Monday, December 31, 2012

620.. என்னைச் சுற்றிலும் இத்தனை நல்லவர்கள் ... வாழ்க ..

*



சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கை சென்று வந்தேன். அதில் ஒரு நாள் எங்கள் காமிராவை ஒரு சாப்பாட்டுக் கடையில் மறந்து வைத்துவிட்டுச் சென்று அதன்பின் நினைவுக்கு வந்து நாங்கள் போக முடியாததால் எங்கள் ஓட்டுனரை அனுப்பி வைத்து காமிராவை மீண்டும் பெற்றோம் என்று ஒரு பதிவில் எழுதியிருந்தேன்.

 நாங்கள் சுற்றுப் பயணிகள் என்று கடைக்கார இளைஞருக்கு நன்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் காமிராவை எடுத்து வைத்திருந்து ஓட்டுனர் கேட்டதும் அன்போடு கொடுத்தனுப்பியிருந்தார் அந்த இளைஞர். என் இரு நண்பர்கள் இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் நடந்தது எனக்கு  மிக்க ஆச்சரியத்தைக் கொடுத்தது.

இவ்வளவு நல்ல மனிதர்களா நம்மைச் சுற்றி என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்.

*

சரி .. அந்தக் கதை இப்போது மீண்டும் எதற்கு என்று கேட்கிறீர்களா?

சென்ற வாரம் 26-ம் தேதி வீட்டுச் சமையலுக்கு சாமான்கள் வாங்க எங்கள் பகுதியில் வழக்கமாகச் செல்லும் இரு கடைகளுக்கும் சென்று வந்தேன். முதல் கடையில் வாங்கி விட்டு 500 ரூபாய் நோட்டு கொடுத்து, சில்லறை வாங்கி விட்டு, பர்ஸை பையில் வைத்து விட்டு அடுத்த கடைக்குப் போனேன். அடுத்த கடையில் சாமான்கள் வாங்கி விட்டு காசு கொடுக்க நினைத்தால் பர்ஸைக் காணோம். போட்டிருந்தது குட்டைக் கால்சட்டை. இதில் இரு சக்கர வண்டியில் போகும்போது பர்ஸ் கீழே விழ ஏதுவாக இருக்கும் என்பது தெரியும். இருந்தாலும் ஆழமான பைதானே என்று தொலைபேசியோடு சேர்த்து வைத்துவிட்டேன்.

சென்ற வழியில் மூன்று முறை மேலும் கீழுமாக அலைந்தேன். வழியில் இருந்த சில வீடுகள், கடைக்காரர்கள், எங்கு விழுந்திருக்குமோ என்று நினைத்த முச்சந்தியின் முனையில் இருந்த தெரிந்த ஆட்டோக்காரர் என்று B.B.C.  மாதிரி ஒரு வழியாக பெரும் ஒளிபரப்பு செய்து விட்டு வந்தேன். முதல் நாள் நிறைய நம்பிக்கை. பணம் வராவிட்டாலும் பர்ஸில் இருந்த மூன்று ஏ.டி.எம். கார்டுகள், பேன் கார்ட், ஓட்டுனர் உரிமம் ... இப்படி இருந்த சரக்குகள் மட்டுமாவது வந்து விடாதா என்று ஒரு நம்பிக்கை; அடுத்த நாள் இந்த நம்பிக்கை ஒரு ஆசையாக மாறியது. மூன்றாவது நாள் ஆசை ஒரு ஏமாற்றமாக மாறியது. நான்காவது நாள் அநேகமாக இதை மறந்து விட்ட வேளையில் வீட்டுக்கு ஒரு அப்பாவும், அவரது மகளும் வந்தார்கள். அவருக்கு என்னையோ, எனக்கு அவரையோ இதுவரை தெரியாது.

