Friday, April 29, 2005

9 நேற்று பார்த்த படம்...

நேற்று தீபா மேத்தாவின் EARTH- படம் பார்த்தேன். பாவம்,மணிரத்தினம். இரண்டேகால் மணி நேரம் ஓட்ட வேண்டிய கட்டாயத்தால் 'உயிரே..உயிரே'-யில் ஆரம்பித்து, 'குட்டி குட்டி ராக்கம்மா'-க்குப் போய் பிறகு 'பம்பாய்' என்ற படத்திற்குள் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. build up கொடுப்பதற்குள் எடுப்பவர் - பார்ப்பவர் 'தாவு' தீர்ந்துவிடுகிறது. ஏனோ EARTH படம் பார்த்ததும் நம் பம்பாய் படம் நினைவுக்கு வந்தது. தரமும் தெரிந்தது.

EARTH: படம் முழுவதும் பச்சை நிறமும் (பாகிஸ்தான்?) காவி நிறமும்(இந்தியா?) மேலோங்கித் தெரிகின்றன. சூரிய ஒளியின் விளையாட்டு படம் முழுவதும் ஆக்கிரமிக்கிறது. இது படப்பிடிப்பைப் பற்றிய சிறப்பு.

மணிரத்தினம் படத்தில் வசனங்கள் மிகக் குறைவாக இருக்கிறது என்று சொல்பவர்கள் இந்த படத்தைப்பார்த்தால் என்ன சொல்வார்களோ. அதோடு கதை மாந்தர்கள் வசனம் எங்கே பேசுகிறார்கள், இயல்பாய் வாழ்ந்து இருக்கிறார்கள். அவ்வளவே. மிகையான பேச்சோ, நடிப்போ கிஞ்சித்தும் இல்லை-அந்தக் குழந்தையையும் சேர்த்துதான். அந்தக் குழந்தை- நம் தமிழ்ப் படத்தில் வரும் குழந்தைகள் மாதிரி - எந்த தத்துவமும் பேசுவதில்லை தெரியுமா?

முக்கியமாக பம்பாய் நினைவுக்கு வரக் காரணமாயிருந்தது இந்த படத்தில் வரும் இந்து-முஸ்லீம் வன்முறைக்காட்சிகள். பம்பாயில் மிக விஸ்தாரமாகக் காண்பிக்கப்பட்ட காட்சிகள் இதில் மிகக் குறைவாகவே காட்டப்பட்டன. ஆனால், அதைப்பார்த்த அந்தக் குழந்தையின் பாதிப்பு மிகக் கவித்துவமாகக் காட்டப் படுவது மட்டுமல்லாமல், அந்தக் கோரக்காட்சிகளின் தாக்கம் நம் மீதும் விழுந்து அழுத்துகிறது. இயக்குனருக்கு hats off சொல்ல வேண்டிய காட்சி. வன்முறைக்காட்சிகள் குறைவு; பேச்சு, வசனம் ஏதும் இல்லை. ஆனால் தாக்கமோ மிக அதிகம்.
நம் படத்தில் அந்த நுணுக்கம் (subtlety),கவித்துவம் இல்லை; ஒரு முரட்டுத்தனம்தான் இருந்தது.

படம் பார்க்க ஆரம்பிக்கும்போது இசை யாரென்று பார்க்கத் தவறிவிட்டேன். படம் முழுவதுமாக நிறைந்த அதிராத அந்த இசை, வன்முறைச் சம்பவங்களுக்கு வந்த ரீ-ரிக்கார்டிங் படம் முடிந்தபிறகு ரீவைண்ட் போட்டு, இசை யாரென்று பார்க்கத் தூண்டியது. அது யாரென்று நினைத்தீர்கள்? சாட்சாத், நம்ம ஏ.ஆர்.ரஹ்மான்தான். பம்பாயில் வன்முறைச்சம்பவங்களுக்குக் கொடுத்த ரீ-ரிக்கார்டிங் மிக வன்முறையாக இருந்தது நினைவுக்கு வந்தது.

பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையால் அன்றும் நமக்கு தொல்லை; அது இன்றும் தொடர்கிறதே என்ற நிஜமான கவலை மனசு முழுவதும் நிறைகிறது.

இறுதியாக, படம் முடியும்போது வரும் கடைசி நான்கு வசனங்களைக் கேட்டதும் என்னிடமிருந்து என்னையும் அறியாமல் வந்த கெட்ட வார்த்தை (மன்னிக்கணும் எல்லோரும்) '
bloody bastards '!

