Friday, April 24, 2015

832. என் வாழ்வின் 14% இங்கே தான் .......



 

*







*




24.4.2005-ல் முதல் பதிவு. அதுவும் ஆகிப் போச்சு 10 வருஷம்.

இதற்காக ஏதாவது ஸ்பெஷலா எழுதணும்னு ஆசை. அட .. பத்து வருஷம் ஆகிப் போச்சே ..கொண்டாடிலாம்னு நினச்சா .... என்ன எழுதிறதின்னே தெரியவில்லை. அதாவது பத்து வருஷத்துக்கு முன்னால் எப்படி திரு திருன்னு ...முழிச்சிக்கிட்டு நின்றேனோ ... அப்படியே அதே நிலையில் இன்னும் நின்று கொண்டிருக்கிறேன் என்று புரிந்தது. என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என்று ஏதும் தெரியாமல் பதிவு ஆரம்பிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக ப்ளாக் ஆரம்பித்தேன். அதாவது பத்து வருஷத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நின்ன இடத்தில இருந்தே ஒடிக் கொண்டிருந்திருக்கிறேன். அடப்பாவின்னு என்னையே நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டேன்.

பத்து வருஷத்திற்கு முன் மெரீனா கடற்கரையில் பதிவர்கள் கூட்டம் என்று போட்டிருந்தது. அனேகமாக அது ஒரு மார்ச் மாதமாக இருந்திருக்க வேண்டும். சென்னை செல்லும் வாய்ப்பும் வந்தது. நானோ பதிவரல்ல. இருந்தும் ஆனானப்பட்ட முன்னிலை எடுத்த அந்த பதிவர்களின் அனுமதியின் பேரில் - டிக்கட் இல்லாமல் பயணம் செய்வது போல் - அவர்களோடு உட்கார்ந்து கொண்டேன். பத்துப் பன்னிரண்டு பேர் வந்திருந்தார்கள். வந்திருந்தவர்களில் சிலர் மட்டும் நினைவுக்கு வருகிறார்கள். மறைந்த டோண்டு, மாலன், பத்ரி, தமிழ் சசி, திருமதி ராமச்சந்திரன் உஷா.

அந்தப் பதிவர்கள் அன்று பேசியதில் பலவும் தலைக்குமேல் காற்றாகப் பறந்து போயின. அடிக்கடி ‘யுனிகோட்’ என்றெல்லாம்சொல்லிக் கொண்டிருந்தார்கள். அது வீசை எவ்வளவு என்று கேட்கும் நிலையில் நான் இருந்தேன். அவர்கள் பேசிய போது ஒன்று மட்டும் காதில் நன்றாக விழுந்தது. நானூத்தி சில்லறை ஆட்கள் பதிவர்களாக இருக்கிறார்கள் என்றும், இன்னும் அவர்கள் விரைவில் பலுகிப் பெருத்து விடுவார்கள் என்று சொன்னதும் நன்றாக நினைவில் இருக்கிறது.

அந்த நிமிடத்தில் ஒரு முடிவெடுத்தேன். முதல் 500 பதிவர்களுள் ஒருவனாக ஆகி விடுவது என்று தீர்மானித்தேன். ஆக, பதிவெழுத ஆரம்பிக்கும் போது அதை எழுத வேண்டும் ... இதை எழுத வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. உள்ளே நுழைய வேண்டும் என்று மட்டும் நினைத்தேன். எண்ணித் துணிக கருமம் என்றில்லாமல் முதலில் கருமம் ... பிறகு எண்ணம் ... என்று ரிவர்ஸ் ஆர்டரில் நினைத்துக் கொண்டு, காலைத்தூக்கி உள்ளே வைத்தேன்.



காலைத் தூக்கி வைத்தது நல்லதாயிற்று. ஓய்வு பெற்ற பிறகும் வாழ்க்கை ஒரு அர்த்தத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறது. ஓய்வு என்றாலும்,  சோர்வு என்ற எண்ணமின்றி இன்னும் “ஓடிக்” கொண்டிருக்கிறேன். பதிவரானான பின்பு முதலில் குறைந்திருந்த வாசிப்பு அதிகமானது - கருத்துச் சண்டைகள் போடும்போது - கருத்துத் திரட்டலுக்காக நிறைய வாசிக்க வேண்டியதாயிற்று. வாசித்ததை எழுத்தாக்கும் போது மகிழ்ச்சி. அதற்காகத் தொடரும் அடுத்த ’சண்டை’க்கும் அதே மகிழ்ச்சியுடன் தயாராகிறேன். ஆனாலும் இப்போது எதிர்க் கருத்துக்காரர்களின் தயவால்சண்டைகளும் இப்போது மிகவும் குறைந்து போய் விட்டன. இதுவரை  நல்ல ஓட்டம் தான். I enjoy it so much.

