Tuesday, November 09, 2010

454.அன்னை தெரஸா - COME BE MY LIGHT...என் பார்வையில்.. 5

*
தொடர்புள்ள இடுகைகள்:

முதல் இடுகை ... 1
இரண்டாம் இடுகை ... 2
மூன்றாம் இடுகை ... 3
நான்காம் இடுகை ... 4
ஐந்தாம் இடுகை


*




Image and video hosting by TinyPic

  
*


எனது பார்வையில் .... 
கடவுள் என்னிடம் பேசினார் ...

கிறித்துவர்கள் மத்தியில்   தன்னோடு கடவுள் / கர்த்தர் / ஏசு பேசினார் என்று பலரும் சொல்வது அடிக்கடி நடக்கும் ஒன்று. இது பிரசங்கிகள் (மதப் பிரசாரக்காரர்கள் & மத வியாபாரிகள்) மிக எளிதாகப் பயன்படுத்தும் ஒரு விஷயம். நான் கேட்டதில்ல; ஆனால் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்; ஒரு 'பெரிய' பிரசங்கி ஞாயிறு தோறும் breakfast ஏசுவோடு என்று கூறுவாராம்! கல்யாண விஷயங்களில் இந்துக்களுக்கு ஜாதகம் பார்ப்பது போல், கிறித்துவர்களில் பலரும் கடவுளின் நேரடித் தலையீட்டை திருமணங்களுக்கு எதிர்பார்ப்பதுண்டு.  

இவ்வளவு எதற்கு ... என்னிடமே ஒரு முறை கடவுள் பேசினார். அது என் முதுகலைப் படிப்பு நடந்த போது நடந்தது. நடந்த இடம், நேரம் எல்லாமே நன்கு நினைவில் உள்ளன. சிறுவயதிலிருந்து ஆடி ஓடித் திரிந்த St. Mary's Cathedral. அங்கு நான் காலைப் பூசை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அப்போது மிகுந்த நம்பிக்கையாளன். எனக்குத் தேவையான ஒன்றைப் பற்றி கடவுளிடம் உருக்கமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது பூசையில் மிக முக்கியமான இடமான 'எழுந்தேற்றம்' நடந்த சமயம். தலைகுனிந்து எல்லோரும் ஆராதனை செய்யும் நேரம். அப்போது நானும் தலைகுனிந்து ஆராதிக்கும்போது  நான் கேட்டதற்கான விடை என் காதுகளில் மிகத் தெளிவாக ஒரு குரல் மூலம் விழுந்தது. அது அப்போது எனக்கு கடவுளின் குரலாகவே தெரிந்தது. நான் இங்கு சொல்லியதில் ஏதும் மிகை இல்லை.


எனக்கு எப்படி அந்தக் குரல் காதில் விழுந்தது? முழு நம்பிக்கையாளனாக இருந்த அன்று எனக்கு அது நிச்சயமாக கடவுளின் குரலாகத்தான்  தெரிந்தது. இன்று பழையதை நினைத்துப் பார்க்கும் போது அதற்கான காரணம் என்னவென்று தெரிகிறது. இங்கே அதைச் சொல்லியுள்ளேன். 

நான் கேட்டதற்கு கடவுளிடமிருந்து கிடைத்த பதில் பின்னால் தவறாகப் போய்விட்டது. அந்த வயதில் என்ன பெரியதாகக் கேட்டிருக்கப் போகிறேன், கடினமான ஒரு பாடத்திட்டத்தில் எந்தப் பகுதியில் பெரிய essay question வருமென்பதுதான் என் அன்றைய பிரச்சனை. (இதற்கெல்லாமா ஜெபிப்பீர்கள் என்று ஒருவேளை நீங்கள் யாராவது கேட்டால் ... உங்களுக்கு கிறித்துவ மக்களைப் பற்றித் தெரியவில்லை என்று பொருள். இதற்குத்தான் என்றில்லை; எதற்கும் ஜெபம் என்பது கிறித்துவ வழக்கம். சில ஜோக்குகள் கூட உண்டு. இங்கே வேண்டாமே!)

இப்படி 'கடவுளோடு பேசுவது' தொடர்பாக எனக்குப் பரிச்சியமான இந்து,கிறித்துவ, இஸ்லாமிய சமயங்களோடு இதற்கான தொடர்பை எழுதணும்.

