Tuesday, December 30, 2014

813. டி, எம், கிருஷ்ணா - அதிசய மனிதர் !








*



எற்கெனவே கர்னாடக சங்கீதப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா பற்றி வாசித்திருக்கிறேன். வித்தியாசமான ஆச்சரியமான மனிதராகத் தோன்றினார். இப்போது ஆனந்த விகடன் 31.12.14 இதழில் கி. கார்த்திகேயன் என்பவரால் “அனைவரும் வரட்டும் .. அரங்கங்கள் அதிரட்டும்!” என்ற தலைப்பில் வந்த கட்டுரை அவரை மேலும் உயர்ந்து பார்க்க வைத்தது.

அக்கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:

 “கர்னாடக சங்கீதத்தை ஏ.சி. அரங்குகளில் மட்டும் தான் பாடணும்னு எதுவும் சட்டம் இருக்கா என்ன? இல்லை ... குறிப்பிட்ட சாதியினர் மட்டும் தான் பாடணும்னு கட்டுப்பாடு இருக்கா?”


 “டிசம்பர் சீசனில் சபாக்களில் கச்சேரி நடக்கும் போது, குப்பத்திலும் அது போலவே நடக்கும்.”

 “எலியட்ஸ் பீச் இருக்கிற ஊரூர் ஆல்காட் குப்பத்தைத் தேர்ந்தெடுத்து அந்த மக்களிடம் விஷயத்தைச் சொன்னோம். .. டிசம்பர் 29, 30 தேதிகள்ல ஊரூர் ஆல்காட் மார்கழி விழா களை கட்டும்.”

 “இங்கே கலைகளுக்குள்ளயே ஏற்றத் தாழ்வு இருக்கு. பரதம் உசத்தி; பறையாட்டம் தாழ்ந்தது. கர்னாடக சங்கீதப் பாடகர்கள் உசத்தி; தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களுக்கு மதிப்பே இல்லை. இப்படி கலைக்கும் கலைஞர்களுக்கும் இடையிடையே ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்.என்னைப் பொறுத்தவரை ‘கலை’ ஒண்ணுதான்.ஒவ்வொரு கலைஞனின் படைப்பும், ரசிகனின் ஆன்மாவைத் தொடணும்; ரசனையை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தணும். அது எங்கே .. எப்படி நடந்தாலும் எனக்கு ஓ.கே. இன்னைக்கு குப்பத்திலே பரதநாட்டியம் நடக்கிற மாதிரி, அடுத்த சில வருஷங்களில் மயிலாப்பூர் சபாக்களில் கட்டைகூத்து நடக்கணும்.”

 “எந்த இன மக்கள் வந்தாலும் கர்னாடக சங்கீதம் கத்துக்க இங்கே வாய்ப்பு இருக்கு. அந்தத் தன்னார்வத்தை எப்படி தூண்டுறது? அந்தத் தூண்டில் முயற்சிதான் இந்தக் குப்பத் திருவிழா. இப்படி எல்லாம் ஒரு கலைவடிவம் இருக்குன்னு தெரிஞ்சாதானே, எல்லா பசங்களும் அதைக் கத்துக்க ஆசைப்படுவாங்க. வரட்டும். எல்லாரும் வரட்டும். அரங்கங்கள் அதிரட்டும்.”


“பிராமணராப் பிறந்ததாலேயே கஷ்டப்படுறோம்னு யாராவது சொன்னா, அது அவங்க அறியாமைனுதான் சொல்லத் தோணுது. இந்த இட ஒதுக்கீடுதான் எனக்கு எல்லா வாய்ப்புகளையும் அடைச்சிருச்சு. ... அட, 2000 வருஷங்களா பல சாதி மக்களுக்கு மறுத்து அடக்கி வச்சிட்டு, இப்போ 40 வருஷங்களாத் தானே இட ஒதுக்கீடு கொடுக்கிறீங்க. அதுக்குள்ள அதைக் குத்தம் சொன்னா எப்படி? ... என்னைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடு அவசியம். ஆனா,, எப்பவோ வகுத்த கொள்கைகளோட இருக்கிற இட ஒதுக்கீட்டை இப்போதைய தேவைகளுக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்யணும்னு தோணுது.”

 “சில சாதி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பத்தி பிராமணர்கள் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்க முடியாது.”


