தருமி (SAM)
கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே!
Wednesday, August 12, 2026
Sunday, August 02, 2026
1386. நீட் தேர்வுகளின் நீட்சி மாறுமோ?
நீட் தேர்வுகளின் நீட்சி மாறுமோ?
·
தொடர்ந்து நமது அரசியல்வாதிகளின் தவறுகளால் நாமும், நம் குடியரசும் பல்வேறு பள்ளங்களில் விழுந்தெழ வேண்டிய சூழல் தொடர்ந்து உருவாகிக் கொண்டே வருகின்றது. இந்த குற்றவாளிப் பட்டியலில் நான் அம்பேத்கரையும் அடக்கியுள்ளேன். நமக்குக் கிடைத்த அரசியல் சட்டமைப்புச் சட்டம் பெருங்குறைகளுடன் உள்ளதால் அதன் எதிரொலி இன்று நடைமுறையில் நம்மைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. நாம் வாக்களித்து நமது முதலமைச்சரைக் கொண்டு வருகிறோம். ஆனால் அவரை விட ஒன்றிய அரசின் ஏஜெண்டாக இருக்கும் ஆளுநர் அதிக அதிகாரமும், அரசியல் வலிமையும் கொண்டவராக உள்ளார். இது எப்படி ஒரு அரசியல் நியாயமாக இருக்க முடியும். மெட்ரோ ரயிலுக்குப் பிச்சை எடுத்தாலும், இல்லையென்ற பதிலே திரும்பவும் வருகிறதே; ஏன்? இந்தக் கேள்வியை. அம்பேத்கரும் அவர் எழுதிய நமது அரசியலமைப்புச் சட்டமும்NEE (https://dharumi.blogspot.com/2021/05/1167.html) என்ற எனது பழைய கட்டுரை ஒன்றில் முன் வைத்துள்ளேன். கூகிளில் தேடிப் படிக்க அழைக்கிறேன்.
** அரசியலமைப்புச் சட்டத்தின்
மூலம் கல்வி நமது மாநில விருப்புப் பட்டியலில் இருந்தது. மொழிகளால், இனங்களால் வேறுபட்ட பல்வேறு மக்கள் வாழும் இந்த நாட்டில் இது
மிகச் சரியான ஒன்றாக இருந்தது, ஆனால் இந்திரா காந்தி அவரது
நெருக்கடி கால நடவடிக்கைகளில் ஒன்றாக அதை பொதுப் பட்டியலுக்கு மாற்றினார். அதன்
இறுதி நடவடிக்கையாக இப்போது நம்மைத் துன்புறுத்துவது நீட் தேர்வுகள். ஏனெனில்
இப்போது நம்மிடம் இருக்க வேண்டிய கல்வி அதிகாரம் முழுமையாக ஒன்றிய அரசிடம் போய்ச்
சேர்ந்து விட்டது.
*** R.S.S. Syndrome இப்போது நம்
நாட்டை ஒட்டிப் பிடித்திருக்கும் நோய்.
இந்த அமைப்பே நம் நாட்டில் இப்போது தன் அசுர ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க. அதன் ஊரறிந்த ரகசியப்
பிள்ளை. R.S.S. கொள்கைகளையை வழி நடத்த
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே மோதியும், அமித் ஷாவும், இந்த அமைப்பின் உள்ளார்ந்த கொள்கைகள்
அகண்ட பாரதம்; ஒரே நாடு; ஒரே
மதம்; ஒரே மொழி; ஒரே இனம்; ஒரே உணவு; ஒரே கலாச்சாரம் ... இதையும் தாண்டி 3:97
தத்துவம் வேறு உண்டு. (புரிகிறதா?) இந்த சாதிப் பிரச்சனையில் மட்டும்
“ஒரே சாதி” என்ற நிலைமையில்லை; பதிலாக, சாதியப்
படிநிலைகளை உறுதியாக வைக்க வேண்டும் என்பதே இவ்வமைப்பின் அடிப்படைக் கொள்கை.
