நடுவர்கள்  சாதகமான முடிவுகளையே எடுக்கிறார்கள் என்று சொவதில் உண்மை இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது. லீக் ஆட்டத்தில் ஒரு தடவை மெஸ்ஸி எதிராளியின் காலை மிதித்து foul செய்தும் அவர் தண்டிக்கப்படவில்லை என்பதையும் நினைத்துக் கொண்டேன்.  எம்போலா ஒரு முக்கியமான முன்னணி வீரர். Lead striker. அவரை வெளியே அனுப்பவே இந்த முடிவெடுக்கப்பட்டது என்று ஸ்விஸ் வீரர்களின் வெளிப்பாடாக இருந்தது. அதைத் தவறு என்று சொல்ல முடியாது.

ஏற்கெனவே எகிப்து அணியின் ஒரு கோலை நடுவர் ரத்து செய்தது pro-Argentina or pro-Messi move என்ற விவாதம் கடுமையாக எழுந்தது.

 

 

 




Sunday, July 12, 2026

1380. சண்டையோ சண்டை & தமிழும் வாழ்க ...



இன்னைக்கு அர்ஜென்டினா மேட்ச். ஸ்விட்சர்லாந்து நாட்டோடு போட்டி. கால் இறுதிப் போட்டி. அப்படின்னு சொன்னாங்க சரி காலையில் எழுந்து பார்ப்போம் என்று ஆறு மணிக்கு அலாரம் வச்சேன் பார்த்தா 3 மணிக்கே எழுந்துட்டேன். நான் அந்த மாதிரி எழுகிற ஆளு கிடையாது. தூக்கம் போயிரிச்சு. நல்லாவே முழிச்சிட்டேன். யாருடா நம்மளை இப்படி எழுப்புனான்னு பார்த்தா அது நம்ம மெஸ்ஸி. .பாவம் அவர். நம்ம தமிழ் சினிமாவில வரும் கோர்ட் சீன் மாதிரியே எனக்கு தெரிஞ்சுச்சு. அதுல உத்துப் பார்த்தேன். அந்த கோர்ட்ல குற்றவாளிகள் நிக்கிறதற்காக ஒரு கூண்டு இருக்கும்ல .. அந்த கூண்டுக்குள்ள பரிதாபமா நம்ம மெஸ்ஸி நின்னுட்டு இருந்தார். என்னடா இவர் இங்கே நிற்கிறார் என்று பார்த்தால் கருப்பு அங்கி அணிந்த இரண்டு வழக்கறிஞர்கள் நிற்கிறார்கள்.  அது யாருன்னு பார்த்தா, நாங்க ஒரு whatsapp குரூப் வச்சிருக்கோம் அதுல ரெண்டு குரூப்பா பிரிஞ்சி மக்கள் சண்டை போட்டுக்கிட்டு இருப்பாங்க. அந்தச் சண்டைக்கு தலைவரா இருக்கிறவங்கதான். அவங்க பேரு உங்களுக்கு எதுக்கு? இப்படி வச்சுக் கொள்வோம். ஒருவர் பெயர் D. இன்னொருவர் V. முதல் ஆள் இருக்காரே ... அப்படியே உலகத்துல உள்ள புட்பால் பூரா எனக்கு அத்துபடி அப்படின்னு சொல்லுவாரு அவரு கட்சி என்னவென்றால், ரொனால்டோ தான் பெரிய ஆள். அவர் தான் உப்ட்பாலுக்கே ஆடு – அதாவது GOAT – என்பார். இன்னொருத்தர் மெஸ்ஸி ஆளு. அவரே உன்னதமானவர். உயர்ந்தவர் என்பார். இரண்டு பேரும் உலகத்தில் சிறப்பா விளையாடுறது எங்க ஆளுகதான். அந்தந்த அணி மட்டும்தான் கடைசி வரைக்கும் வரும்; வெற்றி பெறும் என்பார்கள்.  அநியாயமா இரு கட்சிகளும் ரொம்ப சண்டை போடுவாங்க. அப்போ நான் ஒண்ணு சொன்னேன். அந்தக் காலத்துல சிவாஜி, எம்ஜிஆர்,  இருவரில் யார் பெரியவர், சிற்ந்தவர் என்று அவரது ரசிகர்களுக்குள் போட்டி நடக்கும். எங்களுக்கு அப்போது பதில் கிடைக்கல. ஆனா இப்ப கிடைச்சிருச்சு சோ காலம்தான பதில் சொல்லணும் மெஸ்ஸியா ரொனால்டோவா யாரு பெரிய ஆளுன்னு காலம் தான் முடிவு பண்ணும்.  இப்ப நீங்க சண்டை போடாதீங்கன்னு சொல்லிப் பார்த்தேன் கேட்கிறது மாதிரி இல்ல. அட போங்கப்பான்னு உட்டுட்டேன்.

