Monday, March 26, 2012

560. சத் சபை அழைத்தது








*
சென்ற வாரம் யாரோ ஒரு பதிவர் தனது சத் சங்கம் பற்றியும் என்னை அதற்கு வரவேற்றும் ஒரு மயில் அனுப்பியிருந்தார். அவர் கொடுத்த அழைப்பு பழைய நிகழ்வு ஒனறை என் நினைவுக்குக் கொண்டு வந்தது.

*

அந்த நிகழ்வு நடந்து கால்நூற்றாண்டுக்கு மேல் அதிகமாகவே இருக்கும். ம்ம் .. ம் .. சரியாக பார்த்து சொல்லி விடுகிறேனே ... 1979-80-ம் ஆண்டு. அடுத்தடுத்த இரு ஆண்டுகளின் கோடைகால விடுமுறைகளில் 'கற்பித்தலில் ஒரு டிப்ளமா' - Dip. in Higher Education -  வாங்க, பல்கலைக் கழகம் நடத்தும்  கோர்ஸ்  ஒனறில் சேர்ந்தேன். முதல் நாளே முன்பின் பார்த்திராத, பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்த மகாலிங்கம் என்ற ஆங்கிலப் பேராசிரியரும் நானும் வகுப்பில் நடந்த 'கலாட்டாகளில்' நாங்கள் அடித்த ஜோக்குகளால் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு நண்பர்களானோம். எனக்கும் அவருக்கும் எல்லா வித vibes ஒத்து வர ஒன்றாகவே இருப்போம். பலருக்கு எங்களிருவரிடமும் கொஞ்சம் பயம் தான்! ஒரு மாதிரி 'வாலுகள்' அப்டின்னு பட்டம் வாங்கினோம்.
1980 - மகாலிங்கத்துடன் ...

மாணவர்கள் எல்லோருமே கல்லூரிப் பேராசிரியர்கள்தான். எல்லாரும் குறைந்தது 15-20 ஆண்டுகள் வேலை பார்த்து முதிர்ந்தவர்கள் தான். ஆனால் மிகவும் 'மோசமான மாணவர்கள்' போல் நடந்து கொண்டார்கள். ஆசிரியர்களுக்கு 'ஐஸ்' வைப்பது முதல், அங்கே நடந்த உள்தேர்வுகளில் 'பிட்' கொண்டு வந்து காப்பி அடிப்பது வரை எல்லாமே நடந்தன. இறுதித் தேர்விலும் காப்பி அடித்த ஒரு ஆசிரியர் supervision-க்காக வந்திருந்த இளம் ஆராய்ச்சியாளரிடம் அகப்பட்ட கதை கூட உண்டு.

பல வகையிலும் எனக்கு ஆச்சரியத்தையும், வருத்தத்தையும் கொடுத்த நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கும். எங்களுக்கு வகுப்பெடுக்க ஆசிரியர் நீண்ட் ஒரு ஹாலுக்குள் நுழைந்ததும் இங்கே தடபுடலாக ஒரு ஆசிரியர் கூட்டம் தடாலென எழுந்து நிற்கும். கையைப் பிடித்து இழுத்து 'உட்காருங்க'ப்பா ... அல்லது பக்கத்தில் வந்த பிறகாவது எழுந்து நில்லுங்க..' என்பேன். எங்களுக்கு வகுப்பெடுத்த பேராசிரியைக்கு மக்கள் அப்படி தடபுடலாக எழுந்து நிற்பது மிகவும் பிடிக்கும். ஆனால் வெளியே அப்படிக் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். அதற்காகவே ஆசிரியர்கள் போட்டி போட்டுக் கொண்டு எழுந்து நிற்பார்கள். (தலைமைப் பேராசிரியை நீங்கள் உங்கள் மாணவர்களை எழுந்து நிற்கச் சொல்ல மாட்டீர்களா? என்று என்னிடம் கேட்டார். என் முதல் கட்டளையே அதுவாகத்தானிருக்கும். எழுந்து நிற்க வேண்டாம் என்பேன் என்றேன். அவர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான்.) வகுப்பின் இடையே வரும் நேரத்தில் ஓடிப் போய் ஆசிரியருக்குத் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து இது போல் பல குற்றேவல் செய்வார்கள்.

சுய உணர்வின்றி எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டிருப்பதுவே அனேக ஆசிரியர்களின் 'பண்பாடாக' இருந்தது. Lady Doak College-ல் வேலை பார்த்த ஒரு சீனியர் பேராசிரியை வகுப்பில் notes எடுப்பதற்கு தனித் தனித் தாட்களில் எழுதி அதை வகைப்படுத்தி அடுக்கிக் கொள்வது வழக்கம். அவர் முதலிரு வரிசையில் அமருவார். வகுப்பெடுத்த எங்கள் பேராசிரியைக்கு அது பிடிக்கவில்லை. நேரே அந்தப் பேராசிரியரிடம் போய் அவர் file-யை வாங்கி எல்லோருக்கும் அதைக் காண்பித்து, 'இப்படியெல்லாமா வகுப்பில் நோட்ஸ் எடுப்பது? ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனி நோட் ஒன்று போட்டு எழுத முடியாதா?' என்று கேட்டார். நிறைய ஆசிரியர்களும் இதே போல்தான் எழுதி வந்தோம். ஆனால் பேராசிரியை கேட்டதும் எல்லோரும் நாவடைத்துப் போய் அமர்ந்திருந்தார்கள். பின்னால் இருந்த நான் என் file-யை உயர்த்திக் காண்பித்தேன். 'இதுவே வசதியாக இருக்கிறது, ma'am. இதெல்லாம் அவரவரின் தனிப்பட்ட வசதி; பழக்கம்' எனறேன். I think this is more a matured system.'' என்றேன். முதல் வாரத்தில் நடந்த இந்த நிகழ்வால் பேராசிரியர் என் மீது ஒரு கருப்புப் புள்ளி வைத்து விட்டார்களோ என்னவோ!

தாழ்மையாகக் கூட தங்கள் சொந்தக் கருத்தை வெளியிட மாட்டார்கள். 'அம்மா', 'அய்யா' - அதாவது எங்களுக்கு வகுப்பெடுக்கும் நான்கு ஆசிரியர்கள் என்ன சொன்னாலும் 'yes, Sir / Yes, Ma'am' தான்! மாற்றுக் கருத்துக்கள் ஏதுமிருக்காது.  மதுரையில் உள்ள ஒரு கல்லூரி முதல்வரும் எங்களோடு மாணவராயிருந்தார். எல்லோரும் ஒரே மாதிரிதான். இந்தக் கூட்டத்தில் நானும் மகாலிங்கமும் தனித்தே நின்றோம். தலைமைப் பேராசிரியருக்கு அடுத்த ஆசிரியருக்கும், வயதில் குறைந்த இன்னொரு ஆசிரியருக்கும் எங்கள் இருவரையும் மிகவும் பிடிக்கும். ஒருவேளை அவர்கள் இருவருக்கும் அந்தப் பேராசிரியையோடு அவ்வளவாக ஒத்துப் போகாததாலும் இருக்கலாம்!

மதிய உணவு வேளைகளில் நிறைய பேர் சாப்பாடு கொண்டு வந்து மொத்தமாக ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதுண்டு. அப்போதெல்லாம் நிறைய விவாதங்கள் நடக்கும். அரசியல், கலாச்சாரம், சினிமா, தத்துவங்கள் -  தத்துவங்கள் வந்தால் மதங்களும் அதில் சேர்ந்து விடுமே! - என்று எல்லாமும் இருக்கும். அப்போதெல்லாம் நான் முழுமையான கடவுள், மத மறுப்பாளன் கிடையாது. ஆனால் 'கண் திறந்து பார்க்க ஆரம்பித்து விட்டேன்'. எல்லோரும் 'கிழித்த கோட்டைத் தாண்டாத மக்களல்லவா"? ஆகவே என் கருத்துக்களுக்கு மிகுந்த எதிர்ப்பு வரும். அதுபோன்ற ஒரு நேரத்தில் நாகமலைக் கல்லூரி கணிதப் பேராசிரியர் - பெயர் எதற்கு? அவர் பெயரை J என்றே வைத்துக் கொள்வோம் - அவர் எங்கள் வழிபாட்டு முறைக்கு வாருங்கள்; எங்கள் சபையில் இது தான் கடவுள்; இப்படித்தான் வணங்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு ஏதுமில்லை. ஆகவே ரொம்ப வித்தியாசமாக இருக்கும்; உங்களுக்கும் பிடிக்கும். வாருங்கள் என்றார். என்ன அமைப்பு என்றேன். சத் சபை என்றார், அவர்கள் கூடுமிடமும் என் வீட்டிற்குப் பக்கத்தில் (S.S.Colony) என்றார். கட்டாயம் வருகிறேன் என்றிருந்தேன்.

இந்த சமயத்தில் அப்போதைய வழக்கம் போல் வீட்டிற்கே பல்கலைக் கழகத் தேர்வுத்தாள்கள் வந்து விடும். திருத்தி அனுப்ப வேண்டும். அதற்குரிய தாக்கீது வந்தது. அதில் நீங்கள் இந்தப் பல்கலை நடத்தும் வேறு ஏதாவது கோர்ஸில் படித்துக் கொண்டிருந்தால் நீங்கள் திருத்த முடியாது. அதைத் தெரிவியுங்கள் என்றிருந்தது. நான் ஏதும் யோசிக்கவில்லை. உடனேயே நான் சேர்ந்திருக்கும் கோர்ஸ் பற்றிய தகவல்களைச் சொல்லிவிட்டு, திருத்தும் வேலை வேண்டாமென்று எழுதியனுப்பி விட்டேன். ஓரிரு நாள் கழித்து எனக்கு ஓராண்டு கல்லூரியில் ஜூனியராக இருந்த நண்பர் வக்ஃப் போர்டு கல்லூரி ஆசிரியர் ஷேக் என்னிடம் இது போல் தகவல் வந்திருக்கிறதே என்று கேட்டார்.  நான் வேண்டாமென்று எழுதி விட்டேன் என்றேன். ஆமாம் .. பின்னால் அவர்களுக்குத் தெரிந்தால் பிரச்சனைதானே என்றார்; அதற்காக இல்லை; கோர்ஸ் படித்தால திருத்தக் கூடாது என்றால் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே - rules are rules - என்றேன். அவரும் அதே போல் விடைத்தாள் வேண்டாமென்று எழுதி அனுப்பி விட்டார்.

சில நாள் கழித்து உணவு இடை வேளையில் நம் பேராசிரியர் J சீரியஸாக உட்கார்ந்து விடைத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்தார்.

'எப்டிங்க திருத்துறீங்க .. வேண்டாம்னு சொல்லலையா?' என்றேன்.

 'அட .. ! நாம படிக்கிறதெல்லாம் எதுக்கு அவங்க கிட்ட சொல்லணும்? நான் ஒண்ணும் சொல்லலை; பேப்பர் அனுப்பிட்டாங்க ... திருத்துகிறேன்' என்றேன்.