இப்படியே நீண்டு செல்லும் அந்தப் பட்டியல். இங்கிலாந்து. பிரான்ஸ் போன்ற நாடுகளில் அண்மையில்
குடியேறிய ஆட்களைத் தவிர்த்தால் அங்குள்ள மக்கள் பொதுவாக அனைவரும் ஒரே மொழி பேசும் ஒரே இனத்து மக்கள். அங்கு
மொழிப்பிரச்சனை கிடையாது, இனப் பிரச்சனைகள் கிடையாதுல்
சாதிப் பிரிவினைகள் கிடையாது. ஆனால் நாம் பல்வேறு மொழி பேசும் பல்வேறு இனத்து,
பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் நிறைந்த ஓர் ஐக்கிய நாட்டில்
வாழ்கிறோம். இங்கு ஒற்றைத் தன்மையைக் கொண்டு வரவேண்டும்; அதில்
தலைமக்களாக 3% இருக்க வேண்டும் என்பது விஷமத் தனமானது என்பதை விட விஷத் தனமானது
என்றே கூற வேண்டும்.
நாட்டில்
நடக்கும் அனைத்திற்கும் ஒரே ஒரு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் எப்று இந்த
அரசு வலியுறுத்துகிறது. இந்த முயற்சிகளின் இப்போதைய குவியமாக நீட் தேர்வுகள்
இருக்கின்றன. இந்தத் தேர்வுகளுக்கு முன்பு பற்பல நுழைவுத் தேர்வுகள் நடந்தன; capitation fees என்ற பெயரில் பணப் பர்மாற்றங்கள் இருந்தன;
தனியார் கல்லூரிகள் பணம் கொழிக்கும் இடங்களாக இருந்தன; இந்த இடர்பாடுகளை நீக்கும் என்று ஒரு தேசிய நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு
அனைத்து மாநில மக்கள் மீது திணித்துள்ளது. இதை தமிழ்நாடும் அதன் அரசும்
ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்துள்ளன.
ஒரே
தேர்வு என்று கொண்டு வந்து அதற்கு CBSC பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்தது. இதுவே முதல் தவறு. ஓர் அனைத்திந்திய
திட்டம் என்றால் அதை இப்படி நட்ட நடுவில் ஏதோ ஒரு வகைப் படிப்பை அடிப்படையாக
வைப்பது தவறு. நம் மாநிலத்தைப் பொறுத்தவரை இந்த CBSC பாடத்திட்டம்
தனியார் பள்ளிகளிலும், அதிகப் பணம் கட்டிப் படிக்கும்
“உயர்தரப்” பள்ளிகளிலும் மட்டுமே நடைமுறைப்படுத்துகின்றன. சாதாரண மக்கள் அனைவரும்
அரசுப் பள்ளிகளை நம்பியிருக்கும் போது உயர்கல்விக்கு அவர்கள் இத்தகைய நுழைவுத்
தேர்வுகளை எதிர்கொள்வது ஏறக்குறைய முடியாத ஒன்று.
இடுக்கில் நுழைவது போல் திடீர்ரென்று CBSC தரம் என்று
கொண்டுவந்தால் இங்குள்ள சாதாரண பள்ளிகள், அங்கு பயிலும்
பிள்ளைகள் நிலை என்று எதுவும் யோசிக்காமல் கொண்டு வந்த திட்டம். இதனால் கொழித்தது
நீட் தேர்வுகளுக்காக நடத்தும் தனியார் பயிற்சிக் கூடங்கள். லட்சக் கணக்கில் பணம்
கட்டி, ஓராண்டிற்கும் மேலாக அங்கு பயிற்சி எடுக்க வண்டிய
கட்டாயம் வந்தது. செல்வந்தர்களால் பணம் செலவு செய்ய முடியும். மற்றவர்கள் ..?
