Showing posts with label அமெரிக்காவில் .... Show all posts
Showing posts with label அமெரிக்காவில் .... Show all posts

Wednesday, March 21, 2012

559. அமெரிக்காவில் என் முதல் நாள் … ("அதீதம்" இணைய இதழில் ..)

*
அமெரிக்காவில் என் முதல் நாள் …

தருமி

*
மார்ச் II
"அதீதம்" இணைய இதழில் வெளிவந்த கட்டுரை.
Date: Tuesday, March 13th, 2012


*


ஆசையிருக்கு தாசில் பண்ண; ஆனா அதுக்குப் பிறகு எதுக்கோதான் அதிர்ஷ்டம் இருக்குன்னு இருக்குமே அதே மாதிரி ஆச்சு நம்ம பிழைப்பு. பல ஆண்டுகளாக முயன்றும் அமெரிக்கா போகும் வாய்ப்பு வாய்க்காமல் கை நழுவிப் போய்க்கொண்டே இருந்தது. கடைசியில் அந்த வாய்ப்பும் வந்தது. வந்ததுதான் வந்ததே கொஞ்சம் நல்ல நேரத்தில், காலாகாலத்தில் வந்திருக்ககூடாதா? ஒரு அக்டோபர் மாதம் நெஞ்சு வலி வந்து .. இதய அறுவை சிகிச்சைக்குத் தயாராகும் நிலையில் .. ..சரி ..சரி.. அந்தக் கதையைப் பிறகு பார்த்துக்கலாம். எப்படியோ புறப்பட்டு போயாச்சி. பத்திரமா அங்க போயும் இறங்கியாச்சி. சேரவேண்டிய இடத்துக்கும் சேர்ந்தாச்சு.

உடன் உறைவாளர்களாக இரு சீனர்கள்; ஒரு ஆண்; ஒரு பெண். இருவரோடும் பேசுவதற்குள் மூக்கால் மட்டுமல்ல வேறு எது எதோவின் வழியாகவும் தண்ணீர் குடிக்க வேண்டியதாகப் போச்சு. அவர்கள் ஆங்கிலத்திறமை அந்த அளவு இருந்தது. அவர்கள் எனக்கு ஒரு வாரத்துக்கு முன்பே வந்திருந்தார்களாதலால் கடை கண்ணி விவகாரங்கள் எல்லாம் தெரிந்திருந்தது. மாலையில் போய்ச்சேர்ந்த நான் அடுத்த நாள் ரொட்டி, பழம் அது இதுன்னு காலையுணவை முடித்ததும், ‘ஆகிவந்த’ விஷயம் இல்லாமல் கஷ்டமாகப் போச்சு. என்ன .. காபி குடிக்காம பல விஷயம் தடை பட்டது. காபி குடிச்சே ஆகணும் அப்டின்னு நினச்சி மக்கள் கிட்ட கேட்டேன். கடை எங்க இருக்குன்னு சொன்னாங்க. சரி, போய் நம்ம முதல் போணியை ஆரம்பிச்சுருவோம்னு அவர்கள் சொன்ன கடைக்குப் போனேன்.

கடையின் கவுண்டரில் ஒரு வயசான அம்மா உட்காந்திருந்தது. ரொம்ப நாள் பழகியவன் போல் கடைக்குள் நேரே நுழைந்து பால் எங்கே இருக்கும்னு பார்க்கலாம்னு தேடினேன். அது ஏன் நமக்கெல்லாருக்கும் – அல்லது எனக்கு மட்டும்தான் அப்படியா? – நாம ஒரு இடத்துக்குப் புதுசுன்னு காண்பிச்சுக்கிறதில் தயக்கம்? மூணு சுத்து சுத்தியும் காணவில்லை. சரி ..இனியும் நடிக்க வேண்டாம்னு நேரே அந்த அம்மா கிட்ட போனேன். ஒரு இளவயதுக்காரர் பில்லுக்குப் பணம் செலுத்திக்கொண்டிருந்தார். கொஞ்சம் விலகி நின்றேன். ஆனால் அந்த அம்மா என்ன வேணும்னாங்க. பால் வேணும்னு சொன்னேன். நான் சொன்னது அவங்களுக்குப் புரியலை. மீண்டும் கேட்டாங்க. நான் நம்மால முடிஞ்ச அளவு ‘milk’ அப்டின்றதை ஸ்டைலா சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம் .. இப்பவும் நான் சொன்னது அவங்களுக்குப் புரியலை. மீண்டும் அடுத்த தடவை நான் முயற்சிப்பதற்குள் அருகே நின்ற இளைஞர் அவருக்குப் பால் வேண்டுமாம் என்றார். எனக்கென்னவோ நான் milk என்று எப்படி சொன்னேனோ அதே போல்தான் அவரும் சொன்னதாகத் தோன்றியது. ஆனால் இப்போ அந்த பெரியம்மாவிற்கு டக்குன்னு புரிஞ்சி போச்சு. அதோன்னு பால் இருக்கிற இடத்தைக் காண்பிச்சாங்க.

