Saturday, March 12, 2016

891. VERY GOOD DHARUMI... FOR YOUR PROPHECY!







*
ஒன்பது வருடத்திற்கு முன்பு எழுதிய​ பதிவின் மறுபதிவு

Friday, February 23, 2007

202. பஸ் எரித்த பகத்சிங்குகள் - 2.

போலியோ டயட் புகழ் $செல்வனின் பஸ் எரித்த பகத்சிங்குகள் வாசித்ததும் அவரது 'தவறான' கண்ணோட்டம் பார்த்தேன். அவரைப் போல் இந்த வழக்கு முடிந்து மூவருக்கு தூக்குத் தண்டனை என்றதும் நம் பதிவர்களில் பலருக்கு ரொம்ப சந்தோஷம். அந்த மூன்று பேருக்கு தூக்குத்தண்டனை என்றதும், 'ஆஹா! சட்டம் தன் கடமையைச் செய்து விட்டது' என்று சந்தோஷப்பட்டோர்களையும், செல்வனையும் பார்த்து 'அடப் பாவி மக்கா, இப்படி பச்சைப் புள்ளைகளா இருக்கீங்களேன்னு' அவங்களைப் பார்த்து எனக்குத் தோணிச்சி.


ஏன்னா, நான் இப்போ சமீபத்தில தான் வெண்மணியைப் பற்றிய குறும் படம் "ராமையாவின் குடிசை"யைப் பார்த்து வயிறெரிந்திருந்தேன். எனக்கு என்ன நினைப்பு வந்ததென்றால், இன்னும் பதினைந்து இருவது வருஷம் கழிச்சி ஒரு செய்திப் படமோ, குறும்படமோ எடுக்கப் படலாம். 'தர்மபுரி பஸ் எரிப்பு - நடந்தது என்ன?' என்ற தலைப்பிலோ, பார்ட்னர் செல்வன் சொன்னது போல் 'பஸ் எரித்த பகத்சிங்குகள்' என்றோ தலைப்பு இருக்கலாம். அதில வயசாயிப் போனாலும், முறுக்கு விடாத 3 ஆட்கள் அவங்க அரண்மனை மாதிரி வீட்ல உக்காந்து கிட்டு படம் எடுக்கிறவரிடம் ஒரு நேர்காணல் கொடுத்திட்டு இருப்பங்களாயிருக்கும்.

இன்னும் இந்த கால இடைவெளிக்குள் ஒரே ஒருதடவை 'ஜெ' ஆட்சி வந்திருந்தாலும் போதும்; பெயர் தெரியாத இந்த மூன்று பேருமே பதினைந்து வருஷத்தில் பெரிய 'பிஸ்தா' ஆயிருப்பார்கள். ஏன்னா, ஜெ இவர்களின் 'விசுவாசத்தை' மெச்சி இவர்களுக்கு அமைச்சர் பதவி, இல்ல at least வட்ட, மாவட்ட தலைவர்களாக ஆக்கி விட்டுருப்பார். அது போதாதா? அப்போ ரொம்ப தெனாவட்டாகவே அவர்களின் பேச்சு அந்த குறும்படத்தில் இருக்கும். எப்படி தாங்கள் தங்கள் தங்கத் தலைவியிடம் விசுவாசத்தோடு இருந்தார்கள் என்பதைப் பற்றி விலாவாரியாகவும், இந்தக் கல்லூரி மாணவர்கள் கொஞ்சம் கூட வருத்தமில்லாமல் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்ததாலேயே தங்களுக்கு மிகவும் வருத்தம் வந்ததாகவும், அதனால் அந்த வருத்தத்தில்தான் பஸ்ஸுக்குத் தீவைத்தோம்; அதில் என்ன தவறு? என்றும் பேட்டியளிப்பார்கள்

