Sunday, December 31, 2023

1268. ஒரு பொன்மாலைப் பொழுது ...

ஓராண்டு ஓடிப் போனதா .. வயதொன்றும் கூடியதா ..? நட்பு ஒன்றிற்கு அதைச் “சீராக” செய்து முடிக்க ஆசை. வரச் சொன்னான்; சென்றேன்.

கொண்டாட வேண்டுமென்றார்கள். கொண்டாடி விடுவோம் என்றான். வரச் சொன்னான் .. ஒன்று வந்தது; இனி அதிகமாக வேண்டாமென்று நினைத்திருந்த ஒரு புத்தாண்டு உறுதியை அன்று மட்டும் கொஞ்சம் ஒதுக்கி வைக்க நினைத்தேன். ஏனெனில் வந்தது அப்படி ஒரு சிறப்பானதாக இருந்தது. HANNESSY XXO.



பேசிகொண்டிருந்தோம். வெளியே ஒரு கார் நின்று கொண்டிருந்தது. நண்பனிடம் அதைப் பற்றிக் கேட்டேன், BMW - TWO DOOR M2 என்றான். collectors' choice மாதிரியான வகை அதன் ஜாதகம் என்றான். அதன் சரித்திரம் சொன்னான். ஆடிப் போகுமளவிற்குக் கோடிக் கணக்கியல் விலை சொன்னான். போவோமா என்றான். அதற்குத்தானே கேள்வியையே முன் வைத்தேன் என்றேன். ஆனால் மெல்ல போவோம் என்றேன். ஏனெனில் அது எத்தனை வேகமாகப் போகும் என்று சொல்லியிருந்தான்.
உட்கார்ந்தோம். மெல்லதான் போனோம்; ஏனெனில் வேகத்தடையில் இடிக்குமாம். மெல்ல சென்று, தடை கடந்து பெரிய ரோட்டுக்கு வந்தோம். மெல்லவே ஊர்ந்தோம். மூன்று செகண்ட் எண்ணி முடித்து speedometer-யைப் பார்க்கச் சொன்னான். மூன்று எண்ண ஆரம்பிக்கும்போதே கார் லேசாக மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது போலிருந்தது. மூன்று முடித்துப் பார்த்தேன். நூறில் பறந்தது; அப்பனே! மெல்லப் போ என்றேன். சரிந்தான் மெல்ல. கார் இப்போது மிதந்தது. சிறிது தூரம் மிதந்து, மீண்டும் வீடு செல்ல வளைந்து திரும்பினோம். இன்னொரு 100 கி.மீ. என்று சொல்லி அழுத்த, மூன்று விநாடியில் நூறைத் தொட்டு, பின் மிதந்தது.





மூன்று வினாடியில் நூறைத்தொட்டு சில நிமிடங்களே சென்றாலும் ஏறத்தாழ அந்தக் காலத்தில் சுஜாதா திருச்சி சாலையில் ஒரு நண்பரின் race பைக்கில் பறந்த அனுபவம் பற்றியெழுதியதை நான் வாசித்தது நினைவுக்கு வந்தது. (அது முழுவதும் நினைவில் இருந்திருந்தால் இங்கே பேசாமல் அதையே சேர்த்திருப்பேன்.) எனக்கெதற்கு இந்த வீண்வேலை.
பின்பு மீன்,ஆடு என்று மேய்ந்து விட்டு, குடும்பமாக உட்கார்ந்து கடந்த 40 - 45 ஆண்டனுபங்களைப் பிள்ளைகளோடு மேய்ந்து நள்ளிரவுக்குப் பிறகு வீடு திரும்பினோம்.
All reactions:
Nattarasan Nattarasan, Vaigai Alagar and 11 others



Friday, December 22, 2023

1267. ஒரு பெரும் புதையல் மீது உட்கார்ந்திருக்கின்றேனோ ....?

ஒரு பெரும் புதையல் மீது உட்கார்ந்திருக்கின்றேனோ ....?