கட்டுப்பாடற்ற இந்து மதத்தில்தான் அதிகமாக இந்த 'கடவுளோடு பேசுவது' நடக்கிறது என்று நினைக்கிறேன்.பலரும் அந்த தெய்வத்தோடு பேசினேன்; இந்த தெய்வத்தோடு பேசினேன் என்று சொல்வது அடிக்கடி கேட்கப்படும் ஒரு ஜோக்! அதுவும் சின்ன தெய்வங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிராமங்களில் இன்றும் 'சாமியாடிகள்' என்று சில குறிப்பிட்ட மக்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஊரில் நடக்கும் அம்மன் கொடை போன்ற விழாக்களில் இவர்களின் 'ஆட்டம்' பார்த்திருக்கிறேன். 'அருள் வாக்கு' என்பது நடைமுறை வார்த்தை. ஆடும்போது பல கேள்விகள் கேட்க இவர்கள் தங்கள் அருள்வாக்கைத் தருவார்கள். ஆனால் கேட்ட கேள்விகளும் அவர்கள் தந்த அருள் வாக்கும் யாருக்கு நினைவில் இருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த ஆண்டு அம்மன் கொடை அன்று மறுபடி கேள்விகள் கேட்க அவரும் மறுபடி அருள்வாக்கு கொடுப்பார். சென்ற ஆண்டு கொடுத்த அருள்வாக்குகள் சரியாக இருந்தனவா என்று யாரும் கணக்கெடுப்பதில்லை.

இது போன்ற  'அருள்வாக்கு'க்காரர்களோடு எனக்கு இரண்டு அனுபவங்கள். ஒன்றில் நானும் என்னைப்போல் நம்பாத நண்பன் ஒருவனும் நம்பிக்கையோடு சென்றவனோடு உடன் போனோம். நம்பிக்கைக்காரனுக்கு 'பலன்' சொல்லியாச்சி. வேடிக்கைக்காக நம்பிக்கையில்லா நண்பனைப் பற்றி சும்மானாச்சுக்கும் ஒரு கேள்வி கேட்டேன். தம்பிக்கு மனசுல ஒரு கஷ்டம். என்னவாகும் என்றேன். அந்தப் பெண்மணி - வீட்டு வேலை செய்து வந்து, திடீரென்று அருள்வாக்கு கொடுக்கும் அற்புதப் பெண்ணாக லோக்கலில் பெயர் பரவியிருந்தது - வயசுப்பையன் என்ற அனுமானத்தில், காதலிக்கிற பொண்ணு கட்டாயம் கிடைக்கும்; வெளிநாட்டுப் பயணம் இன்னும் சில மாதத்தில் என்று அருள் வாக்கு கொடுத்தது. பிறகு நாங்களே சொன்னோம் - பையனுக்கு லவ்ஸ் ஏதும் கிடையாதுன்னு. சிரிச்சிக்கிட்டே, டமார்னு எனக்கு ஒரு அருள்வாக்கு கொடுத்தது. 'உங்க மூஞ்சிய பார்த்தா .. நல்லா தெரியுது, உங்களுக்கும் அருள் வாக்கு சொல்ற அம்சம் மூஞ்சில நிறைய இருக்குதுன்னு' சொல்லிச்சி. பொழைக்கத் தெரியாத ஆளா ஆய்ட்டேன் .. அப்பவே இறங்கியிருக்கணும் .. !


இதெல்லாம் சின்ன சாமியாடிகளின் கதை. இப்போதெல்லாம் இது பெரிய, பெரிய கார்ப்பரேட் லெவல்ல இந்த 'அருள் வாக்குகள்' சொல்லப்படுகின்றன. இங்கேயும் யாரும் அருள்வாக்குகளின் validity-யை சோதிப்பதில்லை. எல்லாமே ஒரு 'அருள் மயம்' மட்டும்தான் ! ஆனால் currency laundering எல்லாம் இவங்க மூலமா நடக்கிறதாகவும் அதனால் தான் அரசியல்வியாதிகள் இவர்களை நெருங்கியிருப்பதாகவும் நம்ம நித்தீஸானந்தா விவகாரத்தில் ஊடகங்கள் எழுதின. பாபாவா, நித்தீஸா, கல்கியா, மேல்மருவத்தூரா ... எல்லாம் இந்த குரூப்பில் வருகிறார்கள். கல்கி மேல் பயங்கர காட்சிகளெல்லாம் தொலைக்காட்சியில் வந்தன; ஆனால் சில நாளில் கல்கி ஆஷ்ரமத்தின் பக்தி காட்சிகளும் வந்தன. மேல்மருவத்தூர் வரி ஏய்ப்பு விஷயம் வந்தது; அதோடு சரி. அட .. அதைவிட நித்தீஸ் விஷயம் தீயாய் எரிந்தது; ஆனால் தலைவர் போட்ட முதல் கூட்டத்தில் எல்லோரும் முழு அட்டென்டன்ஸ்! எப்படியோ, அவங்க பிஸினஸ் களைகட்டிப் போகுது ... !