ஆகவே மக்களே 'சட்டம் தன் கடமையைச் செய்து விட்டது என்று ரொம்பவும் சந்தோஷப்பட்டுக் கிட்டு இருக்காதீங்க... ஏனென்றால், எப்போதுமே தெரியுமே நம்ம ஊர்ல என்ன நடக்கும்னு. இன்னும்இந்த தீர்ப்போடு எல்லாம் முடியவில்லை. இனி இந்த 'பகத்சிங்குகள்' மேல் முறையீடு செய்வார்கள். சட்டம் அடிக்கடி சட்டையை மாத்த வேண்டியதிருக்கும். இந்த கேஸ் விஷயத்தில் - ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற கருத்தினாலும், இது rarest of rare case என்று கொள்ள முடியாததாலும் நம் நீதியரசர்கள் இந்தக் கேஸை ஒட்டுமொத்தமாக மேல் முறையீட்டில் தள்ளிவிடும் வாய்ப்பு நிறையவே உள்ளது.


அப்படியெல்லாம் நடந்து விடாது என்று சொல்லி விடாதீர்கள். வெண்மணி வெண்மணின்னு ஒரு பயங்கர சம்பவம் நினைவில் இருக்கிறதா? மூணு பேர் இல்லை முப்பது பேர். என்ன ஆச்சு அந்தக் கேஸ்? இப்பவும் அதில் சம்பந்தப் பட்டவர்கள் அந்த நிகழ்வை மய்யமாக வைத்து எடுத்த செய்திப் படத்திற்கு கம்பீரமாக உட்கார்ந்து நேர்காணல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் முதல் பாதியை மட்டுமாவது நம் நீதி மன்றங்கள் முழுமையாகக் கடைப் பிடித்து வருகின்றன என்பது நமக்குத் தெரியாதா என்ன? சில பல ஆண்டுகள் நடந்து -அதற்குள் தண்டிக்கப் பட வேண்டியவர்களின் ஆயுட்காலமே கூட முடிஞ்சிரலாம் - அதன் பின் தண்டனை வெகுவாகக் குறைக்கப் பட்டு, சில ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று தீர்ப்பிடப்பட்டு, ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக 'பாவம், இந்த மூன்று குழந்தைகளும்ஏற்கெனவே சில காலம் சிறையில் இருந்து விட்டதால் அவர்கள் தண்டனை முடிந்ததாக'க் கருதப் படுகிறது; ஆதலால் அவர்களுக்குத் தண்டனை ஏதும் இல்லை எனவும் மேல் கோர்ட் முடிவு செய்துவிடலாம்.

அன்னைகளும், அய்யாக்களும் அப்சலின் தூக்குத்தண்டனை பற்றி பக்கம் பக்கமாக எழுதியவர்கள், பேசியவர்கள் இந்த தூக்குத் தண்டனை பற்றிய கருத்து ஏதும் சொல்லாமல் இருக்கிறார்களே என்று செல்வன் கேட்கிறார். எப்படியும் அவர்கள் விடுதலையாகி வரப் போகிறார்களே என்பதைப் புரிந்து கொண்ட காரணத்தால் அன்னைகளும், அய்யாக்களும் ஏதும் எழுதாமலோ, பேசாமலோ இருக்கலாமல்லவா ..?

========================================

இன்னொரு விஷயத்தில் எனக்குத் தெளிவில்லை; தெரிந்தவர்கள் பதில் கூறினால் நன்றாக இருக்கும்.

