Friday, December 05, 2025
1363. சிறைவாசம் - ஒரு திறனாய்வு
Wednesday, November 26, 2025
Wednesday, November 19, 2025
1361. சக்தி(த்) திருமகன்
சக்தி(த்) திருமகன்
அருவி படம் எடுத்த இயக்குநர் அருண்பிரபு உருவாக்கிய படம்.
குழப்பமான திரை விமர்சனங்கள் பார்த்தேன். நல்லதும் கெட்டதும் கலந்த விமர்சனக்
கலவைகள். சரி .. பார்த்து விடலாமேவென உட்கார்ந்தேன். ஒரு அரசியல் புரோக்கர்தான்
கதாநாயகன். எனக்கு ஒரே குழப்பம். தொலைபேசிகள் வழியே கொலை நடக்கிறது; நிலங்கள்
கைமாறுகின்றன; பெரும் பணம் வருகின்றன; போகின்றன.
காவல்துறை தலைகாட்டுகிறது, அரசியல் அதிகாரங்கள் தூள் பறக்கின்றன.
என்ன, ஏன், எப்படி என்று எதுவும்
புரிபடவில்லை. வரும் நடிகர்கள் பலரும் பல அரசியல்வாதிகளை தோற்றம், உடை, பாவனை மூலம் அடையாளம் காட்டுகிறார்கள். நிதியமைச்சர்
வருகிறார். தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் ‘குரு;
ஒருவர் இருக்கிறார். ஒரு உச்சநீதி மன்ற நீதியரசர் வருகிறார். அவர்
பெயர் இந்திர சூட் (Does it ring a bell?!). முக்கியமான குருவின்
பெயர் அபியங்கர் சாமி / அபியங்கர் சீனிவாசன். காதல் ஓவியம் என்ற படத்தில் ஹீரோவாக
நடித்த கண்ணன் இந்தப் படத்தில் மிக நன்றாக – தெறிக்கும் அழகு ஆங்கிலம் பேசி –
நன்கு நடித்துள்ளார். படத்தில் ஒரு காதலும் கல்யாணமும் வருகிறது. (இது தேவேயேயில்லாத
ஆறாவது விரல்.) கதாநாயகன் என்றால் காதலித்து, கல்யாணம் கட்ட
வேண்டியது நமது தமிழ் சினிமா இலக்கணத்தில் வலிந்து கூறப்பட்ட சட்டமல்லவா?
படம் போதுமென எழுந்திருக்கலாமாவென நினைக்கும் போது கதாநாயகனின்
இளம்பருவத்துக் காட்சிகள். அனாதைப் பையனை ஒரு ‘பெரியார் தாத்தா’ எடுத்து
வளர்க்கிறார் – வாகை சந்திரசேகரன் அந்தத் தாத்தாவாக வருகிறார். புதிய காற்று வீச
ஆரம்பிக்கிறது. எங்கும் எதிலும் பெரியாரின் வாசம்; அவர்
வீசிய வார்த்தைகள். அவரது வீரியம் .. ஒவ்வொன்றாக விரிகின்றன. எனக்குத் தெரிந்து
பெரியாரை இந்த அளவிற்கு உயர்த்தி எடுத்த ஒரு தமிழ்ப்படம் இது தான்.
என்னைப் பொறுத்தவரை பெரியாரென்றாலே இறைமறுப்பாளர் என்ற தோற்றம்
வருவதே தவறு என்பேன். 3% சாதியினர் 97% சாதியினரை முழுமையாக ஆண்டு கொண்டிருந்ததைப்
பார்த்த பெரியாருக்கு அந்த ‘பாவப்பட்ட’ மக்கள்
இந்த உண்மையக்கூட தெரிந்து கொள்ளாமல் ‘சூத்திரர்’ என்ற பெயரில் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்களே என்று கோபம் கொண்டான் அந்தக்
கிழவன். ஏனிந்த நிலை? 3% அதைத்தான் இந்தப்பிரிவினையைச் சொல்கிறார்கள்;
அதற்கு வேதத்தைத் துணைக்கழைக்கிறார்கள். வேதம் மக்களை நான்கு
வர்ணமாகப் பிரித்துள்ளது. அனைத்து சாதியினரும் படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன்ர்
என்று வேத நூல்களைச் சாட்சிக்கு அழைத்தார்கள். அறிவுள்ளவனுக்கு இது தெரியும்
அத்தனையும் தவறென்று. ஆனால் மக்கள் இறையச்சத்தில் கட்டுண்டு கிடந்தார்கள். கிழவன்
சாதி பொய்யென்றான்; அதைக் கற்பிக்கும் வேதம் பொய்யென்றான்;
அதனைக் கற்பித்த கடவுள் பொய்யென்றான். இறையொன்று இல்லை; எல்லாமே மனிதக் கற்பிதம் என்றான். தூக்கிப் பிடிக்கும் பிராமணர்கள்
உயர்சாதி என்பதை முற்றாக மறுத்தான்.
