Monday, January 30, 2006

125. ஜோஸ்யம் பார்க்கப் போனேன்…2


originally posted on 30th jan '06


மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.

ரொம்ப காலத்துக்கு முன்பு என் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம். ஜோஸ்யத்தோடு முழுவதுமாக சம்பந்தம் இல்லையென்றாலும் இன்று வரை பதில் தெரியாத ஒரு கேள்வி மட்டுமல்லாமல் திரும்பிப் பார்க்கையில் கொஞ்சம் interestingஆக இருப்பதால் உங்களோடு பங்கிட்டுக் கொள்ள ஆவல்.

அந்த ‘கனாக்காலம்’- கல்யாணம் எல்லாம் ஆவதற்கு முந்தி, சுதந்திரப் பறவையாக இருந்த போது - அநேகமாக 71-ம் ஆண்டாக இருக்கலாம். ஏதோ ஒரு விடுமுறை நாள். நண்பன் ஆல்பர்ட்டின் வீட்டில் (தவுட்டுச் சந்தை பக்கத்தில் ஒரு சந்து) யாருமில்லை. எங்கள் ராஜ்யம்தான். ‘கொண்டாடி விடுவோம்னு’ திட்டம். அப்டின்னா, அந்தக் காலத்தில பெருசா ஒண்ணும் இல்லீங்க; மதியம்வரை அரட்டை; மதியம் அம்சவல்லியில் ஒரு பிரியாணி & அந்தக் கடையின் famous item: pine apple juice; சாயுங்காலம் ஒரு சினிமா (அநேகமா, சிந்தாமணி அல்லது சென்ட்ரல் தியேட்டர்; இல்லைன்னா நம்ம ரீகல் தியேட்டர்!) - வேறென்ன பெருசா அந்த ‘அறியாப் புள்ளைக’ காலத்தில? ஒரே dry period தானே! ம்..ம்ம்..வாழ்க்கையே அப்போ dry தான் போங்க!!

அரட்டை போய்க்கொண்டிருந்தது. வெளியே கைரேகை பாக்கலியான்னு ஒரு சவுண்டு. சும்மா போன சனியன விலைக்கு வாங்கிறது மாதிரி நண்பன் அந்த ஆளை உள்ளே கூப்பிட்டான். ‘வேண்டாண்டா’ என்றதற்கு, ‘சும்மா ஒரு ஜாலிக்கு’ அப்டின்னுட்டான். என்ன, அவனுக்கு அப்போ பொண்ணு பாத்துக்கிட்டு இருந்த நேரம்! வந்தவனுக்கு எங்க வயசோ, ஒண்ணிரண்டு கூடவோ இருக்கலாம். பேசிய தமிழ் மலையாளம் கலந்து இருந்தது. இஸ்லாமிய வெளி அடையாளங்கள். தோளில் தூளி மாதிரியான ஒரு பை. கையில் உயரமான குச்சி ஒன்று. தலைப்பாகை. உள்ளே வந்து கைரேகை பார்க்க ஆரம்பித்தான். வழக்கமாய் எல்ல ஜோஸ்யர்கள் சொல்லும் கதைகளை எடுத்து விட்டான். அதற்குத் தட்சணையெல்லாம் ரொம்ப ‘சீப்’தான். அந்தக் காலத்தில் என்ன எல்லாம் ஒரு ரூபாய்க்குள் இருந்திருக்க வேண்டும்.

அது முடிஞ்சது. பிறகு மெல்ல புதுசா ஒரு சரடு விட்டான். ‘உனக்கு வாகனத்தில் ஒரு கண்டம் இருக்கு…அது போகணும்னா..’ என்று ஆரம்பிச்சதும் நான் அவன் முதுகிற்குப் பின்னால் போய் நண்பனிடம் சைகையில் அனுப்பிவிடு என்றேன். நண்பன் என்னைப் பார்த்ததிலிருந்து நான் பின்னால் இருந்து என்ன செய்கிறேன் என்று தெரிந்து கொண்டு,’முன்னால வா’ என்றான். தோரணையும் கொஞ்சம் மாற ஆரம்பித்தது. பேச்சில் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் குறைய ஆரம்பிச்சது. கண்டம் போறதுக்கு நாகூர் பள்ளிவாசலில் காணிக்கை போடணும்னான். உடனே சுதாரிச்சிக்கிட்டான். ஏன்னா, நம் எல்லார் வீட்டிலும்தான் சுவர் இருக்கோ இல்லியோ சாமி படங்களா மாட்டியிருப்போமே..அதுமாதிரி அங்க இருந்த படங்களைப் பார்த்ததினால், ‘உங்களுக்கு அந்த நம்பிக்கையில்லைன்னா, வேளங்கண்ணி மாதா கோயிலில் காணிக்கை போடணும்னான். நான் ‘அடுத்த மாதம் கூட நாங்க போறோம்; அப்போ போட்டுக்கிறோம்’னு புத்திசாலித்தனமா சொன்னேன். ‘அவன சும்மா பேசாம இருக்கச் சொல்லு; அதான் உனக்கு நல்லது’ அப்டின்னு நண்பனிடம் சொல்ல, ஆல்பர்ட் ‘சும்மா இருந்து தொலை’ அப்டிங்கிறது மாதிரி ஒரு லுக் உட்டான்.

