தருமி (SAM)
கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே!
Tuesday, June 06, 2023
Thursday, June 01, 2023
Wednesday, May 31, 2023
1225. பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு .....
இன்று காலை ஒரு காட்சி.
ஒரு தாய் தன் கைப்பிள்ளையைக் கையில்
ஏந்தி நிற்கிறார். கொஞ்சம் அறிவுத் திறன் குறைந்த குழந்தை போலும். அவர்களுக்கு
எதிரில் நான் முன்பே சொன்ன உடல் நலம் குறைந்த பெண். ஆடி ஓடித் திரிந்த குழந்தை ஆறு
ஏழு வயதிற்குப் பிறகு நடக்க முடியாமல் போன பெண். நாற்காலியில் அமர்ந்திருக்கிறாள்.
அவள் பின்னால் அவளது தாய்.
கைப்பிள்ளை வைத்திருந்த தாய் தன்
பிள்ளையிடம் எதிர்த்தாற் போலிருக்கும் பெண்ணைக் காண்பித்து, ‘ இதோ பார், அக்கா...”
என்கிறார்கள். குழந்தையிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. நாற்காலியில்
அமர்ந்திருந்த பெண்ணும் அந்தக் குழந்தையை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
இவர்களைத்
தாண்டிப் போகும்போது இந்த நிகழ்வைப் பார்த்தேன். யாருக்காக வருந்துவது என்பதே
தெரியவில்லை. எந்த உணர்வும் இல்லாத குழந்தையைப் பார்த்துக் கவலைப்படுவதா? இளம் வயதிலும் நடக்க
முடியாத அந்தப் பெண்ணைப் பார்த்தா? அல்லது குழந்தைகளையும் அதனால்
ஆன சோகங்களையும் மனதில் தேக்கி வைத்திருக்கும் இரண்டு அம்மாமார்களையும் நினைத்து வருந்துவதா?
தெரியவில்லை
...
Absurd philosophy
என்று Albert Camus சொன்னவைகள் நினைவுக்கு வந்தன.
வாழ்க்கையென்னும் ஓடம் .. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ... என்று பல பாடல்களும் நினைவில்
ஆடின.
இத்தனை
துயரத்தில் உழலும் மக்கள் நித்தமும் கடவுள் முன்னால் நின்று வேண்டிக் கொள்வது எனக்கு
சில சமயத்தில் அர்த்தமில்லாததாகவும்,
சில வேளைகளில் பாவம் போலும் தோன்றுகிறது. எது சரியென்று எனக்கும் தெரியவில்லை.
எப்படி இந்த நம்பிக்கை? என்ன கிடைக்கிறது என்று இந்த நம்பிக்கை.
தெரியவில்லை.
Camus சொன்ன philosophical suicide சரியா என்றும் புரியவில்லை.
எல்லாமே அபத்தமாகவும், குழப்பமாகவும் தெரிகிறது. கடவுளை நம்புவதும்
இது போன்ற ஒரு அபத்தம் என்றே தெரிகிறது.
பூஜ்ஜியத்துக்குள்ளே
ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு .....
என்ன
வாழ்க்கை இது? புரிந்தால் சொல்லுங்கள்...
புரிந்து
கொள்கிறேன்.
Monday, May 29, 2023
1224. மருத்துவ முகாமில் சில நாள் வாழ்க்கை
https://dharumi.blogspo/1223-what-life.htmlt.com/2023/05
மருத்துவ
முகாம் வாழ்க்கை;
கண்ணை மூடித் திறப்பதற்குள் 18 நாட்கள் ஓடிவிட்டன. வாழ்க்கை பழகியது
போலும் இருக்கிறது. ஆனாலும் குழந்தைகளைப் பார்க்கும் போது அந்த வேதனைகள் மீண்டும்
வந்து தோளில் தொத்திக் கொள்கின்றன. எவ்வித இயல்பான உணர்வுகள் இல்லாத குழந்தைகளைத்
தோளில் சுமந்து,
உள்ளுணர்வுகளை அடக்கி வைத்திருக்கும் பெற்றோர்கள். வாழ்க்கையின் அர்த்தமே
புரியாமல் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய சூழல். பணம், வேலை, பதவி, அதிகாரம், ஆணவம் என்று சுற்றிலும் இதுவரை பார்த்திருந்து விட்டு, இப்போது உடல் நலம் பற்றி மட்டும், அதுவும் தான்
பெற்ற பிள்ளைகளின் உடல் நலத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு அலைந்து திரியும்
பெற்றோர்கள்; அதிலும் முக்கியமாக தாய்மார்கள்...