பாலை வாங்கிட்டு வந்து காபி எல்லாம் போட்டு குடிச்ச கதை இருக்கட்டும். ஆனா மனசு ரொம்பவே துவண்டு போச்சு. ஏதோ வேலை பார்க்கிற இடத்திலெல்லாம் ஏதோ கொஞ்சம் இங்கிலிபீசு நல்லாத்தான் பேசுற நினைப்புல இருந்த ஆளு நானு. இங்க என்னடான்னு ஒரு சின்ன சாதாரணமான வார்த்தை – பால். இதை முறையாக அவர்களுக்குப் புரிவது போல் சொல்லத் தெரியவில்லையேன்னு என்னை நானே நொந்து கொண்டேன்.

அமெரிக்காவில் நான் முதல் முதலாக வெளியே வந்து இப்படி தோல்வியைத் தழுவியது முதலில் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது. ஆனாலும் மனசைத் தேத்திக் கொண்டேன் – என்னதான் இருந்தாலும் இது என்ன, நம்ம தாய்மொழியா என்று. முதல் நிகழ்வு இப்படி ‘சோகமாக’ ஆனதென்றால், அன்றே நடந்த அடுத்த நிகழ்வு மிக்க ஆச்சரியத்தை அளித்தது.

காலை இப்படிப் போனதென்றால் மாலையில் சீன நண்பர்களிடம் தபால் நிலையம் எங்கு என்று கேட்கப் போய் தபால் என்றால் என்னவென்றெல்லாம் வகுப்பு எடுக்கும் நிலைக்கும், நடன அசைவுகளில் மட்டுமே அவர்களுக்கு விஷயங்களை விளக்கியாக வேண்டியதாயிருந்ததாலும் எனக்கும் நடனத்துக்கும் எந்தவித உறவு முறையுமில்லாமல் இருந்ததாலும் மற்றவர்கள் மூலமாகத் தெரிந்து கொண்டு தேடிப்போனேன்.

நான் இருந்தது ஒரு சின்ன கிராமம்தான். ஒரு பெரிய கல்லூரியும் அதைச் சேர்ந்த கட்டிடங்களுமே அதிகமாக இருந்த கிராமம். எனவே தபால் நிலையம் எங்காவது ஒரு ஓரத்தில் சின்னதாக இருக்குமென்ற நினைப்பில் அங்கங்கே கேட்டு போனேன். அதை அடைந்த போதோ பெரிய ஆச்சரியம். ஏனெனில் மிக அழகான கல்கட்டிடம் ஒன்றுதான் தபால் நிலையம் என்று தெரிந்தபோது ஆச்சரியமாகவும், மிக பிரமிப்பாகவும் இருந்தது. முகப்பு – façade – பிரமாண்டமாக அழகாக இருந்தது. சரி ..சரி.. இருப்பது பணக்கார அமெரிக்கா அல்லவா என்று நினைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். இரண்டு கவுண்டர்கள் இருந்தன. நேரே ஒரு கவுண்டருக்குப் போகப் போனேன். ஏதோ தடை செய்யவே நின்று நிதானித்தேன். நல்ல வேளை அடுத்த மூக்குடைப்பிலிருந்து தப்பினேன். ஏனென்றால், ஒவ்வொரு கவுண்டருக்கும் முன்பு தரையில் ஒரு மஞ்சள் கோடு; நாம் அதைத் தாண்டி நிற்பது முறையில்லை. அங்கு நின்று தாமதித்து, கவுண்டரில் இருப்பவர் நம்மைப் பார்த்து yes என்று சொன்னபின்தான் நாம் கவுண்டருக்குச் செல்ல வேண்டும் போலும். நல்லவேளை நிதானித்ததில் அது புரிந்து என் முறைக்குக் காத்திருந்தேன்.

