Monday, September 16, 2013

680. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்







*



அமெரிக்காவில் பச்சைக் கலரில் பளபளக்கும் sign boards பார்க்கும் போது, இங்கல்லாம் போர்டு கூட எம்புட்டு அழகா இருக்குன்னு நினச்ச காலம் உண்டு. இப்போ நாமளும் ‘வல்லரசா பாதிக்குப் பாதி’ ஆகிட்டோமா ... நம்ம ஊர்லயும் அந்த மாதிரி போர்டுகள் வந்தாச்சு. நல்லாத்தான் இருக்கு. ஆனால், இதில் ‘பிரதான சாலை’ அப்டின்னு பெரிய சாலைகளில் போர்டு வைத்திருக்கிறார்கள். நானும் தமிழ் வளர்த்த மாமதுரையில் மட்டும் தான் இப்படி ஒரு போர்டு வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். தமிழ் வளர்த்த நம்ம ஊரில் இப்படி பிரதான சாலைன்னு எழுதியிருக்காங்களேன்னு வருந்தினேன். பதிவர் சந்திப்புக்குச் சென்னை வந்த போது தான் சென்னையிலும் இதே பெயர்ப் பலகைகளைப் பார்த்தேன். இது மாநில அரசின் கைவண்ணம் என்று புரிந்தது. எதுக்கு ’பிரதான’ சாலைன்னு எழுதணும்; பெருஞ்சாலை ... அட .. முக்கிய சாலைன்னு கூட எழுதியிருக்கலாமே! இப்படி ஒரு ’பிரதானம்’ சாலைகளுக்குத் தேவையான்னு ஒரு கேள்வி. (தமிழ் வாழ்க.)

சோனாப்ரியா அப்டின்னு மரியான் படத்தில ஒரு பாட்டு. அப்டின்னா என்ன? அதே மாதிரி இன்னொரு பாடலில் ஆரோமலே ... அப்டின்னு தொண்டை கிழிய ஒரு பாட்டு வரும். அதென்ன ஆரோமலே .. எனக்குத் தெரியலை. ஏதோ மலையாள சொல் என்று நினைக்கிறேன். பொருள் என்னங்க ...?

The Hindu - இப்படி ஏன் பெயர் வச்சாங்கன்னு தெரியலை. (பாக்.கில் The Muslim அப்டின்னு ஒரு பத்திரிகை இருக்கோ?)இப்படி ஒரு பெயர் இல்லாம The Indian என்று வச்சிருந்தா நல்லா இருந்திருக்குமேன்னு நான் நினைத்ததுண்டு. ஆனால் இப்போ அவர்களே இன்னொரு தமிழ் தினசரி ஆரம்பிக்கப் போறதாக சொல்லி நானும் 6 மாதத்திற்கு சந்தா கட்டியாச்சி. இன்றைக்கு அந்த தினசரி வருகிறதாம் வந்து விட்டது.. என்னிடம் சந்தா வாங்க வந்தவரிடம் ஒரு feed back கொடுத்தேன். ஏன்னா அப்போ அந்த தினசரிக்கு ‘காமதேனு’ அப்டின்னு பெயர் வச்சதாகக் கேள்விப்பட்டேன். இந்தப் பெயர் The Hindu என்ற பெயரை விட மோசமா, மத வாசனையோடு இருக்கேன்னு சொன்னேன். ஆனால் இப்போ அந்த தினசரி ‘தி இந்து’ என்ற பெயரிலேயே வருகிறதாம்து. ஏதோ இது கொஞ்சம் பரவாயில்லை. இனி தி இந்து(ஆ) / தி இந்து(த) என்று அடைப்புக்குள் மொழி குறித்து போட்டுக் கொள்ள வேண்டியது தான். தி இந்து என்பதற்குப் பதில் வெறுமனே இந்து என்றாவது வைத்திருக்கலாமோ? ’தி’ எதற்கு?

தி இந்து  -- இது தினசரியின் தலைப்பு. இதன் tag line -- தமிழால் இணைவோம். quite a good parody!!!!!!!! நல்லா இருக்குல்ல ...!

விநாயகர் சிலைகள் விசர்ஜனம் நிறைவு ... விசர்ஜனம் என்றால் என்ன? தெரிந்து கொள்ள தி இந்து (த) பக்கம் 5-ல் பாருங்கள்!

