Friday, November 21, 2008

281. எங்க காலத்தில எல்லாம்… 2

*

*

"பண்புடன்" வலையிதழுக்காக எழுதிப் பதிப்பித்த இப்பதிவை மீண்டும் உங்கள் பார்வைக்கு ...

*

ரயில் பயணங்களில்



இன்றைக்கும் கூட மதுரை புகைவண்டி நிலையத்தைத் தாண்டி ஓவர் ப்ரிட்ஜ் வழியாகச் செல்லும்போது புகைவண்டிகள் வரும்போதும் கிளம்பும்போதும் அடிக்கும் அந்த மணிச்சத்தம் கேட்கும்போதெல்லாம் அடுத்த ரயில் பயணம் எப்போது என்ற ஆசை கிளர்ந்தெழுகின்றது. அது என்னவோ இன்னும் ரயில் பயணம் என்றால் ரொம்ப பிடிக்குது. விமானத்தில் போகும்போது கூட (அப்புறம் எப்படி நாங்க அமெரிக்காவுக்கெல்லாம் விமானத்தில் போயிருக்கோம் அப்டின்றதைச் சொல்றது ..) விமானத்தில் ஏறி ஓரிரு மணி நேரத்தில் செமையா போர் அடிக்க ஆரம்பிச்சிருது. அது என்ன, ஒரு ஆட்டம், குலுக்கல் இல்லாமல் நின்றுகொண்டு இருப்பதுபோலவே மணிக்கணக்கில் இருந்தால் போரடிக்காதா என்ன? ஆனா ரயிலில் பாருங்கள் .. ஓடும் சத்தம் ஒரு தொடர்ந்த B.G.M. போல் நம் கூடவே எப்போவும் வர, எப்பவும் மனுஷங்களுக்கு மத்தியில் இருக்கிறோம் அப்டின்ற நினைப்போடுதான் இருக்கணும் – ஒட்டுக் குடித்தனம் மாதிரி. ஊரும் உலகமும் நம் கூடவே பயணம் வரும். பகலோ இரவோ எந்தப் பயணமாயிருந்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு உண்டு. விமானப் பயணத்தில் everybody is an island அப்டின்ற உணர்வுதான் இருந்தது.


இப்போதே ரயில் பயணத்தில் இவ்வளவு ஆசையென்றால் சின்ன வயதில் கேட்க வேண்டுமா என்ன. வருடத்திற்கு இரண்டுதடவை – கிறிஸ்துமஸ் லீவு, அடுத்து கோடை விடுமுறை என இருமுறை – நெல்லை பக்கத்திலுள்ள சொந்த கிராமத்திற்குக் கிளம்பிப் போவதே ஒரு திருவிழா மாதிரிதான். அப்போதெல்லாம் இரவுப் பயணத்தைவிட பகல் பயணமே வாய்த்தது.


காலம்தான் எவ்வளவு மாறிப் போச்சு! இப்போவெல்லாம் முன்னமே சீட், பெர்த் எல்லாம் வாங்கிக்கிட்டு செளகரியமா போய் பழகியாச்சு. அப்போவெல்லாம் அதெல்லாம் ஏது? கூட்டமா இருந்தா சிகப்பு சட்டை போட்ட ஆளுககிட்ட கொஞ்சம் காசு கொடுத்து 'பெர்த்' வாங்கிடலாம்; அதாவது, மேலே சாமான்கள் வைக்கிற இடத்தில துண்டு போட்டு காசு வாங்கிட்டு நமக்குக் கொடுப்பாங்க. அப்போ ரயில்களில் மூன்று வகுப்புகள் இருக்கும். முதல் இரண்டைப் பத்தி எதுவும் தெரியாது; நினைத்தும் பார்த்ததில்லை. ரயில் பெட்டிகளிலும் பல மாறுதல்கள். ரொம்ப சின்னப் பையனாக இருந்த போது சீட்டுகள் இப்போ மாதிரி குறுக்காக இல்லாமல் நீளவாட்டில் இருந்தது நினைவிலிருக்கிறது. ஆனால் ரொம்ப முன்னால்தான். அதுக்குப் பிறகு இப்போதுள்ளது மாதிரி ஆகிவிட்டது. ஆனால் ஜன்னல்களுக்குக் கம்பிகள் ஏதும் இருக்காது. துண்டைப் போட்டெல்லாம் இடம் பிடிக்க முடியாது. ஆட்களே ஜன்னல் வழியே புகுந்து இடம் போடணும். அதுவே ஒரு ஹீரோ வேலைதான். அந்த ஜன்னல்களை மூடும் கதவெல்லாம் இப்போவெல்லாம் மேலிருந்து கீழே வருவதாகத்தானே இருக்கின்றன. அப்போவெல்லாம் கீழிருந்து மேலே வரும்படி இருக்கும். அதை சரியாகப் பொறுத்த தனித் திறமையே வேணும்.