இதற்குப் பிறகு எனக்கு வரிசையா ஆர்டர் போட ஆரம்பித்தான். கொஞ்சம் உப்பு கொண்டா என்றான். ஒரு கை உப்பு. ஒரு துணியை எடுத்து அவனுக்கு முன்னால் விரித்து அதில் குவித்துக் கொண்டான். அடுத்த ஆர்டர்: ஒரு தம்ளரில் தண்ணீர். ‘டாண்’ணு கொண்டுவந்து வைத்தேன். ஒரு மெழுகுதிரி (கி.வீடுகளில் இதற்கா பஞ்சம்?) உடனே பணிந்தேன். எப்படி திடீரென நான் இவ்வாறு சாதுவாக மாறினேன் என்று கேட்கிறீர்களா? உப்பு கேட்பதற்கு முன்பு அவன் செய்த ஏற்பாடுகள் அப்படி என்னை ஆக்கியிருந்தன. முதலில் துண்டை விரித்தானா? அடுத்து ஒரு கருப்புக் குச்சி..தப்பு..தப்பு.. ஒரு ‘மந்திரக்கோல்’ எடுத்து வைத்தான். அடுத்து எடுத்தது: ஒரு சிறு குழந்தையின் மண்டை ஓடு. அடிவயிற்றில் ஒரு ‘ஜில்’..இல்ல..இல்ல, ‘ச்சில்’ (chill). அதைவிட அடுத்து எடுத்து வைத்த பொருள் இன்னும் கொஞ்சம் வயிற்றைப் புரட்டியது. ஒரு சிறு குழந்தையின் கை - மணிக்கட்டு வரை. காய்ந்த எலும்பும் தோலும் ஜவ்வுமாக…அம்மாடியோவ்..! இந்த ‘செட்டப்’ அவன் செய்ததும் அதுவரை இருந்த rebellious mood எல்லாம் துண்டைக் காணோம் துணியக் காணோம்னு ஓடியே போச்சு. தலைவர் சொன்னார்; நான் செய்தேன்…அவ்வளவே!

‘நான் ஒண்ணு பண்றேன்; அதப் பார்த்த பிறகு உனக்கு நம்பிக்கை இருந்தா காணிக்கை கொடு; இல்லாட்டி ஒண்ணும் வேண்டாம்’ அப்டின்னான். உளுக்கு உளுக்குன்னு மண்டைய ஆட்டினோம்; வேற வழி? மெழுகுவர்த்தியை ஏற்றினான். அதை உப்பின் நடுவில் வைத்தான். அப்புறம் ஆல்பர்ட் கட்டியிருந்த வேட்டியின் (அது அவனோட அண்ணனுடையது; புத்தம் புது வேட்டி)நடுவிலிருந்து ஒரு சாண் அளவிற்கு எடுத்து அதைத் திரித்துக் கொண்டான். அடுத்தது நாங்கள் எதிர்பார்க்காதது. அதை அப்படியே நெருப்பில் காட்டி எரித்தான். நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்; நல்லா எரிஞ்சுது. அவன் வேட்டியைப் பிடித்திருந்த இடம் வரை எரிய விட்டான்; அதன் சூடு தாங்காமல் கையை மாற்றி மாற்றிப் பிடித்து வேட்டியை எரித்தான். ஏறக்குறைய ஒரு அடி விட்டத்திற்கு வேட்டியை எரித்திருக்க வேண்டும். மனசுக்குள் ஆல்பர்ட் அவன் அண்ணனிடம் வேட்டிக்காக வாங்கப் போகும் மிதி என் கண்முன்னால் விரிந்தது; அந்தக் காட்சி நல்லாதான் இருந்தது! எரித்தபின் வேட்டியின் முனையை வைத்து எரிந்த பகுதியை உள்ளே வைத்து ஒரு கயிற்றால் கட்டினான். எரிந்திருந்த கரித்தூளை எடுத்து என் கண் முன்னாலேயே அந்த தம்ளர் தண்ணீரில் கரைத்தான். பிறகு கொஞ்சம் அதில் உப்பையும் சேர்த்துக் கரைத்தான். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது ஒரு dramatic effect-க்கு ஆகத்தான் இருக்கும்; வேறென்ன taste-க்காகவா இருக்கப் போகிறது? ‘மந்திரக்கோலை’ வைத்துதான் கரைத்தான். நடுவில் அந்த மண்டை ஓடு + கை எலும்பு இரண்டையும் வைத்து கொஞ்சம் ‘ஜூஜா வேலை’ காண்பித்தான்.