என் முறை வந்தது. கவுண்டரில் இருந்தது ஒரு ஆப்ரிக்க-அமெரிக்க இளம்பெண். அழகான இளஞ்சிரிப்போடு வரவேற்றாள். கொண்டு போயிருந்த பார்சலைக் கொடுத்தேன். நிறுத்துப் பார்த்துவிட்டு $5.20 என்றாள். எனக்கு உதறல் எடுத்துவிட்டது. காலையில் பால்; மாலையில் சில்லறைத் தொல்லையா என்று நினைத்துக் கொண்டேன். நம்ம ஊரில் இந்த மாதிரி இருந்தால் அந்த 20 பைசா சில்லறை இல்லாமல் ஒரு தபால்நிலைய கவுண்டரில் நின்றால் நம்ம ஊரு ஊழியர் என்ன சொல்வார்; எப்படி சில்லறைக்காக நம்மை விரட்டி அடிப்பார் என்ற நினைப்பில், Sorry, I don’t have change என்று தயங்கியபடி 10 டாலர் தாளை நீட்டினேன். நோ ப்ராப்ளம் என்று சிரிப்பு மாறாமல் சொல்லி மீதி சில்லறையைக் கொடுத்த போது அந்தப் பெண் எனக்கு ஒரு தேவதையாகவே தோன்றினாள். அங்கு இருந்த நாட்களில் இந்த விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. அது பேருந்தாக இருக்கட்டும், வங்கியாக இருக்கட்டும்; என் அனுபவத்தில் எல்லாமே இனிமையான நிகழ்வுகளாகவே இருந்தன.பொதுமக்களிடம் அரசு. வங்கி, மற்றும் பொது அலுவலர்கள் எல்லோருமே சிரித்த முகத்தோடு இருந்ததைக் கண்டேன்.

என் மகள்களுக்கு நான் தினமும் என் அமெரிக்க வாழ்க்கையைப் பற்றி மெயில் அனுப்பி வந்தேன். என் முதல் நாள் நிகழ்வை எழுதி அனுப்பும்போது, அந்த தபால்நிலைய நிகழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது எழுதியது இன்னும் நினைவில் இருக்கிறது: Unlike our public servants who carry the pain of their piles on their faces, these people here are with all smiles.




*

Saturday, November 04, 2006

186. அமெரிக்கத் துளிகள் - II

.

.

இப்பதிவோடு தொடர்புள்ள ஏனைய பதிவுகள்:--


Don’t be nice to Desis -- ப்ரேமாலதா
Won’t Smile Back Syndrome - ஹேமந்த்.


Niceties and not so nice NRIs in US -- பாஸ்டன் பாலா

அமெரிக்காவில் இந்தியர்கள் : தருமியின் கவனத்திற்கு...! -- தெக்ஸ்

பேரா. தருமி அய்யா இந்த கதை தெரியுமா? -- பால பாரதி

அமெரிக்கத் தமிழனின் அவலம்! -- செல்லா

அமெரிக்க வாழ்க்கை -- அவிட்டம்

எனது முந்திய பதிவு.


மகள் தொலைபேசியில் சொன்ன ஒரு சேதியை வைத்தும், என் நேரடி அனுபவத்தையும் வைத்து ரொம்பவும் சீரியஸாக இல்லாமல் எழுதிய முந்திய பதிவுக்கு வந்த எதிர்வினைகள் (reactions) இதைப் பற்றி சீரியஸாகவே என்னை நினைக்க வைத்துள்ளன.

ப்ரேமலதா வின் பதிவில் அவரது சொந்த அனுபவம் - மிக மிக கசப்பானவைதான் - எழுதியுள்ளது பற்றி பாஸ்டன் பாலாவின் பதிவிலிருந்தே தெரிந்தது. பிரேமலதாவின் பதிவிற்குப் பதில் ஏதும் தர முடியாதுதான். On day 1, she has met a fellow too nasty and the other guy on the second day was both cruel and stupid. She was so unlucky to have met guys of this sort. அதன் பின் வந்த பதிவுகள் அவைகளுக்கு வந்த பின்னூட்டங்கள் "இது ஒரு நல்ல மனோ தத்துவம் சார்ந்த ஆராய்ச்சிக்கு உகந்த விசயமாக படவில்லையா?" என்ற தெக்கிக்காட்டானின் கேள்வியை மிகவும் பொருளுள்ளதாக ஆக்குகின்றன.


