Monday, January 28, 2019

1030. அமைச்சர்களுக்கு ஓர் அவசர ஆலோசனை





*





பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம் கதைகளை வாசித்த சின்ன வயசிலிருந்தே எனக்கு நம்ம ஊரு மவராசாக்களை நினைத்தால் பக்தி பெருகும். அவர்கள் மேல் அம்புட்டு மருவாதி எனக்கு. கோன் உயர்ந்தால் கொடி உயரும் ... கொடி உயர்ந்தால் மக்கள் உயரும்னு சொல்லியிருக்காங்களாமே.(கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கேனோ ... பரவாயில்லை.)  மருவாதி வருவதற்கும் அதான் காரணம். 

அந்த மரியாதையின் நீட்சியாக இப்போதும் நம்ம அமைச்சர்கள் மேலும் எனக்கு ரொம்ப மருவாதியா ஆகிப் போச்சு. அவுக நல்லா இருந்தாதேனே நாமளும் உயர முடியும். அவுக நல்லா இல்லாட்டா நாமளும் நல்லா இருக்க முடியாதுல்லா? அதனால் அவுக நல்லா இருக்கணும்னு நான் இல்லாத சாமியை எல்லாம் கும்புடறதுண்டு. என் தேச பக்திக்கே இது தான் முக்கிய காரணம்.

இப்படி இருக்கச்சே ... இன்னைக்கி நம்ம சீப் மினிஸ்டர் புதுசா ஒரு செய்தி சொன்னார். அதாவது வெளிநாட்டு கம்பெனிகள் நிறைய நம் மாநிலத்திற்கு வருகிறார்களாம். அப்டி சொல்லிட்டு, இந்தியாவிலேயே இது மாதிரி வெளிநாட்டு மக்கள் வியாபாரத்திற்காக வருவதில் நம்ம மாநிலம் இரண்டாம் இடம் வகிக்கிறது என்று சொன்னார். அதில எனக்கு ஒரு சின்ன வருத்தம்.

நம்ம ஊர் வழக்கப்படி எல்லா மாநிலத்திலும் தொழில் ஆரம்பிக்கணும்னா அந்த மொதலாளிகள் கட்டாயம் நம் மாநில அமைச்சர்களுக்கு கமிஷன் கட்டாயம் வழங்கணும். அப்போது தான் கதவுகள் எல்லாம் திறக்கும். நெலமை இப்படி இருக்கும் போது வெளியில இருந்து பணம் போடுற ஆளு எங்க கமிஷன் குறையா வாங்குவாங்களோ அங்க தான கட்டாயம் போவாங்க. அப்படிப் பார்த்தால், நிறைய முதலீட்டாளர்கள் வர்ராங்க அப்டின்னா இங்க கமிஷன் தொகை ரொம்ப கம்மின்னு தானே அர்த்தம். அதுனால் குறையா கமிஷன் வாங்கிறதுல்ல நம்ம மாநிலம் இரண்டாம் இடத்தில நிக்கிது போலும்.

இந்த ஆங்கிளில் யோசித்தேனா... அப்போதிருந்து எனக்கு ரொம்பக் கவலையாகப் போச்சு, நம்ம அமைச்சர்கள் குறையா கமிஷன் வாங்கி ரொம்ப நட்டப் படுறாங்களே அப்டிங்கிற கவலை.

நம்ம அமைச்சர்கள் என்ன இங்கே நீண்ட நெடுங்காலமாகவா இருக்கப் போகிறார்கள். இருக்கிற கொஞ்ச காலத்தில் அள்ளி அமுக்கிப் போடாமல் சும்மா இருக்கிறார்களே என்ற கவலை எனக்கு. யாராவது அமைச்சர்கள்ட்ட சொல்லி சீக்கிரமா எல்லாத்தையும் அள்ளி முடிச்சி செளக்கியமா இருக்கச் சொல்லுங்க.


அவங்க நல்லா இருந்தா தானே நமக்கும் நல்லது. இல்லையா?


*******

*





Sunday, January 27, 2019

1029. பொங்கல் “பரிசு” ... பார்த்த சில திரைப்படங்கள்




*





பொங்கல் விடுமுறை. தொலைக்காட்சி தயவுகளில் நாலைந்து படம் பார்த்தேன்.
1. செக்கச் சிவந்த வானம்
2. மகா நடி
3. வடசென்னை
4. சர்(க்)கார்
5. திருட்டு டிவிடியில்  .. சீதக்காதி.