 

 சரி இது இப்படி இருக்குன்னா இன்னொரு பக்கம் எரிச்சலான ஒரு விஷயம் அந்த குரூப்ல இருக்கும். எங்க whatsapp குரூப்பில் இருக்குற எல்லாருமே ரொம்ப படிச்ச மக்கள். நிறைய பேரு கணினியில் ஆணி புடுங்குற வேலை பார்க்கிறவங்க. பெரிய பெரிய வேலை பார்க்கிறவங்க. ஒரு நாள் மேட்ச் பாத்துட்டு அந்த குரூப்ல இருக்கேன். ஒருவர் அந்த ஃபுட்பால் நடந்துகிட்டு இருக்கிற மைதானத்தில் இருக்கிறாராம். அவர் அங்க இருந்துகிட்டு இங்க வெப்பம் 20 டிகிரிதான் இருக்கு. இவங்களுக்கு எதுக்கு தண்ணி காட்ற நேரம் அப்டின்னு கேட்கிறார். அதாவது அந்த விளையாட்டு வீரர்களுக்கு எதற்கு HYDRATION BREAK. என்று ஒரு நியாயமான

கேள்வியை முன் வைக்கிறார். இன்னொருத்தார் கல்ஃப் நாட்டில் இருந்து விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஈரானின் குண்டு வெடிப்பு சத்தமும் எங்கள் பகுதியில் நடக்கிறது என்று வெகு சாதாரணமாகக் கூறிக் கொண்டு விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

 

அப்போ எல்லோரும் நல்ல படிச்ச ஆளுக. ஆங்கிலமும் தாய்மொழியும் நன்றாகத் தெரிந்த ஆட்கள். படிக்காத பாமரர்கள் யாரும் அங்கில்லை. ஆனால் நான் அந்த க்ரூப்பில் சேரும்போது பொதுவாகப் பலரும் தங்லீஷில் எழுதிக் கொண்டிருந்தனர். இருசக்கர வண்டி ஓட்டிக்கிட்டே போன் பேசும் முட்டாள்களைப் பார்க்கும்போது எனக்கு வரும் கோபம் வரும். முன்பெல்லாம் அந்த மாதிரி ஆட்களைக் கன்னாபின்னாவென்று திட்டுவேன் – அவர்கள் காதில் விழுமளவிற்கு. இந்த விஷயத்திலும் அப்படி ஒரு கோபம்  வருவதுண்டு. அதனால் எல்லோரும் ஆங்கிலம் அல்லது தமிழில் மட்டும் எழுதுங்களேன் என்று ஒரு வேண்டுகோளை வைத்தேன். அதைச் சீந்த யாருமில்லை. தொடர்ந்து தங்லீஷ் தான். தமிழ் app இல்லை என்று ஒரு காரணத்தையோ, phonetic typing தெரியாது என்று