இந்த 3% vs 97% சமூக நிலைகளைப் பார்த்து
சினங்கொண்டானே அதனை அப்படியே இந்தப் படத்தில் வெளிப்படையாகச்
சித்தரித்திருக்கிறார்கள். நல்ல தைரியம். இதுவரை யாருக்கும் அதிகம் வெளிக்காட்டத
இந்தக் கோபத்தை இப்படத்தில் முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
‘பெரியார் தாத்தா பல்வேறு முத்துகளை வளரும் பையனிடம்
உதிர்க்கிறார்:
சிந்திக்கிறவன் மனுசன்;சிந்திக்கப்
பயப்படுபவன் கோழை.
கஷ்டப்பட்டு உழைச்சா அது ‘கர்மம்’;
உட்காந்து சாப்பிட்டா ‘தர்மம்’.
நாட்டைக் காப்பாத்த அழிக்க வேண்டியது சிங்கத்தையல்ல; நரியை.
மனுசங்க எல்லாம் ஒண்ணுதான்; கீழ
மேலன்னு ஒண்ணும் கிடையாது;
வசதிக்கேற்ப நான் மேல, நீ கீழன்னுகிடையாது. ஆனா
பாழாப்போன ஜனங்களும் அதை நம்புது.
ஆயிரம் பேர் பசியோடிருந்தால் பனக்காரன் வயிறு பெருத்துப்
போகும்.
இப்படி பல வெடிக்கும் வசனங்கள். அவை நிறைவைத் தருகின்றன.
படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்காதீர்கள். எந்தத்
தமிழ்ப் படத்தில் லாஜிக் ஒழுங்காக இருந்துள்ளது? இங்கேயும் அது
போல்தான். ஆறாயிரம் கோடிக்கு மேல் ஹீரோ கொள்ளையடிக்கிறார், கேஸ்
எல்லாம் போட்டாயிற்று. ஆனால் ஜாமீனில் அழகாக அடுத்தடுத்து வெளியேயிருந்து என்னென்னவோ
செய்கிறார்.)செந்தில் பாலாஜி பார்த்தால் ரொம்பவே தன் நிலை பார்த்து கொந்தளித்து
விடுவார்!) ஹீரோவைப் பிடிக்கவே பிடிக்க முடியாது.
3% மீது அத்தனைக் காட்டமாக இருக்கும் இயக்குநர் கதாநாயகியாக
ஒரு திராவிடப் பெண்ணைப் போட்டிருக்கலாம். அங்கேயும் 3% தான் dominate பண்ணுது! அட போங்கய்யா ...!
ஹீரொ விஜய் அண்டோனி அவர்களே இதன் தயாரிப்பாளர். அவருக்கு
நன்றியும் பாராட்டும்.
Monday, October 13, 2025
1360. என் கதை – 4 A TOUCH OF PHILOSOPHY
இரண்டு வயதில் அம்மாவை இழந்து, ஐந்து வயது
வரை கிராமத்து வாழ்க்கை வாழ்ந்து, அந்த
வயதில் அப்பா மறுமணம் செய்ததும் நாங்கள் மூவருமாக அப்பா வேலை செய்து கொண்டிருந்த
மதுரைக்கு வந்து புது வாழ்க்கையை ஆரம்பித்தோம். ஐந்தாம் வகுப்பு சென்றதிலிருந்து
ஒரு புதிய பொறுப்பு வீட்டில் எனக்குக் கொடுக்கப்பட்டது. அப்பாவும், அம்மாவும் காலையில் 5 மணிக்கெல்லாம் அருகில் இருக்கும் புனித மரியன்னை
கோவிலுக்கு பூசை பார்க்கப் போவார்கள். அப்போதே என்னையும் எழுப்பி விட்டாலும் நான்
தூக்கத்திலே தான் இருப்பேன். அப்பா கோவிலிலிருந்து home tuition போய் விடுவார்கள். அம்மா
வந்து மீண்டும் எழுப்ப, நான் ஆறுமணி
பூசைக்குப் புறப்பட்டுப் போவேன். ஐந்தாம் வகுப்பு வந்த பின் கொடுக்கப்பட்ட புதிய
பொறுப்பின்படி நான் கோவிலுக்கு ஒரு தூக்குப் பாத்திரத்துடன் போவேன், பூசை முடிந்ததும் அங்குள்ள குருமார்கள் விடுதியில் உள்ள மாட்டுப்
பண்ணையிலிருந்து வீட்டுக்குப் பால் வாங்கிக் கொண்டு போகவேண்டும்.
வீட்டிலிருந்து கோவிலுக்குப்
போகும் தூரம் ஒரு கிலோ மீட்டர் இருக்கும். நாங்கள் இருந்தது தெற்கு மாரட்டு வீதி.
