Friday, July 22, 2022

1175. என் வாசிப்பு ... தமிழும் ஆங்கிலமும்.




*

முந்திய என் வாசிப்பில்ஒரு தோழி பாலகுமாரனின் கதைகளும் ஆர்தர் கெய்லி போல் பல்வேறு விசயங்களை எழுதுவார் என்று சொல்லியிருந்தார். எனக்கு அப்படித் தோன்றவில்லை. மெர்க்குரிப் பூக்களிலும் இரும்புக் குதிரையிலும் யூனியன் விஷயங்களைத் தொட்டிருப்பார். உடையாரை விட்டு விடுவோம் – அரசியல் புனைவு. மற்ற கதைகளில் மனுஷன் மனதைத் தொடுவார்; மூளையை அல்ல. 

எங்கள் கல்லூரியில் கதை வாசிப்பாளர்கள் நிறைய பேர் இருந்தோம். ஆனால் ஒன்றை வாசிப்பவர் மற்றொன்றை வாசிப்பதில்லை ... அதாவது ஆங்கில நூல் வாசிப்பவர்கள் தமிழ்ப் பக்கம் ஒதுங்குவதில்லை ..vice versa . இரண்டையும் கலந்து கட்டி அடிப்பவர்கள் மிக மிகச் சிலரே. அந்தச் சிலரில் நானும் அடக்கம். வாசிக்கிற அந்த காலத்தில்  இந்த இருமொழிக் கதைகளில் உள்ள ஒரு முக்கிய  வேற்றுமையாக நானொன்றை நினைத்தேன். இந்தப் பக்கத்தில் எழுதுவதெல்லாம் என்னப் பொறுத்தவை மட்டுமே. அவைகள் என் வாசிப்பின் பிரதிபலிப்புகள். உங்கள் கருத்து உங்களுக்கு ... என் கருத்து எனக்கு. சரியா?

ஆங்கிலப் புதினங்கள் series of events அடுத்தடுத்து நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். டக்கென்று The day of jackal என்ற கதை நினைவுக்கு வருகிறது. நிமிடத்திற்கொரு நிகழ்வு ... பக்கத்துக்குப் பக்கம் தொடர்ந்து பல அவசர நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். (இந்த நூலைப்பற்றியும் எழுத நினைத்திருக்கிறேன்.)  இது அனைத்து ஆங்கில கதைகளுக்கும் (நான் வாசித்தவைகளில்) பொதுவானதே.  classic novels, Daphne Du Maurier போன்ற ஆசிரியர்கள் இதற்குப் பொருந்தாதவர்கள் என்று மனதிற்குள் ஒரு நினைவு வந்தாலும் பல ஆங்கில நாவல்கள் –  முன்பே சொன்ன “airport”  கதைகள் - எல்லாமே அப்படிப்பட்டவை தான்.

மிகப் பல ஆங்கில நாவல்கள் புறத்தை நாடுகின்றன. ஆனால் தமிழ்ப் புதினங்கள் அகத்தையே அதிகம் நாடுகின்றன. டக்கென ஜெயகாந்தனும், தி.ஜா.ராவும் மனதிற்குள் வந்து நிற்கிறார்கள். அக்கினிப் பிரவேசத்தைத் தொடர்ந்து கங்கை எங்கே போகிறாள் கதை ஆரம்பிக்கும் போதே ஒரு பேருந்தில் அமர்ந்து ஆங்கிலத்திலேயே தன் நினைவுகளை யோசித்துக் கொண்டிருப்பாள். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ..ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன .. எல்லாம் உள்ளுணர்வை வெளிக்கொண்டு வரும் வரிகள். திஜாரா என்றதும் நினைவுக்கு வரும் மோக முள், அம்மா வந்தாள், மரப்பசு, … எல்லாமே மனசு .. மனசு .. மனசு ...  இல்லையா? அட .. முதல்வர் புதுமைப் பித்தனை எடுத்துக் கொள்ளுங்களேன்.  ஒரு கதையின் தலைப்பையே பாருங்களேன். ஞானக் குகை .. ஞானம் வந்து விட்டதே.

இதனால் தான் நான் ஆங்கில நாவல்கள் புறத்தை நாடுகின்றன. தமிழ்ப் புதினங்கள் அகத்தையே அதிகம் நாடுகின்றன என்கிறேன்.

இதனால் தானோ என்னவோ இந்திய நாட்டின் spirituality பற்றி வெளிநாட்டினர் அதிகம் பேசுகிறார்களோ?

 

 









*


No comments:

Post a Comment