Friday, March 15, 2013

643. காணாமல் போன நண்பர்கள் - 15 - அவனுக்கென்னப்பா ...





*

அதீதம் இணையப் பத்திரிகையில் வந்த பதிவின் மீள் பதிவு: 



 அது என்னமோ .. வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்களே .. என் விஷயத்தில் ரொம்ப சரி. இளங்கலை முடிந்தது. அடுத்து என்னன்னு ஏதாவது யோசிக்கணுமே. ஒண்ணும் கிடையாது. புதுசா வந்த மருத்துவக் கல்லூரிக்கு ஒரு சின்ன முட்டு முட்டி கிடைக்காம போச்சா... அதற்கு முந்தியே நினைத்தது மாதிரி பிடிக்காமல் படித்து முடித்த விலங்கியலை முதுகலையில் தொடர்ந்தாச்சு. அடுத்து வேற ஏதாவது செய்யலாமா என்பது மாதிரியான சிந்தனைகள் சுத்தமாக இல்லை. ஏதோ யாரோ கோடு போட்டுக் கொடுத்து அந்தக் கோட்டிலேயே நடந்து போனது மாதிரி போயாச்சு. மாற்று முனைப்பு என்பதே இல்லாத வாழ்க்கை!

முதுகலை சேர்ந்தாச்சு. முதுகலைப் பேராசிரியர் எங்களுக்கு இளங்கலையில் வகுப்பெடுக்கவில்லை. அதனால் அவர் மட்டும் தெரியாது. இளங்கலையிலிருந்து நான் மட்டுமே முதுகலை வகுப்பில் சேர்ந்திருந்தேன். ஆக நான் மட்டும் ஆசிரியர்களுக்குத் தெரிந்த ஒரே மாணவன். எல்லோரும் இளங்கலையில் என்னிடம் அன்போடு இருந்த ஆசிரியர்களே. முதுகலைப் பேராசிரியரிடம் இரண்டு மூன்று முறை மாட்டிக் கொண்டேன். படிக்கட்டுக்கு கீழே முதுகலை மாணவர்கள் தம்மடிக்கிற இடம். அதில் ஒரு முறை வசதியாக மாட்டிக் கொண்டேன். வகுப்பு மாணவிகளிடம் சண்டை போட்டு, அவர்கள் இல்லாத நேரம் பார்த்து, அவர்கள் உட்கார்கிற பெஞ்சு மேசைகளில் என் அம்பாசிடர் ஷூவை நன்றாக அழுக்காக்கி அவர்கள் உட்காரும் மேசை மேல் தடம் பதிய நடந்து கொண்டிருக்கும் போது தானா அவர் எங்கள் வகுப்பைக் கடக்க வேண்டும். இப்படியாக அவரிடம் மாட்டிக் கெட்ட பெயர் வாங்கி, அவரும் எல்லோரிடமும் என்னைப் பற்றி புகார் கூறியிருந்தார். இரண்டாம் ஆண்டுதான் அவர் எங்களுக்கு வகுப்பெடுக்க வருவார். அதற்குள் முதலாண்டுத் தேர்வின் மதிப்பெண்களை வைத்து என்னிடம் பயங்கர பிரியமாகி விட்டார். அதன் பின் அவரது ஏகோபித்த செல்ல மாணவன் ஆனேன்.