அடுத்து கிறித்துவர்கள் மத்தியிலும் 'கடவுளோடு பேசுதல்' நிறைய நடக்குது. இதிலும் பெரிய பிரசங்ககாரர்களுக்கு ஒரு தனியிடம். அவர்களில் பலர் ஏசுவுடன் 'நேரடி உரையாடலை' நடத்துவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களின் லைன் வைட்டல் லின்க்! எப்படித்தான் இப்படி கதை சொல்கிறார்களோ?! நம்பத்தான் ஆளிருக்கே .. அதனால்தான். ஒரு பிரசங்கியார் மேல் நம்பிக்கை வந்துவிட்டால் எதையும், எல்லாவற்றையும் நம்பிவிடுகிறார்களே! அதோடு, ஒரு பிரசங்கி பிடித்து விட்டால் அதன் பின் அவர், அவரது மனைவி, பிள்ளை குட்டி, மருமகன், மருமகள். பேரன் பேத்தி என்று அவர்கள் குடும்பத்து மேலேயே பக்தி மேலிட இருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமே கடவுள் காத்திருக்கிறார் போலும். அவர்கள் ஜெபம் பண்ணினால்தான் கடவுள் கேட்பாரென்ற நம்பிக்கை. ஏதோ போனா போகுதுன்னு அவர்கள் வீட்டு நாய் பூனைக்குட்டிகளை விட்டு விட்டார்கள்! இவர்கள் இந்து கார்ப்பரேட்கள் அளவுக்கு இல்லையென்றாலும் சும்மா சொல்லக் கூடாது .. நன்றாக வளர்கிறார்கள். ஆனாலும் இதில் எனக்கு ஒரு சின்ன வருத்தம். இந்து கார்ப்ரேட் (ஆ)சாமிகள் பெரிய மருத்துவமனை, கல்லூரி அது இதுன்னு பெருசா மக்களுக்கு உதவுவது போல் செய்வது மாதிரி இந்த கிறித்துவ வியாபாரிகள் எதுவும் நல்ல காரிய்ங்கள் செய்வது இல்லை.


இந்துவாக இருந்து கிறித்துவரான ஒருவர் - டாக்டர் - மாரிமுத்துன்னு பெயர். அவர் பையன் பெயர் ஒரு அண்ணாமலை பல்கலையில் கொடூரமான ஒரு கொலைக்கேசில் வந்ததென நினைக்கிறேன். அவரைப் பத்தி என் பாஸ் சொன்ன கதை நன்றாக இருந்தது. என் பாஸும் இந்துவாக இருந்து கிறித்துவரானவர். அந்த டாக்டர் படிக்காமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தவராம். தேர்வு நேரத்தில் பயந்து போய் ஏசுவிடம் இறைந்து மன்றாடியிருக்கிறார். அன்று அவரது "கனவில்" ஏசு வந்து அப்படியே Question Paper-யைக் காண்பித்திருக்கிறார். யாரிடம் இதைச் சொல்லாதே என்று வேறு சொல்லிச் சென்றிருக்கிறார் ஏசு! ஆனாலும் ஒரு evidence வேணுமில்லையா .. அதனால் நம்ம டாக். மாரி நண்பர்களிடம் கேள்விகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.


அடுத்த நாள் .. தேர்வு. இங்க பாருங்கய்யா ... அப்படியே ஏசு கொடுத்த கேள்விகள். அதை மட்டும் சாய்ஸ் விடாமல் படித்த நம்ம டாக். மாரி அழகாக எழுதி பாஸ் பண்ணிட்டார். கடவுள் தன்னிடம் வந்து பேசி தன்னைப் பாஸ் ஆக்கிய பின் நம்ம டாக். என்ன பண்ண முடியும்? கிறித்துவனாகி விட்டார். இதைத் தன் பிரசங்கத்தில் 'சாட்சி' சொல்லியிருக்கிறார் -- இது என் பாஸ் சொன்ன கதை.

