Thursday, July 15, 2010

417. களவாணி – இது பட விமர்சனம் இல்லை

*


படம் 1:

நிர்மால்யம் என்று 1973-ல் ஒரு மலையாளப்படம் வந்து, அந்த வருடத்திற்கான சிறந்த படம், சிறந்த நடிகர் பரிசு பெற்றது. அது M.T. வாசுதேவனின் இயக்கத்தில் வந்த முதல் படம்.
சிறந்த நடிகரான அன்டனி பரிசளிப்புக்காக போனவர் சாதாரணமாக அங்கு பீடி குடித்துக் கொண்டிருந்ததாகவும் வாசித்த நினைவுண்டு.

அந்த படம் மதுரைக்கு வந்த போது சில நண்பர்களை நல்ல படம் என்று சொல்லி இப்படத்திற்குக் கூட்டிச் சென்றேன். அதில் முக்கால்வாசி கேசுகள் எம்.ஜி.ஆரின் விசிலடிச்சான் குஞ்சுகள். ஆர்ட் படம் என்றால் மெல்ல படம் போகவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தது போல் படம் மெல்லவே போகும். வீட்டில் செருப்பு மாட்டிக் கொண்டு தெருவுக்கு வந்து முழு நீளம் நடந்து, தெரு முடிவு வரை காண்பித்துக் கொண்டிருப்பார்கள். (படக்கதை பற்றி அறிய … ) படத்தில் அந்த இறுதிக் கட்டம் மிகுந்த உணர்ச்சிகரமாக இருக்கும். சாமியாடியான கதாநாயகன் தன் கடவுளைத் தன் கையிலிருக்கும் அருவாளால் வெட்டி விட்டு தன் தலையையும் வெட்டிச் செத்துப் போவான்.

படம் முடிந்து ஏறக்குறைய ஒரு 80-100 மீட்டர் தூரம் தியேட்டரை விட்டு வெளியே வரும் வரை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. அவ்வளவு தூரம் வந்ததும் கூட வந்த நண்பர்களிடம், மெல்ல ‘படம் நல்லா இருந்திச்சில்ல ..?’ என்றேன். அடிக்க வந்து விட்டார்கள்.

‘என்ன படம்னு கூட்டிட்டு வந்த ..”? என்று பாய்ந்தார்கள்.

‘அந்தக் கடைசி சீன் …’ என்று மெல்ல இழுத்தேன்.

‘அது ஒண்ணுதான் நல்லா இருந்திச்சி’ என்று அவர்கள் சொன்னதும், ‘அந்த ஒரு கடைசி சீனுக்குத்தான் முழுப்படமும் பில்டப் கொடுத்திச்சி. பாருங்களேன்… உங்களுக்குப் படம் பிடிக்கலைன்னு சொல்றீங்க; ஆனா ஏன் தியேட்டர் விட்டு வந்ததும், இவ்வளவு தூரம் யார் எதுவும் யாரிடமும் பேசவில்லை; படத்தின் தாக்கம் அப்படி’ என்றேன்.

நண்பர்கள் ஒத்துக் கொண்டார்கள்.

படம் 2:

எல்லாத்துக்கும் நல்லா தெரிந்த ‘பதேர் பாஞ்சாலி’. இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லணுமா என்ன?

படம் 3:

களவாணி படம் பார்க்கும்போது இந்த இரு படமும் என் நினைவுக்கு வந்தன. இந்த இரு படங்களிலும் யாரும் நடித்ததாகத் தெரியாது. இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைத்தான் பார்த்த நினைவு. பதேர் பாஞ்சாலியில் வரும் அந்தப் பாட்டிகூட ரொம்ப முணமுணக்கும் ஒரு கிழவியாகத்தான் தெரியும்.