நான் இப்போது மொழிபெயர்க்கும் நூல் நம் பண்டைய இந்தியாவின் வரலாறு பற்றியது. இதை எழுதும் போது நினைவில் கீழடி தொடர்ந்து நின்று கொண்டிருந்தது. இந்திய வரலாற்றின் ஆரம்பத்தை கீழடியிலிருந்து ஆரம்பித்துத் தொடர வேண்டுமென்று சொல்கிறார்கள். இதுவரை மொழிபெயர்த்த வரலாற்று நூல்களில் தென்னிந்தியப் பகுதிக்கான இடம் இல்லை; அல்லது அதிகமில்லை. மாற்றாந்தாய் மனப்பான்மை வேரூன்றியிருப்பது போலவே தெரிகிறது.

இப்போது எழுதும் நூலில் கங்கைச் சமவெளியில் நடந்த ஆய்வுகளைப் பற்றிய குறிப்புகளில் அப்பகுதியில் பல மண் மேடுகளில் ஆய்வு செய்துள்ளனர். பின்னாளில் நடந்த ஆய்வுகளினால் //19-ம் நூற்றாண்டின் புவியியல் - பண்டைய வரலாற்று வல்லுநருமான ராபர்ட் புருஸ் ஃபூட் (Robert Bruce Foote) என்பவரே  முதல் முதலாக இந்த மேடுகளை ஆய்வு செய்து, அதன் கலாச்சாரங்களை வெளிக்கொணர்ந்தார்.’’//

இவரது ஆய்வோடும், மற்ற ஆய்வாளர்களின் முயற்சிகளுக்குப் பிறகும் இந்த மண்மேடுகள் சாம்பல் மேடுகள்” என்று அழைக்கப்படுகின்றன. பண்டைய மனிதர்கள் கால்நடை மேய்ப்பர்களாக இருந்த காலத்தில் தாங்கள் வைத்திருந்த கால்நடைகளை தொழுவத்தில்வைத்திருந்தனர் என்றும், அவைகளின் சாணியை அவ்வப்போது எரித்து வந்திருக்கின்றனர். அத்தகைய மேடுகளே இந்த சாம்பல் மேடுகளின் பழைய வரலாறு என்று அந்த நூல் மேலும் விவரிக்கின்றது.

இதை வாசிக்கும் போதும் கீழடி நினைவிற்கு வந்தது. அதோடு நான் இருமுறை அங்கு மதுரை இயற்கை நடையோடு சேர்ந்து அங்கு சென்று வந்தது நினைவிற்கு வந்தது. அது ஆரம்ப நிலை. கட்டிடங்கள் இல்லாமல் தோண்டப்பட்ட பள்ளங்களைப் பார்க்கச் சென்றிருந்தோம். அப்போது அங்கிருந்த சிறிது உயரமான ஒரு மேட்டின் மீது ஏறியமர்ந்து இளைப்பாறினேன். நண்பர்கள் அதை ஒரு புகைப்படம் எடுத்திருந்தார்கள். அந்த மேடையில் இந்த வரலாற்று நூல் சொல்வது போல் அப்பகுதிகளில் கருப்பு, சிகப்பு மண்பானை ஓடுகள் குவியலாகக் கிடப்பதையும் பார்த்தேன். அதன் வண்ணம், வழுவழுப்பு, கோட்டோவிய்ங்கள் போன்றவற்றை வைத்து, காலத்தையும், கலாச்சாரத்தையும் கணக்கிடுவது பற்றியும் இந்த நூல் பேசுகிறது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது நான் உட்கார்ந்த மேடும் ஒரு சாம்பல் மேடாக இருக்குமோ? ஒரு பெரும் பண்டைய கலாச்சார வரலாற்று மேடையாக அது இருக்குமோ? என் கீழே ஒரு பெரும் வரலாற்றுப் பொக்கிஷம் பொதிந்து கிடக்கிறதோ என்ற கேள்வி மனதிற்குள் எழுந்து கொண்டே இருக்கிறது.

