Monday, November 18, 2013

697. தருமி பக்கம் (9 ) - அந்தக் காலத்தில ...1







*



அறியாத வயது. மூன்று வயது கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் பெத்தவளை ‘தின்னுட்டேனாம்’! அப்படித்தான் சின்ன வயதில் பலர் சொல்லி அடிக்கடி கேட்ட அனுபவம். அந்த வயதில் நடந்தது வேறு எதுவும் நினைவில் இல்லை. வளர்த்தவர்கள் என்னென்னவோ சொல்லியிருக்கிறார்கள். வாழ்க்கையில் நான் நடந்து வந்த படிகளில் முதல் படி இது. எதுவும் தெரியாது தாண்டி வந்த படி.

அனேகமாக அம்மா ஊரில் தான் பிறந்திருப்பேன். ஆனால் அதன் பின் அப்பா மதுரையில் வேலை பார்த்ததால் மதுரையில் ஆரம்பித்த வாழ்க்கை. மதுரை சந்தைப் பேட்டையில் ஒரு தெருவும், அதில் உயர்ந்த திண்ணை உள்ள வீடு ஒன்றை பின்னாளில் அப்பா காண்பித்திருக்கிறார்கள். அந்த வீட்டில் தான் நான் இரண்டரை வயது வரை வாழ்ந்திருக்கிறேன் என்றார்கள்.. இந்தத் தெருவைத் தாண்டி தான் தியாகராஜர் கல்லூரிக்குப் போக வேண்டும்.  கல்லூரி படிக்கும் நாட்களில் அந்தத் தெருவைத் தாண்டும் போது பல முறை அந்த சந்தைத் திரும்பிப் பார்த்து விட்டு செல்வேன். தெருவின் ஓரத்தில் வளர்ந்து பல ஆண்டுகள் இருந்த ஒரு பூவரசு மரம் தான் எனக்கு அடையாளம். ஓரிரு முறை அந்தச் சந்திற்குள் சென்று அந்த உயர்ந்த திண்ணையைப் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். வீட்டுக்கள் சென்று பார்க்க ஆசை. ஆனால் முயன்றதில்லை.

ஆனால் அதன் பின் - மூன்றாவது வயது தாண்டிய பின் - நடந்த பல விஷயங்கள் இன்னும் நன்கு நினைவில் இருக்கிறது. அப்பா ஊரில் வைத்துதான் அம்மா இறந்து விட்டார்கள்.கல்லறையும் அங்கு தான். அப்பாவிற்கு அடுத்த இரு ஆண்டுகள் மதுரையில் bachelor வாழ்க்கை. நான் ஊரிலேயே இருந்தேன். நெல்லையிலிருந்து தென்காசி, குற்றாலம் செல்லும் சாலையின் நடுவில் ஆலங்குளம் என்று ஒரு ஊர். அதற்கருகில் நூறாண்டுகளைத் தாண்டிய உயர்நிலைப்பள்ளி உள்ள நல்லூர். அதனை அடுத்த ஊர் எங்கள் ஊர் - காசியாபுரம்.

நல்லூரில் பிரிவினைக் கிறித்துவர்கள் அதிகம். அங்கு ஒரு பெரிய கிறித்துவக் கோவில் உண்டு. அக்கோவிலிலிருந்து கிழக்கு நோக்கி ஒரு சாலை. அந்த சாலை இட்டுச் செல்வது எங்கள் கிராமத்திற்கு. அங்கு வடக்கு தெற்காக இரண்டு தெருக்கள். இரண்டு தெருக்கள் என்று கூட சொல்ல முடியாது. ஒன்றரை தெரு என்று தான் வைத்துக் கொள்ள வேண்டும். அது தான் எங்களூரின் அமைப்பு.  பாட்டையா, அப்பம்மா, நான்கு அத்தைகள், சித்தப்பா, சித்தி  இவர்களோடு ஐந்து வயது வரை இருந்தேன். பல நிகழ்வுகள் நெஞ்சில் நன்கு இடம் பிடித்து விட்டன. நினைவிலும் நின்று விட்டன. ஐந்து வயதிற்குப் பிறகு மதுரை வாழ்க்கை. ஆனாலும் வருடத்திற்கு இரு முறை சொந்த ஊர் பயணம் என்றிருந்தது.