இவர்களைத்தான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனாலும்
இந்த வாழ்க்கையிலும் அவ்வப்போது சில ஒளிக்கீற்றுகள். மலரின் பெயர் கொண்ட சின்னச்
சிநேகிதியுடன் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். குழந்தை என்னை இரு கேள்விகளால்
தோற்கடித்தது. என் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்து, அதில் உள்ள
படங்களைப் பார்த்து சில கேள்விகள் கேட்டாள். பதில் சொன்னேன். இன்னொரு கேள்வி
கேட்டு மடக்கி விட்டாள். புத்திசாலிப் பெண். அவளுக்குப் பணக்கார தனிப்பள்ளிகளில்
இடம் கொடுக்க மறுத்து விட்டார்களாம். அரசுப் பள்ளியில் அனுமதித்துள்ளார்களாம்.
ஐந்தாம் வகுப்பு. அவளின் அம்மாவிடம் அவளுக்கு நிறைய கதைப்புத்தகங்கள் வாங்கித்
தரச் சொன்னேன். படிப்பில் அத்தனை ஆர்வம்; புத்திசாலித்தனத்திற்கும்
குறைவில்லை. அவளின் கால்களும் குணமாகி நம்மைப் போன்ற “சாதாரண” நிலமைக்கு வந்தால்
மகிழ்ச்சி.
சில
மாதங்களேயான சின்னப் பையன். ஓடும் மின்விசிறி, அணைந்து அணைந்து எரியும் மின்
விளக்குகள், பேனா-பேப்பர் என்று தன் ஆவலைக் காண்பித்துக் கொண்டு, அப்பாவின் கைகளில் சரிந்து கிடக்கும் பையன். காது கேட்கவில்லையாம். ஏனைய உணர்வுகளும்
சரியாக இல்லையாம். பெற்றோர் இருவரும் அனைவருடனும் சிரித்து சிரித்துப்
பேசுகிறார்கள். அதுவே எனக்கு முதலில்
ஆச்சரியமாகவே இருந்தது. அவர்களெல்லாம் நிம்மதியாக இரவில் உறங்க முடியுமா? தெரியவில்லை.
மனம் சரியில்லா குழந்தைகள்; கால்களால் நடக்க முடியாத குழந்தைகள்; விந்தி விந்தி நடக்கும் சேட்டைக்காரச் சின்னப் பசங்கள்; யாரிடமும் மிகவும் முரட்டுத்தனமாக நடக்கும் ஆபத்தான சின்னப் பையன் ... இப்படியே பார்த்துக் கொண்டிருந்த நான் ஒரு நல்ல ஆச்சரியமான நிகழ்வு ஒன்றையும் பார்த்தேன்.
இரவு 9 மணிக்கு மேல் சில பையனும் பெண்களும் இங்கிருக்கும் ஒரு சிற்றாலயத்தின் முன்னால் இருக்கும் முற்றத்தில் கூடுகிறார்கள். அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு அந்த இடம் அமளி துமளியாகி விடுகிறது. சில குறைகளோடு மருத்துவத்திற்காக வந்திருக்கும், ஆனால் நன்றாக நடமாடக்கூடிய குழந்தைகள் என்று ஒரு சிறு கூட்டம். ஏறத்தாழ 10 குழந்தைகள். நான் அந்த alter-ன் படியில் அமர்ந்திருப்பேன்... இனிமையான காற்றிற்காக. என்னிடம் வந்து பேனா பேப்பர் சில சமயம் கேட்பார்கள். எப்படி இப்படிக் கூத்தடிக்கிறார்கள் என்று யோசித்தேன். பாவம் .. இந்தக் குழந்தைகள் வேறு நோயற்ற குழந்தைகளோடு விளையாடும் வாய்ப்பு பொதுவாக அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கலாம். இங்கு அந்த ஏற்றத்தாழ்வு கிடையாது. அனைவரும் சமம் என்ற உணர்வு இருக்கும் போலும். அதனால் நன்கு சுதந்திரமாக விளையாடுகிறார்கள் என்று நினைத்தேன். ஆடிய பின் வட்டமாக உட்கார்ந்து வேறு விளையாட்டு, பேச்சு என்றிருந்தார்கள்.