இந்த வீதிக்கு இணையாக வெளிப்பக்கம் அல்லது தெற்குப் பக்கம் தெற்கு வெளிவீதி
இருக்கும். அது பெரிய வீதி. பஸ் போக்குவரத்து எல்லாமே அந்த வீதியில் தான். வீட்டிலிருந்து
அரை கி, மீட்டர் தூரத்திலிருந்த தவுட்டுச்
சந்தையைத் தாண்டியதும் இந்த இரண்டு வீதிகளும் இணைந்து ஒன்றாகி விடும். முதல் அரை
கி,மீ. தூரத்தில் நான் காலையில் போகும்போது அநேகமாக ஆட்களே
இருக்க மாட்டார்கள். விரைவாகப் போவதற்காக ஒரு புது டெக்னிக் கண்டுபிடித்து
வைத்திருந்தேன். ஏதாவது ஒரு சிறு கல்லை காலால் எத்திக் கொண்டே போனால் போகும் தூரமே
தெரியாது. இந்த வீதி வெளி வீதியோடு ஒன்றானதும் ஒழுங்காக பிளாட்பாரத்தில் ஏறிப்
போகணும். இந்தப் பழக்கம் வெகு நாள் நீடித்தது.
இளங்காலையில் தனியாக நடந்து
போகும்போது மனசுக்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடும். அதில் முக்கியமான எண்ணம் என்
அம்மாவைச் சுற்றி வரும். இறப்பு என்பது பற்றி எல்லாம் தெரிந்திருந்தது.
அப்படியானால் இனிமேல் அம்மாவைப் பார்க்கவே முடியாதா என்ற ஏக்கம் அந்த வயதில் மிக
அதிகமாக இருந்தது. அம்மா உயிரோடு இருந்திருந்தால் ஒரு வேளை நான் அம்மாவைப் பற்றி அதிகமாக நினைத்திருக்க
மாட்டேன். அந்த ஏக்கம் ஏதும் இருந்திருக்காது. ஆனால் இழந்ததால் எனக்கு அம்மா
நினைப்பு மிகப் பல வருடங்கள் மனதில் அடிக்கடி தோன்றும்.
காலையில் தனியாக நடக்கும் அந்த
வயதில் அம்மாவைப் பற்றிய நினைவும் ஏக்கமும் மிக அதிகமாக இருந்தன. வீட்டில்
எல்லோருடன் இருக்கும்போது இல்லாத நினைவுகள் இந்தத் தனிமையில் நிறையவே வந்து
என்னைச் சூழ்ந்து கொள்ளும். அந்த வயதில் -பத்திலிருந்து அநேகமாக பதினைந்து வயது
வரை அப்போதெல்லாம் மனதில் ஒன்று வழக்கமாகத் தோன்றும். நான் செல்லும் வழியில்
சரியாகப் பாதி வழியில் ஒரு தெரு முக்கில் பத்திரகாளியம்மன் கோவில் ஒன்று
உண்டு. அந்தக் கோவில் வாசலுக்கு முன்னால்
இரண்டு தூண்களில் டோம் லைட் என்று சொல்வோமே அது போன்ற இரு வெள்ளை மின்சார
விளக்குகள் இருக்கும். அந்த்த் தூண்களில் உட்கார்ந்து கொள்ள இடமிருக்கும். நடந்து
போகும்போது சில சமயங்களில் அந்தத் திண்டின் மீது உட்கார்வேன். என்னவோ ஒரு ஞாபகம்.
அந்த விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்திருந்த போது முதல் தடவையாக ஒரு புதிய எண்ணம் வந்தது போல் நினைக்கின்றேன்..
இப்போது நான் உயிரோடு
இருக்கிறேன்; அம்மா என்னை விட்டுவிட்டு
இறந்து விட்டார்கள். ஆனால் இதெல்லாம் உண்மையல்ல. நான் இப்போது தூங்கிக்
கொண்டிருக்கிறேன். ஒரு நாள் நான்
விழித்தெழுவேன். அப்போது அம்மா அங்கே இருப்பார்கள். என்னை அணைத்துக் கொள்வார்கள்.
இப்படி ஓர் எண்ணம் ஓடும். ஏனோ இதில் எனக்கொரு தனி சுகம். மீண்டும் ..
விழித்தெழுந்ததும் .. அம்மாவைப் பார்த்து விடுவேன் என்ற நம்பிக்கை மனதிலிருக்கும்..