ரயில் வண்டிகளின் மின்விசிறிகளில் ஏதும் மாற்றமில்லையோவென இப்போதும் ஒவ்வொரு ரயில் பயணத்திலும் தோன்றுகிறது. ஏனெனில் பார்ப்பதற்கு அப்படியே இருப்பது மட்டுமில்லாமல், அந்த விசிறிகள் எப்போதுமே அபார வேகத்தில்தான் சுற்றுகின்றன. அன்றைக்கும் அப்படித்தான். ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம். அப்போதெல்லாம் விசிறிகள் நம் இஷ்டத்துக்குத் திருப்பி வைத்துக் கொள்ளலாம். அதில் தான் பெரிய ட்ராமா, சண்டை எல்லாம் நடக்கும். அவரவர் இஷ்டத்துக்கு, வசதிக்கு ஏற்றாற்போல் அதை திசை திருப்புவார்கள். பல சமயங்களில் might is always right என்ற தியரி வேலை செய்யும். இல்லையென்றால் வெள்ளைச் சட்டை, ஓரிரு ஆங்கில வார்த்தைகளால் தங்களை மேல்மட்ட ஆட்களாகக் காண்பித்துக் கொள்பவர்களின் இஷ்டத்துக்கு அது வளையும். ஆனால் ராத்திரி எப்படியும் ஒரு சண்டை வரும். சாமான்கள் வைக்குமிடத்தில் எப்படியும் ஆட்கள்தான் இருப்பார்கள். ஒருவர் தூங்கியதும் எதிர்ப் பக்கத்தில் இருப்பவர் மெல்ல தன் பக்கம் மின்விசிறியை இழுத்துக் கொள்ள, இவர் தூங்கி அவர் முழித்ததும் மெல்ல அவர் தன்வழிக்கு இழுக்க … கதை தொடரும்.


இரண்டு மூன்று மணி நேரப் பயணம் முடிந்து ரயிலில் இறங்குபவர்களைப் பார்த்தாலே பாவமாயிருக்கும். நிச்சயமா சட்டையெல்லாம் கரி படர்ந்து, கண்ணெல்லாம் ரத்தச் சிவப்பாகி, தலைமுடியெல்லாம் கலைந்து ஒரு பெரிய போராட்டம் முடிந்து வருபவர்கள் போல்தான் எவரும் தோற்றம் தருவார்கள். ஏனென்றால், எல்லா ரயில்களும் கரிவண்டிகள்தான். அப்போ வச்ச பேருதான் "புகை வண்டிகள்" ! எவ்வளவு பொருத்தம் ! வண்டியில் எங்கு உட்கார்ந்து எழுந்தாலும் கார்மேக வண்ணனாகத்தான் எல்லோரும் மாறணும். எங்கும் எதிலும் கரிதான். ஜன்னல் ஓரத்தில் இடம் பிடித்து உட்கார்ந்தவர்களுக்கு இன்னொரு போனஸ்; கண்கள் எல்லாம் கரிவிழுந்து செக்கச் சிவப்பாய் ஆகிவிடும். வாழ்க்கையே போராட்டம் என்பது போல் ஒவ்வொரு ரயில் பயணமும் ஒரு போராட்டமாக அமைந்துவிடும்.


ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் எப்படியும் அங்குமிங்குமாய் குழந்தைகளுக்குத் தொட்டில்கள் தொங்கும். எங்கும் எந்த இடத்திலும் மக்கள் உட்காரத் தயங்குவதில்லை; அது பாத்ரூம் பக்கமாக இருந்தாலென்ன, நடைபாதையாயிருந்தாலென்ன. சமத்துவம் நிலவும் இன்னொரு இடமாக ரயில் பெட்டிகள் இருக்கும். இப்பவும் பொது ரயில் பெட்டிகள் அப்படித்தான் இருக்குமென நினைக்கிறேன். அதுபோல் பொது ரயில் பெட்டிகளில் பயணித்து நாளாகிவிட்டது.


ஏறக்குறைய எல்லா ரயில்களும் எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று போனதாக நினைவு. இரவுப் பயணங்களில் மிகவும் பிடித்ததும் இன்னும் நினைவில் இருப்பதும் ஒரு விஷயம்: பல ரயில்வே ஸ்டேஷன்களில் மின்சாரம் இல்லாத காலங்களில், ஒவ்வொரு ரயில் வரும்போதும் ஒருவர் அந்த ஸ்டேஷன் பெயரைச் சத்தமாக ஒரு ராகத்தோடு நீட்டி ஒலிப்பதும், ஒரு தீப்பந்தத்தோடு கையில் ஒரு வளையத்தோடு ஒருவர் நிற்பதுவும், அதை ரயில் ஓட்டுனரில் ஒருவர் லாகவமாக அந்த வளையத்தில் கையைக் கொடுத்து அதனைக் கைப்பற்றுவதும், அதற்கு சற்று முன்பு இன்னொரு வளையத்தைத் தூக்கி எறிவதும் … இன்னும் இருள்படிந்த ஓவியமாக மனதில் நிற்கிறது.


ஏறக்குறைய கொஞ்சம் வசதியான மக்கள் ரயில் பயணம் செய்யும்போது கட்டாயம் கையோடு கொண்டுவருவது ஒரு பித்தளை கூஜா. ஒவ்வொரு குடும்பத்தலைவருக்கும் இந்தப் பயணங்களில் கட்டாயமான ஒரு வேலை எந்த நிறுத்தத்தில் நின்றாலும் இறங்கி ஓடிப் போய் அங்கிருக்கும் குழாயில் தண்ணீர் பிடித்து வருவதுதான். இப்போவெல்லாம் நீங்கள் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்திருக்க, எதிரில் இருக்கும் எனக்கு இல்லையென்றால் நான் உங்களிடம் தண்ணீர் ஓசி கேட்க முடியுமா? அப்போவெல்லாம் வேண்டுமாவென்று கேட்டுகொடுத்தது நினைவில் இருக்கிறது, கூஜாவைத் திறந்து அதனுள்ளேயே இருக்கும் சிறு தம்ளரில் மக்கள் தங்கள் பரோபகாரத்தைக் காண்பிப்பார்கள்.


அந்தக் காலத்தில் ரயில் பயணத்திற்கென்று போனால் முதலில் ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் வைத்திருக்கும் கரும்பலகையைத்தான் பார்க்க வேண்டும். அதில்தான் ஒவ்வொரு ரயிலும் எத்தனை நிமிடங்கள் காலதாமதமாக வரும் என்பதை எழுதி வைத்திருப்பார்கள். அதுவும் எல்லாம் நிமிடக் கணக்குதான் – ரயில் எத்தனை மணி நேரம் தாமதமாக வந்தாலும்! ரயில்கள் தாமதமாக வருவதுதான் அப்போதைய நடைமுறை. சரியான நேரத்துக்கு ஒரு ரயிலும் வந்ததாகச் சரித்திரம் இருக்காது. அதை வைத்து ஒரு கதை – அனேகமாக எல்லோருக்கும் தெரிந்ததுதான் – உண்டு. ஆச்சரியமாய் ஒரு நாள் ஒரு ரயில் சரியான நேரத்துக்கு வர, எல்லோரும் வண்டி ஓட்டுனருக்கு மாலை போட்டார்களாம். அவரோ ரொம்பவே வெட்கப் பட்டு 'இந்த ரயில் நேற்று சரியாக இந்த நேரத்திற்கு வந்திருக்க வேண்டிய வண்டி' என்றாராம்.