இவரை வழிகாட்டியாக நினைத்து, இன்றிருக்கும் நிலையில் சாதிப் படிக்கட்டுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சற்றே மேலுள்ள சாதியினரும் இது போன்ற புரிதலோடு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

 உயர்ந்த நோக்கோடு குப்பத்திற்கு இசை, நடனத்தை அழைத்துச் செல்கிறார். எல்லாம் வெற்றிகரமாக நடக்க என் வாழ்த்து.

விழா ஒரு முறை நடப்பதோடு நின்று விடாமல் தொடர்ந்து நடப்பது, நடத்தி வைப்பது அந்தக் குப்பத்து மக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே முடியும். அவர்கள் இந்த நல்ல விதைக்கு நீரூற்றி, வேலியிட்டுக் காத்து நடக்க வழிகாட்டலும் உந்துதலும் மிகவும் தேவை.



 *



Monday, December 29, 2014

812. இளைய ராஜா பற்றி ஒரு புகழ் பெற்ற பாடகர் கூறியது .........






*



இளைய ராஜாவின் இசை மீது எனக்குப் பெரும் மரியாதை. அவரை நான் எங்கோ வைத்திருக்கிறேன். இருப்பினும் இன்று அவரது பாடல்கள் பழைய பாடல்கள் போலில்லையே என்ற ஆதங்கமும் உண்டு. இருப்பினும் அவருக்குப் பின் அவரது அரியணையில் இன்னும் யாரையும் இதுவரை ஏற்றவில்லை.

ஆனால் சில மேதாவிகள் //இளையராஜாவை தூக்கிப் பிடிக்கும் எவரின் இசை ரசனையையும் நான் பெரிதாக மதிப்பதில்லை.// என்று சொன்னதும் என்னடா ... நமக்குத்தான் இசையறிவு இல்லையே ... நாம்தான் அறிவில்லாமல் இப்படி தப்பாக எண்ணிக்கொண்டிருக்கிறோமோ என்று கூட நினைத்தேன்.

அந்த சோகத்தில் இருக்கும் போது 'இளையராஜாவின் வதவதவென்ற எண்ணிலடங்கா பாடல்களில் ஒரு கைப்பிடி அளவே சிறந்த கிளாசிக் வகைப் பாடல்கள்’ என்றும் அவர் கூறியதும் ... சரி .. நாம் தான் தற்குறியாக ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் நினைத்து வருந்திக் கொண்டேன்.



தற்செயலாக நான் நல்லெண்ணம் கொண்டிருந்த ஒரு கர்நாடகப் பாடகர் - தொழில் முறையிலேயே பெரிய பாடகர்; வெறும் எழுத்துகளில் மட்டும் தன் பாண்டியத்தைக் காண்பிக்காமல் குரல் வளத்தாலேயே பெரும் பாடகர் என்று ஒப்புக் கொள்ளப்பட்டவர் - இ.ரா. வைப் பற்றிக் கூறியதைப் படித்ததும் என் ‘ஜென்மம் சாபல்யமானது’!!

 டி. என். கிருஷ்ணா இளையராஜா பற்றி ஆ.வி.யில் கூறியது:

 “தமிழ் சினிமா இசையை ரசிப்பீர்களா?”


 ”இளையராஜா காலம் வரைக்கும் ரசிச்சேன். இப்போதைய இசையமைப்பாளர்கள் பத்தி சொல்ல ஏதும் இல்லை. கொஞ்சம் கவலையாகக் கூட இருக்கு.

’டெக்னாலஜி .. டெக்னாலஜி’னு சொல்றாங்க. கலைஞனின் சிந்தனைக்கு உருவம் கொடுக்கத்தான் டெக்னாலஜி பயன்படணும். ஆனா, இப்போ அந்தச் சிந்தனையையே டெக்னாலஜி தான் பண்ணுது. கலைஞர்கள் வெறும் ‘ஏற்பாட்டாளர்’களாக மாறிட்டாங்க. சின்ன பிட், குட்டி நோட் கூட பிசகாம பக்காவா பாட்டு பாடுறாங்க. ஆனா, அதுல உயிர் இல்லையே! மெஷின்ல பட்டன் தட்டி உருவாக்கும் பாட்டு அப்படித்தான் இருக்கும். சின்னச் சின்னக் குறைகளோடு கூட பாட்டு பண்ணுங்க. ஆனா அதுல உங்க கிரியேட்டிவிட்டினு ஏதோ ஒரு டச் இருக்கணும். அது இல்லாம வர்ற இசை ... நிக்காது.”