என் பாஸின் மகன் இந்தக் கதை சொல்வதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்தான் எங்கள் துறையிலேயே படித்து விட்டுச் சென்றிருந்தான். நல்லா படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கிய பையன். பாஸ் கதை சொல்லியதும் கொஞ்சம் pause விட்டு விட்டு, வேறு ஏதேதோ பேசிவிட்டு, மெல்ல பாஸிடம் 'உங்க பையன் சீனு படிக்கும்போது அவனுக்கு Question Paper leak பண்ணியிருக்கீங்களா?ன்னு மெல்ல கேட்டேன். பாஸுக்கு கோபம்; ஆனாலும் 'என்ன Sam. இப்படிக் கேட்டுட்டீங்க? நானெல்லாம் அப்படியெல்லாம் பண்ற ஆளா .. அந்த மாதிரி தப்பெல்லாம் செய்வேனா?' அப்டின்னு சென்டியா கேட்டார்.

'பாஸ்! நீங்களே உங்க பையனுக்கு Question Paper leak பண்றது தப்புன்னு சொல்றீங்க. ஆனா உங்க கடவுளுக்கு அது தப்பா தெரியாதா? படிச்சவனுக்கு உதவி செய்யாம, இப்படி ஊர்சுத்திக்கு ஏன் உதவுறார்?' -- அப்டின்னேன். பாஸ் கொஞ்சம் அப்செட். நான் தொடர்ந்தேன்: 'ஏன் உங்க கர்த்தரை நீங்களே இப்படி தரம் தாழ்த்துறீங்க? நீங்க கூட செய்ய தயங்குற ஒரு தப்பை உங்க ஆண்டவன் செய்வார்னு ஒரு ஆள் சொன்னதை எப்படி நம்புறீங்க? அதை கோவில்ல வச்சி சாட்சியா ஒருத்தன் சொன்னா நம்பிடுவதா? -- அப்டின்னேன். .... பாஸ் அப்பீட் அந்த இடத்திலிருந்து!

இஸ்லாம் மதம் இதில் ஒரு தனி வகை. இன்னும் இறுக்கமான மதம். இங்கே யாரும் கடவுளைப் பார்த்தேன்; கடவுளிடம் பேசினேன் என்று சொன்னதாக நினைவில்லை. (ஆனால், Bahai  என்ற புதிய சமயத்தில் Bahá'u'lláh என்று ஒருவர்  தானும் ஒரு நபி என்று சொல்லி புதிய சமயத்தை ஏற்படுத்தினார். அந்த மதத்தைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறது: Bahá’í Faith is today among the fastest-growing of the world’s religions. With more than five million followers,  it is the second-most widespread faith,surpassing every religion but Christianity)  இருந்தாலும்  யாரும் இஸ்லாமிய மதத்தில் கடவுள் என்னிடம் பேசினார் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏனெனில் அது தேவ தூஷணமாகி விடும்.பத்வா தான் அடுத்தது. இதற்கு பாகிஸ்தானில் தூக்குத் தண்டனையோ ?