அதோடு விட்டானா, பாவி. என்னை எழுப்பி, ‘போ; அந்த தம்ளரில் உள்ளதை தெரு முக்கில் கொட்டிவிட்டு திரும்பிப் பாராமல் வா’ என்றான். நாங்களோ அந்த வயதில் இந்த மாதிரி வீட்டுப் பாத்திரங்களைத் தூக்கிக்கிட்டு போறதெல்லாம் நம்ம தகுதிக்குக் குறைச்சல்னு நினைக்கிற டைப்; அதவிடவும்
நம்ம குதிரையில், அதாங்க நம்ம ஜாவா பைக்கில் அந்த சின்ன சந்தில்’சர்ரு..புர்ருன்னு’ போனவைய்ங்க..ஆனாலும் தல சொல்லியாச்சே .. வேற வழி ஏது; தலைவிதியேன்னு தம்ளரோடு தெருமுனைவரை போய்,ஒரு வழியா அதக் கொட்டிவிட்டுத் திரும்பிவந்தேன். இப்போ கிளைமேக்ஸ்… ‘இப்போ வேட்டியில போட்ட முடிச்சை அவிழ்க்கிறேன். உன் வேட்டி நல்லா இருந்தா கேட்ட காணிக்கையைக் கொடு’ அப்டின்னுட்டு, முடிச்சவிழ்த்தான். நம்பவே முடியலைங்க…வேட்டி முழுசா ஒரு பழுதுமில்லாம இருந்திச்சு. அங்கங்கே கொஞ்சம் கைபட்ட அழுக்கு தவிர வேறு எந்த குறையுமில்லை. அந்த இடத்தைவிட்டு ஆளைக் கிளப்பினால் போதும் என்ற நினைப்பில் கேட்ட காசைக் கொடுத்து அனுப்பினோம்.

இது என்ன மாயம்? ஹிப்னாட்டிசம் / கண்கட்டு வித்தை / black magic - இப்படி என்னென்னமோவெல்லாம் சொல்லுவாங்களே - இதில் இது எந்த டைப்? எப்படி இது அவனுக்குச் சாத்தியமானது? எனக்கு இதுவரை இதற்குப் பதில் தெரியவில்லை; உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Jan 31 2006 10:35 pm | சொந்தக்கதை.. and சமூகம் | | edit this
3 Responses
ramachandran usha Says:
January 31st, 2006 at 10:56 pm e


karthikjayanth Says:
January 31st, 2006 at 11:46 pm e
தருமி sir,

//அம்சவல்லியில் ஒரு பிரியாணி & அந்தக் கடையின் famous item pine apple juice//
இந்த line கு அப்புரம் பட்டிக்க முடியல்ல.காதுல புகை வருது சொல்லிட்டேன்

India ல இருக்குரப்ப நின்னா, நடந்தால், நினைத்தாலே பிரியானி தான் .அம்சவல்லி, அன்பகம், முனியான்டி விலாஸ், அருளனைதர் மெஸ் (ரசம்) அம்மா மெஸ், road side கடை பரொட்டா, இட்லி&சட்னி, அப்புரம் இன்னும் நிரய்ய கடை எல்லாம் பழைய நினைப்பு

கோபி Says:
February 1st, 2006 at 8:45 am e
//அடுத்து ஒரு கருப்புக் குச்சி..தப்பு..தப்பு.. ஒரு ‘மந்திரக்கோல்’ எடுத்து வைத்தான். அடுத்து எடுத்தது: ஒரு சிறு குழந்தையின் மண்டை ஓடு.//

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் நடந்தது. வீட்ல பாட்டி தொல்லையால வந்தது.

சில்லரை காசு, அரிசி எல்லாம் (கடைசியா திரும்பித்தர்றேன்னு சொன்னதால) வச்சேன். எல்லா வித்தையும் காட்டிட்டு அரிசி, காசு எல்லாம் எடுத்து அவன் பையில போட எடுத்தான்.

“என்னைய்யா திரும்பித்தர்றேன்னு சொன்ன”என்றதற்கு

“மந்திரிச்சிருக்கு தம்பி. இதுல பொங்கி சாப்பிச்சா ரத்தம் கக்கி செத்துருவ”ன்னான்.