 அப்பாடா ....!


 *

Sunday, December 28, 2014

811. அசோகன் - ஓர் அறிமுகம்







*




கவனிக்க வேண்டிய புத்தகங்கள் 


தி இந்து - டிசம்பர் 24, 2014


மறக்கப்பட்ட பேரரசரின் சரித்திரம் 



கி.மு. 304-ல் பிறந்த அசோகச் சக்கரவர்த்தி கி.மு.270 முதல் கி.மு.233 வரை, இந்தியாவின் தென்பகுதி நீங்கலாக மொத்த நாட்டையும் ஆண்டவர். ‘சாலை ஓரங்களில் மரத்தை நட்டார்’ என்ற அளவில் அவரைப் பற்றிய அறிமுகம் நம் அனைவருக்கும் பரிச்சயம். அசோகரின் வாழ்க்கை, இந்தியாவின் பேரரசராக அவரது வரலாறு, புத்த மதத்தைத் தழுவியதற்கான காரணம், பயணத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், வெளிநாடுகளிலும் புத்த மதத்தைப் பரப்ப அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்று பல்வேறு தகவல்களுடன் விரிவான புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

‘பேரரசன் அசோகன் - மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு’ ஆங்கிலோ-இந்திய எழுத்தாளரான சார்ல்ஸ் ஆலன் எழுதிய இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் தருமி.   இந்த வரலாறு நேர்க்கோட்டில் அல்லாமல், பல்வேறு காலகட்டத்தில் நடந்த விஷயங்களின் தொகுப்பாக இருப்பது வாசகர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும். 



பேரரசன் அசோகன், சார்ல்ஸ் ஆலன், எதிர் வெளியீடு, 

தமிழில்: தருமி

பக்கங்கள்: 496 விலை: 400


 மேற்கண்ட நூலை வெளியிட்டவர்கள்: எதிர் வெளியீடு, 96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642002

தொலைபேசி: 04259-226012; 99850 05084



*

Sunday, December 21, 2014

810. INDIAN SUPER LEAGUE





*  

ISL போட்டிகள் முடிவடைந்தன.

அரையிறுதி ஆட்டங்களில் பாவம் ... நம்ம சென்னையின் அணி. லீக் ஆட்டத்தில் இரு முறை கேரளா அணியை வென்றிருந்தார்கள். மறுபடி அரையிறுதியில் இரு ஆட்டங்கள். நன்றாக ஆடியும் முதல் ஆட்டத்தில் மூன்று கோல்கள் வாங்கினார்கள். இரண்டாம் சுற்றில் மூன்றுக்கு மூன்று என்று கொண்டு வந்தார்கள், ஆனால் கடைசியில் கேரளா அணி 3:1 என்று கடைசி கோலடித்து இறுதிப் போட்டிக்குத் தேர்வானது. விரும்பிய சென்னை அணி தோற்றது.

அடுத்த அரையிறுதியில் கொல்கத்தா அணியும் கோவா அணியும் மோதின. இரண்டு சுற்றிலும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இரண்டாவது சுற்றில் கோவா அணியின் கையே --- இல்லை..இல்லை... காலே மேலோங்கியிருந்தது. ஆனாலும் ஒரு கோல் மூலம் கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு வந்தது.

இறுதிப் போட்டி கொல்கத்தா அணிக்கும் கேரளா அணிக்கும்.  முதலிலிருந்தே கேரளா அணியின் பக்கமே பந்து இருந்தது. அவ்வப்போது இரு கோல்கள் பக்கம் பந்து அயாயகரமாகச் சென்று ஆர்வத்தைத் தூண்டியது. வழக்கமாக பந்து ஒரு அணியிடமே அதிகமாக இருக்கும் போது சடாரென எதிர்த்த அணி பக்கம் கோல் விழுவதுண்டு. அதே போல் இந்த முறையும் நடக்கும் என்று என்  கோழி சொல்லியது.  புள்ளி விவரம்கேரளா: கொல்கத்தா  70:30 என்ற கணக்கு காட்டியது. இருந்தும் பந்து கோவா அணிக்கும் அவ்வப்போது பயம் காட்டியது. கோல்கள் விழாமல் கடைசி வரை போராட்டம் நீடித்தது. நீட்டிப்பு காலம் மட்டும் மிஞ்சியிருந்தது. அதில் முதல் நிமிடத்தில் ரபீக் தலையால் மோதி கோவாவிற்கு கோல் போட்டார்; வெற்றி கல்கத்தாவிற்கு. இப்போட்டியிலும் விரும்பிய கேரளா அணி தோற்றது.

அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் விரும்பிய அணிகள் தோற்றன.ஆனாலும் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்த பின், கால்பந்தில் ஆர்வம் மிக்க மாநிலங்களே வெற்றி பெற்றுள்ளன. இரு பெரிய அணிகள் வைத்து முழு ஆர்வம் காட்டும் கொல்கத்தா அணிக்கு முதலிடம். அதன் பின் கேரளா. அடுத்து கோவா. ஒரு சந்தோஷம் நாலாவது இடம் நமது மாநிலத்திற்கு! கணக்கு சரிதான்!

இதில் ஆச்சரியப்பட வேண்டிய பல விஷயங்கள் நடந்துள்ளன.

*  விஜய் டிவி நேரடி ஒலிபரப்பை எடுத்துக் கொண்டது. ஆச்சரியாக இருந்தது.. இருந்திருந்து கால்பந்திற்கு நேரடி ஒலிபரப்பா ...? அதுவும் தமிழ் நாட்டில்...! அடடே... என்ன ஆச்சரியம். இதற்காகவே விஜய் டிவிக்கு நன்றி.

*  என்னங்க இது ... அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது. மக்களிடம் கால்பந்திற்கு இவ்வளவு ஆர்வமா! ஆச்சரியம் ... மகிழ்ச்சி. It is not the end; it is not even the beginning of the end; but just end of the beginning ....என்ற சர்ச்சிலின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.கால்பந்து விளையாட்டுக்கும் காலம் வரும் போலும்.

*  கால்பந்து விளையாட்டை இவ்வளவு ஆர்வத்துடன் மேலெடுத்து வந்த ரிலையன்ஸ், ஹீரோ போன்ற ஆர்வலர்களுக்கு நிச்சயம் எதிர்காலத்தின் நன்றி இருக்கும் என்று நம்புகிறேன்.

*  ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு எப்படி இவ்வளவு கால்பந்து பரவுவதில் ஆர்வம். ஆயினும் அவர்கள் நம் நன்றிக்குரியவர்களே.

*  இந்தி நடிகர்கள் பலரும் ஆர்வம் கொண்டிருந்தனர். நம்மூர் ஆட்கள் யாரும் இதில் கலந்து கொண்டார்களா என்று தெரியவில்லை; கலந்து கொண்டு சிறப்பித்த நடிகர்களுக்கும் நன்றி.

*  கால்பந்து வீர்ர்களுக்கான பரிசுகள் ஆயிரங்களில்  இருந்தன. ஒரு வேளை கிரிக்கெட் போட்டி வீரர்களை இந்த இடத்தில் வைத்துப் பார்த்தேன். அவர்களுக்கு லட்சங்களில் பரிசு வரலாம். பாவம் .. கால்பந்து வீரர்களுக்கு ஆயிரத்தில் மட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

*  போட்டியில் தரம் சிறப்பாக இருந்தது என்றே நினைக்கின்றேன். ஆனாலும் ஒரே வருத்தம். நம்மூர் ஆட்கள் மிகவும் கம்மியான எண்ணிக்கையில் இருந்தார்கள். இந்த போட்டி இனி ஒவ்வொரு வருடமும் நடக்கலாம்; நடக்க வேண்டும். அப்போதெல்லாம், நம்மூர் ஆட்களுக்குக் கட்டாயம் இந்த அணிகளில் கட்டாயம் இடம் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 50:50 என்றாவது இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அணியில் கணக்கிற்காக மட்டுமல்லாமல் விளையாட்டிலும் அவர்கள் ஈடுபட வேண்டும்.

இப்போட்டிகளில் பங்கெடுப்பதற்காக ISLக்கு முன்பாகவே பல போட்டிகள் நடந்து அவைகளில் நம்மூர் வீரர்கள் பங்கெடுத்து, அதன் மூலம் இப்போட்டிகளில் இடம் பிடிக்க வேண்டும். .......... எல்லாம் ஆசை தான். எவ்வளவு தூரம் நடக்குமோ.... காத்திருந்து பார்க்க வேண்டும்.



... *

Friday, December 19, 2014

809. மெட்ராஸ் ... த்ரிஷ்யம் ...





*



மெட்ராஸ் .... 

