Thursday, October 30, 2008

272. மதுரையில் இன்று ……….

*

*

இன்று 30.10.2008 முத்துராமலிங்கத் தேவரின் 100 / 101 வது குருபூசை. அதாவது அவர் பிறந்த & இறந்த நாள். மதுரையே குலுங்குகிறது. இது கூட பரவாயில்லை …

வி.வி.கிரி முத்துராமலிங்கத்தின் உருவச்சிலையைத் திறந்து வைத்தபோது நாங்கள் நண்பர்கள் சிலர் பேசிக்கொண்டது: இந்தியாவின் முதல் குடிமகன் ஒரு சாதிப் பெயரைத் துறக்காத பெரியவரின் சிலை வைக்க சம்மதிக்கணுமா? இது கூட பரவாயில்லை …

நான் தினமும் இருமுறையாவது தாண்டிச்செல்லும் வழியில் இந்தச் சிலை. வாரத்தில் இரண்டு மூன்று முறையாவது வயசான பெண்கள் நாலைந்து பேர் அதைக் கழுவி, பூசை புனஸ்காரங்கள் செய்து அந்தப் பீடத்திற்குப் பக்கத்தில் பொங்கல் செய்து, அவரைத் தெய்வமாக்கும் நிகழ்ச்சி நடத்துவார்கள். இது கூட பரவாயில்லை …

சாதிக்கலவரம் என்றால் இதைச் சுத்தி ஒரே போலீஸ் காவல்.. அது இதுன்னு அந்த ஏரியாவே களேபரமாக ஆகிடும். இது கூட பரவாயில்லை …

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளைய ஊர்வலம் செல்லும் வழியில் மாட்டிகொண்டு முன்னும் செல்ல முடியாமல் பக்கத்தில் ஒதுங்கவும் செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டு ஊர்வலக்காரர்களின் திருவிளையாடல்களைக் கண்டபோது … இது கூட பரவாயில்லை …

இதனாலேயே மதுரையில் பல பள்ளிகளும் முழு அல்லது அரை நாள் விடுமுறை அளித்துவிடுவது வழமை. இது கூட பரவாயில்லை …

ஒவ்வொரு ஆண்டும் இந்த தேதியிலும் அதற்கு முந்திய நாளிலும் மதுரையில் ரோட்டில் போகவே பயம்தான். எந்த நேரத்தில் எந்த இடத்திலிருந்து இடைஞ்சல் வரும் என்பதே தெரியாது. இன்றைக்குக்கூட பழைய அனுபவத்தில் மாலை வரை வெளியே செல்லவே இல்லை. சாயுங்காலம் வெளியே சென்று வரலாமென சென்றபோது மாப்பிள்ளை விநாயகர் சந்திப்பில் பச்சை விளக்குக்காகக் காத்திருந்து சென்ற போது அந்தத் திருப்பத்தில் வலது பக்கத்தில் இருந்து இரு வண்டிகள் ஆனால் அது என்ன வண்டிகள் என்றுகூட தெரியாதபடி ஆட்களால் நிரம்பி வழிய எந்த வித முன்னறிவிப்புமின்றி பயங்கர கூச்சலுடன் குறுக்கே பாய்ந்து வந்தன. கூச்சல் வந்ததால் முன்னெச்சரிக்கையாக நானும், மற்றோரும் வண்டிகளை நிறுத்தி விட்டோம்; பிழைத்தோம். இந்த இரு நாட்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதும் காவல்துறை வேடிக்கை பார்ப்பதும் வழமை. இது கூட பரவாயில்லை …

இந்த நாளில் பசும்பொன்னில் குருபூஜை நடக்கும். இதற்கு உற்றார் உறவினர் தெய்வமாகக் கொண்டாடுபவர்கள் செல்வது சரியே. அதற்குரிய ஏற்பாடுகளைக் காவல்துறை செய்யட்டும். ஆனால் மற்ற ஜாதிக் கட்சிகள் தவிர மற்ற ஏனைய கட்சிகள் எல்லாம், அதிலும் ஒரே கட்சியேகூட பல குழுக்களாக –அதுவும் பார்வர்டு ப்ளாக் கட்சியில் எத்தனை குழுக்களோ அவர்களுக்கே தெரியாது அது – பசும்பொன்னுக்கு ஏன் செல்ல வெண்டுமென எந்தக் கட்சியும் யோசிப்பதுகூட இல்லாமல் மந்தை மந்தையாய் செல்கிறார்கள். (பொதுவுடமைக் கட்சிகள் செல்வதில்லையென நினைக்கிறேன்.) இது கூட பரவாயில்லை …