(முதல் நாளல்லவா. நிறைய பக்கங்கள். ஜெயமோகன் கட்டுரை, கி.ரா. கட்டுரை வந்துள்ளன.  சிலர் வாழ்த்து சொல்லி தங்கள் படங்களோடு ஒரு முழுப்பக்கத்தை நிரப்பியுள்ளனர். அதில் ‘தமிழர்களைத்’ தேடிப்பார்த்தேன். அப்படி யாரும் இருந்தார்களா என்று தெரியவில்லையே?)

ஒரு காலத்தில் தமிழ்ப்படங்களில் வரும் பாத்திரங்களோடு சாதிப் பெயர்கள் வரும். அனேகமாக அவை - ஐயர், முதலியார், பிள்ளை, செட்டியார் என்பதோடு நின்று விடும். அவர்கள் எல்லாம் ஒரு வேளை உ. சாதிகளோ? அதன் பின் காலம் மாற சாதிப் பெயர்கள் மறைந்து விட்டன. இப்போது அந்தப் பழைய பெயர்கள் எல்லாம் போய் விட்டன. ஆனாலும் தேவர் சாதி நேரடியாகவோ, மறைமுகமாகவோ எக்கச் சக்கமாக வழங்கப்பட்டு வருகின்றன. இது என்றாவது மறையுமா?

சாதிப் பெயர்கள் மாதிரி பிராமணத் தமிழ் அன்றும் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது. வரும் விளம்பரங்களில் அறுபது எழுபது விழுக்காட்டில் பிராமணத் தமிழ் ஒலிக்கிறது. காரணம் புரியவில்லை. இதெல்லாம் விளம்பரப் படம் எடுப்பவர்கள் செய்யும் கோமாளித் தனமா?  இல்லை விளம்பரதாரர்களின் ‘புத்திசாலித்தனமா’? இந்த மொழியைப் பயன்படுத்துவதால் எதிர்ப்புகள் ஏதும் இருக்காது என்று விளம்பரதாரர்கள் ஏன் நினைப்பதில்லை?

ஏன் இப்படியே போயுண்டு இருக்கு?ஏதோ காபிக்கு பேஷ் .. பேஷ் .. அப்டின்னு சொல்லிண்டா பரவாயில்லை. இன்னும் பலதுக்கும் அப்படியே ஏன் சொல்லிண்டு இருக்கணும்? நாமளும் அதக் கேட்டுண்டே இருக்கணுமோ??


*


*




21 comments:

அகலிக‌ன் said...

தெரிந்தோ தெரியாமலோ தன்னை உயர் சாதியாய் காட்டிக்கொள்ள உதவும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவே அனைவரும் விரும்புகின்றனர். நான் இந்துவும், தினமணியும்தான் படிப்பேன் என்பதும், அசைவம் சாப்பிடுவதில்லை என சொல்லிக்கொள்வதும், கோவில்கள் என்றால்கூட பக்கத்துத்தெருவில் இருக்கும் அம்மன் கோயிலுக்குப்போகாமல் தூரத்தில் எங்காவது இருக்கும் பெருமாள் கோயிலுக்கும், சிவங்கோயிலுக்கும் போவதும் என இவையெல்லாம் உயர் சாதி வழக்கங்களாய் கருதிக்கொண்டு மேற்கொள்ளப்படிகின்றன. அதில் ஒன்றுதான் இந்த பிராமண மொழி பிரயோகமும் என நினைக்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

சின்ன சின்ன கேள்விகள்னு சொல்லிட்டு ரொம்ப பெரிய கேள்விங்கள்லாம் கேட்டுருக்கீங்க? ஆனா பதில் சொல்றது அவ்வளவு ஈசியும் இல்லையே..

இந்த பிராமண பாஷையில ஒரு அட்ராக்‌ஷன் இருக்கத்தான் செய்யிது... அதான் விளம்பரத்துக்கு ஜாஸ்தி யூஸ் ஆவுதோ என்னமோ...

ஆஹா... பேஷ், பேஷ்னு வருமே நரசூஸ் காப்பி ஆட்ல, அத விட பொருத்தமா வேற எந்த மொழியிலயாவது சொல்ல முடியுமா?

தருமி said...

//இந்த பிராமண பாஷையில ஒரு அட்ராக்‌ஷன் இருக்கத்தான் செய்யிது... //

ஜோசப்,
அப்டியா சொல்றேள்....! நேக்கு இல்லைங்காணும்!