என் முதல் பதிவிற்குக் காரணம் - நாம் பட்டிக்காட்டுத் தனம் என்று எள்ளி நகையாடியவைகள் இன்று நல்ல பண்புகளாக நமக்குத் தெரிய ஆரம்பிக்கிறதே என்பதே அது. நகரங்களில் அடிக்கடி அடிபடும் ஒரு ஜோக் - தியேட்டரில் யாரையும் பார்க்கும்போது 'என்ன சினிமா பார்க்க வந்தீங்களா?' என்று யாரும் கேட்பதோ, ஹோட்டலில் பார்க்கும்போது 'என்ன சாப்பிட வந்தீங்களா?' என்று யாரும் கேட்பதோ ஒரு பெரிய ஜோக்காக நமக்கு இன்று இருக்கிறது. ஆனால்,இன்னும் நம் கிராமப் பகுதிகளில் தினமும் பார்க்கும் ஒருவர், மண்வெட்டியோடு இல்லை வேறு விவசாயக் கருவிகளோடு எதிர் வரும்போது எல்லோருக்கும் தெரியும் அவர் வயல் வேலைக்குத்தான் போகிறார் என்று. ஆனாலும் 'என்ன'பா, வயல் வேலைக்கி கிளம்பியாச்சா?' என்றோ, வெள்ளையுஞ் சள்ளையுமா கிளம்பின ஆள பார்த்து 'என்ன,டவுனுக்குப் போறாப்பலையா?' என்றோ, அல்லது 'என்ன'பா, ரொம்ப தூரமா?" (எங்கே போகிறாய் என்று கேட்கக் கூடாதல்லவா?!) என்றோ கேட்பது வழக்கம். ஊர்க்காரரோடு புதிதாக யாரும் வந்தாலும், 'தம்பி, புதுசாயிருக்கே!' என்று பூடகமாகக் கேட்பதும் பல காலத்து வழக்கம். இதில் கேள்வி கேட்பதும், கேட்கப்படுவதுமே முக்கியம். தரப்படும் பதில்கள் இரண்டாம் பட்சம்தான். பட்டினத்து ஆட்கள் இதை 'சுத்தப் பட்டிக்காட்டுத் தனம்' என்று சொல்வதும் வழக்கம். இது போன்ற கேள்விகள் நம்ம மாடர்ன் ஸ்டைலில் 'Good morning', 'Hi!', Long time no see!, 'So long' என்று சொல்வதற்கு ஒப்பானது என்று இப்போதுதான் எனக்கும் புரிகிறது. இதுதான் எதிர்த்தாற்போல் வருபவரை நம் மக்கள் 'கண்டுகொள்ளும்'முறை.

ஆனால் இந்த நடப்புகளை முழுவதுமாக இழந்துவிட்டு இன்று "இந்தியாவில் எதிர்ப்படுவோரிடம் முகமன் கூறும் பழக்கம் இருந்ததில்லை ( பாஸ்டன் பாலா )" என்ற நகர்ப்புற வழக்கத்தை வைத்து ஒரு முடிவெடுக்கிறோமா? மேலை நாட்டுக்காரர்களின் thank you என்பதற்கு பதில் நம்மூரில் ஒரு புன்னகை இருந்தது; அனேகமாக அந்தப் பழக்கம் போயே போய்விட்டது. sorry-என்பதையும் சில body languages மூலமாகச் சொல்லி வந்தோம். யார் காலையாவது மிதித்து விட்டால், இன்னும் பலர் செய்வோமே அதுதான் நம்ம ஊர் sorry / excuse me. ஆனால் அவைகள்"'பட்டிக்காட்டுத்தனம்" என்பதாக முற்றிலும் மறக்கப்பட்டு விட்டன. சரி, புதிதாக வந்த மேலை நாட்டு பழக்கங்களையாவது பற்றிக் கொண்டோமா என்றால் அதுவும் இல்லை. இதனாலேயே நான் என் மாணவர்களிடம், Try to learn to say 'sorry' and 'thanks'. It would make your life happier.என்று சொல்வதுண்டு.

//நம்மவர்களின் பிரச்சினையே தானாகவே இல்லாமல் மற்றவரைப் பார்த்து காப்பியடிப்பது … கலாச்சாரம் முதல் மொழி வரை .. இது நம்மவரின் inferiority complex !?? - செல்லா. செல்லா இதை முடிவாகச் சொல்லவில்லையா என்று தெரியவில்ல; ஏனெனில் அவர் கூற்றிற்குப் பிறகு !?? போட்டு விட்டார் ??! Chella, whether we like it or not, the world is going and has gone all the way of the West - whether it is our jeans or our mental makeup. We have to accept it? Right? ஜப்பானில் எல்லோரும் அது என்ன, கிமோனாவையா அணிகிறார்கள்? நாம் என்ன நம்ம தாத்தா கட்டிய நாலு முழ அல்லது அதைவிடக் குறைந்த துணியையா கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆகவே இது தன்னிச்சையாக - நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் - நடக்கும் ஒரு காரியம். no chance for any rewinding...! அதனால் இதை நீங்கள் சொல்வது போல் inferiority complex என்று கூற முடியவில்லை. We ape, of course. but who else does not?

