Showing posts with label ”பண்புடன்”. Show all posts
Showing posts with label ”பண்புடன்”. Show all posts

Tuesday, March 06, 2012

556. பண்புடன் இணைய இதழில் என் மொழியாக்கச் சிறுகதை:




*

By panbudan - Posted on 29 February 2012



தருமி

பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற, இவர் பிரபலமான வலைப்பதிவரும் கூட, முகம்மது உமரின் பிரபலமான அமினா நாவலை தமிழுக்குத் தந்தவர். அந்த மொழிபெயர்ப்புக்காகவே திசை எட்டும் விருதும், தமுஎகச விருதும் பெற்றவர். இப்போது மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளார்
--------------------------



முன்குறிப்பு:

ஆசிரியரின் முழுப் பெயர் - CHEKHOV ANTON PAULOVICH (1860 - 1904). டால்ஸ்டாய், கார்க்கி போன்ற பெரும் எழுத்தாளர்களின் உற்ற நண்பர்; சமூகப் பிரச்சனைகளே இவரது கதைகளுக்குப் பின்புலமாக அமைந்தன. இதனால் இவரின் பல கதைகளில் சோகமும், மனமுறிவுகளும், மோனமும் இழையோடும். இக்கதையின் பேசுபடு பொருளான தனி மனித மனோவியலும், கதையின் முடிவும் மிகவும் வித்தியாசமானவை.

                                                                ---------------------------





து ஒரு பனிக்காலத்தின் பின்னிரவு. அந்த வயதான வங்கியாளர் தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாகக் குழப்பத்தோடு நடந்து கொண்டிருந்தார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு பனிக்காலத்தில் அவர் அளித்த விருந்து ஒன்று அவர் மனதில் நிழலாடிக்கொண்டிருந்தது. நிறைய அறிவு ஜீவிகள் கலந்து கொண்ட விருந்து அது. எதையெதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சு இறுதியில் தூக்குத் தண்டனை பற்றி வந்து நின்றது. ஒரு சில இதழியல் நண்பர்களும், இன்னும் சில அறிவாளிகளையும் தவிர மற்ற எல்லோருமே ஒட்டு மொத்தமாக தூக்குத் தண்டனையை எதிர்த்தார்கள். பழங்காலத்து முரட்டுப் பழக்கம் அது; ஒரு கிறித்துவ நாட்டில் இப்படி ஒரு தண்டனையா?; மனிதப் பண்பாட்டிற்கு எதிரானது ... இப்படிப் பல எதிர்ப்புகள். அதிலும், சிலர் உலகம் முழுமைக்குமே தூக்குத் தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை மட்டுமே செல்லும் என்று ஒரு வழக்கம், சட்டம் வரவேண்டும் என்று வற்புறுத்தினர்.

விருந்து கொடுத்த வங்கியாளரோ இதற்கு மறுப்பு கூறினார்: "தூக்குத் தண்டனையோ ஆயுள் தண்டனையோ ... எந்த அனுபவமும் எனக்கில்லை. இருந்தும் என்னுடைய மதிப்பீட்டில் தூக்குத் தண்டனையே மிகவும் சரியான தீர்ப்பாகத் தெரிகிறது. ஆயுள் தண்டனையை விட எல்லா விதத்திலும் மேலானது; உயர்வானது. தூக்குத் தண்டனை குற்றவாளிக்கு மரணம் உடனே நடந்து முடிந்து விடுகிறது. ஆனால் ஆயுள் தண்டனை கொஞ்சம் கொஞ்சமாக குற்றவாளியைக் கொல்கிறது. சில வினாடிகளில் உங்களைக் கொல்வது நல்லதா? .. இல்லை அணு அணுவாக உங்களை மெல்லக் கொல்வது சரியா? எதில் மனிதத் தன்மை அதிகம்?"

"இரண்டுமே எனக்குப் பண்பாடானதாகத் தோன்றவில்லை" என்றார் ஒரு விருந்தினர். "ஏனெனில், இரண்டிலுமே உங்கள் வாழ்க்கை உங்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. அரசு என்ன பெரிய கடவுளா? வாழ்க்கையை எடுக்க முடியும். ஆனால் அந்த அரசினால் அதைத் திருப்பித் தரமுடியுமா? அப்படித் திருப்பித் தர முடியாததை எப்படி அவர்கள் இஷ்டத்திற்கு பிடுங்கலாம்?"

அந்தக் குழுவில் ஒரு இளம் வழக்கறிஞரும் இருந்தார். வயது இருபத்தி ஐந்திற்குள் தானிருக்கும். அவரது கருத்தைக் கேட்டதும், அவர் "தூக்குத் தண்டனையோ ஆயுள் தண்டனையோ ... இரண்டுமே என்னைப் பொறுத்தவரை தவறானவை. ஆனால் இந்த இரண்டில் ஒன்று என்று என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், நான் இரண்டாவதைத்தான் தேர்ந்தெடுப்பேன். வாழாமலே மாய்ந்து போவதை விடவும், ஏதோ ஒரு வகையில் எப்படியோ வாழ்வது பெரிதுதானே..!"

வங்கியாளருக்கு தன் கருத்துக்கு எதிர்கருத்தாக வந்த விவாதம் மிகக் கோபத்தைத் தந்தது. முன்னால் இருந்த மேசை மேல் ஓங்கித் தட்டியவராக அந்த இளம் வழக்கறிஞரைப் பார்த்துக் கத்தினார்: "நீங்கள் சொல்வது சுத்தப் பொய்; இருபது லட்சம் தருகிறேன்... வெறும் ஐந்தே ஐந்து வருஷம் ... ஒரு தனிமைச் சிறையில் உங்களால் இருக்க முடியுமா?"

"நீங்கள் இத்தனை தீவிரமாக இதைப் பேசுவதால் அதே தீவிரத்தோடு நானும் சொல்வேன். இருபது லட்சம் கொடுத்தால் ஐந்து என்ன ..பதினைந்து வருஷம் தனிமைச் சிறையில் இருக்க நான் தயார்" என்றார் அந்த இளம் வழக்கறிஞர்.

"பதினைந்து வருஷம்! சரி .. நானும் ஒத்துக் கொள்கிறேன். நண்பர்களே! நான் இருபது லட்சம் பணயமாக வைக்கிறேன்" என்று வங்கியாளர் கத்தினார்.

"நானும் இந்த ஒப்பந்தத்தை ஒத்துக் கொள்கிறேன். நீங்கள் பணயமாக வைப்பது இருபது லட்சம்; நான் பணயமாக வைப்பது என் “சுதந்திரம்".

மூர்க்கத்தனமான இந்த பந்தயம் உறுதியாயிற்று. வங்கியாளருக்கு இந்த இருபது லட்சம் என்பது பெரிய விஷயமல்ல; பணத்தில் புரள்பவர்; நினைத்ததைச் செய்பவர்; பல லட்சங்களை உருட்டி விளையாடுபவர். விருந்து தொடர்ந்து நடக்கும்போது பக்கத்திலிருந்த இளைய வழக்கறிஞரிடம் சிரித்துக் கொண்டே, "இளைஞனே! கொஞ்சம் புத்திசாலியாயிருங்கள். காலந்தாழ்த்தியாவது திருந்திக்கொள்ளுங்கள்.இருபது லட்சம் எனக்குப் பெரிதல்ல. ஆனால் உங்கள் வாழ்க்கையில் நல்ல நாலைந்து ஆண்டுகளை இழக்கப் போகிறீர்கள். ஏன் நாலைந்து ஆண்டுகள் என்று மட்டும் சொல்கிறேனென்றால் அந்த நாலைந்து ஆண்டுகளுக்கு மேல் உங்களால் இந்தப் போட்டியில் நிலைத்து நிற்க முடியாது. அதோடு இன்னொன்றையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் - தானாக வலிந்து நீங்கள் ஏற்றுக்கொள்ளும் இந்த தண்டனை பிறரால் உங்கள் மேல் ஏற்றப்படுவதை விடவும் மிகக் கடினமானதாக, கசப்பானதாக இருக்கும். எந்த நிமிஷத்திலும் வெளியே வந்து இந்தப் பந்தயத்தை முறித்துக் கொள்ளலாம் என்பதாலேயே இந்தச் சிறை வாழ்க்கை மிக மிகக் கடினமானதாக இருக்கும். வாழ்க்கையே கசப்பான ஒரு சிறைக்குள் நீங்கள் அடைத்துக் கொள்வதைப் பார்க்கும்போது உங்களைப் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது".

வங்கியாளர் பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அன்று நடந்த நிகழ்வு ஒவ்வொன்றையும் நினைவு படுத்திக் கொண்டார். கால்கள் அவரது அறையை அங்குமிங்குமாய் அளந்து கொண்டிருந்தன. ஆனால், அவரது நினைவுகள் அன்றைய நிகழ்வுகளை ஆழமாக அசை போட்டுக் கொண்டிருந்தன.

"எதற்காக இப்படி ஒரு பந்தயத்திற்குள் தலையை விட்டேன்! இதனால் எனக்கு என்ன லாபம்? அந்த பந்தயத்தால் ஆயுள் தண்டனை சிறந்ததா தூக்குத் தண்டனை சிறந்ததா என்று மக்களை உணர வைக்கப் போகிறதா? இல்லை .. இல்லவே இல்லை .. எல்லாம் சுத்த வெட்டித் தனம். பந்தயம் வைத்த அந்த நாள் என்னைப் பொறுத்த வரை ஒரு வீம்பு பிடித்த, மனம்போல் நடக்கும் ஒரு பணக்காரனின் வெட்டிப்பந்தயம், அந்த வழக்கறிஞனுக்கோ என் காசு மேல் கண்!"

மீண்டும் பழைய நினைவுகளுக்குள் மூழ்கிப் போனார் வங்கியாளர். அந்தப் பந்தயம் உறுதியானதும் மற்றைய அனைத்து ஏற்பாடுகளும் உறுதியாக்கப்பட்டன. வழக்கறிஞருக்கு மிகக் கடுமையான சட்ட திட்டங்களுக்கு உட்படுத்தப்பட்ட சிறை. வங்கியாளரின் வீட்டில் இருந்த தோட்டத்து அறையே கடுஞ்சிறையாகும். பந்தயக் காலமான பதினைந்து ஆண்டுகளும் வழக்கறிஞர் அந்த வீட்டின் வாசலைத் தாண்டவோ வேறு மனிதக் குரலைக் கேட்கவோ, கடிதங்கள், செய்தியிதழ்கள் வாசிக்கவோ முடியாது. ஏதாவது ஒரு இசைக் கருவி வாசிக்க, நூல்கள் வாசிக்க, கடிதங்கள் எழுத, மதுபானம் அருந்த, புகை பிடிக்க அனுமதியுண்டு. வெளியுலகோடான தொடர்பு கொள்ள ஒரு சின்ன ஜன்னலிருக்கும். அது வழியே எழுத்து மூலமாகத் தன் தேவைகளை வெளியுலகிற்கு அனுப்பலாம். புத்தகம், இசை, மது - இவைகள் எவ்வளவு வேண்டுமானாலும் ஜன்னல் வழியே சிறு குறிப்புகள் மூலம் அவர் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு சின்ன விஷயமும் கூட மிகத் திருத்தமாக முதலிலேயே திட்டமிடப்பட்டது. பதினைந்து ஆண்டுகள் அவர் தனிமைப்படுத்தப் படுவார். 1870-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி பன்னிரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் இந்தப் பந்தயம் 1885-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி பன்னிரண்டு மணிக்கு முடிவடையும். சரியாக இந்த நேரத்திற்கு இரு நிமிடங்களுக்கு முன்பே வெளியே வழக்கறிஞர் வந்தாலும், வங்கியாளர் பணம் எதுவும் தரவேண்டியதில்லை. இருபது லட்சம் வங்கியாளருக்கே என்று ஒப்பந்தமிடப்பட்டது.

பந்தயம் ஆரம்பித்தது. முதல் ஆண்டில் வழக்கறிஞர் அனுப்பிய சீட்டுகளிலிருந்து அவர் தனிமையின் தீவிரமும், அதனாலான தவிப்பும் தெரிந்தன. இரவும் பகலும் அவரது அறையிலிருந்து பியானோவின் இசை வெளியே கசிந்தது. மது, புகை இரண்டும் அவரால் கேட்கப்படவேயில்லை. சீட்டு ஒன்றில், "மது ஆசையை வளர்க்கிறது; ஆசைகள் ஒரு சிறைக் கைதியின் முதல் எதிரி; அதுவும் நல்ல ஒயினை தனியாக அமர்ந்து அருந்துவது அயர்ச்சியை மட்டுமே தரும். புகையோ அறையின் மூச்சுக் காற்றையே அசுத்தமாக்கி விடும்" என்று எழுதியிருந்தார். முதல் ஆண்டு முழுவதும் வழக்கறிஞர் கேட்ட நூல்கள் மிக எளிதானவைகளே - காதல், மர்மங்கள், கற்பனைகள், நகைச் சுவைகள் - இப்படிப்பட்ட கதைகளே அவரால் கேட்கப்பட்டன.

இரண்டாவது ஆண்டு - பியானோ அமைதியாகி விட்டிருந்தது. வழக்கறிஞர் இப்போது கேட்ட நூல்கள் யாவும் பெரும் இலக்கியங்கள் தான். ஐந்தாவது வருடம் மறுபடியும் பியானோ ஒலிக்க ஆரம்பித்தது. மதுவும் கேட்கப்பட்டது. அவரது வாழ்க்கையை உன்னிப்பாகப் பார்த்தவர்களுக்கு வழக்கறிஞர் இந்த ஆண்டு முழுவதும் குடிக்க, உண்ண, தூங்க மட்டுமே செய்கிறார் எனப் புரிந்தது. தொடர்ந்த கொட்டாவிகள் .. தனக்குத் தானே கோபமாகப் பேசிக்கொள்ளுதல் .. என்று காலம் போனது. வாசிப்பு அறவே இல்லாது போயிற்று. சில நாட்களில் இரவு முழுக்க முனைந்து எழுதிக் கொண்டிருந்தார். இரவு முழுக்க எழுதியதைக் காலையில் எழுந்ததும் கிழித்துப் போட்டார். பல நேரங்களில் அவரின் அழுகைக் குரல் வெளியே வரை கேட்டது.

ஆறுவது ஆண்டின் இரண்டாம் பகுதியில், பல மொழிகள் கற்கும் ஆவலுண்டானது. அதனோடு வரலாறு, தத்துவம் இவைகளையும் கற்க ஆரம்பித்தார். இவைகளைக் கற்க ஆரம்பித்த போது, அவரது ஆர்வத்தை நிறைவேற்ற வங்கியாளர் மிகுந்த சிரமப்பட்டார். அத்தனை நூல்கள் ... அத்தனை வேகம் ...! நான்கு ஆண்டுகளில் மட்டும் 600 புத்தகங்களை வங்கியாளர் வாங்கிக் கொடுக்க வேண்டியதாயிற்று. இந்தத் தீவிரம் உயர் நிலையிலிருந்த போது வழக்கறிஞரிடமிருந்து ஒரு சீட்டு வங்கியாளருக்கு வந்தது.

"எனதருமை சிறையதிகாரியே! இந்தக் கடிதத்தை நான் ஆறு மொழிகளில் எழுதியுள்ளேன். இவைகளை மொழி வல்லுனர்களிடம் கொடுங்கள். அவர்கள் அதை வாசிக்கட்டும். அவர்கள் தவறு ஏதும் அவைகளில் கண்டுபிடிக்காவிட்டால், தோட்டத்தில் ஒரு துப்பாக்கி வெடிச் சத்தம் எழுப்புங்கள். நான் என் முயற்சியில் முழு வெற்றி பெற்று விட்டேன் என்பதைப் புரிந்து கொள்வேன்".

"வித்தகர்கள் பலரும் பல மொழிகளில் எழுதுகிறார்கள். மொழிகள் வேறாக இருந்தாலும் கருத்துக்கள் ஒன்றே. இப்போதைய எனது மிக்க உன்னதமான மகிழ்ச்சிகரமான நிமிடங்களை நீங்கள் தெரிந்து கொண்டால் இதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்".

வழக்கறிஞரின் விருப்பம் நிறைவேற்றப்பட்டது .. ஒன்றல்ல .. இரண்டு குண்டுகள் தோட்டத்திலிருந்து சுடப்பட்டன!

பத்து ஆண்டுகள் கழிந்தன.

இப்போது வழக்கறிஞர் தன் மேசையருகே அமர்ந்து அமைதியாக பைபிளின் புதிய ஏற்பாட்டை வாசித்துக் கொண்டிருந்தார். வங்கியாளருக்கு இது மிக ஆச்சரியத்தைக் கொடுத்தது. நான்கு ஆண்டுகளில் 600 நூல்களைக் கற்றறிந்தவர். ஆனால் இப்போது ஒரு வருடம் முழுமைக்கும் மிக எளிமையான, சின்னதான ஒரு நூலை எப்படி தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறார் என் வியந்தார். இந்த நூலை வாசித்த பின் மதங்களின் வரலாறு, இறையியல் என வாசிக்க ஆரம்பித்தார்.

கடைசி இரு ஆண்டுகளில் அவரின் வாசிப்பு மிகவும் வேறுபட்டு இருந்தது. நிறைய வாசித்தார் ... வாசித்தவையும் பல்வேறு துறை தொடர்பானவை. முதலில் உயிரியல் .. பின் பைரனும் ஷேக்ஸ்பியரும் ... அவரிடமிருந்து வரும் சீட்டில் வேதியல் நூலும் இருக்கும்; அதோடு மருத்துவ நூல், மர்மக்கதைத் தொகுப்புகள், தத்துவம், இறையியல் தொடர்பானவை என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஏதோ ஒரு பெருங்கடலுக்குள் - பல்வேறு உடைந்த பாகங்கள் மிதக்கும் நீருக்குள் - ஏதாவது ஒன்றைப் பற்றி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் அதிலிருந்தது.