படம் பிடித்தது. வழக்கம் போல் காதல் நடுப்புள்ளியாக இல்லாததே படம் பிடிப்பதற்கான முதல் காரணம். இயல்பு வாழ்க்கை, நிஜத்தை ஒட்டிய மனிதர்கள், அவர்களது அச்சு அசலான பின்புலம், நம்மூர் அரசியல், அரசியலின் நுண்ணரசியல் .... எல்லாம் இயற்கையாக நன்றாக இருந்தன.

கதாநாயகன், கதாநாயகி நன்றாக நடித்திருந்தார்கள். அவர்களை விடவும் இரண்டாம் கதாநாயகனும், கதாநாயகியும் மேலும் அழகாகத் தெரிந்தார்கள்; மிக நன்றாக நடித்திருந்தார்கள். படம் மிகவும் பிடித்திருந்தது ....

ஆனால் அந்தக் கடைசி சீனில் இருந்த எழுத்துப் பிழை படத்தின் சுவையை அப்படியே நம் மனதிலிருந்து பறித்து எறிந்தது போலிருந்தது. கதாநாயகன் உண்மையில் அந்தச் சுவர் தான். இறுதியில் அதிலிருந்த அரசியல்வாதியின் படம் அழிக்கப்பட்டு, கல்வி பற்றிய அறிவிப்பு ஒன்றோடு படம் முடிகிறது. நல்ல இனிப்பான ஒன்றைச் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் கசப்பான,உறைப்பான ஒன்றைக் கடித்து வைத்தது போல் இருந்தது. ரசித்த அனைத்தும் அந்த கசப்போடு / உறைப்போடு முடிந்தது போலாயிற்று. அதுவும் கல்வி பற்றி எழுதும் போது கூட இப்படி ஒரு பிழையோடு எழுதலாமா என்று சீத்தலைச் சாத்தனாரின் கோபம் தான் வந்தது!

கல்வி கற்பது
உலகை அறிவதற்க்காக அல்ல ;
உலகை மாற்றுவதற்க்கு.

படத்தோடு தொடர்புடையவர்கள் யார் கண்களிலும் இந்த எழுத்துப் பிழை கண்ணிலேயே படவில்லையா....? அட போங்கப்பா...!


 ************* *


த்ரிஷ்யம் ....

இந்திய சினிமாவின் ஒரு பெரிய வியாதி படம் கட்டாயம் இரண்டு,  இரண்டரை
மணியளவு ஓடியே ஆக வேண்டும் என்பதே. த்ரிஷ்யம் இடைவேளைக்குப் பிறகுதான் படம் ஆரம்பிக்கிறது. முதல் பாதியில் நடப்பவைகளை மிகச் சில காட்சிகளில் காட்டியிருந்திருக்க முடியும். ஆனால் படம் ஒன்றரை மணி நேரம் மட்டும் ஓடும்.  ஆனால் படம் ஒரு முழுமையான, இறுக்கமான படமாக இருந்திருக்கும். நாம் செஞ்ச பாவம் ... இரண்டு மணி நேரம் படம் நாம் பார்த்தாக வேண்டுமே....! மலையாளக்காரங்களாவது ஒன்றரை மணி நேர படம் எடுக்க ஆரம்பிக்க மாட்டீங்களா?

செய்த தவறை மறைக்க கதாநாயகன் எடுக்கும் முதல் சில முயற்சிகளில் இன்னும் கொஞ்சம் தெளிவாகச் செய்திருக்கலாமென்று தோன்றியது. காரை மறைக்க ஏதோ தெரியாத ஒரு பள்ளத்தில், பட்டப் பகலில் முயற்சி செய்ய வேண்டுமா? தண்ணீரின் ஆழம் போதுமா என்றெல்லாம் தெரியாமல் பலரும் நடமாடும் இடத்தில் காரை மூழ்கடிக்கிறார்.

ஆனால் அதன் பின் சில நிகழ்வுகள். அதை மற்றவர் மனதில் நிறுத்த கதாநாயகனின் தந்திரங்கள், ... காவல் துறையின் முயற்சிகள் ... விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.