இந்த நாட்களில் முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் தற்காப்புக்காக மூடப்படுகின்றன. அத்து மீறல்கள் சர்வ சாதாரணம். எங்கும் எதிர்ப்பு ஏதும் இருப்பதில்லை. இது கூட பரவாயில்லை …



ஆனால் …

அந்தச் சாதியினரில் வயதானோர் அவரைத் தெய்வமாகக் கொண்டாடட்டும். பழைய பழக்கம், tradition என்பதாக அதை வைத்துக் கொள்ளலாம். அப்படி இருந்தால் நாளாக நாளாக இந்தப் பழக்கம் மாறும்; அடுத்த தலைமுறையினராவது இந்த பக்தி மார்க்கத்திலிருந்து விடுபட்டு விடுவார்கள்; படிப்பறிவு கூடக் கூட இந்த தனிமனித ஆராதனை நின்று விடாவிட்டாலும் மிகவும் குறைந்துவிடும் என்றெல்லாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இந்த ஊர்வலங்களில் மிகுந்த ஈடுபாட்டோடு இருப்பது எல்லாமே மிக இளைஞர்கள். பதின்ம வயதில் இருப்பவர்களே. இவர்கள் மனத்தில் சாதிக்கு முக்கிய இடமிருப்பதலாயே இந்தக் கூட்டத்தில் இவ்வளவு ஈடுபாடு காட்டுகிறார்கள். அச்சமூகமே அதை ஊக்குவிப்பது மிகவும் துரதிருஷ்டம்.


இப்படி சாதி உணர்வுகளால் நிரம்பப்பட்டு, நிரப்பப்பட்டு வளரும் இந்த இளம் தலைமுறை வளர்ந்த பிறகு எந்தமாதிரியான சமூக அமைப்பை உருவாக்குவார்கள்?

எங்கே இது நம் சமூகத்தை இட்டுச் செல்லும்?

மேலும் மேலும் சாதிப் பித்துப் பிடித்து எந்தக் காலத்திலும் இந்த சாதிகளிலிருந்து நம் இளந்தலைமுறை விடுதலையாகாதா?

என்றும் இன்றுபோலவே நம் தமிழ்ச்சமூகம் சாதிக் கட்டுக் கோப்புகளிலிருந்து விடுதலையாகாமலே இருந்திட வேண்டியதுதானா?



*
பி.கு.
//மற்ற ஜாதிக் கட்சிகள் தவிர மற்ற ஏனைய கட்சிகள் எல்லாம், ...// - இப்படி எழுதும்போது ப.ம.க.வை மனதில் வைத்து எழுதினேன். ஆனால் இன்று காலை செய்தித்தாட்களில் பார்த்த பிறகுதான் ப.ம.க., பா.ஜ.க. எல்லாமே அங்கு சென்றிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. எல்லாம் ஓட்டுப் பிச்சைதான் ..
*

Monday, October 27, 2008

271. பதிவுலகம் ரொம்பவே கெட்டுப் போச்சு

*

பதிவுலகம் ரொம்பவே கெட்டுப் போச்சு. ஆமாங்க, நானும் பதிவனாகி ரெண்டரை ரெண்டேமுக்கா வருஷம் ஆகப் போகுது. இது ரொம்ப புதுசா இருக்குங்க. இதுவரைக்கும் பதிவுலகில் இப்படி நடந்து நான் பார்க்கவே இல்லை. மனசு ரொம்ப கவலையாயிருக்கு. ஏன் ..? என்ன ஆச்சு நம் மக்களுக்கு அப்டின்னு மனசு ரொம்ப கிடந்து அடிச்சிக்கிது.