வங்கியாரின் சிந்தனைகள் தொடர்ந்து, அந்த முழு பதினைந்து ஆண்டு கால நிகழ்வுகளை மனதிற்குள் ஓட்டிப் பார்த்தன. "நாளை பந்தயம் முடிவிற்கு வருகிறது. நாளை 12 மணிக்கு வழக்கறிஞர் சுதந்திரமாகி விடுவார். நான் இருபது லட்சம் கொடுக்க வேண்டும். அப்படி பணத்தை எப்படியாவது பிரட்டிப் போட்டுக் கொடுத்தால் அதோடு என் வாழ்க்கையே அவ்வளவு தான் ... முழுவதுமாக அழிந்தே போய்விடுவேன்...".

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கை நிறைய பணம் .. எத்தனையோ லட்சங்கள் .. கோடிகள் ... ஆனால் இப்போதோ கடன் மயம்தான். பங்குச் சந்தையின் சூதாட்டங்கள், கண்மூடித்தனமான கணிப்புகள், கவனமின்மை, முதுமை ... எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அவரது தொழிலை முழுவதுமாக ஆட்டியெடுத்து விட்டன. கவலையற்று, தன்னமிபிக்கையோடுமிருந்த அந்த மனிதர் இப்போது ஒரு வெகு சாதாரண வங்கியாளராக, பங்குச் சந்தையின் ஒவ்வொரு சின்ன அசைவிற்கும் ஆடிப் போகுமளவிற்கு மாறி விட்டார்.

"முட்டாள்தனமான பந்தயம்.." தன் தலையைப் பிடித்துக் கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டார். "இந்த மனுஷன் ஏன் செத்துத் தொலக்கவில்லை? வெறும் நாற்பது வயதுதான் இந்த மனிதனுக்கு. வெளியே வந்ததும் என் கடைசிப் பைசாவும் அவரிடம் போய்விடும். இனி இந்த மனிதன் திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து, பங்குச் சந்தைகளின் சூதாட்டத்தில் திளைத்து விடுவான். நான் அவனைப் பார்த்து ஏங்கும் பிச்சைக்காரன் போல் நிற்க வேண்டும். யார் கண்டது .. நாளையே அவன் என்னிடம், "எனது இந்த இனிய வாழ்க்கைக்கு நீதான் காரணம். உனக்கு நான் கட்டாயம் ஏதாவது உதவி செய்ய வேண்டும்" என்றும் சொல்லலாம்! ம்ம் .. ம்.. இது அதிகம் .. அப்படியெல்லாம் நடக்கக் கூடாது. நான் ஓட்டாண்டியாவது, மரியாதையை இழப்பது .. இவைகளிலிருந்து தப்பிக்க ஒரே வழி - இந்த மனிதன் சாக வேண்டும்.

இருண்ட இரவு. கடிகாரம் மூன்று மணியடித்தது.

வங்கியாளர் மிக உன்னிப்பாகக் கவனித்தார். வீட்டில் அனைவரும் நல்ல உறக்கத்திலிருந்தார்கள். ஜன்னல் வழியே உறைந்து நின்றிருந்த மரங்களின் அசைவுச் சத்தம் மிக மெல்லியதாகக் கேட்டது. எந்த விதச் சத்தமும் இன்றி 15 ஆண்டுகளாகத் திறக்காமலிருந்த தோட்ட வீட்டின் சாவியை இருப்புப் பெட்டியிலிருந்து பத்திரமாக வெளியே எடுத்தார். மேல் கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டு வீட்டு விட்டு வெளியே வந்தார். தோட்டம் மிகவும் இருளடர்ந்திருந்தது. மெல்லியதாக மழை பெய்து கொண்டிருந்தது. குளிர்ந்து ஊடுருவும் காற்று மரங்களை வெறுமனே இருக்க விடாது அசைத்துக் கொண்டிருந்தன. வங்கியாளரின் கண்களுக்குத் தோட்டமோ, அங்கங்கே இருந்த வெண்ணிறச் சிலைகளோ, மரங்களோ .. எதுவுமே தெரியவில்லை. தோட்ட வீட்டின் அருகே வந்து தோட்டக்காரன் பெயரைச் சொல்லி இரு முறை மெல்ல அழைத்தார். பதிலேதுமில்லை. குளிருக்கும், மழைக்கும் பயந்து அவன் சமையலறையிலோ வேறெங்கோ படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பான். நான் செய்ய நினைப்பதைச் செய்து முடித்து விட்டால், எல்லோருக்கும் முதல் சந்தேகம் தோட்டக்காரன் மேல்தான் வரும் என்று நினைத்துக் கொண்டார்.

இரவில் தட்டுத் தடுமாறி நடந்து, தோட்ட வீட்டிற்குப் போய் இருகி மூடிப்போயிருந்த கதவைக் கஷ்டப்பட்டுத் திறந்து மெல்ல உள்ளே நுழைந்தார். குறுகிய பாதை .. நல்ல இருட்டு .. ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்தார். எங்கும் அரவம் ஏதுமில்லை. நிசப்தம் .. ஒரு படுக்கை .. காலியாகக் கிடந்தது. உடைகள் எல்லாம் அந்தக் கட்டிலின் மீது கிடந்தன. இரும்பு அடுப்பு ஒன்று அங்கு ஓர் ஓரத்தில் இருந்தது. அங்கிருந்து பார்த்த போது 'கைதி'யின் அறை மூடி, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வைத்த சீல் உடைக்கப்படாமல் இருந்தது தெரிந்தது.

பற்ற வைத்த தீக்குச்சி அணைந்தது. வயதான வங்கியாளருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. மெல்ல 'கைதி'யின் அறைப்பக்கம் சென்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். கைதியின் அறைக்குள் பெழுகுவர்த்தியின் மெல்லிய ஒளி மங்கலாகப் பரவியிருந்தது. கைதி நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தார். தலை, முதுகு, கைகள் இவைகள் மட்டுமே வங்கியாளருக்குத் தெரிந்தன. விரிந்து கிடந்த பல புத்தகங்கள் மேசை, நாற்காலி, கம்பளம் என்று எல்லாவிடத்திலும் விரவிக் கிடந்தன. வங்கியாளர் ஜன்னல் வழியே தன் கைதியைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஐந்து நிமிடங்களாயிற்று. ஆனால் கைதியின் உடம்பில் எந்த மாற்றமுமில்லை. 15 ஆண்டின் தனிமைச் சிறை எந்த வித அசைவுமின்றி அவரை அப்படியே இருக்கக் கற்றுக் கொடுத்திருந்தது போலும்!

வங்கியாளர் மெல்ல ஜன்னலின் கண்ணாடி மேல் மெல்லத் தட்டினார். கைதியிடமிருந்து எந்த மாற்றமுமில்லை. வங்கியாளர் மெல்ல பூட்டின் மேலிருந்த சீல்களை மெல்லப் பிரிந்து, சாவியை கதவினுள் நுழைத்தார். இப்போதும் கைதியிடம் எந்த மாற்றமுமில்லை. மெல்லக் கதவைத் திறந்தார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பூட்டிய கதவின் பூட்டு ... கடிதாயிருந்தது. திறந்த கதவு கிறீச்சிட்டது. வங்கியாளர் ஆச்சரியமான ஒரு கத்தலையும், தன்னை நோக்கி ஓடிவரும் கைதியின் காலடி ஓசையையும் எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மூன்று நீண்ட நிமிடங்கள் .. மெளனமாகக் கழிந்தன. முன்பு போலவே இப்போதும் மெளனம் தொடர்ந்தது. வங்கியாளர் துணிந்து அறைக்குள் நுழைந்தார்.

மேசையின் முன்னால் அந்த மனிதன். ஆனாலும் பின்னாலிலிருந்து அவனைப் பார்க்க சாதாரண மனிதனாகத் தெரியவில்லை. வெறும் எலும்புக் கூடு; தோல்கள் வற்றி ஒட்டிப் போயிருந்தது. பெண்ணின் முடி போல் முடி நீண்டு வளர்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. நீண்ட, கரடு முரடான தாடி. முகமெல்லாம் ஓளி படராது மஞ்சள் பூத்துக் காய்ந்திருந்தது. கன்னங்கள் ஒட்டிக் குழிந்து போயிருந்தன. தன் தலையைக் கைகளில் தாங்கிப் பிடித்தவாறு இருந்ததைப் பார்க்கும்போதே வேதனையே மீதியாயிருந்தது. முடியெல்லாம் கருமையிழந்து வெளிறிப் போய் கிடந்தது. முதுமையடைந்து சோர்ந்திருந்த அந்த மனிதனைப் பார்க்கும் யாரும் அவருக்கு வயது வெறும் நாற்பதுதான் என்றால் நம்பவே மாட்டார்கள். மேசையில், குனிந்திருந்த முகத்திற்கு எதிர்த்தாற்போல், கைகளுக்கருகே ஒரு தாள் மெலிதாக ஆடிக் கொண்டிருந்தது. மெல்லிய சின்ன எழுத்துகளால் நிறைந்திருந்தது. 'பாவப்பட்ட மனுஷன்'. நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். எத்தனை .. எத்தனை கனவுகளோ? இவனை இப்படியே தூக்கிக் கொண்டு போய், கட்டிலில் கிடத்தி, தலையணையை வைத்து அழித்துக் கொன்றால் யாருக்கு என்ன வித்தியாசம் தெரியும்? இயற்கையான சாவு என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். எதற்கும் அதற்கு முன்பு அவன் எழுதியுள்ள கடிதத்தைப் படித்துப் பார்ப்போம் என்று வங்கியாளர் கடிதத்தை மெல்ல எடுத்தார். கைதியிடமிருந்து எந்த அசைவும் இல்லை. வங்கியாளர் கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தார்.

நாளை ... இரவு 12 மணி .. எனக்கு என் விடுதலை கிடைத்து விடும். மக்களோடு மக்களாய் பழக முடியும். ஆனாலும் இந்த அறையை விட்டு வெளியேறி, உதயமாகும் சூரியனைப் பார்ப்பதற்கு முன் உன்னிடம் ஒன்று சொல்ல ஆசை. என் முழு மனதோடும், உணர்வோடும் என்னைத் தொடர்ந்து கண்காணித்து வரும் கடவுளின் சாட்சியோடு நான் சொல்ல விரும்புவது ... நல்லூழ் என்றெல்லாம் உங்கள் புத்தகங்கள் எல்லாம் விளிக்கும் சுதந்திரம், வாழ்க்கை, உடல் நலம் போன்ற எதுவும் இப்போது எனக்குப் பெரிதில்லை.

பதினைந்து ஆண்டுகள் வாழ்க்கையை, உலக வாழ்வை ஆழ்ந்து படித்து விட்டேன். நான் பதினைந்து ஆண்டுகளும் உலகத்தைப் பார்க்கவில்லை; மக்களுடன் பழகவில்லை. ஆனால் நீங்கள் கொடுத்த புத்தகங்கள் மூலம் இனிமையான ஒயினை ருசித்தேன்; பாடல்களைப் பாடினேன்; காட்டில் திரியும் மானையும் மாட்டையும் வேட்டையாடினேன்; பெண்களைக் காதலித்தேன் ... அதுவும், மிக அழகான பெண்கள் .. தெய்வீகப் பெண்கள் ..உங்கள் கவிஞர்களின் உன்னதக் கற்பனையில் படைக்கப்பட்ட பெண்கள் ... என்னிடம் இரவில் வந்து என் காதுகளில் அழகானவைகளை உச்சரிக்க, நானோ அதன் இன்பத் தலைச் சுற்றலில் மகிழ்ந்தேன். உங்கள் நூல்களின் வழியே நான் எல்ப்ரஸ், வெள்ளை மலை (Elbruz, Mount Blanc) போன்ற உயர்ந்த மலைகளின் சிகரங்களுக்கு ஏறிப் போனேன்; அங்கிருந்து உதயமாகும் சூரியனையும், மாலையில் மயங்கும் சூரியனையும் பார்த்துக் களித்தேன்; கடலும் மலைகளும் ஒளியில் சிலிர்த்துத் தெரிந்தன. அந்த மலை உச்சிகளில் என் தலைக்கு மேல் ஒளிர்ந்த மின்னல்களையும், விலகிப் போகும் மேகக்கூட்டங்களையும் ஆசைதீரப் பார்த்தேன்; பச்சைப் பசும் வயல், தோட்டங்கள், நதிகள், ஏரிகள், விரிந்து பரந்த நகரங்கள் எல்லாம் என் கண்முன் விரிந்தன. எங்கு எதிலும் இசை பொங்கிப் பெருகி வருவதைக் கேட்டேன். அழகான சைத்தான்கள் கடவுளுக்கு எதிராக என்னிடம் முணு முணுத்ததைக் கேட்டேன் ... உங்கள் நூல்கள் மூலம் அளவில்லாத ஆழத்தையும் பார்த்தேன்; விநோதங்கள் தெரிந்தன; எரிந்த நகரங்கள் .. புதிய மதங்கள் புதிய நிலங்களை வெல்வது .. இவைகளையும் கண்ணுற்றேன்."

"உங்கள் நூல்கள் எனக்கு அறிவை அளித்தன. அலைக்கழியும் மனித மனது ஆண்டாண்டு காலமாய் உருவாக்கி வைத்துள்ள அனைத்தும் என் மூளையில் பொதிந்து விட்டன. உங்கள் எல்லோரையும் விட இன்று நானே புத்திசாலி ..."

"உங்கள் நூல்களை நான் வெறுக்க ஆரம்பித்து விட்டேன். அதோடன்றி உங்கள் உலக அறிவு, ஆசாபாசங்கள் அனைத்தையும் வெறுக்கிறேன். எல்லாமே மாயை; அநித்தியம்; கண்ணில் விழுந்து மண்ணில் மறையும் விழல்கள்! நீங்கள் அறிவோடும் அழகோடும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் எல்லாம் ஒரு சுண்டெலி எளிதாகச் சாகடிக்கப்படுமே, அதேபோல் நீங்களும் அழிக்கப்படுவீர்கள். உங்களின் வலிமை, வரலாறு, உங்கள் அறிவின் அழிவின்மை ... எல்லாமே உறைந்து போய், உலர்ந்து போய், எரிந்து விடும்; உலகிலிருந்து மறைந்து விடும்."

"நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள். தவறான வழியில் செல்கிறீர்கள். பொய்யை மெய்யெனக் கருதி, அவலத்தை அழகென்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். ஆப்பிள் மரங்களும் ஆரஞ்சு மரங்களும் பழங்களுக்குப் பதில் வெறும் தவளைகளையும், ஓணான்களையும் காய்க்க ஆரம்பித்தால் ... ரோஜாப் பூக்களிடமிருந்து குதிரையின் அழுகிய வியர்வை நாற்றம் வந்தால் ... நீங்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள். இதைப் போலவே நானும் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். இதைப் போலவே, மோட்சத்திற்காக இந்த உலக வாழ்வைப் பணயம் வைத்த நான் உங்களைப் புரிந்து கொள்ள விரும்பவில்லை.

எனது இந்த எண்ணத்தை என் செயலிலும் காண்பிக்க விரும்புகிறேன். கையில் கிடைத்தால் பரவசம் என்று நான் நினைத்த இருபது லட்சத்தை இப்போது நான் விஷமென்று வெறுக்கிறேன். எந்தப் பணமும் எனக்கு வேண்டியதில்லை. அதற்கான என் உரிமையை நான் ரத்து செய்கிறேன். அதுவும் என் விடுதலைக்கான நேரத்திற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக நான் இந்த இடத்தை விட்டு வெளியேறி என் ஒப்பந்தத்தை முறித்து விடுவேன்”

வழக்கறிஞரின் கடிதத்தை வாசித்ததும், வங்கியாளர் அந்தக் கடிதத்தை மேசை மேல் வைத்து விட்டு, வழக்கறிஞரின் தலையில் குனிந்து முத்தமிட்டு ... விசும்பத் தொடங்கினார். அவருக்கு ஏதும் புரியவில்லை. வணிகச் சந்தையில் தன் தவறுகளால் பல முறை பணத்தை இழந்தபோதும் கூட அவர் தன்னை இந்த அளவு வெறுத்ததில்லை.

வங்கியாளர் வீட்டிற்குத் திரும்பினார். தன் படுக்கையில் சாய்ந்தார். அவரின் அழுகையில் பல மணி நேரங்கள் கழிந்து கரைந்தன.

அடுத்த நாள் காலை .. பொழுது விடிந்தது. தோட்டக்காரன் ஓடோடி வந்தான். ‘வீட்டிற்குள் இருந்த கைதி ஜன்னல் வழியே ஏறிக் குதித்து தப்பித்து விட்டான்’ என்றான். வங்கியாளர் தன் வேலையாட்களுடன் தோட்ட வீட்டிற்கு விரைந்து சென்று, கைதி தப்பியதை உறுதி செய்து கொண்டார். தேவையில்லாத குழப்பம் வரும் என்பதற்காக “கைதி” எழுதிய கடிதத்தைப் பத்திரமாக எடுத்து வந்து, தன் சேமிப்பறைக்குள் வைத்து பாதுகாப்பாகப் பூட்டினார்.




*

Thursday, February 02, 2012

548. "பண்புடன்" இதழில் என் கட்டுரை -- மாணவர்கள்



*
"பண்புடன்" இதழில் வெளிவந்த என் கட்டுரை ...