என்னவென்று கேட்டேன். அவர் கேட்ட முதலிரு கேள்விகளிலேயே புரிந்து விட்டது. ’ஆமாங்க ...என் பர்ஸைத் தொலைத்து விட்டேன்.’ என்றேன். பர்ஸை எடுத்துக் கொடுத்தார். பர்ஸில் இருந்த 3982 ரூபாயும் அழகாக என்னைப் பார்த்துச் சிரித்தன. ஏ.டி.எம். கார்டுகள் பையிலிருந்த pouch-லிருந்து கண் சிமிட்டின. மீதிப் பேப்பர்கள் எல்லாம் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

ஜனனி என்ற  ஏழாவது படிக்கும்  அந்தச் சின்ன அழகுப் பெண் நான் ஆட்டோக்காரரிடம் சென்னேனே அந்த இடத்தில் கீழே கிடந்து எடுத்திருக்கிறாள். அப்பா ஒரு ஓட்டுனர். அவர் ஊரில் இல்லை. அவருக்குத் தொலைபேசியில் சொல்லியிருக்கிறாள். அவர் என் முகவரி, தொலைபேசி எண் தேடச் சொல்லியிருக்கிறாள். அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் மூன்று நாள் கழித்து வீட்டிற்கு வந்ததும் என் கார்ட், போட்டோ பார்த்து, விசாரித்து வீட்டிற்கு மகளோடு வந்து கொடுத்துவிட்டுச் சென்றார்.

என்னைச் சுற்றி இவ்வளவு நல்லவர்களா ...?ஆச்சரியமும் .. ஆனந்தமும்  என்னை முழுமையாக நிறைத்தன.

எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும் ..... வளர்வோம்

*

எல்லா நல்ல உள்ளங்களுக்கும்.....

 புத்தாண்டு வாழ்த்துகள்





*

பின் குறிப்புகள்:

“உழச்ச காசு .. அதெல்லாம் நம்ம விட்டுப் போகாது ... வந்திரும் ’  - இப்படிச் சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. இதெல்லாம் ‘நல்வழி’ன்னு ஒரு பாட்ம் இருக்குமே .. அதில் வேணும்னா சேத்துக்கலாம்! நடப்புகளுக்கும் இந்த வேதாந்ததிற்கும் ஏதும் தொடர்பில்லை.

‘நான் அந்தோனியாரிடம் ஜெபம் பண்ணினேன் .. அதான் கிடச்சுது’  -  தங்ஸ் சொன்னது இது. சுத்தமா இதில் நம்பிக்கையில்லை. ஆனா ரூ.100 உண்டியலில் அவங்க போடணுமாம்.  அதையெல்லாம் வேண்டாம்னு சொல்ல முடியுமா??!!

*

16 comments:

Thekkikattan|தெகா said...

:)) நூறு ரூபாய் உண்டியலில் போடும் காசிற்கு அந்த அப்பாவையும் பொண்ணையும் ஒரு நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் சேர்ந்து சாப்பிட்டுட்டு கதை பேசிட்டு வரலாம் ...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள், தருமி!

வவ்வால் said...

தருமிய்யா,

//“உழச்ச காசு .. அதெல்லாம் நம்ம விட்டுப் போகாது ... வந்திரும் ’ - இப்படிச் சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. இதெல்லாம் ‘நல்வழி’ன்னு ஒரு பாட்ம் இருக்குமே .. அதில் வேணும்னா சேத்துக்கலாம்! நடப்புகளுக்கும் இந்த வேதாந்ததிற்கும் ஏதும் தொடர்பில்லை.

‘நான் அந்தோனியாரிடம் ஜெபம் பண்ணினேன் .. அதான் கிடச்சுது’ - தங்ஸ் சொன்னது இது. சுத்தமா இதில் நம்பிக்கையில்லை. ஆனா ரூ.100 உண்டியலில் அவங்க போடணுமாம். அதையெல்லாம் வேண்டாம்னு சொல்ல முடியுமா??!!
//

வணக்கம்.

நல்லவங்களுக்கு நல்லதே நடக்குமாம்!!!
(இதை மறுக்க முடியாதே, ஒத்துக்கிட்டே ஆகனும்)

உங்களுக்கும் உங்களை சுற்றியுள்ள நல்லவர்களுக்கும் மகிழ்வான ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்(பொங்கல் அன்னிக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லுவோம்ல)

சேக்காளி said...

