Thursday, July 14, 2022

1172. என் வாசிப்பு ... ARTHUR HAILEY




*
 

கதைகள் எல்லாம் வாசித்து அரை நூற்றாண்டுகள் ஆகி விட்டன. கதைகள் எல்லாமே ஏறத்தாழ மறந்து போனது தான். ஆனால் ஒரு கதாசிரியர் எழுதிய கதையெல்லாம் மறந்து போனாலும், அவர் நாவலில் பொதிந்து வைத்திருந்த செய்திகள் அப்போதும் சரி இப்போதும் சரி பெரும் பிரமிப்பாகவே இருக்கும்.

ARTHUR HAILEY  இவரது கதைகள் வாசிக்கும் போது நல்ல கதையும் கிடைக்கும்; தொடர்பான பல செய்திகளும் வந்து சேரும். எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை வைத்து சொல்கிறேனே... AIRPORT என்றொரு நாவல். ஆங்கிலத்தில் படமாக வந்தது. தமிழிலும் வந்தது என்று நினைக்கின்றேன். சத்யராஜ் நடித்த படமோ... தெரியவில்லை. நான் தமிழ்ப்படம் பார்க்கவில்லை. ஆனால் இக்கதையை வைத்து எடுத்த படம் என்று வாசித்த நினைவு. AIRPORT-ல் ஒவ்வொரு நாள் நடக்கும் அத்தனையையும் நாம் புரிந்து கொள்ள முடியும். அங்குள்ள குளிப்பறைகளைச் சுத்தம் செய்யும் janitor என்பதில் ஆரம்பித்து, அந்த முழு விமான நிலையத்தின் உயர் அதிகாரி வரை செய்ய வேண்டிய வேலைகள், கடமைகள் பற்றியெல்லாம் நாமும் அத்தனையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு janitor வேலை செய்யாமலிருக்க என்னென்ன செய்வார் என்பதிலிருந்து ஒவ்வொரு விமானமும் இறங்கி ஏறிச்செல்லும் வரை உயரதிகாரிக்கு எத்தனை தலைவலி என்பதும் தெரியும். ஏதோ ஒரு புதிய வகை விமானம் மிக அதிகமாக சத்தத்தோடு ஏறும், இறங்கும். இதனால் விமானநிலையத்தின் அருகில் உள்ள வீடுகளில் உள்ள சன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விடும். அந்தப் பகுதி மக்கள் அதற்காக விமானநிலையத்திற்குள் வந்து கூட்டம் போட்டு எதிர்ப்பு காண்பிப்பார்கள்.நமக்கும் டெசிபல்,நம் காதுகளின் தன்மை, அதிக டெசிபல் சத்தம் கேட்பதால் நடக்கும் கேடுகள் பற்றியெல்லாம் விஞ்ஞானத்தோடு எழுதுவார். விமான நிலையத்திற்குள் நடக்கும் ஒவ்வொரு செயலைப் பற்றியும் தெரிந்து கொள்ளும்படி எழுதியிருப்பார். ஆனால் கதையின் வீரியம் சிறிதும் குறையாது.

AIRPORT, WHEELS, OVERLOAD, STRONG MEDICINE …. என்று ஒரு நீளப் பட்டியல். WHEELS கதை கார்கள் செய்யும் கம்பெனியில் நடப்பது. வெள்ளிக்கிழமையும்,, திங்கட் கிழமையும் வெளிவரும் கார்களை வாங்கக்கூடாது என்று சொல்லியிருப்பார். வெள்ளியன்று வார இறுதி நாள்.. வேளை செய்பவர்கள் ஊர் சுற்றுவதில் குறிக்கோளாக இருப்பார்கள். அன்று நன்கு வேலை செய்ய மாட்டார்கள். திங்கட்கிழமை ஹேங் ஓவர். அன்றும் ஒழுங்காக வேலை செய்ய மாட்டார்கள் என்று எழுதியிருப்பார். OVERLOAD மின்சாரக் குழுமம் ஒன்றின் கதை. ஓரிடத்தில் சில மணி நேரம் மின்சாரம் கொடுக்க முடியாத நிலையில் முன்னேற்பாடுகளாக அவர்கள் செய்யும் நேர்த்தியான வேலைகள். மின்சாரத்தின் உதவியோடு உயிரோடு இருக்கும் ஒருவருக்காக அவர்கள் செய்யும் முயற்சிகள் .. அட டா!  மனுசன் ஒரு தடவை உடல் நலமின்றி மருத்துவ மனையில் சில நாட்கள் இருந்திருக்கிறார். அதை வைத்தும் ஒரு கதை. STRONG MEDICINE … மருந்துக் கம்பெனிகள் மருந்து தயாரித்து அதை எப்படியெல்லாம் (!!!) விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள் என்று ஆதியோடு அந்தமாக ஒரு கதை.

அவரது கதைகள் பலவும் வாசித்தும் நினைவுக்கு வந்த சிலவற்றைச் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு கதை எழுதுவதற்கு முன்பு அத்தனை விவரங்களைத் தெரிந்து கொள்ள எடுக்கும் முயற்சி ஆச்சரியாக இருக்கும். ஒவ்வொரு கதை எழுத தனியாக ஒரு ஆராய்ச்சி செய்வார் போலும். ஒவ்வொரு கதையும் ஒரு Ph.D thesis !!

கதாசிரியர்களின் கதைகளை அந்தக் காலத்தில் வாசித்திருக்கிறேன். இன்று கூகுள் ஆண்டவர் தயவில் அவர்கள் முகத்தையும் இப்போது பார்க்க முடிகிறது.

 








*


1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை.
ARTHUR HAILEY ன் பல கதைகளைப் படித்திருக்கிறேன் ஐயா

Post a Comment