விளையாட்டுத்தனமா இருந்து பார்த்திருக்கிறேன். அப்போகூட இப்படி கிடையாதே! அதே மாதிரி ரொம்ப சீரியஸா இருப்பாங்க; அப்போதும் இந்த தடவை மாதிரி நடந்ததே கிடையாதே! பின் ஏன் இப்படி இப்ப இருக்காங்கன்னு தெரியலையே. யாரைக் குறை சொல்றதுன்னும் தெரியலை. இதில் தனிப்பட்ட பதிவர்களை நோவதில் எந்தப் பயனுமில்லை என்றே நினைக்கிறேன். இதை ஒரு பதிவுலகத்தின் பொதுக்குணத்தில் ஏற்பட்ட ஒரு மாறுதலாகவே பார்க்கிறேன். ஆனாலும் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. இப்படியெல்லாம் நடக்கலாம், நடக்க முடியும் என்று நான் எப்போதும் நினைத்தும் பார்த்ததில்லை.

இப்படி நடந்ததற்காக யாரைக் குறை சொல்வது என்றும் புரியவில்லை. 'அவனை நிறுத்தச் சொல்; நான் நிறுத்துகிறேன்' என்பதாகத்தான் ஒவ்வொருவரும் இதற்குரிய பதிலாகத் தருவார்கள் என்பதும் எனக்குப் புரிகிறது. ஆனாலும் அப்படி ஒரு பதிலால் மனம் சமாதானமடைய மறுக்கிறது. எனக்கென்ன என்றும் பேசாமல் என் வழியைப் பார்த்துக் கொண்டும் போகமுடியவில்லை. இத்தனை நாட்களாய் இல்லாமல் இன்று ஏன் இப்படி என்ற கேள்வியை மறக்கவோ மறுக்கவோ மனம் தயாராக இல்லையே; நானென்ன செய்வது?

இதில் என்ன விசேஷம் என்றால் இந்த நேரத்தில் மக்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் சொல்லி வைத்துக் கொண்டு அமைதி காப்பதாகத்தான் படுகிறது. இது யாரோ ஓரிருவர் செய்யும் வேலையாகக் கூட இருக்கலாம். அவர்களே ஒரு குழுவாகச் செயல்படுகிறார்களோ என்ற ஐயம் கூட எனக்கு. ஆனால் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவோ, குற்றம் சாட்டவோ நான் தயாரில்லை. இதை ஒரு பொது விஷயமாக, நம் பதிவுலகத்தின் பொதுக் குறையாகவே நான் பார்க்கிறேன். எனக்கு யார் மீதும் தனிப்பட்ட வருத்தமோ சந்தேகமோ இல்லைதான். இருந்தாலும் இதை எல்லோரும் கண்டுகொள்ளாமல் இருப்பதுபோல் என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை.

பூனைக்கு யாராவது ஒருவர் மணி கட்டவேண்டுமே; கட்டியாக வேண்டுமே. இல்லாவிட்டால் இதே ஒரு தொடர்கதையானால் நாளைய பதிவுலகம் நம் எல்லோரையுமே எள்ளி நகையாடாதா? குறை சொல்லாதா? அப்போது நாம் என்ன பதில் சொல்ல முடியும்? நம் முகத்தை எங்கே போய் வைத்துக் கொள்ள முடியும்? இந்தக் கவலையின் உந்துதலாலே இதை இப்போது உங்கள் எல்லோர் முன்னும் பொதுவாக வைக்கிறேன். மனம் திறந்து இதைப் பற்றி யோசியுங்கள். நாம் எல்லோரும் இதைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு கால கட்டத்தில் நிற்கிறோம். ஒரு கால கட்டாயத்திலும் இருக்கிறோம்.

நடந்தது நடந்து விட்டது; இனி நடப்பதாவது நல்லதாக இருக்கட்டும் என்பார்கள்; நானும் அந்த எண்ணத்தில்தான் என் தனிப்பட்ட மனக்குமுறலை, மன அழுத்தத்தை, மனப் பாரத்தை உங்கள் எல்லோர் முன்னும் இறக்கி வைக்க நினைக்கிறேன். நீங்களே நினைத்துப் பாருங்கள்; உங்கள் மனசாட்சிக்கு முன் நான் வைக்கும் கேள்வியை நினைத்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும். எப்படி இது நடந்தது; இனி இதுபோல் நடக்கலாமா? என்று நீங்களே உங்கள் உள்மனத்தினை சோதித்துப்(introspect) பாருங்கள்.