படப்பிடிப்பு நன்றாக இருந்தது. இரவில் தன் வீட்டுத் திண்ணையிலிருந்து மோகன்லால் அமர்ந்திருக்கும் காட்சியில் காட்டிய இரவு நேர இரவுக் காட்சி அவ்வளவு அழகு. இன்னும் அந்தக் காட்சி மனதில் உறைந்து நின்று விட்டது.எப்போதுமே கேரளத்தின் மீது எனக்கு ஒரு ‘கண்’ உண்டு. மோகன்லாலின் வீட்டைக் காண்பிப்பார்கள். ஆங்கிலத்தில் சொல்வார்களே .. அதே போல் ‘அந்த ஒரு வீடு கிடைக்க என் வலது கையையும் தர மறுக்க மாட்டேன்’!  கனவு வீடு.


இறுதிக் காட்சி ஒரு கவிதையை வாசித்தது போல் எனக்கிருந்தது.  மகனை இழந்த பெற்றோர் ... அந்த மகனைக் கொன்றவர் ...  மூவரின் சங்கமம். உண்மை மூவருக்கும் தெரியும். ஆனால் வெளிப்படையாகப் பேசாமல் அவர்களிடையே நடக்கும் உரையாடல்கள் ... வசனம் மிக நன்றாக எழுதப்பட்டிருந்தது. (கணினியில் பார்க்கும் போது ஒரு வசதி. நமக்குப் பிடித்த இடத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வசதியாக இருக்கிறது!) அந்தக் கடைசி சீனை மூன்று தடவை வசனத்திற்காகத் திருப்பித் திருப்பிப் பார்த்தேன்.

மோகன்லால் அளவு தமிழில் நமது கமல் நடிக்க மாட்டார் என்று நண்பர் சொன்னார். தெரியவில்லை; பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



**********************


Thursday, December 18, 2014

808. ”805 உளுத்துப் போன கட்டுரைகள்”






*
எனது உளுத்துப் போன கட்டுரைகள் பற்றி ....


*

ஒன்பதரை ஆண்டுகள் ... 800 பதிவுகள் ... வேலையிலிருந்து ஓய்வு பெற்றவனுக்கு மறு வாழ்வு போல் இணையம் உதவியது. சிறிது குறைந்திருந்த வாசிப்பு ஒரு கட்டாயமானது. வாசித்ததை ’நாலு பேருக்குச் சொல்லும் வழியும் கிடைத்தது.  எழுத ஆரம்பித்த பின் எழுதியாக வேண்டிய கட்டாயங்களும் உருவாகி, தொடர்ந்து எழுதி ... திருப்திகரமாகவே சென்று கொண்டிருந்தேன்.

எழுதியவைகளில் சிலவற்றிற்குக் கிடைத்த ஆதரவுகளும், எழுதியவைகளின் பேரில் வந்த விமர்சனங்களும், விவாதங்களும் செல்லும் வழி நன்றாகவே இருக்கிறது என்று எண்ண வைத்தது.

2005ல் என் பதிவில் -  - ’மனிதன்’ என்ற புனைப்பெயரில் வந்த ஒருவன் பின்னூட்டப் பகுதியில் மடத்தனமாக சில சொல்லிச் சென்றான். அது ஒன்று மட்டுமே இத்தனை ஆண்டுகளில் ஒரு பதிவனாக நான் அனுபவித்த ஒரே ஒரு கஷ்டமான விஷயம்; மனதைப் புண்படுத்திய ஒரே விஷயம்.

ஆனால் ஒன்பதைரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சில பின்னூட்டங்கள் மனதை மிகவும் பாதித்தன. --- இப்படி எனது 804வது பதிவில் எழுத வேண்டியதாகி விட்டது.

என் பதிவுகளை விட அந்தப் பதிவுகளை ஒட்டியெழுந்த பின்னூட்டங்கள் பொருள் பொதிந்தவை என்ற பெருமை எனக்கு எப்போதும் உண்டு. ஆகவே பின்னூட்டங்களுக்கு ’மரியாதை’  கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்!

அப்பதிவில் நான் எப்படி எம்.எஸ்.வீ. பாடல்களைக் கேட்டேன். பின்பு இளையராஜா மிகவும் பிடித்தவரானார். அதன் பின் அந்த சிம்மாசனத்தில் யாரையும் வைக்கவில்லை என்று எழுதியிருந்தேன். சிவாஜிக்குத் தந்த சிம்மாசனமும், கண்ணதாசனுக்குத் தந்த சிம்மாசனமும் இன்னும் காலியாக இருப்பது போல் இதுவும். சார்லஸ் பதிவில் பதிவர்களிடையே மிகக் கடுமையான வாக்குவாதம் இருந்ததால் விவாதங்களை மென்மையாக்கவே நான் என் பதிவை இட்டேன். அதுவும் நல்ல முறையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனை //சொம்ப உள்ள வைங்கப்பா என்றெல்லாம் நகைச்சுவையாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு உங்களின் தரத்தை தயவு செய்து குறைத்துக்கொள்ளவேண்டாம் பேராசிரியரே.// என்று ஒரு பின்னூட்டம் காரிகனிடமிருந்து வந்தது. பரவாயில்லை... நான் கஷ்டப்பட்டு நகைச்சுவையாக எழுதுவதை அவரும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்து விட்டார் போலும்!