*
37 ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக இருந்து, இன்று அந்த நீண்ட நாட்களைத் திரும்பிப் பார்க்கிறேன். ஆசிரியராகவே ஆக வேண்டும் என்று நினைத்து அதனாலேயே ஆசிரியனாகவில்லை. தந்தை ஒரு ஆசிரியர். நான் படிக்கும்போது எவ்வித முனைப்புமின்றி, குறிக்கோளின்றி படித்தேன். படித்ததும், அது என்னவோ தெரியவில்லை, எந்த வேறு வேலைக்கும் முயற்சிக்காமல் கல்லூரி ஆசிரியர் வேலைக்கு மட்டுமே முயற்சித்தேன். படித்த கல்லூரியிலேயே என் பேராசிரியர் வேலை பார்க்க அழைத்தார். அது எனக்கு அப்போது பிடிக்கவில்லை. இருந்தும் அவர் சொல்கிறாரே என்று விண்ணப்பமிட்டேன். வேலை கிடைக்கவில்லை. என்னைவிட என் பேராசிரியருக்கு வருத்தம். இன்னொரு பேராசிரியர் என்னை சென்னைக்கு ஆராய்ச்சி மாணவனாகக் கூப்பிட்டார். எனக்கு இரண்டாவதுதான் பிடித்தது. ஆனால் வேலைக்குப் போகவேண்டுமென்ற கட்டாயம் இருந்ததால் ஆராய்ச்சி இரு ஆண்டுகளுக்குத் தள்ளி வைப்பதாக எண்ணி, விரிவுரையாளர் வேலைக்கு முயற்சித்தேன். எப்படியாவது மதுரையிலிருந்து குறைந்தது 100 கி.மீ. தாண்டி வேலை வேண்டுமென்று நினைத்திருந்தேன். அதே போல் ஐந்தாறு மாதங்கள் கழித்து தஞ்சையில் வேலை கிடைத்தது. அதுவும் அப்போதெல்லாம் முதுகலை படித்திருந்தால் நேரே விரிவுரையாளராகலாம்; அல்லது இன்னொரு சித்தாள் வேலை - demonstrator / tutor - வேலையில் சேர வேண்டும். என் ராசி .. விரிவுரையாளர் வேலை காலி இல்லாததால் அக்கல்லூரியில் 'சித்தாள்' வேலைக்கே சேர்ந்தேன். நல்ல கல்லூரி; மிக நல்ல தலைமைப் பேராசிரியர்; துறையின் செல்லப்பிள்ளை ... இப்படியாக அங்கே வேலை பார்த்தேன்.ஏனோ தெரியவில்லை .. வேறு கல்லூரி .. வேறு வேலை என்ற நினைவே வராத தற்குறியாக இருந்து விட்டேன். மூன்று ஆண்டுகள் வரை ஆராய்ச்சிப் படிப்பில் நாட்டம் வைத்து வேலைபார்த்தும் அது முடியாது போயிற்று. அப்போதுதான் எனக்குப் புத்தி லேசாக எட்டிப் பார்த்தது. ஆனால் வயதோ இருபத்தைந்து தாண்டிக்கொண்டிருந்த நேரம். சில முயற்சிகள் எடுத்தேன். எதுவும் பலனில்லாது போயிற்று, ஆசிரியர் வேலை என்பதே நிச்சயமாயிற்று.



ஓரிரு ஆண்டுகளிலேயே ஆசிரியர் வேலை மிகவும் பிடித்துப் போயிற்று. காரணம் வேறு எங்குமில்லை; என் மாணவர்கள்தான். 'சின்னூண்டு சைஸி'லிருந்த எனக்கு பெரிய பெரிய பையன்கள் மாணவர்களானார்கள். 1966-ல் ஆரம்பித்த அந்த ஆசிரிய-மாணவ உறவு முறை 1990 வரை மிகவும் அழகான உறவாக இருந்து வந்தது. வாத்தியாருக்கு இல்லாத பட்டப் பெயர்களா? எனக்கும் நிறைய இருந்தன. அதில் எனக்கு மிகப் பிடித்தது - ரெளடி! அதற்கு அடுத்துப் பிடித்தது - அடைக்கலசாமி: மாணவர்கள் தங்கள் ரகசியங்களை, கவலைகளைப் பகிர்ந்து கொள்வதால் வந்த பெயர். அடைக்கலசாமியாக இருந்ததால் தான் atleast நான்கு மாணவ, மாணவியர்களை தற்கொலையிலிருந்து தடுக்க முடிந்தது. இதைப் பற்றி இன்னும் அதிகம் பேசினால் ஒரு வேளை என் 'சுய பீற்றல்கள்' அதிகமாகத் தெரியலாம்! சுருக்கமாகச் சொன்னால், எனக்கு என் மாணவர்களைப் பிடித்தது; அம்மாணவர்களில் பலருக்கும் நான் மிகவும் பிடித்தவனாக இருந்ததாக உணர்ந்தேன். இந்த அளவு என் மாணவர்கள் என்னிடம் கொண்டிருந்த அன்புக்கும், மரியாதைக்கும் நான் தகுதியானவன் தானா என்ற எண்ணம் எப்போதும் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும். இந்த 'அலைவரிசை' மிகவும் பிடித்துப் போனது.



என் ஆசிரியர்களிடமெல்லாம் எனக்கு ஒரு வருத்தம் உண்டு. எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்களும் இதில் அடக்கம் எப்போதுமே எந்த ஒரு ஆசிரியரும் வாழ்வில் மாணவர்கள் முனைப்போடு முன்னேற வேண்டும் என்ற தாக்கத்தை, வேகத்தை அளிக்கவில்லை என்ற குறைபாடுதான் அது. கல்லூரி வாழ்க்கையில் மாணவர்கள் அடுத்து என்ன முடிவெடுக்க வேண்டும்; எப்படிப்பட்ட வாழ்க்கை அவர்களை எதிர்நோக்கியுள்ளது என்பவைகளை கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். நான் குறிப்பின்றி வாழ்க்கையின் போக்கை அப்படியே ஏற்றுக் கொண்டவன். அது போலவே என் மாணவர்களும் இருந்திடக் கூடாது என்று நினைத்தேன். நான் கல்லூரி ஆசிரியனாகச் சேர்ந்து தேர்வுகள் எழுதும் வயது முடிந்த பின் (!), just for the heck of it, ஐ.ஏ.எஸ். போன்ற தேர்வுக்கு அமரும் உடன் வேலைபார்க்கும் நண்பர்களோடு மாதிரித் தேர்வுகளில் ஈடுபடுவதுண்டு. அப்போதுதான் இப்படிப்பட்ட துறைகள், வேலை வாய்ப்புகள் போன்றவை இருப்பதே எனக்கு நன்கு தெரிந்தது. எதுவுமே தெரியாது, வெறும் புத்தகங்களை மட்டும் கட்டிக்கொண்ட ஒரு 'தர்த்தியான' மாணவனாக நான் இருந்திருக்கிறேன். வாழ்க்கையின் பல வழிகள் ஏதும் எனக்குத் தெரியாது போயிற்று. என் ஆசிரியர்கள் எவரும் எனக்கு அவைகளைப் பற்றிய விழிப்புணர்வைத் தரவில்லை. இந்த ஏக்கத்தின் வெளிப்பாட்டால் நான் என் மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றியவைகளை அடிக்கடி பேசும் ஆசிரியராக இருக்க முயற்சித்தேன். LUKAT - Let Us Know And Think என்று ஒரு சிறு அமைப்பை ஏற்படுத்தி, மாலை நேரங்களில் சில மாணவர்களோடு மரத்தடியில் அமர்ந்து, எதைப் பற்றியும் ஆங்கிலத்திலோ, தமிழிலோ பேசலாமென ஒரு அமைப்பை பல வருடங்கள் தொடர்ந்து நடத்தியும் வந்தேன். ஐ.ஏ.ஏஸ். தேர்வுகளை மனதில் வைத்து இதனை ஆரம்பித்தேன்; பலனும் இருந்தது.



ஒரு மணிநேர வகுப்பில் ஒரு மணி நேரமும் வகுப்பெடுக்கும் 'நல்ல' வாத்தியாராக நான் இருந்ததில்லை; வகுப்பில் பாடம் ஒரு பக்கம் என்றால் மற்ற பலவற்றையும் பேசும் கெட்ட ஆசிரியனாக இருந்திருக்கிறேன். படித்து முடித்தபின் இங்கு கல்லூரியில் படிக்கும் பாடங்கள் வாழ்க்கைக்கு எந்த அளவில் பயன் இருக்குமோ தெரியாது; ஆனால் பேசும் மற்றவைகளில் நிச்சயம் வாழ்க்கைக்குத் தேவையானவை இருக்கும் என்ற நினைப்புண்டு. After graduation, most of them need not remember anything about how a cockroach digests or a frog reproduces but choosing opportunities for future and having a humane life become essential என்பது என் ஆழமான கருத்து. சரியோ ... தவறோ .. அப்படியே நடந்தும் வந்தேன். பலன் இருந்ததாக என் பழைய மாணவர்களிடமிருந்து கிடைக்கும் செய்தி பெருமையாக இருக்கும்; என்னைத் தொடரச் செய்யும்.



ஆசிரிய-மாணவ உறவு என்னைப் பொறுத்தவரை கடைசி வரை நன்றாக இருந்தது. இருப்பினும் 1990-களுக்குப் பிறகு அந்த இறுக்கம் குறைந்ததாக நினைத்தேன். ஒரு வேளை எனக்கு வயதாகிப் போனதால் அப்படி இருந்ததோ என்றும் நினைத்தேன். ஆனால் நிச்சயமாக மாணவர்களின் மனதில் பரவலாக ஏற்பட்டிருந்த பிளவை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் மாணவனாக இருந்த காலம் தொட்டு இதுவரை மாணவர்களின் மன ஓட்டங்களில் முக்கிய சில மாற்றங்களை என்னால் அனுமானிக்க முடிந்தது.



நாங்கள் மாணவர்களாக இருந்த போது நிச்சயமாக நாங்கள் உணர்ச்சிபூர்வமானவர்களாக இருந்தோம். கல்லூரிகளில் மூன்று மாதத்திற்கொரு முறையாவது ஒரு வேலை நிறுத்தம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. குழு மனப்பான்மைக்கு - mass psychology - அடிமையாகி இருந்தோம். Students were mostly emotional beings. வேலை நிறுத்தங்கள் கல்லூரியின் பாடத்திட்டத்தோடு இணைந்த ஒன்று போலிருந்தது. அளவுக்கு மீறி வீர உணர்வுகள் 'பொங்கிப் பிரவாகமெடுக்கும்' நேரங்களும் உண்டு. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் ஒரு அரசையே மாற்றி வைத்தது. அது பெரும்பாலும் மாணவர்களால் உண்டான மாற்றமே.



கல்லூரிகளில் தேர்தல் இருக்கக்கூடாது என்று ஒரு புதிய முடிவை அரசு எடுத்தது. மாணவப் பேரவை இறந்ததும் மாணவர்களின் தீவிர உணர்வுகள் மிகவும் குறைந்து போயின. அடுத்து இன்னொரு மாற்றம் - semester system with internal marks. இதனாலும் மாணவர்களின் உணர்வுகள் மிகவும் நீர்த்துப் போயின. மாணவர்களின் நினைவெல்லாம் மதிப்பெண் பட்டியலில் மட்டுமே என்று மாறிப் போனது. Students are totally now intelligent beings. அது எந்த அளவிற்குப் போனதென்றால் ஆசிரிய-மாணவ உறவே மதிப்பெண்களின் உறவாக மாறிப் போனது. இந்த செமஸ்டருக்கு இந்த வாத்தியார் .. முதலில் இருந்தே சலாம் போடு; அடுத்த செமஸ்டர் .. இனி இந்த வாத்தியார் நமக்கு வரமாட்டார் .. உடு ஜூட்; இனி நான் யாரோ .. அவர் யாரோ! 'எங்க சார்' என்றிருந்த உறவுகள் இல்லாமல் மறைந்து போயே போய்விட்டன. 90களில் இந்த நிலை ஆரம்பித்தது. இன்னும் அது மேலும் மேலும் வளர்ந்து, ஆசிரிய-மாணவ உறவை இன்னும் அதிகமாக பிரித்தன. போதாமைக்கு இன்னொரு காரணியும் வந்தது. self-financing courses. இதனால் கல்லூரி வாழ்க்கை மாணவர்களுக்கே துண்டாகிப் போனது. முதலில் காலை முதல் மாலை வரை கல்லூரி நடந்தது. மாலையில் கலைவிழாக்கள், நான் நடத்தியது போன்ற அறிவுசார் கூட்டங்கள் இவைகள் எல்லாமே மிகவும் குறைந்து போயின. வழக்கமான கல்லூரி நேரம் மாறி, aided courses மாணவர்கள் மதியமே வீடு திரும்ப, மாலை self financing courses மட்டும் மதியத்திலிருந்து மாலைவரை என்றானது. இரு வேறு மாணவர்களுக்குள்ளும் வேறுபாடு. ஆசிரியர்களுக்குள்ளும் இரு வேறு அமைப்புகள். ஒருவருக்கொருவர் ஒட்டுமில்லை; உறவுமில்லை என்றானது.



ஆசிரிய-மாணவ உறவு முறிந்ததும், அழகான அந்தப் பிணைப்புகள் காலத்தோடு காலமாகக் காணாமல் போயின. குரு-சிஷ்யன் எனபது போய், ஆசிரியர் - மாணவர் என்ற நிலைக்கு மாறி, நான் காசு கொடுக்கிறேன் .. நீ படிப்பு சொல்லிக் கொடு .. என்ற வியாபார நிலைக்கு வந்தாகி விட்டது. உணர்வுகள் அறுந்த பின் ஏது பாசமும் பிணைப்பும். மாணவர்கள் தனித்தனியாகி விட்டார்கள். குழு மனப்பான்மை தான் அவர்களை ஒன்று படுத்தும் ஒரே காரணி. அது அறுந்து போனபின் அவர்கள் எல்லாம் தனித்தனி தீவுகளாகி விட்டார்கள். போராட்டக் குணம் என்பதன் பொருளே புரியாமல் போய்விட்டார்கள். தங்களில் ஒருவனுக்கு அநீதி என்றாலும் குரல் கொடுத்த மாணவர்கள் இன்று தனக்கே ஒரு பிரச்சனை என்றாலும் அதைத் தாண்டிப் போகப் பழகிக் கொண்டு விட்டார்கள். எங்கும் எதிலும் மதிப்பெண்கள் .. அதைத் தவிர வேறு எதுவும் அவர்கள் மனதில் தங்குவதில்லை.



ஒரு சிறு உதாரணத்தை, நான் ஏற்கெனவே என் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்ட ஒன்றை இங்கே தருகிறேன். ராணி மேரி கல்லூரியை இடம் மாற்ற அரசு முடிவெடுத்தது. அக்கல்லூரி மாணவிகள் போராட ஆரம்பித்தார்கள். இப்படி ஒரு போராட்டம் நடக்கிறதென்றால் நான் மாணவனாக இருந்த அறுபதுகளில் மாநில மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த ஒரு போராட்டம் நடந்திருக்கும். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் போராட்டம் வென்றிருக்கும். எண்பதுகளில் இது நடந்திருந்தால் நிச்சயம் சென்னை மாணவர்கள் ஒன்றிணைந்திருப்பார்கள். ஆனால் இந்தப் போராட்டம் அந்தக் கல்லூரி மாணவிகள் மட்டுமே நடத்திய ஒரு போராட்டமாக இருந்தது. இதை என் மாணவர்களிடம் நான் சொல்லியபோது இன்னொன்றும் சொன்னேன். வெறுமனே அழகிற்காக சே குவேராவின் படத்தைப் போட்ட டி-ஷர்ட் போடுவதால் மட்டும் போராட்ட குணம் உண்டாகி விடாது என்றேன். போராட்ட குணம் இப்படி முழுவதுமாக முடங்கிப் போவதைப் பார்க்கும்போது, இந்த இளைஞர்கள் எப்படி தங்கள் வாழ்நாளில் தங்கள் வாழ்க்கையை நடத்துவார்கள் என்ற எண்ணம் எனக்குள் எழுவதுண்டு. அடிமைத் தனத்தில் ஊறிப் போனவர்களாகத்தான் நான் அவர்களைப் பார்க்கிறேன். நியாயமான உணர்வுகள் இந்த வயதிலேயே செத்துப் போய்விட்டால் .. எதிர்காலத்தில் இவர்களால் என்ன பெரிதாகச் சாதிக்க முடியும் என்ற கேள்வி என் மனதிற்குள்.



நரி வலம் போனால் என்ன .. இடம் போனால் என்ன .. என் மேல் விழுந்து கடிக்காமல் இருந்தால் சரி - இதுதான் இன்றைய மாணவனின் தத்துவம்.

*
பி.கு.
இக்கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்யும்போதுதான் நான் குறை சொன்ன வயதில் - 1990க்குப் பிறகு மாணவர்களாக இருந்த, இப்போது 40 வயதிற்கு உட்பட்ட - பதிவர்கள் அதிகமாகப் புழங்குமிடமாச்சே... என்ற யோசனை வந்தது. சரி .. அவர்கள் என்னதான் இக்கட்டுரை பற்றிச் சொல்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ளலாமேவென தோன்றியது. இதிலும் நான் எழுதியிருப்பது கலைக்கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து தான். ஆனால் வழக்கமாக தொழில்முறைக் கல்லூரிகளில் ஆசிரிய - மாணவ உறவுகள் கலைக்கல்லூரி அளவிற்குக் கூடச் செழுமையாக இருக்காதென்றே நினைக்கிறேன். எப்படியிருப்பினும் 40 வயதிற்குட்பட்டவர்களின் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள ஆவல்.



*

Sunday, November 30, 2008

287. அன்றும் .. இன்றும் ...

*

*

"பண்புடன்" வலையிதழுக்காக எழுதிப் பதிப்பித்த இப்பதிவை மீண்டும் உங்கள் பார்வைக்கு ...

*

வேகமாக வளரும் அறிவியல் மாற்றங்கள், அதனால் ஏற்படும் புதிய சமூக விளைவுகள், வாழ்வியல் மாற்றங்கள் – எல்லாமே மிக வேகமாக நம்மைச் சுற்றி நடந்து வருகின்றன. என் வயதுக்குள்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்! இந்த வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. இந்த ஆச்சரியங்களை உணர்ந்து அனுபவிப்பதில் யார் அதிர்ஷ்ட சாலிகள் என்று அவ்வப்போது மனதில் ஒரு எண்ணம் எழுவதுண்டு. முதிய வயதில் இருக்கும் என் போன்றோரா, இளம் வயதில் இருப்பவர்களா, இல்லை என் பேரப்பிள்ளைகள் போல் இன்னும் எதிர்காலத்தை நோக்கி நடப்பவர்களா – இவர்களில் யார் இந்த நித்தம் நித்தம் அரங்கேறும் அதிசயங்களைக்
கண்டு அதிசயித்து அனுபவிக்கும் பேறு பெற்றவர்கள்?