ஆய்வாளர்களிடம் சொல்லி அந்த மேட்டையும் “ஒரு கை” பார்க்க யாராவது சொல்லுங்களேன், ப்ளீஸ் !!!!

 


Thursday, December 21, 2023

1266. அன்றும் .. இன்றும் .. பெரும் மழை




*

Carbon emission, global warming, nano effect இப்படி அடுக்கடுக்காய் மனிதன் இயற்கையை எதிர்த்து செய்த பல செய்கைகளால் இப்படிப் பெரு மழை வந்தது. அதனால் பொங்கி வந்த வெள்ளம் ஆங்காங்கே குளம், குட்டை, கண்மாய் அப்டின்னு அங்கங்கே இருந்தவைகளில் கடலுக்குப் போகும் முன் கொஞ்சம் தஞ்சமடையும். ஆனால் அந்த நீர் நிலைகளை நிறப்பி  மாற்றி விட்டோம் கான்க்ரீட் காடுகளாக. தங்குமிடம் காணாமல் போனதால் கண்போன பக்கம் வெள்ளம் ஊருக்குள் பெருக்கெடுத்து நிறப்பி விட்டது.





இப்படிதான் நம்மை நாமே குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறோம். உப்பைத் தின்னா தண்ணி குடிக்கணுமாமே ... அதான் வீட்டுக்குள்ளேயே தண்ணீர் பெருக்கெடுத்து வந்து விட்டதே ...அதைக் குடிக்கணுமோ”?! தெரியவில்லை.


அது சரி ... எனக்கு திடீர்னு ஓர் ஐயம். 20.12. 1923 , அதாவது (3 நாள் மட்டும் முன்னப் பின்ன ...), சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் தென்கடைசித் தமிழ்நாட்டில் பெரு வெள்ளம். ரயில் நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இன்று நடந்த அதே நிகழ்வுகள் பெருமழையால் நூறு  ஆண்டுகளுக்கும் முன்பும் நடந்ததாம். இந்து தினசரி 100 ஆண்டுகளுக்கு முந்திய அந்த வெள்ள நிகழ்வை மீண்டும் இப்போது பதிப்பித்திருக்கிறார்கள்.


ஐயம் என்னன்னா...?  100 வருஷத்திற்கு முன் Carbon emission, global warming, nano effect போன்ற எதுவுமில்லை. குளம், குட்டை, கண்மாயெல்லாம் வெள்ளத்தை வாங்க ஆங்காங்கே இருந்தனவே. பின் ஏன் அப்போதும், இப்போதும் பெரும் மழை; பார்த்தறியாத அளவு வானம் பிளந்த பெரும் மழை. அதனால் யாரும் காணாத அளவு வெள்ளம். அன்றும், இன்றும் ஒரே நடப்பாக நடந்து முடிந்திருக்கிறது. (இது போன்ற இன்னொரு பெருமழை வர இன்னும் 100 ஆண்டுகள் ஆகுமா?)

இன்றைய பிரச்சனைகளுக்குக் கொடுத்த காரணங்கள் இல்லாத அந்தக் காலத்திலும் இதே இயற்கையின் கோபம் அன்றும் இருந்ததே.... எப்படி? ஏன்?






Friday, December 08, 2023

1265. இழுபடும் ஜீன்ஸ் ..........



jeans பற்றி ஒரு நண்பன் சொன்னதினால இதுக்கு முந்திய பதிவை எழுதினேனா, அதைப் படித்த கார்த்திக் பிரபா   "rebel" அப்டின்னு ஒரு வார்த்தையைப் போட்டார். jeans + rebel =?  அப்டின்னு ஒரு கேள்வி மனதில் எழுந்தது. அதுக்கு இன்னொரு கொசுவத்தி ...