இங்கிலிபீசு என்று நான் எழுதியது அவருக்கு சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றுகிறது. கோபித்துக் கொண்டார்.

 //பதில் சொல்லியாகிவிட்டது. மீண்டும் ஒரே வாந்தி எடுக்கவேண்டாம்.....//  

-  இந்த வார்த்தைகள் நாகரீகம் இல்லாத எழுத்துக்கள் என்றேன்.  அதற்குப் பதிலாக --
//என் நாகரீகம் பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. மதம் பிடித்த பதிவுகளை எழுதும் உங்களுக்கு நாகரீகம் பற்றி பேச தகுதி இருக்கிறதா என்று introspect செய்துகொள்ளுங்கள். //

இந்த விவாதம் மிகவும் வேடிக்கையான விவாதமாகத் தோன்றியது. மதங்களைப் பற்றி எழுதுவது நாகரீகமற்ற ஒரு செயல் என்பதும், அதை எந்த தொடர்புமில்லாமல் இப்பதிவில் கூறியிருப்பதும் அவரை நான் ஒரு ‘ஆன்மீகவாதியாக’ நினைக்க வைத்தது. ஆனால் அவரோ தன்னை ஒரு மத மறுப்பாளராகக் கூறியுள்ளார். ஆனால் மதங்களை மறுக்கும் என் நாகரீகம் பற்றி ஏனிப்படிப் பேசுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. அவருக்குப் புரிந்திருந்தால் சரி.......

 என் பதிவுகளை வாசித்து ஒரு ’நல்ல’ சான்றிதழ் வேறு கொடுத்து விட்டார்.......... நான் என் பதிவுகளுக்கு முதலிலிருந்தே எண்ணிட்டிருந்தேன். அதற்கும் சேர்த்து இப்படி ’வாசித்திருக்கிறார்’.

 //ஏதாவது மதத் தொடர்பான உளுத்துப் போன கட்டுரை ஒன்றை காப்பி பேஸ்ட் செய்து தருமி 805 என்று வெளியிடுங்கள். இப்போதுதான் தெரிகிறது எப்படி இந்த 800 சாத்தியமாயிற்று என்று.//

ஏனய்யா என்றா நான் கேட்க முடியும். மெத்த தெரிந்த அவருக்கு என் பதிவுகள் உளுத்துப் போனவைகளாக இருந்தால் அதற்கு நானென்ன செய்ய முடியும் - அவரிடம் சென்று இதற்காகத் தனிப்பயிற்சியா மேற்கொள்ள முடியும்? அவரைப் போல் அழகாக எழுத என்னால் எப்படி முடியும் என்ற ஆதங்கம் எனக்கு!

// உங்களின் பதிவுகள் படித்திருக்கிறேன். ஆனால் அவற்றிலிருந்து எந்த கருத்தும் என்னை சிந்திக்க வைத்ததில்லை. ஒரு மாதிரியான மேலோட்டமான எழுத்து உங்களது. ..... இதில் நீங்கள் 800எழுதினால் என்ன 1000 எழுதினால் என்ன?//  நல்ல கேள்வி.

அவர் சொல்வதும் நியாயம் தான்.... உளுத்துப் போன கட்டுரைகள் எத்தனை எழுதினால் தான் என்ன...? யாருக்கு என்ன லாபம்?

உங்கள் நல்ல பின்னூட்டங்களுக்கு  மிக்க நன்றி காரிகன்............

 *

Wednesday, December 17, 2014

807. JIHADI COLLECTION (13)






*
17.12.2014

*





PAKISTAN TALIBAN : PESHAWAR SCHOOL ATTACK  LEAVES 141 DEAD


132 CHILDREN MASSACRED IN ATTACK IN SCHOOL  


மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் தீவிரவாதிகள்  சுடுவதற்கு முன் எங்களை ஓதும்படி ஆணையிட்டார்கள்.
  என்னே ஒரு பக்தி …!!