மதுரையிலிருந்து ஊருக்குப் போக ரயிலில் போய் அதன்பிறகு பஸ், ஒத்தை மாட்டு வண்டி என்று கிராமத்துக்குப் பயணம் தொடரும். திரும்பி மதுரை போகும்போது ரயில் பயணத்திற்குப் பிறகு ஜட்கா பயணம். இதில் ஊருக்குப் போகும் பஸ் பயணம் ஒரு தனி ரகம்தான். ரொம்ப சின்ன வயசில் சில தடவைகள் ஸ்டீம் பஸ்களில் சென்ற அனுபவம் நினைவில் உண்டு. பஸ்ஸின் நுழை வாயிலுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய சிலிண்டர் இருக்கும். வெளிப்பக்கம் அதற்குக் காற்றடிக்க கையால் சுற்றக்கூடிய துருத்தி ஒன்று இருக்கும். பெரிய ஊர்களில் பஸ் நின்றவுடன் சின்ன பசங்க ஓடி வந்து அந்த துருத்தியைச் சுற்ற ஓடிவருவார்கள் - கிடைக்கும் சில்லரைக் காசுக்காக.


மதுரையில் இறங்கியதும் ஜட்கா வண்டிக்காகக் கட்டாயம் ஒரு பேரம் நடக்கும். எப்போதும் எனக்கு வண்டிக்காரர் பக்கத்தில் முன்னால்தான் இடம். ரொம்ப நாள் வரை ஒரு விஷயம் எனக்குப் புரிந்ததே இல்லை. ஒத்தை மாட்டு வண்டியானாலும் சரி, இரட்டை மாட்டு வண்டியானாலும் சரி, மாட்டின் மூக்கணாங்கயிறு வண்டிக்காரர் கையில் இருக்கும். அதை இழுத்து மாட்டை அல்லது மாடுகளை கன்ட்ரோல் பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன்.ஆனால் ஜட்கா வண்டிகளில் ஒரு கையில் வைத்திருக்கும் கயிற்றின் சிறு அசைவுகளை வைத்தே குதிரையைக் கன்ட்ரோல் செய்வது ரொம்ப நாட்களுக்குப் பிறகே புரிந்தது. அது புரிவதற்கு முன்பு எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருப்பது எப்படி குதிரை "தானாகவே" சரியான ரோட்டில் செல்கிறது என்பதுதான். ஒருவேளை குதிரைக்கு மதுரையில் எல்லா இடமும் தெரிந்திருக்குமோ? அதோடு நாம் பேரம் பேசும்போதே போகவேண்டிய இடத்தைத் தெரிந்து கொண்டு தானாகவே போகிறதோ என்று அதி புத்திசாலித்தனமாக நினைத்திருந்திருக்கிறேன். வெளியில் சொன்னால் வெட்கக் கேடுதான்!

சரி விடுங்க, யார்ட்ட உங்ககிட்ட மட்டும்தானே சொல்கிறேன்.



*

*

23 comments:

வல்லிசிம்ஹன் said...

மதுரை ரயிலடி மறக்க முடியாத இடம். ரயில் புகை,மேம்பாலம்,அந்த நாளுக்கு அது புதிது.
பெரியதாக இருக்கும்.

வெளியே வந்ததும் மொய்க்கும் மதுர மல்லி வாசம்.

இலவசக்கொத்தனார் said...

//நெல்லை பக்கத்திலுள்ள சொந்த கிராமத்திற்கு//

டீட்டெயில்ஸ் ப்ளீஸ்! :)

வல்லிசிம்ஹன் said...