என்னைவிட என்னிடம் இதைப் பற்றிக் கேட்ட நண்பர் ஷேக்குக்கு மிக்க கோபம்.

'ஏங்க .. ரூல்ஸ் அப்டின்னா அதை follow  பண்ண வேண்டாமா?' எனறார்..

'அதெல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராதுங்க .. நாம் என்ன இதுன்னால வேற மாதிரியா திருத்தப் போறோம்'.

'ஆனா .. ரூல்ஸ் ..?' என்றேன்.

'அதெல்லாம் பார்க்கக் கூடாதுங்க. எனக்கு காசும் வேணும்ல .. உங்களுக்குத் தேவையில்லாம இருக்கலாம்' என்றார். இது எனக்கு நல்ல கோபத்தைக் கொடுத்தது. ஏனெனில் அவர் வசதியான மனிதர் என்று அங்கு எல்லோருக்கும் தெரியும்.

'நான் கலர் கலரா சட்டை போடலாம். ஆனா .. அன்னாடங்காச்சி'ங்க, நான் உங்களை மாதிரி costlyயான ஆள் கிடையாது' என்றேன்.

'சரி .. சத் சபையில் இருப்பதாகச் சொல்கிறீர்களே .. இப்படிப் பொய் சொல்லி காசு சம்பாதிப்பது தப்பில்லையா?' என்றேன்.

J ரொம்ப கூலாக ஒன்று சொன்னார்: 'அதுக்கும் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு?; அது வேறு .. இது வேறு ..' என்றார்.

அடப்பாவமே!  ஆக, இப்படி ஒரு மனப்பான்மை ! 'சத்' எனறால் சத்யம், எனறு தானே பொருள்!


***

மதங்கள் தான் எங்கள் வாழ்வின் ஒவ்வொன்றிற்கும் போதனை தருகின்றன; அதுவே எங்கள் வேத வாக்கு என்பீர்கள்.  இப்படி சொல்பவர்களுக்கு சொந்த சிந்தனையோ, நல்ல மனதோ, மனசாட்சியோ இருக்காதா? எது சரி எது தவறு என்று நம் மனதிற்குப் புரியாதா? அதன் வழி நம்மால் நடக்க முடியாதா?

இந்த அடிப்படைப் பண்புகளுக்கும் வேத புத்தகங்களைச் சார்ந்திருக்க வேண்டுமென்றால், நீங்கள் நம்பும் உங்கள் கடவுள் கொடுத்த புத்தியை வைத்துக் கொண்டு என்ன செய்வது? யோசிக்க மாட்டீர்களா?

குழந்தை நடக்கும் போது பக்கத்திலிருந்து கைப் பிடித்து பழக்க வேண்டியதுதான். அதற்கும் வாழ்நாளெல்லாம் கைப்பிடித்தா உங்கள் பிள்ளைகளை வளர்க்கிறீர்கள்?

ஒண்ணும் புரியலைங்க ...!

நம்பிக்கையுள்ளவர்கள் தங்கள் வேத நூல்படி நடப்பதால் அவர்கள் மன நிம்மதியோடு இருக்கிறோம்; உங்களால் அப்படியிருக்க முடியுமான்னு ஒரு பதிவர் கேள்வி ஒன்றை காற்றிலே தூக்கியெறிந்தார். அவர் முடிந்தால் (முடியாது என்று தான் நினைக்கிறேன்.) தன் வேதநூல்களைத் தள்ளி வைத்து விட்டு, சாதாரண மனிதனாக, மனித நேயத்தோடும், மனித நியாயங்களோடும் வாழ்க்கையை நடத்திக் காண்பித்தால் அது தரும் நிம்மதி, மகிழ்ச்சி என்பவற்றை அவரால் உணர முடியும். முழு மகிழ்ச்சி - நான் மனிதனாகவே இருக்கிறேன் என்ற நினைப்பில் நிச்சயமாகக் கிடைக்கும்; பெருமையாகவும் இருக்கும்.


உங்களின் நியாயமான மனசாட்சி உங்களுக்குக் கற்றுத் தருவதை விடவா மதங்கள் உங்களுக்குப் புதிதாக, மேலாகக் கற்றுத் தரும் என நினைக்கிறீர்கள்!!?? 

அடப் பாவிகளா!! வளரவே போவதில்லையா?

...........................


ஏற்கெனவே எழுதிய பதிவுகளிலிருந்து சில மேற்கோள்கள்:



*
மதக் கொள்கைகள் இல்லாத ஒரு சமூகத்தில் நேர்மை மலருமா என்றொரு கேள்வியுண்டு. மத நம்பிக்கையாளர்கள் நம்புவது போல் எனக்கு அந்த நம்பிக்கை கிடையாது. மத நம்பிக்கையாளர்களை விடவும் நம்பிக்கையற்றவர்கள் பல விதங்களில் நேர்மையோடு இருப்பார்கள் என்பது என் எண்ணம். -- பெர்ட்ரன்ட் ரஸ்ஸல்


*
கடவுள் மறுப்பு யாரையும் கெடுதல் செய்ய தூண்டுகிறது என்பதற்கு எவ்வித சிறு ஆதாரம்கூட கிடையாது.

கடவுள் பெயரைச் சொல்லி யுத்தங்கள் நடந்துள்ளன. ஆனால் கடவுள் மறுப்பை வைத்து எந்த யுத்தமும் வந்ததில்லை.-- RICHARD HAWKINS
*
பல நம்பிக்கையாளர்களுக்கு மதங்கள் இல்லாமல் எப்படி ஒருவன் நல்லவனாக இருக்கவோ, அல்லது இருக்கவேண்டுமென்ற நினைவோடு இருக்க முடியுமென நம்புவது மிகவும் கஷ்டம்.


கடவுள் மறுப்பு மட்டுமே அவர்களை நல்லவர்களாக்குகிறது என்பதற்குப் பதிலாக நான் கூறுவது: மனித நேயம் எப்போதும் கடவுள் மறுப்பாளர்களோடு சேர்ந்து செல்கிறது.  

 Gregory S. Paul என்பவர் Journal of Religion and Society (2005)-ல் 17 வளர்ந்த நாடுகளைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்று செய்து வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிகமான மத நம்பிக்கையும் கடவுளை முழுவதுமாக நம்பும் நாடுகளில் அதிக அளவிலான மனிதக் கொலைகள், இளமையில் இறப்பு, பாலின வியாதிகள், இளம்வயதில் கர்ப்பமாகுதல், கருக்கலைத்தல் (homicide, juvenile and early mortality, STD infection rates, teen pregnancy, and abortion in the prosperous democracies) மிக அதிகமாக உள்ளன.   --RICHARD DAWKINS





*




Wednesday, March 21, 2012

559. அமெரிக்காவில் என் முதல் நாள் … ("அதீதம்" இணைய இதழில் ..)

*
அமெரிக்காவில் என் முதல் நாள் …

தருமி

*
மார்ச் II
"அதீதம்" இணைய இதழில் வெளிவந்த கட்டுரை.
Date: Tuesday, March 13th, 2012


*


ஆசையிருக்கு தாசில் பண்ண; ஆனா அதுக்குப் பிறகு எதுக்கோதான் அதிர்ஷ்டம் இருக்குன்னு இருக்குமே அதே மாதிரி ஆச்சு நம்ம பிழைப்பு. பல ஆண்டுகளாக முயன்றும் அமெரிக்கா போகும் வாய்ப்பு வாய்க்காமல் கை நழுவிப் போய்க்கொண்டே இருந்தது. கடைசியில் அந்த வாய்ப்பும் வந்தது. வந்ததுதான் வந்ததே கொஞ்சம் நல்ல நேரத்தில், காலாகாலத்தில் வந்திருக்ககூடாதா? ஒரு அக்டோபர் மாதம் நெஞ்சு வலி வந்து .. இதய அறுவை சிகிச்சைக்குத் தயாராகும் நிலையில் .. ..சரி ..சரி.. அந்தக் கதையைப் பிறகு பார்த்துக்கலாம். எப்படியோ புறப்பட்டு போயாச்சி. பத்திரமா அங்க போயும் இறங்கியாச்சி. சேரவேண்டிய இடத்துக்கும் சேர்ந்தாச்சு.

உடன் உறைவாளர்களாக இரு சீனர்கள்; ஒரு ஆண்; ஒரு பெண். இருவரோடும் பேசுவதற்குள் மூக்கால் மட்டுமல்ல வேறு எது எதோவின் வழியாகவும் தண்ணீர் குடிக்க வேண்டியதாகப் போச்சு. அவர்கள் ஆங்கிலத்திறமை அந்த அளவு இருந்தது. அவர்கள் எனக்கு ஒரு வாரத்துக்கு முன்பே வந்திருந்தார்களாதலால் கடை கண்ணி விவகாரங்கள் எல்லாம் தெரிந்திருந்தது. மாலையில் போய்ச்சேர்ந்த நான் அடுத்த நாள் ரொட்டி, பழம் அது இதுன்னு காலையுணவை முடித்ததும், ‘ஆகிவந்த’ விஷயம் இல்லாமல் கஷ்டமாகப் போச்சு. என்ன .. காபி குடிக்காம பல விஷயம் தடை பட்டது. காபி குடிச்சே ஆகணும் அப்டின்னு நினச்சி மக்கள் கிட்ட கேட்டேன். கடை எங்க இருக்குன்னு சொன்னாங்க. சரி, போய் நம்ம முதல் போணியை ஆரம்பிச்சுருவோம்னு அவர்கள் சொன்ன கடைக்குப் போனேன்.

கடையின் கவுண்டரில் ஒரு வயசான அம்மா உட்காந்திருந்தது. ரொம்ப நாள் பழகியவன் போல் கடைக்குள் நேரே நுழைந்து பால் எங்கே இருக்கும்னு பார்க்கலாம்னு தேடினேன். அது ஏன் நமக்கெல்லாருக்கும் – அல்லது எனக்கு மட்டும்தான் அப்படியா? – நாம ஒரு இடத்துக்குப் புதுசுன்னு காண்பிச்சுக்கிறதில் தயக்கம்? மூணு சுத்து சுத்தியும் காணவில்லை. சரி ..இனியும் நடிக்க வேண்டாம்னு நேரே அந்த அம்மா கிட்ட போனேன். ஒரு இளவயதுக்காரர் பில்லுக்குப் பணம் செலுத்திக்கொண்டிருந்தார். கொஞ்சம் விலகி நின்றேன். ஆனால் அந்த அம்மா என்ன வேணும்னாங்க. பால் வேணும்னு சொன்னேன். நான் சொன்னது அவங்களுக்குப் புரியலை. மீண்டும் கேட்டாங்க. நான் நம்மால முடிஞ்ச அளவு ‘milk’ அப்டின்றதை ஸ்டைலா சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம் .. இப்பவும் நான் சொன்னது அவங்களுக்குப் புரியலை. மீண்டும் அடுத்த தடவை நான் முயற்சிப்பதற்குள் அருகே நின்ற இளைஞர் அவருக்குப் பால் வேண்டுமாம் என்றார். எனக்கென்னவோ நான் milk என்று எப்படி சொன்னேனோ அதே போல்தான் அவரும் சொன்னதாகத் தோன்றியது. ஆனால் இப்போ அந்த பெரியம்மாவிற்கு டக்குன்னு புரிஞ்சி போச்சு. அதோன்னு பால் இருக்கிற இடத்தைக் காண்பிச்சாங்க.