We, the seniors with our Juniors - 1965-66


இது ஆசிரியர்கள் பாகம். எங்கள் மாணவர் பாகம் சொல்லணும்னு தான் ஆரம்பிச்சு எங்கேயோ போய்ட்டேன். எங்கள் வகுப்பில் 15 மாணவர்கள். எட்டு பசங்க .. ஏழு பொண்ணுங்க. எட்டு பசங்கன்னு சொல்லக்கூடாது. ஏன்னா எங்க வகுப்பில் ஒரு அண்ணன், அவருக்கு கல்யாணம் ஆகி பையனும் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்திருந்தான். அவரும் சில ஆண்டுகள் வேலை பார்த்து இங்கே மீண்டும் படிக்க வந்திருந்தார். எட்டு பசங்களில் நாலு நாலு பேரா கொஞ்ச நாளிலேயே பிரிஞ்சிட்டோம். எல்லாரும் பேசிக்கொள்வோம். ஆனா அந்நியோன்யம் எங்க நாலு பேரு .. அவங்க நாலு பேரு என்றானது. எஙக குரூப்ல ஒருத்தன் நாகர்கோவில்; இன்னொருவன் நாகர்கோவில் பக்கமிருந்து வந்த மலையாளி. ஆனாலும் தமிழ் பேசுவான். இந்த ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சா பொண்ணுக எங்களைப் பாவமா பார்ப்பாங்க. ஏன்னா அவங்க ரெண்டு பேரும் பேசுற தமிழ் இந்த மக்களுக்குக் கொஞ்சம் கூட புரியாது. நாளான பிறகு கொஞ்சம் மாறியது.’சினிமாய்க்கி போயி சாடி, சவட்டி டிக்கெட் எடுத்தோம்’னு நாகர்கோவில்கார கண்ணன் பேசினது அவங்களுக்குப் புரிய ரொம்ப நாளாச்சு.இவனும், நானும் முதலிலிருந்தே ஒட்டிக்கிட்டோம். இந்த நண்பன் காணாமல் போகவில்லை. படித்து முடித்த பிறகு அவ்வப்போது என்று சில முறை இவனைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அடுத்த நண்பனின் நட்பு முதுகலையோடு நின்று போனது. படித்த பின் இவனைப் பார்க்கவே இல்லை. அவன் நம்ம மலையாளிப் பயல் - மணிகொண்டான் தம்பி. Manikondan Thampi என்றுதான் எழுதுவான்.


பொண்ணுகளோடு படிக்கிறது நிறைய பேருக்கு இதான் முதல் தடவை. அதுனால கொஞ்ச நாள் பலருக்கும் ஒரே ஜிவ்வு! அதன் பின் அவர்களோடு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரே பிரச்சனைகள். அப்போ தம்பிக்கு - முதலிலிருந்தே co-ed படிச்சவனாம் - எங்களைப் பார்த்தால் ஒரே வேடிக்கையாக இருக்கும். அவன் தான் பெண்களோடு சாதாரணமாகப் பழகணும்னு ட்யூஷன் எடுத்தான். பெண்களுக்கும் சொல்லிக் கொடுத்தான். அவன் முதலில் பெண்களோடு சாதாரணமாகப் பேசுவதே எங்களில் பலருக்கு பயமா, ஆச்சரியமா இருக்கும். தல எப்பவுமே ஒய்ட் & ஒய்ட் தான்.




 தம்பி ஒழுங்காக மலையாள மனோரமா வாராந்தரி வாங்கிடுவான். ஒரு நாள் ஒரு மனோரமாவையும், குமுதத்தையும் எடுத்து வைத்தான். அட்டை டூ அட்டை விமர்சனம் செய்தான். வாராந்தரியில் உள்ளூர், வெளியூர் அரசியல், அறிவியல் அது இதுன்னு இருந்தது. நம்ம ஊர் நூலில் கொஞ்சூண்டு லோக்கல் அரசியல், அடுத்து அனைத்தும் சினிமா என்றிருந்தது. ’ஏண்டா உங்க ஊர் பத்திரிகைகள் இவ்வளவு கேவலமா இருக்கு? எங்க ஊர் இதழில் எம்புட்டு விஷயம் இருக்கு?’ அப்டின்னான். அன்றும் அந்தக் கேள்விக்குப் பதில் இல்லை; இன்றும் இல்லை.




வகுப்பில் நான், இவன், கண்ணன், வரதன் நால்வரும் ஒரு செட். ஆனாலும் வரதன் எங்களுக்கு அண்ணனாகி கொஞ்சம் விலகியிருந்தார்.மீதி நாங்க மூணு பேரும் ஒண்ணா சுத்துவோம்.
படிப்பிலும் நல்ல பெயர் வாங்கினோம்.