ஒருவழியா அவன்கிட்ட சண்டை போட்டு அவன் முன்னாலேயே காசை ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்து அனுப்பிவைத்தேன்.

சாபம் விட்டுக்கிட்டே போனான். அரிசி என்னாச்சின்னு கேக்கறீங்களா?

ஹி.. ஹி.. நான் இப்ப ஆவியா வந்து எழுதிகிட்டு இருக்கறத பாத்தாவே தெரியுமே..

Sunday, January 15, 2006

115. ஜோஸ்யம் பார்க்கப் போனேன்…1

originally posted on dec15th '05


மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.

1970 அக்டோபர் மாதம் ஜாவா வாங்கியாச்சி. அந்த வருட கோடை விடுமுறையில் நெல்லை அருகில் உள்ள சொந்த ஊருக்குப் பயணம்.(நெல்லை -> ஆலங்குளம் -> நல்லூர் -> காசியாபுரம்) அந்தக் காலத்தில் எங்கள் ஊருக்குள் ஒரே ஒரு பைக் அப்பப்போ வரும். அது ஆசிரியராக இருந்துகொண்டு, ஹோமியோபதி & அல்லோபதி இரண்டையும் சேர்த்துப் பார்த்து, வாத்தியார் பட்டம் போய் டாக்டர் ‘பட்டம்’ பெற்றுக்கொண்டவரின் பைக் அது.



அதுவும்கூட அது ராயல் என்ஃபீல்டு கம்பெனியின் பிரின்ஸ் என்ற அந்தக் காலத்து 150சி.சி. பைக். நண்பர்கள் மத்தியில் அந்த வண்டிக்குச் சூட்டிய பட்டப்பெயர்: எலிக்குஞ்சு. நம்மது: குதிரை. 250 சி.சி. பார்க்கவே அதைவிட பெருசா, மெஜஸ்டிக்கா இருக்கும். எந்த பைக், (பிளசர்)கார் வந்தாலும் பின்னாலே எங்க ஊரு சின்னப் பசங்க விரட்டிக்கிட்டே வர்ரது ரொம்ப சகஜம். சின்னப் பையன்கள் இந்த பைக்குகளுக்கு வைத்த பெயர்: ‘டக்கு மோட்டார்’. அந்தப் பெயர் எனக்கும் ரொம்பவே பிடிச்சுப் போச்சு. அதை கொஞ்சம் ஸ்டைலாக மாற்றி வண்டியிலேயே ‘Darling Duck’-ன்னு கொஞ்ச நாள் எழுதி வச்சிருந்தேன். மதுரையில் இதற்கு விளக்கம் சொல்லியே அலுத்துப் போய் பிறகு அதை எடுத்து விட்டேன்.
அப்படி டக்கு மோட்டாரில் ஊருக்குப் போனது என் அப்பம்மாவிற்குத் தான் ரொம்பப் பெருமை - பேரப் பையன் மோட்டார் சைக்கிளிலேயே மதுரயிலிருந்து வந்திருக்கான்-னு சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். வண்டியை நிப்பாட்டுற இடத்தில நிறைய காவலுக்கு ஏற்பாடெல்லாம் செய்தார்கள் - எல்லாம் சின்னப் பசங்களோட குசும்புதான் காரணம். ஊருக்குள் போய், அப்பம்மா வீட்டின் பின்பக்கம் நிறுத்திவிட்டு, வீட்டுக்கள் சென்ற நிமிடத்திலேயே வண்டியை பசங்க கீழே சாய்த்து விட, ‘எண்ணெய்’ எல்லாம் சிந்துதுன்னு ரிப்போர்ட் வந்ததன் விளைவே அந்தக் காவல் எல்லாம்.

ஊரில் சித்தப்பா முறையில் எனக்கு இரண்டு மூன்று வயதே மூத்த எதிர் வீட்டுக்காரர்தான் நான் ஊருக்குப் போகும்போதெல்லாம் எனக்கு guide and friend எல்லாம். எந்தக் கிணத்துக்குக் குளிக்கப் போகலாம் என்பதிலிருந்து, போனதடவை அம்மங்கொடையில் பார்த்த/பார்க்கப் பட்ட, வேண்டப்பட்ட ‘மக்களை’ப் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் வரை எல்லாம் தருவார். ‘முக்கியமான ஆட்கள்’ ஊர்க்கிணற்றில் எப்போது தண்ணீர் எடுக்க வருவார்கள்; நாம் எந்த ரூட்டில் போனால் எதிர் எதிராகச் சந்திக்க முடியும் என்பது போன்ற வியூகங்கள் வகுத்துத் தருவார்! இந்த முறை டக்கு மோட்டாரில் சென்றது அவருக்கு ரொம்ப சந்தோஷம். அப்படியெல்லாம் உதவுபவர் ஒரு உதவி கேட்டால் இல்லையென்றா சொல்ல முடியும்.