ஏறக்குறைய எல்லா ரயில்களும் எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று போனதாக நினைவு. இரவுப் பயணங்களில் மிகவும் பிடித்ததும் இன்னும் நினைவில் இருப்பதும் ஒரு விஷயம்: பல ரயில்வே ஸ்டேஷன்களில் மின்சாரம் இல்லாத காலங்களில், ஒவ்வொரு ரயில் வரும்போதும் ஒருவர் அந்த ஸ்டேஷன் பெயரைச் சத்தமாக ஒரு ராகத்தோடு நீட்டி ஒலிப்பதும், ஒரு தீப்பந்தத்தோடு கையில் ஒரு வளையத்தோடு ஒருவர் நிற்பதுவும், அதை ரயில் ஓட்டுனரில் ஒருவர் லாகவமாக அந்த வளையத்தில் கையைக் கொடுத்து அதனைக் கைப்பற்றுவதும், அதற்கு சற்று முன்பு இன்னொரு வளையத்தைத் தூக்கி எறிவதும் … இன்னும் இருள்படிந்த ஓவியமாக மனதில் நிற்கிறது.//


இதுவும் தான் .இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவே நான் தூக்கத்தை தள்ளிவைப்பேன். அருமையான தாலாட்டோடு ஒரே சீராக ஓடும் ரயிலின் தாளம் தூங்கும்படி வற்புறுத்தும். கண்ணில் கரி விழுந்தாலும் ஜன்னலோரக் காற்றைச் சுவாசிக்கக் காத்திருப்பேன்.
வெகு அருமையாகச் சொன்னிர்கள்.
கொத்ஸ் கேட்ட ஊரு என்னவோ. எனக்கும் சொல்லுங்கள்:)

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ

இப்ப எதுக்கு அனாவசியமா 'ரயில் கூஜா'வை ஞாபகப்படுத்துறீங்க???

போங்க தருமி.......

ஸ்டேஷனில் இருக்கும் ஓவர்ப்ரிட்ஜில் நின்னு ரயிலை வேடிக்கப் பார்க்கறது என் முக்கிய பொழுதுபோக்கு. புகைபோக்கிக்குள்ளே என்ன இருக்கும் எப்படி புகை வருதுன்னு தெரிஞ்சுக்கும் ஆர்வம்.

வீட்டுக்கு வரும்போது யாரோ வந்துருக்கான்னு நினைக்கும் அளவு அடையாளம் தொலைத்திருப்பேன், எங்க காலத்துலே:-)

மருத புல்லட் பாண்டி said...

iyya dharumi pathavia kappatha pathiva pottuttu irrukar sinthupairavi kathanayakan mathiri

தருமி said...

வல்லிசிம்ஹன்,

போன தலைமுறை ரயில் நிலையங்களை மனசுக்குள் கொண்டுவந்து பார்த்தால் ... அவை எளிமையில் ஒரு தனி அழகுதான்.

தருமி said...

தெக்ஸ்,

நெல்லை -தென்காசி, குற்றாலம் சாலையின் நடு சென்டர்! - ஆலங்குளம். அதிலிருந்து இரண்டு கிமீ நல்லூர்... அதையடுத்துள்ள - காசியாபுரம். நாங்கல்லாம் காசிமாநகர் என்று சொல்லிக் கொள்வோம்!

என்ன கல்லிடைக்குறிச்சியிலிருந்து ஒரு 40 கிமீ இருக்குமா?

தருமி said...

வல்லி,

/ஒரே சீராக ஓடும் ரயிலின் தாளம் ...//

இப்போவெல்லாம் ம்யூஜிக் அந்த அளவு இல்லையோ?

ஊரு பேரு சொல்லிட்டோம்ல..

தருமி said...

துளசி,

//யாரோ வந்துருக்கான்னு நினைக்கும் அளவு அடையாளம் தொலைத்திருப்பேன்//

அம்புட்டு ஆட்டமா? தாங்காதம்மா தாங்காது !

தருமி said...

துளசி,

//யாரோ வந்துருக்கான்னு நினைக்கும் அளவு அடையாளம் தொலைத்திருப்பேன்//

அம்புட்டு ஆட்டமா? தாங்காதம்மா தாங்காது !

தருமி said...

புல்லட்டு,
எப்ப பாரு அரைகுறையா ஏதாவது சொல்லிட்டு போயிர்ரது.
இப்போ இங்க என்ன கச்சேரியா நடக்குது?

கண்மணி/kanmani said...