சிந்திக்கமாட்டார்களா said...

vaazlga tamizl ozlgasathi&matham(markkamum?)

Anonymous said...

முதலில் பிரதான சாலை என்ற இரு சொல்லுமே தமிழில்லை, சாலை என்பது இன்று தமிழாகி விட்டது, மலையாளப் பழமொழிகளில் பெருந்தெரு என்ற சொல் பயின்று வருவது உண்டு, உண்மையில் அது தான் பிரதான சாலைக்கான சரியான் சொல்..! பிரதானம், பிரயோகம் போன்ற வடமொழிச் சொற்கள் இலங்கைத் தமிழில் ஏராளம், அதன் தாக்கமோ என்னவோ. தி இந்துவின் தமிழ் பதிப்பு இணையதளம் நன்றாக உள்ளது. தி இந்து ஆங்கிலம் எனில் மொழியும், தகவலும் தரமாய் இருக்கும். தமிழில் அதனை எதிர்ப்பார்க்கலாமா?! தி இந்து என்பது அன்று தி இந்தியன் என்பதன் இணையாக இருந்ததால் ஏற்பட்டு இருக்க வேண்டும், இப்போது அப் பெயர் பிராண்ட் நிலைத்துவிட்டதால் தமிழுக்கும் அதனையே வைத்து விட்டனர் போல. தின இந்து என வைத்திருக்கலாம், நல்ல காலம் ஹிந்து என மொழிப்பற்றை காட்டவில்லை. காமதேனு என்ற பெயரிடுவதை நானும் கேட்டு கடுப்பாகி போனேன், நல்ல வேளை அப்படி நடக்கவில்லை. மற்றபடி தமிழில் மற்றுமொரு நாளிதழ், தரமானதாய் இருக்கும் என நம்புவோமாக.

Unknown said...



சின்ன சின்ன கேள்விகள்தான்!ஆனால் பதிலைக் காலம்தான் காட்ட வேண்டும்
என்றாலும் சிலரது சிந்தனையை மட்டுமாவது தூண்டும் என்பதில் ஐயமில்லை!நன்றி!

ப.கந்தசாமி said...

படித்தேன்.

தருமி said...

mohamed sadiq
சொல்றதை கொஞ்சம் ஒழுங்கா சொல்லிட்டா புரியும்.

தருமி said...

// பழனி. கந்தசாமி said...

படித்தேன்.//

attendance எடுக்கிற பழக்கம் இன்னும் மறக்கலையா?

வல்லிசிம்ஹன் said...

செத்த பாம்பை அடிப்பதில் நிறையப் பேருக்கு மகிழ்ச்சி தருமி சார். அதுபோலத்தான் இந்த உயர்ந்த(?) மொழி பயன்படுத்தலும்.

கேட்கையிலேயே காதுவலிக்கும்.

கரந்தை ஜெயக்குமார் said...

கேள்வி சிறியதுதான் பதில்தான்...

பொன் மாலை பொழுது said...

இது ரொம்ப அதிகம் அய்யா.
இங்கு வலையுலகில் உள்ள அணைத்து தமிழர்களும் தமிழ் என்றால் உயிரையும் தரும் பற்றாளர்கள். ஆனால் தாய் மொழியில் எழுத மட்டும் அவர்களுக்கு வராது.கூகிள் காரர்கள் மற்றும் பிறரும் அவரவர்கள் தங்கள் மொழிகளை பயன்படுத்த இலகுவாக ஆயிரம் வழிகளை கொடுத்துள்ளார்கள் ஆனாலும் இன்றும் கூட தமிழை ஆங்கிலமாக எழுத்தும் மேதாவிகள் இங்கு நிறைய உண்டுதான் முதலில் அவர்களை எல்லாம் தமிழில் எழுத்தும் படி செய்தாலே உருப்படியாக இருக்கும். முதலில் நம் வீட்டில் இருக்கும் குப்பைகளை அகற்ற எத்தனிப்போம் பிறகு அரசை, பத்திரிகைகளை குறை கூறுவோம். [நான் தி. ஹிந்து படிப்பதை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது :)]

நன்றி.

அ. வேல்முருகன் said...