3 & 5 படங்களில் பாதியிலேயே எழுந்து விட்டேன். வடசென்னை .. மிடியலை!
சர்கார் .. முருகதாஸைப் பற்றித் தெரியும் முன்னே அவரது ரமணா படம் பிடித்தது. சர்கார் .. நல்ல பிரச்சனை. அதை இம்புட்டு வசனம் மூலம் சொல்ல நினச்சது உயிரை வாங்குச்சு. அதோடு நம்மாளு விசய் வசனம் பேசும் போது பண்ணும் கொனஷ்டைகளை அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கலாம். எனக்கு வேடிக்கை & வேதனை. எழுந்து விட்டேன். ஆனாலும் ஒரு பாரின் ரிட்டர்ன் ... இப்படி ஐம்பது ஆட்களை ஒரே நேரத்தில் துவம்சம் செய்வது அவரது ரசிகர்களுக்கே பிடிக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. துவச்சி எடுத்துறார் மனுசன் ... சிவகாசி படத்தில் இருந்த மாதிரி.

செக்கச் சிவந்த வானத்திற்கும் எழுதிருந்திருக்க வேண்டும், ஆனால் ஒரு வேளை விஜய்சேதுபதி ஏதாவது ஒன்றிரண்டு நல்ல சீன் பண்ணிவிடுவாரோ என்ற தயக்கத்தில் படம் முழுவதும் பார்த்துத் தொலைத்தேன். எப்படி விஜய் சேதுபதி உட்பட எல்லோரும் ஒருமித்த குரலில் இன்னும் மணிரத்தினத்தின் புகழ் பாடிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தப் பட்த்தை நெகட்டிவ் காட் பாதர் ஆக்க நினைத்து முயன்றிருப்பார் போலும். ஒரே துப்பாக்கி சூடுகள் தான். அதோடு நம் காதில் ஓட்டை போட ஒரு ஊசியும் கையில் வைத்துக் கொண்டே இயக்கியிருக்கிறார். ஒரு நண்பரிடம் சொன்னேன், ஆனால் அவர் 5 கோடி செலவு செய்து 9 கோடி அந்தப் படம் கொடுத்தது .. ஆகவே அது ஒரு வெற்றிப் படம் என்றார்.

சீதக்காதி ... சேதுபதி உயிரோடு இருக்கும் வரை படம் கனமாக இருந்தது. நடுவில் சில பக்கத்தைக் காணோம் என்ற நகைச்சுவைப் படத்தை எடுத்த இயக்குனர் எப்படி ஒரு கனமான கதையை எடுத்திருக்கிறார் என்று நினைத்துப் படம் பார்க்க ஆரம்பித்தேன். நிறைய நாடகக் காட்சிகள் வரும் போது அந்தக் காலத்தில் சிவாஜிக்காக படங்களின் நடுவே நாடகங்கள் வருமே அந்த நினைவு வந்தது. அதிலும் சேதுபதி இளவயதில் அரச உடையோடு வரும் ஒரு சீன். சரி... சிவாஜி வீர மகனைப் போரில் பறி கொடுத்த வீரத்தாய் வசனம் மாதிரி ஏதும் பேசுவாரோ என்று எதிர்பார்த்தேன். ஒரே வரி வசனத்தோடு முடிந்தது. அவ்ரங்கசீப் படுத்திருப்பது போல் ஒரு போஸ். அதில் வலது காலை நீட்டி, இடது காலை மடித்து இருப்பதுபோல் சேதுபதி படுத்திருப்பார். அந்த போஸில் சிவாஜி நன்கு எட்டிப் பார்த்திருந்தார்.

ஒரு வேளை அந்த சீனில் எனக்கு சிவாஜி நினைவுக்கு வந்ததற்கான காரணம் கலை கலைஞனுக்குப் பிறகும் வாழும் என்ற இப்படத்தின் tag line சொல்வது போல் எனக்கு சிவாஜியின் நினைவு வந்திருக்குமென நினைக்கின்றேன்.

