Monday, December 30, 2013

702. வித்தியாசமான ஒரு இரவு





*


பழைய மாணவர்களுக்கும் வயசாகிக் கொண்டே போகிறது. நட்பு மட்டும் இளமையோடு இன்னும் இருப்பது ஆச்சரியமும், மகிழ்ச்சியும் தருகிறது. சென்னைக்கு சமீபத்தில் ஒரு வாரம் போனேன். (மாணவ) நண்பன் வீட்டுக்கும் போனேன். பழைய கதைகள் – எத்தனை முறை பேசினாலும் அலுக்காத, முப்பது ஆண்டுகளுக்கு முன்பான கதைகள் – நிறைய பேசினோம். அவனது குடும்பம், நண்பர்கள் என்று பலரிடமும் கதைகள் அரங்கேறின. புதிய கதைகள் எல்லாம் சேர்ந்தன.

அடுத்த நாள் மாலை ஒரு நண்பர் வீட்டிற்குப் போகிறேன்; நீங்களும் வாருங்கள் என்றான். சரி என்று உடன் போனேன். அவனது நண்பர் வீட்டிற்குள் நுழையும் போது, அந்த வீடு ‘அழகு வீடுகள்’ என்ற போட்டியில் பரிசு பெற்றது என்றான். வெளியில் இருந்து பார்க்கும் போதே கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பரிசுக்குக் காரணம் வீட்டுக்காரரா அல்லது கட்டிட அமைப்பாளரா என்று கேட்டேன். இரண்டு பேரும் இல்லை; வீட்டுக்காரம்மா தான் காரணம் என்றான்.

வீட்டுக்குள் நுழைந்தோம். வரவேற்பறையில் சில நிமிடங்கள் மட்டும் இருந்தோம். அங்கே மாட்டியிருந்த படங்கள்; ஜன்னல்களின் கண்ணாடிகள் என்று அங்கங்கு அழகு தெரிந்தது. முதலில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடத்திற்குப் போவோம் என்று வீட்டின் அடுத்த பக்கம் இருந்த ஒரு அறைக்குச் சென்றோம். பெரிய அறை. ஒரு பக்கம் சுவர் முழுவதும் வெள்ளித் திரை இடம் பிடித்திருந்தது. அதன் முன்னால் என்னென்னவோ சைஸ்களில் பல வித speakers வரிசை கட்டி நின்றன. இருக்கைகள் மூன்றடுக்கில் – gallery style – பனிரெண்டு, பதினைந்து பேர் அமர்வது போல் மிக வசதியான இருக்கைகள். முதல் வரிசையில் அமர்ந்தேன். வீட்டுக்காரர் இரண்டாவது, அல்லது மூன்றாவது வரிசைக்கு வாருங்கள் என்றார். இரண்டாவது வரிசையில் அமர்ந்தேன். ஆஹா ... சோபா என்னை விழுங்கி விட்டது. அதை ரசித்துக் கொண்டிருக்கும்போதே அழகாக மெல்லியதாக முன்னும் பின்னும் ஆடியது. ரசனை தான்!

ஒரு படம் போட்டார்கள். படம் பார்க்க நேரம் இல்லை; இரண்டு மூன்று பாட்டு மட்டும் கேட்போம் என்றான் நண்பன். எந்தப் பாட்டு என்றார்கள். 70-80 ராஜா என்றேன். இரண்டே பாட்டு வைத்துக் கேட்டோம். ‘நதியில் ஆடும் பூவனம் ...’ என்ற பாட்டும், ‘பூவில் வண்டு கூடும் கண்டு...’ (காதல் ஓவியம்) என்ற பாட்டுகள் ஒலித்தன. அது வேறு ஒரு உலகத்திற்கு நம்மைக் கடத்தின. கேட்கும் போதே மனதிற்குள் ஒரு விகசிப்பு வந்ததென்னவோ உண்மை; ம்ம்.. அது அந்தக் காலம்! மூன்று ராஜாக்களின் காலம்!

கதவைத் திறந்து உள்ளே போனதும் ஒரு பொதுவிடம். அதிலிருந்து மூன்று வெவ்வேறு பாதைகள். ஓரத்தில் ஒரு அழகான தூண். அந்த தூணிற்கும் சுவற்றிற்கும் நடுவில் ஒன்றரை அடி அகலம், ஒன்றரை அடி உயரத்திற்கு ஒரு smiling Budha. பள பளவென்று பச்சைக் கிறிஸ்டலில் நம்மைப் பார்த்துச் சிரித்தார். அங்கிருந்து ஒரு மாடிப்படி; இன்னொரு பக்கம் ஒரு சுவாமி அறை. அந்த அறையைப் பார்க்கவில்லை; ஆனால் அதன் கதவும், உயரமும் வித்தியாசமாக இருந்தன.