 இந்த வழக்கின் ஆரம்பமே ப்ள்சண்ட் டே ஹோட்டல் விதி முறைகளை மீறி இரண்டு அடுக்கு மாடிகள் கட்டப்பட்டு விட்டன; அதனால் ஜெ ஒரு குற்றவாளி என்பதோடு, இரண்டு மாடிகளில் ஒன்றை இடித்து விட வேண்டுமென்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து வேடிக்கையான ஒரு வழக்கு குற்றவாளிகள் பக்கத்திலிருந்து போடப்பட்டதாம். எந்த மாடியை இடிக்க வேண்டுமென்று அந்த நீதி மன்றம் குறிக்காததால், அது எந்த மாடியை இடிக்கவேண்டுமெனக் கேட்டு இன்னொரு வழக்கு போடப்பட்டதாக அறிந்தேன். (நான் நீதிபதியாக இருந்திருந்தால் ரொம்ப சிம்பிள் தீர்ப்பு கொடுத்திருப்பேன்; கீழ்த்தளத்தை மட்டும் இடித்தால் போதும் என்று! திமிர்த்தனமாக வழக்குப் போட்டால், நீதிபதிக்குக் கோபம் வரவேண்டுமென்பது என் எதிர்பார்ப்பு.) அப்படி போடப்பட்ட வழக்கு பின் என்னாயிற்று? விதிமீறலோடு கட்டப்பட்ட இரண்டு தளங்களோடுதான் இன்னும் இருக்கிறது என்று கேள்விப் படுகிறேன். அப்படியானால், அந்த வழக்கு, தீர்ப்பை நிறைவேற்றாததால் நடந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு, இதை இன்னும் கண்டு கொள்ளாத அடுத்த கட்சியின் அரசு, அப்படி கண்டு கொள்ளாமைக்குரிய காரணங்கள் - இவைகள் எல்லாம் என் போன்ற சாதாரண குடிமகனுக்குப் புரியவே இல்லையே!


*



Tuesday, March 01, 2016

890. PAIN IN THE ASS !






*



 நேற்று, 29.2.16. லீப் வருஷம் இல்லையா … அதான் நான் கொஞ்சம் லீப் பண்ணிவிட்டேன் – என் ஸ்கூட்டரிலிருந்து.

எங்க ஊர் பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள காம்ப்ளக்ஸ் பேருந்துப் பகுதியில் நுழைந்து அதன் வழியே பெரிய பாலத்தில் நுழைவதை இன்னும் அனுமதிக்கிறார்கள். இது தேவையில்லாதது என்றொரு எண்ணம் எனக்கு உண்டு. நேற்று நுழையும் போது அதை நினைத்துக் கொண்டே நுழைந்தேன்.

இடது பக்கம் முழுவதுமாகக் கடைகள். அந்த கடைகளுக்கு முன்னால் பழ வியாபாரிகள். அதில் கடைசியில் இருக்கும் பெண்மணியிடம் தான் கொய்யாப்பழம் வழக்கமாக வாங்குவேன். (சிலரிடம் வாடிக்கையாகப் பொருட்கள் வாங்குவதுண்டு. அவர்களை எனக்குப் பிடித்திருந்தால் (சிரிச்ச மூஞ்சாக இருக்க வேண்டும்.) முதலிலேயே ஒரு ஒப்பந்தம் போட்டு விடுவேன். நல்ல பொருள் கொடுக்கணும். நான் பேரம் பேச மாட்டேன். எனக்குப் பிடித்த ஒப்பந்தம். இதனால் அவர்கள் பலரும் ‘நண்பர்களாகி’ விடுவார்கள். இப்போது அன்னாசிப்பழம், பப்பாளிப் பழக்காரர் ஒருவருடனும், இந்தக் கொய்யாப்பழ அம்மாவுடனும் இந்த ஒப்பந்தம் உண்டு.)

அந்த கொய்யாப்பழ அம்மா இருக்கிறாரா என்று பார்த்துக் கொண்டு இடப்புறம் ஓரமாக மிக மெல்ல சென்று கொண்டிருந்தேன். அவர் கடையைப் பார்த்தேன். அப்போது என்ன நடந்தது என்று தெரியாது. அடுத்த செகண்ட் அந்த இடத்தில் வண்டியோடு பொத்தென்று விழுந்தேன். எப்படி விழுந்தேன். ஏன் விழுந்தேன் என்று எதுவும் தெரியாது. தூக்கி விட்டவர்கள் சொன்ன பிறகு இரண்டு பசங்க இடிச்சிட்டு பறந்திட்டானுக அப்டின்னு தெரிஞ்சிது.

ஆனா இன்னொரு வினாடி அப்படியே மனசுக்குள்ள frozen momentஆக நின்னு போச்சு. நான் horizontalஆக அந்தரத்தில் இருக்கிறேன். கண்ணுக்கு முன்னே வானம் தெரியுது. விழப்போறோம்னு தெரியுது. தலையில் ஹெல்மட் போட்டிருக்கோம்னு நினைக்கிறேன்.

