Sunday, November 17, 2019

1069. யூதர்களின் இயேசுவும், பவுலின் கிறிஸ்துவும் -- 2





***

ஏனைய பதிவுகள் ….




யூதர்களின் இயேசுவும், 
பவுலின் கிறிஸ்துவும்

எஸ்.  செண்பகப்பெருமாள்


எனக்கு கிறித்துவத்தில் பல கேள்விகள் உண்டு. அவைகளை கிறித்துவ நம்பிக்கையாளர்களிடம் கேட்டு, பதில் பெறாமல் போனதுண்டு;  பல சமயங்களில் தெளிவாக விவிலியத்தில் உள்ளதைக் கேள்விக்கு உட்படுத்தினால் அவர்களிடமிருந்து பதில் வருவதை விட கோபம் அதிகமாக வரும் என்பது என் அனுபவம். வேறு சில கேள்விகளுக்கான பதிலைத் தேடினேன். கிடைக்கவில்லை. ஆனால் இந்த நூல் பல கேள்விகளுக்கான பதில்களைத் தந்துள்ளன.

இந்த ஆசிரியர் - சண்முகப் பெருமாள் - ஓர் இந்து. ஓய்வு பெற்ற ஆசிரியர். கிறித்துவ பாதிரிமார்களிடம் இணைந்து, இறையியல் கல்லூரியில் பைபிள் குறித்த வகுப்புகளை எடுத்துள்ளார். அவரது நூல் கிழக்குப் பதிப்பகத்தால் 2018ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நூலுக்கு வாழ்த்துரை வழங்கியவர் Rev. Dr. ஜோயல் செல்லத்துரை - ஒரு பாதிரியார். (நான் என் ‘மதங்களும் சில விவாதங்களும்’ நூலுக்கு அதே போல் கிறித்துவ பாதிரியார்கள் சிலரை முயற்சித்தேன் ... தயங்கினார்கள் .. விட்டு விட்டேன்.)

சில கேள்விகள்:  
  • எப்போதிருந்து பரிசுத்த ஆவி கிறித்துவ மதத்தில் பரவ ஆரம்பித்தது என்று தேடினேன். 
  • விருத்த சேதனம் கட்டாயமாக்கப் பட்டுள்ளதாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கிறித்துவர்களிடம் அப்பழக்கம் இல்லை; ஏன்?
  • ஏசு திரும்பத் திரும்ப தான் இஸ்ரேயலர்களுக்காக மட்டும் வந்ததாக புதிய ஏற்பாட்டில் சொல்லி வந்தாலும் அவர் அனைவருக்குமான கடவுளாக எப்படி “ஆக்கப்பட்டார்” என்றும் அறிய ஆவல்.
  • பவுல் என்ற அடிகளார் கிறித்துவ மதத்தின் ‘தலைமைக் குரு’வாக ஆகியுள்ளார். அவர் கிறித்துவத்தின் அடித்தளத்தை ‘அவரது விருப்பத்திற்கேற்ப’ மாற்றியதாக வாசித்திருக்கிறேன். அதனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆசை.
இப்படி ஒரு பெரிய பட்டியல் என்னிடம் இருந்தது.  அதற்குப் பதில் தர வந்தது போல் இந்த நூல் கிடைத்தது. வாசித்து உங்களிடம் பகிர்வதற்கு முயல்கிறேன், அதற்கு  முன் இந்த நூலின் பின்பக்கத்தில் உள்ள குறிப்புகள் புத்தகத்தின் கருத்தடக்கத்தைத் தருவது போலிருப்பதால் அதை முழுமையாக இங்கே முதலில் தருகிறேன்:

பைபிளின்  பழைய ஏற்பாட்டு நூல்கள், யூதர்களின் மதத்தையும் கடவுளையும் நமக்கு விரிவாக அறிமுகம் செய்கின்றன. யூதர்களின் கடவுள் அவர்களுக்கு மட்டுமேயான கடவுள் என்று பைபிளில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. கி.மு. 586-ல் பாப்லோனிய அரசன் நெபுகத்நெசர் யூதர்களின் எருசலேம் ஆலயத்தைக் தாக்கி அழித்து, யூதர்களை அடிமைப்படுத்துகிறான். அன்று தொடங்கி யூதர்கள் மாறி மாறி, கிரேக்கர்கள், ஹாஸ்மோனியர்கள், ரோமானியர்கள் என்று யாரோ ஒருவரிடம் அடிமைகளாக இருந்து வந்தனர். மீண்டும் தங்களுக்கான தனி நாட்டைச் சுதந்திரமாக ஆள விரும்பிய அவர்கள், அரசியல் விடுதலையைத் தங்களுக்கு தரக்கூடிய ஒரு மெசியாவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்நிலையில் யூதக் குடும்பம் ஒன்றில் கி.மு.4-ல் இயேசு பிறக்கிறார். அவருடைய போதனைகள் யூதர்களை நோக்கி மட்டுமே இருக்கிறது. தன் சீடர்கள் அனைவரும் யூதர்கள் மத்தியில் மட்டுமே பிரச்சாரம் செய்ய வேண்டும். புறஜாதியரிடம் ஒரு போதும் செல்லக்கூடாது என்று இயேசு மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இயேசுதான் மெசியா என்று அவருடைய சீடர்கள் யூதர்களிடம் முன்னிறுத்துகின்றனர். ஆனால் ஒரு மெசியா என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பழைய ஏற்பாட்டில் சொல்லியுள்ளதோ அவற்றைச் செய்வதற்கு முன்னதாகவே இயேசு கொல்லப்படுகிறார்.

இயேசுவின் நேரடிச் சீடராக இருந்திராத பவுல் என்ற யூதர், இயேசுவைப் பின்பற்றுவோரைக் கடுமையாகத் துன்புறுத்துகிறார். பின்னர் மனம் மாறுகிறார். பவுல்தான் இயேசு என்ற ஒரு மெசியாவை, கிறிஸ்து எனப்படும் அனைவருக்கும் பொதுவான கடவுள் என்ற நிலைக்கு உயர்த்துகிறார். இயேசு கூறியதற்கு மாற்றாக, புற ஜாதியரிடம் இயேசு கிறிஸ்து என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு செல்கிறார். பவுலுக்கும் இயேசுவின் சீடர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இன்று பவுலின் கிறிஸ்துவமே உலகம் முழுவதும் பரவியுள்ளது

செண்பகப் பெருமாளின் இந்நூல் பைபிளின் பழைய, புதிய ஏற்பாட்டு வசனங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, யூத வரலாற்றையும் இயேசுவின் வாழ்க்கையையும் ஆராய்கிறது. அதன் மூலம் இன்றைய கிறிஸ்துவத்தின் பல கொள்கைகளையும் கேள்விக்கு உட்படுத்துகிறது.


*







5 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

தொடருங்கள். நல்வாழ்த்துக்கள்

தருமி said...

Premkumar Samuel இயேசுவை மேசியா என்று பவுல் தான் முதலில் கூறினார் என்பது தவறு.
மேசியா என்ற எபிரேய பதத்திற்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர் ராஜா என்று பொருள் படும்.
இயேசுவின் சீடர் பேதுரு நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து அதாவது மேசியா என்று பறை சாற்றினார்.
இயேசுவும் பிரதான ஆசாரியன் தம்மிடம் நீர் கிறித்துவா என்று வினவிய போது அதனை ஆமோதித்தார்.

தருமி said...

//இயேசுவை மேசியா என்று பவுல் தான் முதலில் கூறினார் என்பது தவறு.// ...//இயேசுவின் சீடர் பேதுரு நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து அதாவது மேசியா என்று பறை சாற்றினார்.// .... yes prem. ..see this: இயேசுதான் மெசியா என்று அவருடைய சீடர்கள் யூதர்களிடம் முன்னிறுத்துகின்றனர்.

தருமி said...

Premkumar Samuel இயேசுவை மேசியா என்று பவுல் தான் முதலில் கூறினார் என்பது தவறு.
மேசியா என்ற எபிரேய பதத்திற்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர் ராஜா என்று பொருள் படும்.
இயேசுவின் சீடர் பேதுரு நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து அதாவது மேசியா என்று பறை சாற்றினார்.
இயேசுவும் பிரதான ஆசாரியன் தம்மிடம் நீர் கிறித்துவா என்று வினவிய போது அதனை ஆமோதித்தார்.

தருமி said...

Cross D Soyza இருளில் இருக்கும் புறஜாதிகளுக்கு பிரகாசிக்கிற ஒளி என்று ஏசாயா தீர்க்கர் எழுதியுள்ளார்.
ஏசாயா 42:1
இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே. என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்.அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
லூக்கா 2:30
புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,
31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின
32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
இயேசு யூதருக்கு மட்டும் ஆண்டவர் இல்லை.

Post a Comment