சித்தப்பா ஒரு பெண்ணை - அண்ணலும் நோக்க..அம்மையும் நோக்க - என்றவாறு ஒரு காதல் நடந்துகொண்டிருந்தது. கிராமங்களில் எல்லோரும் ஒருவருக்கொருவர் உறவினர்களாகத்தானே இருப்பார்கள். அதுபோலத்தான் இவர்கள் கதையும். தூரத்து அத்தைப் பெண்; ஆசை வைத்து விட்டார். அந்தப் பெண்ணுக்கும் அதே. அவர்கள் கதை ஆரம்பித்த காலத்தில் பெண்வீட்டாருக்குத் தெரிந்தும் அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை. ஆனால், பெண்ணின் அண்ணன் திடீரென எதிர்ப்புக் காண்பிக்க, அனேகமாக இது இனி நடக்காது என்ற நிலை.(அண்ணன் பிறகு எல்லோருக்கும் தெரிந்த ஆளானார் என்பது வேறு விஷயம்) நம்ம டக்கு மோட்டரைப் பார்த்ததும் சித்தப்பா ஓர் உதவி கேட்டார். வேறொன்றுமில்லை. பத்துப் பதினைந்து மைல்கள் தள்ளி இருந்த ஒரு ஜோஸ்யரிடம் கூட்டிப் போகச்சொன்னார். அந்தக் காலத்தில் இப்போ மாதிரி என்ன மினி பஸ்களும், ஷேர் ஆட்டோக்களுமா கிராமங்களை வலம் வந்தன. எங்கும், எப்போதும் சைக்கிள் அல்லது நடை என்ற நிலை. அவ்வளவு தூரம் சைக்கிள் ‘மிதி’க்கணுமானு தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தவர் நம் டக்கு மோட்டார் வந்ததும் என்னை அந்த ஊருக்குப் போய்ட்டு வரணும் என்றார். எனக்கும் ஊர் சுற்ற ஆசை. உடனே புறப்பட்டோம். அதற்கு முன் ஒரு முக்கிய சேதி சொல்லணுமே; சித்தப்பாவின் வீட்டிலிருந்து சரியாக வடக்குத் திசையில் அந்தப் பெண்ணின் வீடு. ஞாபகம் வச்சிக்கிங்க, சரியா?

எங்க பயணம் ஆரம்பிச்சது. 30 வருஷத்திற்கு முன் நம் கிராமங்களில் சாலைகள் எப்படி இருந்திருக்கும் என்று உங்களுக்கு எங்கே தெரியப் போகுது. இரட்டை மாட்டு வண்டித்தடங்கள்தான் சாலைகள். மாடுகள் நடந்து, இரும்புச் சட்டம் போட்ட சக்கரங்கள் பதிந்து புழுதியோடு இரட்டைக் கோடுகள் போட்டது மாதிரி சாலைகள். இந்த இரட்டைக் கோடுகளுக்கு நடுவே கல் நிறைந்த கரடுமுரடான நடுப்பாதை - இவைதான் அன்றைய சாலைகள். ஒரு சில இடங்களில் இந்த நடுப்பாதையிலும், மற்ற இடங்களில் அந்த இரட்டைக்கோட்டுப் பாதைகளில் ஒன்றிலும், சில சமயங்களில் இந்த ‘சாலை’க்குத் தள்ளி தனியே மனிதர்கள் நடந்து நடந்தே உருவான ஓர் ஒற்றையடிப் பாதையிலோ வண்டியை ஓட்டிப் போகவேண்டும். இந்த மாதிரி சாலைகளில் அந்தக் கிராமத்து மக்கள் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்து அதற்கு முன்பு வியந்ததுண்டு; இப்போது நானே அந்த சர்க்கஸ் வேலையைச் செய்யவேண்டியிருந்தது.