பாட்டையா, சித்தப்பா இவர்களை வீட்டில் காண்பதே அரிது. இன்னும் நினைவில் இருக்கிறது. பாட்டையா இரவு சாப்பிட்டு முடித்ததும் வெளியே சென்று அடுத்த நாள் வேலை யார் யாருக்கு என்று வழக்கமாக வேலைக்கு வருபவர்களிடம் சொல்லி விட்டு வந்திருவார்கள். காலையில் மாடுகளின் கழுத்தில் கட்டிய மணியோசை மட்டும் கேட்டிருக்கிறேன். ஏனெனில் காலங்கார்த்தாலேயே பாட்டையா வயலுக்கு ஆட்களுடன் புறப்பட்டு விடுவார்கள்.  

பாட்டையாவிற்கு வயலில் வேலை.அப்பம்மாவிற்கும், சித்திக்கும் காட்டில் வேலை. இருவரும் காலையில், பாட்டையா போனபிறகு காட்டுக்குப் போவார்கள். நானும் பல நாள் அவர்களோடு சென்றுள்ளேன். இப்போது நினைத்தாலே பாவமாயிருக்கும். அவ்வளவு கடினமான வேலை. அப்பம்மா காட்டில், விடிலியிலும் பக்கத்திலுள்ள பகுதிகளிலிருந்தும் பதினியை விடிலிக்குக் கொண்டு வருவார்கள்.  சித்தி எட்டத்திலுள்ள இடங்களிலிருந்து பதினி கொண்டு வருவார்கள்; மண்பானை தான். மிகப் பெரியதாக இருக்கும். தலையில் சும்மாடு வைத்து பானையைக் கொண்டு வருவார்கள்.விடிலிக்கு வரும் போது வெறும் பதினியோடு வர மாட்டார்கள். பதினிக்காகக் காத்திருக்கும் போது பக்கத்திலுள்ள காட்டுப் பருத்தியில் காய்த்திருக்கும் பருத்திகளைப் பறித்து ஒரு சின்ன மூட்டையாக முன்னால் சேலையில் முடிந்து கொண்டு வருவார்கள். காட்டில் என்ன ...மூன்று, நான்கு மர வகைகள் மட்டுமே இருக்கும். புளி, பனை, காட்டுப் பருத்தி, அங்கங்கே சில வேப்ப மரம் - அவ்வளவே. இப்படிப்பட்ட காட்டு வெளிகளைப் பார்த்துப் பழகி விட்டு, பின்னாளில் முதன் முறையாக தஞ்சைக்கு வேலைக்குப் போனபோது இரு இடங்களின் வழமையில் தான் என்ன வித்தியாசம்! நேரம் எதுவும் பார்க்காமல் கிணற்றுத் தண்ணீரை மாடு வைத்து. கமலை கட்டி அடித்து விவசாயம் இங்கே. மண்வெட்டி கூட இல்லாமல் ஓடுகிற நீரைக் காலை வைத்தே தண்ணீர் பாய்க்கும் இடம் அங்கே என்று நினைத்துக் கொள்வேன்.

அதன் பின் அப்பம்மா, சித்தி இருவருக்கும் விடிலியில் வேலை. பெரிய அண்டாவில் பதினியை ஊற்றி, கொதிக்க வைத்ததும் வரும் கூப்பனியைச்  சிரட்டையில் ஊற்றி கருப்பட்டிகளை எடுக்க வேண்டும். மாலை வரை வேலை ஆளை நிமிர்த்து விடும். பனை மரங்களைப் பாட்டத்துக்கு விட்டிருப்பார்கள். அதாவது பதினி இறக்குபவருக்கு ஒரு நாள். நமக்கு ஒரு நாள். அப்பம்மா, சித்தி அடுத்தடுத்த நாள் காட்டில், விடிலியில் வேலை. அம்மாடி ... எப்படிப்பட்ட உழைப்பாளிகள்!