இதைவிட
இன்னொரு மிக மோசமான முறையும் உள்ளது. சென்ற
ஆண்டு தேர்வு நடந்து அதிலிருந்து கிடைத்த தரவுகள்:
|
Stage |
Candidates |
|
Registered |
22,79,743 |
|
Actually appeared |
19,99,895 |
|
Qualified NEET |
11,21,185 |
|
Total MBBS seats (Govt + Private) |
1,36,939 |
|
Government MBBS seats |
63,297 |
|
Private MBBS seats |
73,643 |
22 லட்சம் பேர் எழுதி, பதினோரு லட்சம்
பேர் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் மருத்துவ இடங்கள் வெறும் 1 லட்சத்து முப்பத்தியாறு
பேர் மட்டுமே. அதில் 63 ஆயிரம் பேர்
மட்டுமே அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடம் பெறுவார்கள். இந்த
இடத்திற்கு மட்டும் வெற்றி பெற்ற மாணவர்கள் தர வரிசைப்படி இடம் பெறுவார்கள்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 73 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த
இடங்களுக்கு தகுதி பெற்ற பட்டியலிலிருந்து
எந்த தரத்திலும் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் பணம் பெற்று சேர்க்க
முடியும். capitation fees என்ற பெயரில் நடந்த பழைய முறை
மீண்டும் இங்கு எளிதாக, சட்ட பூர்வமாக நடந்தேறும் அவலம் நடக்கும். புதுப் புது “கல்வித் தந்தைகள்” தோன்றுவார்கள். ஏன் இங்கும் தரம் பார்க்கப்
படக் கூடாது; தேவையில்லை என்பது என்ன நியாயமோ தெரியவில்லை.
அதிகப் பணம் .. அது மட்டும் தான் மீதியுள்ள 73 ஆயிரம் இடங்களுக்கான தேவை.இதனால்
கல்வி பணக்காரர்களுக்கு மட்டுமே என்கிற வலதுசாரிக் கொள்கை, R.S.S. கொள்கை வலுப் பெறுகிறது.
நமது ஒன்றிய அரசு நடத்தும் பல்வேறு முயற்சிகள் பொதுவாகவே பணக்காரர்களுக்கான
அரசு இது என்பதை நிலை நாட்டுகின்றன. தேசியச் சொத்துகளை விற்பதோ, பல்வேறு தடங்கல்களை கல்வித் துறைக்குள் கொண்டுவருவதோ ஒரு சில
சாதியனருக்குத் தோதாக அமைந்து விடுகிறது. பனியாக்கள் செல்வந்தர்கள் ஆகிறார்கள். 3%
மக்களின் கருத்துகளுக்கு ஏதுவாக கல்வி அடித்தட்டு மக்களுக்குச் செல்லாமல் அதிலும்
சாதிய வேறுபாடுகளைக் கொண்டு வந்து அடிபட்ட மக்களை மேலும் அடித்து மேலே வர
முடியாமல் செய்யும் திறன் இந்தத் திட்டங்களுக்கு உண்டு.
நீட் தேர்வுக்கு எதிரான கருத்துகள் இன்னும் நிறையவே உண்டு. அதில் ஒரு
முக்கியமான கருத்தை மட்டும் இங்கே சொல்ல ஆசைப்படுகிறேன். மாணவர்களின் 16-18 வயதில்
இந்தத் தடங்கல்களுக்கு உள்ளாகிறார்கள். ஆசையோடு விருப்பப்பட்டதைப் படிக்க வேண்டும்
என்ற ஆவல் போய் அனைத்துக் கோணங்களிலிருந்தும் அவர்களுக்கு வரும் அழுத்தங்களை
நினைக்கும் போதும், இந்தப் படிப்பு
படிக்கணும் என்ற பெற்றோரின் வெறி அவர்களை அழுத்தும் போதும் ... பாவம், இந்தப் பிள்ளைகள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
நம் பிள்ளைகளுக்கு விடியும் பொழுது எப்போது வருமோ?