பாலை வாங்கிட்டு வந்து காபி எல்லாம் போட்டு குடிச்ச கதை இருக்கட்டும். ஆனா மனசு ரொம்பவே துவண்டு போச்சு. ஏதோ வேலை பார்க்கிற இடத்திலெல்லாம் ஏதோ கொஞ்சம் இங்கிலிபீசு நல்லாத்தான் பேசுற நினைப்புல இருந்த ஆளு நானு. இங்க என்னடான்னு ஒரு சின்ன சாதாரணமான வார்த்தை – பால். இதை முறையாக அவர்களுக்குப் புரிவது போல் சொல்லத் தெரியவில்லையேன்னு என்னை நானே நொந்து கொண்டேன்.

அமெரிக்காவில் நான் முதல் முதலாக வெளியே வந்து இப்படி தோல்வியைத் தழுவியது முதலில் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது. ஆனாலும் மனசைத் தேத்திக் கொண்டேன் – என்னதான் இருந்தாலும் இது என்ன, நம்ம தாய்மொழியா என்று. முதல் நிகழ்வு இப்படி ‘சோகமாக’ ஆனதென்றால், அன்றே நடந்த அடுத்த நிகழ்வு மிக்க ஆச்சரியத்தை அளித்தது.

காலை இப்படிப் போனதென்றால் மாலையில் சீன நண்பர்களிடம் தபால் நிலையம் எங்கு என்று கேட்கப் போய் தபால் என்றால் என்னவென்றெல்லாம் வகுப்பு எடுக்கும் நிலைக்கும், நடன அசைவுகளில் மட்டுமே அவர்களுக்கு விஷயங்களை விளக்கியாக வேண்டியதாயிருந்ததாலும் எனக்கும் நடனத்துக்கும் எந்தவித உறவு முறையுமில்லாமல் இருந்ததாலும் மற்றவர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டு தேடிப்போனேன்.

நான் இருந்தது ஒரு சின்ன கிராமம்தான். ஒரு பெரிய கல்லூரியும் அதைச் சேர்ந்த கட்டிடங்களுமே அதிகமாக இருந்த கிராமம். எனவே தபால் நிலையம் எங்காவது ஒரு ஓரத்தில் சின்னதாக இருக்குமென்ற நினைப்பில் அங்கங்கே கேட்டு போனேன். அதை அடைந்த போதோ பெரிய ஆச்சரியம். ஏனெனில் மிக அழகான கல்கட்டிடம் ஒன்றுதான் தபால் நிலையம் என்று தெரிந்தபோது ஆச்சரியமாகவும், மிக பிரமிப்பாகவும் இருந்தது. முகப்பு – façade – பிரமாண்டமாக அழகாக இருந்தது. சரி ..சரி.. இருப்பது பணக்கார அமெரிக்கா அல்லவா என்று நினைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். இரண்டு கவுண்டர்கள் இருந்தன. நேரே ஒரு கவுண்டருக்குப் போகப் போனேன். ஏதோ தடை செய்யவே நின்று நிதானித்தேன். நல்ல வேளை அடுத்த மூக்குடைப்பிலிருந்து தப்பினேன். ஏனென்றால், ஒவ்வொரு கவுண்டருக்கும் முன்பு தரையில் ஒரு மஞ்சள் கோடு; நாம் அதைத் தாண்டி நிற்பது முறையில்லை. அங்கு நின்று தாமதித்து, கவுண்டரில் இருப்பவர் நம்மைப் பார்த்து yes என்று சொன்னபின்தான் நாம் கவுண்டருக்குச் செல்ல வேண்டும் போலும். நல்லவேளை நிதானித்ததில் அது புரிந்து என் முறைக்குக் காத்திருந்தேன்.

என் முறை வந்தது. கவுண்டரில் இருந்தது ஒரு ஆப்ரிக்க-அமெரிக்க இளம்பெண். அழகான இளஞ்சிரிப்போடு வரவேற்றாள். கொண்டு போயிருந்த பார்சலைக் கொடுத்தேன். நிறுத்துப் பார்த்துவிட்டு $5.20 என்றாள். எனக்கு உதறல் எடுத்துவிட்டது. காலையில் பால்; மாலையில் சில்லறைத் தொல்லையா என்று நினைத்துக் கொண்டேன். நம்ம ஊரில் இந்த மாதிரி இருந்தால் அந்த 20 பைசா சில்லறை இல்லாமல் ஒரு தபால்நிலைய கவுண்டரில் நின்றால் நம்ம ஊரு ஊழியர் என்ன சொல்வார்; எப்படி சில்லறைக்காக நம்மை விரட்டி அடிப்பார் என்ற நினைப்பில், Sorry, I don’t have change என்று தயங்கியபடி 10 டாலர் தாளை நீட்டினேன். நோ ப்ராப்ளம் என்று சிரிப்பு மாறாமல் சொல்லி மீதி சில்லறையைக் கொடுத்த போது அந்தப் பெண் எனக்கு ஒரு தேவதையாகவே தோன்றினாள். அங்கு இருந்த நாட்களில் இந்த விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. அது பேருந்தாக இருக்கட்டும், வங்கியாக இருக்கட்டும்; என் அனுபவத்தில் எல்லாமே இனிமையான நிகழ்வுகளாகவே இருந்தன.பொதுமக்களிடம் அரசு. வங்கி, மற்றும் பொது அலுவலர்கள் எல்லோருமே சிரித்த முகத்தோடு இருந்ததைக் கண்டேன்.

என் மகள்களுக்கு நான் தினமும் என் அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி மெயில் அனுப்பி வந்தேன். என் முதல் நாள் நிகழ்வை எழுதி அனுப்பும்போது, அந்த தபால்நிலைய நிகழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது எழுதியது இன்னும் நினைவில் இருக்கிறது: Unlike our public servants who carry the pain of their piles on their faces, these people here are with all smiles.




*

Sunday, March 18, 2012

558. பழைய்ய்ய்ய வகுப்புத் தோழன்






*

ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு கண் மருத்துவரைப் பார்க்கப் போனேன். நண்பன் ஒருவன் அறிமுகப்படுத்திய மருத்துவர். என்னைப் பார்த்ததும் மருத்துவர் நான் வந்த வேலையையும் மறந்து என்னை உற்றுப் பார்த்தபடியே இருந்தார். உங்களை எங்கேயோ பார்த்தது போலுள்ளது என்றார். நானும் ஆதியோடு அந்தமாக என் வாழ்க்கைக் கதையின் முக்கிய மைல்கல்களை அவர் முன்னே எடுத்து வைத்தேன். படித்த பள்ளி, கல்லூரி, வேலை பார்த்த இரு கல்லூரிகள், தஞ்சையில் வேலை பார்த்த போது இருந்த இடங்கள், 'வயது காலத்தில்' விளையாடிய, ஊர் சுற்றிய இடங்கள் .. லிஸ்ட் என்னவோ மிக நீளமாகக் கொடுத்து வந்தேன். நான் சொல்லியதை எல்லாமே அவர் தலையை ஆட்டி மறுத்தார். இருவருமே கடும் முயற்சி எடுத்தோம். கடைசியில் அவரே நம்பிக்கையிழந்து நான் தான் தப்பாக நினைத்து விட்டேன் போலும் என்று முயற்சியைக் கைவிடும் போது நான் மதுரையை விட்டு விலகி இருந்த ஓராண்டு என் நினைவுக்கு வந்தது. P.U.C. படிக்க மட்டும் பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரி என்று சொன்னேன். ஆஹா .. என்றவர் படித்தது 1960-61-ல் தானே என்றார்.  ஆமாம் என்றேன். E section  தானே என்றார். சில ஆசிரியர்களின் பெயரை நானும் அவரும் மாறி மாறி சொல்லிக் கொண்டோம். எங்கள் வகுப்பின் topography, நான் வகுப்பில் இருந்த இடம் எல்லாம் பற்றி நாங்கள் மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டோம். சும்மா சொல்லக் கூடாது .. மனுஷனுக்கு நல்ல நினைவாற்றல். (அதனால் தான் அவர் டாக்டராகி விட்டார்!) வகுப்பில் பலரது பெயர்கள், அவர்கள் இப்போது எங்கே, என்ன செய்கிறார்கள் என்ற தகவல்களும் சொன்னார். அவர் சொன்ன முழுத் தகவல்களையும் உங்களுக்குத் தரும் முன் ..

ஒரு flash back ....

நான் S.S.L.C.முடிக்கும் போது Secondary Grade ஆசிரியராக இருந்த அப்பா தனியாக B.A. முடித்து, short term B.Ed.  படிக்க சென்னை போக வேண்டியதிருந்ததால் பாளையில் இருந்த சித்தப்பா பொறுப்பில் என்னை அனுப்பி விட்டார். சவேரியார் கல்லூரியில் P.U.C. சேர்த்து விட்டார்கள். பாவப்பட்ட ஜென்மம். நாலைந்து pants; போட முடியாத கால் சட்டை; கட்டத் தெரியாத நாலு முழ வேட்டி, சிரைக்காத மீசை முளைத்த முகம், வீட்டிலிருந்து தனியாக இருந்து பழக்கப்படாத பையன் ... உண்மையிலேயே பாவப்பட்ட பயலாக ஒரு வருடத்தை அங்கே ஓட்டினேன்.
1961-ல் நான் ...

இரண்டாம் term முடிந்ததும் வாழ்க்கையில் சிறிது வெளிச்சம். அரையாண்டு மதிப்பெண்கள் வந்ததும் கல்லூரி முதல்வர் Father சூசை வகுப்பிலிருந்து சிலரைக் கூப்பிட்டனுப்பினார். முதல் term-ல் சாதா மாணவனாக இருந்தவன் இப்போது  நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். இப்படியே படி; கட்டாயம் இரண்டாம் வகுப்பு கட்டாயம் கிடைக்கும் என்று ஆசி கொடுத்தார். (இரண்டாம் வகுப்பே அப்போ அப்படி கஷ்டம்!)