இந்த நினைவு எத்தனை ஆண்டுகள்
என்னைச் சமாதானப்படுத்தியது என்பது நினைவில்லை. வயதாக வயதாக இந்த நினைவுகள் மங்க
ஆரம்பித்தன. பத்துப் பன்னிரெண்டு வயதில் தோன்றிய இந்த நினைவுகளை நான் அடியோடு
மறந்து விடவில்லை. ஆனால் நாற்பது வயதில் இன்னொன்று நடந்தது. இப்போது தாவோயிஸம் (Daoism) என்ற சைனா கலாச்சாரத்தில் உள்ள சுவாங் த்சு (Chuang Tzu) என்பவரும், லாவோ த்சு (Laou Tzu) என்பவரும் இணைந்து எழுதிய “சுவாங்சீ” என்ற நூலில்
சொல்லப்பட்ட ஒரு கருத்தோடு எனக்குச் சிறு வயதில் வரும் நினைவும் ஒன்றாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. இந்த இருவரில் சுவாங்
த்சு என்பவர் ஒரு நாள் தூக்கத்தில் ஒரு கனவைக் காண்கிறார். கனவில் ஒரு வண்ணத்துப்
பூச்சி அங்குமிங்கும் பறந்து திரிகிறது. தடையேதுமில்லாமல் பறக்கிறது. சுவாங் த்சு
விழிக்கின்றார். இப்போது சுவாங்சீ அங்கே இருக்கிறார். வண்ணத்துப் பூச்சி அங்கே
இப்போதில்லை.
சுவாங் த்சு மனதில் ஒரு ஐயம்
எழுகிறது. அவர் தூங்கும் போது வண்ணத்துப் பூச்சி பறந்து திரிந்தது. விழித்ததும்
அங்கே மனிதனாக சுவாங் த்சு மட்டும் இருக்கிறார். அவருக்கு வந்த ஐயம் - மனிதனாக இருந்து ஒரு வண்ணத்துப்
பூச்சியைக் கனவில் கண்டேனா?; அல்லது ஒரு
வண்ணத்துப் பூச்சியின் கனவில் நான் ஒரு மனிதனாக இருக்கின்றேனா? இந்த எழுத்துகளுக்குப் பின்னால் இருக்கும் பல்வேறு கருத்துகளுக்கு தத்துவ
விளக்கங்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் முதன் முதல் இதை நான்
வாசித்த போது, எனக்குச் சிறு வயதில்
தோன்றிய நினைவுகள் மீண்டும் வந்தன. ஒரு ஆச்சரியம். பெரும் தத்துவ அறிஞர்கள் சொன்ன
ஒரு விஷயத்தின் ஒரு பகுதியை நான் என்னையறியாமலேயே மிகச் சிறு வயதிலேயே ஏறத்தாழ அதே
போல் நினைத்திருக்கின்றேனே என்று ஆச்சரியப்பட்டேன். இந்த ஆச்சரியம் வயது முதிர்ந்த
பிறகும் மேலும் அதிகமாகத் தொடர்ந்தது என்பது இன்னொரு ஆச்சரியம்.
பத்து வயதில் தெரிந்ததும், நாற்பது வயதில்
தெரிந்ததும் ஒன்றாக இருந்தது எப்படி? இது போன்ற ஒரு தத்துவத் தொடர்பு கிடைத்தது என்று
நாற்பதுகளில் ஆச்சரியப் பட்டேன். ஆனால் எழுபதுகளில் கேள்விப்பட்ட இன்னொரு
தத்துவமும் இதனோடு தொடார்பு கொண்டிருப்பதைப் பார்த்து மேலும் எனக்கொரு பெரும்
ஆச்சரியம்.
நெடுநாட்களுக்கு மாலையில்
நடக்கும் போதெல்லாம் ராஜாவே என் கூட வந்து கொண்டிருந்தார். பின் சில ஆண்டுகள்
கழித்து பவா செல்லதுரை நெருங்கி கூடவே வந்தார். அது சில மாதங்கள். அடுத்து மதுரைக்
கல்லூரி முதல்வர் பேரா. முரளி உடன் வர ஆரம்பித்தார். ஒரு மணி நேரத்திற்குத்
தொடர்ந்து பேச எத்தனை மணி நேரம் தயாரிப்பில் இருப்பாரென்று நினைத்துப்
பிரமித்திருக்கிறேன். அவரது “பேச்சொளி” (புதியதொரு சொல்லை உருவாக்கியுள்ளேன்.
) ஒன்றில் ஆல்பெர் காம்யூ (Albert Camus) என்பவரைப் பற்றியும் அவரது தத்துவமான ‘அபத்தம்’ (absurdity) பற்றியும்
பேசினார்> இதுவரை அதை மூன்று முறையாவது
கேட்டிருப்பேன்.
நம்ம பெரியார்
சொன்னதை வேறு தத்துவ மொழியில் நீட்டி முழக்கிச் சொன்னது போலிருந்தது. ஒரே வார்த்தையில் பெரியார் சொன்னார்: “வெங்காயம்”.
அதை உறித்துப் பார்த்தால் என்ன மிச்சமாகும்? ஏதுமில்லை! நம் வாழ்வும் அப்படித்தான்.