ஏங்காணும்,

1. தி இந்து, அவாளோட விருப்பம், படிக்க விருப்பமில்லையா, விடுங்கோ

2. அடையாள படுத்திக்க அவா அப்படிதான் செய்யுறா, என்ன பண்ணறது சொல்லுங்கோ

3. பணம் கொட்ற விளம்பர துறையில் அவாளாடோ ஆட்சிதானே?


அப்புறம் ஏன் சின்ன கேள்விகள்

குட்டிபிசாசு said...

//விநாயகர் சிலைகள் விசர்ஜனம் நிறைவு .//

தருமி ஐயா,

…ஆங்கில செய்திதாள்களிலும் ganesh visarjan என்ற் தான் போட்டு இருக்கிறார்கள். ஈழத்தமிழில் பைத்தியத்தை விசர் என்று சொல்லுவார்கள். "பைத்தியக்கார ஜனங்கள்" என்று சொல்லுகிறார்களா?:))

தருமி said...

குட்டிபிசாசு
//"பைத்தியக்கார ஜனங்கள்" என்று சொல்லுகிறார்களா?:)) //

நல்ல கண்டுபிடிப்பு!

வவ்வால் said...

தருமிய்யா,

ஒரே கேள்வியா கேட்டு வையுங்க,அதுக்கு உங்க பதில் என்னனு கூடவே சொல்லி வைக்கலாம்ல?

"NHAI Road signboard colour code" பச்சைக்கலரில் தான் தேசிய நெடுஞ்சாலைக்கு போர்டு வைக்கனும்,மாநில நெடுஞ்சாலைக்கு நீலக்கலராம். மஞ்சக்கலர் மாவட்ட நெடுஞ்சாலைக்கு என நினைக்கிறேன்.

ஆனால் ஆரம்பத்தில் நீலம் தான் தேசிய நெடுஞ்சாலைக்கு இருந்துச்சு, இப்போ "NHAI " என உருவாக்கி ,நான்குவழிச்சால்லை எல்லாம் போட ஆரம்பிச்ச பின்னர் "பச்சைனு" முடிவு பண்ணி இருக்காங்க, வேற யாராவது வந்து கலர மாத்தினாலும் மாத்துவாங்க :-))

இப்பவும் பல இடத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு நீலமும்,பச்சையும் என மாறி மாறி போர்டு இருக்கும், நீலக்கலரில் வச்சது மாத்த செலவாகும்னு ,அந்த போர்டு தானாக கழன்டு விழட்டும்னு வெயிட்டிங் :-))

# பிரதானம் ,முக்யம் இரண்டுமே வடமொழி தான்.

பிரதான் மந்திரி- பிரதமர்.

முக்ய மந்திரி - முதலமைச்சர்.

சாலை தமிழே, சால் - வழி , ஏர் ஓட்டும் போது குறுக்கு சால் ஓட்டாதே என்பார்களே , அதான் நிலத்தில் உழுது நீர் ஓட வழி உண்டாக்குவது சால். எனவே மக்கள் செல்ல வழி உண்டாக்கினால் "சாலை" என பெயர் வச்சுட்டாங்க.

சால் என்பது வடமொழியிலும் இருக்கு,உ.ம்: பாட்சால் = பள்ளிக்கூடம். எனவே இங்கேஇருந்து அங்கே போயிருக்கலாம்,இல்லை பொதுவாக்க கூட இருக்கலாம்.

# இதை விட கிராம பகுதிகளில் சாலையில் "பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா"னு போர்டு வச்சிருப்பாங்க :-))

கிராமம் என்பதும் தமிழல்ல வடமொழி அவ்வ்!

# //சோனாப்ரியா அப்டின்னு மரியான் படத்தில ஒரு பாட்டு.//

சொன்னாப்படியானு தான் பாட்டு , சோனாப்ப்ரியானு காதுல கேட்க்கிறாப்போல பாடி இருக்காங்க :-))

#//ஏன்னா அப்போ அந்த தினசரிக்கு ‘காமதேனு’ அப்டின்னு பெயர் வச்சதாகக் கேள்விப்பட்டேன். இந்தப் பெயர் The Hindu என்ற பெயரை விட மோசமா, மத வாசனையோடு இருக்கேன்னு சொன்னேன். //

இந்துல மதமே இருக்கும் போது எதுக்கு "காமதேனுனு" மதவாசனை மட்டும்னு நினைச்சிருக்கலாம் :-))
அப்புறம் காமதேனு என ஒரு பழைய வார(மாத இதழோ?) இருந்துச்சு ,அமுதசுரபி,கலைமகள் போல ஒரு தோற்றத்தில , ஆன்மீகசமாச்சாரம்லாம் போட்டு வரும் ,இப்போ வருதா தெரியலை, எனவே அந்த பத்திரிக்கையோடு சேர்த்து குழப்பிக்குவாங்கனு "காமதேனு" என்ற பெயரை வைக்காம விட்டுட்டாங்க போல இருக்கு.