Britto Hostel-ல் Warden, Father ஜார்ஜுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். அடிக்கடி திட்டு வாங்குவேன்; பைன் வேறு போடுவார்.  ஆனால் இரண்டாம் term முடிந்து ஜனவரியில் விடுதிக்கு வந்ததும் என் மேல் ஒரே அன்பைப் பொழிந்தார். இரண்டு நாள் கழித்து தன் அறைக்கு வரச்சொல்லியனுப்பினார். ஏதோ வாங்கிக் கட்டப் போகிறோமென நினைத்து பயந்து போனேன். மறுபடி ஒரே அன்பு. என்ன ஆச்ச்சுன்னா ... அவர்தான் எங்களுக்கு economics பாடம் எடுத்தார். எங்கள் வகுப்பில் முதல் மார்க் 58; எனக்கு 56. வகுப்பில் இரண்டாவது மார்க். அட .. நம்ம ஹாஸ்டல் பையன் நல்ல மார்க் எடுத்துட்டானேன்னு ஒரே அன்பாகிப் போச்சு. வருடம் இறுதி வரை அது நீடித்தது அது மட்டுமல்லாமல், எனக்கும் economics மேலே ஒரே லவ்வாகிப் போச்சு. கல்லூரியில் டெஸ்ட் எல்லாம் சீரியசாக நடக்கும். என் பக்கத்திலிருந்த மூன்றாமாண்டு economics அண்ணனை விடவும் நான் நிறைய additional sheets வேகமாக நிறைய வாங்கி எழுதியதை அண்ணன் ஹாஸ்டல் முழுவதும் பரப்பிட்டார்லா ..!

கல்லூரி உள்ளே ஒரு சிற்றாலயம். என்ன architecture என்று தெரியாது. அனேகமாக இந்துக் கோவில் + கிறித்துவக் கோவில் அமைப்புகள் கலந்து கட்டியது என நினைக்கிறேன், ரொம்ப அழகாக இருக்கும்; அந்தக் கோவிலுக்குள் சென்று ஜெபிப்பது மிகவும் பிடிக்கும். அதோடு அந்தக் கோவில் மணிகளிலிருந்து 'ஆவே மரியா' என்ற பாடல் இசையோடு ஒலிக்கும். அது ரொம்பவே பிடிக்கும். ரொம்ப பக்தியான பையனல்லவா ..!

முதல்வர் Father சூசைக்கு கைப்பந்து மிகவும் பிடித்த விளையாட்டு. நாங்கள் படிக்கும்போது முருகன் என்றொரு கைப்பந்துப் புலி இருந்தார். மூன்றாமாண்டு என நினைக்கிறேன். சில நாட்கள் பாதர் சூசை விளையாட்டு மைதானத்திற்கு வந்து விடுவார். அன்று முருகனின் விளையாட்டு ரொம்ப ஸ்பெஷலாக இருக்கும். எதிர் தரப்பில் வட்டம் போட்டு அதில் பந்தை அடிக்கச் சொல்லி ரசிப்பார். அந்த நேரங்களில் கைப்பந்து மைதானம் முழுமையாகப் பார்வையளர்ளால் நிறைந்திருக்கும்.  முருகன் பின்னாளில் தமிழகம் சார்ந்து விளையாடினார். இந்திய வாலிபால் கழகத்தின் செயலராக இருந்தார்.

ஜான்ஸ் கல்லூரி சவேரியார் கல்லூரிக்கு மிக அருகில் இருக்கும் அதன் பக்கத்தில் ஒரு ஹாக்கி மைதானமிருக்கும். அப்போது எங்களுக்குள் ஒரு கதை உலாவும். அந்த மைதானம் ஜான்ஸ் கல்லூரிக்குரியதாம். ஒரு முறை இரு கல்லூரிகளும் தங்கள் மைதானங்களைப் போட்டியாக வைத்து ஹாக்கியில் மோதினார்களாம். சவேரியார் வெற்றி பெற்றதால் அந்த மைதானத்தை ஜான்ஸ் கல்லூரி சேவியர் கல்லூரிக்குக் கொடுத்து விட்டதாகச் சொல்வார்கள். எவ்வளவு உண்மையோ?!

இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் நடுவில் மரியா காண்டீன் எனற ஒனறு பல ஆண்டுகாலமாக இருந்தது. பன்-பட்ட்ர்-ஜாம் ரொம்ப பேமஸ். பல ஆண்டுகளுக்குப் பின் பாளை சென்ற போது அங்கே போய் ஒரு பன்-பட்ட்ர்-ஜாம் சாப்பிட்டு டீ குடித்து வந்தேன்.

எங்கள் துணை முதல்வர் அந்தோனிசாமி. எங்களுக்கு ஆங்கில non-detailed பாடம் எடுப்பார். அவர் வகுப்பிற்குள் நுழைந்ததும் நீண்ட ஜன்னல் கதவுகளை மூடச்சொல்வார். பாவம் .. ஆஸ்துமா. விடுமுறை, தண்டனை ...  இந்த மாதிரி எல்லாத்துக்கும் அவரிடம் தான் போவோம். அவர்ட்ட போனா ஆங்கிலத்திலதான் 'அளவளாவணும்'! அங்க போறதுக்கு முன்னால் நாங்க படுற பாடு ... ஒரே ஒருதடவை அவரிட்ட போய் இங்கிலிபீசுல்ல பேசிட்டு திட்டு வாங்காம வந்துட்டோம்ல ..!

Dr. ஆராய்ச்சி எனறு ஒரு தாவரவியல் ஆசிரியர். அப்போதுதான் அவர் படித்து முடித்து எங்களுக்கு ஆசிரியராக வந்தார். நெடிதுயர்ந்த ஆள். நம்ம ஊர் ஆள் மாதிரி இல்லாம சிகப்பா, வித்தியாசமான லுக்கோடும் neatly dressed ஆகவும் இருப்பார். ஆங்கிலத்தில பரத்துவார். நாங்களோ தமிழ் மீடியத்தில்ருந்து ஆங்கில மீடியத்துக்கு தவ்விய ஆட்கள். பேசுவது பாதிதான் புரியும். ஆனால் அவர் வேகமாகப் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். பின்னாளில் ஆசிரியர் தொழிலில் இதே போல் நான் பேச முயற்சிக்க அவர் எனக்கு ஒரு மாடல்.

அந்தோனி குரூஸ் - தமிழாசான்; வயதானவர். வகுப்பில் கொஞ்சம் கலாட்டா நடக்கும். பொன்னரசு - இன்னொரு தமிழாசிரியர். நன்றாக வகுப்பெடுப்பார். ஒவ்வொரு முறையும் ஜோக் அடித்து, உடனே மூக்கைத் தடவி விட்டுக் கொள்வார். அப்போது நாம் சிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு timing தான் ... இன்னொரு ஆங்கில ஆசிரியர். கரடு முரடான முகம். பெயர் நினைவில்லை. அவரது ஆங்கில உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கும்.

என்னுடைய பெஞ்சில் பக்கத்தில் தடிமாடு மாதிரி - அவன் பெயர் ஆரோக்கிய சாமின்னு நினைக்கிறேன் - இருப்பான். எப்போதும் எங்கள் பெஞ்சில் உள்ள அனைவரையும் ஒரு சேரத் தள்ளி தள்ளி விளையாடுவான். கஷ்டப்படுத்துவான். பக்கத்தில் ரோசரி என்றொரு மாணவன். அவன் படித்து பாதிரியாராகச் சேர்ந்தான். அப்போது ஒரு முறை பார்த்தேன். இவர்கள் இருவருமே என்னோடு விடுதியில் இருந்தவர்கள். வேறு மாணவர்கள் பெயர் ஏதும் நினைவில்லை.

....

இப்போ நம்ம விட்ட இடத்திற்கு வருவோம் ....








நம் கண் மருத்துவர் கன்னியப்பன் அன்று சில விஷயங்களைச் சொன்னார். அதன்பின் சில முறை சந்தித்தோம். இப்போது நாங்கள் ஒரே இடத்தில்தான் குடியிருக்கிறோம். என் விகடனுக்கு நன்றி. சமீபத்தில் என் வலை பற்றி அதில் வாசித்ததும் அவரும் ஒரு பதிவராக நினைத்து, அதற்காக என்னைச் சந்திக்க நினைத்திருக்கிறார்.  சரியாக சந்தித்தோம். இன்று (18.3.12) வெகுநேரம் பதிவுகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். மனிதர் பெரிய கவிஞராக இருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலம்; ஆங்கிலத்தில் இருந்து தமிழ் என்று கவிதைகளைப் புலம் பெயர்க்கிறார். சொந்தக் கவிதைகளும் ஏராளம். இதைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்த போது அவர் P.U.C.-ல் வாங்கிய ஆட்டோகிராபைக் காண்பித்தார். நான் ஏதாவது எழுதியிருப்பேனான்னு தேடினேன். ஒன்றையும் காணோம். ஆனால் இன்னொரு பெயர் - எல்லோருக்கும் தெரிந்த ஒரு பெயர் - அதில் இருந்தது. வை.கோ. வின் பெயர் அது. அவர் எங்கள் வகுப்பு மாணவராம். அதாவது வை.கோ. எங்களின் பழைய்ய்ய்ய்ய வகுப்புத் தோழன். குறள் ஒன்று எழுதி வாழ்த்தியிருந்தார். நண்பரை வாழ்த்தி ஒரு வரி எழுதியிருந்தார். வீட்டு முகவரியில் ஊர்ப் பெயர் கலிங்கத்துப் பட்டியென்று எழுதியுள்ளார். வை.கோ.வின் கையெழுத்திட்ட அப்பக்கத்தின் நகலை நண்பர் கன்னியப்பன் தன் பதிவில் போட்டிருக்கிறார்.  அன்று .. யாருக்கும் தெரியாத ஒரு சின்ன ஊர்; இன்று தன் மூலம் ஊர்ப் பெயரைப் பெருமைப்படுத்தி, பிரபலப்படுத்தி விட்டார். {நான் மதுரைக்காரன் என்பதால் அது போனற முயற்சிகளை எடுக்கத் தேவையில்லாமல் போய் விட்டது :)  }

பழைய வகுப்புத் தோழர்கள்


நானும் கன்னியப்பனும் திண்டுக்கல்லிலிருந்து மதுரைக்குள் நுழையும் சாலையில் தான் வசிக்கிறோம். வை.கோ. அந்த வழியாக வந்தால் 'மறித்து விடுவோமா' என்று பேசிக்கொண்டிருந்தோம்!

*

நண்பர் கன்னியப்பனும் இந்த நிகழ்வைப் பற்றி
ஒரு பதிவிட்டிருக்கிறார்.  காண்க ...
கன்னியப்பன் ஒரு group photo போட்டிருக்கறார். நானும் என் முகத்தைச் சல்லடை போட்டுத் தேடினேன். அரை குறையாகத் தெரியும் ஒரு முகம் ஒருவேளை என் முகமோ எனறு நினைத்தேன். நிச்சயமில்லை :(   ( என் முகம் எனக்கு மறந்து போச்சு ! )


*




557. WHY I AM NOT A CHRISTIAN ... 2



முந்திய பதிவு ...


*
CHAPTER 3

WHAT I BELIEVE



1925-ல் ரஸ்ஸல் இதே தலைப்பில் எழுதிய ஒரு சிறு நூலின் தொகுப்பே இந்தக் கட்டுரை.