களவாணி படம் பார்க்கும்போது எல்லா கதாபாத்திரங்களும் மிக இயல்பாக இருந்ததைப் பார்த்தேன் – ஒரே ஒரு நடிகர் மட்டும் கொஞ்சம் விலகித் தெரிந்தார். அவர் பெயரெல்லாம் எதற்கு? ரொம்ப பெரியவரும் கூட. அவரைத் தவிர எல்லோரும் மிக அழகாக படத்தில் வந்து சென்றார்கள். நிலக்கடலை உடைக்கும் பெண்கள், பூ கட்டும் பெண்கள், ஊர்க்காரர்களாக வந்து செல்லும் மக்கள் -- எல்லோரும் மிக இயல்பாக வந்தார்கள். இவ்வளவு ரசனையாக தன் நடிகர்களை நடிக்க வைத்த இயக்குனர் சற்குணம் பாராட்டுக்குரியவர்.

இந்த அளவு நடிகர்களைக் கையாளத் தெரிந்த ஒரு இயக்குனர் இந்தப் படத்தில் ஒரு சீரியஸான காமெடி படத்தை அழகாகக் கையாண்டுள்ளார். எல்லோரும் தீவிரமாக கத்தி எடுத்து விரட்டிக் கொண்டிருக்கும் போது பயங்கர காமெடியை இணைத்து ரசிக்க வைத்தார். ஆனால் எனக்கு என்ன ஆதங்கம் என்றால், இவ்வளவு திறமையான ஒரு இயக்குனர்கூட வழக்கமான ஒரு காதல் கதை; பக்கத்து ஊர்களுக்கு நடுவில் ஜென்மப் பகை – அது இதுன்னு வழக்கமான ஒரு தமிழ்ப்படம்தான் எடுக்கணுமா? நிச்சயமாக நல்ல படங்கள் தரக்கூடிய இயக்குனர். என்றுதான் வித்தியாசமான, காதலை கொஞ்சமாவது ஒதுக்கி வைக்காவிட்டாலும், ஓரத்தில் தள்ளி வைத்து வரக்கூடிய நல்ல “உலகத்தரமான” தமிழ்ப்படங்களை எப்போது காண்போமோ? சமீபத்தில் பார்த்த சில ஈரானியப் படங்கள் – Osama .. Children of Heaven .. Where is my friend's house? ..  போன்றவை - நினைவுக்கு வந்தன. … சோகம்தான் …


*

.


31 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

இயல்பான படம் என்ற வகையில் சரிதாங்கய்யா... ஆனா முதல் பாதி என்னோட பொறுமைய ரொம்பவே சோதிச்சது..:-(

உண்மைத்தமிழன் said...

[[[எவ்வளவு திறமையான ஒரு இயக்குனர்கூட வழக்கமான ஒரு காதல் கதை; பக்கத்து ஊர்களுக்கு நடுவில் ஜென்மப் பகை – அது இதுன்னு வழக்கமான ஒரு தமிழ்ப் படம்தான் எடுக்கணுமா?]]]

தலைவரே..!

என்னதான் பேஸ்மேண்ட்ல கிரானைட் கல்லைப் போட்டு அடிச்சிருந்தாலும், கிரவுண்ட்ல கிட்டிப்புள்ளு விளையாண்டாத்தான் கூட்டம் வரும்..!

அதான் காரணம்..!

உண்மைத்தமிழன் said...

[[[சமீபத்தில் பார்த்த சில ஈரானியப் படங்கள் – Osama .. Children of Heaven போன்றவை - நினைவுக்கு வந்தன. … சோகம்தான்]]]

அந்த ஊர் மக்கள் அப்படி..? நம்ம ஊர் ஜனங்கள் இப்படி..?

உண்மைத்தமிழன் said...

[[[நிச்சயமாக நல்ல படங்கள் தரக் கூடிய இயக்குனர். என்றுதான் வித்தியாசமான, காதலை கொஞ்சமாவது ஒதுக்கி வைக்காவிட்டாலும், ஓரத்தில் தள்ளி வைத்து வரக் கூடிய நல்ல “உலகத் தரமான” தமிழ்ப் படங்களை எப்போது காண்போமோ?]]]

ரொம்பப் பேராசைங்க உங்களுக்கு..? அப்படியெல்லாம் படமெடுத்து தமிழ்நாட்டு ரசிகர்கள் ஓட வைச்சிருந்தா இவுக ஏன் இப்படி படம் எடுத்து உங்ககிட்ட திட்டு வாங்குறாங்க..?

உண்மைத்தமிழன் said...