வாழ்க்கையில் நடந்தத எழுதலாம்னு ஆரம்பிச்சாலே முதல் வரி " பத்து முப்பது வருஷத்துக்கு முந்தின்னு ..." ஆரம்பிக்க வேண்டியதிருக்கிறது. 

இதுவும் அப்படித்தான் பத்து.. முப்பது வருஷத்துக்கு முந்தி நடந்தது. நம்ம ஜீன்ஸ் போட்டுட்டு சுத்துறோமா ... அது அவ்வளவு ஈசியா கிழியாது. கிழிய ஆரம்பிப்பதே முழங்கால் கிட்ட தான் ஆரம்பிக்கும்,. கிழியாது. அந்த ஏரியாவுல நூல் விட ஆரம்பிக்கும். அப்ப்டி ஒரு ஆசைப்பட்ட ஜீன்ஸுக்கு ஆச்சுது. அப்ப்டியே தூரப் போட மனசு வரலை. இப்போவெல்லாம் கிழிஞ்ச ஜீன்ஸ் பாஷனாக ஆகிப் போச்சு. நான் சொல்ற காலத்தில அப்படி ஒண்ணும் இல்லை. அப்படியே அதோடு கல்லூரிக்கும் போனோமா ... அங்க இருந்து ஒரு நாள் சாமிக்கடைக்கு டீ குடிக்க நாலைந்து பேர் போனோம். அதில் ஒரு த்ம்பி .. என் மாணவனாக இருந்து, இப்போது சேர்ந்து பணி புரிந்து கொண்டிருந்தான். அவன் என் ஜூன்சைப் பார்த்து, "என்ன சார்... கிழிஞ்சி போனத போட்டுட்டு வந்திட்டீங்க?" அப்டின்னான். அப்போ பக்கத்தில் இருந்த தமிழ்ப் பேராசிரியர் பிரபாகரன், "அதெல்லாம் signs of a rebel" அப்டின்னான். (பேரா. பிரபாவும் அப்படி ஒரு ரிபல் தான்!) கேள்வி கேட்ட தம்பிக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. 

இன்று அந்தக் கேள்வியைக் கேட்டா - கேக்க மாட்டங்க, கேட்டால் - this is today's fashion அப்டின்னு ஓங்கிச் சொல்லியிருப்பாங்க.

இதுனால ... இன்னைக்கி வர்ர fashionக்கு அன்னைக்கே நாங்க முகவரி எழுதிட்டோம்ல ...

***

ஜீன்ஸோடு தொடர்புடைய இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருது. (இந்தக் கிழடுகளோடு இதே தலைவலி தான். ஒண்ணைப் பிடிச்சா இன்னொண்ணைச் சொல்லிக் கிட்டு ஒரு விஷயத்தை இழுத்துக்கிட்டே போகுங்க ...) 

1997. காலம் போன காலத்தில் புது வீடு கட்டிட்டு புதுசா ஒரு இடத்துக்குப் போனோம். விளாங்குடி. மதுரையின் மேற்கு விளிம்பாகவும், வாசலாகவும் இருக்கும் இடம். இன்று வரை அப்படியே ஒரு கிராமியுச் சாயல்  இருக்கும்.. அங்கே போனப்போ ஒரு ஜீன்ஸ் பாண்ட் பழசாகி, வழக்கம் போல் முழங்கால்
பக்கம் நூல் பிரிய ஆரம்பித்தது. பழகுனதை விடுற மனசு வருமா? என்ன செய்யலாமென யோசிச்சோமா? ஒரு ஐடியா க்ளிக் ஆச்சு.

அப்போவெல்லாம் அரை ட்ரவுசர் அங்கங்கே போட ஆரம்பிச்சிருந்தாங்க. அதுவும் அமெரிக்கா காரங்க ஆரம்பிச்சது தான். நம்மூர் ஆளுக அதெல்லாம் போடுறதில்லை. எல்லோரும் கைலி தான். நமக்கு வந்த ஐடியாவில அந்த ஜீன்ஸ் பாண்டை நூல் பிரியற இடத்தில அப்படியே வெட்டி எடுத்தேன். போட்டுப் பார்த்தேன். திவ்யமாக இருந்தது; பிடிச்சிப் போனது. அதுக்குப் பிறகு கைலி பக்கமே தலை வைக்கலை.