உறித்துப் பார்த்தால் ஒன்றுமில்லை. ஏன் ஓடுகிறோம்?; ஏன் உழைக்கிறோம்?; ஒரு வழியில்
சிந்தித்தால் இல்லாத ஒன்றைத் தேடி ஓடுகிறோமோ? வாழும் வாழ்க்கையில் ஏதேனும் அர்த்தமிருக்கிறதா?
என்னதான் கிடைக்கிறது இறுதியில். முரளி காம்யூ எழுதிய ‘Stranger’ என்ற மிகவும் அதிகாமக மொழிபெயர்க்கப்பட்ட நூலைப் பற்றி சொல்லியிருந்தார். ”அந்நியன்’ என்று தமிழில் வந்திருக்கும் நூலையும் வாசித்து விட்டேன். விசித்திரமான
நடை. எனக்கென்னவோ தஸ்தயேவ்ஸ்கி எழுதிய – நானும் மொழிபெயர்த்துள்ள – ‘Notes
from Underground’ (“நிலவறையில் இருந்த சில குறிப்புகள்”) நடை போலவே இதிலும் இருந்தது. இரண்டுமே நினைவோட்டத்தைப் பதிவு செய்யும் நடையில்
உள்ளன. ஒரு வெறுமை அந்த நடையில் இருந்தன. மனம் தளர்ந்த நிலை. பொருளில்லா வாழ்க்கை
அங்கே இடம் பிடித்தது. தஸ்தயேவ்ஸ்கி நூலின் பின்புலத்தில் இருளும், கடும் பனியும் இருந்தன; காம்யூவின் நூலில் கூச வைக்கும்
சூரிய ஒளியும், வெம்மையான வெயிலும் இருந்தன.
என் சிந்தனை ஓட்டத்தை மீண்டும் ரீவைண்ட்
செய்தேன். பத்து வயதில் இப்போது வாழும் வாழ்க்கை ஒரு தூக்கமென்று நினைத்தேன்; விழித்தால் அம்மா வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கைக் கோடு தெரிந்தது
போலிருந்தது. இது அன்றைய அறியாத வயதில் வந்த நினைப்பும், நம்பிக்கையும்.
40 வயதில் அதே போல் இரு வேறு நினைவுகள் அந்த தத்துவ அறிஞருக்கு. அதில் எது உண்மை;
எது கற்பனை என்ற கேள்வியைத் தனக்குத் தானே எழுப்புகிறார். 70 வயதில்
காம்யூ வருகிறார். அவர் வாழ்க்கையே ஓர் அபத்தம் என்கிறார். ஏதோ ஒரு பூஜ்யத்திற்கு
உள்ளே உள்ள ஒரு ராஜ்யத்திற்குள் சுற்றி வருவது போல் தெரிகிறதே.
எது உண்மை; எது பொய்மை?
உண்மையில் வாழ்க்கை என்பதுதான்
என்ன?
விளக்கங்கள் குழப்புகின்றன.
வயதாகி விட்டதால் வரும் குழப்பங்கள்
என்று தூக்கியெறிய முடியாது. காம்யூவும், தாவோயிச தத்துவ அறிஞரும் வயதான காலத்தில் இவ்வாறு சிந்திக்கவில்லையே!
Saturday, October 11, 2025
1359. ஆச்சரியமூட்டிய ஓர் இளைஞர்
Youtube - இதனைத் தோண்டினால் தேனூறும் என்பது தெரிந்ததே.
ஆனால் இன்று எனக்கொரு ஆச்சரியம். இங்கே மூன்று நான்கு பேரைப் பற்றிப் பேச வேண்டுமென்ற
ஆவல்.
முதல் ஆள்; மதுரைக்கார இளைஞர் மதன் கெளரி. இவரின் மீதான
ஆச்சரியத்திற்குக் காரணம் அவரது 80 லட்சத்திற்கும் அதிகமான subscribers. Great achievement. நல்ல உழைப்பு.
அடுத்தது பேராசிரியர் முரளி.
தத்துவப் பேராசிரியர். அறிவியல் பாடம் நடத்தும் என் போன்ற ஆசாமிகளுக்கு வகுப்பில் point by point ஆகப் பேசும் பழக்கம்
இருக்கும். ஆனால் humanities ஆசிரியர்கள் அது போன்றில்லாமல் ஒட்டு மொத்தமாக ஒரு கருத்தைப் பற்றித் தொடர்ந்து
பேசுவது கொஞ்சம் ஆச்சரியமான ஒன்று தான். அழகாக இதைச் செய்கிறார். அனுபவம் பேசுகிறது.
மூன்றாவதும் ஓர் இளைஞர்
தான். Mr. GK என்ற பெயரில் எல்லாவற்றையும்
பற்றிப் பேசுகிறார். Quantum physics பற்றியெல்லாம் எளிதாகப் பேசிச் செல்கிறார். இது போன்ற பல அறிவியல்
கருத்துகளை எளிதாகப் பேசிச் செல்கிறார். அதோடு ‘உருட்டுகள் பலவிதம்’ என்ற தலைப்பில் பல மூட
நம்பிக்கைகளைச் சாடுகிறார். Bundle of information. இத்தனையையும் எப்படி காலமெடுத்துத் தயாரிக்கிறார் என்பது அடுத்த
ஆச்சரியம். பாராட்டப் பட வேண்டிய இளைஞர்.