இஸ்லாமில் முகமது மட்டுமே 'கடவுளோடு பேசியவர்'. அதுவும் முதலில் அவருக்கு அதை நம்ப முடியாமலிருந்து, பிறகு துணைவியார் confirm செய்த பிறகே அவரும் ஒத்துக் கொள்கிறார். ஒவ்வொரு முறை குரான் இறங்கும்போதும் அவர் சில உடல் மாற்றங்களுக்கு உள்ளாகிறார். இங்கும் அவர் கடவுளோடு, அல்லது அவரது தேவ தூதரோடு பேசினார் என்பது முகமதுவின் அறிவிப்பு. இதற்கு என்ன சான்று? அவர் அப்படி ஜிப்ரேலிடமிருந்துதான் குரானைப் பெற்றாரா என்பதெல்லாம் கேள்விக்கு அப்பாற்பட்ட விஷயம். தேவ தூதர் வந்து பேசினாரா ... இல்லை, நான் முன்பே சொன்னதுபோன்ற அது ஒரு மனப்பிரம்மையா என்பதை யார் உறுதி செய்ய முடியும்? முகமது சொன்னார்; நான் நம்புகிறேன்; ஏனென்றால் சின்னப் பிள்ளையிலேயே அது சொல்லிக் கொடுக்கப்பட்டது என்பது மட்டுமே இந்த விஷயத்தில் ஒரே ஒரு சான்று. ஜிப்ரேல் கொடுத்த வேதம் பல installments-களில், பல ஆண்டுகளில்தான் (610 to 632  - 22 ஆண்டுகள்)கொடுக்கப்படுகிறது. அதில் என்ன லாஜிக் என்று தெரியவில்லை. கொடுக்க நினைத்த கடவுள் ஒட்டு மொத்தமாக ஏன் கொடுக்கவில்லை? அதுவும் கொடுத்த கட்டளைகள் முறையாக -சீரியல் ஆர்டராகக் - கொடுக்கப்படாமல் அவ்வப்போது கொடுக்கப்பட்டு, பிறகு மனிதர்களால்  முறையாகத் தொகுக்கப்பட்டது என்று படித்து தெரிந்து கொண்டேன். ஏன் இப்படி? இப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது .. ஏசு ஏன் 12-30 வயது வரை ரகசிய வாழ்க்கை வாழ்ந்தார் என்றெல்லாம் கேட்டால் கிறித்துவ நம்பிக்கையாளர்களுக்குப் பிடிக்காது. அது போல்தான் இங்கும். ஆனால், முகமது சொன்னார்;  அதனால் நம்புகிறேன் என்பது நம்பிக்கையாளர்களுக்குப் போதும்; ஆனால் எல்லோருக்கும் போதுமா?

ஆர்க்கிமிடீஸின் eureka  கதை எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆர்க்கிமிடீஸ் ஒரு பிரச்சனைக்கான பதிலைத் தேடிக்கொண்டிருக்கிறார். நினைவெல்லாம் அதிலேயே இருக்கிறது. அந்த நினைவின் நீட்சியாக அவருக்குத் திடீரென ஒரு பதில் கிடைக்கிறது. இதில், அவரது  நினைவின் நீட்சியாகப் பதில் கிடைத்தது என்பது சரியா? அல்லது, அவருக்கு கடவுள் வந்து செய்தி சொன்னார் என்பது சரியா?  நான் சொன்ன மனப் பிரம்மை என்பதும் இத்தகையதே,. நாம் ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நினைவு வருகிறது. அது நம் நினைவின் ஆழத்திலிருந்து வந்த ஒரு பதில். நமது பிரச்சனைக்கு அது தீர்வாக இருக்கலாம். அத்தீர்வு நாம் ஏற்கெனவே நினைத்து வந்ததின் தொடர்பே.

ஆர்க்கிமிடீஸ் மட்டுமல்ல .. இது போல பல அறிவியல் உண்மைகள் கனவுகளாக, நினைவுகளாக திடீரென தோன்றியவைகள்தான். சில சான்றுகள்:

The scientists credited with the top seven eureka moments, in an ascending order of excitement (with the discovery of penicillin the winner) are:
இதை விடவும்  Kekulé என்ற வேதியியல் அறிஞருக்கு வந்த 'பாம்புக் கனவே' benzene என்ற வேதிப்பொருளுக்கான உருவமைப்பை வெளிப்படுத்தியது. அது போலவே, கலிலியோ கோவிலில் உட்கார்ந்து ஒழுங்காக பிரசங்கத்தைக் கேட்காமல், கோவில் ஆடிக்கொண்டிருந்த chandelier-ன் அசைவின் ஒழுக்கத்தைக் கவனித்து பெண்டுலத்தைக் கண்டுபிடித்தார்.


இந்த அறிவியலாளர்களுக்கு கடவுளே இப்படி வந்து பதில் கொடுத்தார் என்று ஏன் சொல்லக்கூடாது?

அப்படியே நம்பிக்கையாளர்கள் சொல்வது போல் கடவுளே வந்து 'ஏதாவது' சொன்னால் அது அறிவியல் மொழியோடு ஒட்டிய ஒரு மொழியாக, சரியான பொருளோடு சொன்ன அன்று இருந்த காலத்தை ஒட்டி இல்லாமல் எப்போதைக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். இஸ்லாமியர்கள் குரான் முழுவதும் அறிவியலோடு ஒன்றியது என்று சொல்லிக்கொண்டிருப்பதால் அதிலிருந்தே சில வசனங்களை எடுத்து விவாதிப்போம்.