தல..

ரீசண்ட் போஸ்ட் விட்ஜெட் அத்து மீறி கிரவுண்ட்டுக்குள்ள தலையை நீட்டுது பாருங்க..!

காப்பி பண்ண முடியலை.. ரெண்டு பக்க முனையையும் கொஞ்சம் கட் பண்ண முடியுமான்னு பாருங்கோ..!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

நீங்க கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை சார். சற்குணம் ஒரு திறமை வாய்ந்த இயக்குனராகத் தெரிகிறார். கோடம்பாக்க கும்பலில் சிக்கி சராசரி மசாலாவில் வீழ்ந்துவிடக்கூடாது என்பது என்னுடைய விருப்பம்.

செந்தில் குமார் வாசுதேவன் said...

ஐயா, உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது இருக்கும் 'sense of security and integrity' வேறெங்கும் இருந்ததில்லை.. நன்றிகள் பல..

TBR. JOSPEH said...

ஓரத்தில் தள்ளி வைத்து வரக்கூடிய நல்ல “உலகத்தரமான” தமிழ்ப்படங்களை எப்போது காண்போமோ? //

உங்கள மாதிரியே நானும் பல முறை நினைச்சி பாத்துருக்கேன்.

ஆனா இந்த மாதிரி படங்கள் மலையாளத்துல வரத்தான் செய்யிது. இப்ப இல்லன்னாலும் ஒரு அஞ்சாறு வருஷங்களுக்கு முன்னால.

நம்ம ஊர்ல பாலு மகேந்திராவும் வீடு மாதிரி படங்கள செஞ்சித்தான் இருக்கார். ஆனால் இங்கதான் நாலு ஃபைட்டு, நாலு டான்சு, நாலு காமடின்னு அலலயற கூட்டங்கள் நிறைய இருக்கே. பதிவுலகத்துலயும் இந்த மாதிரி கூத்தடிக்கிற இடுகககளுக்குத்தான ஆதரவும் இருக்கு!

என்ன சொல்லி என்ன செய்ய? இதான் காலம், இதான் கோலம்!!

தருமி said...

கா.பா.,

//முதல் பாதி என்னோட பொறுமைய ரொம்பவே சோதிச்சது..:-(//

உங்களை நிர்மால்யம் படத்துக்குக் கூட்டிட்டுப் போயிருந்தா ... அம்புட்டுதான்!

தருமி said...

உ.த.,

உங்களை மாதிரி திரைப்படத்தோடு தொடர்புடையவர்கள் இப்படி பேசும்போது கோபமாகத்தானிருக்கு. (//மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று இயக்குனர்கள் சொல்வது அவர்களது இயலாமையை மறைத்துக் கொள்ள அவர்களே வைக்கும் ஒரு விவாதம்.?)வீணை செய்யும் ஒரு கலைஞனால் வீணைதான் செய்ய முடியும். அகப்பைக்கு நல்ல டிமாண்ட் இருக்குன்னு சொல்லி மாதத்திற்கு ஒரு வீணை செய்யும் அவனால் தினத்திற்கு நாப்பது அகப்பைகள் செய்ய முயன்றாலும் முடியாது; செய்யவும் மாட்டான். பிரச்சனை என்னவென்றால் நம்மிடம் இருப்பதெல்லாம் அகப்பைகள் மட்டுமே செய்யத் தெரிந்தவர்கள்தான்;//

உங்களுக்கு கிட்டிப் புள்ளுதான் அடிக்கத்தெரியும் என்று சொல்லிவிட்டுப் போங்கள். அதென்ன .. எங்களுக்காக நீங்கள் கிட்டிப் புள்ளு தூக்குகிறீர்கள். முடிந்ததே அதானே!

//அந்த ஊர் மக்கள் அப்படி..? நம்ம ஊர் ஜனங்கள் இப்படி..?//
நம்ம ஊரு நான் நினச்ச அளவுகூட மோசமில்லை. வெயில், பூ -- இந்தப் படங்களுக்கு இருந்த நல்ல வரவேற்பே அதற்கு சாட்சி.

தருமி said...

