Thursday, June 17, 2021

1178. சீரியல் பற்றிப் பேசுவோமா ...? உங்களுக்கெல்லாம் அதுதானே பிடிக்கும்?




*


பழைய சீரியல்கள் எல்லாம் இப்போது மீண்டும் போடுகிறார்களே, அதில் மெட்டிஒலியை நாலைந்து நிமிடம் பார்த்தேன். 20-30 வருஷம் ஆகியிருக்குமா? அம்மாடி … எவ்வளவு வித்தியாசம்!


அப்போதெல்லாம் சீரியலில் வருபவர்கள் நம்மைச் சுற்றியுள்ள மக்கள்  மாதிரிதான் இருக்கிறார்கள். நாம் உடை அணிவது போல் தான் அவர்களும்இருக்கிறார்கள்; அலங்கார நகைகள் இல்லை; ஓஓஓஓவர் அலங்காரங்கள் இல்லை; பளபளக்கும் பட்டுச் சேலைகள் இல்லை. அட … நம் வீட்டிலிருக்கும் பெண்கள் போலவே உதட்டுச் சாயம் கூட இல்லாமல் இருக்கிறார்கள்.

 

ஆனால் இப்போதெல்லாம் வருபவர்கள் அப்படி ஒரு உடை; அத்தனை அலங்காரம். அதுவும் வில்லின்னா அதுக்கு ஒரு ஸ்பெஷல் .. கண்மை எவ்வளவு அதிகமோ அந்த அளவு அவங்க பெரிய வில்லியாம்!

 

எனது சீரியல்-அறிவின் படி, சுதா சந்திரன் என்ற ஒரு நடன மாது. ஒரு விபத்தில் கூட அவர்கள் கால்களை இழந்து, பின் பெரும் முயற்சி எடுத்து பொய்க்காலிலும் நடனமாடினார்கள். அதனால் அவர்கள் மீது எனக்கு அத்தனை மரியாதை. ஆனால் அவர்கள் தான் சீரியலில் இந்த ஓவர் மேக்கப்புக்கு ஆரம்பகர்த்தா என்று நினைக்கின்றேன். ரப்பர், தாள், அட்டை, கட்டை, தகரம், தகர டப்பா … இப்படி எதிலெல்லாமோ செய்த நகைகளை மாட்டிக் கொண்டு ஒரு சீரியலில் வந்தார்கள். எனக்கென்னவோ அது தான் ஆரம்ப கட்டம் என்று நினைக்கின்றேன். இப்போது அது அனைத்து சீரியல்களின் இலக்கணமாக ஆகி விட்டது. கண்ணெல்லாம் கூசுது …. சினிமாவில் இல்லாத அளவிற்கு அலங்காரங்கள் என்னும் அசிங்கங்கள் …. பட்டுச் சேலையில்லாமல் வேலைக்கார அம்மாவைக் கூட பார்க்க முடியாது. ஒவ்வொருத்தர் தலைமுடிக்குள்ளும் ஒன்று அல்லது பல குருவிக் கூடுகள்  வைத்திருப்பார்கள் போலும். சும்மா சொல்லக் கூடாது. மருமகள்களை விட மாமியார்கள் தான் ஓவர் அலட்டல்; ஓவர் அலங்காரங்கள். அசத்திர்ராங்க .. போங்கோ!

 

பெண்கள் எல்லோருமே தங்கத்திலிருந்து கண்ணை எடுத்து விட்டு இவர்களைப் போல் டூப்ளிகேட் நகைகளுக்குத் தவ்வி விட்டால் கூட நல்லது தான். ஆனால் அது தான் நடக்காது போலும். இப்போது தான் தங்கம் வாங்க ..என்னமோ அட்சயதிதின்னுலாம் கொண்டு வந்துட்டாங்களே.

 

--------------

 

 

 






*



No comments:

Post a Comment