Alvin Toffler எழுதி பிரபலமடைந்த Future Shock என்ற நூலில் இப்போது நடைபெறுவது knowledge explosion – அதைத் தொடர்ந்து வருவது பெரும் மாற்றங்கள். வரப்போகும் இந்த பெரும் மாற்றங்களை எதிர்கொள்ள நம்மை நாமே தயார் நிலையில் வைத்துக் கொள்ளாவிட்டால் நாளைக்கு நமக்குக் கிடைக்கக் கூடிய அதிர்ச்சிகளையே Future Shock என்றார். இன்றைய குழந்தைகள் இன்று நடக்கும் மாற்றங்களைப் பற்றியேதும் அறியார்கள் . நடுவயதினருக்கோ இதில் பெரியதாக ஏதும் வியப்பிருக்காது. ஆனால் என் போன்றோருக்கு இந்த மாற்றங்கள் தரும் வியப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் :

அந்தக் காலத்துத் தமிழ்ப்படங்களில் கதாநாயகர்கள் அந்தக் கருப்புத் தொலைபேசியைக் கையில் எடுத்துக்கொண்டு நடந்துகொண்டே பேசுவார்கள். ஆனால் எண்பதுகளின் கடைசிகளில் handset வந்தபோது ஆஹா என்றிருந்தது; ஓடிப்போய் ஒவ்வொரு முறையும் போனை எடுக்கக் கூட தேவையில்லாமல் பக்கத்திலேயே handset என்பதே ஆச்சரியாக இருந்தது. தொன்னூறுகளின் நடுவில் கைத்தொலைபேசியைப் பார்த்து நான் வாய் பிளந்து நின்றிருக்கிறேன். முதலில் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தொலைபேசி இணைப்பு இருந்தது. RPG Cellular..? கறுப்பாக நீளமாக 'கொம்பு' வச்சுக்கிட்டு, பணக்கார மக்களின் அந்தஸ்தைக் காண்பிக்கும் பொருளாக இருந்தது. கிசுகிசுவில்கூட கைப்பேசியின் மகத்துவம் வந்தது நினைவுக்கு வருது. சரத்குமார் ஒரு நடிகையுடன் அப்படி பேசிக்கொண்டேயிருந்தாராம். நிமிடத்துக்கு இரண்டு பேருக்கும் ஏழேழு ரூபாய் .. எந்த தயாரிப்பாளரின் பணமோ? என்று விசனப்பட்டு பத்திரிகைகளில் ஒரு கிசுகிசு! ஆ.வி.யில் ரெண்டு மூட்டை பருத்திக் கொட்டையும், ரெண்டு மூட்டை புண்ணாக்கும் அனுப்பிவிடு என்று கைத்தொலை பேசியில் மாடுகளை மேய்த்துக் கொண்டே ஒருவர் பேசிக்கொண்டு போவது ஜோக்காக வந்திருந்தது. Toffler சொன்னதுபோல் அன்று அதிசயமாக இருந்தது; இன்று அவையெல்லாம் சாதாரணம் என்பதாக நடைமுறைக்கு வந்துவிட்டன.

ஆனால் என் பேரப்பிள்ளைகளுக்கு இதில் எந்த பிரமிப்பும் இல்லை. நடுவயதினருக்கும் இந்த வளர்ச்சிகள் அப்படிஒன்றும் பெரும் பிரமிப்பையோ ஆச்சரியத்தையோ தந்திருக்காது. ஆனால் பதின்ம வயதுகளில் போனை அருகில் வைத்துக் கூட பார்க்காத என் போன்றவர்களுக்கு …. அதைப் பற்றி
இங்கு வந்து பாருங்களேன்.



இந்த தொலைபேசிகளின் வளர்ச்சியின் பிரமாண்டம் புரியும். இன்னும் இதைப்பற்றி நிறையச் சொல்லலாம். அந்தக் காலத்தில் – அப்படி ஒன்றும் ரொம்ப வருஷங்களுக்கு முன்புகூட இல்லை – 80-கள் வரையிலும் தொலைபேசி இணைப்புக்கு ஆறு வருடங்கள் காத்திருக்க வேண்டும். 24 மணி நேரத்தில் தொலைபேசி இணைப்பு கிடைக்கும் "எங்க ஊரில்" என்று அமெரிக்கா சென்ற நண்பர் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது உண்மை. இப்போது நம்மூரிலேயே over the counter என்றாகிவிட்டது.

இதுபோல் இன்னும் எத்தனை எத்தனை…? சின்ன வயதில் பார்த்த கார்கள் – அப்போதெல்லாம் அவைகளுக்குப் பெயர் பிளசர் கார் – எல்லாமே அயல்நாட்டு இறக்குமதிகள். வகை வகையாக இருக்கும். Buick, Hillman, Plymouth, Chevrolet, Morris Minor, நடு நடுவே Landmaster …. அதே மாதிரி மோட்டார் சைக்கிள்களில் Norton, Red Indian, B.S.A.… விதவிதமாக இருந்ததால் தூரத்தில் வரும்போதே அது என்ன கார் / மோட்டார் சைக்கிள் என்று கண்டுபிடித்து சொல்வது என்று ஒத்த வயதினரோடு விளையாடியது உண்டு. அப்படி இருந்தது கொஞ்ச காலம்தான். அதன் பிறகு பல காலத்துக்கு Ambassador, Fiat, Standard என்று கார்களில் மூன்றுவகை மட்டும்; மோட்டார் சைக்கிள்களில் Bullet, Jawa, Rajdoot என்று மூன்றுவகை மட்டுமே என்று சுருங்கி, இப்போதோ நித்தம் ஒரு மாடல். வெள்ளையும் கறுப்பும் மட்டுமே கார்கள் என்பது போய் இப்போது வண்ண
மயம்தான். Simply riots in colours.


அட .. கார்களை விடுங்கள்.. சாதாரண பென்சிலை எடுத்துக் கொள்ளுங்கள். மிஞ்சிப் போனால் வழக்கமான மரக்கலர் பென்சில்களைத் தவிர மஞ்சள் கலரில் நாங்கள் பார்த்திருப்போம். இப்போது .. கணக்கேது. வெளிநாட்டிலிருந்து, அதாவது அமெரிக்காவிலிருந்து (அந்தக் காலத்தில் foreign என்றாலே அமெரிக்காதானே!) நண்பர்கள் வந்தால் BiC என்று ஒரு ball point பேனா; அதன் பின் கொஞ்ச காலத்துக்கு ஸ்கெட்ச் பேனாக்கள், அடுத்து highlight pens என்று கொடுப்பதற்கு என்றே வாங்கி வருவார்கள். அடேயப்பா .. பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த நண்பன் ஒரு Reynolds ballpen வாங்கி வந்து கொடுத்ததோடில்லாமல் ஒரு demo வேறு காண்பித்தான். அப்படியே செங்குத்தாக பேனா முனையைக் கீழே போட்டாலும் எழுதும் என்று செய்து காண்பித்தான். பார்த்த உடனே எனக்குப் பெரிய கவலை. இப்படிப்பட்ட நல்ல பேனா ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய use & throw-வாக இருக்கிறதே என்று. 'அங்கெல்லாம் அப்படித்தான்; ஒரு தடவை பயன்படுத்திட்டு நாங்க தூரப் போட்டுவிடுவோம்' என்றான்.
சே! பாரின்னா பாரின்தான் என்றுதான் நினைக்கத் தோன்றியது!

அடேயப்பா! முதன் முதல் மலேசியாவில் இருந்து வந்திருந்த ஒருவரிடம் ரொம்ப
யோசித்து, தயங்கி, பேரம் பேசாமல் அவர் பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு Parker Fountain பேனாவை விலை பேசி வாங்கியது எவ்வளவு சந்தோஷமாயிருந்தது. Parker பெயருக்கே ஒரு மரியாதை. அப்படி ஒரு ஃபாரின்மோகமும் பல வருஷங்கள் இருந்தது. அந்த மாயையில் தோன்றியவைதான் ஊருக்கு ஊர் அயல்நாட்டுப் பொருள் விற்கும் பர்மா பஜார்
என்ற பெயரில் இருக்கும் கடைகள். ஆனால் இப்போது வெறுமனே திருட்டு சினிமா சிடிக்கள் மட்டுமே அங்கே பெரிதாக விற்கின்றன.

ஆனாலும் அயல்நாட்டு மோகம் நமக்கு இன்னும் குறையவில்லை என்றுதான் நினைக்கிறேன். அல்லது ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமாவது இருக்கிறது. நமது சினிமா படங்கள் மட்டும் உலகத்தரத்தில் வர வேண்டுமென நினைக்கிறோம். அந்த "தரம்" மட்டும்தான் இன்னும் கிடைக்கவில்லை; மற்றபடி அயல்நாட்டுப் பொருட்கள்தான் இப்போது எல்லாமே அப்படியே, அல்லது உள்நாட்டு பொருளாகவோ கிடைத்து விடுகின்றனவே. இப்போதெல்லாம் என்ன வாங்கி
வர வேண்டும் என்று அங்கிருந்து பிள்ளைகள் கேட்டால்கூட சொல்வதற்கு ஒன்றுமில்லையென்று ஆகிவிட்டது .. Toffler சொன்ன global village இதுதானோ… ?

டார்வினின் பரிணாமக் கொள்கைகளில் அடிப்படையாக அவர் சொன்னதில் முக்கியமான ஒன்று:
variations are the raw materials for changes. இன்று அந்த விதவிதமான விஷயங்கள் கண்முன்னால் விரிகின்றன. வீட்டுக்கே பசுவோடு, வைக்கோலால் செய்த கன்றுக்குட்டியுடனே வந்து அங்கேயே கறந்து பால் கொடுத்திட்டு போனாங்க .. இப்போ அந்த பால்தான் எத்தனை எத்தனை விளம்பரங்களோடு, விதவிதமான பாக்கெட்டுகளில் கிடைக்கின்றன. குடிக்கிற தண்ணியில்கூடத்தான் எத்தனை எத்தனை விதம்! இந்தக் காலத்துப் பசங்க 'ஃபிகர்' என்பதுபோல், அந்தக் காலத்தில் நாங்க வயசுப் பொண்ணுகளை "கலர்" என்போம். காரணம் பசங்க அனேகமாக வெள்ளைச் சட்டை; அப்படியே கலர் சட்டையாக இருந்தால் ரொம்ப வெளிர் நிறங்களில்தான். பொண்ணுக மட்டும்தான் பல வண்ண உடைகளில் இருப்பார்கள். காரண இடுகுறிப் பெயர் !!


இப்படி அனைத்திலும் varieties …


பரிணாம வளர்ச்சியின் அடிப்படையே அதுதான் என்று டார்வின் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

Friday, November 21, 2008

281. எங்க காலத்தில எல்லாம்… 2

*

*

"பண்புடன்" வலையிதழுக்காக எழுதிப் பதிப்பித்த இப்பதிவை மீண்டும் உங்கள் பார்வைக்கு ...

*

ரயில் பயணங்களில்



இன்றைக்கும் கூட மதுரை புகைவண்டி நிலையத்தைத் தாண்டி ஓவர் ப்ரிட்ஜ் வழியாகச் செல்லும்போது புகைவண்டிகள் வரும்போதும் கிளம்பும்போதும் அடிக்கும் அந்த மணிச்சத்தம் கேட்கும்போதெல்லாம் அடுத்த ரயில் பயணம் எப்போது என்ற ஆசை கிளர்ந்தெழுகின்றது. அது என்னவோ இன்னும் ரயில் பயணம் என்றால் ரொம்ப பிடிக்குது. விமானத்தில் போகும்போது கூட (அப்புறம் எப்படி நாங்க அமெரிக்காவுக்கெல்லாம் விமானத்தில் போயிருக்கோம் அப்டின்றதைச் சொல்றது ..) விமானத்தில் ஏறி ஓரிரு மணி நேரத்தில் செமையா போர் அடிக்க ஆரம்பிச்சிருது. அது என்ன, ஒரு ஆட்டம், குலுக்கல் இல்லாமல் நின்றுகொண்டு இருப்பதுபோலவே மணிக்கணக்கில் இருந்தால் போரடிக்காதா என்ன? ஆனா ரயிலில் பாருங்கள் .. ஓடும் சத்தம் ஒரு தொடர்ந்த B.G.M. போல் நம் கூடவே எப்போவும் வர, எப்பவும் மனுஷங்களுக்கு மத்தியில் இருக்கிறோம் அப்டின்ற நினைப்போடுதான் இருக்கணும் – ஒட்டுக் குடித்தனம் மாதிரி. ஊரும் உலகமும் நம் கூடவே பயணம் வரும். பகலோ இரவோ எந்தப் பயணமாயிருந்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு உண்டு. விமானப் பயணத்தில் everybody is an island அப்டின்ற உணர்வுதான் இருந்தது.


இப்போதே ரயில் பயணத்தில் இவ்வளவு ஆசையென்றால் சின்ன வயதில் கேட்க வேண்டுமா என்ன. வருடத்திற்கு இரண்டுதடவை – கிறிஸ்துமஸ் லீவு, அடுத்து கோடை விடுமுறை என இருமுறை – நெல்லை பக்கத்திலுள்ள சொந்த கிராமத்திற்குக் கிளம்பிப் போவதே ஒரு திருவிழா மாதிரிதான். அப்போதெல்லாம் இரவுப் பயணத்தைவிட பகல் பயணமே வாய்த்தது.


காலம்தான் எவ்வளவு மாறிப் போச்சு! இப்போவெல்லாம் முன்னமே சீட், பெர்த் எல்லாம் வாங்கிக்கிட்டு செளகரியமா போய் பழகியாச்சு. அப்போவெல்லாம் அதெல்லாம் ஏது? கூட்டமா இருந்தா சிகப்பு சட்டை போட்ட ஆளுககிட்ட கொஞ்சம் காசு கொடுத்து 'பெர்த்' வாங்கிடலாம்; அதாவது, மேலே சாமான்கள் வைக்கிற இடத்தில துண்டு போட்டு காசு வாங்கிட்டு நமக்குக் கொடுப்பாங்க. அப்போ ரயில்களில் மூன்று வகுப்புகள் இருக்கும். முதல் இரண்டைப் பத்தி எதுவும் தெரியாது; நினைத்தும் பார்த்ததில்லை. ரயில் பெட்டிகளிலும் பல மாறுதல்கள். ரொம்ப சின்னப் பையனாக இருந்த போது சீட்டுகள் இப்போ மாதிரி குறுக்காக இல்லாமல் நீளவாட்டில் இருந்தது நினைவிலிருக்கிறது. ஆனால் ரொம்ப முன்னால்தான். அதுக்குப் பிறகு இப்போதுள்ளது மாதிரி ஆகிவிட்டது. ஆனால் ஜன்னல்களுக்குக் கம்பிகள் ஏதும் இருக்காது. துண்டைப் போட்டெல்லாம் இடம் பிடிக்க முடியாது. ஆட்களே ஜன்னல் வழியே புகுந்து இடம் போடணும். அதுவே ஒரு ஹீரோ வேலைதான். அந்த ஜன்னல்களை மூடும் கதவெல்லாம் இப்போவெல்லாம் மேலிருந்து கீழே வருவதாகத்தானே இருக்கின்றன. அப்போவெல்லாம் கீழிருந்து மேலே வரும்படி இருக்கும். அதை சரியாகப் பொறுத்த தனித் திறமையே வேணும்.


ரயில் வண்டிகளின் மின்விசிறிகளில் ஏதும் மாற்றமில்லையோவென இப்போதும் ஒவ்வொரு ரயில் பயணத்திலும் தோன்றுகிறது. ஏனெனில் பார்ப்பதற்கு அப்படியே இருப்பது மட்டுமில்லாமல், அந்த விசிறிகள் எப்போதுமே அபார வேகத்தில்தான் சுற்றுகின்றன. அன்றைக்கும் அப்படித்தான். ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம். அப்போதெல்லாம் விசிறிகள் நம் இஷ்டத்துக்குத் திருப்பி வைத்துக் கொள்ளலாம். அதில் தான் பெரிய ட்ராமா, சண்டை எல்லாம் நடக்கும். அவரவர் இஷ்டத்துக்கு, வசதிக்கு ஏற்றாற்போல் அதை திசை திருப்புவார்கள். பல சமயங்களில் might is always right என்ற தியரி வேலை செய்யும். இல்லையென்றால் வெள்ளைச் சட்டை, ஓரிரு ஆங்கில வார்த்தைகளால் தங்களை மேல்மட்ட ஆட்களாகக் காண்பித்துக் கொள்பவர்களின் இஷ்டத்துக்கு அது வளையும். ஆனால் ராத்திரி எப்படியும் ஒரு சண்டை வரும். சாமான்கள் வைக்குமிடத்தில் எப்படியும் ஆட்கள்தான் இருப்பார்கள். ஒருவர் தூங்கியதும் எதிர்ப் பக்கத்தில் இருப்பவர் மெல்ல தன் பக்கம் மின்விசிறியை இழுத்துக் கொள்ள, இவர் தூங்கி அவர் முழித்ததும் மெல்ல அவர் தன்வழிக்கு இழுக்க … கதை தொடரும்.