அடுத்து சாப்பாட்டறைக்குள் நுழைந்தோம். நிறைய வித்தியாசமான பெரிய அறை. நாம் உட்கார உயயயர ஸ்டூல். பளிங்கு மேடை. மேடையின் அந்தப் பக்கம் என்னென்னவோ சாப்பாடு காத்திருந்தது – நடப்பன, பறப்பன, நீந்துவன, முளைப்பன …. இன்னும் இரு நண்பர்கள் இணைந்தார்கள். ஒருவர் மருத்துவர். அழகியல் மருத்துவர். இன்னொருவர் திரைப்பட இயக்குனர் – பெயர்களெல்லாம் இங்கு எதற்கு? வீட்டுக்காரர் ஒரு படத் தயாரிப்பாளர் ஆகிக்கொண்டிருக்கிறார். தயாராக இருந்த படக் கதையை முந்திய நாளே நண்பனின் வீட்டிலேயே வாசித்திருந்தேன். அந்த இயக்குனரிடம் சிறிது பேசிக்கொண்டிருந்தோம். மருத்துவர் எடுத்த ஒரு செய்திப் படத்தையும் பார்த்தோம். அதை மறு பரிசீலனை செய்வது, நீளத்தைக் குறைப்பது பற்றி விவாதித்தார்கள். எனக்கு எல்லாம் புதியதாக இருந்தது – ’பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்ப்பது போல்’ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குனரும், மருத்துவரும் விடை பெற்றுப் போனார்கள்.

 மணி பதினொன்றைத் தாண்டி விட்டது. வீட்டின் மேல் மாடிக்குச் சென்றோம். படியின் முடிவு இருட்டாக இருப்பது போலிருந்தது. பாதிப் படிகள் தாண்டியதும் மேலே இருந்த விளக்கு தானாகவே பளிச்சானது! – light sensitive lights! மெத்தை ஏறியதும் அடுத்து இரு விளக்குகள் இதைப் போல் பளிச்சிட்டன. இரு அறைகள்; ஒன்றோடு ஒன்று நெருங்கி, ஆனால் தனித் தனியாக இருந்தன. ஒரு அறைக்குள் நுழைந்தோம். பாடகர் குழுவிற்கான இடம். மைக், அது இது என்று பல இருந்தன.

அடுத்த அறைக்குப் போனோம். அது ஒரு tech-room. அறையின் சுவர்கள் முழுவதையும் அடைத்துக் கொண்டு பெரிய பெரிய speakers. அனேகமாக ஒவ்வொரு speaker-ம் நாலடி நீளம் இரண்டடி அகலம் இருக்குமென நினைக்கிறேன்.
amplifiers






வகை வகையாக amplifiers; அறையின் நடுவில் voice mixing machine என்று நினைக்கிறேன். அதுவும் பெரியதாக நின்றது ... இல்லை ..
 படுத்திருந்தது.





கதவுகளுக்குப் பின்னால் இருந்த “ஒலி முழுங்கிகள்” ..!




அஷ்வினின் அமெரிக்கப் பட்டச் சான்றிதழ்




அம்புட்டு பெருசு! கதவுகளின் பின்னாலும், எதிர்ப் புறத்திலும் சில ஒலி முழுங்கிகள் நின்றன. நல்ல acoustic system.  அதன் தலைக்கு மேலே, அடுத்த அறையில் நடப்பதைப் பார்ப்பது போல் ஒரு பெரிய டி.வி.ஸ்க்ரீன். இரண்டு அறையும் ஒலி, ஒளித்தொடர்போடு இருந்தன.

இவ்வளவு எல்லாம் எதற்கு! அங்கு இரு நாற்காலிகள் இருந்தன. இரண்டுமே hi-tech chairs போலும். பார்க்கவே வித்தியாசமாக இருந்தன. எவ்வளவு நேரம் இருந்தாலும் பிரச்சனை தராத நாற்காலிகளாம். நமக்கும் ஒண்ணு இருந்தால் பதிவுகள் நிறைய போடலாமோவென நினைத்தேன்...!

தயாரிப்பாளரின் மகன் அஷ்வின் அமெரிக்கா போய் இசைக் கல்லூரியில் பட்டம் பெற்ற பையன். சின்னப் பையன் தான். ஆனால் தொழிலில் கெட்டி என்றான் நண்பன். இந்த ரிக்கார்டிங் தியேட்டர் மாதிரி சென்னையில் மட்டுமல்ல; வேறு எங்கேயும் இருக்காது என்றார்கள். தயாரிப்பாளர் பையன் அமெரிக்காவில் படித்து முடித்ததும், அங்கேயே ஸ்டூடியோ அமையப் போகும் அறையின் அளவு என்று எல்லாம் சொல்லி அதற்காகவே அங்கிருந்து எல்லாக் கருவிகளையும் வாங்கி வந்தேன் என்று தயாரிப்பாளர் சொன்னார். அந்த இரு அறைகளிலும் மொத்தம் இரண்டு கோடிக்கு மேல் பணம் கொட்டிக் கிடப்பதாகச் சொன்னார்கள்.

