Monday, November 04, 2013

692. சின்னச் சின்ன கேள்விகள்






*




இந்தப் படம் இப்பதிவில் எதற்கு?   - முதல் கேள்வி !!!

**************************** 

இலங்கையில் நடக்கும் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள  வேண்டுமா?

 சில சமயங்களில் அடிப்படையே ஒரு கேள்விக்குறியாக நின்று விடுகிறது. இலங்கை நம் அருகில் இருக்கும் நாடு. அதனை நம் ‘பெட்டைக்குள்’ வைத்துக் காக்க வேண்டும். அது தான் நல்லது. இதற்குக் காரணம் கேட்டால், ஒரு காலத்தில் அமெரிக்கப் படைகளின் தளமாக ஆகிவிடும் என்று ஒரு பயம் என்றார்கள். இப்போது கேட்டால் சீனாவின் கைப்பொமையாக ஆகி விடுமோ என்ற பயம் என்கிறார்கள். நமக்குத் தான் எம்புட்டு பயம்?! 

இப்படியெல்லாம் தடைக் கற்கள் போட்டாலும் நடப்பது எல்லாமே நமக்கு எதிராகத்தான். நாம் ‘ஆசைப்பட்டு’ இலங்கைக்கு இலவசமாக பல உதவிகள் செய்து வருகிறோம். சீனா கடன் கொடுத்து வசதிகளைச் செய்து தருகிறது. ஆனாலும் இலங்கை அரசின் நட்பு நம்மோடு இல்லை; சீனாவோடு தான்!

நம் நாட்டு மீனவர்கள் அவர்கள் நாட்டு எல்லையில் மீன்களை அள்ளிக் குவித்துக் கொண்டு வருகிறார்கள் என்று அரசின் கடற்படையே நம்மை அள்ளிச் செல்கிறது. அதைத் தடுக்க நம் தீவை அந்த நாட்டிற்குத் தாரை வார்த்தாகி விட்டது. கையை விட்டு காசும், தீவும் போகுது; அங்கிருந்து ஏதும் வருவது கிடையாது. இது நம் நிலை.

இந்திய அரசு ஆசை காட்டி, நாம் கொடுக்கிற ‘மிட்டையை’ வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு, மாமான்னு சீனாக்காரனை அழைத்து அவனோடு ஆசையாக இருப்பது இலங்கை. நம் நாட்டு அயல்நாட்டுக் கொள்கை இப்படி அல்லோலப்படக் கூடாது.

இப்போது இலங்கையில் காமன்வெல்த் மாநாடாம். அதென்ன காமன் வெல்த் என்றால் எனக்குக் கிடைக்கும் பதில் = பழைய அடிமைகள் + பழைய வெள்ளைக்கார எசமான் துரைகள்! - அப்டின்னு பதில் வருது. இங்கிலாந்தின் அரசின் தலைமையில் அவர்களிடம் அடிமையாக இருந்த பழைய காலனி நாடுகளின் - அடிமைகளின் - கூட்டு. ஆண்டவன் தன்னைப் ‘பீற்றிக் கொள்ள’ அடிமை நாடுகள் கொடுக்கும் புதிய தண்டம் இது. வரி, வட்டி, கிஸ்தி என்று பொருளாகக் கொடுக்காமல் மரியாதையைத் தண்டமாகக் கொடுக்கும் புதிய காலனி ஆதிக்கம் இது.

இப்படி ஒரு அமைப்பே ஒரு கேலிக் கூத்தாகத் தெரிகிறது.  இதில் ஏன் இத்தனை நாடுகள் இணைந்து ஒட்டுமொத்தக் காணிக்கையை பழைய எஜமான்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே புரியவில்லை. 