செத்தவர்கள் இளம் பாலகர்கள். குற்றமில்லாத  குழந்தைகள். நிச்சயமாக மார்க்க நம்பிக்கைகளின் படி அவர்கள் எல்லோரும் கட்டாயம் சுவனம் செல்வார்கள்.

ஆனால் அவர்களைக் கொன்றொழித்தசுவனப்பிரியர்களானதற்கொலைப்படையாளர்கள் எங்கே போவார்கள்? அடிப்படைவாதிகள் தீவிரவாதிகளாக மாறுவதற்கே சுவனத்தின் ஈர்ப்பு தான் காரணம் என்கிறார்கள். அப்படியானால், அவர்களும் சுவனம் தான் செல்வார்களோ..?



As the Taliban black boots approached


அடிபட்டு மருத்துவமனையின் தீவிரப் பிரிவில் இருந்த ஷாருக் கான், “எங்களை பெஞ்சுகளுக்கு அடியில் படுத்து ஒளிந்து கொள்ளச் சொல்லி யாரோ கத்தினார்கள். ஆனால் எங்கள் முன் தீவிரவாதிகள் தோன்றி ‘அல்லாகு அக்பர்’ என்று கத்தியபடி சுட ஆரம்பித்து விட்டனர்.

  என்னே ஒரு பக்தி …!!

 (பல முறை கேட்ட கேள்வி தான் …. ஏன் இம்மார்க்கத்தில் கொலை செய்யும் போது இந்த கோஷம்  எழுப்பப் படுகிறது/?)


*

17.12.2014

*







*









 

Saturday, December 06, 2014

806. பெங்களூரு உலா - 3 -- லால் பாக்




மங்கி வரும் ஒரு மாலையில் .....

***




***

பூங்காவிலுள்ள நர்சரித் தோட்டத்தில் ....



***

பொறுக்கி எடுத்த சில மலர்கள் ....




***






***


 


***





***

  



***


 



***






Friday, December 05, 2014

805. பெங்களூரு உலா - 2 -- லால் பாக்



30 ஆண்டுகளுக்கு முன் லால் பாக்  மாணவர்களோடு சுற்றிப் பார்த்தது. அன்று மறைந்த பாலுமகேந்திரா  ஒரு திரைப்பட படப்பிடிப்பில் இருந்தார், அவரோடு படம் எல்லோரும் எடுத்துக் கொண்டோம்.  

அதன் பிறகு இப்போது தான் இந்த பூங்காவிற்குள் நுழைந்துள்ளேன். இதில் நுழைந்ததும் இலங்கையில் சமீபத்தில் பார்த்த கண்டி பூங்கா நினைவுக்கு வந்தது. எவ்வளவு வித்தியாசம். அந்தப் பூங்கா வெகு அழகாக வைக்கப்பட்டிருந்தது. சாலைகள் எல்லாம் அவ்வளவு சுத்தம். குப்பையில்லை ... எங்கும் பச்சை ... சில அழகான மனித உருவாக்கங்கள்... ஆர்க்கிட் மலர்களுக்கென்று ஒரு அழகிய தனியிடம்.... அந்தப் பூங்கா போல் இதையும் மாற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணமே இருந்தது.



இலங்கை கண்டிப் பூங்காவின் சுத்தம் .. அழகு ... 



கண்டிப் பூங்காவினொரு அழகிய அமைப்பு
***






***


ஏரி



***







                                        ***                                       


முன்னூறு ஆண்டு வயதான இலவம் பஞ்சு மரமாம்
***

இலங்கையில் ஆர்க்கிட் பூக்களுக்குத் தனியிடம். இங்கு போன்சாய் மரங்களுக்கென்று ஒரு தனியிடம். சில செடிகளோடு சண்டை போட்டு போன்சாய் வளர்க்க பட்ட பாடும், தோல்வியும் நினைவுக்கு வந்தது.


***




***
ஒவ்வொரு போன்சாய் மரத்தையும் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டுமென்பார்கள். இங்கே பெருந்தோட்டத்தில் அவை இருந்தன. அதைக் கவனிக்கும் காவலரிடம் இவை பற்றிய எந்த தகவலும் இல்லை.

வாழ்க்கை போல் பின்னிப் படர்ந்திருக்கிறது!!



***





***




***

கண்ணாடி மாளிகைக்கு அருகில் ...