Monday, October 15, 2012

597. நீயா .. நானா ..? - ஒரு கரும்புள்ளி





*


 ஒரு நீயா .. நானா? நிகழ்ச்சியில், பழைய தொழில் சார்ந்த வியாபாரிகள், புதிய தொழில் சார்ந்த வியாபாரிகள் என்று இரு குழுக்களுக்கு நடுவிலான ஒரு விவாதம் நடந்தேறி வந்தது. அதன் கடைசி பாகத்தில் நகர சுத்திகரிப்பாளர்கள் நால்வரையும், அதில் ஒருவரின் மகளையும் அறிமுகப்படுத்தினார்கள். அவர்கள் ஐவரையும் மதுரை சமூக ஆர்வலர் முத்துக் கிருஷ்ணன் எங்களூரிலிருந்து அழைத்து வந்திருந்தார்.

அந்த ஐவரையும் ஒரு பக்கம் நிறுத்தி அவர்களிடம் கேள்விகளை கோபிநாத் கேட்டுக் கொண்டிருந்தார். நான் தங்க்ஸிடம் ஏன் இவர்களை மட்டும் தனியே நிற்க வைத்துக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களை உட்காரவைத்து பேச வைக்கக்கூடாதா என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இது என் முதல் ஏமாற்றம். 

அந்த ஐவரில் ஒரு இளம்பெண். மலம் அள்ளும் ஒருவரின் குழந்தை. மிக மகிழ்ச்சியாக தான் முதுகலை முடித்து (M.Sc., B.Ed. ??) முடித்து இப்போது கணினியில் ஒரு டிப்ளமா கோர்ஸ் படிப்பதாகச் சொன்னார். தன் தந்தையின் தொழிலை எங்கும், யாரிடமும் மறைப்பதில்லை என்றும் கூறினார். அவரை அப்படி மகிழ்ச்சியாகப் பார்த்தது நன்றாக இருந்தது. அவர் படிப்பு, ஆர்வம், வேலை பார்க்கும் எண்ணம் பற்றி அங்கிருந்த புதிய தொழில் சார் மக்கள் யாரேனும் கேள்வி கேட்டு அவருக்கு அங்கேயோ வேலையளிக்க முன் வருவார்களோ என்று நான் எதிர்பார்த்தேன். அப்படி ஏதும் நடக்கவில்லை.  அவர்கள் எல்லோருமே வியாபாரிகள் தானே!  .. இல்லையா?! . இது என் இரண்டாவது ஏமாற்றம்.

வந்திருந்த மற்ற நால்வரில் இருவர் பெண்கள். அதில் ஒருவர் தான் சொல்ல வந்ததை மிகக் கோர்வையாக, வெகு இயல்பாக எடுத்துச் சொன்னார். அடுத்தவர் பேசவில்லையே என்று நினைத்த போது, அவர் கோபிநாத்தைப் பார்த்து, நீங்களும் கூட எங்களை நிற்க வைத்து தானே பேசுகிறீர்கள்; எங்களை இங்கே உட்காரவைக்கவில்லையே என்று நேருக்கு நேர் கேட்டார். இதன் பிறகு கூட கோபிநாத் அவர்களை அங்கே உட்கார வைக்கவில்லை.  வேகமாக வந்து நீங்க என் அக்கா என்றெல்லாம் கோபி சொல்லி அப்பெண்ணை அணைத்து ஈடு கட்டியது ... ஹூம் .. “பப்பு வேகவில்லை”!  அவரும் அவரது குழுவும் மிகவும் மோசமாக இடறிய இடம் இது. இது மூன்றாவது ஏமாற்றம். ஏமாற்றம் மட்டுமல்ல மிகக் கொடுமை.

 மரியாதையை கேட்காமல் கொடுத்திருக்க வேண்டும். கேட்டும் கொடுக்க மனமில்லையெனில் அது மிகக் கொடுமையே. ஒருவேளை அங்கே ஏற்கெனவே உட்கார்ந்திருந்தவர்களோடு இவர்களை உட்கார வைத்தால் அவர்கள் கஷ்டப்படுவார்களோ என்று நினைத்திருப்பார்களோ? என் பார்வையில் அங்கு உட்கார்ந்திருந்த பல பெண்களை விட நிற்க வைக்கப்பட்டு அனுப்பப்பட்ட சுத்திகரத் தொழிலாளிப் பெண்கள் இருவரும் மிகவும் நன்றாக இருந்தார்கள். They were more presentable that many in the audience. பின்னும் ஏனிந்த நடைமுறை?