கிராமியப் புரம் என்று சொன்னேனா ... அங்க இப்படி அரைக்கால் சட்டை போட்டுக்கிட்டு, தலையில் தொப்பி வச்சிக்கிட்டு வண்டியில (அப்போ ஹெல்மட் காலம் இல்லை) அங்க இங்க போற ஆளை நம்மூர் ஆளுக ஏற இறங்கப் பார்த்தாங்க. பசங்கல்லாம் நமக்கு "ட்ரவுசர் பாண்டி"ன்னு பெயர் வச்சிருந்தாங்க. 

நாமெல்லாம் அதுக்கெல்லாம் கவலைப்படுகிற ஆளுகளா ...!

Thursday, December 07, 2023

1264. பழைய நினைப்புடா, பேராண்டி




கார்த்திக் அன்பாக நம்மளப் பத்தி நாலு நல்ல வரி எழுதிட்டானா ... அது ஒரு பழைய ஞாபகத்தைக் கொண்டு வந்திருச்சி, பேராண்டி.

ஜீன்ஸ் பாண்ட், மூக்குக் கண்னாடி பற்றிச் சொன்னானா ... அதில இருந்து ஒரு கொசுவத்தி சுருளா பழைய நினைவுகள். அந்தக் காலத்தில 
ஜீன்ஸ் பாண்ட் நம்மூர்ல கிடையாது. யாராவது "பாரன்"ல இருந்து வந்தா போட்டுட்டு வருவாங்க. அதுக்கு எத்தினி டிமாண்ட் தெரியுமா?
அப்படி போட்டவங்க அத இங்க யாருக்காவதுடொனேட் பண்ணினாதான் உண்டு. ஆனா எனக்கு எப்படி கிடச்சிது, யாரும் கொண்டு
வந்தாங்களா அப்டின்றதெல்லாம் மறந்து போச்சு. வழக்கமா இந்த ஜீன்ஸ் பாண்ட்டில் ஒரு பிரச்சனை, அளவு சரியாக இல்லாட்டா 
அதை நமக்கு ஏத்த மாதிரி ஆல்ட்டர் எல்லாம் பண்ண முடியாது. 

எப்படியோ ஒரு பாண்ட் கிடச்சிது. கல்லூரியில் ஜீன்ஸ் அதிகம் 
தென்படாது.  போட்டுட்டுப் போனாலும் glaringஆக பளிச்சின்னு தெரியும். யோசிச்சேன். போட்டுட்டும் போய்ட்டேன். இதுக்காகவே 
காண்டீன் போவோம்ல .. போய்ட்டேன். மாப்ள அப்டின்னு கூப்பிடுற நண்பன் கன்னா பின்னான்னு என்னையத் திட்டினான். இதையெல்லாம்
எபடிடா கல்லூரிக்குப் போட்டுட்டு வர்ர ...very indecent அப்டின்னான். இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது கல்லூரியின் 
துணை முதல்வரும் காண்டீன் வந்தார். அவர் டீ குடிக்கும் போது நான் அங்கிருந்து கிளம்பினேன். எதிர்த்தாற்போல் இருந்த என்னைப் பார்த்து
"jeans ... ha .. first faculty to wear it in our college, Sam" என்றார். பாராட்டுறாரா... திட்டுறாரான்னு தெரியலை. 

கொஞ்சம் காத்திருந்து அவர் புறப்படும்போது அவரிடம் போய் மெல்ல, "Sir, do you mind me wearing this in college"அப்டின்னு மெல்ல கேட்டேன். அவ்வளவு தான். அவர் சொன்னதை நான் தவறாக நினைத்து விட்டேன் என்று பதறிப் போய்..  No Sam... i am just appreciative of this" அந்த அர்த்தத்தில் தான் சொன்னேன் என்றார். 
                           

