Showing posts with label விருது விழா. Show all posts
Showing posts with label விருது விழா. Show all posts

Thursday, October 09, 2025

1357. மொழிபெயர்ப்பு விருது விழா


அருட்செல்வர் நா. மகாலிங்கம் காந்தியின் மீதுள்ள தனது பக்தியையும், மரியாதையையும் வெளிப்படுத்தும் வண்ணம், காந்தி பிறந்த நாளைப் பல்லாண்டுகளாகக் கொண்டாடி வருகிறார். காந்தியோடு அண்ணல் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த நாளையும் இணைத்துப் பெரு விழாவாக ஆண்டாண்டு தோறும் கொண்டாடினார்.

 

      அருட்செல்வர் நா. மகாலிஙம்

               

                                               முனைவர்  ம. மாணிக்கம்

தந்தையார் மறைந்த பின் அந்தப் பணியை அதே போல் சிறப்பாக அவரது மகனார் முனைவர் மாணிக்கம் அவர்கள்  தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்த ஆண்டு நடந்த விழா தொடந்து 58 ஆண்டுகளாக நடைபெற்ற ஒரு பெரும் விழா.

புதிதாக சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பணிமன்றம் அருசெல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் மூலமாகப் பல மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்படுமின்றன. அதனோடு இணைந்து ஆண்டு தோறும் பல சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருது கொடுத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு அக்டோபர் முதல் தேதியிலிருந்து இந்த விழா ஐந்தாம் தேதி வரை நடந்து முடிந்தது. காந்தி பிறந்த நாளான இரண்டாம் தேதி அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா பெரிதும் விமரிசையாக நடந்தது.

இவ்விழாவில் இருவருக்கு முதல் விருதும்(தலைக்கு 1,00,000), இருவருக்கு இரண்டாம் பரிசுகள் இருவருக்கும்(50,000), நால்வருக்கு மூன்றாம் பரிசுகளும்(25,000) கொடுத்தார்கள்.

இவ்விழாவில் எனக்கு மூன்றாம் பரிசு(தான்!) கிடைத்தது. பேரரசன் அசோகர்  என்ற நான் மொழிபெயர்த்த நூலுக்குக் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. எதிர் வெளியீடாக இந்த நூல் வெளிவந்தது. வெளியீட்டாளர் அனுஷ் அவர்களுக்கும், விருதளித்த மொழிபெயர்ப்பு மையத்திற்கும், அதனை நடாத்தி வரும் முனைவர் மாணிக்கம் அவர்களுக்கும்,  அதில் சிறப்பான பங்களித்துக் கொண்டிருக்கும் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.

விழாவின் வரவேற்பாளர் முனைவர் ஒளவை ந. அருள் (இயக்குநர், தமிழ் வளர்ச்ச்சித் துறை) அவர்களின் பேச்சு அருமையாக இருந்தது. (அவரின் தந்தை முனைவர் ஒளவை நடராசன் அவர்களும், அவரது தாத்தா ஒளவை சு. துரைசாமி அவர்களும் என் கல்லூரிக் காலத்தில் (61-64) ஆண்டுகளில் என் தமிழ் ஆசிரியர்களாக மதுரை தியாகராசர் கல்லூரியில் இருந்தார்கள் என்ற மகிழ்ச்சிச் செய்தியை அருள் அவர்களிடமும் தெரிவித்தேன். எனக்கும் மகிழ்ச்சி. செய்தி கேட்ட அவருக்கும் பேருவகை.) வாழ்க நீ எம்மான் என்ற தலைப்பில் பேசிய திருமதி பாரதி பாஸ்கர், தான் மிகப் பெரும் மேடைப் பேச்சாளர் என்பதை ஒவ்வொரு சொல்லிலும் உறுதியாக்கினார்.

குடும்பத்தினர் அனைவரும் - முக்கியமாக, என் பேரக் குழந்தைகள் நால்வரும் - வந்திருந்தது எனக்குப் பேரின்பமாக இருந்தது.

விழாவிற்குப் போனோம்; விருது வாங்கினோம்; மகிழ்ச்சியைக் கொண்டாட பெயரன்கள் விருந்துண்ண அழைத்துச் சென்றனர்.