உலக படைப்பைப் பற்றிக் கூறினால் உருண்டையான இந்த உலகைப் படைத்தார். சூரியன், நிலவு இப்படி இப்படி இருக்கும் என்று சொன்னால் சரி; அதை விட்டு விட்டு, பூமியை நான் விரிப்பேன்; மலைகளை நட்டு வைப்பேன், சூரியன் இரவு வணங்க வரும் ...  என்பது போன்ற பொத்தாம் பொதுவான சொற்கள் நமக்கு இன்றைய அறிவியல் நிலையில் என்ன புதியதாக, சரியாக சொல்லிவிட்டன? அதைவிட பதிவுகளில் நன்கு விவாதிக்கப்பட்ட விந்துவைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இனவிருத்திப் பொருட்கள், விந்து-முட்டை இணைதல், நிறமிகள் ஒன்று சேரல், haploid, diploid, fertilization, மூளையும் இதயமும் எப்படி வளர ஆரம்பிக்கன்றன என்பது போல் அன்றே சொன்னால் இன்றைய அறிவியலுக்கு ஒத்து வரும். அதை விட்டு விட்டு ...
086.006 He is created from a drop emitted- விந்து  மிகச்சிறிய ஒன்று; அது  என்ன a drop? Is sperm a drop of liquid?
086.007 Proceeding from between the backbone and the ribs:    'ribs' அப்டின்னா நெஞ்செலும்பு. முதுகெலும்பிற்கும், நெஞ்செலும்புக்கும் நடுவிலிருந்து என்றால் அது நெஞ்சாங்கூட்டிலிருந்து என்றாகிறது. வர்ர இடத்தை சரியா சொல்றதா இருந்தா சொல்லணும்; இல்லட்டா சொல்லாம விட்டிரலாம்.

ஒரு மாணவன் தப்பான விடை தருவதைவிட குழப்பமான விடை கொடுத்தால்  நிச்சயம் அவனுக்கு மிகக் குறைந்த மதிப்பெண்ணே கிடைக்கும். சொல்ல வந்தால் சொல்ல வந்ததை தெளிவாக, சரியாக, இக்காலத்திற்கும் பொருந்துவதாக 'கடவுள்' அப்பவே சொல்லியிருக்கணும். அது இல்லைன்னா அது கடவுள் சொன்னதாக இருப்பதாக நினைப்பது தவறு. கடவுள் சொன்னதாக இருந்தால் அது 2+2 = 4 என்பதுபோல் கனக் கச்சிதமாக இருக்க வேண்டும். கடவுள் சொன்னதுக்கு அர்த்தம் இதுல்ல .. அதுன்னு சொன்னா ...அதுல்ல  .. இதுன்னு சொன்னா ?

ஆக, கடவுள் சொன்னார் என்பதெல்லாமே மனப்பிரம்மை; சுயக் குழப்பம்; இதெல்லாம் இல்லையென்றால், அது வேண்டுமென்றே செய்யப்படும் ஏமாற்று வேலை.

இன்னொரு விஷயம்:   கிறித்துவத்திலும் ஏக கடவுள் என்ற நிலையுண்டு. என்னைத்தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை என்ற தத்துவம்தான். ஆயினும் வழி தவறினால் உனக்கு என்னென்ன நடக்கும் என்ற விஸ்தாரங்கள் இங்கே இல்லையென நினைக்கிறேன். ஆனால் கிறித்துவத்தைத் தொடர்ந்து வந்த இஸ்லாமியத்தில் அவைகள் நறுக்குத் தெறித்தது போல் சொல்லியுள்ளன - நல்ல அச்சுறுத்தலாகவே ...


[ஹல்ரத் அலீ: "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதம்தான் சிறந்த வழி. (தன் அறிவைக் கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல்படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கி விடுவான்."

16:106: "அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு இதயத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு.)


மூன்று ஆபிரஹாமிய மதங்களில் எப்படி வந்தது இந்த பெரும் வேற்றுமை?
பழைய ஏற்பாட்டில் இருக்கும் கொடூரம் புதிய ஏற்பாட்டில் கொஞ்சம் நலிந்து. பின் ஏன் 'கடைசி ஏற்பாட்டில் இப்படி ஆனது என்பது ஆச்சரியமான ஒன்றுதான். அதுவும் இந்தக் கடைசிக் கடவுள் மிக வல்லினமானவராகத் தெரிகிறது. நிறைய பயமாக இருக்கிறது.