இன்று புதிதாக ஒருவரைப் பார்த்தேன். (கற்க கசடற) karka kasadara என்ற தலைப்பில் அவரைத்
தேடியடையலாம். எல்லோரிலும் வயது குறைந்த இளைஞர். Sapiens புத்தகத்தின் சுருக்கம்
என்று பேசினார். 57 நிமிடம் 40 வினாடிகள் ஏறத்தாழ
ஒரு மணி நேரம். மூச்சு விடாமல் பேசினார். கையில் எந்தக் குறிப்பும் கிடையாது.
(அப்படிப் பழக்கப்பட்ட எனக்கு பெருத்த ஆச்சரியத்தை அளித்தது. எப்படிதான் முடியும்?) எந்தத் தடங்கலோ எதுவும் இல்லாமல் தொடர்ந்து
அந்நூலின் உள்ளடக்கத்தைத் தந்தார். நானும் இந்த நூலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாசித்திருக்கிறேன்.
உடனே அந்த நூலைப் பற்றி அன்று என்னிடம் கேட்டிருந்தால் பத்துப் பதினைந்து நிமிடத்தில்
நினைவில் இருப்பதைச் சொல்லியிருப்பேன். ஆனால் இவரோ பிரவாகமெடுத்த வெள்ளமாகக் கொட்டித்
தீர்த்தார். சொல்லும் முறையும் அத்தனை இனிமை. நடுவில் நிறுத்த வேண்டியதிருந்தும் என்னால்
நிறுத்த முடியவில்லை. அந்தக் காணொளியும் விட்டு விட்டு துண்டு துண்டாக எடுத்தது போல்
தெரியவில்லை – just one sequence. இத்தனைக் கருத்துகளைக் கோவையாகப் பேச வேண்டுமென்றால் ... அம்மாடி, என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. (37
ஆண்டுகள் பேராசிரியர் பணி என்று சொல்லிக் கொள்ளலாம்! அதிலும் வேகமாகப் பேசி விடுகிறேன்
என்று முதுகலை வகுப்புகளில் குறை சொல்லப்பட்டதுமுண்டு.)
சேரன் செங்குட்டுவன் நாடக வசனத்தை சிவாஜி கணேசன் மேக்கப் போடும் போது, ஒரே ஒரு முறை செவியால் கேட்டு, அப்படியே ஒரே டேக்கில் பேசினார் என்று சொல்வார்கள். நானும் அந்த நாடகத்தைப்
பார்த்திருக்கிறேன். நடுவில் cut ஏதும்
இருக்காது. இந்த இளைஞரும் அவ்வாறு அற்புதமாகப் பேசினார். Teleprompter ஏதும் இருந்திருக்காது!
பல தலைப்புகளில் நிறைய பேசியிருப்பார் போலும். நான் வாசித்திருக்கும் ‘The psychology of money’ பற்றியும் பேசியிருக்கிறார். கேட்கணும். இன்று மாலை walk time-ல் அவரது தாவோயிசம் கேட்கப் போகிறேன்.
1358. ஏனிந்த நூலை வாசிக்க வேண்டும்?
நீங்கள் கட்டாயம் இந்த நூலை வாசிக்க வேண்டுமென்பதற்கு நான் தரும் சில காரணங்கள்:
- ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கை வைத்து 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களனைவரும் அதுவரை ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும், சிறைவாசிகளின் நலனுக்காகவும், பல்கலைக் கழகங்களில் முறையான இடப்பங்கீடு வேண்டுமென்பதற்காகவும், மனித உரிமைகளுக்காவும் விடாது, தொடர்ந்து தங்கள் சொந்த நலனையும் துறந்து போராட்ட வீரர்களாக இருந்தவர்கள். இவ்வாறு மக்கள் நலனுக்காகப் போராடும் பெரு மக்களை அரசு ஏன் காரணமின்றி கைது செய்து நீண்ட நாள் சிறையிலடைத்துள்ளது என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக நம்முன் நிற்கிறது-
-
கைது செய்யப்பட்டவர்களையும், அது போன்ற வேறு
சில போராட்டக்காரர்களையும் நம்மை ஆளும் அரசு “urban Naxalites” என்று பட்டம் சூட்டி, அதில்
சிலரைக் கொலையும் செய்து, பலரைச்
சிறையிலடைத்து பெரும் தண்டனை வழங்கியுள்ளது நம் அரசு. Lankesh (2017), Narendra Dabholkar (2013), Govind Pansare
(2015), Malleshappa Kalburgi (2015) போன்றவர்கள் இடதுசாரிகளாக இருந்ததால்,
அல்லது வலதுசாரிகளையும்,
இந்துத்துவாவினரையும் அவர்கள் எதிர்த்தமைக்காகவே கொல்லப்பட்ட தியாகிகள்
அவர்கள். கைது செய்யப்பட்ட 16 பேரும் இதே காரணங்களுக்காகவே கைது செய்யப்பட்டனர்.