ஒரு நாள் இரவு பதினோரு மணி வரை ஆட்டம்
தொடர்ந்தது. ஏனென்று நினைத்தேன்; பதில் கிடைத்தது. அவர்களில்
ஒரு பத்துவயதுப் பெண். அடுத்த நாள் காலையில் புறப்படப் போகிறாள். ஒரு விதமான farewell
party ! என்னிடம் பேப்பர் பேனா வாங்கி அவர்களுக்குள் தொலைபேசி
எண்களை வாங்கிக் கொண்டனர். அதில் இன்னொரு சின்னப் பெண் ஊருக்குச் செல்லும்
பெண்ணைக் கட்டிப் பிடித்து, “அக்கா, இனிமே
நான் உங்களைப் பார்க்கவே முடியாதில்லையா?” என்று அழுதது.
சோகம் என்னையும் கட்டிப் போட்டது. அதைவிட அந்தப் பெண் என் முன் வந்து, கண்கலங்கி “தாத்தா, போய்ட்டு வர்ரேன்” என்ற போது
....
இன்னும்
இங்கே இன்னும் சில நாட்களைக் கடத்தியாக வேண்டும் ....
Tuesday, May 23, 2023
1223. WHAT A LIFE ....?
நீண்ட நாள் மருத்துவத்திற்காக நெடுந்தூரம்
பயணம் செய்து ஓர் ஊரில் வந்து தங்கியிருக்கிறோம். மருத்துவம் பற்றியோ, மருத்துவர்
பற்றியோ எதுவும் பேசுவது இப்போது என் நோக்கமல்ல. ஆனால் மருத்துவத்திற்காக வந்த
மக்களைப் பற்றிக் கட்டாயம் பேச வேண்டுமென்று முதலிலிருந்து ஓர் உறுத்தல்.
சேர்ந்த
முதல் நாள் காதில்,
கண்ணில் ஏதும் விழவில்லை. அங்கங்கே அலைந்து கொண்டிருந்தேன்.
இரண்டாம் நாள் மருத்துவத்திற்காக வந்த மக்களோடு ஒருவனாய் காத்திருந்த போது பார்த்த
காட்சிகள் என்றும் மனதை விட்டு அகலாது. பெரியவர்கள் பலரும் சிரமத்துடன் பார்த்த
போது மனம் ஒன்றும் சிரமப்படவில்லை. ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகளையும் அவர்களின்
குறைபாடுகளையும் பார்த்து மனம் பதறியது. அங்கே தொடர்ந்து இருக்க முடியாமல் ஓட
வேண்டும் போல் இருந்தது. பக்கத்தில் உறவுக்காரப் பெண் என்னோடு இருந்தாள். இறை
நம்பிக்கை நிறைந்த பெண். எங்களுக்கருகில் சாமி உருவங்கள் இருந்த அலங்கார மேடை
ஒன்றும் இருந்தது. பலரும் வணக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர். என்னால் கண்முன்
நடப்பதையோ பார்க்க முடியாமல் மனம் பதைத்தது. இல்லாத அந்த தெய்வத்தின் மேல் கோபம்
வந்தது. உறவுக்காரப் பெண்ணிடம், “இப்படி ஒரு கடவுள் இருந்து
இப்படி படைத்தாரென்றால் அந்தக் கடவுளைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்து
விடணும்” என்று கோபமாகச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு
நகர்ந்தேன்.
முதல்
அனுபவே இப்படிக் கசந்தது. அப்போது எந்தக் குழந்தை பற்றியும் தனித்து ஏதும்
தெரியாது. தங்கிய நாட்கள் ஒவ்வொன்றாகக் கடந்த போது ஒவ்வொரு குழந்தை பற்றியும்
தெரியத் தெரிய ... மனசு தாங்கவில்லை.
ஒரு
சின்னக் குழந்தை. பத்துப் பதினோரு வயதிருக்கும். மலரின் பெயர் அந்தப் பெண்ணுக்கு.
அழகுக் குழந்தை. முகம் அத்தனை அழகு. மெல்லிய குரலில் பேசும் அழகே அழகு. பிறந்த
நாளிலிருந்து கை கால்களின் எலும்புகளினாலோ என்னவோ நடக்கவோ, கையால் எதையும் பிடிக்கவோ முடியாது. நாங்கள் நல்ல
நண்பர்களாகி விட்டோம். என்ன பாவம் செய்தது அந்தக் குழந்தை. கடவுள் படைத்தான்
என்பதோ, ஊழ்வினைப் பயன் என்பதோ நான் நம்ப மறுக்கும் வெறும் வெத்து வேட்டுகள்.