ஒரு நாள் நானும் தம்பியும் கல்லூரிக்கு நடந்து வந்து கொண்டிருந்தோம். அரசமரத்து பிள்ளையார் கோவில் இருக்குமே அதுக்குப் பக்கத்தில் ஒரு புத்தம் புது அம்பாசிடர் கார். வெள்ளை வெளேர்னு பளிச்சின்னு ரோட்ல நின்னது.

‘புது கார்’டா’ என்றேன்.

‘நல்லா இருக்கு’ அப்டின்னான்.

’இது மாதிரி ஒரு கார் நம்ம லைப்ல வாங்க முடியுமா’டா?” என்று கேட்டேன். கேட்ட என் குரலிலேயே என்னால அது முடியாது அப்டின்ற அர்த்தம் நிறைய இருந்தது. ஏன்னா எனக்கு சுத்தமா அந்த நம்பிக்கையே இல்லை. ஆனால் தம்பியிடமிருந்து ரொம்ப நம்பிக்கையான, அதைவிட ஒரு matter of fact தொனியில்,

‘ஏண்டா .. இம்புட்டு படிச்சிட்டு இதுகூட வாங்காமலா போவோம்’ அப்டின்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டுப் போனான்.

இது என் மனசுக்குள்ள ரொம்ப வருஷம் ஒரு நிறைவேறா ஆசையாக அப்ப்டியே நின்னுது. நாம எல்லாம் கார் வாங்கிறதாவது என்ற நப்பாசைதான் மனதில் எப்படியோ ஓடிக்கொண்டிருந்தது.  ஒரு வழியாக அந்த ஆசை கனவாக மாறுவதற்குள் ஏறக்குறைய ஓய்வு பெரும் வயது நெருங்கியிருந்தது. ஆனால் இந்தப் பயல் நிச்சயமாக ரொம்ப சீக்கிரமே கட்டாயம் ஒரு கார் வாங்கியிருந்திருப்பான். அவன் குரலில் ஒலித்த நிச்சயமும் தன்னம்பிக்கையும் இன்றும் என் நினைவில் நன்கிருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து அவன் பெயரில் ஒரு பாடப்புத்தகம் வெளியாயிருந்தது. திருவனந்தபுரம் பல்கலையில் வேலை பார்த்திருந்திருப்பான் போலும் அவன் பெயரில் Marine Ecology என்று ஒரு நல்ல புத்தகம் வெளியாகி இருந்தது.




அவனுக்கென்னப்பா ... புத்தகம் எல்லாம் போட்டவன்.  எப்பவோ கார் வாங்கமலா இருந்திருப்பான்?



*


5 comments:

பால கணேஷ் said...

படிக்கிற வயசில பெரிய வாலா இருந்திருப்பீங்க போலருக்கே...! மலரும் நினைவுகள் என்னையும் ரசிக்க வைத்து இளமைப் பருவத்துக்கு கூட்டிச் சென்றது. குமுதம், விகடன் மாதிரி வெகுஜன வாரப் பத்திரிகைகள் இப்பவும் அதே நிலையிலதானே இருந்துட்டிருக்கு. இன்னும் சொல்லப் போனா... இப்ப சினிமா மேட்டர்களும், படங்களும்தான் தூக்கலா இருக்குது! வேதனை! வலைச்சரத்துல உங்க பெயரைப் பாத்தப்பவே விசிட் பண்ண நினைச்சேன். பட், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டேன். நன்றிங்க!

தருமி said...

லேட்டஸ்டிற்கு மிக்க நன்றி....

தருமி said...

லேட்டஸ்டிற்கு மிக்க நன்றி....

இறையில்லா இஸ்லாம் said...

அவனுக்கென்ப்பா கார் வாங்கிட்டான். கார் கனவுலகூட நமக்கு வரமாட்டேங்குது. அது சரி
##எல்லோரும் என்னிடம் நன்கிருந்த ஆசிரியர்களே.## என்றால் என்ன பொருள்?

தருமி said...

Iraiyilla Islam

திருத்தி விட்டேன். நன்றி.

Post a Comment