இரண்டு மூன்று மணி நேரப் பயணம் முடிந்து ரயிலில் இறங்குபவர்களைப் பார்த்தாலே பாவமாயிருக்கும். நிச்சயமா சட்டையெல்லாம் கரி படர்ந்து, கண்ணெல்லாம் ரத்தச் சிவப்பாகி, தலைமுடியெல்லாம் கலைந்து ஒரு பெரிய போராட்டம் முடிந்து வருபவர்கள் போல்தான் எவரும் தோற்றம் தருவார்கள். ஏனென்றால், எல்லா ரயில்களும் கரிவண்டிகள்தான். அப்போ வச்ச பேருதான் "புகை வண்டிகள்" ! எவ்வளவு பொருத்தம் ! வண்டியில் எங்கு உட்கார்ந்து எழுந்தாலும் கார்மேக வண்ணனாகத்தான் எல்லோரும் மாறணும். எங்கும் எதிலும் கரிதான். ஜன்னல் ஓரத்தில் இடம் பிடித்து உட்கார்ந்தவர்களுக்கு இன்னொரு போனஸ்; கண்கள் எல்லாம் கரிவிழுந்து செக்கச் சிவப்பாய் ஆகிவிடும். வாழ்க்கையே போராட்டம் என்பது போல் ஒவ்வொரு ரயில் பயணமும் ஒரு போராட்டமாக அமைந்துவிடும்.


ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் எப்படியும் அங்குமிங்குமாய் குழந்தைகளுக்குத் தொட்டில்கள் தொங்கும். எங்கும் எந்த இடத்திலும் மக்கள் உட்காரத் தயங்குவதில்லை; அது பாத்ரூம் பக்கமாக இருந்தாலென்ன, நடைபாதையாயிருந்தாலென்ன. சமத்துவம் நிலவும் இன்னொரு இடமாக ரயில் பெட்டிகள் இருக்கும். இப்பவும் பொது ரயில் பெட்டிகள் அப்படித்தான் இருக்குமென நினைக்கிறேன். அதுபோல் பொது ரயில் பெட்டிகளில் பயணித்து நாளாகிவிட்டது.


ஏறக்குறைய எல்லா ரயில்களும் எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று போனதாக நினைவு. இரவுப் பயணங்களில் மிகவும் பிடித்ததும் இன்னும் நினைவில் இருப்பதும் ஒரு விஷயம்: பல ரயில்வே ஸ்டேஷன்களில் மின்சாரம் இல்லாத காலங்களில், ஒவ்வொரு ரயில் வரும்போதும் ஒருவர் அந்த ஸ்டேஷன் பெயரைச் சத்தமாக ஒரு ராகத்தோடு நீட்டி ஒலிப்பதும், ஒரு தீப்பந்தத்தோடு கையில் ஒரு வளையத்தோடு ஒருவர் நிற்பதுவும், அதை ரயில் ஓட்டுனரில் ஒருவர் லாகவமாக அந்த வளையத்தில் கையைக் கொடுத்து அதனைக் கைப்பற்றுவதும், அதற்கு சற்று முன்பு இன்னொரு வளையத்தைத் தூக்கி எறிவதும் … இன்னும் இருள்படிந்த ஓவியமாக மனதில் நிற்கிறது.


ஏறக்குறைய கொஞ்சம் வசதியான மக்கள் ரயில் பயணம் செய்யும்போது கட்டாயம் கையோடு கொண்டுவருவது ஒரு பித்தளை கூஜா. ஒவ்வொரு குடும்பத்தலைவருக்கும் இந்தப் பயணங்களில் கட்டாயமான ஒரு வேலை எந்த நிறுத்தத்தில் நின்றாலும் இறங்கி ஓடிப் போய் அங்கிருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து வருவதுதான். இப்போவெல்லாம் நீங்கள் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்திருக்க, எதிரில் இருக்கும் எனக்கு இல்லையென்றால் நான் உங்களிடம் தண்ணீர் ஓசி கேட்க முடியுமா? அப்போவெல்லாம் வேண்டுமாவென்று கேட்டுகொடுத்தது நினைவில் இருக்கிறது, கூஜாவைத் திறந்து அதனுள்ளேயே இருக்கும் சிறு தம்ளரில் மக்கள் தங்கள் பரோபகாரத்தைக் காண்பிப்பார்கள்.


அந்தக் காலத்தில் ரயில் பயணத்திற்கென்று போனால் முதலில் ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் வைத்திருக்கும் கரும்பலகையைத்தான் பார்க்க வேண்டும். அதில்தான் ஒவ்வொரு ரயிலும் எத்தனை நிமிடங்கள் காலதாமதமாக வரும் என்பதை எழுதி வைத்திருப்பார்கள். அதுவும் எல்லாம் நிமிடக் கணக்குதான் – ரயில் எத்தனை மணி நேரம் தாமதமாக வந்தாலும்! ரயில்கள் தாமதமாக வருவதுதான் அப்போதைய நடைமுறை. சரியான நேரத்துக்கு ஒரு ரயிலும் வந்ததாகச் சரித்திரம் இருக்காது. அதை வைத்து ஒரு கதை – அனேகமாக எல்லோருக்கும் தெரிந்ததுதான் – உண்டு. ஆச்சரியமாய் ஒரு நாள் ஒரு ரயில் சரியான நேரத்துக்கு வர, எல்லோரும் வண்டி ஓட்டுனருக்கு மாலை போட்டார்களாம். அவரோ ரொம்பவே வெட்கப் பட்டு 'இந்த ரயில் நேற்று சரியாக இந்த நேரத்திற்கு வந்திருக்க வேண்டிய வண்டி' என்றாராம்.


மதுரையிலிருந்து ஊருக்குப் போக ரயிலில் போய் அதன்பிறகு பஸ், ஒத்தை மாட்டு வண்டி என்று கிராமத்துக்குப் பயணம் தொடரும். திரும்பி மதுரை போகும்போது ரயில் பயணத்திற்குப் பிறகு ஜட்கா பயணம். இதில் ஊருக்குப் போகும் பஸ் பயணம் ஒரு தனி ரகம்தான். ரொம்ப சின்ன வயசில் சில தடவைகள் ஸ்டீம் பஸ்களில் சென்ற அனுபவம் நினைவில் உண்டு. பஸ்ஸின் நுழை வாயிலுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய சிலிண்டர் இருக்கும். வெளிப்பக்கம் அதற்குக் காற்றடிக்க கையால் சுற்றக்கூடிய துருத்தி ஒன்று இருக்கும். பெரிய ஊர்களில் பஸ் நின்றவுடன் சின்ன பசங்க ஓடி வந்து அந்த துருத்தியைச் சுற்ற ஓடிவருவார்கள் - கிடைக்கும் சில்லரைக் காசுக்காக.


மதுரையில் இறங்கியதும் ஜட்கா வண்டிக்காகக் கட்டாயம் ஒரு பேரம் நடக்கும். எப்போதும் எனக்கு வண்டிக்காரர் பக்கத்தில் முன்னால்தான் இடம். ரொம்ப நாள் வரை ஒரு விஷயம் எனக்குப் புரிந்ததே இல்லை. ஒத்தை மாட்டு வண்டியானாலும் சரி, இரட்டை மாட்டு வண்டியானாலும் சரி, மாட்டின் மூக்கணாங்கயிறு வண்டிக்காரர் கையில் இருக்கும். அதை இழுத்து மாட்டை அல்லது மாடுகளை கன்ட்ரோல் பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன்.ஆனால் ஜட்கா வண்டிகளில் ஒரு கையில் வைத்திருக்கும் கயிற்றின் சிறு அசைவுகளை வைத்தே குதிரையைக் கன்ட்ரோல் செய்வது ரொம்ப நாட்களுக்குப் பிறகே புரிந்தது. அது புரிவதற்கு முன்பு எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருப்பது எப்படி குதிரை "தானாகவே" சரியான ரோட்டில் செல்கிறது என்பதுதான். ஒருவேளை குதிரைக்கு மதுரையில் எல்லா இடமும் தெரிந்திருக்குமோ? அதோடு நாம் பேரம் பேசும்போதே போகவேண்டிய இடத்தைத் தெரிந்து கொண்டு தானாகவே போகிறதோ என்று அதி புத்திசாலித்தனமாக நினைத்திருந்திருக்கிறேன். வெளியில் சொன்னால் வெட்கக் கேடுதான்!

சரி விடுங்க, யார்ட்ட உங்ககிட்ட மட்டும்தானே சொல்கிறேன்.



*

*

Monday, November 17, 2008

275. எங்க காலத்தில எல்லாம் ..…

*

*
"பண்புடன்" வலையிதழுக்காக எழுதிப் பதிப்பித்த இப்பதிவை மீண்டும் உங்கள் பார்வைக்கு ...



விலைவாசி அன்று ...


அப்பா ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த போது 20 ரூபாய் சம்பளமாம்; அதில் 10 ரூபாய் கொடுத்து மதுரை வெங்கலக்கடைத் தெருவில் இன்றும் உள்ள பாண்டியன் ஹோட்டலில் இரண்டுபேர் திருப்தியாக ஒரு மாத முழுமைக்கும் மதிய எடுப்புச் சாப்பாடு முடித்து விடுவோம் என்பார்கள். கேட்கும்போது ஆச்சரியாக இருந்தது. பவுன் விலை எட்டு ரூபாய் பத்து ரூபாய் என்னும்போதும் அப்படித்தான் தோன்றியது.


ஆனா இப்போ நான் கடந்து வந்த பாதையிலே அதேபோல பழங்கதையைப் பேசினா எனக்கே ரொம்பவே இன்ட்ரஸ்டிங்காகத்தான் இருக்கு. விலைவாசியில் இந்தக் காலத்தோடு ஒப்பிட்டு பார்க்கிறதுக்கு ரெண்டு விஷயம் நினைவிலிருக்கு. அது இந்த நாட்டு வாழைப்பழமும் உப்பும். உப்பு வண்டிக்காரர் ரோடு வழியே தள்ளுவண்டி தள்ளிக்கிட்டு சத்தம் போட்டு கூவி வித்துட்டுப் போவார். 'ரூவாய்க்கு 20 படி உப்பே' அப்டின்னு கூவிக்கிட்டு போற சத்தம் இன்னும்கூட கேக்குது. கொஞ்ச நாள் கழிச்சி அதே வியாபாரி 'அணாவுக்கு ஒரு படி உப்பு' அப்டின்னு கத்திக்கிட்டு வித்தார். இந்த அணா விவரம் புரியாத பசங்களுக்கு விவரம் சொல்லணுமே; அதாவது ஒரு அணான்றது இன்னிய கணக்குக்கு 6 பைசா; ரூபாய்க்கு 16 அணா.


இந்த ஓரணாவுக்கு அப்போவெல்லாம் வாழைப்பழம் வாங்க அப்பா தெரு முக்குக்கடைக்கு அனுப்புவாங்க. போகும்போதே அணாவுக்கு எத்தனைன்னு கேளு; நாலு'ம்பான்; ஆறு கேளு; அஞ்சு தருவான்னு மொதல்லேயே திரைக்கதை வசனம் எல்லாம் சொல்லித் தந்துருவாங்க. கடைக்குப் போனா அதே மாதிரிதான் நடக்கும். அஞ்சு பழம் – அப்போ பொதுவா கிடைக்கிறது நாட்டுப் பழம்தான்; எப்போவாவது பச்சைப் பழம் கிடைக்கும் – அப்பா சொன்னது மாதிரி வாங்கிட்டு வருவேன். இன்னைய கணக்குக்கு ஒரு ரூபாய்க்கு 80 பழம் வாங்கிட்டு வர்ரது மாதிரி ! ஆனா இப்போ நிலவரம் நாட்டு வாழைப்பழம் ஒண்ணே ரெண்டு ரூபாயை நெருங்கியிருச்சி ! ம்ம்..ம் .. அது அந்தக் காலம்.


அக்டோபர் 1966-ல் தஞ்சையருகில் உள்ள ஒரு கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தேன். "சித்தாளு: வேலை. அதாவது அப்போதிருந்த demonstrator என்ற வேலை. விரிவுரையாளர் வேலைக்குரிய தகுதி இருந்தாலும் wire pulling போன்றவைகள் இல்லாமல் போவதாலோ, இல்லை நமது 'ராசியினாலோ' இந்த சித்தாள் வேலையில் சேருவதுண்டு. அப்படி சேர்ந்த போது முதல் மாதச் சம்பளம் 198 ரூபாய். அதில் வீட்டுக்கு வேறு கட்டாயம் 30 – 50 ரூபாய் அனுப்பணும். முடிவெட்ற கடை, சினிமா தியேட்டர்கள் தவிர எல்லாத்துக்கும் இருக்கவே இருக்கு மாத அக்கவுண்ட். அதுனால கையில காசு இல்லாட்டியும் பிரம்மச்சாரி வாழ்க்கை நல்லாவே போச்சு. நானும் அறை நண்பன் கன்னையனும் மாதச் சம்பளம் – கவரில் போட்டு ரூபாய்,பைசா கணக்கில் தருவார்கள் – வந்ததும் மாலை அறைக்கு வந்ததும் படுக்கையைத் தட்டி விரித்துப் போட்டு ரூபாய் பைசா எல்லாத்தையும் அதில் பரப்பி, அதுக்கு மேல் ஹாயாக சாய்ந்து ஒரு 'தம்' இழுக்குறது அடிக்கடி நடக்கும். அதாவது, நாங்கல்லாம் அப்படி 'காசுல புரளுரோமாம்'! அடுத்த நாளிலிருந்து மறுபடி அக்கவுண்ட் தான்.


பொருட்களின் விலைகள் பற்றி பேசும்போது நினைவுக்கு வர்ர இன்னொரு விஷயம். இந்த பெட்ரோல் விலை. 1970 அக்டோபரில் ஜாவா பைக் வாங்கினேன். அப்போது ஒரு லிட்டர் விலை ஒரு ரூபாய் ஏழு காசுன்னு நினைக்கிறேன். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலையேறி மூன்று ரூபாய் சில்லரை ஆயிற்று. அதிலிருந்து முதல் தடவையாக ஒரு பெரிய ஜம்ப்; ஆறு ரூபாயும் சில்லறையுமாயிற்று. அது ஒரு பெரிய oil shock ஆக இருந்தது. பிறகு .. பழகிவிட்டது ... இன்றுவரை !


75-லிருந்து 90 வரை hard to meet both ends meet என்பார்களே அந்த நிலைதான். ஒரு மாதிரி வண்டி ஓடும். பல சிக்கன வழிகள் அது இதுன்னு செய்து பார்த்து வாழ்க்கையை ஓட்டணும். அதில் ஒரு முயற்சியாக ஒவ்வொரு தினச் செலவையும் எழுதி வைத்துப் பார்த்தோம். எல்லாம் ஒண்ணாதான் இருந்திச்சின்னு பிறகு அந்த முயற்சியையெல்லாம் விட்டுட்டு வாழ்க்கையை ஓட்டினோம் சந்தோஷமாக. அந்த சமயத்தில் எழுதிய கணக்கு நோட்டின் சில பக்கங்களை இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். அதைப் பார்க்கும்போது எனக்கே ஆச்சரியமா இருக்கு. ரொம்ப பெர்சனலானதுதான். இருந்தாலும் போனா போகுது ஒண்ணுரெண்டை உங்களுக்கும் காண்பிக்கிறேன். பார்த்துக்கங்க. வேற யார்ட்டயும் சொல்ல வேண்டாம், சரியா?


படம்: 1


மூன்றுமாதக் குழந்தையாயிருந்த மகளுக்கு வாங்கிய Farex டப்பாவின் விலையைப் பார்த்துக் கொள்ளுங்கள்! ஏழே முக்கால் ரூபாய்! இன்னைக்கி என்ன விலைன்னு தெரிஞ்சிக்குவோமே என்று கடையில் போய்க் கேட்டேன். 120 ரூபாயாமே!

படம்: 2



1975, ஜூலை சம்பளம் 600 வாங்கி 623 ரூபாய் செலவழித்து கணக்கை எப்படியோ தங்கமணி டகால்டி வேலை செஞ்சு ( நம்ம நிதியமைச்சர்களெல்லாம் இவங்கள எல்லாம் பாத்துதான் பட்ஜெட் போடுவாங்களோ?) 598.35-க்குக் கொண்டுவந்து பட்ஜெட்டைச் சரி கட்டியிருக்காங்க பாருங்க!



படம் 3:



அக்டோபர் 75 .. சம்பளம் 600 ரூபாய்.. முதல் தேதி அன்னைக்கி குடும்பத்தோடு வெளியே ஜாலியா போய் டிபன் சாப்பிட்டுட்டு காய்கறி வாங்கிட்டு வீட்டு வாடகை 80 ரூபாயை கொடுத்துட்டு …. அன்னைக்கி மொத்த செலவு = ரூ. 88



படம் 4 :


அந்த மாச நடுவில் இன்னொரு சினிமாவுக்கு டாக்டருக்கு அதுக்கு இதுக்குன்னு ஒரு 20ரூபாய் 60 பைசா செலவு.அனேகமா மூணு அல்லது அஞ்சு மாச தவணையில் வாங்கின சீலிங் ஃபேனுக்கு 45 ரூபாய்; ஜாவாவுக்கு பெட்ரோல் 7.50(அப்போ ஒரு காலன் ஃ 5 லிட்டர் போட்டிருப்பேன் ஆயிலோடு சேர்த்து!)

படம்: 6


சே! பின்னிட்டம்ல … ஆகஸ்ட் மாசம் 7ரூபாய் 25 பைசா பட்ஜெட்டில் உபரித்தொகை இருந்திருக்கிறதே!


*

*

Monday, January 08, 2007

195. என் முதல் (போன்) கால்



*

*

'என் முதல் போன் கால்' என்று எழுத நினச்சி ஆரம்பிச்சப்போ, நம்ம பீட்டா என்ஜினியர் எழுத்தை எழுதிட்டு அத அடிக்கிறது எப்படின்னு சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அதை முயற்சி செஞ்சு பார்க்கிற சான்ஸுக்காக இப்படி தலைப்புக் கொடுத்தேன். மற்றபடி நீங்க இங்க வரணும்னு செய்றதுக்காக இந்த மாதிரி தலைப்புக் கொடுக்கலை. சரி.. இது தலைப்பில் உள்ள அடித்தல், பெருக்கல், திருத்தல் பற்றியது. இனிம, விஷயத்துக்கு வருவோம்...