பின்னாளில் என் மாணவன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது பொன்னியின் செல்வன் பற்றிய பேச்சு வந்தது. அப்போது இரண்டாம் முறை கல்கியில் அக்கதை வந்ததைப் பற்றியும், மணியனின் சித்திரங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவன் முதன் முறையாக கல்கியில் வந்த போது உள்ள பொ.செ.பைண்டு செய்து வீட்டில் இருக்கிறது. அதைப் படித்தால் நடு நடுவே பெட்டிச் செய்திகளில் மிகப் பழைய செய்திகள்  இருக்கும். அந்த edition. அந்தச் செய்திகளோடு  படிக்க நன்றாக இருக்கும் என்றான். அப்பதிவை அவனது பாட்டி தன் இளவயதில் படித்துச் சேர்த்தது என்றான். நமது பாட்டி காட்டில் வேலை செய்த, படிக்கத் தெரியாத பாட்டியாசே... ஆனால் அவனது பாட்டி படித்து, பத்திரிகைகள் வாங்கி கதை வாசித்த பாட்டியாக இருக்கிறதே .. என்று சிறிது சோகமாகி விட்டேன். இரு பாட்டிகளுக்கும் நடுவில் ஒருபரம்பரை இடைவெளி இருந்தாலும் மேல்சாதிப் பாட்டிக்கும், அப்படி இல்லாத என் பாட்டிக்கும் இப்படி ஒரு இடை வெளியா என்ற சோகம் அது. ’புத்தம் வீடு’ கதை வாசிக்கும் போது தான் சரியான, எனக்குப் பிடித்த பதில் கிடைத்தது. அவன் பாட்டி படித்து, வீட்டில் கதை வாசித்த பாட்டி; ஆனால் என் பாட்டி தொடர்ந்து உழைத்த  பாட்டி. ஒரு பாட்டி சொகுசுக்கார, non-productive பாட்டி. ஆனால் என் பாட்டி ஒரு productive பாட்டி! வீட்டின் பொருளாதாரத்தில் இருந்த பங்கு அந்தப் பாட்டிக்குக் கிடையாதே!  I can feel more proud of my பாட்டி!

பாட்டையாவுக்கு நிலம், உழைப்பு மட்டுமே முன்னால் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஊருக்கு வெளியே, நாலைந்து மைல் தாண்டி நஞ்சை இருந்தது. பல நாள் உழைப்பு அங்கு தான். பஸ், பேருந்து என்றால் என்ன என்று கேட்கும் காலம் அது. சைக்கிள் என்பதே அங்கு யாரும் அப்போது அதிகமாகப் பார்த்திருக்க மாட்டார்கள். நடைப்பயணம் தான். ஊருக்குப் பக்கத்தில் இருந்தது எல்லாமே புஞ்சை. அங்கு உழைத்தாலும் என்ன வருமோ? ஆனால் பாட்டையா வியாழக்கிழமை தோறும் ஊரில், வீட்டில் தான் இருப்பார்கள். அன்று எங்களூரில் சந்தை. வாரச் சந்தை. நல்லூருக்கும் எங்கள் ஊருக்கும் பக்கத்தில் உள்ள இன்னொரு ஊர் - ஆலடிப்பட்டி - என்ற மூன்று ஊர்களின் நடுவில் உள்ள திடல் ஒன்றில் தான் சந்தை நடக்கும்.


காலையிலேயே எங்கள் வீட்டு முன்னால் நிறைய ஆட்கள் வருவார்கள். அன்று அனேகமாக அவர்கள் எல்லோரும் வீட்டு முன்னால் உயரப் படிகள் இருக்கும். அதில் உட்கார்ந்திருப்பார்கள். அப்பம்மா போடும் கருப்புக் காப்பி எல்லோருக்கும் உண்டு. மற்ற நாட்களில் வீட்டுக்கு வருபவர்களுக்கு அப்பம்மா கொடுப்பது மோர். இன்று மட்டும் காப்பி. தண்ணியாக இருக்கும். சூடு என்பதெல்லாம் யாரும் பார்த்ததாக நினைவில்லை. சொல்வதே ‘காப்பித் தண்ணி’ என்று தானே; அதான் தண்ணியாக இருக்கும்! பாட்டையா வீட்டில் புகை பிடிக்கத் தடை.

எனக்கு வாழை சீசனில் மட்டும் சந்தையும், அன்று நடக்கும் நடவடிக்கைகளும், வரும்  ஆட்களும் ரொம்பப் பிடிக்கும். வீட்டுக்குள்ளேயே ஒரு ஓரத்தில் ஒரு சின்ன அறை மாதிரி குட்டையாக ஒன்று இருக்கும். கட்டைகளைச் செருகி கதவாக்கியிருப்பார்கள். வாழை சீசனில் சந்தைக்கு முன்பே வாழைக்குலைகளை இந்த அறையில் மொத்தமாக அடுக்கி வைக்கப்படும். எப்படியும் 30 - 50 குலைகள் இருக்கும். அதன் பின் காய்ந்த வாழையிலைகள் எல்லாம் போட்டு நெருப்பு வைத்து, கதவை மூடி, சாணியால் மொழுகி விடுவார்கள். சந்தை அன்றைக்கு அதைத் திறந்ததும் ஒரு மணம் வரும். பழுத்தும், பழுக்காதமுமான வாழைத் தார்கள்; உள்ளே போட்ட புகை இப்போது புது வாழைப்பழ மணத்தோடு வரும். அது ஒரு தனி மணம். எனக்குப் பிடிக்கும். அந்தச் சின்ன அறையில். வாழைக்குலைகள் அடுக்குவதிலிருந்து, வெளியே அவை ‘பிரசவம்’ ஆவது, அதன் பின் விற்பனைக்குச் சந்தைக்குப் போகும் வரை ஒவ்வொன்றும் எனக்குப் பிடிக்கும்.