ஆனால் இப்போது நம் நாட்டோடு தொடர்பு கொண்ட ஒரு இனம் அழித்தொழிக்கப்பட்ட நாட்டில், இப்படிப்பட்ட  ஒரு அடிமைத்தனமான மாநாட்டில், நம் அரசு கலந்து கொள்வது எந்த அளவு முறையோ? ஒரு மாநிலமே மொத்தமாக நமது அரசு கலந்து கொள்ளக் கூடாது என்னும் போது ‘வெளிநாட்டு உறவு’ மத்திய அரசின் முடிவுகளில் மட்டுமே உள்ளது என்று மார்தட்டும் காங்கிரசிற்கு தேர்தலில் மட்டும் தான் தமிழகம் பதிலளிக்க வேண்டுமோ?

இன்னொரு கேள்வி: 

இதில் ஏன் அமெரிக்க நாடு ஒரு உறுப்பினராக இல்லை?  ஒரு வேளை போரிட்டு வெற்றி பெற்றதாலோ    ...?

***********************************

கேள்வின்னு வந்தால் நிறைய கேள்விகள் வருதே.

எனக்கு போராடுபவர்கள் மேல் எப்போதும் மரியாதை உண்டு. அது கல்லூரி ஆசிரியர்களின் போராட்டமாக இருக்கட்டும்.. இல்லை ... கல்லூரிக்குள்ளேயே நடக்கும் போராட்டமாக இருக்கட்டும். இல்லை  கூடங்குளத்திற்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும். போராடுபவர்கள் எப்போதுமே தங்கள் சுய நலன்களைத் தாண்டி பொது நலனுக்காக யோசிக்கிறார்கள். போராட்டங்களில் ஈடுபடும் மனமே பெரிது. அதிலும் இதனால் இழப்புகள் உண்டு என்று தெரிந்து போராட்டங்களில் ஈடுபடுவோர், தொடர்ந்து இழப்புகளைத் தாங்கி போராடுவோர் மரியாதைக்குரியவர்களே.

இந்த வகையில் நக்சலைட்டுகள் நம் கனிம வளங்கள், தாழ்த்தப்பட்ட ஆதிவாசிகள் இவர்களின் நலனுக்காகப் போராடுவது பாராட்டுகுரியதே. அதிலும் தாங்களே காட்டுவாசிகளாக மாறி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல இழப்புகளுக்கு உள்ளாகும் இந்தப் போராளிகள்  மக்கள் தொடர்பான பல போராட்டங்களை நடத்துபவர்கள் என் மரியாதைக்குரியவர்களே.

ஆனால் இந்தப் போராட்டங்களை நடத்துவோர் பல முறை ‘குறி தவறி’ தேவையில்லாத ஆட்களைக் கொல்வது ஏனென்று தெரியவில்லை. பாவப்பட்ட கீழ்நிலை காவலர்களைக் கொல்வது, சாதாரண மக்களில் சிலரை அழிப்பது ஏனென்று தெரியவில்லை. குறி வைத்தால் ‘சரியான’ குறியாக வைக்க வேண்டாமா?  அவர்களின் தியாகங்களும், குறிக்கோளும் சரியான குறிவைத்துப் போக வேண்டாமா?

*****************************************






7 comments:

வேகநரி said...

சின்னச் சின்ன கேள்விகள் என்றுவிட்டு பெரிய கேள்வியே கேட்டிருக்கிங்க.
//காமன் வெல்த் என்றால் எனக்குக் கிடைக்கும் பதில் ஸ்ரீ பழைய அடிமைகள் + பழைய வெள்ளைக்கார எசமான் துரைகள்! - அப்டின்னு பதில் வருது. //
மிகவும் உண்மை. ஆனா இதை பற்றி கருணாநிதியோ ஜெயலலிதாவோ திராவிடபகுத்தறிவாளர்களோ தப்பி தவறி கூட வாய் திறக்கல்லையே:) இலங்கையில் நடக்கிறபடியால் இந்தியா கலந்துக்க கூடாதாம். இலங்கையை வைத்தே தமிழகத்தில் அரசியல் செய்ய பிரச்சனைகளை திசை திருப்ப கிடைத்த பொன்னான சந்தர்பம் அவர்களுக்கு.
கனடா பல ஆயிரம் வாக்குகளை கவனத்தில் எடுத்து மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ஆஸ்ரேலியா வெளிநாட்டு அமைச்சர் பிஷப்( Julie Bishop)சொல்கிறார் இலங்கையோடு சேர்ந்து ஒத்துழைச்சு தான் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.
இலங்கையில் நடக்கும் மாநாட்டில் இந்தியா அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

பதில்கள் - அவரவர் சிந்திக்க வேண்டியவை....!