ஊடகங்களில் சாதி இந்துக்கள், தலித்துகள் என்று பிரித்து எழுதுவது வழக்கம். ஒரு வேளை நீயா நானாவில் சாதி இந்துக்கள் மட்டும் தான் உட்காரவைத்து மரியாதை செய்யப் படுவார்களோ? இது போன்ற நல்ல நிகழ்வுகளிலேயே இந்த சாதிய முறை இப்படிப் பட்டவர்த்தனமாகப் பார்க்கப்படுமாயின் நாம் வேறே எங்கே போய் முட்டிக் கொள்வது?






 *

13 comments:

ப.கந்தசாமி said...

பட்டவர்த்தனமான அக்கிரமம். நம்ம நாட்டில தீண்டாமை எப்படி ஒழியும்?

இராஜராஜேஸ்வரி said...

மரியாதையை கேட்காமல் கொடுத்திருக்க வேண்டும். கேட்டும் கொடுக்க மனமில்லையெனில் அது மிகக் கொடுமையே

ஜோதிஜி said...

15 வருடங்களுக்கு முன்னால் சுஜாதா எழுதிய சிறுகதை நினைவுக்கு வருகின்றது. ஒரு தொ.கா நிகழ்ச்சிக்கு அதன் வெற்றிக்காக உழைக்கும் இருவரின் மனோபாவம். அதாவது அதில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை விட அந்த நிகழ்ச்சி ஜெயித்து மக்களிடம் செல்ல எவ்விதமான எந்திரத்தனமாக செயல்படுகிறார்கள் என்பதை அழகாக அந்த சிறுகதையில் சொல்லி இருப்பார்.

நீங்கள் சொல்வது நாமே நினைத்துக் கொள்ளலாம். சூப்பர் சிங்கர், இது போன்ற நிகழ்ச்சி எல்லாம் நிகழ்ச்சி முடிந்தவுடன் போய்க் கேட்டுப் பாருங்க. அவர்களின் வேறொரு ரூபம் நமக்கு புரியும்.

நான் கவலைப்படுவது எல்லாம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெறும் குழந்தைகள் அத்தனை பேர்களையும் ஒரு கற்பனா உலகில் மிதக்க வைத்து விடுகிறார்கள். குறிப்பாக ஆடை முக அலங்காரம் போன்றவை.

அவர்கள் எதார்த்த வாழ்க்கையில் எப்படி வாழப் போகின்றார்கள் என்பதை அதிக முறை யோசித்து உள்ளேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

வர வர இந்த நிகழ்ச்சியின் தரம் தாழ்ந்து கொண்டே வருகிறது... (ஏற்கனவே தரமேயில்லையோ...?)

மின்சாரம் இல்லாததால் நீங்கள் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சியை பார்க்கவில்லை...

நன்றி ஐயா...

Avargal Unmaigal said...

இது உயர் சாதி ஆட்களின் ஆதிக்கத்தால் செயல்படும் ஒரு தொலைக்காட்சியாகவே நான் கருதுகிறேன்

//இராஜராஜேஸ்வரி said...

மரியாதையை கேட்காமல் கொடுத்திருக்க வேண்டும். கேட்டும் கொடுக்க மனமில்லையெனில் அது மிகக் கொடுமையே///

மிகஸ் சரியாக சொல்லி இருக்கிறார்

அழகிய நாட்கள் said...

உங்கள் மூன்று கோபங்களும் நியாயமானது. துப்புரவு வேலை செய்யும் அந்தப்பெண் தன்மானமுள்ளவள் என்று சொன்ன பிறகும் கூட ஒரு நாற்காலியில் உட்காரவைக்க முடியாத ஒரு anchor எதற்கு?...

பொன் மாலை பொழுது said...

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்ற அடிப்படை உணர்வு கூடவா இல்லாமல் போய்விடும்? யாராக இருந்தாலும் பொதுவில் வந்துவிட்டால் அனைவரும் சமம்தானே? ஒன்று மட்டும் உண்மை. அவர்கள் செய்வது அனைத்தும் வியாபரமே அன்றி வேறில்லை. யார் நின்றாலும், உட்கார்ந்தாலும் விளம்பர தாரர்களிடமிருந்து காசு வந்துவிடும்.
பார்த்து பல்லைக்காட்டத்தான் ஆட்கள் பஞ்சமா என்ன நம் நாட்டில்?

கோபிநாத் மீது ஆரம்பத்தில் இருந்த அந்த பொய்யான இமேஜ் மாறிப்போய் ரொம்பநாள் ஆகிறது. He is an utter case of Hypocritical என்பது பல முறை நிருபணம் ஆனா ஒன்று.

அ. வேல்முருகன் said...

இவர்கள் ரேட்டிங்காக நிகழ்ச்சியை நடத்துபவர்கள், அப்படியே சமூக அக்கறை உள்ளவர்களாக காண்பித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் சானதான தர்மத்தை காக்கவில்லை என்றால் அவர்களின் ஆசி கிடைக்காது.