Monday, July 27, 2026
1385. FIFA '26 - இறுதிப் போட்டி
FIFA ’26 - இறுதிப் போட்டி
ARGENTINA - SPAIN
அர்ஜென்டினா வெற்றி பெற்று மெஸ்ஸி
பல புதிய சாதனைகளை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் எல்லாம் மழையில் நனைந்த பட்டாசு
போல் பிசுபிசுத்து விட்டது. இந்தப் போட்டியில் அர்ஜென்டினா அணியில் ஒரே ஒரு வீரர் மட்டுமே
விளையாடினார் என்பதுதான் உண்மை. அவர் இந்த நாட்டு அணியின் கவலாளி- (goal keeper) Emiliano Martínez. 60 விழுக்காட்டிற்கு மேல் பந்து ஸ்பானியர்கள் கால்களில் தான் இருந்தது. மெஸ்ஸி
இந்த விளையாட்டை ஒரு பார்வையாளர் போல் பார்த்ததாக எனக்குத் தோன்றியது. ஸ்பானியர்கள்
ஏறத்தாழ 20 தடவை கவலை நோக்கி அடித்த பந்துகளில் 12 பந்துகளை மிக அழகாகத் தடுத்தாட்கொண்டார்,
இந்த கவலாளியில்லாமல் வேறு யாரோ ஒருவர் விளையாடியிருந்தால் அர்ஜென்டினா
அணி ஐந்தாறு கவல்களாவது வாங்கி மிகக் கேவலமாகத் தோற்றிருக்கும். பார்க்கவே ஆச்சரியப்படுமளவிற்கு
அவர் ஒரு காவல் தெய்வமாக நின்றார். ஆச்சரியமாகப் பந்துகளைத் தடுத்தாடினார். அவருக்குத் தான் இந்தப் போட்டியின் GOLDEN GLOVES AWARD கொடுக்கப்பட்டது.
எதிரணி ஸ்பெயின் சிறப்பாக ஆடினர்.
ஆயினும் மார்ட்டினஸ்ஸின் திறமையால் அவர்களால் கவலடிக்க முடியவில்லை. முழு விளையாட்டு
நேரம் முடிந்தது. கவல் ஏதும் விழவில்லை. Extra time ஆட்டம் தொடர்ந்தது. அப்போது அர்ஜென்டினா முன்னணி வீரர் பெர்னாண்டஸ் இரண்டாவது மஞ்சளட்டை வாங்கினார். அது
சிகப்பட்டையானது. வெளியேறினார். உள்ளதே நொள்ளக் கண்ணு என்பார்களே அந்த நிலையில் தான்
அர்ஜென்டினா அணி இருந்தது. இப்போது 11 பேருக்கு எதிராக 10 பேர் ஆடினார்கள். 106வது நிமிடத்தில் டாரஸ் அடித்த பந்து மார்ட்டினஸை
ஏமாற்றி உள் நுழைந்து, வெற்றிக் கவலாக மாறியது.
ஸ்பெயின் வென்றது.
சென்ற 22ம் ஆண்டுப் போட்டியில்
இறுதிப் போட்டியில் நன்கு விளையாடியதால் எம்பாப்பே பிடித்துப் போனது. இந்த ஆண்டு லஷ்மி
அம்மாள் – யாமல் – நன்கு விளையாடியிருந்தாலும், எனக்கு அவரை விட வில்லியம்ஸ் என்ற ஸ்பெயின் வீரரைப் பிடித்துப் போனது. ஏற்கெனவே
இவர் substitute ஆக
உள்ளிறங்கி, அப்போட்டியிலும் ஒரு கவலடித்தார். இந்த இறுதிப்
போட்டியிலும் அவரது ஆட்டம் அத்தனைச் சிறப்பாக இருந்தது. டார்ஸ் கவலடிப்பதற்கு இவரே
துணை புரிந்தார். ஏன் இவ்வளவு நல்ல ஆட்டக்காரரை துணை ஆட்டக்காரராக – substitute
– ஆக இறக்குவதன் மர்மம் எனக்குப் புரிபடவில்லை.
1384. FIFA '26 - அரையிறுதிப் போட்டிகள்
THE GREAT KING, PULIKESI XXV – அதாவது, பெரு மன்னனான 25ம் புலிகேசி தன் மங்குனி அமைச்சருக்குச் சொன்ன ஒரு பெருமொழியை
நினைவு கூர்கிறேன்: “வரலாறு மிகவும் முக்கியம், அமைச்சரே!”.