இது நடந்தது என் 14-15 வயசில. ஒரு 48 வருஷம் ஆகிப் போச்சு. அதுவரை நான் பார்த்த சிவாஜி படத்திலெல்லாம் ஒரு கருப்பு போனை கைல தூக்கிக் கிட்டே அவர் ஸ்டைலா நடந்துகிட்டே பேசுறதப் பாத்து அட்லீஸ்ட் நம்ம ஒரே ஒரு போன்கால் செய்ய மாட்டோமான்னு ஒரு ஆசை வந்துகிட்டே இருந்துச்சு. போனை காதில வச்சுக்கிட்டு, ஸ்டைலா '..ஆங்... சொல்லுங்க.. சரி..ஓகே.. செஞ்சுடுவோம்' அப்டின்னெல்லாம் பேசணும்னு ஆசையா இருந்திச்சு. அப்படியெல்லாமா அப்பாட்ட சொல்ல முடியும்? பொத்தாம் பொதுவா அப்பாட்ட போன் பேசுறது பத்தி பேசி வச்சேன். 'ஆகட்டும்; பார்க்கலாம்'னு சொன்னாங்க. அப்பல்லாம் அப்பாமார்கள் அப்படி சொல்றதுதான் ஸ்டைல். ஏன்னா, அப்படித்தான் கர்மவீரர் சொல்லுவார். ஆனா அவர் அப்படி சொல்லிட்டு செஞ்சுருவார். ஆனா எங்க அப்பா நான் கேக்கிறதுக்கு இந்தப் பதிலைச் சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.

நயினா ஸ்கூல் வாத்தியாரா? அப்போவெல்லாம் மக்குப் பசங்கதான் ட்யூஷன் படிக்க வருவாங்க.. அதில் ஒரு பையன் எனக்கு ஒரு வருஷம் ஜூனியர். நான் 9வது படிக்கும்போது அவன் அப்பாகிட்ட படிச்சான். எங்க பக்கத்துத் தெருதான். தெற்கு வெளி வீதியில அவங்க வீடு. பெருசா இருக்கும். வீட்டுப் படிகூட அவ்ளோ உசரம். நாங்க இருந்ததோ ஒரு ஒண்டுக் குடித்தனம். மூணு குடித்தனத்தோடு இருப்போம். எங்க வீட்டு போர்ஷனுக்குள்ள வர்ரதுக்கே தனித்திறமை வேணும். கிணற்றடி, அதச் சுத்தி எப்பவும் கட்டி நிக்கிற தண்ணி இதையெல்லாம் டாட்ஜ் செஞ்சு வந்தாதான் புழச்சாங்க. நடுவில பாசியில வழுக்கி விழ ஏகப்பட்ட சான்ஸ். நிறைய பேர் 'சர்ருன்னு' வழுக்கி விழுந்து வச்சத பார்க்கணுமே... புதுசா வர்ரவங்களை நான் வீட்ல இருக்கிறப்போவெல்லாம் usherer வேல பார்த்து காப்பாத்திருவேன்.. இல்லாட்டி அவங்க தலைவிதிப்படி நடக்கிறதுதான்..

அப்பத்தான் இந்தப் பையன், நம்ம ஜூனியர் - பேரு நவநீத கிருஷ்ணன் - வந்து சேர்ந்தான். ஒரு நாள் அப்பாவுக்கு நான் போன் பேசணும்னு சொன்னது ஞாபகத்துக்கு வர, நம்ம நவநீதன்கிட்ட 'டேய், ஜார்ஜை வீட்டுக்குக் கூட்டிட்டு போய் ஒரு போன் பண்ண வையேண்டா' அப்டின்னாங்க. அவனும் சரின்னு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனான். அந்த உசரப் படிக்கட்டைப் பார்த்ததுமே மிரண்டு போய்ட்டேன். வீட்டுக்குள்ள போனா, அது பாட்டுக்கு நீளமா போய்க்கிட்டே இருந்துச்சு. ரொம்பவே அசந்துட்டேன். வீட்டுக்கு நடுவில சோபா அது இதுன்னு இருந்திச்சு. உடம்பு எதிலயும் படாம பாத்துக்கிட்டேன். பணக்காரத்தனத்தைப் பார்த்தா அப்ப இருந்தே ஒரு தயக்கம்; இன்னும் கூட இருக்கு. ஒரு நாற்காலி பக்கத்தில ஒரு மேஜை மேல பள பளன்னு கருப்ப்ப்பா டெலிபோன் உக்காந்திருச்சு. நீங்கல்லாம் நிறைய பேரு பாத்திருக்க மாட்டீங்க.. அதில டயல் ஒண்ணும் இருக்காது. டயல் இருக்கிற இடத்துல ஒரு ஒத்த ரூபாய் சைஸ்ல ஒரு வட்டம்.. அதில அந்த போன் நம்பர் எழுதியிருக்கும். அப்போல்லாம் மூணு டிஜிட்தான் என்று ஞாபகம்.

நவநீதன் போனக் காமிச்சி, 'ம்ம்..போன் பண்ணு' அப்டின்னான். இப்படி சொன்னா நான் என்ன பண்ண முடியும்? என்ன செய்யணும் ஏது செய்யணும்னு எனக்கு என்ன தெரியும். 'இல்ல.. வேணாம்; நான் பண்ணலை' அப்டின்னேன். சரி நான் ரயில்வே என்கொயரிக்கு போட்டுத் தர்ரேன். ஏதாவது பேசு அப்டின்னான். அப்போவெல்லாம் டைரக்ட் ட்யலிங் கிடையாது. என்கொயரிக்குப் போன் செஞ்சு, அங்க நாம யார்ட்ட போன் பேசணும்னு சொன்னா அவங்க கனெக்ட் பண்ணுவாங்க. அதெல்லாம் யாருக்குத் தெரியும்.

அவனே என்கொயரிக்கு போன் போட்டு, ரயில்வே என்கொயரி அப்டின்னான். உடனே என்கிட்ட கொடுத்தான். நான் கையில வாங்கியதுமே ஹலோ..ஹலோ அப்டின்னேன். 'கொஞ்சம் பொறு; கனெக்க்ஷன் கிடச்ச பிறகு பேசு' அப்டின்னான். சரின்னு காதில வச்சிக்கிட்டு, என் கவனத்தையெல்லாம் அந்த இடது காதில தேக்கி வச்சிக்கிட்டு காத்துக்கிட்டு இருந்தேன். என்னமோ சத்தமெல்லாம் கேட்டது மாதிரி இருந்திச்சி. திடீர்னு காதில 'ஹலோ'ன்னு ஒரு சத்தம் கேட்டுச்சி. நாம ரொம்ப மரியாதைக்காரங்க இல்லியா ...
அதனால நானும் திருப்பி 'ஹலோ' அப்டின்னேன். அந்தப் பக்கம் இருந்து மறுபடி 'ஹலோ' அப்டின்னு சத்தம் வந்திச்சி. நாம மரியாதை கொடுக்கிறதை நிறுத்தலாமோ ... அதனால நானும் மறுபடியும் 'ஹலோ' அப்டின்னு சொன்னேன். 'டொக்' அப்டின்னு சத்தம் வந்திச்சி. பேய்முழி முழிச்சிக்கிட்டு, இருந்தாலும் போனை காதில இருந்து எடுக்காம அப்டியே உறஞ்சு போய் நின்னுக்கிட்டே இருந்தேன். இனிம ஒருவேளை மறுபடி பேசுவாங்கன்னு நினச்சிக்கிட்டு இருந்தேன். ஒண்ணையுமே காணோம்.
என் முழியைப் பாத்து நவநீதன் என் கையில இருந்து போனை வாங்கி காதில வச்சுப் பாத்துட்டு 'கட்' பண்ணிட்டாங்க. ஹலோன்னு சொன்னா நீ உடனே ஏதாவது ட்ரெயின் எப்போ வரும்னு கேக்க வேண்டியதுதானே அப்டின்னான். 'அடப்பாவி, இதையெல்லாம் மொதல்லே சொல்லிக் கொடுத்திருக்கக் கூடாதா; இப்போ சொல்றியே' அப்டின்னு நினச்சுக்கிட்டேன். வேற யார்ட்டயாவது பேசுறியான்னு கேட்டான். 'யார்ட்டயாவது பேசணும்னுதான் ஆசையா இருக்கு; ஆனா யார்ட்ட பேசுறதுன்னு தெரியலையே..' அப்டின்னு மனசுக்குள்ள ஓடுன டயலாக்கை அவனிட்ட எப்படி சொல்றது? அதெல்லாம் வேண்டாம்னுட்டு போன் பண்ற ஆசைய மூட்ட கட்டி வச்சிட்டு வந்ததுதான் என் முதல் போன் கால்.

இது நடந்து ஏறக்குறைய அரை நூற்றாண்டு ஆகிப் போச்சு. இப்ப என்னடான்னா என் பேரப் பிள்ளைங்க - முளைச்சி மூணு இலை விடலை - போன்ல சர்வ சாதாரணமா பேசுறது மட்டுமில்ல... webcam-ல பாத்துக்கிட்டு, chat-ல audible போட்டு விளையாடுதுங்க. எல்லாம் கலிகாலம்...

*

*




*

*


Thursday, October 06, 2005

85. அது ஒரு நயா பைசா காலம்…





*

இப்போ எந்த ஊராயிருந்தாலும், நாட்டு வாழைப்பழம் என்ன விலையிருக்கும்..? ஒரு பழம் ஒரு ரூபாயிலிருந்து, ஒன்றரைக்குள் இருக்கும். சின்னப் பையனா இருந்தபோது வீட்டில் ஒரு அணா கொடுத்து பழம் வாங்கிட்டு வரச்சொல்லுவாங்க; அப்பவே விலையும் சொல்லி விட்டுடுவாங்க: ‘அணாவுக்கு நாலும்’பான்; அஞ்சு கேளு’. அதே மாதிரி கடைக்காரர் நாலு சொல்லுவார்; அஞ்சு அப்டின்னு சொன்ன உடனே ‘பிச்சுக்கோ’ என்பார். அந்த ரேட்ல ஒரு ரூபாய்க்கு 80 பழம்; அதாவது ரூபாய்க்கு 16 அணா; ஒரு அணாவுக்கு நான்கு காலணா; நாலணான்னா கால்ரூபாய்…இப்படியே போகும். அந்த வாய்ப்பாடு இப்ப எதுக்கு? காலணாவில் இரண்டு டைப்: ஒன்று பெரிய வட்டக் காசு, இப்ப உள்ள ரூபாய் சைஸைவிட பெருசா இருக்கும்; இன்னொண்ணு ஓட்டைக் காலணா. சுண்டு விரல்ல மாட்டிக்கலாம். நல்லா வாய்ப்பாடு எல்லாம் படிக்கிறதுக்கு ஏத்த மாதிரி அரை, கால்,அரைக்கால்,வீசம்…அப்புறம் எங்க காலத்துக்கு முந்தி என்னமோ தம்பிடி கணக்கெல்லாம் சொல்லுவாங்க.. இப்பல்லாம் tables அப்டின்னு சொல்றீங்களே அந்த வாய்ப்பாடெல்லாம் அப்ப நாங்க நல்லா மனப்பாடமா படிக்கணும். அது என்ன கணக்குன்னே தெரியாது. ஒவ்வொரு வாய்ப்பாடும் 16 வரை படிக்கணும்; ஏன் 15 வரை மட்டும் இல்ல அல்லது 20 வரை இருக்கக்கூடாதுன்னு தெரியலை. அதுக்கும் ரூபாய்க்கு 16 அணா என்கிறதுக்கும் தொடர்பு ஏதும் இருக்குமோ? அப்படித்தான் இருக்கணும்.


சரி..சரி.. நாங்க படிச்ச வாய்ப்பாட்டைப் பற்றி எங்களுக்கு என்னென்னனு கேக்றீங்களா? அது சரிதான். ஆனாலும் பாருங்க அப்படிப் படிச்ச அந்த வாய்ப்பாடுகள் நம்ம நாட்டையே எவ்வளவு உசத்திச்சு தெரியுமா? house mate மாதிரி ஒரு சைனாக்கார நண்பரோடு 100 நாள் அமெரிக்காவில இருந்தப்போ, இரண்டு பேரும் சேர்ந்து கடை, கண்ணிக்கு (இந்த வார்த்தைக்கு இன்னும் யாரும் அர்த்தமே சொல்லவில்லை..!)போவோம். அப்போவெல்லாம் இரண்டு பழக்கம் இரண்டு பேருக்குமே. எதை எடுத்தாலும் make எங்கேன்னு பார்ப்போம். நூற்றுக்கு 90 சைனாவாக இருக்கும்; ரொம்ப பெருமையா என்னைப் பார்ப்பார். பிறகு அவரவர் ஊர் காசுக்கு வேல்யூ போட்டுப் பார்ப்போம். நம்ம ஊரு காசுக்கு குத்து மதிப்பா 50-ஆல் பெருக்கிச் சொல்வேன்; அப்ப டாலருக்கு 47-48 ரூபாய்னு ஞாபகம். அவர் ஊர் காசுக்கு 8-ஆல் பெருக்கணும். மனக்கணக்குதான் நமக்கு அத்து படியாச்சே; டக்கு டக்குன்னு சொல்லிடுவேன். ஷாவோ - அதுதான் நம்ம சைனா நண்பர் பேரு - நம்ம சைனா நண்பருக்கு ஒரே ஆச்சரியமா போகும். ஒரு தடவை அவரு மண்டையைப்போட்டு கணக்குப் பாத்துக்கிட்டு இருந்தார்; நான் போனதும் சட்டுன்னு சொன்னேன். 56 X 8 -இதை மனக்கணக்கா சொன்னா மனுஷன் அசந்திருவார். எப்படி இப்படி டக்குன்னு சொன்னீங்கன்னு கேட்டார். முதல்ல 50 X 8 ஆல பெருக்கிட்டு, பிறகு 6 X 8 பெருக்கி அதைக் கூட்டிக்கவேண்டியதுதானேன்னு சொன்னேன். தலைவருக்கு ஒண்ணும் புரியலைன்னு தெரிஞ்சுது. அதுக்குத்தான இது வச்சிருக்கோம்ல அப்டின்னுட்டு கால்குலேட்டரை எடுத்து தட்ட ஆரம்பிச்சார். ஆனா, உடனே என்ன சொன்னார் தெரியுமா? ‘இதுனாலதான் நீங்க சாஃப்ட்வேர்ல எக்ஸ்பெர்ட்டா இருக்கீங்க’ அப்டின்னார். (software ஆளுகளே, உங்க மரியாதையை எவ்வளவு ஏத்தி உட்டுட்டு வந்திருக்கேன்; பாத்தீங்களா?)

இப்ப அணா கணக்கில இருக்கிற நல்ல விஷயம் தெரியுதா? (இந்த சைனா… தொடர்பான ஒரு விஷயம் இருக்கு; அதை இன்னொரு பதிவில சொல்லிடுவோம்…)

இப்படி இல்லாம் நல்லபடியா போய்க்கிட்டு இருந்தப்போ அப்பா ஒரு நாள் இன்னும் கொஞ்ச நாளிலிருந்து இந்த காலணா, அரையணா, எல்லாம் போய்ட்டு நயா பைசா வரப்போகுதுன்னாங்க. கால் ரூபாய், அரை ரூபாய், ஒரு ரூபாய் எல்லாம் இருக்குமானு கேட்டேன். அதெல்லாம் இருக்கும்;ஆனா மற்ற காசு எல்லாம் மாறும்னாங்க. அஞ்சு வாழைப்பழம் வாங்கணும்னா என்ன பண்ணணும் அப்டின்னேன். ஆறு நயா பைசா கொடுக்கணும்னாங்க. அப்போ ஒரு அணாவிற்கு 6 பைசான்னா, ஒரு ரூபாய்க்கு 6 X 16 = 96 பைசாதான் அப்டின்னா, ரூபாய்க்கு 96 பைசாவா அப்டின்னு ‘டாண்’ணு கேட்டேன்.(எப்படி நம்ம வாய்ப்பாடு அறிவு?) இல்ல 100 பைசா அப்டின்னாங்க. அந்த நாலு பைசா என்ன ஆச்சுன்னு கேட்டேன். அப்பா சொன்னது ஒண்ணுமே புரியலை.
அரை ரூபாய்க்கு 50 பைசா; கால் ரூபாய்க்கு 25 பைசா வரை சரியா கணக்கு வந்தது. அதுக்குப் பிறகு கணக்கு ரொம்பவே உதைச்சுது. இரண்டணாவிற்கு எத்தனை பைசா என்று கேட்டேன். அப்போ இரண்டு இரண்டணா சேர்ந்தா ஒரு கால் ரூபாய். அப்பா வசமா மாட்டிக்கிட்டாங்க. 12 பைசாவா, 13 பைசாவா? சரி அது போகுது; நாலணா கொடுத்து ஓரணாவிற்குப் பழம் வாங்கினால் மீதி 19 பைசா கேக்கணுமா, இல்லை 18 பைசாவா? அப்பா ரொம்ப பொறுமையா இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்; பிறகு எல்லாமே நயா பைசாவிலதான் இருக்கும்னாங்க. ஆனா, கால், அரை ரூபாய் எல்லாம் இருக்கும்னாங்க. அதுவரை சில கஷ்டம் இருக்கும்னாங்க. எனக்குப் பிடிபடலை. ரூபாய் இருக்கும்; அதிலும் கால், அரை ரூபாய் இருக்கும். ஆனால், மீதியெல்லாம் பைசாவில் இருக்கும். இது எப்படி? அப்ப எப்படி சாமான்கள் வாங்கிறதுன்னு கேட்டேன். கொஞ்ச நாளைக்கு அணாவிலும், நயா பைசாவிலும் இருக்கும்; கொஞ்சம் கொஞ்சமாக மாறி கடைசியில் எல்லாமே நயா பைசாவாக மாறிடும்னு சொன்னாங்க.