அப்படி ஒரு கல்லூரி ... அப்படி ஒரு பேராசிரியர். எனக்கென்னவோ எங்கள் கல்லூரி தவிர எனைய கல்லூரிகளில் இந்த FREEDOM இருக்காது என்றே நினைக்கின்றேன். தெய்வீகக்கல்லூரி தான். கொடுத்து வைத்தவர்கள் நாங்கள். அப்படியிருந்த "அந்தக் கல்லூரியில்" வேலை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

of course,என்னைத் திட்டிய நண்பன் பின்னாளில் ஜீன்ஸ் போட்டு கல்லூரிக்கு எல்லோரும் போல் வர ஆர்மபித்த போது நினைவு படுத்தினேன். அட போடாஎன்றான்.

எங்கள் கல்லூரியை இப்படி சொல்வதினால் ஏதோ உயர்த்திச் சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். இன்னொரு சான்று தரவா? ஒரு பட்டறைக்காக வேறு ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அன்றைய பாஷன் பெல் பாட்டம்ஸ். என்னைப் பார்த்த அக்கல்லூரியில் உள்ள இளைய ஆசிரியர் ஒருவர் என்னைப் பார்த்து "சார், இதை  உங்கள் கல்லூரிக்குப் போட்டுட்டு போவிங்களா?" என்று அப்பாவித் தனமாகக் கேட்டார். ஆமாம், ஏன் என்றேன். "எங்கள் கல்லூரியில் இதெல்லாம் போட்டா வீட்டுக்கு விரட்டிருவாங்க "என்றார்.



ஜீன்ஸ் இப்படி வந்ததா? அதே மாதிரி "மூக்குக் கண்ணாடி". வெள்ளெழுத்துக் கண்ணாடி போடும் காலம் வந்தது. சரியாக 40 வயது முடியும் போது கண்ணாடி போடும் நிலை வந்தது. என்ன கண்ணாடி போடலாம் என்று யோசித்த போது, சைனா கண்ணாடி என்று ஒன்று வந்தது. சின்னூண்டாக இருக்கும். மூக்கின் நுனியில் போட்டால் மேல் வழியாக சாதாரண பார்வை; கண்ணாடி வழியாகப் பார்த்தால் படிக்க எளிது. இந்தக் கண்ணாடியை எப்போதும் போடாமல், வாசிக்கும்போது மட்டும் போடும் பழக்கம் இந்தக் கண்ணாடியைப் பயன்படுத்தும் ஆட்களிடம் இருக்கும். நான் ஒரு ஸ்டெப் அதிகமாகச் சென்றேன்! .ஒரு கயிறு கட்டி கண்ணாடி நெஞ்சில் தொங்கும்; வாசிக்கும்போது மூக்கில் மேல் போய் உட்கார்ந்து கொள்ளும். ஆனால் இப்படி அந்தக் காலத்தில் போடுவது அதிகமாக யாருமில்லை.  நான் அவ்வாறு போட்டு வரும்போது சிலர் மிட்டாய்கடையைப் பார்ப்பது போல் பார்த்தார்கள். சில comments வந்தன. கண்டு கொள்ளவில்லை. வைஜெயந்தி மாலாவும், பின்னணிப் பாடகி சுசிலா அம்மையாரும் தங்கச் செயின் போட்டு இது மாதிரி கண்ணாடியைப் போடுவதைப் பார்க்கும் வரை என் கண்ணாடி பலருக்கும் விநோதமாகவே இருந்தது. இதற்கெல்லாமா நாமல்லாம் அஞ்சுவோமா?. என் கண்ணாடி .. என் மூக்கு .. என் மூக்குக் கண்ணாடி என்று இருந்துட்டோம்ல ...

அது ஒரு காலம் ...

Sunday, December 03, 2023

1263. PULI VADA . MALAYALAM MOVIE REVIEW