-
நக்சலைட்டுகளில் பலரும் ஆதிவாசிமக்களின் உரிமைகளுக்காகப் போராடுப்வர்களாகவே
உள்ளனர். இந்திய நாட்டுச் சட்டத்தின்படி ஆதிவாசி
மக்கள் அவர்கள் வாழும் இடத்தின் மீது முழு உரிமை கொண்டவர்கள். ஆனால் அரசு தனியார்
வசம் இந்த நிலங்களைக் கொடுத்து, அனைத்து
இயற்கை கனிம வளங்களைக் கொள்ளையடிக்க உறுதுணையாக உள்ளது. இதை எதிர்த்து ஆதிவாசி மக்களின்
உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் காவல் படையின் துப்பாக்கிகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
-
ஸ்டேன் சாமி என்ற கிறித்துவப் பாதிரியார் தனது 83வது வயதில்
2020 ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவர் முன்பே தனது குரு மடத்திலிருந்து
விலகி, ஆதிவாசி மக்களின் குடிலில் தங்கி அந்த மக்களுக்காகத்
தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். இவரே ஆதிவாசி மக்களுக்குத்தான் அவர்கள் வாழும் பகுதியின்
உரிமை உள்ளது என்ற சட்டத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து, அந்த
மக்களுக்கு ஒரு புதிய பாதையைக் காண்பித்தார். இவர் நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டு,
கை நடுக்கம் கண்டதால் straw tumbler ஒரு கட்டாயத்
தேவையாக இருந்தும், அப்படி ஒரு தம்ளரைக் கொடுக்க காவல் துறைக்கு
மனமில்லாமல் போனது. 50 நாட்கள் தொடர்ந்து போராடி ஒரு தம்ளரை அவருக்குப் போராட்டக்காரர்கள்
பெற்றுக் கொடுத்தார்கள். காவல்துறையினரும், மற்றவர்களும் இந்த
அளவு கடினமான மனதோடு எப்படியிருக்க முடியும் என்பது எனக்கு இன்னமும் பெரும் ஆச்சரியமாக
உள்ளது.
-
6,7ம் இயல்களில்
எவ்வாறு கைது செய்யப்பட்ட பலரின் கணினிகள் காவல்துறையின் கைப்பிடிக்குள் ரகசியாகக்
கொண்டு வரப்பட்டு, பல்வேறு போலிக் கடிதங்களை அதற்குள் கள்ளத்தனமாக
உள்ளேற்றி, அவைகளைச் சான்றுகளாக வைத்து அதை வைத்து அவர்களைக்
கைது செய்தார்கள் என்ற செய்தி நாம் ஒரு குடியரசு நாட்டில் தான் வாழ்கிறோமா இல்லையா
என்ற கேள்வியை வாசிப்பவர்களின் மனதில் எழுப்புகிறது. இதழியலாளர்கள் பலர் இந்த மர்மத்தை
எப்படிப் போட்டுடைத்தார்கள் என்பதை இந்த இரு இயல்களிலும் வாசிக்கும்போது மனம் பதை பதைக்கின்றது.
-
கைது செய்யப்பட்ட 16 பேரில் நால்வர் கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்; மற்றப் போராளிகளில் கவிஞர், கலைஞர்கள், வனவளப் பாதுகாவலர்கள், சிறைவாசிகளின் நலன் பேணும் ஆர்வலர்கள்,
இதழியலாளர்கள், வழக்கறிஞர்கள் என்றிருந்தனர்.
(அவர்களும் பேராசிரியர்கள் .. நானும் ஒரு பேராசிரியன் என்று சொல்லவே தயக்கமாக உள்ளது.
அத்தனை உயரத்தில் அவர்களுக்கு என் மனதில் இடம் கொடுத்தேன்.)
-
ஒரு பெண்மணி. இங்கிலாந்தில் தன் இளைய வாழ்வை ஆரம்பித்த இவர், இந்தியா
வந்த பின் தன் அமெரிக்கக் கடவுச் சீட்டை வேண்டாமென்று திரும்பக் கொடுத்து விட்டு,
இங்கு தொழிலாளர் நலனுக்காக அவர்களோடேயே ஒற்றை அறை உள்ள வீட்டில் உடன்
தங்கியிருந்து வாழ்ந்தார் என்பதைப் படிக்கும் போது நாம் நமது கண்ணீரோடு போராட வேண்டியதிருக்கும்.