என்னை மறுத்தால் தண்டனை தருவேன் என்று சொல்லும் ஒரு  'தெய்வத்தை'க் கருணையாளன், இரக்கமுள்ளவன் என்பது இஸ்லாமில் ஒரு நல்ல நகைமுரண். அதோடு இப்படி குரானில் பேசப்படுவது வன்முறையல்ல; அது வெறும் எச்சரிக்கைதான் என்று சொல்வது அதைவிட மிகப் பெரிய நகைமுரண்.


*


16 comments:

Anonymous said...

தெரசா... மறக்க முடியாத அன்னை

RMD said...

//ஒரு 'பெரிய' பிரசங்கி ஞாயிறு தோறும் breakfast ஏசுவோடு என்று கூறுவாராம்! //
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். என்ன சொல்வது.
இவரோடு காலை உணவு மதிய உணவு யாரோடு?
(ஞாயிறு மதியம் கொஞ்சம் ஸ்பெசல் இல்லையா? அதுக்குதான்)

உமர் | Umar said...

மிகவும் அட்டகாசமான பதிவு.

அதற்குள் ஒரு மைனஸ் ஓட்டா?

மதுரை சரவணன் said...

கடவுள் என்னிடம் பேசினார் ....என்று சரியாக மத வியாபாரிகளை விமர்சித்துள்ளீர்கள். ஜோசியம் , மை சொல்லுவது, வெத்திலையில் மை பார்ப்பது , எல்லாமே மனிதனின் எதிர்பார்த்து ஒரு செயலை செய்ய முற்படுவதால் ஏற்படுகிறது. அதனாலே மனிதன் மதத்தின் பெயரால் ஏமாற்றப்படுகிறான். என்று மனிதன் எந்தவித எதிர்ப்பார்ப்போடும் இல்லாமல் வாழப் பழகுகிறானோ , அன்று அவனே ஞானம் அடைந்து, ஒரு ஆன்மிக வாதியாக வாழ்வான் என்பது என் தனிப்பட்ட கருத்து. அவனை வழி நடத்த அடிப்படை நம்பிக்கையை வாழ்வில் ஏற்படுத்த , அவசியம் ஒரு மதம் வேண்டும்.அதுவும் திணிக்கப்படாத ஒன்றாக இருக்க வேண்டும். நம் தேடுதலே ஆன்மிகம் . ஓஷோ சொல்வது போல சரியாக தேடினால் , ஆரம்பமே முடிவாகிவிடும். பகிர்வுக்கு நன்றி

Thekkikattan|தெகா said...

வாவ்! மிக நீண்ட பதிவு... உங்க சிறு வயது வேண்டுதல்கள் என்னுடைய பால்யத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கும் பொழுது குபீர் சிரிப்பு வந்தது. நல்லவேள நான் கேட்டதையெல்லாம் நிறைவேத்தி வைக்கல... இல்லன்னா, ரணகளமா போயிருக்கும் :)

பல ஆழமான கேள்விகள். மனப்பிறழ்சியின் ஊடாக பர்சனாலிடி மாறி அருள்வாக்கு வழங்குவதை ஊக்குவிப்பது பாவம் அருள்வாக்கு வழங்குபவருக்கு நாள்பட்ட தீர்க்க முடியாத ஸ்கிட்சோஃப்ரீனியா லெவலுக்கு எடுத்துட்டுப் போயிடுதுன்னு உணர்ரதில்ல போல ;)

Anna said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

yasir said...

தருமி அய்யா அவர்களுக்கு,
நான் வலைக்கு புதியவன் தங்களின் பதிவுகள் அருமை. சிந்தனையை தூண்டும் விதமக அமைந்துள்ளது. என்னைப் பொருத்த வரையில் இன்றைய உலகிற்கு கடவுள் உண்டா இல்லையா? என்று கேள்வி எழுப்புவதைவிட தேவையா? என‌ எண்ணிப்பார்த்தலே சிறந்தது என்று தோன்றுகிறது. ஏனெனில் கடவுளை வணங்கினால்தான் உயிர் வாழ முடியும் என்ற நிர்பந்தம் எந்த உயிரினங்களுக்கும் இல்லாததே கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது என்பது என் கருத்து. மேலும் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

தருமி said...

yasir,

//கடவுளை வணங்கினால்தான் உயிர் வாழ முடியும் என்ற நிர்பந்தம் எந்த உயிரினங்களுக்கும் இல்லாததே கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது //

வாருங்கள்.
நான் நினைத்திராத ஒரு விளக்கம். நன்றி.