உ.த.,

மறுபடியும் உங்கள் பார்வைக்கு:

http://dharumi.blogspot.com/2005/10/90.html

http://dharumi.blogspot.com/2007/10/237.html

தருமி said...

செந்தில் குமார் வாசுதேவன்,

நன்றி

தருமி said...

//இதான் காலம், இதான் கோலம்!!//

நான் நினைத்ததை விடவும் மாறி வருதுன்னு நினைக்கிறேன்.

நாகை சிவா said...

கண்டிப்பாக பாராட்ட பட வேண்டிய படம். ஜென்ம பகை இருந்தாலும் அரிவாளும் ரத்தமுமாக படம் முழுவதும் இல்லை. அது போக ஹீரோ துதி பாடல் இல்லை.

எனக்கு அப்படியே எங்க ஊர் அருகில் இருக்கும் கிராமத்து இளைஞர்களை பார்த்த மாதிரி தான் இந்த படம் பட்டது.

அதே சமயத்தில் நீங்க சொன்னது மாதிரி நம்ம ஆட்கள் இன்னும் காதலை கட்டிக்கிட்டே அலையுறாங்க... இதுலையும் இப்படி தான். ப்ரீயட் படம் ஆன மதராசபட்டினத்திலும் அப்படி தான். காதலை தவிர்த்து வேறு விசயமே நம்மிடம் இல்லையா>

தருமி said...

சிவா,
//காதலை தவிர்த்து வேறு விசயமே நம்மிடம் இல்லையா?//

இது ரொம்ப நாளா மண்டய போட்டு குடையுற விஷயமா ஆகிப் போச்சுங்க ...

அபி அப்பா said...

தருமி அய்யா! இந்த படத்துக்கு இன்னும் ஒரு சிறப்பும் உண்டு. நானும் என் மனைவியும் முதன் முதலாக தியேட்டர் போய் ஜோடியா பார்த்த படம்:-))) (கல்யாணமாகி 15 வருஷத்தில்) படம் நல்லா இருந்துச்சு.

அபி அப்பா said...

சிவா சொன்ன மாதிரி இது அப்படியே எங்க ஊர்பக்க கிராமம் மாதிரி தான் இருந்தது.

மதுரை சரவணன் said...

மண்ணில் இந்த காதல் இன்றி வாழ்தல் கூடுமே.... தமிழ் படங்கள் காதல் இல்லாமல் எடுக்க யார் முன் வருவார்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

தருமி said...

அபிஅப்பா,
நீங்க இவ்வளவு "மோசமான" ஆளா இருப்பீங்கன்னு நினைக்கலை. அதென்னங்க.. நாங்களே 'அந்தக் காலத்திலேயே' முதல் வாரமே போய்ட்டோமே! பாவங்க அபி அம்மா!

தருமி said...

//எங்க ஊர்பக்க கிராமம் மாதிரி தான் இருந்தது.//

நல்ல பச்சை பசேல்னு ,,, அதெல்லாம் நல்லா இருந்திச்சி. ஆனா அதுக்காக தஞ்சை மண்ணுக்கு மட்டும் தான கூட்டிட்டு போவேன்னு ஒரு வைராக்கியமா??!!

தருமி said...

நன்றி சரவணன்

ரோஸ்விக் said...

ரொம்ப இயல்பான நகைச்சுவையான படம். அதிலும் கிராமத்து பின்னணியில் இருந்து வந்தவர்கள் மிகவும் ரசித்திருப்பார்கள் என நம்புகிறேன்.
காதல் காட்சிகள் வியாபார நோக்கங்களுக்காக தயாரிப்பாளராலும், ரசிகர்களாலும் கட்டயப்படுத்தப்படவே செய்கின்றன. பயம். நல்ல படம் கொடுத்தாலும் டப்பு திரும்ப வரணுமே... அதனால இருந்துட்டு போகட்டும்.
காதல் காட்சிகளாவது பரவாயில்லை...
நடிகைகளின் அக்குளுக்கும், தொப்புளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்களுக்கு மத்தியில் வெளிவரும் இதுபோன்ற படங்களுக்கு வந்தனங்கள்.

ரோஸ்விக் said...