கிறித்துவத்தின் அடிப்படை உண்மைகளான கடவுள், (நித்தியம்) அழிவின்மை என்ற இந்த இரண்டுமே அறிவியலோடு எந்த தொடர்பும் இல்லாதவை.

கடவுள் இல்லையென்பதை என்னால் நிரூபிக்க முடியும் என்றெல்லாம் நான் நடிக்க விரும்பவில்லை. அதே போல் சைத்தானும் இல்லையென்பதை என்னால் நிரூபிக்க முடியாது. கிறித்துவர்கள் சொல்லும் கடவுள் இருக்கலாம்; அதே போல் பழங்காலத்திய கிரேக்க, எகிப்திய, பபிலோனிய கடவுள்களும் இருக்கலாம்.  இந்தக் கடவுள் நம்பிக்கைகளில் எது மேலோங்கியது என்றெல்லாம் கூற முடியாது. (44)

நமக்கு சாவின் மீதான பயம் இல்லாவிட்டால் அழிவின்மை பற்றிய நம்பிக்கை தோன்றியிருக்காது.
அச்சமே மதங்களின் அடிப்படைக் கருத்தாக உள்ளது. மக்களின் வாழ்விலும் இந்த அச்சம் நிரந்தேயுள்ளது.

கடவுளால் இந்த உலகம் ஆளப்படுகிறது; ஆனால் அந்தக் கடவுளை உங்கள் ஜெபங்களால் நீங்கள் மாற்ற முடியும் என்றால் கடவுளின் 'எல்லையில்லா ஆளுமையில்' நீங்களும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். அந்தக் காலத்தில் பல அதிசயங்கள் எல்லாம் உங்கள் ஜெபங்களின் எதிரொலியாக நடந்து வந்துள்ளன. கத்தோலிக்க கிறித்துவத்தில் இந்த அதிசயங்கள் இன்னும் நடந்து வருகின்றன; ஆனால் பிரிவினைக்காரர்களிடம் இந்த 'சக்தி' இப்போது இல்லாமல் போய் விட்டது. (46)

இயற்கையின் விந்தைகளை இந்த உலகத்துக்கு மட்டுமேயானதாக ஆக்கிவிடக் கூடாது. ஏனெனில் இந்த உலகம் பால்வீதியின் கோடிக்கணக்கான விண்மீன்களின் தொகுப்பில் உள்ள ஒரே ஒரு விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு கோள். இயற்கையின் விந்தைகள் அனைத்தையும் இந்தச் சிறு கோளுக்குள் இருக்கும் சின்னச் சின்ன ஒட்டுண்ணிகளான நம்மோடு இணைத்துப் பார்ப்பது வேடிக்கையானது. (47)

அழகான நல்ல வாழ்க்கை என்பது அன்பால் உருவாக்கப்பட்டு, அறிவால் அணைகாக்கப்படுவது தான். (48)

அறிவு பூர்வமான ஒரு மனிதன் வேதநூல்களாலோ, மதங்களின் படிப்பினைகளாலோ எப்போதும் அசைந்து விடமாட்டான் எனபது நிச்சயமான உண்மை. (54)

ஒரு குழந்தை உருவாவதிலிருந்து மடிவது வரை வாழ்க்கையின் ஒவ்வொரு புள்லியிலும் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் பல நுழைந்து, வாழ்க்கையையே பல நேரங்களில் கேள்விக்குரியதாக்கி வேதனைகளைத் தருகின்றன. (55)
------------------------


இந்நூல் ரஸ்ஸலின் பல சொற்பொழிவுகளின் தொகுப்பு. இதில் வரும் அடுத்த பகுதிகள் மதங்களோடு நேரடித் தொடர்பு இல்லாதவை. ஆகவே இப்பகுதிகளைத் தாண்டி, நூலின் இறுதிப் பகுதிக்குச் செல்கிறேன்.
--------------------------

CHAPTER  14

CAN RELIGION CURE OUR TROUBLES?

நமக்கு நேரும் தீமைகளை மதம் வேரறுக்குமா?

மதக் கொள்கைகள் இல்லாத ஒரு சமூகத்தில் நேர்மை மலருமா என்றொரு கேள்வியுண்டு. மத நம்பிக்கையாளர்கள் நம்புவது போல் எனக்கு அந்த நம்பிக்கை கிடையாது. மத நம்பிக்கையாளர்களை விடவும் நம்பிக்கையற்றவர்கள் பல விதங்களில் நேர்மையோடு இருப்பார்கள் என்பது என் எண்ணம். (இதற்கு என் வாழ்க்கையில் ஒரு நேரடி அனுபவம் உண்டு. "நானும் சத் சபையும் .." என்ற தலைப்பில் பிறகு எழுதுகிறேன்!!) (154)

மதங்கள் உண்மையானவை; ஆகவே அதனை நம்ப வேண்டும் என்று சொல்லும் ஒருவரை நான் மதிக்கிறேன். ஆனால், மதங்களை நம்பியேயாக வேண்டும்; ஏனெனில் அது நல்லது செய்யும். மதம் உண்மையா என்பது போன்ற கேள்விகளை கேட்பதே தேவையில்லை என்பவர்களை நான் மறுத்து ஒதுக்குகிறேன்.

நிறைய கிறித்துவர்கள் கம்யூனிசத்திற்கும் கிறித்துவத்திற்கும் மிகுந்த வேறுபாடுகள் உண்டு. கம்யூனிசத்தில் உள்ள தீமைகள் ஏதும் கிறித்துவத்தில் கிடையாது என்றெல்லாம் சொல்வதுண்டு. இது ஒரு மிகப் பெரிய தவறு. O.G.P.U.(Russianl political force) -க்கும் கிறித்தவத்தின் மதத் தீவிரவாததிற்கும்(inquisition) நிறைய வேறுபாடு ஏதுமில்லை.
INQUISITION

கம்யூனிஸ்டுகள் வரலாற்றைத் திரிபு செய்வதுண்டு. அது போலவே மறுமலர்ச்சிக் காலம் வரை கிறித்துவமும் அதையே செய்ததுண்டு. இப்போது கிறித்துவம் கம்யூனிசத்தை விடவும் மோசமில்லாமல் இருப்பதற்கான காரணமே கிறித்துவத்திற்குள்ளிருந்த எழுந்த போராட்டமும், council of Trent (13 December, 1545, -- 4 December, 1563) குழுவின் முனைப்புமே காரணம். (157)

CHAPTER  15

RELIGION AND MORALS

மதங்களும் நெறிகளும்

கடவுள் மேல் நம்பிக்கையில்லாதவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியோ, நற்பண்புகளோ இருக்காது என்றும் பலர் சொல்வதுண்டு. நான் பார்த்த வரையில் நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையற்றவர்களை விடவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியாது.

பண்புகள் என்று பார்த்தால் அவை இரக்கமும் அறிவுசார்ந்தவைகளுமாகும். அறிவுசார்ந்தவைகள் எப்போதும் மதக் கோட்பாடுகளால் தடை செய்யப்படுகிறது. இரக்கம் மதச்சார்பான பாவம், தண்டனை போன்றவைகளால் தடை செய்யப்படுகிறது. (162)



*



Tuesday, March 06, 2012

556. பண்புடன் இணைய இதழில் என் மொழியாக்கச் சிறுகதை:




*

By panbudan - Posted on 29 February 2012



தருமி

பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற, இவர் பிரபலமான வலைப்பதிவரும் கூட, முகம்மது உமரின் பிரபலமான அமினா நாவலை தமிழுக்குத் தந்தவர். அந்த மொழிபெயர்ப்புக்காகவே திசை எட்டும் விருதும், தமுஎகச விருதும் பெற்றவர். இப்போது மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளார்
--------------------------



முன்குறிப்பு:

ஆசிரியரின் முழுப் பெயர் - CHEKHOV ANTON PAULOVICH (1860 - 1904). டால்ஸ்டாய், கார்க்கி போன்ற பெரும் எழுத்தாளர்களின் உற்ற நண்பர்; சமூகப் பிரச்சனைகளே இவரது கதைகளுக்குப் பின்புலமாக அமைந்தன. இதனால் இவரின் பல கதைகளில் சோகமும், மனமுறிவுகளும், மோனமும் இழையோடும். இக்கதையின் பேசுபடு பொருளான தனி மனித மனோவியலும், கதையின் முடிவும் மிகவும் வித்தியாசமானவை.

                                                                ---------------------------





து ஒரு பனிக்காலத்தின் பின்னிரவு. அந்த வயதான வங்கியாளர் தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாகக் குழப்பத்தோடு நடந்து கொண்டிருந்தார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு பனிக்காலத்தில் அவர் அளித்த விருந்து ஒன்று அவர் மனதில் நிழலாடிக்கொண்டிருந்தது. நிறைய அறிவு ஜீவிகள் கலந்து கொண்ட விருந்து அது. எதையெதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சு இறுதியில் தூக்குத் தண்டனை பற்றி வந்து நின்றது. ஒரு சில இதழியல் நண்பர்களும், இன்னும் சில அறிவாளிகளையும் தவிர மற்ற எல்லோருமே ஒட்டு மொத்தமாக தூக்குத் தண்டனையை எதிர்த்தார்கள். பழங்காலத்து முரட்டுப் பழக்கம் அது; ஒரு கிறித்துவ நாட்டில் இப்படி ஒரு தண்டனையா?; மனிதப் பண்பாட்டிற்கு எதிரானது ... இப்படிப் பல எதிர்ப்புகள். அதிலும், சிலர் உலகம் முழுமைக்குமே தூக்குத் தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை மட்டுமே செல்லும் என்று ஒரு வழக்கம், சட்டம் வரவேண்டும் என்று வற்புறுத்தினர்.

விருந்து கொடுத்த வங்கியாளரோ இதற்கு மறுப்பு கூறினார்: "தூக்குத் தண்டனையோ ஆயுள் தண்டனையோ ... எந்த அனுபவமும் எனக்கில்லை. இருந்தும் என்னுடைய மதிப்பீட்டில் தூக்குத் தண்டனையே மிகவும் சரியான தீர்ப்பாகத் தெரிகிறது. ஆயுள் தண்டனையை விட எல்லா விதத்திலும் மேலானது; உயர்வானது. தூக்குத் தண்டனை குற்றவாளிக்கு மரணம் உடனே நடந்து முடிந்து விடுகிறது. ஆனால் ஆயுள் தண்டனை கொஞ்சம் கொஞ்சமாக குற்றவாளியைக் கொல்கிறது. சில வினாடிகளில் உங்களைக் கொல்வது நல்லதா? .. இல்லை அணு அணுவாக உங்களை மெல்லக் கொல்வது சரியா? எதில் மனிதத் தன்மை அதிகம்?"