சந்தை நாள் இன்னொரு வகையிலும் பிடிக்கும். சந்தைக்கும் எங்கள் வீட்டுக்கும் நடுவில் இன்னும் ஓரிரு வீடுகள் தான். எங்கள் வீட்டு மெத்தைக்குப் போனால் அரை குறையாகச் சந்தை தெரியும். அங்கே போனதும் சந்தையின் இரைச்சல் எங்கள் வீட்டு மெத்தைக்கு நன்கு கேட்கும். அதுவும் எனக்குப் பிடித்த ஒரு ஒலி. இரைச்சல்... தொடர்ந்த இரைச்சல். ஏனோ அப்போது அதுவும் ரொம்ப பிடித்துப் போனது. கடலைப் பார்த்த பிற்கு அந்த அலைகளின் ஒலி எனக்கு அடிக்கடி அந்தச் சந்தை ஒலி போல் கேட்கும். சந்தை நாளன்னைக்கு இன்னொரு ஸ்பெஷல்  இருக்கும். மாலை அப்பம்மா சந்தைக்குப் போய் விட்டு வருவார்கள். நிச்சயமாக ஏதாவது ஒரு ‘பண்டம்’ வாங்கி வருவார்கள். பெரிதாக ஏதும் நினைத்துக் கொள்ள வேண்டாம். அந்தக் காலத்தில் அதிகமாகப் போனால் அது முறுக்கு, அவித்த பயறு ...

சந்தை அன்று ஊரே சுறுசுறுப்பாக இருக்கும். பக்கத்து ஊரிலிருந்தெல்லாம் மக்கள் வருவார்கள். அத்தைமார்களோடு மாலை சந்தைக்குப் போவதுண்டு. ஏனெனில் மாலையோடு முக்கியச் சந்தைப் பொருட்களின் வியாபாரம் முடிந்து விடும். ஆனால் மாலை .. வெளிச்சம் குறைந்த நேரங்களில் காடா விளக்கு வைத்து luxury items எல்லாம் வியாபாரத்திற்கு வரும். அதென்ன luxury items என்கிறீர்களா ... அதெல்லாம் பெண் பிள்ளைகளுக்கு வேண்டிய (ஊதாக் கலரு ) ரிப்பன், வளையல் ... இதெல்லாம். அது சரி காடா விளக்கு அப்டின்னா என்னன்னு தெரியுமா? பொது இடங்களில் எல்லாம் அப்போ அந்த விளக்கு தான். அப்போது ஏது மின்சார விளக்கு?


பி.கு.
என்ன இப்படி கூகுள் ஆண்டவர் ஏமாத்திட்டார்! ஒரு காடா விளக்குப் படம் எடுத்துப் போட்டு, உங்களுக்கெல்லாம் ஒரு விளக்கம் தரலாமாவென நினைத்தேன்.. அப்படி ஒண்ணும் கிடைக்கலையே!

கூகுள் ஆண்டவா ...  இப்படி ஏமாத்திட்டியே ...!

:(










*



3 comments:

நம்பள்கி said...

நன்றாக இருக்கு! உங்கள் அந்த நாள் ஞாபகம்!
இந்த லிங்கில் விளக்கு படம். search google images;
you may want to download and search inmges
http://www.shutterstock.com/s/oil-lamp/search.html
http://www.canstockphoto.com/images-photos/oil-lamp.html

தருமி said...

நம்பள்கி
முதல் தொடுப்பில் 80 பக்கம் படங்கள் இருக்கின்றன். பத்து பக்கம் பார்த்தேன். எதுவும் இல்லை; அடுத்ததிலும் பல பக்கங்கள் பார்த்தேன். எதுவும் கிடைக்கவில்லை.
நன்றி

Anna said...

மிக நன்றாக இருக்கு உங்கள் அந்த நாள் அனுபவங்கள்!

Post a Comment