எனது ஆந்திர நண்பர் ஒருவர் மிகவும் சிலாகித்து "Leader" (http://www.youtube.com/watch?v=qvBvJZOldjA)எனும் படத்தை எனக்கு பர்நிதுரை செய்தார். அரசியல் கனல் தெறிக்கும் படம் என்று அதிகமான புகழுரை வேறு. நானும் நம்ம்ம்ம்பி... பார்த்தேன்.
கடைசியா அந்தப்படத்துல புடிச்சது அதுல வருகிற ரெண்டு நடிகைகளின் அழகு மட்டும் தான். :-)
அரசியல் வசனங்களையும் இவர்களுடனான காட்சிகள் நீர்த்து போகச் செய்துவிட்டன.
படம் முடிந்தவுடன் அவரிடம் நமது "லியாகத் அலிகானின்" அரசியல் வசனங்களைப் பற்றி கூறினேன். ம்ம்ம்ம்

ரோஸ்விக் said...

எனது ஆந்திர நண்பர் ஒருவர் மிகவும் சிலாகித்து "Leader" எனும் படத்தை எனக்கு பர்நிதுரை செய்தார். அரசியல் கனல் தெறிக்கும் படம் என்று அதிகமான புகழுரை வேறு. நானும் நம்ம்ம்ம்பி... பார்த்தேன்.
கடைசியா அந்தப்படத்துல புடிச்சது அதுல வருகிற ரெண்டு நடிகைகளின் அழகு மட்டும் தான். :-)
அரசியல் வசனங்களையும் இவர்களுடனான காட்சிகள் நீர்த்து போகச் செய்துவிட்டன.
படம் முடிந்தவுடன் அவரிடம் நமது "லியாகத் அலிகானின்" அரசியல் வசனங்களைப் பற்றி கூறினேன். ம்ம்ம்ம்

ரோஸ்விக் said...

Leader Movie

தருமி said...

விக்டர்,

சீரியாஸா கத்திய வச்சிக்கிட்டு எல்லோரும் வர்ரப்போ நான் நல்லா சிரிச்சிக்கிட்டு இருந்தேன். thanks to கஞ்சா & சற்குணம்

leader பார்க்கணும்

Anonymous said...

புதிய பார்வையா எழுதி இருக்கீங்க..ஆனா விமர்சனம் இல்லைங்கறீங்க..தலைப்பு விமர்சனம் நு வெச்சா போணியாகுதுண்ணா?-;)

தருமி said...

ஆர்.கே.சதீஷ்குமார்,

/ஆனா விமர்சனம் இல்லைங்கறீங்க.//

அய்யோடா .. இதை விமர்சனம் அப்டின்னா சொல்றீங்க. விமர்சனம் அப்டின்னா என்னன்னு நம்ம உண்மைத் தமிழனிடம் கேளுங்க. நான் எழுதினது இந்த டைரடக்கரைப் பற்றிய ஒரு விமர்சனம்.

தருமி said...

ஆர்.கே.சதீஷ்குமார்,

அப்படியே இது ஒரு 'ஆதங்கம்' also!

ரோஸ்விக் said...

Previously given url is not visible to readers. So, again. :-)

Leader Movie

http://www.youtube.com/watch?v=qvBvJZOldjA

hamaragana said...

அன்புடன் வணக்கம் ,முன்னாளில் ஆனந்த விகடன் விமர்சனம் படித்து பின்னர் படம் பார்ப்பேன் இடையல் மிருதங்க சக்ரவர்த்தி என்ற படத்துக்கு பின் அவர்கள் விமர்சனம் இடவில்லை நானும் பத்திரிகை வாங்கி!!! வதை!!!! படம் பார்பதையும் விட்டுவிட்டேன் நண்பர்கள் படம் அருமை என்று சொன்னால் போவேன் சமீபத்தில் அதே விகடனை வாங்கிஅவர்கள் விமர்சனம் பார்த்து படம் போய் நொந்து போனேன் .. ஆனால் உண்மையல் உங்கள் விமர்சனம் மிக நன்று!!! இனிமேல் உங்கள் விமர்சனம் பார்த்து படித்து படம் போகலாம் சரிதானா நண்பரே...நன்றி

Post a Comment