இன்னா சார் எல்லாம் சொல்லிட்டு ரெண்டு விஷயம் சொல்லாம விட்டுட்டீங்களே
1.இன்னமும் டிரெய்னில் கழிவறையில் தண்ணி புடிக்க கஷ்டம்.அப்படியே அலுமினிய குவளை இருந்தாலும் சங்கி போட்டு 'சேது' போல கட்டியிருப்பாங்க.
சில நேரம் ஏ.சி கோச் கழிப்பறையை விட ரிசர்வேஷன் தேவலாம்னு இருக்கும்.

அடுத்து 'இரயில் ஸ்நேகம்' அந்த சில/பல மணி நேரத்துப் பயணங்களில் ஆரம்பத்தில் தயக்கம் பின்னர் விசாரணை எனத் தொடங்கி இறங்கும் போது ஏதோ பல நாள் பழகியவர்களைப் பிரிவது போன்ற வருத்தம் வருமே

3.கொசுறு செய்தி:எங்க காலத்தில் ;) எனக்குச் சொல்லித் தரப்பட்டது.
ரயில் என்பது rails தண்டவாளங்கள்.
டிரெய்ன் [புகை வண்டிதான்] சரியான பெயராம்.

4.இன்னொரு கொசுறு செய்தி.இந்த விமான பயணம் ஸ்டே இன் ஐலேண்ட் மட்டுமல்ல கட்டிப் போடப்பட்ட தண்டனை.[நாமளும் சிங்கப்பூர் போனதை சொல்லனுமில்ல.விரைவில் பதிவு வரும்]

தருமி said...

கண்மணி,
//கொசுறு செய்தி:எங்க காலத்தில் எனக்குச் சொல்லித் தரப்பட்டது.//

ஆமாங்க ஹி .. ஹி .. எங்களுக்கும் அப்படித்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் ரயில் பயணம்னாதான நல்லா இருக்கு .. இல்லீங்களா?

//...[புகை வண்டிதான்] சரியான பெயராம்.//

இல்லியே இப்போவெல்லாம் ஏதுங்க புகை. அதனால, தொடர் வண்டி அப்டின்றாங்கன்னு நினைக்கிறேன்.

சிங்கப்பூர் கதை எப்போ? சீக்கிரம் ஆகட்டுங்க.

கபீஷ் said...

ரயில், யானை இந்த ரெண்டும் பாக்க எப்பவும் அலுக்காதுன்னு எங்கேயோ படிச்சேன்.

கபீஷ் said...

//சமத்துவம் நிலவும் இன்னொரு இடமாக ரயில் பெட்டிகள் இருக்கும். //

ஹா ஹா

Unknown said...

அசத்துறீங்க.... ஸ்வீட் மெம்ரீஸ்...

தருமி said...

அப்டியா விஜய்?
நன்றி

G.Ragavan said...

நல்ல கொசுவர்த்திப் பதிவு. :D

நீங்க சொல்ற நீராவி பஸ் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சி பாத்த மொத பஸ்சு கட்டபொம்மன் தான்.

ஆனா கரி எஞ்சின் தெரியும். தூத்துடி சேவியர்ஸ் பள்ளிக்கூடம் பக்கத்துலதான் புகைவண்டி நிலையம். ஆகையால அது தெனமும் பாக்குற சமாச்சாரம். டிபன் பாக்சோட அங்கதான் போய்ச் சாப்புடுவோம்னு வெச்சுக்கோங்களேன். நெனைச்சாலே ஒருவித சுகம் வருதுங்க. உலகத்துல இத்தன ஊரு போயிருக்கேன். பாத்திருக்கேன். ஆனா தூத்துடின்னா ஒரு ஜில்ல்ல்ல்ல்ல்ல்... இப்ப அங்க வேண்டியவங்க யாருமில்லைங்குறது கூடுதல் தகவல்.