"இரண்டுமே எனக்குப் பண்பாடானதாகத் தோன்றவில்லை" என்றார் ஒரு விருந்தினர். "ஏனெனில், இரண்டிலுமே உங்கள் வாழ்க்கை உங்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. அரசு என்ன பெரிய கடவுளா? வாழ்க்கையை எடுக்க முடியும். ஆனால் அந்த அரசினால் அதைத் திருப்பித் தரமுடியுமா? அப்படித் திருப்பித் தர முடியாததை எப்படி அவர்கள் இஷ்டத்திற்கு பிடுங்கலாம்?"

அந்தக் குழுவில் ஒரு இளம் வழக்கறிஞரும் இருந்தார். வயது இருபத்தி ஐந்திற்குள் தானிருக்கும். அவரது கருத்தைக் கேட்டதும், அவர் "தூக்குத் தண்டனையோ ஆயுள் தண்டனையோ ... இரண்டுமே என்னைப் பொறுத்தவரை தவறானவை. ஆனால் இந்த இரண்டில் ஒன்று என்று என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், நான் இரண்டாவதைத்தான் தேர்ந்தெடுப்பேன். வாழாமலே மாய்ந்து போவதை விடவும், ஏதோ ஒரு வகையில் எப்படியோ வாழ்வது பெரிதுதானே..!"

வங்கியாளருக்கு தன் கருத்துக்கு எதிர்கருத்தாக வந்த விவாதம் மிகக் கோபத்தைத் தந்தது. முன்னால் இருந்த மேசை மேல் ஓங்கித் தட்டியவராக அந்த இளம் வழக்கறிஞரைப் பார்த்துக் கத்தினார்: "நீங்கள் சொல்வது சுத்தப் பொய்; இருபது லட்சம் தருகிறேன்... வெறும் ஐந்தே ஐந்து வருஷம் ... ஒரு தனிமைச் சிறையில் உங்களால் இருக்க முடியுமா?"

"நீங்கள் இத்தனை தீவிரமாக இதைப் பேசுவதால் அதே தீவிரத்தோடு நானும் சொல்வேன். இருபது லட்சம் கொடுத்தால் ஐந்து என்ன ..பதினைந்து வருஷம் தனிமைச் சிறையில் இருக்க நான் தயார்" என்றார் அந்த இளம் வழக்கறிஞர்.

"பதினைந்து வருஷம்! சரி .. நானும் ஒத்துக் கொள்கிறேன். நண்பர்களே! நான் இருபது லட்சம் பணயமாக வைக்கிறேன்" என்று வங்கியாளர் கத்தினார்.

"நானும் இந்த ஒப்பந்தத்தை ஒத்துக் கொள்கிறேன். நீங்கள் பணயமாக வைப்பது இருபது லட்சம்; நான் பணயமாக வைப்பது என் “சுதந்திரம்".

மூர்க்கத்தனமான இந்த பந்தயம் உறுதியாயிற்று. வங்கியாளருக்கு இந்த இருபது லட்சம் என்பது பெரிய விஷயமல்ல; பணத்தில் புரள்பவர்; நினைத்ததைச் செய்பவர்; பல லட்சங்களை உருட்டி விளையாடுபவர். விருந்து தொடர்ந்து நடக்கும்போது பக்கத்திலிருந்த இளைய வழக்கறிஞரிடம் சிரித்துக் கொண்டே, "இளைஞனே! கொஞ்சம் புத்திசாலியாயிருங்கள். காலந்தாழ்த்தியாவது திருந்திக்கொள்ளுங்கள்.இருபது லட்சம் எனக்குப் பெரிதல்ல. ஆனால் உங்கள் வாழ்க்கையில் நல்ல நாலைந்து ஆண்டுகளை இழக்கப் போகிறீர்கள். ஏன் நாலைந்து ஆண்டுகள் என்று மட்டும் சொல்கிறேனென்றால் அந்த நாலைந்து ஆண்டுகளுக்கு மேல் உங்களால் இந்தப் போட்டியில் நிலைத்து நிற்க முடியாது. அதோடு இன்னொன்றையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் - தானாக வலிந்து நீங்கள் ஏற்றுக்கொள்ளும் இந்த தண்டனை பிறரால் உங்கள் மேல் ஏற்றப்படுவதை விடவும் மிகக் கடினமானதாக, கசப்பானதாக இருக்கும். எந்த நிமிஷத்திலும் வெளியே வந்து இந்தப் பந்தயத்தை முறித்துக் கொள்ளலாம் என்பதாலேயே இந்தச் சிறை வாழ்க்கை மிக மிகக் கடினமானதாக இருக்கும். வாழ்க்கையே கசப்பான ஒரு சிறைக்குள் நீங்கள் அடைத்துக் கொள்வதைப் பார்க்கும்போது உங்களைப் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது".

வங்கியாளர் பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அன்று நடந்த நிகழ்வு ஒவ்வொன்றையும் நினைவு படுத்திக் கொண்டார். கால்கள் அவரது அறையை அங்குமிங்குமாய் அளந்து கொண்டிருந்தன. ஆனால், அவரது நினைவுகள் அன்றைய நிகழ்வுகளை ஆழமாக அசை போட்டுக் கொண்டிருந்தன.

"எதற்காக இப்படி ஒரு பந்தயத்திற்குள் தலையை விட்டேன்! இதனால் எனக்கு என்ன லாபம்? அந்த பந்தயத்தால் ஆயுள் தண்டனை சிறந்ததா தூக்குத் தண்டனை சிறந்ததா என்று மக்களை உணர வைக்கப் போகிறதா? இல்லை .. இல்லவே இல்லை .. எல்லாம் சுத்த வெட்டித் தனம். பந்தயம் வைத்த அந்த நாள் என்னைப் பொறுத்த வரை ஒரு வீம்பு பிடித்த, மனம்போல் நடக்கும் ஒரு பணக்காரனின் வெட்டிப்பந்தயம், அந்த வழக்கறிஞனுக்கோ என் காசு மேல் கண்!"

மீண்டும் பழைய நினைவுகளுக்குள் மூழ்கிப் போனார் வங்கியாளர். அந்தப் பந்தயம் உறுதியானதும் மற்றைய அனைத்து ஏற்பாடுகளும் உறுதியாக்கப்பட்டன. வழக்கறிஞருக்கு மிகக் கடுமையான சட்ட திட்டங்களுக்கு உட்படுத்தப்பட்ட சிறை. வங்கியாளரின் வீட்டில் இருந்த தோட்டத்து அறையே கடுஞ்சிறையாகும். பந்தயக் காலமான பதினைந்து ஆண்டுகளும் வழக்கறிஞர் அந்த வீட்டின் வாசலைத் தாண்டவோ வேறு மனிதக் குரலைக் கேட்கவோ, கடிதங்கள், செய்தியிதழ்கள் வாசிக்கவோ முடியாது. ஏதாவது ஒரு இசைக் கருவி வாசிக்க, நூல்கள் வாசிக்க, கடிதங்கள் எழுத, மதுபானம் அருந்த, புகை பிடிக்க அனுமதியுண்டு. வெளியுலகோடான தொடர்பு கொள்ள ஒரு சின்ன ஜன்னலிருக்கும். அது வழியே எழுத்து மூலமாகத் தன் தேவைகளை வெளியுலகிற்கு அனுப்பலாம். புத்தகம், இசை, மது - இவைகள் எவ்வளவு வேண்டுமானாலும் ஜன்னல் வழியே சிறு குறிப்புகள் மூலம் அவர் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு சின்ன விஷயமும் கூட மிகத் திருத்தமாக முதலிலேயே திட்டமிடப்பட்டது. பதினைந்து ஆண்டுகள் அவர் தனிமைப்படுத்தப் படுவார். 1870-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி பன்னிரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் இந்தப் பந்தயம் 1885-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி பன்னிரண்டு மணிக்கு முடிவடையும். சரியாக இந்த நேரத்திற்கு இரு நிமிடங்களுக்கு முன்பே வெளியே வழக்கறிஞர் வந்தாலும், வங்கியாளர் பணம் எதுவும் தரவேண்டியதில்லை. இருபது லட்சம் வங்கியாளருக்கே என்று ஒப்பந்தமிடப்பட்டது.

பந்தயம் ஆரம்பித்தது. முதல் ஆண்டில் வழக்கறிஞர் அனுப்பிய சீட்டுகளிலிருந்து அவர் தனிமையின் தீவிரமும், அதனாலான தவிப்பும் தெரிந்தன. இரவும் பகலும் அவரது அறையிலிருந்து பியானோவின் இசை வெளியே கசிந்தது. மது, புகை இரண்டும் அவரால் கேட்கப்படவேயில்லை. சீட்டு ஒன்றில், "மது ஆசையை வளர்க்கிறது; ஆசைகள் ஒரு சிறைக் கைதியின் முதல் எதிரி; அதுவும் நல்ல ஒயினை தனியாக அமர்ந்து அருந்துவது அயர்ச்சியை மட்டுமே தரும். புகையோ அறையின் மூச்சுக் காற்றையே அசுத்தமாக்கி விடும்" என்று எழுதியிருந்தார். முதல் ஆண்டு முழுவதும் வழக்கறிஞர் கேட்ட நூல்கள் மிக எளிதானவைகளே - காதல், மர்மங்கள், கற்பனைகள், நகைச் சுவைகள் - இப்படிப்பட்ட கதைகளே அவரால் கேட்கப்பட்டன.

இரண்டாவது ஆண்டு - பியானோ அமைதியாகி விட்டிருந்தது. வழக்கறிஞர் இப்போது கேட்ட நூல்கள் யாவும் பெரும் இலக்கியங்கள் தான். ஐந்தாவது வருடம் மறுபடியும் பியானோ ஒலிக்க ஆரம்பித்தது. மதுவும் கேட்கப்பட்டது. அவரது வாழ்க்கையை உன்னிப்பாகப் பார்த்தவர்களுக்கு வழக்கறிஞர் இந்த ஆண்டு முழுவதும் குடிக்க, உண்ண, தூங்க மட்டுமே செய்கிறார் எனப் புரிந்தது. தொடர்ந்த கொட்டாவிகள் .. தனக்குத் தானே கோபமாகப் பேசிக்கொள்ளுதல் .. என்று காலம் போனது. வாசிப்பு அறவே இல்லாது போயிற்று. சில நாட்களில் இரவு முழுக்க முனைந்து எழுதிக் கொண்டிருந்தார். இரவு முழுக்க எழுதியதைக் காலையில் எழுந்ததும் கிழித்துப் போட்டார். பல நேரங்களில் அவரின் அழுகைக் குரல் வெளியே வரை கேட்டது.