-
இதைவிட சற்றே குறைந்த பக்கங்கள் கொண்ட வேறொரு நூலை மொழிபெயர்க்க
ஒரு முழு ஆண்டை எடுத்தேன். ஆனால் இந்த நூலை மொழிபெயர்க்க ஆரம்பித்த பின், யாரோ ஒருவர் பின்னாலிருந்து ஓரழுத்தம் கொடுத்தது
போலுணர்ந்து, விரைந்து முடித்தேன். நான்கு மாதங்ளில் முடித்த
போது நானே வியந்து நின்றேன். உள்ளூற ஒரு வெறி வந்து என்னை உந்தித் தள்ளியது.
- நீங்களும் வாசித்து விடுங்கள்
....
-
Thursday, October 09, 2025
1357. மொழிபெயர்ப்பு விருது விழா
அருட்செல்வர் நா. மகாலிங்கம்
காந்தியின் மீதுள்ள தனது பக்தியையும், மரியாதையையும் வெளிப்படுத்தும் வண்ணம், காந்தி பிறந்த
நாளைப் பல்லாண்டுகளாகக் கொண்டாடி வருகிறார். காந்தியோடு அண்ணல் அருட்பிரகாச வள்ளலாரின்
பிறந்த நாளையும் இணைத்துப் பெரு விழாவாக ஆண்டாண்டு தோறும் கொண்டாடினார்.
தந்தையார் மறைந்த பின்
அந்தப் பணியை அதே போல் சிறப்பாக அவரது மகனார் முனைவர் மாணிக்கம் அவர்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்த ஆண்டு நடந்த விழா தொடந்து 58 ஆண்டுகளாக நடைபெற்ற
ஒரு பெரும் விழா.
புதிதாக சில ஆண்டுகளுக்கு
முன்பு இந்தப் பணிமன்றம் “அருசெல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்” மூலமாகப்
பல மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்படுமின்றன. அதனோடு இணைந்து ஆண்டு தோறும் பல சிறந்த
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருது கொடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு அக்டோபர் முதல்
தேதியிலிருந்து இந்த விழா ஐந்தாம் தேதி வரை நடந்து முடிந்தது. காந்தி பிறந்த நாளான
இரண்டாம் தேதி அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா” பெரிதும் விமரிசையாக நடந்தது.
இவ்விழாவில் இருவருக்கு
முதல் விருதும்(தலைக்கு 1,00,000),
இருவருக்கு இரண்டாம் பரிசுகள் இருவருக்கும்(50,000), நால்வருக்கு மூன்றாம் பரிசுகளும்(25,000) கொடுத்தார்கள்.
இவ்விழாவில் எனக்கு மூன்றாம்
பரிசு(தான்!) கிடைத்தது. “பேரரசன் அசோகர்” என்ற நான் மொழிபெயர்த்த
நூலுக்குக் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. எதிர் வெளியீடாக இந்த நூல் வெளிவந்தது. வெளியீட்டாளர்
அனுஷ் அவர்களுக்கும், விருதளித்த
மொழிபெயர்ப்பு மையத்திற்கும், அதனை நடாத்தி வரும் முனைவர் மாணிக்கம்
அவர்களுக்கும், அதில்
சிறப்பான பங்களித்துக் கொண்டிருக்கும் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் அவர்களுக்கும்
என் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.
விழாவின் வரவேற்பாளர் முனைவர்
ஒளவை ந. அருள் (இயக்குநர், தமிழ்
வளர்ச்ச்சித் துறை) அவர்களின் பேச்சு அருமையாக இருந்தது. (அவரின் தந்தை முனைவர் ஒளவை
நடராசன் அவர்களும், அவரது தாத்தா ஒளவை சு. துரைசாமி அவர்களும்
என் கல்லூரிக் காலத்தில் (61-64) ஆண்டுகளில் என் தமிழ் ஆசிரியர்களாக மதுரை தியாகராசர்
கல்லூரியில் இருந்தார்கள் என்ற மகிழ்ச்சிச் செய்தியை அருள் அவர்களிடமும் தெரிவித்தேன்.
எனக்கும் மகிழ்ச்சி. செய்தி கேட்ட அவருக்கும் பேருவகை.) “வாழ்க நீ எம்மான்” என்ற தலைப்பில் பேசிய
திருமதி பாரதி பாஸ்கர், தான் மிகப்
பெரும் மேடைப் பேச்சாளர் என்பதை ஒவ்வொரு சொல்லிலும் உறுதியாக்கினார்.
குடும்பத்தினர் அனைவரும்
- முக்கியமாக, என் பேரக் குழந்தைகள்
நால்வரும் - வந்திருந்தது எனக்குப் பேரின்பமாக இருந்தது.
விழாவிற்குப் போனோம்; விருது வாங்கினோம்; மகிழ்ச்சியைக்
கொண்டாட பெயரன்கள் விருந்துண்ண அழைத்துச் சென்றனர்.
