அதோடு ஏன் நமது ரோடுகள் எல்லாமே வளைந்து நெளிந்தே இருக்கின்றன என்ற கேள்வி எப்போதும் மனதில் எழுவது உண்டு. அதோடு, ஆங்கில சினிமாக்களில் நூல் பிடித்தது என்பார்களே அதேமாதிரி நேர் ரோடுகளைப் பார்க்கும்போது இந்த கேள்வி மனதில் எழும். இதற்கு இரண்டு பதில்கள்: இரண்டாவது ஐயத்திற்கு முதலில் பதில் (சரியா, தப்பான்னு சொல்லுங்களேன்) அங்கே ரோடு போட்டு ஊர்கள் வந்தன; இங்கே முதலில் ஊர்கள்; பின்னால்தான் ரோடுகள். அடுத்ததாக, நமது இன்றைய சாலைகள் பெரும்பாலும் பழைய மாட்டுவண்டிகள் சென்ற வழித்தடங்களே. இந்த மாட்டு வண்டிகள் ஊர்விட்டு ஊர் போகும்போது அனேகமாக இரவில்தான் பயணம் நடக்குமாம்; அப்போதெல்லாம் வண்டிக்காரர் தலைக்கு ஒரு சாக்கு வைக்கோல் வைத்துக்கொண்டு தூங்க, மாடுகள் இரண்டும் பழக்கத்தின் காரணமாக சரியான வழியில் போய்க்கொண்டிருக்கும்; அப்போது இரண்டில் ஒரு மாடு (தூக்கக் கலக்கத்தில்..?)கொஞ்சம் மெல்லப் போக, அடுத்த மாடு regular pace-ல் போகுமாம். பிறகு முதல் மாடு ‘விழித்துக்கொள்ள′ அடுத்த மாடு இப்போ மெல்ல நடை போடுமாம். இப்படி மாற்றி மாற்றி மாடுகள் தங்கள் வேகத்தை மாற்றிக் கொள்வதால்தான் நம் பழைய சாலைகள் வளைந்தும், நெளிந்தும் இருக்கின்றதாம். இப்படி ஒரு thesis உண்டு; சரியோ தவறோ தெரியாது.

சரி, நம்ம கதைக்கு வருவோம். தேடிச்சென்ற ஜோஸ்யரின் வீடு (அந்த ஊர் பேர் எதுவும் நினைவில் இல்லை)ஒரு கால்வாய் கரையில் இருந்ததுமட்டும் ஞாபகம் இருக்கிறது. இந்தக் கரையில் டக்கு மோட்டாரை நிறுத்திவிட்டு, மறுகரைக்குச் சென்றோம். ஊர், பேர் எல்லாம் கேட்டார். சரி..சரி..அந்தக் கதை இப்போது எதுக்கு? விஷயத்துக்கு வருவோம். எல்லா ஜோஸ்யர்கள் மாதிரியே இவரும் ‘எல்லாம் நல்லபடியா நடக்கும்; ஆனாலும் இப்போதைக்குக் கொஞ்சம் நேரம் நல்லா இல்லை’ (எல்லாருக்கும் எந்தக் காலத்துக்கும் பொருத்தமான விஷயம்தானே இவை) பொறுமை இல்லாமல் சித்தப்பா எந்தத் திசையில் இருந்து பெண் வரும் என்று கேட்க கணக்கெல்லாம் போட்டு ‘தெற்கு’ என்றார். ‘அடப் பாவி, சரியா எதிர் திசையாகச் சொல்றியே’ன்னு மனசுக்குள்ள சொல்லிட்டு, அந்த இடத்தவிட்டுக் கிளம்பினோம். வெளியே வந்து அந்த ஊருல இருந்த ஒரே ஒரு டீக்கடையில் உக்காந்து, ‘புண்பட்ட இதயத்தைப் புகைவிட்டு ஆத்திக்கிட்டோம்’. இன்னும் கிராமங்களில் இருக்கிற பழக்கத்தின்படி அங்கு இருந்த மக்கள் எங்களை யார், எதுக்கு வந்தீங்கன்னு, வாயைப் புடுங்கினதில, உள்ளத சொன்னோம். அங்கிருந்த ஒருவர் ‘அடடா, அவருக்கெல்லாம் இப்போ பவரு எல்லாம் போயிரிச்சிங்க; இப்பல்லாம் ..’அப்டின்னு இன்னொருவர் பெயரைச்சொல்ல சித்தப்பாவுக்கு ஒரு சின்ன ஆசுவாசம். சரி, அங்கேயும் போய் பாத்துடலாம்னு நம்ம குதிரையில ஏறினோம்.

இரண்டாவது ஜோஸ்யரும் ditto - ஒரு விஷயத்தைத் தவிர. திசை சொன்னார். இப்போ, வடக்கும் இல்லை; தெற்கும் இல்லை. கிழக்கு சொன்னார். சித்தப்பா மறுபடியும் down!
எனக்குக் கொஞ்சம் விஷயம் சூடுபிடிக்கிறது மாதிரி தோணுச்சி. சரி, இனி வீட்டுக்குப் போவோம்னு நினச்சி திரும்பினோம. வர்ர வழியில இன்னொரு கிராமத்தில இருந்த உறவினரைப் பார்க்க இன்னொரு ‘மண்டகப்படி’. அங்க அவரு இன்னொரு ஜோஸ்யர் பெயர் சொல்ல, தோல்வியைச் சகிக்காத ஒரு தீவர மனத்தவர்களாக, அந்த ஆளையும் பாத்துடுவோம்னு அங்க போனோம். அதோடு திரும்புற வழியில்தான் இந்த ஜோஸ்யரின் ஊர். நீங்க நினைக்கிறதுதான் நடந்தது..இந்த ஜோஸ்யர் மேற்கு என்றார். ஆக சித்தப்பா நினச்ச ‘வடக்கு’ திசை தவிர மற்ற மூன்று திசைகளையுமே சொல்லியாச்சி! ஆனா மூணுபேருமே நினச்சது நடக்கும் என்றுதான் சொன்னார்கள். சித்தப்பாவுக்கும் கல்யாணம் நடந்தது..அந்தப் பெண் இல்லை..மேற்குத் திசையிலிருந்து பெண்!