நாளும் நெருங்கி வந்திச்சு. google இந்த மாற்றம் 1957-ல் நடந்ததாகச்சொல்கிறது. அப்டின்னா அப்போ என் வயசு 12-13. அன்னைக்கி நயாபைசா புழக்கத்துக்கு வர்ரதாகச் சொன்னாங்க. எல்லாருமே, பெரியவங்க சின்னவங்கன்னு எந்த வித்தியாசமும் இல்லாம ஒரே பயங்கர எதிர்பார்ப்புடன் இருந்தோம். வீட்டிலிருந்து நாலைந்து வீடுகள் தள்ளிதான் போஸ்ட் ஆஃபீஸ் இருந்தது. காலையிலேயே பெரிய க்யூ ஆரம்பிச்சிருச்சி. நானும் மதியம் வரிசையில் போய் நின்றேன். கையில் இரண்டணா. இரண்டு போஸ்ட் கார்டு மட்டும் வாங்கி வரச் சொல்லியிருந்தார்கள். வரிசையில் நின்று ஏதாவது ஒப்புக்கு ஒரு கார்டோ கவரோ வாங்கிட்டு மீதி சில்லறையோடு வரும் ஆட்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம் - அந்தச் சில்லறைக் காசுகளைப் பார்க்க. அடேயப்பா, ஏதோ இந்தக் காலத்தில் ரஜனி படத்தில முதல் நாள் டிக்கெட் கிடைத்த ‘பக்தன்’ போல சில்லறை கிடைத்தவர்கள் இருந்தார்கள். நானும் என் டர்னுக்கு காத்திருந்து, கையில் சில்லறையுடன் வீடு வந்தேன். பள பளன்னு சதுர அஞ்சு பைசா, வளைவுகளோட இரண்டு பைசா,சின்னதா அழகா ஒரு பைசா என சில்லறை. பாக்க பாக்க ஆசையா இருந்திச்சு.

அப்புறம் கொஞ்ச நாள் ரொம்பவே குழப்பம்தான். அப்போதான் ஒவ்வொரு பைசாவுக்கும் மதிப்பு மரியாதை இருந்திச்சே. நாளாக நாளாக இந்த ஒரு பைசாவெல்லாம் இல்லாமலேயே போயிருச்சி; அடுத்து அஞ்சு, பத்து பைசாக்களுக்கு மரியாதை இல்லாம போயிருச்சி. பொதுவாகவே பிச்சைக்காரங்களுக்குப் பிச்சை போடறது எனக்குப் பிடிக்காது. ரொம்ப பாவமான ஆளுகளுக்கு கொஞ்சம் கூடவே போடலாம்; மற்றபடி எல்லோருக்கும் போடறது கிடையாது. உறவினர் ஒருவரோடு வெளியூர் சென்றிருந்த போது அவர் ஒரு பத்து பைசாவைப் பிச்சையாகப் போட, அந்தப் பிச்சைக்காரன் உறவினரைக் கன்னா பின்னாவென்று பேச, எல்லோரும் ஏதோ நாங்கள் அந்தப் பிச்சைக்கரானிடமிருந்து எதையோ திருடிவிட்டது போல பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்படி ஆச்சுது 10 பைசா நிலைமை. இப்போவெல்லாம், கால் ரூபாய், அரை ரூபாய் எல்லாமே காணாம போயிருச்சி.

இதுல என்னென்னா,நாலணா கொடுத்து ஓரணாவிற்குப் பழம் வாங்கினால் மீதி 18 பைசாவா, 19 பைசாவா என்பது அன்றைய பிரச்சனை; இன்றோ, பத்து ரூபாய் கொடுத்து 8ரூபாய், 60 பைசாவிறகு சாமான் வாங்கினால் மீதி ஒரு ரூபாய் மட்டும் திரும்பக்கொடுக்கும்போது, ‘இன்னும் 40 பைசா கொடு’ என்று கேட்கலாமா, கேட்கக்கூடாதா என்பது இன்றைய பிரச்சனை!



*

Oct 06 2005 08:12 pm சொந்தக்கதை.. and நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 5 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
12 Responses
கல்வெட்டு Says: after publication. e -->October 6th, 2005 at 9:34 pm e
தருமி,நல்ல பதிவு.நயா பைசா (எல்லா காசுகளும்) புழக்கத்தில் இருந்தே ஆக வேண்டும்.பொருளாதாரம் எனக்குத் தெரியாது.ஆனால், ஒரு ரூபாய்க்கு 100 பைசா என்று சொல்லிக்கொண்டு பைசாவை கண்ணில் காட்டாதாது அரசின் குற்றமே.பணவீக்கம்தான் இதற்குக் காரணம் என்றால்எல்லா வளரும் நாடுகளும் இப்படியா இருக்கின்றன?வளர்ந்த நாடாகிவிட்ட பின்னால் பைசா திரும்ப வந்து விடுமா?
Dondu Says: after publication. e -->October 6th, 2005 at 10:07 pm e
என்னைப் பொருத்தவரைக்கும் ஒரு கஷ்டமும் இல்லை. காலணா 2 நயேபைசே, அரையணா 3 நயேபைசே, முக்காலணா 5 நயேபைசே, ஒரணா 6 நயேபைசே. ஒன்றரையணா 10 நயேபைசே, மூன்றணா 19 நயேபைசே மற்றும் நாலணா 25 நயேபைசே. நாலணாவுக்குப் பிறகு பேட்டர்ன் அப்படியே ரிப்பீட் ஆகும்.நயா பைசா ஏப்ரல் 1, 1957-ல் அமலுக்கு வந்தது.
அன்புடன்,டோண்டு ராகவன்
துளசி கோபால் Says: after publication. e -->October 7th, 2005 at 3:45 am e
தருமி,
இப்பக் கொசுவர்த்தி வாங்கணும். ஓடிப்போய் எட்டணாவுக்கு வாங்கிட்டு வர்றீங்களா?
இந்த ஓட்டக் காலணா எனக்கு ரொம்பப்பிடிச்சது. கவுன்லே வரிசையா இருக்கற பட்டனிலேஅதைக் கோர்த்து பட்டன் போட்டுக்கிட்டு, பக்கத்துக் கடையிலெ ஜஸ்ட் ஒண்ணு மட்டும் கொடுத்து எதாவது( என்ன கடலை முட்டாய்தான்) வாங்கித் தின்றதுதான். எத்தனை பட்டன் இருக்கோ அத்தனை காலணா கிடைக்கும்.அதனாலே எப்பவுமே ஃபுல்லா பட்டன்த்ரூ சட்டைதான் போட்டுக்கறது.
ஒரு சமயம்(1994) ஹளபேடு, பேலூர் போனப்ப அங்கே பழையகாலத்துக் காசு ஓட்டைக்காலணா, நல்ல காலணா,அப்புறம் பிரிட்டிஷ் காலத்துக் காலணா, ஒரணா ரெண்டணான்னு ஒரு 40 காசுகளை 100ரூபாய் கொடுத்துவாங்கிவந்து வச்சிருக்கேன். இங்கே ஆரம்பப்பள்ளியிலே ஒரு நாள் அதைக் கொண்டுபோய் show & tellசெஞ்சாச்சு.
koothaadi Says: after publication. e -->October 7th, 2005 at 5:32 am e
இந்த அணா விஷயத்த தாத்தா கிட்ட இருந்து அடிக்கடி கேட்டு இருகேன் ,அரைக்காணி etc எல்லாம் சொல்லுவார் ,கணக்குல 100 மார்க் வாங்கினாலும் ஒரு மண்ணும் புரியாது.நீங்க கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லியிருக்கீங்க.
பிச்சைக்காரன் இப்பல்லாம் 1 ரூபா தான் வாங்குறதாக் கேள்வி .
//பத்து ரூபாய் கொடுத்து 8ரூபாய், 60 பைசாவிறகு சாமான் வாங்கினால் மீதி ஒரு ரூபாய் மட்டும் திரும்பக்கொடுக்கும்போது, ‘இன்னும் 40 பைசா கொடு’ //
இப்ப எல்லாம் சில்லறையக் கேட்டா நம்மளைல்லா பிச்சைக்காரன் மாதிரி பாக்குறானுக..
வசந்தன் Says: after publication. e -->October 7th, 2005 at 6:01 am e
//ஒரு சமயம்(1994) ஹளபேடு, பேலூர் போனப்ப அங்கே பழையகாலத்துக் காசு ஓட்டைக்காலணா, நல்ல காலணா,அப்புறம் பிரிட்டிஷ் காலத்துக் காலணா, ஒரணா ரெண்டணான்னு ஒரு 40 காசுகளை 100ரூபாய் கொடுத்துவாங்கிவந்து வச்சிருக்கேன்.//
பாத்தீங்களா தருமி, துளசி எவ்வளவு ஏமாளின்னு. எல்லாமாச் சேத்தா ஒரு பத்துரூபாகூடத் தேறாது. அதுக்கு 100 ரூபா கொடுத்து வாங்கி வந்திருக்கிறா;-)
மூர்த்தி Says: after publication. e -->October 7th, 2005 at 7:24 am e
பெரியவர் தருமி அவர்களே,
தாங்களால் இந்த வாரம் மிகவும் சிறப்பாகச் செல்கிறது.
அந்தக் காலத்தில் ஒரு ரூபாய்க்குப் புளி கேட்டால் பின்னால் வண்டி நிற்கிறதா என கடைக்காரர் கேட்பார்! இப்போது போய்க் கேட்டால் நாக்கை நீட்டு தடவுகிறேன் என்பார்கள்!
எல்லா விலையும் ரொம்ப ஏறிப் போச்சுங்க… சம்பளம் மட்டும் எல்லாருக்கும் ஏறமாட்டுது.
ஷ்ரேயா Says: after publication. e -->October 7th, 2005 at 10:07 am e
துளசி.. கொசுவர்த்திச் சுருள் நீங்க வாங்கி வாங்கியே கையிருப்பு(கடையிருப்பு?) தீர்ந்திருச்சாம்!!
வசந்தன் - உமக்கு எரிச்சலோ? எங்கட 1, 2, 5, 10 சதக் கதைகளை எடுத்து விடுமன்..
(1, 2, 5,10 சதங்கள் கொஞ்சம், பழைய எண்கோண 2 ரூபா & 2 ரூபாத்தாள் 5 ரூபாத்தாள் - இதெல்லாம் ஒரு பெட்டீக்க போட்டு வைச்சிருந்தனான் இலங்கையில.. அம்மா எங்கையும் தூக்கிப் போட்டாவோ தெரியேல்ல :S.. கேட்கோணும்.)
ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி தருமி.
கோ.இராகவன் Says: after publication. e -->October 7th, 2005 at 12:12 pm e
இந்த அணாக்களையெல்லாம் நான் பயன்படுத்தியதில்லை. ஆனால் ஐந்து பைசா, ஒரு பைசா எல்லாம் பார்த்திருக்கிறேன். நெளி நெளி பார்டரோடு வரும் அந்த பத்து பைசாவோ அழகோ அழகு. விரலுக்குள் வைத்து அந்த நெளிவுகளைத் தடவி உணர்வது என்ன சுகம். அதெல்லாம் மிகச் சிறிய வயதில்.
இந்த மிச்ச நாப்பது காசு எல்லாம் பாக்கனுமுன்னா கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டியதுதான். இந்தியாவின் பெரு நகரங்களில் எல்லாத்தையும் கிரெடிட் கார்டுல வாங்க முடியுதே!
வசந்தன் Says: after publication. e -->October 7th, 2005 at 1:28 pm e
//நயா பைசா ஏப்ரல் 1, 1957-ல் அமலுக்கு வந்தது.//
அப்ப முட்டாள்கள் தினம் கொண்டாடுறனீங்களோ?
dharumi Says: after publication. e -->October 7th, 2005 at 10:18 pm e
கல்வெட்டு,“பைசா திரும்ப வந்து விடுமா?”-நல்லா வருமே! ஆச தோச அப்பள வடை….!
டோண்டு,“காலணா 2 நயேபைசே, அரையணா 3 நயேபைசே:- அப்போ நீங்க கணக்கில ரொம்ப வீக்கே? ஏன்னா அப்ப என் கேள்வியே காலணாவுக்கு ரெண்டுன்ன, அரையணாவுக்கு நாலில்லையா என்பது தான்.என்னன்னா, நீங்க பெரியவங்க சொன்னதை அப்படியே கேட்ட நல்ல பிள்ளை. நானோ…அதுதான், பின்னால மத விதயத்திலேயும் ஆகிப்போச்சு போல!
துள்சி,“இப்பக் கொசுவர்த்தி வாங்கணும்.”- இதுக்குத்தான் சொன்னேன். நம்ம சைடு வாங்கன்னு; ‘குதிரையில போறது’ நம்ம பாட்டுக்கு நினச்ச நேரத்தில, நினச்ச இடத்தில…
dharumi Says: after publication. e -->October 7th, 2005 at 10:28 pm e
கூத்தாடி,கணக்குல 100 மார்க் வாங்கினாலும் …அதெல்லாம் எப்டீங்க…நம்மல்லாம் அதுமாதிரி தப்பெல்லாம் பண்ணினதே இல்லீங்க!
வசந்தன்,“பாத்தீங்களா தருமி, துளசி எவ்வளவு ஏமாளின்னு. எல்லாமாச் சேத்தா ஒரு பத்துரூபாகூடத் தேறாது. அதுக்கு 100 ரூபா கொடுத்து வாங்கி வந்திருக்கிறா;-)”எல்லாம் ஒரு antiqueதான். நாளைக்கே 1000ரூபாய்க்கு வேல்யூ போகலாம். ஒட்டியாணம் வாங்கிறவங்களுக்கு இதல்லாம் ஒரு ஜுஜுபி’ங்க வசந்தன்! துள்சிட்ட சொல்லிடாதீங்க, சரியா?
மூர்த்தி,“எல்லா விலையும் ரொம்ப ஏறிப் போச்சுங்க… சம்பளம் மட்டும் எல்லாருக்கும் ஏறமாட்டுது. ” -software ஆளுகளே இப்படி சொன்னா எப்படி?
ராகவன்,“எல்லாத்தையும் கிரெடிட் கார்டுல வாங்க முடியுதே!”-அதுக்காக நாட்டுப் பழம் வாங்கவுமா plastic money?
Dondu Says: after publication. e -->October 7th, 2005 at 10:33 pm e
ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்னு சொல்ல முடியாது. நான் கூறிய மாற்றுகள் அதிகாரபூர்வமானவை. ஒரணாவிலிருந்து கூறுவேன்.
8 நயே பைசே ஒன்றேகாலணா, 10 நயே பைசே ஒன்றரையணா, 11 நயே பைசே ஒன்றேமுக்காலணா, 12 நயே பைசே இரண்டணா, 14 நயே பைசே இரண்டேகாலணா, 15 நயே பைசே இரண்டரையணா, 17 நயே பைசே இரண்டேமுக்காலணா, 19 நயே பைசே மூன்றணா, 21 நயே பைசே மூன்றேகாலணா, 22 நயே பைசே மூன்றரையணா, 24 நயே பைசே மூன்றேமுக்காலணா மற்றும் 25 நயே பைசே நான்கணா.
இதன் பிறகு பேட்டர்ன் ரிப்பீட்டுதான்.
அன்புடன்,டோண்டு ராகவன்

Thursday, August 25, 2005

57. எனது "ஜாவா மஹாத்மியம்"...

ஜாவா எனக்குத் தண்ணி பட்ட பாடு. பிறகு என்ன, கொஞ்சமா, நஞ்சமா.. 22 வருஷத் தொடர்பு என்றால் சும்மாவா? மேலே சொல்வதற்கு முன்பே ஒரு முக்கியமான சேதி. ஜாவா என்றதும், software கில்லாடிகளாக நிறைந்திருக்கும் இந்த வலைஞர்களில் பலர் நான் 'ஜாவா'ன்னு சொன்னது JAVA என்று நினைத்திருக்கலாம்.. இல்லை..இல்லை.. நான் சொல்லவந்தது - JAWA, 1966 மாடல், 250 c.c., Made in Czechoslovakia (இப்போ அந்த நாடே இல்லையோ?!), MDA 2107, என்னிடம் வந்தபோது 'சிகப்பழகி'; பின் எனக்குப் பிடித்தவாறு 'கறுப்பழகி'யாக மாறியவள். 1970 அக்டோபர் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நான் 'அவள்' கைப்பிடித்தேன் - I mean its 'handlebar' ! அப்போது நான் ஒரு bachelor. ஆனால், 1992-ல் -22 ஆண்டுகள் என் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொண்ட'அவள்' என்னைவிட்டுப் பிரியும்போது எனக்கு இரு வளர்ந்த குழந்தைகள். அந்தப் 'பிரிவு' என்னைவிட என் மகள்களை மிகவும் பாதித்தது. சின்னவளுக்குக் கண்ணீரே வந்துவிட்டது.

தஞ்சையில் 4 ஆண்டுகள் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு நல்ல மூடில், உள்ளூரில் வேலை பார்த்தால் ஒரு பைக் வாங்கிக்கொள் என்று அப்பா permission கொடுக்க, என் நல்ல நேரம் அமெரிக்கன் கல்லூரியில் 1970-ல் வேலை கிடைத்த உடனே அப்பாவை அனத்த ஆரம்பித்தேன். நான் அப்போது கல்லூரியில் வேலை பார்த்தது 'சித்தாள்' வேலை; அதாவது, அப்போதெல்லாம், கல்லூரிகளில் லெக்சரர் மட்டுமல்லாமல், tutor/demonstrator என்ற போஸ்ட்டும் உண்டு. ஒரே தகுதியிருப்பினும், ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுவதால், சில பாவப்பட்ட ஜென்மங்களுக்கு அந்தப் பதவிகளே கிடைத்து, பின், உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்காய் தவமிருந்து லெக்சரர் பதவி உயர்வு பெறவேண்டும். அது ஒரு சோதனைக்காலம். நான் சேர்ந்தது அப்படி 'சித்தாள்' வேலையில்தான். அப்பாவுக்கு இது ஒரு சாக்காகப் போய்விட்டது. 'பார்க்கிற வேலை என்னவோ சித்தாள் வேலை; இதில் பைக்கில் போய் இறங்கினால் ரொம்ப நல்லாவே இருக்கும்; போ..போ... பிறகு பார்த்துக்கொள்ளலாமென' சொல்ல மனம் உடைந்து, தாடி இல்லாமல் சோகம் காட்டி, பிறகு பயங்கர பலமுனைத் தாக்குதல்களைத் தொடுத்து அப்பாவைச் சரிக்கட்டினேன்.