FIFA ’26 போட்டி பற்றித் தொடர்ந்து எழுத முடியாமல் போய் விட்டது. வயதைக் காரணமாகச்
சொல்வதா: அல்லது அர்த்தராத்திரியில் போட்டி
நடப்பதைக் காரணமாகச் சொல்வதா; அல்லது உண்மையிலேயே என் சோம்பேறித்
தனத்தைச் சொல்வதா? சரி .. விடுங்கள் ... ஏதோ ஒண்ணு. ஆனாலும் பெருமன்னன்
புலிகேசி சொன்னது போல் வரலாறு மிக முக்கியமில்லையா? FIFA ’1986 லிருந்து தொடர்ந்து இப்போட்டி பற்றியெழுதியதைத் தொடர வேண்டும் என்ற நப்பாசை
மட்டும் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. அப்பாடா .. ஒரு வழியாக எழுத ஆரம்பித்து விட்டேன்.
சென்ற 22 ஆண்டின் போட்டியில் பேரா.
இராமகி ஐயா அவர்கள் இரு புதிய சொற்களைக் கற்பித்தார்கள். goal = கவல், goal keeper = கவலாளி என்ற சொற்கள் அவை. அவைகளை
இந்த ஆண்டு முறையாக இதுவரை பயன்படுத்தவில்லை. இப்போதாவது ஆரம்பிக்கின்றேன்.
அரையிறுதிப் போட்டிகள்
FRANCE -
SPAIN
சென்ற உலகக் கோப்பையின் இறுதிப்
போட்டியில் அர்ஜென்டினாவிற்கு முதல் பாதியில் இரண்டு கவல்கள் விழுந்து முன்னணியில்
இருக்க, பரவாயில்லையே நாம் ஆதரிக்கும் மெஸ்ஸியின்
அணி வெ\ன்று விடும் என்ற நினைப்பில் இருக்கும் போது எம்ப்பாப்பே
என்ற பிரான்ஸ் அணியின் வீரர் பத்தே நிமிடங்களில் இரு கவல்களையும் சமன் செய்து 2:2
என்ற நிலைக்குக் கொண்டு வந்தார், அப்போது அதற்காகக் கவலைப்பட்டாலும்
மிகுந்த ஆச்சரியத்தை அளித்தார் அந்த வீரர். அதனால் இந்த ஆண்டு நடந்த போட்டியில் அவரே
நம் ஆதர்சன வீரராக இருந்தார். ஆகவே இந்த அரையிறுதியில் அவரது அணி வெற்றி பெறும்
என்ற நினைவில் இருந்தேன். ஆயினும் போன உலகக் கோப்பையில் ஸ்பெயினுக்காக விளையாடிய
ஒரு சிறுவனும் அப்போதே மனதைக் கவர்ந்திருந்தார். எம்ப்பாப்பேக்கு அடுத்த படியாக இந்த
ஆண்டு இவர் மனதைக் கவர்ந்த இரண்டாம் வீரராக இருந்தார். இந்தப் போட்டியில் அவர் பெயர்
லஷ்மி அம்மாள் என்றாகிப் போனது. டி ஷர்ட் விற்கும் சென்னா ஆயா ஒருவர் அவருக்குத் தெரிந்த
முறையில் அனைத்து முக்கிய அணி வீரர்களையும் இதுபோல் திரிந்த பெயராக உச்சரித்து அதனால்
அவர் பிரபலமானார். லாமின் யமல் என்ற பெயரை அவர் லஷ்மி அம்மாள் என்று மாற்றி விட்டார்.
ஆக பிடித்த இரு வீரர்கள் விளையாடினர்.
அதில் இரண்டாம் நிலையிலிருந்த வீரரின் அணியான ஸ்பெயின் வென்றது.