ஆனால் சேதுபதி இறந்த பிறகுதான் இந்தப் படம் பாண்டசி என்ற வகையான ஒரு காமெடி படம் என்பது புரிந்தது. கலைஞனுக்குப் பிறகு அவன் கலை நீண்டு வாழும் என்பது சரி. ஆனால் அவரது ஆத்மாவே வந்து நடிப்பதாகச் சொல்லி ... படத்தைப் பார்த்து சிரிப்பதா, இயக்குனரைப் பார்த்து சிரிப்பதா என்று தெரியவில்லை. பெருத்த ஏமாற்றம்.



மகா நடி ... சாவித்ரி மீது மிகுந்த மரியாதை உண்டு. அதுவும் அவர் மரணத்திற்குப் பின் அவரை நினைத்தாலே ஒரு வெறுமையும், இருளும் சுற்றி கவிவதைத் தடுக்க முடிந்ததில்லை. இதுவரை கீர்த்தி சுரேஷ் அழகாகச் சிரிப்பார் என்பதைத் தவிர ஏதும் பெரிதாகக் கண்டதில்லை. நன்றாக நடிப்பார் என்று எப்போதும் எதிர்பார்த்ததில்லை. ஆனால் இந்தப் படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்து விட்டார். இறுதியில் வரும் சீன்களில் முகமும் கூட சாவித்ரியின் முகமாகவே அவரது முகம் எனக்குத் தோன்றியது. இறுக்கமான படம்.











*



Saturday, January 26, 2019

1028. AUSTRALIAN OPEN 2019 ...4





*




இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதியாட்டம் பார்க்கும் போது பழைய்ய்ய ஞாபகம் ஒன்று வந்தது.

இன்று முதலாட்டத்தில் ஜப்பானிய ஓசாகாவின் கை ஓங்கியிருந்தது. வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டமும் வேகமாக நடந்தது. இரண்டாவது செட்டில் எதிராளியைத் தோற்கடிக்கும் நிலைக்கு வந்தார். 5:4 என்ற முன்னிலையில்  40:0  என்ற நிலைக்கு வந்தார், மூன்று செர்வ்கள் இருந்தன. மூன்றில் ஒன்றை ஒழுங்காக விளையாடியிருந்தால் வெற்றி அவருடையதே. ஆனால் ஒவ்வொரு பாய்ண்ட்டும் கை நழுவிப் போய்க் கொண்டிருந்தது. எதிராளி - விட்டோவா - இரண்டாம் செட்டைக் கவ்விக் கொண்டு போனார்,

அடுத்த செட் ஆரம்பித்த போது அந்தக் காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த சபாட்டினி இதே போல் ஒரு ஆட்டத்தில் 6 : 1, அடுத்த ஆட்டத்தில் 5- 1 என்ற நிலையில் செர்வ் செய்ய ஆரம்பித்து பெர்னாண்டஸ் என்ற எதிராளியிடம் தோல்வியுற்றார். அப்போது ’’till you win the last ball, the game is anybody's  என்று தினசரியில் வாசித்த நினைவு. அதே நினைவு மீண்டும் வந்தது. மூன்றாம் செட்டின் ஆரம்பமும் விட்டோவாவிற்குச் சாதகமாகவே ஆரம்பித்தது.


அவ்வளவு தான்... ஒசாகா தோற்றுவிடுவார் என்று தோன்றியது. போட்டியையும் தொடர்ந்து பார்க்க முடியாது போனது. ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் போது போட்டி முடிவு என்ன என்று ஆண்டவரிடம் கேட்டேன். கூகுள் ஆண்டவர் ஒசாகா வென்று விட்டதாகச் சொன்னார்.   

மகிழ்ச்சி .......









*


Friday, January 25, 2019

1027. AUSTRALIAN OPEN 2019 ...3





*




செரீனா ... மூன்றாவது போட்டியில் 5:1 என்றிருந்தும் தோல்வியுற்றது சோகம் தான். இன்னும் ஒரு க்ராண்ட் ஸ்லாம் வெற்றி பெற்றால் அவருக்கான என் ஆதரவை முடித்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். முடியாமல் போனது. கொஞ்சம் சோகம் தான்.