இல்ல, செல்லா. இந்த inferiority complex என்பதெல்லாம் எங்க காலத்து விஷயம். உங்களுக்கு அந்த good old joke தெரியுமில்லையா? அமெரிக்க அம்மா தன் குழந்தையிடம் அந்தக் காலத்தில் - அதாவது எங்க காலத்தில - சொன்னது: ஒழுங்கா சாப்பிடு; இல்ல, the hungry children of India would snatch away your meal. ஆனா இப்போ உங்க காலத்தில அந்த அமெரிக்க அம்மா: ஒழுங்கா படி; இல்ல the intelligent guys from India would snatch away your jobs! - இப்படி மாறிப்போச்சு, செல்லா. அதனால உங்களுக்கெல்லாம் இன்னுமா எங்களுக்கு இருந்தது போல inferiority complex இருக்குங்றீங்க? அப்படியே இருந்துதுன்னா ரொம்ப தப்பு. We have proved what we are - at least we are not second to none. Skin colour does not matter at all. இல்லீங்களா? எங்களுக்கெல்லாம் அவங்க 'துரை மார்கள்'; உங்களுக்கு just colleagues. இல்லியா?

ஆயினும் எனக்கு விடைதெரியாத ஒரு கேள்வி: நம் ஆங்கில மோகத்திற்கு british legacy என்று ஒரு வரி விளக்கம் கூறுவதுண்டு. ஆனால் அது எப்படி நமக்கு மட்டும் இந்த மோகம்; நம் அடுத்த வீட்டு, மலையாளிகளுக்கோ, ஆந்திரர்களுக்கோ, கன்னடத்துக்காரர்களுக்கோ இல்லாதபடி நாம் மட்டும் ஏன் இந்த "மோகவலை"யில் சிக்கிக் கொண்டுள்ளோம்? என் மாணவர்களிடம் பரிட்சித்துப் பார்க்க சொன்ன ஒரு விஷயம்: ஒரு நாள் தொடர்வண்டி நிலையத்தில் சாதாரணமாக pants போட்டுக் கொண்டு தமிழில் ஒரு தொடர்வண்டி வரும் நேரத்தை அங்கு வேலை செய்யும் ஒருவரிடம் கேட்க வேண்டும்; அடுத்த நாள், சட்டையை tuck செஞ்சி,ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு (வேற ஆள்கிட்டதான்!) கேட்கணும்; அடுத்த நாள் அதே மாதிரி உடையோடு, eh..excuse me ...ah.. could you please tell me ..ehh.. (இவ்வளவு ஆங்கிலம் போதும்; அதன் பிறகு நம்ம தமிழ் போதும் !) இந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வரும்...? என்று கேட்கணும். - மூன்றில் எதற்கு மரியாதை கிடைக்கிறது என்று பார் என்று. நிச்சயம் இந்த மூன்றிற்கும் நம்மூரில் நல்ல வித்தியாசமான பதில்கள் வரும். ஆனால் அடுத்த ஊர் கேரளாவில் அப்படி நிச்சயமாக இல்லை; வேட்டிக்கு இன்றும் மரியாதை உண்டு; மலையாளத்துக்கும்தான். ஏன் இப்படி?

பால பாரதி, இன்னும் பலரும் சொல்லுவதை வைத்து நான் வைத்திருந்த ஒரு கருத்தை மாற்றிக் கொள்கிறென். நான் என்னவோ இது அமெரிக்காவில் உள்ள நம் மக்கள்தான் இப்படி 'பாராமுக"வித்தை பயின்றுள்ளார்கள் என்று நினைத்திருந்தேன். பாலபாரதியின் நேரடி அனுபவமும், மற்றும் வந்துள்ள பலப்பல பின்னூட்டங்களிலிருந்தும் இது தவறு; நம் ஊரிலும் அப்படித்தான் என்ற கருத்தை - கொஞ்சம் அரைகுறை மனத்துடன், அதாவது with some reservation - ஒப்புக் கொள்கிறேன். முழுமையாக ஒப்புக் கொள்ள மனம் மறுக்கிறது. இன்றும் ரயில், பஸ் பயணங்களில் அடுத்து அமர்ந்திருப்பவரோடு, அவர் நம் frequency-க்கு ஒத்து வரும் ஆளாக இருக்கும் பட்சத்தில், விடை பெறும்போது ஒருவரிடம் ஒருவர் சொல்லிக்கொண்டு செல்லும் அளவுக்கு நட்பு பாராட்ட என்னால் முடிந்திருக்கிறது. ஒரு ரயில் பயண நட்பு பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலும் இன்றும் நீட்டிக்கிறது. இருப்பினும் ஒப்புக் கொள்கிறேன். ஆகவே இதை அமெரிக்கத்தனம் என்று கூறாமல் பால பாரதி சொன்னது போல, பட்டணத்து ராசா கேட்டதை ஒத்துக் கொண்டு, "தமிழ்த்தனம்" என்று அழைக்கிறேன். ஆயினும்,மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எழுதியுள்ள நெல்லை கிறுக்கன், ஹரிகரன் அங்கேயெல்லாம் அப்படி இல்லை என்று கூறுவதற்கு என்ன விளக்கம் கூறுவதென்பது தெரியவில்லை. அதேபோல் ஒட்டு மொத்தமாநம் இலங்கைத் தமிழர்கள் பற்றி எல்லோரும் ஒருமித்துக் கூறும் நல்ல கருத்துக்காக அவர்களுக்கு ஒரு " ஓ " போடுவோம்!