முதல் 20 நிமிடத்திலேயே ஸ்பெயின்
ஒரு கவல் அடித்து அதே நிலையில் தன் அணியை வைத்துக் கொண்டிருந்தது. ‘வெகு காலத்திற்கு’ முன் இதே போல் ப்ரேசிலின்
ரொனால்டோவின் ஆட்டத்தைப் பார்க்க ஆவலாக இருந்த போது அவர் சரியாக விளையாடாமல் ப்ரேசில்
தோற்றது இப்போது நினைவுக்கு வந்தது. ஏனெனில் இந்தப் போட்டியில் நான் அதிகம் எதிர்பார்த்த
எம்ப்பாப்பே ஆட்டம் ஏதும் பயனளிக்கவில்லை. இரு அணிகளும் தீவிரமாக விளையாடியும் ஸ்பெயின்
அணி 2:1 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
ARGENTINA -
ENGLAND
முதல் பாதியில் கவல் ஏதும் விழவில்லை.
இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணி ஒரு கவல் போட்டு முன்னணி எடுத்தது. ஆயினும் பந்து
அர்ஜென்டினாவின் கை வசமே ... இல்லையில்லை ... கால் வசமே சிறிது அதிகமாக இருந்தது.
85வது நிமிடத்தில் பந்தை வலது பக்கம் எடுத்து வந்த மெஸ்ஸி மிக அழகாக இடது பக்கத்திலிருக்கும்
பெர்னாண்டஸிற்கு பாஸ் செய்ய, அவர் சிறப்பாக
அதை ஒரு கவலாக மாற்றினார். சமமான அளவில் இருந்த கவல் நிலவரம் 92வதுநிமிடத்தில்
அர்ஜென்டினா கவலடித்து வெற்றி பெற்றது. மெஸ்ஸி தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டினார்.
Wednesday, July 15, 2026
1383. FIFA '26 - விளையாட்டுப் போட்டிகளும் புகார்ப் பொட்டிகளும் ...
விளையாட்டுப் போட்டிகளும்
புகார்ப் பொட்டிகளும் ...
FIFA கால்பந்து உலகக் கோப்பை விளையாட்டுகளை போன நூற்றாண்டிலிருந்து – 1986ம் ஆண்டிலிருந்து
– பார்த்து வருகிறேன். எந்த ஆண்டிலும் இப்போது போல் பல்வேறு கசப்பான விவாதங்கள்
எழுந்ததில்லை. எந்த அணி வெல்லும், யார் யார் நன்கு விளையாடுகிறார்கள் என்பது
போன்ற விவாதங்கள் மட்டும் இருக்கும். இந்த முறையோ… கேட்க
வேண்டியதில்லை.
முதலில் ரொனால்டோ, மெஸ்ஸி என்ற இருபெரும் கால்பந்து
வீரர்களைச் சுற்றி விவாதங்கள் எழுந்தன. யார் பெரிய
வீரர் என்று அந்தக் காலத்து சிவாஜி – எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மாதிரி சண்டை போட்டுக்
கொண்டிருந்தனர். தொலைந்து போகிறது என்று இரு தரப்பினரையும் ரசித்துக்
கொண்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரை இருவரும் பெரிய ஆட்கள் தான்; இருப்பினும்
என் நடுமுள் கொஞ்சம் மெஸ்ஸியின் பக்கம் சாய்ந்திருந்தது. என்ன காரணம் என்று
யோசித்துப் பார்த்தேன். ரொனால்டோ விளையாட்டை விட அவரது கொனஷ்டைகள் / dramatic
manual gestures அதிகமாகத் தோன்றியது. நிறைய Theatrics; மெஸ்ஸியின் dribbling மிகவும் பிடித்தது. அதில் ஓர்
அழகுணர்ச்சி இருப்பதாகத் தோன்றியது. அது ஏனோ.. இந்த வீடியோக்காரர்கள் ரொனால்டோ ஒரு
ஃப்ரி ஷாட் எடுப்பதற்குள் அவர் மூச்சு வாங்குவது, உதடுகள்
துடிப்பது என்று அநியாயத்திற்கு dead close-up வைத்து நம்
உயிரை வாங்கி விடுவார்கள். அவரது dribbling-யை விட அவர் உயரே
எழும்பி head பண்ணுவது பிடித்தது. பீலே, R9 என்று சுருக்கமாக, செல்லமாக அழைக்கப்பட்ட ப்ரேசில்
வீரர் ரொனால்டோ, அவரை விட அவருடன் விளையாடிய ரொனால்டின்கோ,
கார்லோஸ், தியரி ஹென்றி(பிரஞ்சு), மரடோனா (அர்ஜென்டினா) போன்ற பிடித்த பல கால்பந்து
வீரர்களின் வரிசையில் மெஸ்ஸியை முதலில் வைத்து அடுத்து ரொனால்டோவைச் சேர்ப்பேன். அதன்
பிறகு எம்பாப்பே, யாமல் போன்றோர் வரலாம். இன்னும் பலர் உண்டு.