நம்ம ஆளு நடால், ஜோக்கோவிச் இருவருமே அரையிறுதி ஆட்டத்தை எளிதாக வென்றார்கள். ஸ்கோர் கூட ஏறத்தாழ ஒரே மாதிரி. மூன்றே ஆட்டம் ... போட்டி இனிதே முடிந்தது.
இனி இவர்களுக்குள் போட்டி. நடால் வெல்லட்டும், இன்னும் மூன்று க்ராண்ட் ஸ்லாம் பரிசுகள் (என் கணக்கில்) அவருக்கு மீதியுள்ளது. வெல்ல வாழ்த்துகள்.

பெண்கள் ஒற்றையர் ஆட்டம் ... அட உடுங்க... யார் ஜெயித்தால் என்ன!

சீனியர் legends ஆண்கள் ஆட்டம் ஒன்று நடந்தது. அதிர்ஷ்டம் தான். பார்க்க நன்றாக இருந்தது. நரைத்த பெரிய மீசை ஆளு அசத்தல். நல்ல sense of humour. அந்தக் காலத்தில் எப்படி ஆடியிருப்பாரோ? நானும் இப்போது ரொம்ப வயசாயிருக்குமோன்னு நினச்சேன். 63 தானாம்! நம்ம பக்கத்தில நெருங்க முடியுமா?









*




Monday, January 21, 2019

1026. AUSTRALIAN OPEN 2019 ...2




*

இன்னைக்கி காலைல யார் மூஞ்சில முழிச்சேன்னு தெரியலை. இப்படியா ஒரு டென்னிஸ் போட்டிய பார்க்கணும். விளையாடியது நாலாவது சுற்று. Pre-quarter final. செவ்ரெவ்(4)- ராகோனிக்(16) நடுவில் போட்டி. முடிவு 6:1; 6:1: 7:6

முதல் இரு செட்டுகளிலும் ஒரு “செட்டு” மேளம் மட்டுமே கேட்டுது. ராகோனிக் விளையாடினார்.  பாவம்.. செவ்ரெவ். புதிய சில விளையாட்டுகளை விளையாட முயற்சித்தார் போலும். அதாவது, தன் ராக்கெட்டை தரையில் எத்தனை தடவை அடித்து, அதை உருப்பெறாமல் செய்ய வேண்டும் என்பதை அழகாகச் செய்து காண்பித்தார்.



அதை அடுத்து இன்னொரு பிரமாண்ட record உருவாக்கினார். அதிக முறை ஒரு ஆட்டக்காரர் Double faults வைப்பதில் அநேகமாக ஒரு ரிக்கார்ட் வைக்க முயற்சித்தார். மொத்தம் 10 Double faults. அசகாய சூரர் தான்!

மூன்றாவது செட்டில் ராகோனிக் ரொம்ப பாவப்பட ஆரம்பித்து விட்டார். எத்தனை வில்லத்தனம் பண்ணினாலும் நம் சீரியல் கதாநாயகிகள் கோபப்படாமல், விரோதிகளுக்கும் நல்லதே செய்வார்களே, அது மாதிரி ராகோனிக் தன் எதிராளி மேல் பாவப்பட ஆரம்பித்து விட்டார். கடைசி இரு கேம்களில் ராகோனிக் டென்னிஸ் சொல்லிக் கொடுக்கும் போது கோச் எதிர் கோர்ட்டில் இருந்து எதிராளி அடிப்பதற்காகவே எளிதாக, அவர் கையில் கிடைக்கும்படி அடிப்பார்களே ... அதே மாதிரி செவ்ரேவ் கைகளுக்கே பந்து கிடைப்பது போல்  பந்தைத் “தட்டிக் கொடுத்து” ஆடினார். 

இத்தனை சலுகை கிடைத்தாலும் செவ்ரெவ் தொடர்ந்து தன் ஆட்டமின்மையை நிரூபித்துக் கொண்டே இருந்தார். எனக்கே சந்தேகம் வர... தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் போய் அவரது தரம் நிஜமாகவே நான்கு தானா என்று அருகில் போய் சரி பார்த்தேன். 

அடேய் தம்பி .. செவ்ரெவ் எப்படிப்பா இப்படியெல்லாம் விளையாடி நாலாவது தரம் பெற்றாய்? அல்லது இன்று மட்டும் தான் உன் ஆட்டம் இப்படியா? என்னமோ போ ... நீ தோற்றவரை எனக்கு மகிழ்ச்சி தான்.






*