யாரை அப்படி சொன்னேன் என்று அறிய ஆசையா? என் அடுத்த வலைப்பதிவுக்குக் காத்திருங்கள், சரியா.

8 M.G.R.>ரஜினி>விஜய்..???

2. சினிமா = பொழுதுபோக்கு - இந்தக் கணக்கை நம் தமிழ் மக்களுக்குச் சொல்லிக் கொடுத்த கணக்கு வாத்தியார் யாருன்னே தெரியலை. தெரிஞ்சா நாலு கொடுக்கலாம். அதுவும் பொழுதுபோக்குன்னா, மூளையைக் கழட்டி வெளிய வச்சுட்டு சினிமா பார்க்கணும்னு சொன்னதும் யாருன்னு தெரியலை. அந்த பெரிய மனுஷன் M.G.R. ஒரு பத்து இருபது வருஷமா தமிழ் சினிமா முன்னேறாதபடி பார்த்துக்கிட்டார். ஏதோ அவரால முடிஞ்சது! சினிமான்னா கதை வேணும்னு யார் சொன்னதுன்னு கேட்டவர்.

ஏதோ...அவருக்குப் பிறகு கொஞ்சம் தலையைத் தூக்கலாம்னு தமிழ்த்திரையுலகம் நினைத்தது. வந்தாரையா நம்ம சூப்பர் ஸ்டார். நல்ல மனுஷன். M.G.R. மாதிரி இல்லாம நல்லாகூட நடிக்கக்கூடிய ஆளுதான். ஆனா நம்ம மக்களுக்கு அதெல்லாம் பிடிக்குமா? ஒரே ஸ்டைல் மயந்தான், போங்க. நானும் கையை ஆட்டி ஆட்டி பார்க்கிறேன்.. சத்தமே வரமாட்டேங்குது... (நான் ஒரு தடவை சொன்னா...). துண்டை தோளில் சுற்றி சுற்றி போட்றேன்... அப்பவும் சத்தமே வர மாட்டேங்குது! சரி, கதை, அதில் கொஞ்சம் லாஜிக், சண்டை, அதில் கொஞ்சம் sense, இப்படி ஏதும் இல்லாமலேயே தலைவர் காலம் போயிருச்சி... (past tense-ல் சொல்லலாமா? அல்லது இன்னும் 5 வருஷம் கழிச்சி வரப்போற படத்துக்குப் பிறகுதான் சொல்லணுமா?)

அடுத்தக் கட்டத்துக்கு வருவோம். சரி, இனி தமிழ்த்திரை எழுந்துவிடும் என்ற நினைப்பில் இருக்கும்போது வந்தாரையா அடுத்த வாத்தியார். வரிசையா ஹிட்ஸ். அதுவும் வழக்கமான நம்ம மசாலா படங்கள். logic இல்லாத, anti-gravitational டிஷ்யும் டிஷ்யும் படங்கள். புதிதாக எதுவும் முயற்சிகூட செய்துவிட மாட்டேன் என்ற நல்ல முடிவில் நம் இளைய தளபதி மிக மிக உறுதியாக இருக்கிறார். ஒரு தியாகம்தான். இனி இந்த தலைவர் தன் பங்குக்கு எத்தனை வருஷங்களைக் கெடுக்கப்போகிறாறோ.....ம்ஹும் ... சாபக்கேடுதான், போங்க!
நமக்கு மட்டும்...

ஏங்க இப்படி...?

7 நப்பாசைன்னா இதுதாங்கோ...!

எனக்கு மணிரத்தினத்தின் 'அஞ்சலி' படத்தில் உள்ள பாட்டு, நடனம் எல்லாம் எடுத்துவிட்டு 'படம்' மட்டும் பார்க்க ஆசை. அப்படியிருந்தால் அந்தப் படம் தரமாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

150 நிமிடங்களுக்குப் படம் தந்தாக வேண்டிய சூழ்நிலையில் தேவையில்லாத சண்டை, பாட்டு, 'இப்படி போடு..இப்படி போடு' நடனங்கள் என்று போட்டு நம்மைத் தாளித்து விடுகிறார்கள்.