அடுத்த கேள்வி: ஆங்கில மோகம் நமக்கு மட்டும் இவ்வளவு ஏன் என்று கேட்டேன்; அதோடு இப்போது இன்னொரு கேள்வி - மற்ற மாநிலத்தவர் போலன்றி நாம் மட்டும் ஏன் நம் 'அயலானை நேசிக்க முடியவில்லை?

//இன்று நாம் வலைப்பதிவின் மூலம் அறிமுகமாகி, முகம் பார்க்காமல் தினமும் சாட்டிங்கும் போனும் செய்து நெருக்கமான நண்பர்களாக இருக்க முடிகிறது. அது போலத்தானே நேரில் பார்க்கும் நேரங்களிலும் இருக்க வேண்டும்? //- கொத்ஸ் எல்லோரும், எல்லோருடனுமா அப்படி இருக்கிறோம்; இருக்க முடியும்? ஒத்தக் குணம், கருத்துக்கள் இவை எல்லாம் கூடி வந்தால்தானே தெரிதல் நட்பாகி அதன் பின் நெருக்கமெல்லாம் வருகிறது. ஆனால் நீங்கள் சொன்ன ஒரு கருத்தோடு நான் முழுமையாக உடன் படுகிறேன்: "அது நம் வளர்ப்பின் வெளிப்பாடு. There seems to be an inherent mistrust about others in our minds."

அப்சல் விஷயமோ, இடப் பங்கீடு போலவோ, மத விவகாரம் போலவோ இல்லாமல் நான் எழுதிய ஒரு விஷயத்தில் அதிக மன வேறுபாடின்றி நாம் இந்த சமூக நிலைப்பாட்டில் பின் தங்கியுள்ளோம் என்பதில் நமக்கு ஒத்தக் கருத்திருப்பதாக உணர்கிறேன்! அப்பாடா...!!

ஒத்தக் கருத்து ஒரு விஷயத்தில் வந்திருச்சின்னா, அப்ப அடுத்த ஸ்டெப் - இதுக்கு நாம என்ன செய்றது? இங்க இந்த அளவு விவாதம் நடந்ததே பலருக்கும் ஒரு கண் திறப்பாக பல காரியங்கள் இருந்திருக்கும். குற்றமுள்ளவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளவும், குற்றம் சாட்டுவோர் வேறு ஒரு கோணத்தில் (perspective) இதைப் பார்க்கவும் முடியுமென நினைக்கிறேன். KVD சொல்வது போல '... this as a "socio psychological issue",.." என்ற அளவில் நாம் ஒவ்வொருவரும் இந்த inherent mistrust-யை விலக்க முயலமுடியாதா?


தமிழ்த் தனத்தை மாற்றுவோமா?...please.


.

.

.

Sunday, October 29, 2006

185. அமெரிக்கத் துளிகள்

இதெல்லாம் எழுதட்டா சிலர் மாதிரியெல்லாம் எப்படித்தான் நாங்கெல்லாம் அமெரிக்க போய்வந்த கதையை அரங்கேற்றுகிறது?

நியூயார்க் பக்கம்; நியூபோர்ட் என்ற இடத்திற்குப் பக்கத்தில பலமாடிக் குடியிருப்பில் மாணவ-நண்பன் - அவன் இன்னும் சின்னாளில் 'காட்டான்' என்ற பெயரில் பதிவுலகத்தில் நுழைவதாகத் திட்டம் - அவனது விருந்தாளியாக ஒரு வாரம் தங்கியிருந்தேன். ஒரு நாள் அவனது ஃப்ளாட்டில் நுழையப்போகும் போது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு பெண்மணியும், அவரது குட்டிக் குழந்தையொன்றும் வெளியே வந்தார்கள். நான் அந்தக் குழந்தையைப் பார்த்து சிரித்து, 'டாடா'காண்பித்து என் 'அயலானை அன்பு செய்' என்ற தத்துவத்தை நிலைநாட்டினேன். காட்டான் ஒண்ணுமே கண்டுக்கவில்லை. ஏன்'பா என்று கேட்டேன். இதெல்லாம் எதுக்கு; நம்ம ஜோலிய நாம பாத்து போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான் என்றான். சரி இது ஒரு அமெரிக்கத்தனம் போல என்று நினைத்துக் கொண்டேன்.