மனம் மாறிய அப்பா அவருக்குத் தெரிந்த நண்பரிடம் இருந்த ஜாவா பைக்கை எனக்காக வாங்கி, ஒரு சனிக்கிழமை இரவு 'வண்டியை நாளைக்கு எடுத்துக்கொள்' என்று அதன் சாவியைக் கொடுத்தபோது ஒரே 'ஜிவ்'தான். ஏனென்றால், அப்போது மொத்தமே மூன்றே மூன்று வகை பைக்குகள்தான். புல்லட் 350 சி.சி.- அப்போது விலை 4,500 ரூபாய்; அந்த வண்டியைப் பார்க்க ஆசை ஆசையாகத்தான் இருக்கும். பார்க்கும்போதெல்லாம் யானை நினனவுதான் வரும். அடுத்தது ஜாவா 250 சி.சி. - விலை 3,500. பார்க்கும்போது வரும் நினைவு: முன்னங்கால்களைத் தூக்கி நிற்கும் அழகுக் குதிரை. முன்றாவது, ராஜ்டூத் 150 சி.சி. விலை 2,500. சரியான எருமை மாடு மாதிரி நிற்கும். பிடிக்காது. 'குதிரை' கிடைத்ததும் எக்கச்சக்க சந்தோஷம். என் குதிரைக்குக் கொடுத்த விலை 2,500.

அதுவரை வண்டி நன்றாக ஓட்டத்தெரியாது. தஞ்சையில் தங்கியிருந்த லாட்ஜில் வேளாண்மைத்துறையில் வேலை பார்த்த அடுத்த அறை நண்பருக்கு அளிக்கப்பட்டிருந்த 'எருமைமாடு'- அதாங்க, ராஜ்தூத்தை அவர் வெளியூர் செல்லும்போது ஆணியைப் போட்டு எல்லோரும் எடுத்து அந்த காம்பவுண்டுக்குள்ளேயே ஓட்டுவோம். அந்த அனுபவம் மட்டுமே உண்டு. அடுத்த நாள், நண்பர் ஒருவரை அழைத்துச்சென்று, நான் படித்த மரியன்னை பள்ளியில் இருந்த என் குதிரையை எடுத்துக்கொண்டு நேரே ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்குச் சென்றோம். நட்ட நடு மைதானத்தில் வண்டியை நிப்பாட்டிவிடு நண்பர் 'தம்' அடிக்க உட்கார்ந்து விட்டார். சரி வண்டியை எடு என்றார். ஸ்டார்ட் செய்தேன்; கியர் போட்டேன்; நாலைந்து சுற்று சுற்றினேன். அவ்வளவுதான், உனக்கு ஓட்டத் தெரிந்துவிட்டது என்று சொல்லி நண்பர் வீட்டில் கொண்டுவந்து விட்டு விட்டு அப்பாவிடம் நல்ல சர்டிபிகேட் கொடுத்துவிட்டு போய்விட்டார்.

ஏழுமணிக்கு முந்தி எப்பவுமே எழுந்திருக்காத நான் அடுத்த சில நாட்களுக்கு ஐந்து ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து குதிரையை நன்றாகத் துடைத்து, அப்போதெல்லாம் ஆள் நடமாட்டமே இல்லாமலிருந்த (இப்போது அங்கு ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்து ஒரே மக்கள் கூட்டம்தான்) வைகை நதிக்கரையின் ஓரமாக இருக்கும் சாலையில் சைலன்சர் இல்லாத வண்டியை ஓட்டிப் பழகினேன். கொஞ்சம் தைரியம் வந்த உடன் கல்லூரிக்கு ஓட்டிப்போனது; போகும் வழியில் எல்லோருக்கும் நடப்பது போலவே, போலீஸ்காரரைப் பார்த்ததும் வண்டி நின்றுபோனது - எல்லாமே நினைவிலிருக்கிறது. இப்போ பைக் ஓட்டுபவர்களுக்குத் தெரியுமோ என்னவோ, இந்தக்காலத்து பைக்குகள் எல்லாமே கையாலேகூட ஸ்டார்ட் செய்யமுடியும். ஆனால், புல்லட், ஜாவா பைக் இரண்டுக்குமே செம உதை கொடுக்கவேண்டும். கொஞ்ச காலம் வரை இடது கால் பெருவிரலில் எப்பவுமே ரத்தக்காயத்தோடேயே அலைந்தேன். ஷூகூட போடமுடியாது.

எப்போது கோடை விடுமுறை வருமெனக் காத்திருந்தேன். விடுமுறையும் வந்தது.
சொந்தஊருக்கு பைக்கிலேயே செல்ல முடிவு செய்திருந்தேன். 130 மைல்கள். ஊருக்குள் நுழைந்ததும் பைக் பின்னாலேயே ஒரு பெருங்கூட்டமாகச் சின்ன பசங்கள் எல்லோரும் ஓடிவர வீடுவந்து சேர்ந்தேன். என் அப்பம்மாவிற்குப் பெருமை பிடிபடவேயில்லை; திருஷ்டிதான் சுற்றவில்லை. நான் வீட்டுக்குள் வந்த பிறகும் சின்னப் பிள்ளைகளின் கூட்டம் குறைந்தபாடில்லை. அப்போது எங்கள் ஊர் பக்கம் நானே பைக் எதுவும், யாரும் ஓட்டி வந்தும் பார்த்ததில்லை. பசங்க கூட்டத்திலிருந்து பைக்கைக் காப்பாற்ற பாதுகாப்புப் படை ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டியதாகப் போய்விட்டது. அன்று ஊருக்குப் போனதால் என் வண்டிக்குப் புதுப் பெயர் ஒன்று கிடைத்தது. பசங்க எல்லோரும் வண்டியைச் சூழ்ந்துகொண்டும், நான் போகும்போது பின்னாலேயே கூட்டமாய் ஓடி வந்தும், 'டக்கு மோட்டார் ...டக்கு மோட்டார்' என்றார்கள். அந்தப் பெயர் மிகவும் பிடித்ததால் 'Darling Duck' என்று நாமகரணம் சூட்டினேன். ஆனால், இந்தப் பெயரைக் கடைசியில் மாற்றும்படியானது. என்ன பெயர், ஏன் அந்தப் பெயர் என்பதைப் பிறகு சொல்கிறேன்.

நான் பைக் வாங்கியபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய், ஏழு பைசா !. Fill tha tank எல்லாம் எங்களுக்கு சர்வ சாதாரணம்! கால் கீழேயே பாவாது; துறையிலிருந்து காண்டீன் போகவேண்டுமானாலும், டென்னிஸ் கோர்ட் போகவேண்டுமானாலும் பைக்தான். எனக்கு டிரைவிங் சொல்லிக்கொடுத்த நண்பரும் ஜாவா வைத்திருந்தார். இரண்டுபேருமாகச் சேர்ந்தே தனித்தனி பைக்கில் சுற்றுவோம். 'சர்க்கஸ்காரங்க மாதிரில்ல சுத்துறாய்ங்க'ன்னு மற்ற நண்பர்கள் அடிச்ச கமெண்ட் ரொம்ப பெருமையா இருந்திச்சு. ஆனா, கல்யாணம், காட்சி, குழந்தை, குட்டின்னு வந்தப்புறம் இந்த நிலை மாறிப்போச்சு. எங்கள் கல்லூரி slang படி நான் ஒரு 'ஒத்தை மாட்டு வண்டி'; அதாவது, என் மனவி அப்போது வேலை பார்க்கவில்லை; நான் மட்டுமே 'தனி மாடாக' வண்டியை இழுத்தாகணும். வாங்கும் சம்பளம் இழுத்துப் பிடித்து 'வண்டி'யை ஓட்டுவதற்கே சரியாக இருக்கும்; இதில் பைக் வேறு. அதுக்கு ஊத்தணுமே, பெட்ரோல். நிலைமை ரொம்ப 'டைட்' ஆன பிறகு, சம்பளம் வாங்கியதும் போடற பெட்ரோல் முதல் பத்து நாளைக்கோ ஒரு வாரத்துக்கோ வரும்; குடும்பத்தோடு போகவேண்டிய கடமைகளை இந்த நாட்களுக்குள் முடிப்போம். பிறகு, அடுத்த பத்து நாட்களில் அவசரத்தேவைகளுக்கு மட்டும். கடைசி பத்து நாட்களுக்கு 'நடராஜா செர்வீஸ்'தான். முதல் வாரம் 'பெட்ரோல் வாரம்'; கடைசி வாரம் 'பஸ் வாரம்'. த்சொ, த்சொ... ஐயோ, பாவம் இந்த மனுஷன் அப்டின்னு யாரும் நினைச்சீங்கன்னா, இன்னும் ஒரு விஷயம் சொல்லணும். நான் பைக் வாங்கும்போது ஏறத்தாழ 200 ஆசிரியர்கள் இருந்த எங்கள் கல்லூரியில் இருந்த இருசக்கர வாகனங்களின் மொத்த எண்ணிக்கையே பன்னிரெண்டே பன்னிரெண்டுதான்! நான் பதின்மூன்றாவது ஆள். என்ன பண்றது; அப்போ கல்லூரி வாத்தியார்கள் நிலைமை அவ்வளவுதான்.

அதோடு இப்ப எல்லாம் ரோட்ல போகும்போது அங்கங்கே இருசக்கர வாகனங்களைக் 'கூறு கட்டி' வைத்து விற்கிறார்கள். நீங்கள் வண்டி ஒன்று வாங்கலாமா என்று ஒரு கனவு கண்டால்கூட அடுத்த நாளே உங்கள் வீட்டுக்கு ஆள் வந்திடும்- 'சார், வண்டி வாங்கலையோ, வண்டி' என்று கூவிக்கொண்டு. ஆனால், அப்போதெல்லாம் வண்டிகள் வாங்க ஆட்களைத் தேடித்தான் பிடிக்கவேண்டும். இயலாமை ஒரு பக்கம்; அதைவிட இதெல்லாம் தேவையில்லை என்ற மனப்பாங்கு அதிகம். It was out and out a luxury item! பைக்குகள் வாங்க ஆள் கிடையாது; ஆனால், ஸ்கூட்டருக்கு மட்டும் கொஞ்சம் போட்டி உண்டு. அதுவும் demand-supply விதிகளால்தான்! அப்போது இருந்த வண்டிகள்: லாம்பி என்று செல்லமாக அழைக்கப்பட்ட லாம்ப்ரெட்டாவும், வெஸ்பாவும்தான். அதிலும், இந்த வெஸ்பாவுக்கு ஏக டிமாண்ட்; அதிலும், குறிப்பாக 'chetak' என்று ஒரு மாடல். அடேயப்பா, அந்த வண்டி வச்சிருந்தா அவர்மேல்தான் எத்தனை பொறாமைக்கண்கள். அப்போது, டாலரில் கொடுத்தால் இந்த வண்டி உடனே கிடைக்கும். எங்கள் கல்லூரியிலிருந்து அமெரிக்காவிற்கு வருஷத்திற்கு ஒருவராவது போய் வருவதுண்டு. போய் வந்தவர்கள் வந்த வேகத்தில் செய்வது ஒரு chetak வாங்குவதுதான். ஒரு chetak கல்லூரிக்குள் வந்து விட்டால் அதைச் சுற்றி ஓரிரு வாரங்களுக்காவது அப்பப்போ ஆசிரியர் கூட்டம் வேடிக்கை பார்க்க நிற்கும். டாலர் இல்லாமல் சாதாரண முறையில் வாங்க வேண்டுமானால், ரூபாய் 500 கட்டிவிட்டுக் காத்திருக்கவேண்டும் - எத்தனை வருடங்களுக்கு தெரியுமா? Just for 6 years! கையில் காசு இருந்தாலும் காத்திருக்கவேண்டும். அதிலும் சிலர் ஒரு வியாபாரம் செய்வதுண்டு. 500 ரூபாய் கட்டிவிட்டு, 6 ஆண்டுகள் கழித்து வண்டி அலாட் ஆனதும் அதை 'பிரிமியத்துக்கு' விற்று விடுவதுண்டு. கட்டிய 500 ரூபாயுடன் மேலும் ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐந்நூறு வாங்கிக் கொண்டு வண்டியைக் கொடுத்துவிடுவார்கள். இப்படி வாங்குபவர்களுக்கு கொஞ்சம் ரிஸ்க் உண்டு; ஆனாலும் இந்த வியாபாரம் வெற்றி நடை போட்டு வந்தது. இப்படி ஒரு காலத்தில் பார்த்துவிட்டு, இப்போது தெரு முனைகளில் வண்டிகளை நிப்பாட்டிகொண்டு, ' கூவி கூவி ' விற்பதைப் பார்க்கும்போது... என்னமோ போங்க..எனென்னமோ நடக்குது நாட்டிலன்னு நீட்டி முழக்கணும்போல தோன்றும்.

ஆனாலும், சும்மா சொல்லக்கூடாது என் 'டார்லிங் டக்'கை. எப்போதுமே ரொம்ப தொல்லை கொடுத்ததேயில்லை. ஏதோ, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல அதுபாட்டுக்கு ஓடியது. குடும்பத்தில் ஒரு நபர் மாதிரிதான். ஜாவா + தோளில் ஒரு ஜோல்னா பை + கழுத்தில் அடிக்கடி ஒரு காமிரா - இதுதான் ரொம்ப நாள் என் அடியாளமாக இருந்தது. வைத்திருந்த 22 ஆண்டுகளில் அநேகமாக ஒரு 18 ஆண்டுகளுக்காவது horn இருந்திருக்காது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல நல்ல டிரைவருக்கு எதற்கு horn! டார்லிங் டக்கில் பல இடங்களுக்கும் பயணம் - தனியாக, குழுவாக. எனக்கும் இளம் வயசு; என் பைக்குக்கும் இளம் வயசு. ஊர்சுற்ற கேட்கணுமா, என்ன? ஒரு முறை தஞ்சை பயணம். வேலைபார்த்த இடத்தில் பழைய நண்பர்களைப் பார்க்கலாமென ஒரு பயணம். காலையில் மதுரையிலிருந்து புறப்பட்டேன். திருமயம் என்று நினைக்கிறேன். அந்த ஊரிலுள்ள கோட்டையைத் தாண்டியதும் கண் முன்னே நீ...ண்...ட நெடுஞ்சாலை; நல்ல சிமெண்ட் சாலை; கண்ணுக்கெட்டிய தொலைவு உயிரினம் ஏதும் காணோம்; வேறு வாகனங்களும் இல்லை. ஒரு ஆசை; டார்லிங் டக்கின் முழு 'பலத்தையும்' டெஸ்ட் செய்துவிட ஆசை. த்ராட்டிலைத் திருகினேன்; முழுவதும் திருகியபிறகு அதன் முழுத் திறனில் வண்டி சென்றபோது - வண்டி அப்படியே மிதப்பதுபோல உண்ர்ந்தேன்; வண்டி தரையைத் தொட்டு செல்வதுபோலவே தோன்றவில்லை; மெல்ல குனிந்து ஸ்பீடாமீட்டரைப்பார்த்தேன். 102. அதைப் பார்த்த பிறகே பயம் வந்தது. மெல்ல த்ராட்டிலை விடுத்தேன். அம்மாடியோவ்! செய்தது தவறு என்று அப்போதுதான் தெரிந்தது. அதன் பிறகு 'அந்த அளவுக்கு' தவறு செய்யவில்லை. இப்போது காரில்கூட எழுபதைத் தொட்டால் பயம் வந்துவிடுகிறது.

ஏறத்தாழ பதினெட்டு பத்தொன்பது ஆண்டுகள் நான் ஒருவனே கையாண்டதாலோ என்னவோ டார்லிங் டக் நல்ல கண்டிஷனில் இருந்துவந்தது. அதன் பிறகு, நண்பர்களாக மாறிவிட்ட என் பழைய மாணவர்கள் - அதில் பலரும் பெரிய பதவிகளுக்கு வந்துவிட்டிருந்தனர் - பைக்கை 'ஆத்திர அவசரத்திற்குக்' கேட்கும்போது எப்படி இல்லை என்று சொல்வது. அதுவும் சிலர் மதுரைக்கு வந்தால் என்னோடு இருப்பதே அதிக நேரமாயிருக்கும். அவர்களுக்கு எப்படி இல்லையென்பது. அப்படி நாலைந்து நண்பர்கள். வயசும் ஆகிப்போச்சு. எல்லாமாகச் சேர்ந்து பைக் இப்போது சல சலக்க ஆரம்பித்துவிட்டது. டார்லிங் டக் என்ற பெயரை மாற்றிவிட்டு புதுப்பெயரைச் சோகமாகச் சூட்டினேன் - 'கண்ணகி' என்று. ஏன் தெரியுமா? சிலம்பைக் கையில் எடுத்துக்கொண்டு மதுரையை வலம் வந்தாளல்லவா, சிலம்பல்லவா கைகளில்; ஜல்..ஜல் என்று சத்தம் வந்திருக்கணுமே. என் பைக்கும் இப்போது சல சலவென மதுரையம்பதியின் தெருக்களை வலம் வருகிறதல்லவா, அதனால்தான்.

1992. 'கண்ணகி'யை விற்றுவிட்டு வேறு வண்டி வாங்க முடிவெடுத்தேன்; மனைவிக்கும் முக்கியமாக மகள்களுக்கும் இந்த முடிவு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பிள்ளைகளுக்குப் பிறந்த நாளிலிருந்தே இர்ந்துவந்த தொடர்பல்லவா? ஆனாலும் விற்றுவிட முடிவு செய்து, 2,500 ரூபாய்க்கு வாங்கியவர் வந்து வீட்டிலிருந்து MDA 2107-யை / டார்லிங் டக்கை / கண்ணகியை எடுத்துச்செல்லும்போது மனதை என்னவோ செய்தது. பக்கத்தில் இருந்த சின்ன மகளின் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.