நீங்கள் தரும் பதில் எதுவாயினும் இருக்கட்டும். ஆனால் அது நியாயமான பதிலாக, எல்லாவற்றையும் அளந்து பார்த்து தரும் பதிலாக இருக்கட்டும். அதோடு நீங்கள் தரும் பதில் இனி நம் பதிவுலகத்தை வழி நடத்தக் கூடிய பதிலாக இருக்கட்டும். ஆகவே பொறுமையோடும், நல்ல தெளிந்த சிந்தனையோடும், நடு நிலையோடும், நாம் தரும் இந்தப் பதில் பதிவுலகத்தின் வரலாற்றில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய ஒரு காரியம் என்பதை மனத்தில் ஆழத்தில் இருத்திக் கொண்டு பதில் தாருங்கள். PLEASE!

தீபாவளியும் வந்து இதோ முடிந்துகொண்டிருக்கிறது.எத்தனை எத்தனை படங்கள் வெளியாயிருக்கும். ஆனாலும் இன்னும் எந்த ஒரு படத்திற்கும்கூட விமர்சனப் பதிவுகள் ஏதும் தமிழ்மணத்தில் ஏன் இன்னும் வெளியாகவில்லை? ஏன்? ஏன்? என்னாயிற்று? பதிவர்களே சிந்தித்துப் பாருங்கள். ஏனிந்த மெளனம்? படம் வெளியாவதற்கு முன்பேகூட விமர்சனம் எழுதும் பதிவர்கள் இருப்பார்களே அவர்களுக்கெல்லாம் என்னாயிற்று? சுடச் சுட விமர்சனம் என்றெல்லாம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் பதிவர்கள் நிறைந்த இந்தப் பதிவுலகத்தின் இந்த மெளனத்தின் பின்னணி என்ன? இந்தப் பின்னடைவுக்கு நாமெல்லோரும் பொறுப்பேற்க வேண்டாமா? நடந்த தவறுக்கு வருந்த வேண்டாமா? நடந்த தவறைத் திருத்த வேண்டாமா? சொல்லுங்கள் பதிவர்களே, சொல்லுங்கள் .... :(

Sunday, October 26, 2008

270. யெஸ்.பாலபாரதி & லிவிங் ஸ்மைல் வித்யா

*

மதுரையில் MADURAI READERS' CLUB (MRC) என்றொரு அமைப்பிருக்கிறது. மாதமிருமுறை கூடுகிறோம். உறுப்பினரல்லாத ஒருவரை ஒவ்வொரு கூட்டத்திற்கும் அவரவர் துறையில் ஒரு மணி நேர அளவிற்குப் பேச அழைக்கிறோம். அதன்பின் உறுப்பினர்களில் ஒருவரோ இருவரோ அவர்களில் சமீபத்தில் வாசித்த நூல்களைப் பற்றி ஒரு அறிமுகம் அளிக்கவேண்டும்.

இன்று 26-10-'08 நடந்த கூட்டத்தில் யெஸ்.பாலபாரதி எழுதியுள்ள "அவன் - அது = அவள்" என்ற நூலையும், லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய "நான் சரவணன் வித்யா" என்ற நூலையும் அறிமுகம் செய்தேன். பலருக்கும் அது ஒரு புதிய செய்தியாக இருந்ததாகக் கூட்டம் முடிந்தபின் அறிய முடிந்தது. பேச்சு அதன் அடக்கப் பொருளுக்காகப் பாராட்டப் பட்டது. எனக்கும் நிறைவாயிருந்தது.

நூலின் ஆசிரியர்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும் ...


பேசி முடிக்கும்போது பதிவுலகத்தைப் பற்றியும் கூறினேன். அதைப் பற்றித் தெரியாதவர்களும் இருந்தார்கள். அப்போது ஒருவர் பதிவுலகத்தைத் தங்களுக்குப் போட்டியாக நினைப்பதால் அச்சு ஊடகங்கள் பதிவுலகை வேண்டுமென்றே இருட்டடிப்பு - underplay - செய்ய முயற்சிப்பதாகக் கூறினார். தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் இப்போதைக்கு நான்கைந்து பதிவர்கள் மட்டுமே இருக்கிறோம்; அதிலும் இவர்களில் நண்பர் சீனா மட்டுமே நன்கு இயங்கி வருகிறார்; மதுரையின் மானம் காக்க (!!) இன்னும் நிறைய பதிவர்கள் வரவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டேன்! :)



*

*