நம் தமிழ்ப்படங்களைத் தரமானதாக்க எனக்கு ஒரு வழி தெரியும். 90 நிமிடங்களுக்கு மேல் படங்கள் தயாரிக்கக்கூடாதுன்னு ஒரு சட்டம் போட்டாலென்ன அப்படின்னு ஒரு யோசனை வந்தது. சாத்தியமில்லை என்று உடனே தெரிந்தது. ஆனால், பிறகு அதை ஒட்டி தோன்றிய யோசனை தாராளமாக சாத்தியமுள்ளதாகத் தெரிகிறது.

90 நிமிடங்களுக்குள் எடுக்கப்படும் படங்களுக்கு 30-50% மட்டுமே வரி என்று சட்டம் கொண்டுவந்தால் (சினிமாவுக்கும் subsidy-தான்!), இப்போது வந்த படங்களான 'காதல்', 'ராம்' போன்ற படங்களின் இயக்குனர்கள் போன்றவர்கள் 90 நிமிடப்படங்கள் எடுக்க முன்வர மாட்டார்களா? (மணிரத்தினம்,கமல் பாட்டு இல்லாத படம் எடுப்பதைப்பற்றி பேசிக்கொண்டேதான் இருப்பார்கள்.)

இந்த காலக்கட்டுப்பாட்டால் சொல்லவந்ததை மட்டும் சொல்லவேண்டிய கட்டாயத்தால் கொஞ்சம் சிரத்தையோடு நம் இயக்குனர்கள் செயல்படமாட்டார்களா என்ற ஆதங்கம். அதனால் நல்ல படங்கள் வந்து விடாதா என்ற நப்பாசை.

நடனக்கலைஞர்களும், பாட்டெழுதியே பெயர் வாங்கும் - தருமி அல்ல!- பாடலாசிரியர்களும் வீடியோ தயாரிக்கப் போகட்டும். அதுவும் தனித் தொழிலாக விரியட்டும்.


நடக்குமாங்க...?

தருமி இன்னும் வருவான்...!

Thursday, April 28, 2005

6 ஒரு அசிங்கமான விஷயம் பற்றி...

கொஞ்சம் அசிங்கமான விஷயம் ஒண்ணு சொல்லணும். யாரும் கோவிச்சுக்கக்கூடாது. இதப்போய் சொல்லவந்துட்டான் என்று திட்டக்கூடாது. உங்ககிட்ட சொல்லாம யாருட்ட போய் முட்டிக்கிறது?
வேற ஒண்ணும் இல்லீங்க...நம்ம ஊர்ல பைக்குல ஹெல்மட் இல்லாம போறதுண்டா? அப்படி போனீங்கன்னா உயிருக்குப் பயம் அது இதுன்னு உங்களைப் பயமுறுத்த இதை எழுதலை. இன்னோரு பயங்கரத்தைப் பற்றிச் சொல்லணும்.


உங்களுக்கு முன்னால் போறவர் தீடீர்னு திரும்பி எச்சில் துப்புவார் பாருங்க..அப்போ தெரியும் ஹெல்மட் மகிமை. அதே மாதிரி, நின்று கொண்டிருக்கும் பேருந்தைத் தாண்டிப் போக வேண்டிய நிலையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் போக வேண்டியதுள்ளது - எந்த நேரத்தில் எந்தப் புண்ணியவான்(வதி) உள்ளேயிருந்து அபிஷேக விழா நடத்துவார்களோ, யார் கண்டது!


இதில எனக்குப் புரியாத விஷயம் என்ன தெரியுமா? படிப்பு, வயசு, பதவி, தகுதி இந்த மாதிரி எந்த வித்தியாசமும் இல்லாம, எப்படி நம்ம மக்களால் இப்படி நடந்து கொள்ள முடிகிறது? என்ன காற்று அடிச்சாலும் பின்னாலும் மனுஷங்க வருவாங்களே, இப்படி பண்ணலாமான்னு எப்படி யோசனை இல்லாம போகும்? Are we all, as a whole, so self-centered? இதெல்லாம் அடுத்தவங்க சொல்லித்தர வேண்டிய விஷயமா? நம்மளைத்தவிர நாம் எதையும், யாரையும், எப்போதும் கண்டுகொள்வதேயில்லை. சின்ன விஷயந்தான்...ஆனா இது நம்ம national character- ஆக எனக்குத் தெரிகிறது.



ஏங்க நாம இப்படி...?


தருமி இன்னும் கேட்பான்...

5 பரிணாமக்கொள்கையாளர்களுக்கு...

(அறி. 1) பரிணாமக்கொள்கையாளர்களுக்கு தருமியின் ஒரு கேள்வி...