அடுத்து …. என் குண்டி (இது ஒண்ணும் கெட்ட வார்த்தை இல்லையே!) நச்சுன்னு தரையில் land ஆச்சு. விழுந்தது கூட தெரியாது. ஆளாளுக்கு ஓடி வந்தாங்க .. வயசுக்காரர் வண்டியைத் தூக்கி நிறுத்தினார். வயசானவர் என்னைத் தூக்கி விட்டார். பக்கத்துக் கடை பாட்டியம்மா ஒரு சின்ன ஸ்டூல் எடுத்து உட்காரச் சொன்னாங்க. கொய்யாப்பழக்காரம்மா ஒரு தம்ளரில் தண்ணீர் கொண்டு வந்தாங்க. வண்டிக்கு சேதமில்லை. எனக்கு சேதமான்னு பார்த்தேன். தோளில் தொங்கிய ஜோல்னா பை அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது. மூக்குக் கண்ணாடி மூக்கிலேயே இருந்தது. யாரோ ஹெல்மட் கழற்றச் சொன்னார்கள். கழற்றி வண்டியில் மாட்டினேன். எழுந்து நின்றேன். உடம்புக்கும் சேதமில்லை என்று தெரிந்தது.

உட்கார வேண்டாமென நினைத்தேன். எல்லோரும் வற்புறுத்தியதால் உட்கார்ந்தேன். இரண்டு மிடக்கு தண்ணீர் குடித்தேன். பின் எழுந்து நின்று கொய்யாப் பழம் வாங்கிக் கொண்டு, எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு ஹெல்மட் மாட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

தங்க்ஸிடம் லேசாக வண்டி சாய்ந்து விட்டது என்றேன். கொஞ்சம் டைம் எடுத்துக் கொண்டு விழுந்ததைச் சொன்னேன். எதற்கும் உடம்பை நல்லா பார்த்திருவோம்னு நினச்சி உடை மாத்தினேன். சும்மா சொல்லக்கூடாது. போட்டிருந்தது கருப்பு பாண்ட்ஸ். நன்றாக அழுக்கு தெரியணும். அது கூட சுத்தமாக அழுக்கில்லாமல் இருந்தது. போட்டிருந்த டி-ஷர்ட்டும் டார்க் கலர். அதிலும் தூசி தும்பு என்று ஏதும் தெரியவில்லை. ஆச்சரியமாகத்தானிருந்தது. “நன்றாகத்தான் விழுந்திருக்கிறேன்!” என்று என்னையே தட்டிக் கொடுத்துக் கொண்டேன்.

விழுந்தது மதியம். இரவு வரை கூட ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. வழக்கமான நாற்காலியில் உட்கார முடியவில்லை. பிரம்பு நாற்காலி வசதியாக இருந்தது.  ஆனால் ராத்திரி படுத்ததும் தான் pain in the ass என்பது தெரிந்தது. புரண்டு படுக்க கஷ்டம். நேரே படுக்க முடியவில்லை. pain in the ass!!! 

இன்று இரண்டாவது நாள். pain in the ass தொடர்கிறது. சரியாகி விடும். இந்தப் பதிவை எழுத நடுவில் இரண்டு தடவை கொஞ்சம் நடுவே எழுந்திருந்து நான்கு எட்டு நடந்தால் நல்லது என்று தோன்றியது. நடந்தேன். நாளைக்கு சரியாகி விடுமென நினைக்கிறேன்.

அதற்குள் இனி இரண்டு சக்கர வண்டி எடுக்கக் கூடாதுன்னு ஒரு தடா சட்டம் வந்தது. அட .. போங்கடா என்று சொல்லி விட்டேன். மதுரைக்காரங்க காரை மட்டும் நம்பினால் பொழப்பு நடக்காது. எங்கும் போக, எங்கும் நிறுத்த இரட்டைச் சக்கரம் தான் சரி …. தொடரணும்.




 *