அதனால் தான் மழை இன்னும் பெய்கிறது.

தருமி said...

//அப்பாவையும் பொண்ணையும் ஒரு நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய்//

better plans are there ...!

தருமி said...

//நல்லவங்களுக்கு நல்லதே நடக்குமாம்!!!//

அப்புறம் எப்ப்டி ஐயா எனக்கு நடந்திச்சி!

//பொங்கல் அன்னிக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லுவோம்ல//

வவ்வாலு .... :)

வவ்வால் said...

தருமிய்யா,

//அப்புறம் எப்ப்டி ஐயா எனக்கு நடந்திச்சி!//

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" பட்டியலில் இருப்பவராச்சே ,அப்புறம் என்ன சந்தேகம்?

---------------
தெ.கா,

////அப்பாவையும் பொண்ணையும் ஒரு நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய்//

better plans are there ...!//

கேட்டிங்களா, அடுத்த இ.ஆ.ப உருவாக போவது உத்திரவாதம்.

சின்ன பொண்ணா இருந்தும் சரியா செயல்பட்டதும், பொண்ணு கொடுத்ததும் ,கிடைச்ச வரைக்கும் லாபம் என நினைக்காத பெற்றோர்களும் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள்.

இன்னும் சில பல ஆண்டுகளில் ஒரு நேர்மையான இ.ஆ.ப மதுரையில் உருவாகிடும் வாய்ப்பு உள்ளது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

Happy New year :)

அமர பாரதி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தருமி ஐயா. எனக்கும் இதே போல ஐ-போன் தொலைந்து போய் மூண்று வாரங்கள் கழித்துக் கிடைத்தது. நானும் இதே போல நல்லவர்கள் நிரம்பிய உலகம் என்று முக நூலின் ஸ்டேடஸ் போட்டேன்.

அமர பாரதி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தருமி ஐயா. எனக்கும் இதே போல ஐ-போன் தொலைந்து போய் மூண்று வாரங்கள் கழித்துக் கிடைத்தது. நானும் இதே போல நல்லவர்கள் நிரம்பிய உலகம் என்று முக நூலின் ஸ்டேடஸ் போட்டேன்.

சார்வாகன் said...

வணக்கம் அய்யா,
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
நன்றி!

சித்திரவீதிக்காரன் said...

எல்லாம் பெரிய விஷயங்கள்தான்; எல்லோரும் உயர்வானவர்கள்தான். மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குகிறதுக்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதற்கும் எதாவது இருந்து கொண்டேதான் இருக்கிறதென்று நினைக்கிறேன்.
-வண்ணநிலவன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

அ. வேல்முருகன் said...

மனிதர்களிடம் நல்ல எண்ணங்கள் இருக்கத்தான் செய்கிறது.

எண்ணிக்கைதான் கூட வேண்டும்

Ganesan said...

//அவர் மூன்று நாள் கழித்து வீட்டிற்கு வந்ததும் என் கார்ட், போட்டோ பார்த்து, விசாரித்து வீட்டிற்கு மகளோடு வந்து கொடுத்துவிட்டுச் சென்றார்//

ஆஹா. அருமையான தந்தை, அருமையான பெண். நல்ல வளர்ப்பு. நல்லோர் உள்ள நாடு தான் நமதும் என்று சந்தோஷம் வருகிறது.

புத்தாண்டு வாழ்த்துகள்.

jos said...

தருமி ஐயா

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

தருமி said...

அனைவருக்கும் அழகான, அன்பான, நிறைவான .....

.............. புத்தாண்டு வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

என்னைச் சுற்றி இவ்வளவு நல்லவர்களா ...?ஆச்சரியமும் .. ஆனந்தமும் என்னை முழுமையாக நிறைத்தன.//

மனித நேயம் இன்னும் உள்ளது சார்.
நல்லவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
அந்த குழந்தையின் உதவும் குணத்திற்கும், அவளை அப்படி வளர்த்த அவள் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Post a Comment