 நண்பன் அந்தப் படத்திற்காக ஒரு பாட்டெழுதிக் கொடுத்திருந்தான். அதில் ஒரு பகுதிக்கு மட்டும் அஷ்வின் இசை அமைத்திருந்தார். அதைப் போட்டுக் காண்பித்தார்கள். அந்தப் பாடலின் நடுவில் ஒரு இசைக்கோர்ப்பை சேர்க்க அன்று முயற்சி எடுத்தார்கள். அடுத்த அறையில் ஒருவர் டிரம் ஒன்றை வாசித்தார் – தட்டையாக இருக்குமே ... அந்த டிரம். இஸ்லாமியப் பாடகர்கள் கையில் வைத்து வாசிப்பார்களே அந்த ட்ரம்.

(அதைப் பார்த்ததும் ப்ழைய ஞாபகம் ஒன்று வந்தது. இந்த நண்பன் மாணவனாக இருந்த போது அவனது வகுப்போடு உல்லாசப் பயணம் ஒன்றிற்குச் சென்றோம்.  ரயிலில் சென்று கொண்டிருந்தோம். இளம் இரவு. இரு பக்கத்திலிருந்த மக்களின் உத்தரவு பெற்று பாட்டு, ஆட்டம் என்று தொடங்கினோம். அப்போது இந்த நண்பன் நன்றாகப் பாடுவான். கையில் ஒரு டோலக் ஒன்றை வைத்துக் கொண்டு அதைத் தட்டிக்கொண்டு பாட ஆரம்பித்தான். நன்றாக இருந்தது. ‘நேயர் விருப்பத்தின்படி’ இரண்டாம் பாட்டு பாடிக் கொண்டு இருந்தான். அப்போது தள்ளியிருந்த இடத்தில் இருந்து ஒருவர் எழுந்து வேகமாக எங்களை நோக்கி வந்தார். தகராறு வருமோ என்று பயந்து கொண்டிருந்தேன். வந்தவர் இவன் கையிலிருந்த டோலக்கை வாங்கி வைத்துக் கொண்டு, ‘நீங்க பாடுங்க தம்பி, நான் தாளம் போடுகிறேன்’ என்றார். இவன் பாட ... அவர் தாளமிட ... அடேயப்பா ... இருவரும் சேர்ந்து பின்னி விட்டார்கள். நல்ல ஒரு கச்சேரி. அந்த நினைவு மீண்டும் இப்போது நினைவுக்கு வந்தது).

இப்போது விட்ட இடத்திலிருந்து தொடருவோம் ... நண்பனும், அஷ்வினும் அவருக்குத் தங்கள் தேவையைச் சொல்ல அவர் அதை இசைக்க ... எல்லாம் கணினியில் ஏற ... பின் அதனை ஓட விட்டு ... சிலச் சில மாற்றங்கள் செய்து ... இசைத் தொழில் தொடர்ந்து கொண்டிருந்தது. (நான் பக்க ... பக்க .. என்று பேய் விழியோடு முழித்துக் கொண்டிருந்தேன்!) ட்ரம்மில் அவர்கள் எதிர்பார்த்த இசை வரவில்லை. சரி வேறு கருவி வைத்து அதைப் பின்னால் சேர்க்கலாம் என்றதும், அடுத்த அறையில் இருந்த இசைக்காரருக்கு அது ஒரு சவால் மாதிரியானது. உடனே கைகளால் வாசித்துக் கொண்டிருந்த ட்ரம்மை அகற்றி விட்டு, வாயில் கை வைத்து அடித்து பல இசைத் தாளங்களைக் கொண்டு வந்தார். அதில் ஒன்றை தேர்ந்தெடுத்தனர்.

நண்பன் rhythm போட்டு முடிச்சாச்சு ... இனி tempo .. melody சேர்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். நல்லது, நடக்கட்டும் என்று பார்த்திருந்தேன். நடப்பவை எல்லாம் பெரும் புதியவைகளாக எனக்குத் தெரிந்தன. அது சரி ... என்றைக்கு இது மாதிரியான நிஜ home theatre, musical composition எல்லாம் live-ஆக பார்க்க முடியும்?

அந்த இரவு வித்தியாசமான, பல அனுபவங்கள் தந்த இரவாக இருந்தது.

வீடு திரும்பும் போது இரவு முடிந்து, பகல் வெளிச்சம் மெல்ல எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.




*



 

6 comments:

ராமலக்ஷ்மி said...

பகிர்வு அருமை:)!

ஸ்ரீராம். said...

படிக்க மிக சுவாரஸ்யம்.

இராய செல்லப்பா said...

எல்லாவற்றிலும் வேகம் தான் இன்று! அமெரிக்காவில் என்ன கிடைக்குமோ அது இங்கும் கிடைத்தாகவேண்டும் என்ற வேகம்!

வவ்வால் said...

Dharumiyy a,

Good experience !

//இந்த ரிக்கார்டிங் தியேட்டர் மாதிரி சென்னையில் மட்டுமல்ல; வேறு எங்கேயும் இருக்காது என்றார்கள்//

Nice joke!

டிபிஆர்.ஜோசப் said...

பணம் இருந்தால் ஆகாசத்தையே வீட்டிற்குள் கொண்டு வரலாமே. இனிய அனுபவங்கள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Muruganandan M.K. said...

சுவாரஸ்மாக இருந்தது உங்கள் அனுபவங்கள்

Post a Comment