இதற்கெல்லாம் காரணம் சொல்வார்கள். அப்டின்னா ஆங்கிலத்தில் எழுதுங்க .. படிச்சவங்கதான் நீங்க அப்டின்னேன். அவங்க எழுத முடியாதுன்னா .. அப்போ என்ன முடிவுக்கு நான் வரணும்? எனக்கு வந்த முடிவு .. பலருக்கு ஒரு compkex. ஆங்கிலம் தப்பு தப்பா எழுதிடுவோம் என்கிற பயம். அப்போ தமிழில் எழுதணும். அதுக்கு prestige ஒரு தடை. நான் பொதுவா தங்லீஷ் வாசிக்கிறதேயில்லை. இதுல பலரும் தங்கிலீஷ்தான். இதில் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்க் கவிஞர்களும் இருந்தார்கள் என்பதும் ஒரு வேதனையான, வேடிக்கையான உண்மை. நம் தாய்மொழியை அடியோடு அழித்துவிடலாம் என்று தான் படித்த இந்த மக்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்களோ? இருக்கும்.

 

பேசாமல் வெளியேறிடலாம்னு நினச்சேன். இந்த க்ரூப் 2022 இருந்தே இருக்கிறது. உலகக்கோப்பைக்கு மட்டும் உயிர்த்தெழும். நம்மையும் விரும்பி சேர்த்தார்களே என்ற எண்ணமும், விளையாட்டின் மீதிருந்த காதலும் தடைகளாக இருந்தன; இருக்கின்றன.

 

சரி ... காலையில் வெகு சீக்கிரமே எழுந்தேனே... ஆட்டம் பார்க்கவில்லையா என்று கேட்பீர்கள். டல்லான முதல் பகுதி ஆட்டம். இரண்டாம் பகுதியில் கொஞ்சம் சூடு ஏறியது. நாளை அது பற்றிப் பேசுவோமே ...

 

ஏன் மெஸ்ஸி கூண்டில் நின்றார் என்றும் கேட்பீர்கள். அதைப் பற்றியும் எழுதணும்.


 

 




Saturday, July 11, 2026

1379.. இங்கிலாந்து - காங்கோ 2:1









 

இங்கிலாந்து – காங்கோ விளையாடும்போது மனசு என்னவோ காங்கோ பக்கமே இருந்தது. விளையாட ஆரம்பித்த 7 நிமிடத்திலேயே காங்கோ முதல் கோல் போட்டது. I’m always an anti-england guy. ரொம்ப மகிழ்ச்சியாகப் போய்விட்டது. விளையாட்டும் விறுவிறுப்பாகப் போனது. ஆட்டத்தின் நடுவில் right ex-ல் ஒரு பரட்டைத் தலையோடு ஒருவர் நன்கு விளையாடிக்கொண்டிருந்தார். விளையாடியவர்கள் – இரு அணியிலுமே – கருப்புத் தோல்காரர்களே அதிகமாக இருந்தார்களா ... நானும் 8ம் எண்ணுடன் விளையாடிய அவரையும் ஒரு ஆப்ரிக்கக்காரராக நினைத்திருந்தேன். முதல் பாதி விளையாட்டில் தீப்பொறி பறந்தது. இங்கிலாந்து அணி முதல் பாதியில் முழுமையாக முயன்றும் கோல் விழவில்லை. காங்கோ அணியின் கோல் கீப்பர் மிகத் திறமையாகத் தடுப்பாட்டம் கொடுத்தார்.

இரண்டாம் பகுதி ஆரம்பித்த பிறகே அந்த 8ம் நம்பர் பரட்டைத் தலைக்காரரின் பெயர் ஓரிரு தடவை காதில் விழுந்தது. நாம் சரியாகத்தான் கேட்கிறோமா என்று நினைத்தேன். வர்ணனையாளர்கள் சொன்ன ஒரு பெயர் வித்தியாசமாகக் கேட்டது. எனக்கே சந்தேகத்தோடு மீண்டும் கேட்டேன். நிச்சயமாக முத்துசாமின்னு தான் எனக்குக் கேட்டது. இருந்தாலும் முழு நிச்சயமாகத் தெரியவில்லை.