அ. வேல்முருகன் said...

குறிகளை பாதுகாக்கும் நபர்கள் பலியாவது இயற்கைதான்.

ப.கந்தசாமி said...

சிந்திக்கவேண்டியது நிறைய இருக்கு.

டிபிஆர்.ஜோசப் said...

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துக்கொள்வதா என்பதை விட இலங்கையில் இப்போது வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழர்கள் இனியும் துன்புறாமல் இருக்க இந்தியா இலங்கையை சகித்துக்கொள்ளத்தான் வேண்டும் என்பதே என் பதில். இதில் தமிழக அரசியல்வாதிகள் போடும் கோஷமெல்லாம் வெறும் ஓட்டுக்காகத்தானே தவிர அங்குள்ள தமிழர்கள் மீதுள்ள அக்கறையால் அல்ல. சீனாவுடன் நட்பு பாராட்டுகிறது என்றால் அதை அங்கு ஓடவைத்ததும் நம்முடைய முதுகெலும்பில்லாத வெளியுறவு கொள்கைதானே. மேலும் நம் நாட்டுடன் மட்டுமே நட்புறவுடன் இலங்கை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் ஒரு முதிர்ச்சிபெற்ற வெளியுறவு கொள்கையல்ல. இதைப்பற்றி இப்போது எழுதிவரும் தொடர் முடிந்ததும் விரிவாக எழுதலாம் என்று இருக்கிறேன். இதை உணர்வு பூர்வமாக எதிர்ப்பதை விட அறிவுபூர்வமாக அணுகுவதே சிறந்தது என்பது என் கருத்து.

வேகநரி said...

//டிபிஆர்.ஜோசப் said... மேலும் நம் நாட்டுடன் மட்டுமே நட்புறவுடன் இலங்கை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் ஒரு முதிர்ச்சிபெற்ற வெளியுறவு கொள்கையல்ல.//
ஜோசப் அவர்கள் சரியான புள்ளியை கவனித்து சரியாக சொல்லியிருக்கிறார். தமிழ் படங்களில் வில்லன் செய்யும் செயலை மிரட்டி நீ என்னுடன் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் அல்லது நீ என்னுடன் இருக்க வேண்டும் என்பது போல் இந்தியாவும் மிரட்டி செய்ய வேண்டும் என்ற கருத்தை தமிழக அரசியல்வாதிங்க ஏற்படுத்துகிறார்கள்.பக்கத்தில் உள்ள நாடு இலங்கை மிக பெரிய அளவில் இந்தியாவுக்கு வியாபார வாய்ப்புகள் அதுவும் தமிழகத்திற்கே அதிகம் நலன் கிடைக்கும் நிலமை இருக்கும் போது தமிழக அரசியல்வாதிக தங்க அரசியல் நலன்களுக்காக இலங்கையை இந்தியாவின் எதிரிநாடாக அறிவிக்க புதிய எதிரி ஒருவரை உருவாக்க அதிக ஆர்வம் காட்டுவதை அவதானிக்கலாம்.

வேகநரி said...

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காமல் இருப்பது ஓரளவு மகிழ்ச்சி-கருணாநிதி
ஹிஹிஹி! காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து ராஜபக்‌ஷேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் அனுப்பியுள்ளார். ஆஸ்திரேலியாவில் 2011ல் நடந்த காமன்வெல்த் மாநாட்டிலும் தான் பிரதமர் மன்மோகன் சிங் பங்குபற்றவேயில்லை.

Post a Comment