"தி இந்து" தமிழ் செய்தி தாள் என சொல்வதற்கு "காமதேனு" எவ்வளவோ தேவலையே. சுதேசமித்ரன் என பாரதியார் தமிழில் பத்திரிக்கை நடத்தலையா. ஹி..ஹி பத்திரிக்கை என்பதும் பத்ரிகா என்ற வடமொழியில் இருந்து தான் வந்துச்சு :-))
நாளிதழ் தான் சரியான தமிழ்ச்சொல், தினசரி கூட வடமொழி தான்.
---------------

வவ்வால் said...

குட்டிப்பிசாசு,

//ஈழத்தமிழில் பைத்தியத்தை விசர் என்று சொல்லுவார்கள். "பைத்தியக்கார ஜனங்கள்" என்று சொல்லுகிறார்களா?:))//

ஈழத்தமிழர்கள் பேசுவது தூயத்தமிழர் என்ற மாயை பொதுவாக உண்டு,ஆனால் அவர்களின் மொழியும் வடமொழி,ஆங்கில கலப்பே ஆனால் மாறுப்பட்டு உச்சரிப்பார்கள்.அதனால் தமிழ்னு நினைச்சுக்கிறாங்க.

விசர் என்பதன் மூலம் வடமொழியே.

சர்ஜனா என்றாம் பிறப்பு அல்லது உருவாக்கம் சர் = பிரிப்பு + ஜன்யம் உருவாவது தாயிடம் இருந்து குழந்தை உருவாகி ,பின் பிரிந்து தானே வெளியில் வருகிறது. , விசர்ஜனா என்றால் பிறப்பை/ உருவாக்கத்தினை விட்டொழிப்பது அதாவது "இப்பிறப்பை விட்டு உயர்வான பிறப்பை = தெய்வலோக பிறப்பாக = மோட்சம் அடைவது . வடமொழியில் ஒரு சொல்லுக்கு முன் "வி" போட்டால் தனித்த/சிறப்பான என பொருள். மோக்‌ஷம் என்பதற்கே வி போட்டு விமோக்‌ஷம் என தனித்து சிறப்பை கொடுப்பார்கள்.அல்லது உருவம் இல்லாமல் போவது அல்லது அழிந்து விடுவது , பருப்பொருள் திட நிலையை மாற்றிவிடுவது எனவும் சொல்லலாம். " mixed with cosmic power" எனலாம். அதான் தண்ணில போட்டு கரைச்சுடுறாங்க.


சர்ஜனா, விசர்ஜனியா, விசர்ஜனா ஆகியவற்றிற்கு இடத்திற்கு ஏற்ப பொருள் கொஞ்சம் மாறி வரும் என்பதை கவனத்தில் கொள்க.

செத்தவங்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதையும் பித்ரு விசர்ஜன் என்று தான் சொல்வார்கள்.

விசர் என்றால் சுருக்கமாக பிரிந்து விடுவது,தனிப்பட்டு விடுவது (separated). மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உலக நடை முறையில் இருந்து பிரிந்தவர்கள் ஆகிடுறாங்க , "கழண்டு"க்கிறங்க :-))

Gujaal said...