காலப்போக்கில் மறக்கும் விஷயங்களில் இதுவுமொன்று,
ஆனால் இந்த ஆண்டு நடக்கும் போட்டியில் பற்பல விஷயங்கள்
புதிதாக முளை விட்டிருக்கின்றன. இதில் தலையாய, மிகக் கேவலமான ஒன்று
என்னவென்றால் அது நமது ‘அகில உலக சண்டியர்’ ட்ரம்ப் அவர்களின் ஊடுறுவல்தான். பலோகன் என்ற அமெரிக்க வீரர் பாஸ்னியா
என்று ஒரு சிறு நாட்டுடன் விளையாடும் போது செய்த தவறுக்காக சிகப்பு அட்டை
பெற்றார். நம்ம சண்டியருக்கு அப்படி ஒரு கோவம் தலைக்கேறியது.. உடனே தன் நண்பரான
ஜியானி என்ற FIFA தலைவருக்கு
ஒரு போனடித்தார். மடித்து கட்டிய வேட்டியை இறக்கி விட்டுக் கொண்டே ஜியானி போனை
எடுத்து, ஐயா சொன்ன ஏவலுக்கு உடனே சரியென்று தலையாட்டி
விட்டு, அந்த சிகப்பு அட்டையை அரசியல்வாதிகள் தங்கள்
உறுதிமொழிகளிலிருந்து எளிதாக வெளியேறுதல் போல் பலோகன்னுக்கு விடுதலை அளித்து
விட்டார்.
இந்த இழிசெயலுக்குப் பிறகு அமெரிக்கா தங்கள் அடுத்த
ஆட்டத்தில் பெல்ஜியத்தைச் சந்தித்தது. இந்த அணி சிகப்பு அட்டையைத் திரும்பி
வாங்குவதற்க்கான தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து விளையாடினர். நாங்கள் சின்னப்
பசங்களாக விளையாடும் காலத்தில் யாராவது விளையாட்டில் கள்ளத்தனம் செய்தால் அதைக்
கள்ள ஆட்டை என்போம். அப்போதெல்லாம் நாங்கள் வழக்கமாக ஒன்று சொல்வதுண்டு: கள்ள
ஆட்டைக்கு கடவுள் கரியா காட்டிக் கொடுப்பார். அது அன்று உண்மையிலேயே நடந்தது.
அமெரிக்காவிலேயே நடந்த அந்தப் போட்டியில் 4:1 என்ற கணக்கில் பெல்ஜியம் வென்று அமெரிக்காவின்
மீது கரி பூசியது. ட்ரம்ப்பிற்கு FIFA ஒரு
நோபல் பரிசு ... இல்லையில்லை .. வேறு ஏதோ ஒரு பரிசை இந்த ஆண்டு இறுதியில் கொடுக்கப்போவதாக
ஒரு செய்தி காற்றில் கறைந்து வந்துள்ளது.
BALOGUN - NO RED CARD
FIFA இதைச்
சரிக்கட்ட என்னென்னவோ விவாதங்கள் முன் வைத்தன. ஏற்கெனவே போர்ச்சுகல்
ரொனால்டோவிற்கும் இதே போல் சிகப்பு அட்டையை திருப்பி வாங்கியுள்ளோம் என்றது. ஆனால்
மக்களிடையே “அந்தப் பப்பு வேகாது” என்றே நான் நினைக்கின்றேன்.