ஆறுவது ஆண்டின் இரண்டாம் பகுதியில், பல மொழிகள் கற்கும் ஆவலுண்டானது. அதனோடு வரலாறு, தத்துவம் இவைகளையும் கற்க ஆரம்பித்தார். இவைகளைக் கற்க ஆரம்பித்த போது, அவரது ஆர்வத்தை நிறைவேற்ற வங்கியாளர் மிகுந்த சிரமப்பட்டார். அத்தனை நூல்கள் ... அத்தனை வேகம் ...! நான்கு ஆண்டுகளில் மட்டும் 600 புத்தகங்களை வங்கியாளர் வாங்கிக் கொடுக்க வேண்டியதாயிற்று. இந்தத் தீவிரம் உயர் நிலையிலிருந்த போது வழக்கறிஞரிடமிருந்து ஒரு சீட்டு வங்கியாளருக்கு வந்தது.

"எனதருமை சிறையதிகாரியே! இந்தக் கடிதத்தை நான் ஆறு மொழிகளில் எழுதியுள்ளேன். இவைகளை மொழி வல்லுனர்களிடம் கொடுங்கள். அவர்கள் அதை வாசிக்கட்டும். அவர்கள் தவறு ஏதும் அவைகளில் கண்டுபிடிக்காவிட்டால், தோட்டத்தில் ஒரு துப்பாக்கி வெடிச் சத்தம் எழுப்புங்கள். நான் என் முயற்சியில் முழு வெற்றி பெற்று விட்டேன் என்பதைப் புரிந்து கொள்வேன்".

"வித்தகர்கள் பலரும் பல மொழிகளில் எழுதுகிறார்கள். மொழிகள் வேறாக இருந்தாலும் கருத்துக்கள் ஒன்றே. இப்போதைய எனது மிக்க உன்னதமான மகிழ்ச்சிகரமான நிமிடங்களை நீங்கள் தெரிந்து கொண்டால் இதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்".

வழக்கறிஞரின் விருப்பம் நிறைவேற்றப்பட்டது .. ஒன்றல்ல .. இரண்டு குண்டுகள் தோட்டத்திலிருந்து சுடப்பட்டன!

பத்து ஆண்டுகள் கழிந்தன.

இப்போது வழக்கறிஞர் தன் மேசையருகே அமர்ந்து அமைதியாக பைபிளின் புதிய ஏற்பாட்டை வாசித்துக் கொண்டிருந்தார். வங்கியாளருக்கு இது மிக ஆச்சரியத்தைக் கொடுத்தது. நான்கு ஆண்டுகளில் 600 நூல்களைக் கற்றறிந்தவர். ஆனால் இப்போது ஒரு வருடம் முழுமைக்கும் மிக எளிமையான, சின்னதான ஒரு நூலை எப்படி தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறார் என் வியந்தார். இந்த நூலை வாசித்த பின் மதங்களின் வரலாறு, இறையியல் என வாசிக்க ஆரம்பித்தார்.

கடைசி இரு ஆண்டுகளில் அவரின் வாசிப்பு மிகவும் வேறுபட்டு இருந்தது. நிறைய வாசித்தார் ... வாசித்தவையும் பல்வேறு துறை தொடர்பானவை. முதலில் உயிரியல் .. பின் பைரனும் ஷேக்ஸ்பியரும் ... அவரிடமிருந்து வரும் சீட்டில் வேதியல் நூலும் இருக்கும்; அதோடு மருத்துவ நூல், மர்மக்கதைத் தொகுப்புகள், தத்துவம், இறையியல் தொடர்பானவை என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஏதோ ஒரு பெருங்கடலுக்குள் - பல்வேறு உடைந்த பாகங்கள் மிதக்கும் நீருக்குள் - ஏதாவது ஒன்றைப் பற்றி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் அதிலிருந்தது.

வங்கியாரின் சிந்தனைகள் தொடர்ந்து, அந்த முழு பதினைந்து ஆண்டு கால நிகழ்வுகளை மனதிற்குள் ஓட்டிப் பார்த்தன. "நாளை பந்தயம் முடிவிற்கு வருகிறது. நாளை 12 மணிக்கு வழக்கறிஞர் சுதந்திரமாகி விடுவார். நான் இருபது லட்சம் கொடுக்க வேண்டும். அப்படி பணத்தை எப்படியாவது பிரட்டிப் போட்டுக் கொடுத்தால் அதோடு என் வாழ்க்கையே அவ்வளவு தான் ... முழுவதுமாக அழிந்தே போய்விடுவேன்...".

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கை நிறைய பணம் .. எத்தனையோ லட்சங்கள் .. கோடிகள் ... ஆனால் இப்போதோ கடன் மயம்தான். பங்குச் சந்தையின் சூதாட்டங்கள், கண்மூடித்தனமான கணிப்புகள், கவனமின்மை, முதுமை ... எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அவரது தொழிலை முழுவதுமாக ஆட்டியெடுத்து விட்டன. கவலையற்று, தன்னமிபிக்கையோடுமிருந்த அந்த மனிதர் இப்போது ஒரு வெகு சாதாரண வங்கியாளராக, பங்குச் சந்தையின் ஒவ்வொரு சின்ன அசைவிற்கும் ஆடிப் போகுமளவிற்கு மாறி விட்டார்.

"முட்டாள்தனமான பந்தயம்.." தன் தலையைப் பிடித்துக் கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டார். "இந்த மனுஷன் ஏன் செத்துத் தொலக்கவில்லை? வெறும் நாற்பது வயதுதான் இந்த மனிதனுக்கு. வெளியே வந்ததும் என் கடைசிப் பைசாவும் அவரிடம் போய்விடும். இனி இந்த மனிதன் திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து, பங்குச் சந்தைகளின் சூதாட்டத்தில் திளைத்து விடுவான். நான் அவனைப் பார்த்து ஏங்கும் பிச்சைக்காரன் போல் நிற்க வேண்டும். யார் கண்டது .. நாளையே அவன் என்னிடம், "எனது இந்த இனிய வாழ்க்கைக்கு நீதான் காரணம். உனக்கு நான் கட்டாயம் ஏதாவது உதவி செய்ய வேண்டும்" என்றும் சொல்லலாம்! ம்ம் .. ம்.. இது அதிகம் .. அப்படியெல்லாம் நடக்கக் கூடாது. நான் ஓட்டாண்டியாவது, மரியாதையை இழப்பது .. இவைகளிலிருந்து தப்பிக்க ஒரே வழி - இந்த மனிதன் சாக வேண்டும்.

இருண்ட இரவு. கடிகாரம் மூன்று மணியடித்தது.

வங்கியாளர் மிக உன்னிப்பாகக் கவனித்தார். வீட்டில் அனைவரும் நல்ல உறக்கத்திலிருந்தார்கள். ஜன்னல் வழியே உறைந்து நின்றிருந்த மரங்களின் அசைவுச் சத்தம் மிக மெல்லியதாகக் கேட்டது. எந்த விதச் சத்தமும் இன்றி 15 ஆண்டுகளாகத் திறக்காமலிருந்த தோட்ட வீட்டின் சாவியை இருப்புப் பெட்டியிலிருந்து பத்திரமாக வெளியே எடுத்தார். மேல் கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டு வீட்டு விட்டு வெளியே வந்தார். தோட்டம் மிகவும் இருளடர்ந்திருந்தது. மெல்லியதாக மழை பெய்து கொண்டிருந்தது. குளிர்ந்து ஊடுருவும் காற்று மரங்களை வெறுமனே இருக்க விடாது அசைத்துக் கொண்டிருந்தன. வங்கியாளரின் கண்களுக்குத் தோட்டமோ, அங்கங்கே இருந்த வெண்ணிறச் சிலைகளோ, மரங்களோ .. எதுவுமே தெரியவில்லை. தோட்ட வீட்டின் அருகே வந்து தோட்டக்காரன் பெயரைச் சொல்லி இரு முறை மெல்ல அழைத்தார். பதிலேதுமில்லை. குளிருக்கும், மழைக்கும் பயந்து அவன் சமையலறையிலோ வேறெங்கோ படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பான். நான் செய்ய நினைப்பதைச் செய்து முடித்து விட்டால், எல்லோருக்கும் முதல் சந்தேகம் தோட்டக்காரன் மேல்தான் வரும் என்று நினைத்துக் கொண்டார்.

இரவில் தட்டுத் தடுமாறி நடந்து, தோட்ட வீட்டிற்குப் போய் இருகி மூடிப்போயிருந்த கதவைக் கஷ்டப்பட்டுத் திறந்து மெல்ல உள்ளே நுழைந்தார். குறுகிய பாதை .. நல்ல இருட்டு .. ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்தார். எங்கும் அரவம் ஏதுமில்லை. நிசப்தம் .. ஒரு படுக்கை .. காலியாகக் கிடந்தது. உடைகள் எல்லாம் அந்தக் கட்டிலின் மீது கிடந்தன. இரும்பு அடுப்பு ஒன்று அங்கு ஓர் ஓரத்தில் இருந்தது. அங்கிருந்து பார்த்த போது 'கைதி'யின் அறை மூடி, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வைத்த சீல் உடைக்கப்படாமல் இருந்தது தெரிந்தது.

பற்ற வைத்த தீக்குச்சி அணைந்தது. வயதான வங்கியாளருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. மெல்ல 'கைதி'யின் அறைப்பக்கம் சென்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். கைதியின் அறைக்குள் பெழுகுவர்த்தியின் மெல்லிய ஒளி மங்கலாகப் பரவியிருந்தது. கைதி நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தார். தலை, முதுகு, கைகள் இவைகள் மட்டுமே வங்கியாளருக்குத் தெரிந்தன. விரிந்து கிடந்த பல புத்தகங்கள் மேசை, நாற்காலி, கம்பளம் என்று எல்லாவிடத்திலும் விரவிக் கிடந்தன. வங்கியாளர் ஜன்னல் வழியே தன் கைதியைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஐந்து நிமிடங்களாயிற்று. ஆனால் கைதியின் உடம்பில் எந்த மாற்றமுமில்லை. 15 ஆண்டின் தனிமைச் சிறை எந்த வித அசைவுமின்றி அவரை அப்படியே இருக்கக் கற்றுக் கொடுத்திருந்தது போலும்!

வங்கியாளர் மெல்ல ஜன்னலின் கண்ணாடி மேல் மெல்லத் தட்டினார். கைதியிடமிருந்து எந்த மாற்றமுமில்லை. வங்கியாளர் மெல்ல பூட்டின் மேலிருந்த சீல்களை மெல்லப் பிரிந்து, சாவியை கதவினுள் நுழைத்தார். இப்போதும் கைதியிடம் எந்த மாற்றமுமில்லை. மெல்லக் கதவைத் திறந்தார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பூட்டிய கதவின் பூட்டு ... கடிதாயிருந்தது. திறந்த கதவு கிறீச்சிட்டது. வங்கியாளர் ஆச்சரியமான ஒரு கத்தலையும், தன்னை நோக்கி ஓடிவரும் கைதியின் காலடி ஓசையையும் எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மூன்று நீண்ட நிமிடங்கள் .. மெளனமாகக் கழிந்தன. முன்பு போலவே இப்போதும் மெளனம் தொடர்ந்தது. வங்கியாளர் துணிந்து அறைக்குள் நுழைந்தார்.