தருமி said...

yasir,
நான் வேறு விதமாக யோசித்தது உண்டு. எந்த உயிரினமும் மனிதனும் வேதியல்படி எல்லாமே ஒன்றுதான். செத்த பிறகும் எல்லோரும் ஒன்றே. இதில் மனுஷனுக்கு மட்டும் ஏன் கடவுளெல்லாம் வந்தது என்று யோசித்திருக்கிறேன்.

எம்.ஏ.சுசீலா said...

மிகச் சீரிய பதிவு.
ஒரு சார் கண்ணோட்டமின்றிச் சகல மதங்களின் பலவீனப் புள்ளிகளையும் ஒரே தட்டில் வைத்து எழுதிய உங்கள் நடுநிலைக்கு மதுரைக்காரியான என் வணக்கம்.
எம்.ஏ.சுசீலா,
புது தில்லி
(தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை)

yasir said...

சகோதரி எம்.ஏ.சுசீலா,
சகோதரி பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.தங்களைப்போன்ற பயின்றவர்கள் பகுத்தறிந்து இவ்வாறு மறுமொழிகள் இடுவதே சமுதாய முன்னேற்றத்திற்கான ஓர் எடுத்துக்காட்டாகும். இன்னும் சகோதரிகள் அக்கறை காட்டினால் முன்னேற்றத்தில் முன்னேற்றம் காணும். வாழ்த்துக்கள்....

ராஜ நடராஜன் said...

Logical approach sir!

yasir said...

நண்பர் தருமி,
என்னை பாராட்டிய முதல் மனிதர் தருமி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.// நான் வேறுவிதமாக யோசித்தது உண்டு. எந்த உயிரினமும் மனிதனும் வேதியல்படி எல்லாமே ஒன்றுதான். செத்த பிறகு எல்லோரும் ஒன்றே. இதில் மனிதனுக்கு மட்டும் ஏன் கடவுளெல்லாம் வந்தது?//

தங்களின் கருத்து அறிவியல்ரீதியாக மிகச் சிறந்தது. இதே கேள்வியை மத பழைமைவாதிகளிடம் கேட்கும் போது,மனிதனுக்கும் விலங்கினங்களுக்கும் உள்ள வேறுபாடே ஆறாவது அறிவு எனும் பகுத்தறிவே அதன்படியே சிந்தித்து கடவுளை வணங்குவதாக கூறி வருகிறார்கள்.ஆறாவது அறிவு என்று ஒன்று உண்டா?அல்லது மொழிசார்ந்த வளர்ச்சிதான் அந்த ஆறாவது அறிவா? பகுத்தறிவு என்பது அறிவின் வளர்ச்சி என்று வேண்டுமானால் கூறலாம் அல்லவா? ஏனெனில் அறிவு வளர்ச்சி பெறாத ஆதி மனிதனும் கிட்டதட்ட விலங்கினங்களுக்கு சமமான வாழ்க்கைதான் வாழ்ந்திருக்கிறான். அவனும் கடவுளை வணங்கியதாக வரலாறு கூறுகிறது. ஆக அறிவு வளர்ச்சி பெறாத காட்டுவாசிகளும் அறிஞர்களும் கடவுளை வணங்குவது என்பது எதை காட்டுகிறது, அப்ப அந்த ஆறாவது அறிவு என்பதுதான் என்ன?

தருமி said...

ஆர்.கே.சதீஷ்குமார்,
RMS Danaraj,
கும்மி,
Thekkikattan|தெகா,
The Analyst (long time .. no see)
எம்.ஏ.சுசீலா,
ராஜ நடராஜன்

.................... எல்லோருக்கும் மிக்க நன்றி.

தருமி said...

சரவணன்,

ஆன்மீகவாதிக்கும் சமயத்திற்கும் தொடர்பு இல்லை என்று நான் நினைக்கிறேன்.

தருமி said...

Yasir,
மீண்டுமொரு நல்ல கேள்வி://அறிவு வளர்ச்சி பெறாத காட்டுவாசிகளும் அறிஞர்களும் கடவுளை வணங்குவது என்பது எதை காட்டுகிறது, அப்ப அந்த ஆறாவது அறிவு என்பதுதான் என்ன?//

Post a Comment