பிறகு ஒரு நாள் மாலை ஸ்டார் பக்ஸ் போனோமா, அங்கே காஃபி குடித்துவிட்டு, அப்போதுதான் முதல் முறையாக நம்ம ஊரில் பச்சைப் பழம், மோரிஸ் பழம் என்றெல்லாம் சொல்லுவோமே அதே பழம், ஆனால் அழகு மஞ்சள் கலரில் வழுவழுன்னு இருந்தது. அதுக்கு முந்தி அந்த மாதிரி பழம் நம்ம ஊர்ல பார்த்ததில்லை. ஆனா அதுக்குப் பிறகு முதலில் பெங்களூரில் பார்த்தேன். அன்று அத வாங்கலாமான்னு நானும் காட்டானும் பேசினோம். அப்போ கவுண்டரிலிருந்து 'fresh பழம்தான் ,வாங்குங்க' அப்டின்னு தமிழில் ஒரு குரல். 'ஆ'ன்னு வாயப் பொழந்து பேசினவரைப் பார்த்தேன். தமிழ் மூஞ்சி; ரொம்ப friendly-ஆ எங்களைப் பார்த்தார். ஆனால் நம்ம காட்டானோ கண்டுக்கவேயில்லை. கடையை விட்டு வெளியே வந்ததும் 'ஏன்'பா, கண்டுக்கவேயில்லை' என்றேன். ஆமா, இவன் இன்னைக்கி இங்க; நாளைக்கி எங்கேயோ; இதில் என்ன பெரிசா கண்டுக்கிறது' அப்டின்னான். அடுத்த அமெரிக்கத்தனம் என்று நினைத்துக் கொண்டேன்.

அதன் பின் நான் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் Midway Mall அப்டின்னு ஒரு இடம். சனி ஞாயிறுகளில் நானும் நம்ம சைனா நண்பரும் அங்கு சும்மாவாவது போவதுண்டு. அங்கே போய் ஒவ்வொரு சாமான்களாக எடுத்துப் பார்ப்போம். Made in China என்றுதான் நூத்துக்கு தொண்ணூரு பொருட்களில் இருக்கும் (இப்போ நம்ம ஊர்லயும் அப்படி ஆகிப் போச்சு; அப்போ அது ஒரு பிரமிப்பு) அவர் பெருமையாக அதை எனக்குக் காண்பிப்பார். அதன்பிறகு நம்ம ஊர் காசிலேயும், அவரது காசிலேயும் டாலரின் மதிப்புக்கு ஈடாக எவ்வளவு என்று பார்ப்போம். அதற்கு அவர் அவரது palmtop எடுத்து on செய்வதற்குள் நான் அவரது சைனா காசுக்கு (எட்டால் பெருக்க வேண்டியதிருந்தது - நமக்கு எட்டாம் வாய்ப்பாடு எல்லாம் ஜுஜுபியா) டக்குன்னு சொல்லிடுவேன். அவருக்கோ அப்படி ஒரு ஆச்சரியமா இருக்கும். உங்க காசில எவ்வளவு என்பார். அப்போ டாலுருக்கு 48 ரூபாய் என்று நினைக்கிறேன். 50-ஆல் பெருக்கி விட வேண்டியதுதானே; அடுத்த ஜுஜுபி வேலை.ஆனால் நண்பருக்கு பயங்கர ஆச்சரியமா இருக்கும்; இதலாலதான் இந்தியர்கள் software-ல் பெரிய ஆளாக இருக்கிறீர்கள் என்பார். அது ஒரு கதை. நம்ம கதைக்கு இப்போ வருவோம். அந்த மாதிரி மால் ஒன்றுக்குள் நுழைந்து கடை கடையாய் சுற்றிக்கிட்டு இருந்தப்போ, ஒரு 45-50 வயது அம்மா ஒருவர் - சேலையில்; காரில் இறங்கி கடைக்குள் வந்தார்; என் மூஞ்சைப் பார்த்ததும் நான் அவர்கள் உடையைப் பார்த்ததுமே புரிந்துகொண்டோம். எனக்கு அவர்களைப் பார்த்து ஒரு பிரமிப்பு. இங்க பார்ரா, வெள்ளைக்காரன் ஊரில் நம்ம ஊர் அம்மா...கார்ல வந்து... ஒரு மாதிரியாக மூக்கின் மேல் விரல் வைக்காமல் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன். அவர்கள் ஒரு ராயல் லுக் விட்டார்கள். ஆனாலும் அப்பப்போ திரும்பி திரும்பிப் பார்த்தார்கள். ஏதாவது சிரிச்சி வச்சா பேசலாம்னு நினச்சேன். ஆனால் அம்மணி அப்படி கெத்தாக இருந்துவிட்டுப் போய்ட்டாங்க. அடுத்த அமெரிக்கத்தனம்...