விளையாட்டு வேகமாகப் போனது. இங்கிலாந்தின் முதன்மை வீரர் கேன் இரண்டு கோல்களையும் அடுத்தடுத்துப் போட்டு இங்கிலாந்தின் வெற்றியை உறுதிப்படுத்தினார். எனக்கு சோகம் தான். அத்தனை தீவிரமாக விளையாடியும் காங்கோ தோல்வியைத் தழுவியது. தோற்றாலும் நன்கு விளையாடித் தோற்றனர்.








ஆட்டம் முடிந்ததும் வேகமாக கூகுள் ஆண்டவரிடம் ஓடினேன். காங்கோ அணி வீரர்களின் பெயர்ப் பட்டியலைப் பார்த்தேன். இந்திய், தமிழ்நாட்டிலிருந்து பிரான்சில் பிறந்து காங்கோ நாட்டின் கால்பந்தணியில் இடம் பிடித்துள்ளார். அடடா ... இது தெரிந்திருந்தால் இன்னும் அவர் விளையாட்டைத் தீவிரமாகக் கவனித்திருக்கலாமே என்று தோன்றியது. பார்த்தவரையில் அவர் 16 வயதினிலே வரும் “பரட்டை” மாதிரியே இருந்தார். கொஞ்சம் பெருமை தான் – நம்மாளும் கால்பந்து உலகக் கோப்பையில் விளையாடுகிறாரே என்ற பெருமைதான்.

மீண்டும் ஆண்டவரிடம் இது போல் இந்தியர்கள் விளையாடுகிறார்களா என்று கேட்டேன். நால்வர் இது போல் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடுவதாக ஒரு பட்டியல் கொடுத்தது.

Sarpreet Singh 🇳🇿


Samuel Moutoussamy 🇨🇩


Nishan Velupillay 🇦🇺


Tahsin Mohammed 🇶🇦



ஒரு சின்ன மகிழ்ச்சிதான்.


Friday, July 10, 2026

1378. லீக் ஆட்டம் முடிஞ்சாச்சு ...

                                                     

1986 ஆண்டிலிருந்து உலகக் கால்பந்து போட்டியைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஆனால் இந்த முறை காலங்கெட்ட நேரத்தில் போட்டி. விழித்திருந்து பார்க்க வயது அனுமதிக்கவில்லை என்று நானே வேண்டான்று முடிவெடுத்து விட்டேன். அதையும் மீறி ஒன்றிரண்டு பார்த்தேன். அதுவும் லீக் ஆட்டத்தில் 48லிருந்து 36 சுற்று வருவதற்குள் என்னென்னமோ ஆகிப் போச்சு. அதிகம் எதிர்பார்த்த ஜெர்மனியும், நெதார்லாந்தும்,தோற்றுப் போனதும் சிறிதும் எதிர்பாக்காதவை. ஜப்பான் தோற்றதும் ஒரு ஏமாற்றம் தான். இங்கிலாந்து காங்கோவை வெற்றி கண்டது எரிச்சலைக் கொடுத்தது.

ஆனால் யாருங்க ..  கேப் வர்தே அப்டின்னு ஒரு நாடு. அர்ஜெண்டினாவை வர்ரியா பாருன்னு கேட்ட நாடு. 2:3 என்று தோற்றது. அதுவும் கடைசி வரை அர்ஜெண்டினாவிற்கு இழுபறியாக இருந்தது. அதுவும் அந்த அணியின் கோல் கீப்பர் 41 வயசாம். சரியான மந்திரவாதி. அம்மாடி .. எத்தனை முறை அத்தனை அழகாகத் தன் அணியைக் காப்பாற்றினார். அந்த நாடோ மிக மிகச் சின்ன நாடு. 6 லட்சம் மக்கள் கூட இல்லை. அதன் பெயரை நான் இதுவரை கேள்விப்பட்டதுமில்லை. அத்தனை ஆச்சரியம்.




Sunday, July 05, 2026

1377. பேரன்களோடு ஓர் ஆட்டம்