//அல்லது உருவம் இல்லாமல் போவது அல்லது அழிந்து விடுவது , பருப்பொருள் திட நிலையை மாற்றிவிடுவது எனவும் சொல்லலாம். " mixed with cosmic power" எனலாம். அதான் தண்ணில போட்டு கரைச்சுடுறாங்க.//

History

In 1893, Lokmanya Tilak transformed the annual domestic festival into a large, well-organized public event.[10] Tilak recognized the wide appeal of the deity Ganesha as "the god for everybody",[11][12] and popularized Ganesh Chaturthi as a national festival in order "to bridge the gap between Brahmins and 'non-Brahmins' and find a context in which to build a new grassroots unity between them", and generate nationalistic fervour among people in Maharashtra against the British colonial rule.[13][14] Tilak was the first to install large public images of Ganesh in pavilions, and also established the practice of submerging in rivers, sea, or other pools of water all public images of the deity on the tenth day after Ganesh Chaturthi.[15]


ஏன் களிமண்ணால் செய்த பிள்ளையாரை தெருவில் வைத்துக் கும்பிட்டுவிட்டு ஆற்றோடு கொண்டுபோய் கரைக்க வேண்டும் என்பதை யோசித்துப் பார்த்தால், கோவிலுக்குள் வராத மக்களை ஈர்ப்பதற்காக பிள்ளையார் தெருவுக்கு வருவதும், பின்னர் அவரும் கோவிலுக்குள் செல்ல முடியாததால் நீர்நிலையில் கரைப்பதற்கு ஏதுவாக களிமண்ணால் செய்யப்படுகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.

ஏன் மற்ற கடவுளர்களைப் போல் உள்ளூர் கோவில்களில் உற்சவ மூர்த்தியை உருவாக்கி ஒவ்வொரு வருடமும் அவர்களையே சதுர்த்தி பந்தல்களில் வைத்து கும்பிடும் எண்ணம் மக்களுக்கு வரவில்லை என்பதும் புரியவில்லை.

(Just)120 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலை போராட்டத்துக்காக திலகர் உருவாக்கிய வழிபாட்டு முறையையே இன்னமும் தொடர்ந்து கடைபிடித்து வரவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.

வேகநரி said...

//ஈழத்தமிழர்கள் பேசுவது தூயத்தமிழர் என்ற மாயை பொதுவாக உண்டுஆனால் அவர்களின் மொழியும் வடமொழி ஆங்கில கலப்பே ஆனால் மாறுப்பட்டு உச்சரிப்பார்கள்.அதனால் தமிழ்னு நினைச்சுக்கிறாங்க.//
மிகவும் சரியான கருத்து. நானும் கூட ஆரம்பத்தில் ஈழத்தமிழங்க பேசும் தமிழ் தான் உண்மையானது என்று நம்பியிருக்கிறேன். அதற்க்கு காரணம் தமிழ் தமிழ் என்பவங்க இங்கே அப்படி தான் பொதுவா அடிச்சு சொன்னாங்க.எனக்கும் தூய தமிழ் எது வடமொழி கலப்பு தமிழ் எது என்ற அறிவு மிக குறைவு. காலபோக்கில் மற்றவர்கள் பலர் சொல்ல உண்மையை அறிந்து கொண்டேன். இலங்கை தமிழர்களின் சிறப்பு என்னவென்றால் இன்னொரு தமிழருடன் தமிழில் தான் பேசுவார்கள் மிக சிறப்பானது. அதற்காக தமிழகத்திற்கே நாங்க தான் தமிழ் பாடம் எடுத்தோம் என்பதெல்லாம் அளவுக்கதிகமான ஓவர். இது அரசியல் நோக்கம் கொண்ட அதற்காக செயல்படுகின்ற இலங்கை தமிழர்கள்மட்டுமே இப்படி சொல்வது.ஆனால் சாதாரண இலங்கை தமிழர்கள் இல்லை.

வேகநரி said...

//(Just)120 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலை போராட்டத்துக்காக திலகர் உருவாக்கிய வழிபாட்டு முறையையே இன்னமும் தொடர்ந்து கடைபிடித்து வரவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.//
just 120 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாம் கேள்வி என்னங்க. மதம் என்றால் 1400 வருடங்களுக்கு முன் சொல்லபட்ட காண்டுமிராண்டிதனங்கள்யாவும் இப்போ கடைபிடிக்கபட வேண்டும்.

வால்பையன் said...

ஏன் இப்படியே போயுண்டு இருக்கு?ஏதோ காபிக்கு பேஷ் .. பேஷ் .. அப்டின்னு சொல்லிண்டா பரவாயில்லை. இன்னும் பலதுக்கும் அப்படியே ஏன் சொல்லிண்டு இருக்கணும்? நாமளும் அதக் கேட்டுண்டே இருக்கணுமோ??//

நன்னா சொன்னேள் போங்கோ :)

Post a Comment