Moral of the story:
மூணு பேரும் ஒவ்வொண்ணா சொன்னதினால, அதுவரை ஜோஸ்யம் பற்றி அதிகமாக நினைக்காத நான் அதைப் பற்றிய சந்தேகங்களை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தேன். ஆனால், வேறு யாருக்காவது அந்த மேற்குத்திசை என்று சொன்ன ஜோஸ்யரை ‘ஆஹா! மனிதன் அப்படியே சொல்லிட்டான்’யா’ அப்டின்னு நினச்சி ஜோஸ்ய நம்பிக்கையாளனாகவும்,அவரோட வாடிக்கையாளனாகவும் ஆகவும் ஒரு வாய்ப்புள்ளது. இல்லையா?
Is it not again a matter of perspective?







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Dec 18 2005 03:08 pm | சொந்தக்கதை.. and சமூகம் | | edit this
14 Responses
satya Says:
December 18th, 2005 at 4:45 pm e
வந்ததுக்கு ஒரு வோட்டு !!!:)
moral of the story:
நமக்கு சாதகமா ஜோசியம் சொல்றவன் கிடைக்கிற வரை ஓயமாட்டோம்ல!

nila Says:
December 18th, 2005 at 6:19 pm e
//நமக்கு சாதகமா ஜோசியம் சொல்றவன் கிடைக்கிற வரை ஓயமாட்டோம்ல! //



தருமி Says:
December 18th, 2005 at 7:10 pm e
சத்யா, நிலா நன்றி.

சத்யா - உங்கது ‘பொட்டிக்கடை’யா, பொட்’டீ’க்கடையா, இல்லை boutique கடையா..?!

இளவஞ்சி Says:
December 18th, 2005 at 10:42 pm e
தருமிசார்,

உங்களுக்கு ஜாவான்னா எனக்கு எங்க அப்பாரு 1980துல வாங்குன புல்லட்டு! காலேஜி 3வது வருசத்துல சன்னமா பைக்கு வேணும்னு அடியப்போட்டு அரிச்சு எடுத்து அவரு ஒருநா புல்லட்டு சாவியக்கொடுக்க அடுத்த அரைமணிநேரத்துல சைடுல இருந்த ரெண்டு பீரோ(!?)வையும் கழட்டிட்டு தெருவையே 30 தடவை சுத்தியிருப்பேன்! அவரு கண்ணுக்கு கண்ணா வைச்சிருந்த புல்லட்டை அப்பறம் Terminater ஸ்டைல்ல ஹேண்டில்பார் போட்டு, ஸீட்டை இறக்கி, ஸைலென்சரை நோண்டி ‘டமடம’ன்னு சவுண்டு வரவைச்சு வாரம் ஒரு ஆல்டரேசன்னு கலக்கல்தான். காலேஜ் கேட்டுக்கிட்ட வந்தாலே நான் வர்றது அத்தனை பிகருக்கும்(!?) தெரிஞ்சிரும். அப்படி ஒரு சவுண்டு.. என்ன எருமைமாட்டுமேல ஒரு கொசு ஒக்கார்ந்து ஓட்டிக்கிட்டு வர்றதா ஓட்டுவாளுக.. அன்னைக்கு நம்ப உடல்வாகு அப்படி.. ஹிஹி…இப்போ வீட்டுல ஓய்ஞ்சுபோயி கெடக்கு!

அப்பறம் ஜாதகம்கறது கேக்கப்போனா அவிங்கா சொல்லறது மனுசனுக்கு மனசுக்கு நம்பிக்கைதரக்கூடியதா இருக்கனும். ஏற்கனவே மன உளைச்சல்ல வர்றவங்களை மேலும் இந்த கிரகம், அந்த பரிகாரம்னு கொழப்பியடிக்கறதா இருக்கக்கூடாது.
இப்பெல்லாம் எந்த கிரகம்னாலும் சரி.. 1ரூபாயிலிருந்து 1 லச்சம் வரை பரிகாரம் சொல்லுறாய்ங்க…

துளசி கோபால் Says:
December 19th, 2005 at 1:31 am e
நமக்கு சாதகமா ஜோசியம் சொல்றவன்தான் ஜோசியன்.