காதலுக்குத் தேவை தோற்றமா, அணுகுமுறையா (அப்பியரன்சா, அப்ரோச்சா) என்ற தலைப்பில் ஒரு காதலர் தினத்தன்று நடத்தினர்.

இது இன்னும் பெண் போகப்பொருளாக பார்க்கப்படுகிறாள் என்பதைதான் காட்டுகிறது. இதற்கு யாரும் கொடிப்பிடிக்கவில்லை

தலைப்புகள் வேண்டுமானால் அக்மார்க் தரத்தோடு இருக்கலாம். ஆனால் விவாதங்கள் அபத்தமானவை

கரும்புள்ளி இது மட்டுமல்ல இது தொடர்வதும் கூட

தஜ்ஜால் said...

நல்ல பதிவு,
மின்வெட்டினால் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. சுட்டிக்காட்டப்பட்ட பின்னும், மரியாதை குறைவு செய்யப்பட்டிருப்பின் நிச்சயமாக வருத்தப்பட வேண்டிய, கண்டிக்கபட வேண்ய ஒன்றுதான். நீயா நானவில், ஏற்கெனவே எடுத்துக்கொள்ளப்படும் தலைப்புகள் அர்த்தமற்ற்வையாக உள்ளன என்றும் குற்றச்சாடும் உண்டு.

தஜ்ஜால் said...

நல்ல பதிவு,
மின்வெட்டினால் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. சுட்டிக்காட்டப்பட்ட பின்னும், மரியாதை குறைவு செய்யப்பட்டிருப்பின் நிச்சயமாக வருத்தப்பட வேண்டிய, கண்டிக்கபட வேண்ய ஒன்றுதான். நீயா நானவில், ஏற்கெனவே எடுத்துக்கொள்ளப்படும் தலைப்புகள் அர்த்தமற்ற்வையாக உள்ளன என்றும் குற்றச்சாடும் உண்டு.

வல்லிசிம்ஹன் said...

அநியாயம். நான் நீயநானா பார்த்து வெகு நாட்கள் ஆகிறது. அர்த்தமில்லாதா தலைப்புகள். அவசர உணர்ச்சிகள். ஆரம்ப கலம் நன்றாக இருந்தது. அவர் வளர்ந்துவிட்டார்.நிகழ்ச்சிகள் தரம் இழந்துவிட்டன,.
@ஜோதிஜி, எனக்கும் சூப்பர் சிங்கர் குழந்தைகளை, சிறியவர்களாகப் பார்க்காமல் ஏன் இத்தனை பாடுபடுத்துகிறார்கள். வயதுக்கு மீறிய மேக் அப். திடும் என்று பூமிக்கு வரும்போது ஏற்படும் மனக்கஷ்டம் பயங்கரமாக இருக்கும்.
உங்களையும் என்னையும் தவிர வேறு யாராவது இந்த யோசனையை ரசிப்பார்களா தெரியாது.

கையேடு said...

ஓரளவிற்கு தொடர்ந்த்து பார்க்கும் நிகழ்ச்சிகளில் நீயா நானா வும் ஒன்று.

ஆனால் அவர்கள் இழுத்தடிக்கும் நேரம் வரை பார்க்க முடிவதில்லை.

விஜய் தொலைக்காட்சி தனக்கான முகமூடியாகவே இது போன்ற நிகழ்ச்சிகளைப் பயன்படுத்துகிறதுன்னு நினைக்கிறேன்.

உ.தா. காலையில் பஜனை, சோதிடம், நிலத்தரகர்களின் விளம்பரம் என்று சற்றேரக்குறைய அரைநாள் ஒதுக்கிவிட்டு, ஞாயிறு மாலையில் கோபிநாத் அவர்களுக்கெதிராக தீர்ப்பு வாசித்துக் கொண்டிருக்கிறார்..

ஆம் இப்போதெல்லாம் கருத்து சொல்பவர்களைக் கலாய்ப்பதில் ஒரு மேதாவித்தனம் அப்பட்டமாகத் தெரிகிறது.சிறப்பு விருந்தினர் சிலரது உரையாடலுக்காகவே காத்திருக்க வேண்டியிருக்கிறது..

நிற்க..

இதைப்பற்றி ஏதாவது எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
http://www.thehindu.com/opinion/open-page/lets-ignore-science-at-our-peril/article4017252.ece

naren said...


நீயா நானாவில், அடிப்படை மனித உணர்ச்சிகள் உரிமைகள் மதிக்கப்படவில்லை என தெரிகிறது. இதை பற்றி கோபிநாத் என்ன சொல்கிறார் என்று அவரை தெரிந்தவர்கள் கேட்டு சொன்னால் நலம்.

Post a Comment