சில சமயங்களில் நேரம் கிடைக்கவில்லையே, அதைப் பற்றி .. இதைப் பற்றி எழுத வேண்டும். இன்னும் எழுதவில்லையே என்று ஒரு நினைப்பு வரும்போது என்னைப் பார்த்து நானே சிரித்துக் கொள்கிறேன் - ஓய்வு வாழ்க்கை அம்புட்டு பிஸியா போகுதாம் !!!

(பெருமாள் முருகன் பற்றி எழுத வேண்டுமென மாதக்கணக்கில் நினைத்துக் கொண்டே ..... இருக்கிறேன். எழுதணும்...)

பதிவுலகில் நிறைய வித்தியாசங்கள். வளர்ச்சி என்றாலே வித்தியாசம் தானே. ‘பழைய காலத்திற்கு’ rewind செய்ய  நினைத்தால் முன்பெழுதிய பதிவுகளுக்குப் போய் அங்குள்ள பின்னூட்டங்களை வாசிக்கும் ஒரு பழக்கம் வந்து விட்டது. ‘அந்தக் காலத்தில்’ பின்னூட்டங்கள் அதிகம் என்பதோடல்லாமல் they remain personal and close.

இப்போது பின்னூட்டங்கள் அதிகமாக வருவதில்லை; வரும் பின்னூட்டங்கள் பழைய காலத்துப் பின்னூட்டங்கள் மாதிரி இருப்பதில்லை. அப்போதெல்லாம் பின்னூட்டங்கள் எல்லாம் ஒவ்வொருவரின் கையெழுத்து மாதிரி ஒரு personal touch உடன் வரும். தோழமை அதிகமாக இருந்தது.

 ( இந்த பழைய கேசுகள் எப்போதுமே இப்படித்தான்; நேற்று நல்லா இருந்தது என்று தொடர்ந்து  ‘பினாத்துங்கள்’. Yesterdays were always sweeter for us. பாவம் நாங்க ... எங்கள உட்ருங்க ....)


 சரி ... அது அந்தக் காலம்!



 *

11 comments:

Packirisamy N said...

வாழ்த்துக்கள்!
பத்து வருடங்கள் ஒரு சாதனைதான்!

Unknown said...

பத்து வருஷமா? வாழ்த்துக்கள் ஐயா...இந்த ஜூலை வந்தால் தான் நமக்கு முதல் பிறந்த நாள்...

தி.தமிழ் இளங்கோ said...

பதிவு உலகில் பத்து வருடங்கள். ஒரு சாதனைதான் அய்யா! வாழ்த்துக்கள். எழுதுங்கள். சலிப்பு தட்டும் வரை எழுதுங்கள்.
த.ம.1

அன்புடன் நீலன் said...

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் ஐயா !

தருமி said...

// சலிப்பு தட்டும் வரை எழுதுங்கள்//

சலிப்பு யாருக்கு ?

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் ஐயா!

G.M Balasubramaniam said...

எழுதத் துவங்கி ஐந்து ஆண்டுகள்முடியவில்லை. நிறையவே சலம்புகிறேனோ என்று தோன்றுகிறது. பத்து ஆண்டுகள் சாதனைதான் ஐயா.கருத்தோடு எழுதினால் கொள்வார் இல்லை. மொக்கையாக எழுதினால் பின்னூட்டங்கள் இடுவது எளிது. உங்கள் பழைய பதிவுகள் சில படித்துள்ளேன்மத சம்பந்தப்பட்ட கருத்துக்களும் எதிர்கருத்துக்களுமாக இருந்ததாக நினைவு. நான் நேர் எதிர். ஆரம்பத்தில் எழுதியவை சிலவற்றைப் படிக்கும் போது எழுதியது நான் தானா எனும் சந்தேகம் வருகிறது. இப்போதெல்லாம் எழுத எண்ணங்களே வருவதில்லை. வாழ்த்துக்கள் நண்பரே.

தருமி said...

//ஆரம்பத்தில் எழுதியவை சிலவற்றைப் படிக்கும் போது எழுதியது நான் தானா எனும் சந்தேகம் வருகிறது. //

feathers of the same flock ..!

திண்டுக்கல் தனபாலன் said...

வாழத்துக்கள்... வணக்கங்கள்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

முதலில் எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்களது பதிவுகளைப் படித்துவருகிறேன். பல அரிய செய்திகளைத் தெரிந்தும் கொண்டுள்ளேன். தொடரட்டும் உங்களது எழுத்துப்பணி.

வெங்கட் நாகராஜ் said...

பத்து வருடங்கள்.....

வாழ்த்துகள் ஐயா.

Post a Comment