அர்ஜென்டினா அதிக எண்ணிக்கையில் பெனல்டி வாய்ப்புகள்
பெறுகின்றன என்றொரு குற்றச்சாட்டு:
இந்த அணி 2022,2026 போட்டிகளில் இதுவரை 8 வாய்ப்புகள்
பெற்றுள்ளன. அதற்கு அடுத்ததாக இங்கிலாந்து வெறும் 4 வாய்ப்புகள் மட்டும் பெற்றுள்ளன.
இது ஒரு பெரும் சலுகை என்ற குற்றச்சாட்டிற்கு இது பலம் சேர்க்கிறது.
நானே ஒரு முறை பார்த்தேன்.மெஸ்ஸி செய்த பவுலுக்கு எந்தவித தண்டனை
கொடுக்காததையும் பார்த்தேன். அர்ஜென்டினாவை FIFA
ஒட்டு மொத்தமாக ஆதரிப்பதாகப் பலரும், சிறப்பாக போர்ச்சுகல் ரொனால்டோவின் ஆதரவாளர்கள்
தொடர்ந்து குற்றச்சாட்டை FIFA
மேல் வைத்தனர்.
இதோடு முன்பு நடுவர்கள் தங்கள் கண்களை மட்டும் வைத்துக் கடமையாற்றினர்.
இப்போது டிஜிட்டல், VAR எல்லாம் வந்து விட்டது. ஆனால் சில சமயம் மட்டும் அதைப் பயன்படுத்துகிறார்கள் போலும்.. முழுவதுமாக அப்பக்கம் நடுவர்கள் செல்வதில்லை.
ஆனால் அர்ஜென்டினாவிற்குச் சிறப்பிடம் கொடுப்பார்கள் என்பதை
என்னால் முழுமையாக ஒப்புக் கொள்ள முடிவதில்லை. ஏனெனில் இது நானகைந்து பேர்
செய்கிற காரியமல்ல. ஒவ்வொரு போட்டிக்கும் வெவ்வேறு நாட்டிலிருந்து நடுவர்கள் வருகிறார்கள்.
இவர்கள் அனைவரையும் வகுப்பறை மாதிரி ஒன்றில் வைத்து நாம் எல்லோரும் இணைந்து அர்ஜென்டினாவுக்கு
வெற்றியைத் தருவோம் என்றா முடிவெடுக்க முடியும்? எல்லோரும் இணைந்து ஒரு நாட்டிற்கு
அனுகூலமாக இருக்க முடியும் என்பது ஒரு non-practicable accusationr. ஆனால் சண்டியர் சொன்னார் என்பதற்காக ஆட்டத்தில் கொடுத்த கார்டை அதன் பிறகு
வாபஸ் வாங்குவது அபத்தத்திலும் அபத்தம்; அநியாயத்திலும் அநியாயம்.
இதொரு தனி மனிதனால், அதாவது, மிகப்பெரும்
அமைப்பான FIFAவின் பெருந்தலைவர்
ஒருவரால் எடுக்கப்பட்ட முடிவு. இதைத் தனிமனிதத் தவறு என்றும் சொல்லித் தப்பிக்கலாம்.
இது பற்றாது என்பது போல் அர்ஜென்டினா FIFA அமைப்பு முறையற்ற விதமாக
அமெரிக்க வணிகச் சந்தையில் முதலீடு செய்துள்ளதாகவும் அதை அமெரிக்க உளவமைப்புகள் ஆய்வு
செய்வதாகவும் ஒரு செய்தி கசிய விடப்பட்டது.
இந்தச் சூழ்நிலைகள் எல்லாமே இந்த உலகக் கோப்பை சமயத்தில் மாறி
மாறி வெளிவந்து பல்வேறு வதந்திகளை கொழுத்திப் போட்டிருக்கின்றன. முன்பெல்லாம் விளையாட்டுப்
போட்டிகள் தீப்பிடித்து எரியும்; இப்போது வதந்திகளும், புகார்களும் தொடர்ந்து முளைத்து வருகின்றன.
இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ!


.jpg)











