Wednesday, November 19, 2025

1361. சக்தி(த்) திருமகன்

சக்தி(த்) திருமகன்






அருவி படம் எடுத்த இயக்குநர் அருண்பிரபு உருவாக்கிய படம். குழப்பமான திரை விமர்சனங்கள் பார்த்தேன். நல்லதும் கெட்டதும் கலந்த விமர்சனக் கலவைகள். சரி .. பார்த்து விடலாமேவென உட்கார்ந்தேன். ஒரு அரசியல் புரோக்கர்தான் கதாநாயகன். எனக்கு ஒரே குழப்பம். தொலைபேசிகள் வழியே கொலை நடக்கிறது; நிலங்கள் கைமாறுகின்றன; பெரும் பணம் வருகின்றன; போகின்றன. காவல்துறை தலைகாட்டுகிறது, அரசியல் அதிகாரங்கள் தூள் பறக்கின்றன. என்ன, ஏன், எப்படி என்று எதுவும் புரிபடவில்லை. வரும் நடிகர்கள் பலரும் பல அரசியல்வாதிகளை தோற்றம், உடை, பாவனை மூலம் அடையாளம் காட்டுகிறார்கள். நிதியமைச்சர் வருகிறார். தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் குரு; ஒருவர் இருக்கிறார். ஒரு உச்சநீதி மன்ற நீதியரசர் வருகிறார். அவர் பெயர் இந்திர சூட் (Does it ring a bell?!). முக்கியமான குருவின் பெயர் அபியங்கர் சாமி / அபியங்கர் சீனிவாசன். காதல் ஓவியம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்த கண்ணன் இந்தப் படத்தில் மிக நன்றாக – தெறிக்கும் அழகு ஆங்கிலம் பேசி – நன்கு நடித்துள்ளார். படத்தில் ஒரு காதலும் கல்யாணமும் வருகிறது. (இது தேவேயேயில்லாத ஆறாவது விரல்.) கதாநாயகன் என்றால் காதலித்து, கல்யாணம் கட்ட வேண்டியது நமது தமிழ் சினிமா இலக்கணத்தில் வலிந்து கூறப்பட்ட சட்டமல்லவா?

படம் போதுமென எழுந்திருக்கலாமாவென நினைக்கும் போது கதாநாயகனின் இளம்பருவத்துக் காட்சிகள். அனாதைப் பையனை ஒரு பெரியார்  தாத்தா எடுத்து வளர்க்கிறார் – வாகை சந்திரசேகரன் அந்தத் தாத்தாவாக வருகிறார். புதிய காற்று வீச ஆரம்பிக்கிறது. எங்கும் எதிலும் பெரியாரின் வாசம்; அவர் வீசிய வார்த்தைகள். அவரது வீரியம் .. ஒவ்வொன்றாக விரிகின்றன. எனக்குத் தெரிந்து பெரியாரை இந்த அளவிற்கு உயர்த்தி எடுத்த ஒரு தமிழ்ப்படம் இது தான்.

என்னைப் பொறுத்தவரை பெரியாரென்றாலே இறைமறுப்பாளர் என்ற தோற்றம் வருவதே தவறு என்பேன். 3% சாதியினர் 97% சாதியினரை முழுமையாக ஆண்டு கொண்டிருந்ததைப் பார்த்த பெரியாருக்கு அந்த பாவப்பட்டமக்கள் இந்த உண்மையக்கூட தெரிந்து கொள்ளாமல் சூத்திரர்என்ற பெயரில் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்களே என்று கோபம் கொண்டான் அந்தக் கிழவன். ஏனிந்த நிலை? 3% அதைத்தான் இந்தப்பிரிவினையைச் சொல்கிறார்கள்; அதற்கு வேதத்தைத் துணைக்கழைக்கிறார்கள். வேதம் மக்களை நான்கு வர்ணமாகப் பிரித்துள்ளது. அனைத்து சாதியினரும் படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன்ர் என்று வேத நூல்களைச் சாட்சிக்கு அழைத்தார்கள். அறிவுள்ளவனுக்கு இது தெரியும் அத்தனையும் தவறென்று. ஆனால் மக்கள் இறையச்சத்தில் கட்டுண்டு கிடந்தார்கள். கிழவன் சாதி பொய்யென்றான்; அதைக் கற்பிக்கும் வேதம் பொய்யென்றான்; அதனைக் கற்பித்த கடவுள் பொய்யென்றான். இறையொன்று இல்லை; எல்லாமே மனிதக் கற்பிதம் என்றான். தூக்கிப் பிடிக்கும் பிராமணர்கள் உயர்சாதி என்பதை முற்றாக மறுத்தான்.

இந்த 3% vs 97% சமூக நிலைகளைப் பார்த்து சினங்கொண்டானே அதனை அப்படியே இந்தப் படத்தில் வெளிப்படையாகச் சித்தரித்திருக்கிறார்கள். நல்ல தைரியம். இதுவரை யாருக்கும் அதிகம் வெளிக்காட்டத இந்தக் கோபத்தை இப்படத்தில் முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

பெரியார் தாத்தா பல்வேறு முத்துகளை வளரும் பையனிடம் உதிர்க்கிறார்:

சிந்திக்கிறவன் மனுசன்;சிந்திக்கப் பயப்படுபவன் கோழை.

கஷ்டப்பட்டு உழைச்சா அது கர்மம்’; உட்காந்து சாப்பிட்டா தர்மம்’.

நாட்டைக் காப்பாத்த அழிக்க வேண்டியது சிங்கத்தையல்ல; நரியை.

மனுசங்க எல்லாம் ஒண்ணுதான்; கீழ மேலன்னு ஒண்ணும் கிடையாது;

வசதிக்கேற்ப நான் மேல, நீ கீழன்னுகிடையாது. ஆனா பாழாப்போன ஜனங்களும் அதை நம்புது.

ஆயிரம் பேர் பசியோடிருந்தால் பனக்காரன் வயிறு பெருத்துப் போகும்.

இப்படி பல வெடிக்கும் வசனங்கள். அவை நிறைவைத் தருகின்றன.

படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்காதீர்கள். எந்தத் தமிழ்ப் படத்தில் லாஜிக் ஒழுங்காக இருந்துள்ளது? இங்கேயும் அது போல்தான். ஆறாயிரம் கோடிக்கு மேல் ஹீரோ கொள்ளையடிக்கிறார், கேஸ் எல்லாம் போட்டாயிற்று. ஆனால் ஜாமீனில் அழகாக அடுத்தடுத்து வெளியேயிருந்து என்னென்னவோ செய்கிறார்.)செந்தில் பாலாஜி பார்த்தால் ரொம்பவே தன் நிலை பார்த்து கொந்தளித்து விடுவார்!) ஹீரோவைப் பிடிக்கவே பிடிக்க முடியாது.

3% மீது அத்தனைக் காட்டமாக இருக்கும் இயக்குநர் கதாநாயகியாக ஒரு திராவிடப் பெண்ணைப் போட்டிருக்கலாம். அங்கேயும் 3% தான் dominate பண்ணுது! அட போங்கய்யா ...!

ஹீரொ விஜய் அண்டோனி அவர்களே இதன் தயாரிப்பாளர். அவருக்கு நன்றியும் பாராட்டும்.

 

 

 

No comments:

Post a Comment