போக்குவரத்து பெருகியுள்ள இந்த நாளிலும்கூட பிறந்த மண்ணை விட்டு இடம் பெயர்வது, குடும்பமாக புதிய இடம் செல்வது என்பது மிக அரிது. ஆனால், ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம் இடம் பெயர்ந்து ஒவ்வொரு கண்டமாகச் சென்றது என்று தெரிகிறது.


குறைந்த எண்ணிக்கையில் இருந்தபோது தேவைகளுக்கான போட்டியும் (competition for resources)இருந்திருக்காது. choices நிறைய இருந்திருக்கும். பின் மனித குலம் கண்டம் கண்டமாக migrate ஆகி, அதோடு, வரண்ட பெரும் பாலைவனங்களையும், பனியால் உறைந்து கிடக்கும் (godforsaken places)பகுதிகளையும்கூட தம் இருப்பிடங்களாக்கி, உலகமெங்கும் அந்த முந்திய காலத்திலேயே நிறைத்திருக்க வேண்டிய தேவை என்ன?


எதுக்குங்க...?

Tuesday, April 26, 2005

4. அரசியல் பற்றி...

அரசியல் பற்றி எதுவுமே எழுதக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கிறேன் - அது எதுக்கு? நம்மளும் திருந்தப்போறதில்லை; நம்ம அரசியல்வாதிகளும் மாறப்போவதில்லை. பிறகு எதுக்கு அதைப்பற்றி எழுதிக்கிட்டு.

ஆனாலும், ஒரே ஒரு ஆசை. அது மட்டும் நடந்துவிட்டால் என் ஜென்மம் சாபல்யம் அடைந்துவிடும். ஒரு வீண் ஆசைதான்.

ஏதாவது ஒரே ஒரு அரசியல்வாதியாவது நமது "மதிப்பிற்குரிய" நீதித்துறையால் கொஞ்சமாவது தண்டிக்கப்படவேண்டும். நடக்கிற காரியமான்னு கேக்றீங்களா? எனக்கும் இது நடக்கப்போறதில்லைன்னு தெரியும். இருந்தும் ஒரு கனவுதான்.

இது ஏங்க...?

Monday, April 25, 2005

3. சினிமா & T.V. பற்றி தருமிக்கு சில கேள்விகள்....

...1. இந்த அமிதாப் பச்சன் உண்மையிலேயே நடிப்பாருங்களா? நான் பார்த்தவரை இந்த ரெண்டுங்கெட்டான் வேஷத்தில வருவார்; வெத்திலை போட்டுட்டு ஆடுவார் ஒரு மாதிரியா. ஆனா செம மரியாதை அவருக்கு. ஒரேடியா அவர்தான் பயங்கரமான நடிகர்னு எல்லோரும் சொல்றாங்களே,

அது ஏங்க?

2. நம் CIVIC SENSE பற்றி தருமிக்கு சில கேள்விகள்...

நம் CIVIC SENSE பற்றி தருமிக்கு சில கேள்விகள்...


1. நாராயண் கார்த்திகேயனுக்கே ஃபார்முலா1 பந்தயத்தில் starting problem இருக்குதாம். பச்சை விளக்கு விழுந்ததும் புறப்படுவதில் பிரச்சனை. அவர் நம்ம ஊரில் அதிகமாக கார் ஓட்டியதில்லை போலும்! இங்கேயே நல்லா ஓட்டிப் பழகியிருந்தால் இந்த பிரச்சனை இருக்காது !

சாதாரணமாகவே நம்ம ஆட்கள் ஆரஞ்சு நிறம் இருக்கும்போதே, பச்சை விழுவதற்கு முன்பே பாய்ந்து புறப்பட்டு விடுகிறார்கள். அதுவும் போலீசுக்காரரே போகச்சொல்லி விடுகிறார். பச்சை விளக்குக்குக் காத்திருந்தால் நம்மை எல்லோருமே ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