மேசையின் முன்னால் அந்த மனிதன். ஆனாலும் பின்னாலிலிருந்து அவனைப் பார்க்க சாதாரண மனிதனாகத் தெரியவில்லை. வெறும் எலும்புக் கூடு; தோல்கள் வற்றி ஒட்டிப் போயிருந்தது. பெண்ணின் முடி போல் முடி நீண்டு வளர்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. நீண்ட, கரடு முரடான தாடி. முகமெல்லாம் ஓளி படராது மஞ்சள் பூத்துக் காய்ந்திருந்தது. கன்னங்கள் ஒட்டிக் குழிந்து போயிருந்தன. தன் தலையைக் கைகளில் தாங்கிப் பிடித்தவாறு இருந்ததைப் பார்க்கும்போதே வேதனையே மீதியாயிருந்தது. முடியெல்லாம் கருமையிழந்து வெளிறிப் போய் கிடந்தது. முதுமையடைந்து சோர்ந்திருந்த அந்த மனிதனைப் பார்க்கும் யாரும் அவருக்கு வயது வெறும் நாற்பதுதான் என்றால் நம்பவே மாட்டார்கள். மேசையில், குனிந்திருந்த முகத்திற்கு எதிர்த்தாற்போல், கைகளுக்கருகே ஒரு தாள் மெலிதாக ஆடிக் கொண்டிருந்தது. மெல்லிய சின்ன எழுத்துகளால் நிறைந்திருந்தது. 'பாவப்பட்ட மனுஷன்'. நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். எத்தனை .. எத்தனை கனவுகளோ? இவனை இப்படியே தூக்கிக் கொண்டு போய், கட்டிலில் கிடத்தி, தலையணையை வைத்து அழித்துக் கொன்றால் யாருக்கு என்ன வித்தியாசம் தெரியும்? இயற்கையான சாவு என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். எதற்கும் அதற்கு முன்பு அவன் எழுதியுள்ள கடிதத்தைப் படித்துப் பார்ப்போம் என்று வங்கியாளர் கடிதத்தை மெல்ல எடுத்தார். கைதியிடமிருந்து எந்த அசைவும் இல்லை. வங்கியாளர் கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தார்.

நாளை ... இரவு 12 மணி .. எனக்கு என் விடுதலை கிடைத்து விடும். மக்களோடு மக்களாய் பழக முடியும். ஆனாலும் இந்த அறையை விட்டு வெளியேறி, உதயமாகும் சூரியனைப் பார்ப்பதற்கு முன் உன்னிடம் ஒன்று சொல்ல ஆசை. என் முழு மனதோடும், உணர்வோடும் என்னைத் தொடர்ந்து கண்காணித்து வரும் கடவுளின் சாட்சியோடு நான் சொல்ல விரும்புவது ... நல்லூழ் என்றெல்லாம் உங்கள் புத்தகங்கள் எல்லாம் விளிக்கும் சுதந்திரம், வாழ்க்கை, உடல் நலம் போன்ற எதுவும் இப்போது எனக்குப் பெரிதில்லை.

பதினைந்து ஆண்டுகள் வாழ்க்கையை, உலக வாழ்வை ஆழ்ந்து படித்து விட்டேன். நான் பதினைந்து ஆண்டுகளும் உலகத்தைப் பார்க்கவில்லை; மக்களுடன் பழகவில்லை. ஆனால் நீங்கள் கொடுத்த புத்தகங்கள் மூலம் இனிமையான ஒயினை ருசித்தேன்; பாடல்களைப் பாடினேன்; காட்டில் திரியும் மானையும் மாட்டையும் வேட்டையாடினேன்; பெண்களைக் காதலித்தேன் ... அதுவும், மிக அழகான பெண்கள் .. தெய்வீகப் பெண்கள் ..உங்கள் கவிஞர்களின் உன்னதக் கற்பனையில் படைக்கப்பட்ட பெண்கள் ... என்னிடம் இரவில் வந்து என் காதுகளில் அழகானவைகளை உச்சரிக்க, நானோ அதன் இன்பத் தலைச் சுற்றலில் மகிழ்ந்தேன். உங்கள் நூல்களின் வழியே நான் எல்ப்ரஸ், வெள்ளை மலை (Elbruz, Mount Blanc) போன்ற உயர்ந்த மலைகளின் சிகரங்களுக்கு ஏறிப் போனேன்; அங்கிருந்து உதயமாகும் சூரியனையும், மாலையில் மயங்கும் சூரியனையும் பார்த்துக் களித்தேன்; கடலும் மலைகளும் ஒளியில் சிலிர்த்துத் தெரிந்தன. அந்த மலை உச்சிகளில் என் தலைக்கு மேல் ஒளிர்ந்த மின்னல்களையும், விலகிப் போகும் மேகக்கூட்டங்களையும் ஆசைதீரப் பார்த்தேன்; பச்சைப் பசும் வயல், தோட்டங்கள், நதிகள், ஏரிகள், விரிந்து பரந்த நகரங்கள் எல்லாம் என் கண்முன் விரிந்தன. எங்கு எதிலும் இசை பொங்கிப் பெருகி வருவதைக் கேட்டேன். அழகான சைத்தான்கள் கடவுளுக்கு எதிராக என்னிடம் முணு முணுத்ததைக் கேட்டேன் ... உங்கள் நூல்கள் மூலம் அளவில்லாத ஆழத்தையும் பார்த்தேன்; விநோதங்கள் தெரிந்தன; எரிந்த நகரங்கள் .. புதிய மதங்கள் புதிய நிலங்களை வெல்வது .. இவைகளையும் கண்ணுற்றேன்."

"உங்கள் நூல்கள் எனக்கு அறிவை அளித்தன. அலைக்கழியும் மனித மனது ஆண்டாண்டு காலமாய் உருவாக்கி வைத்துள்ள அனைத்தும் என் மூளையில் பொதிந்து விட்டன. உங்கள் எல்லோரையும் விட இன்று நானே புத்திசாலி ..."

"உங்கள் நூல்களை நான் வெறுக்க ஆரம்பித்து விட்டேன். அதோடன்றி உங்கள் உலக அறிவு, ஆசாபாசங்கள் அனைத்தையும் வெறுக்கிறேன். எல்லாமே மாயை; அநித்தியம்; கண்ணில் விழுந்து மண்ணில் மறையும் விழல்கள்! நீங்கள் அறிவோடும் அழகோடும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் எல்லாம் ஒரு சுண்டெலி எளிதாகச் சாகடிக்கப்படுமே, அதேபோல் நீங்களும் அழிக்கப்படுவீர்கள். உங்களின் வலிமை, வரலாறு, உங்கள் அறிவின் அழிவின்மை ... எல்லாமே உறைந்து போய், உலர்ந்து போய், எரிந்து விடும்; உலகிலிருந்து மறைந்து விடும்."

"நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள். தவறான வழியில் செல்கிறீர்கள். பொய்யை மெய்யெனக் கருதி, அவலத்தை அழகென்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஆப்பிள் மரங்களும் ஆரஞ்சு மரங்களும் பழங்களுக்குப் பதில் வெறும் தவளைகளையும், ஓணான்களையும் காய்க்க ஆரம்பித்தால் ... ரோஜாப் பூக்களிடமிருந்து குதிரையின் அழுகிய வியர்வை நாற்றம் வந்தால் ... நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள். இதைப் போலவே நானும் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். இதைப் போலவே, மோட்சத்திற்காக இந்த உலக வாழ்வைப் பணயம் வைத்த நான் உங்களைப் புரிந்து கொள்ள விரும்பவில்லை.

எனது இந்த எண்ணத்தை என் செயலிலும் காண்பிக்க விரும்புகிறேன். கையில் கிடைத்தால் பரவசம் என்று நான் நினைத்த இருபது லட்சத்தை இப்போது நான் விஷமென்று வெறுக்கிறேன். எந்தப் பணமும் எனக்கு வேண்டியதில்லை. அதற்கான என் உரிமையை நான் ரத்து செய்கிறேன். அதுவும் என் விடுதலைக்கான நேரத்திற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக நான் இந்த இடத்தை விட்டு வெளியேறி என் ஒப்பந்தத்தை முறித்து விடுவேன்”

வழக்கறிஞரின் கடிதத்தை வாசித்ததும், வங்கியாளர் அந்தக் கடிதத்தை மேசை மேல் வைத்து விட்டு, வழக்கறிஞரின் தலையில் குனிந்து முத்தமிட்டு ... விசும்பத் தொடங்கினார். அவருக்கு ஏதும் புரியவில்லை. வணிகச் சந்தையில் தன் தவறுகளால் பல முறை பணத்தை இழந்தபோதும் கூட அவர் தன்னை இந்த அளவு வெறுத்ததில்லை.

வங்கியாளர் வீட்டிற்குத் திரும்பினார். தன் படுக்கையில் சாய்ந்தார். அவரின் அழுகையில் பல மணி நேரங்கள் கழிந்து கரைந்தன.

அடுத்த நாள் காலை .. பொழுது விடிந்தது. தோட்டக்காரன் ஓடோடி வந்தான். ‘வீட்டிற்குள் இருந்த கைதி ஜன்னல் வழியே ஏறிக் குதித்து தப்பித்து விட்டான்’ என்றான். வங்கியாளர் தன் வேலையாட்களுடன் தோட்ட வீட்டிற்கு விரைந்து சென்று, கைதி தப்பியதை உறுதி செய்து கொண்டார். தேவையில்லாத குழப்பம் வரும் என்பதற்காக “கைதி” எழுதிய கடிதத்தைப் பத்திரமாக எடுத்து வந்து, தன் சேமிப்பறைக்குள் வைத்து பாதுகாப்பாகப் பூட்டினார்.




*

Friday, March 02, 2012

555. ஆ.வி - யில் தருமி

முன்பு ஆ.வி.யில் ... வரவேற்பறையில் ...
இப்போது .. என் விகடனில் ...


*





*

நன்றி ஆ.வி.க்கு.


*
ஆ.வி. ஆசிரியருக்கு நான் எழுதிய கடிதம்:

ஐயா,

இவ்வார (7.3.12) விகடனோடு வரும் என் விகடனில் வரும் வலையோசையில் எனது வலைப்பூவிற்கு இடமளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.

ஒரு வேண்டுகோள்: இணைய வலைப்பூ மண்டலங்கள், மாவட்டங்கள் என்பதையெல்லாம் தாண்டி உலகம் முழுவதும் பயணமாகின்றன. ஆகவே, இந்த வலைப்பூக்களை அறிமுகம் செய்வது 'என் விகடனில்' இருப்பதை விடவும், ஆனந்த விகடனில் வருவதே சிறப்பென நினைக்கிறேன்.

வலையோசையின் இடத்தை மாற்றும் என் வேண்டுகோளை உங்கள் பார்வைக்கும், கவனிப்பிற்கும் கொண்டு வருகிறேன்...

மீண்டும் நன்றி.

*