சிக்காகோவிலும் இதே போல்தான். சிக்காக்கோவிலிருந்து நம்ம சென்னை எலக்ட்ரிக் ரயில் மாதிரி ஒன்றில் - ஆனால் கூட்டமே கிடையாது - பக்கத்து suburb-க்குச் சென்றேன் இன்னொரு நண்பரோடு. முதல் வார்னிங்காக அவர் சொன்னது - ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் இருக்கும்போது எந்தக் காரணம் கொண்டும் black என்ற சொல்லை ஆங்கிலத்தில் சொல்லிவிடவேண்ட்டாம் என்றார். அடுத்தது - நம்ம ஊர் ஆளுக யாரும் இருந்தாலும் கண்டுக்க வேண்டாம்; ஏன்னா அவங்க நம்மளைக் கண்டுக்க மாட்டாங்க என்றார். அதே போல் எங்கள் சீட்டுக்கு சில இடம் தள்ளி நம்ம தமிழ் மூஞ்சி ஒன்று ஆங்கில நாவலைக் கையில் வைத்துக்கொண்டு, சீரியஸாக வாசித்துக் கொண்டு இருந்தது. ஓரக் கண்ணால் பார்த்தேன். அந்தக் கேசு எங்களைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ரெகுலராக ரயிலில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் நாங்கள் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்றார். நான் தங்கியிருந்த இடத்தில் தமிழில் பேச ஆள் கிடைக்காமல், வாடி வதங்கி இருந்த எனக்கு இதெல்லாம் கொஞ்சம் வித்தியாசமாயிருந்தது. ஒன்றுமில்லையென்றாலும் ஒரு மணி நேரப் பயணத்தில் பேச்சுத் துணையாகக் கூட ஒரு தமிழனை இன்னொரு தமிழன் கண்டு கொள்வதில்லையென்பது விநோதமாயிருந்தது; இருக்கிறது.

இந்த அனுபவத்திற்கு முன் தங்கை ஒருத்தி குடும்பத்தோடு இரண்டு மூன்று ஆண்டுகள் அமெரிக்காவிலிருந்து வந்த போது, எடுத்திருந்த வீடியோ, போட்டோ எல்லாவற்றையும் பார்த்து விட்டு, எல்லாம் அவர்கள் கம்பெனியில் இங்கிருந்து சென்று வேலை பார்க்கும் கூட்டத்தைத் தவிர ஒரு ஆள் கூட வேறு மாநிலத்து நண்பர்களாகவோ, அமெரிக்க நண்பர்களாகவோ இல்லாது இருந்ததைப் பார்த்த போதும் மிக்க ஆச்சரியமாக இருந்தது.

இப்போ 20 நாளைக்கு முன் அமெரிக்கா சென்றடைந்த சின்ன மகள் அப்பப்போ தொலைபேசியில் பேசுவாளா...அவள் சொன்னது: பார்க்கிலோ, கடைகளிலோ, அவ்வளவு ஏன் கிறித்துவக் கோயில்களிலோ எதிர்த்தாற்போல் அமெரிக்கர்கள் வந்தால் ஒரு ஹலோ, அல்லது ஒரு புன்சிரிப்பு. ஆனால் நம்ம ஊர் ஆட்கள் நம்மை நேருக்கு நேர் - கண்ணோடு கண் - தற்செயலாகப் பார்த்து விட்டாலும் கூட ஒரு ஜடப்பொருளைப் பார்க்கும் reaction-ஓடு கடந்து சென்று விடுகிறார்கள்; ஏன் இப்படி என்றாள். அதுதான் அமெரிக்கத்தனம் என்றுதான் சொல்ல முடிந்தது.

அமெரிக்கக்காரர்களுக்கு ஒரு வேளை பதில் தெரியலாமேவென இங்கே இதைப் பதிவு செய்கிறேன். தருமியல்லவா...அதனால் ஒரு கேள்வி. வழக்கமாக எனக்கு யாரும் மதுரைக்காரர் ஒருவர் பதிவரெனத் தெரிந்தால் ஒரு பாசம்; அட, நெல்லைக்காரர் என்றால் கூட பிறந்த மண் பாசம் பெருக்கெடுக்கிறது. அடுத்த மாநிலத்தில் நம் மாநிலத்தவரைப் பார்க்கும்போதும் ஒரு பாச ஊற்று பொங்கிவிடுகிறது; பொங்கியிருக்கிறது. அப்படியானால் அடுத்த நாட்டில் நம் நாட்டினர் என்றாலே அந்தப் பாசம் வராதா? அதுவும் தமிழ்நாட்டுக்காரன்/ர்/ரி என்று தெரிந்தாலும் எப்படி, ஏன் கண்டுக்காமல் போகி(றீ)றார்களாம்? கண்டுக்கிட்டா அத ஒரு மாதிரி தப்பாதான் எடுத்துக்கொள்கி(றீ)றார்களாமே ஏன்?


.
.