சரி சரி. கையை நீட்டுங்க. ரேகை பார்த்துச் சொல்றேன்.

தருமி Says:
December 19th, 2005 at 9:35 am e
என்ன சொல்லுங்க இளவஞ்சி, மாணவ வாழ்க்கையில காலேஜுக்குள்ள வண்டி ஓட்ற பாக்கியம் எல்லாத்துக்குமேவா கிடைக்கும்? என் காலேஜ் நாட்களில் norton & redi indian அப்டின்னு ரெண்டு வண்டியில வந்த பசங்களை நானே இன்னும் ஞாபகம் வச்சிருக்கேன்னா…உங்கள பாத்த அந்த ‘பிகருங்க’ சும்மானாச்சுக்கும்தான் அப்படி கமெண்ட் அடிச்சிருப்பாங்க…நீங்க சும்மா ஓட்றீங்க..சரி, அது எதுக்குப் பழைய கத எல்லாம்..இல்ல..வீட்டம்மா இதையெல்லாம் வாசிக்கிறதில்லையே?!

அப்பா வண்டிய உங்ககிட்ட கொடுத்துட்டு, கைய கழுவிக்கிட்டாரா? ரொம்ப செல்லப்பிள்ளை போல..

என்ன சொல்லுங்க..எங்க parlance பிரகாரம் ஜாவா குதிரைன்னா, புல்லட்: யானை

தருமி Says:
December 19th, 2005 at 9:37 am e
துளசி,
சாதகமா சொல்லுவியளா..?

கோ.இராகவன் Says:
December 19th, 2005 at 4:32 pm e
அடடே! சோசியமா! எனக்குச் சோசியத்து மேல நம்பிக்கை கெடையாதுல்ல. அதையெல்லாம் நாம் நம்புறதில்லை. கடவுள நம்புறோம்….அப்புறம் இத வேற ஏன்னு நம்புறதில்லை.

மூனு சோசியக்காரங்களும் மூனு தெச சொன்னாங்களே. அது எங்கிருந்துன்னு கேட்டீங்களா?

ivarugala Says:
December 22nd, 2005 at 9:15 pm e
அப்புறம் நாடி ஜோஸ்யம் எப்படி?

காக்காயை எங்கே காணோம்?

சரவணா கே சக்கரவேல் Says:
December 23rd, 2005 at 8:26 pm e
கலக்குறீங்க தருமி…எந்த டாபிக் எடுத்தாலும் பிச்சி எடுக்கிறீகளே…
தமிழ்மணத்தில் எழுத தொடங்கும்முன் ஜோஸ்யம் கேட்டு நல்ல நாள் பார்த்து ஆரம்பிச்சிகளோ..!?

தருமி Says:
December 23rd, 2005 at 9:43 pm e
ராகவன்,
அது நல்ல கேள்விதான்…!

avarugala,
நாடி ஜோஸ்யம் வருது பின்னால்…
அதென்ன ‘காக்கா’ விவகாரம்?

சக்கரவேள்,
வரணும்..வரணும்..முதல் தடவையா வர்ரீங்கன்னு நினைக்கிறேன்.. சந்தோஷம்.

தருமி Says:
December 24th, 2005 at 7:47 am e
மன்னிக்கணும் சக்கரவேல், ஆனாலும் சக்கர வேள் என்ற பெயரும் அர்த்தமுள்ளதுதானே?! (வேள் = அரசன்?)

சத்யா Says:
December 27th, 2005 at 1:56 pm e
தருமி,

//சத்யா - உங்கது ‘பொட்டிக்கடை’யா, பொட்’டீ’க்கடையா, இல்லை boutique கடையா..?!//
நீங்க கேட்ட கேள்விக்கு மறு கேள்வி கேட்டு 1 வாரமாச்சு!
பதில் கேள்வி எப்போ கேட்க போறிங்க!

இப்பிடியெல்லாம் கூவி கூவி தான் நம்ம பக்கத்துக்கு அல்லாரையும் அழைக்க வேண்டியிருக்கு!
ஹூம்……..

தருமி Says:
December 27th, 2005 at 3:05 pm e
கோச்சுக்கப்படாது, சத்யா.
கிறிஸ்துமஸ் வந்துச்சா..பேரப்பிள்ளைகள மேச்சுக்கிட்டு இருந்ததில ‘டச்’ விட்டுப்போச்சு..அதான் இப்படி லேட்டா ஆயிரிச்சி.. உங்க ‘கடைக்கு’ப் போய்ட்டுதான் இங்கன வந்தேன்.