இது ரொம்ப சின்ன விஷயமாக எனக்குப் படவில்லை. போலீசுக்காரரே விதியை மீற அனுமதி அளிப்பதால், விதிகளே மீறப்பட வேண்டியவைகள்தான் என்ற நிலைப்பாடே மக்கள் மனதில் ஊறி விடாதா? இந்த சின்ன அத்து மீறல்கள் சட்டங்களை மதிக்கத் தேவையில்லை என்ற மன நிலையை எல்லோருக்கும் பொதுவாக தந்து விடுமே. அப்படி இருந்தும் இப்படியே நடக்கிறதே.
அது ஏங்க...?
2. 'உபகாரம் இல்லாவிட்டாலும் உபத்திரவம் இல்லாம இருக்கணும்' - இது நம்ம ஓர் பழமொழி. ஆனால் நம்ம ஊர்ல இதை கடைப்பிடிப்பவர்கள் யார்? படித்தவர்களும் சரி, பாமரர்களும் சரி, சிறுசு பெருசு என்ற எந்த பாகுபாடுமின்றி நாம் எல்லோருமே ஒட்டு மொத்தமாக இதில் ஒற்றுமையாக இருக்கிறோம்.

தானியங்கு கதவைத் திறந்தால் பின்னால் வருபவர்களுக்காகக் காத்திருந்து கதவைப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்றும், சாலையைக் கடக்க வேண்டுமாயின் எதிர் வரும் வண்டிகள் பிரேக் போடவேண்டிய நிலையைத் தரக்கூடாது என்றும் வெளிநாட்டில் (அட, அமெரிக்காதான்) சிறு குழந்தைக்கும் சொல்லித்தந்து விட்டார்களே.

நம்மில் எத்தனை பேர் நம் இருசக்கர வண்டிகளை நிறுத்தும்போது அது மற்றவர்க்குத் தொல்லை தராது நிறுத்தவேண்டும் என்று ஒரு நிமிடமாவது யோசித்து செயல்படுகிறோம்? ரொம்ப கம்மிதானே.
அது ஏங்க...?
3. பெரியவங்க இறந்துபோனால் we have to celebrate their lives அப்டின்னு சொல்லுவாங்க. கொட்டு, மேளம் even வெடி கூட போடுங்க; வேண்டாங்கலை.ஆனால் முழுதாய் சாலையைமறித்துக் கொண்டு - நான் சொல்றது பெரிய ஊர்களில், முக்கிய சாலைகளில் - எல்லோரையும் நடுங்க வைப்பது என்ன நாகரீகமோ தெரியவில்லை.
ஓரத்தில் நல்ல பிள்ளையாய் நின்றாலும் எந்த நேரத்தில் நமக்கு என்ன நடக்குமோ என்ற பயம். நம் மீது பூ விழுமோ, வேட்டு விழுமோ, ஆள் விழுமோ அடி விழுமோ இல்லை போனவரோடு நம்மையும் சேர்த்து அனுப்பபோகிறார்களோ என்ற நிலை.
யாரும் கேட்க முடியாத நிலை. ஆனால், அப்படி ஆடிப்போகும் கூட்டம் எல்லாம் முடிந்து வரும்போது 'ஆடும் வரை ஆட்டம்....' என்று ரொம்பவே philosophical-ஆக, நல்ல பிள்ளைகளாக திரும்புகிறார்கள். நனி நாகரீகம் என்று பேசுவதெல்லாம் என்ன வகைப் பிதற்றல்கள். இன்னும் கற்காலத்து மனிதர்களாகவே இருக்கிறோமே.

அது ஏங்க..?

தருமி இன்னும் கேட்பான்.....

Sunday, April 24, 2005

1. டி.வி. விளம்பரங்கள் பற்றி தருமிக்கு சில கேள்விகள்....

1. இந்த வீக்கோ - கிரீம், பற்பசை - விளம்பரங்களிலும், அஷ்வினி எண்ணெய் விளம்பரங்களிலும் வரும் ஆட்களை எங்கே தேடிப்பிடித்திருப்பார்கள்?

2. 'குங்குமம்' விளம்பரத்திற்குப் பயன் படுத்தும் பெண்குரலை மாற்றிய பிறகுதான் குங்குமத்தைத் தொடுவது என்று நான் முடிவு செய்திருக்கிறேன். அப்ப ... நீங்க ?

3. ஆண்களின் உள்ளாடை விளம்பரங்கள் எல்லாம் இவ்வளவு கேவலமா இருக்கு. அது ஏங்க...?

4. இந்த விஜய்யும் - அதாங்க நம்ம இளைய தளபதி - அமிதாப் பச்சனும் விளம்பரப் படத்தில் மட்டும் நன்றாக நடிக்கிறார்கள். அது ஏங்க..?

5. மாமிகள் மட்டும்தான் குங்குமம் படிக்க வேண்டுமாமே. அது ஏங்க..?

தருமி இன்னும் கேட்பான்....