பத்துப்
பன்னிரண்டு வயது என்று அந்த பெண்ணைப் பார்த்த போது நினைத்தேன். ஆனால் உண்மையில்
இருபதைத் தாண்டிய பெண். உடம்பே கோணலாகி வளைந்திருக்கிறது. காலில் சுத்தமாகப்
பலமில்லை. ஏழெட்டு வயது வரை துள்ளி ஓடிய பிள்ளையாம். நடனம் ஆடுவதை போட்டோ எடுத்து
வைத்திருக்கிறார்களாம். குழந்தைப் பருவத்தில்வெகு விரைவாக நடக்க ஆரம்பித்த
குழந்தை. இப்போது முழுவதும் முடங்கிப் போன பிள்ளை.
இன்னொரு
பையன். பிறவியிலேயே மூட்டை முடிச்சாகப் பிறந்தான் போலும். கால்கள் திருகி
இருக்கின்றன. அவனது தந்தை ஒரு வருடமாக உடனிருந்து வைத்தியம் பார்க்கிறாராம்.
முதலில் அம்மாவோடு இருந்திருக்கிறான். அம்மா செல்லமாக இருந்ததால் அவரை வியாபாரம்
பார்க்க தன் கடையில் இருத்தி விட்டு அப்பா பையனை சிறிது முரட்டுத்தனத்தோடு
கவனிக்கிறார் என்றார்கள். அதுவே பையனை விரைவில் சுகமாக்கும் என்று அப்பா
நினைக்கின்றார் என்றார்கள்.
பிறக்கும்
போதே காது கேளாமையுடன் பிறந்த பையன். அவனோடு மல்லாடும் பெற்றோர். அப்பா work from home software ஆள். வேலையும் பையனையும் எப்படியோ சமாளிக்கிறார் அப்பா.
இப்படி
எத்தனையோ குழந்தைகள். இப்படி கொத்துக் கொத்தாய் பாவப்பட்ட குழந்தைகளைப் பார்க்கும்
போது மனது தாங்கவில்லை. அதிலும் குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு தங்களுக்கான கொடுமைகளைச்
சரியாகக்கூட புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் பெற்ற தாய் தந்தையரை நினைத்தாலே
மனம் பதறுகிறது. எத்தனை எத்தனை பெற்றோர் தூக்கம், இன்பம் தொலைத்து பிள்ளைகளின் நிலையறிந்து
சோகமுற்றிருக்கிறார்கள் என்று தோன்றியது. பிள்ளைகள் நிலைகளை விட இவர்கள் நிலைதான் பாவம்
என்று தோன்றியது. நம்பிக்கைகளோடு காத்திருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை நடக்கட்டும்,
நடந்தேறட்டும் என்று மட்டுமே மனதில் தோன்றுகிறது. circumstances make one go very philosophical.
சோகமான
சூழல்தான். ஆனால் அதிலும் ஒரு வெகு நல்ல விஷயம் பார்த்தேன். Camaraderie எ-ன்ற
சொல்லின் முழுப்பொருளையும் இங்கு ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறேன். எல்லோரும் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்கிறார்கள்.
மனதில் சோகத்தைச் சுமையாகத் தூக்கிக்கொண்டு வெளியே இன்முகத்துடைன் உடனிருப்போரிடம்
பழகுகிறார்கள். உயர்வு தாழ்வு இல்லை. எனக்குத் தோன்றியதை சிலருடன் பேசிக்கொண்டிருக்கும்
போது சொன்னேன். “நம்ம கெட்ட குணங்களையெல்லாம் வெளியே விட்டுவிட்டு நல்லவர்களாக அனைவரும்
இருக்கிறோம்” என்றேன். பலமாக எல்லோரும் ஒத்துக் கொண்டனர். நான்
தொடர்ந்து, “யார் கண்டது? வெளியே போனதும்
பழைய குணங்கள் மீண்டும் வந்து நம்மீது ஏறிக் கொள்ளலாம்” என்றேன். ஒரு பெண்மணி உடனே ஒரு பதில்
சொன்னார்கள். “அப்படியெல்லாம் நடக்காது சார். இங்கே பத்தியம் இருப்பது போல் இருக்கிறோம்.
இந்தப் பத்தியமும் என்றும் நம்மோடு இருக்கும். என்றும் இப்படியேதான் வெளியேயும் இருப்போம்”
என்றார் உறுதியாக. என்றார். அது உண்மையாக இருக்க வேண்டும். அது உண்மையானால் உலகமே
அன்பு மயமாகி விடும் என்றே தோன்றியது.