தூத்துடில இருந்து சென்னைக்குப் போகனும்னா... இது நானே ரொம்ப ரொம்பச் சின்னப் பையனா இருந்தப்ப உள்ளது... திருநவேலீல இருந்து ஒரு ரயில் வரும். தூத்துடில இருந்து ஒரு ரயில் வரும். அது கரி எஞ்சின். மணியாச்சில வந்து ரெண்டையும் சேத்து டீசல் எஞ்சின் மாட்டுவாங்க. அதுக்கப்புறம் விழுப்புரத்துல வந்து டீசலக் கழட்டீட்டு எலக்ட்ரிக் எஞ்சின் மாட்டுவாங்க. மூனுலயும் பயணத்தோட வித்யாசம் புரியும்...வேகம்... அனுபவம்னு.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

புதுக்கிராமத்துல வக்கீல் அழகிரிசாமி வீட்டுல இருந்து.. எங்க மாமாதான். சமீபத்துல இறைவனடி சேந்துட்டாரு. வக்கீல் சங்கரப்ப ரெட்டியார் வீட்டுக்கு ஏதாச்சும் பண்டமாற்று நடக்கும். நாந்தான் கொண்டு போய்க் குடுப்பேன். வாங்கீட்டு வருவேன்.

வீட்டுல இருந்து நாலு எட்டு தள்ளியிருக்கும் பிள்ளையார் கோயில் வரைக்கும் மெதுவாப் போவேன். குப்குப்னு சத்தமெல்லாம் வரும். தூத்துக்குடி-மணியாச்சி கரி எஞ்சின். பக்கதுலதான.

அடுத்து பிள்ளையார் கோயில்ல இருந்து எண்ணக்கடை வரைக்கும். இது அதிகப்படி தூரம். மணியாச்சி-விழுப்புரம் டீசல் எஞ்சின். இங்க வேகம் கூடும். கிடுகிடுன்னு ஓடுவேன்.

எண்ணக்கடையில இருந்து வக்கீல் சங்கரப்ப ரெட்டியார் வீட்டு வரைக்கும் கண்ணு மண்ணு தெரியாத ஓட்டம். விழுப்புரம்-சென்னை எலக்ட்ரிக் எஞ்சின். இப்பிடியெல்லாம் அட்டகாசம் செஞ்சிருக்கேன்.

தருமி said...

ஜிரா,
செமையா கொசுவத்தி சுத்திட்டீங்க. நல்லா இருக்கு. அதிலயும் ரொம்ப பிடிச்சது: தூத்துடி .. திருநவேலீ .. சங்கரப்ப ரெட்டியார் வீட்டு வரைக்கும் போறது ..

நன்றி.

தூத்துடில இப்ப யாரும் இல்லையா?
:-(

சகாதேவன் said...

"ரொம்ப சின்ன வயசில் சில தடவைகள் ஸ்டீம் பஸ்களில் சென்ற அனுபவம் நினைவில் உண்டு. பஸ்ஸின் நுழை வாயிலுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய சிலிண்டர் இருக்கும்".

லேட் 40களில் பெட்ரோல் தட்டுப்பாட்டால் ரேஷன் முறையில்தான் கிடைக்கும். அப்போது டிவிஎஸ்ஸில் காஸ் ப்ளான்ட் தயாரித்தார்கள். என் ஜின் அதே செவர்லெ பெட்ரொல் என் ஜின் தான். நீங்கள் சொன்னமாதிரி சிலிண்டர், கரியை எரிக்க ப்ளோயர்(துருத்தி) எல்லாம் உண்டு. கரி எரிந்து உண்டாகும் வாயு, குழாய் வழியாக கார்புரெட்டரை சென்றடையும். பிஸ்டனால் உறிஞ்சி கம்ப்ரெஸ் ஆகி பெட்ரோல் என் ஜின் போலவே இயங்கும். ஸ்டீம் கிடையாது.
எங்கள் பஸ்ஸிலும் இவை அந்நாளில் உண்டு.

சகாதேவன்

தருமி said...

மிக்க நன்னி, கபீஷ்

தருமி said...

மிக்க நன்றி, விஜய்

தருமி said...

சகாதேவன்,
//எங்கள் பஸ்ஸிலும் இவை அந்நாளில் உண்டு. //

சொல்றதுக்கு, கொசுவத்தி சுருளுக்கு நிறைய இடம் இருக்கு போல தெரியுது... கொஞ்சம் ஆரம்பியுங்களேன்.

Post a Comment