Saturday, September 19, 2015

865. ”தனி ஒருவன்” - கிஸ் பண்ண விடுங்கப்பா ...







*



copy cat என்பதால் இயக்குனர் ராஜா மேல் பெரிய அபிமானம் ஏதும் கிடையாது. ஆனால் தனி ஒருவன் படம் பார்த்ததும் அவருக்கு என் பாராட்டுகளை அளிக்க விரும்பினேன். படம் நன்றாக, விருவிருப்பாக சென்றது.ஹை டெக் விஷயங்கள் .. வேகமாக நகரும் கதை .. நன்றாக நடித்த நடிகர்கள்.. அதிலும் அப்பாவாக வரும் ராமய்யா ... வழக்கமாக யோசித்து புரிய வேண்டிய காட்சிகள் தமிழ்ப்படங்களில் வந்தால் உடனே இயக்குனர்கள் அதற்கு ஒரு விளக்க உரை.. அது இதுன்னு கொடுப்பாங்க. இந்தப் படத்தில் அந்த மாதிரி ’நோட்ஸ் போடுறது’ இல்லை. அரவிந்த சாமி ரோலும் நல்லா இருந்தது. முரடன்கள் தான் வில்லன்களாக இருக்கணுமா? பெரிய விஞ்ஞானிகளும் பெரிய வில்லன்களாக முடியுமில்லையா?

படம் ஆரம்பித்த முதல் 10 நிமிடங்களுக்குள்ளே ரெண்டு மூணு டிவிஸ்ட் வந்தது படத்துக்கு நல்ல ஆரம்பம் கொடுத்தது. சின்னப் பயல் கட்சித் தலைவரிடம் போட்ட டீல் சூப்பர்ப்.

இந்த மாதிரி படங்களில் ரொம்ப லாஜிக் ஓட்டைகள் இருக்கும். இதில் ரொம்ப கொஞ்சம் மட்டும் தான். கடைசி சீனில் எப்படி அரவிந்த சாமி SD Cardல் எல்லா தகவலும் சொல்லி புல்லட் கோட்டில் வைக்கிறார் ....... எனக்குத் தெரிந்த பெரிய ஓட்டை இது தான்.

படம் பார்க்கும் போது ஆரண்ய காண்டம் படம் நினைவுக்கு வந்தது. ஏனென்று தெரியவில்லை. இதைவிட ஆரண்ய காண்டம் பிடித்தது என்றும் நினைவுக்கு வந்தது. ஏன் அந்தப் படம் க்ளிக் ஆகலை. திருட்டு சிடி கூட அப்படத்திற்கு இல்லையாமே...!

படத்தில் பிடிக்காத இடம் - இந்தப் படத்தில் வந்த காதல் டூயட். நயந்தாரா விரட்டி விரட்டி காதலிக்க, ஹீரோ மாட்டேன்றார். கடைசியா சரின்னு ஆனதும் நயந்தாரா அப்படி மூஞ்சை மேலே தூக்க ... கடற்கரையில் ஒரு பாடல். எரிச்சலா இருந்தது. படத்தின் வேகத்திற்கு சட்டென்று போட்ட கடிவாளம். நம்ம தமிழ்ப்படத்தில் இரண்டு கஷ்டம்: ஒண்ணு பாட்டு ... ரெண்டு நீளம். பாட்டைக் குறைச்சாலே நீளம் குறையும்.

அதோடு நம்ம படங்களில் கிஸ்ஸிங் சீன் இல்லாம எடுக்கிறது தான் நம் “தமிழ்ப்பண்பாடு”ன்னு யாரோ சொல்லிட்டுப் போய்ட்டாங்க. அதெல்லாம் வெட்டிக் கதை. அந்த மாதிரி சில வினாடிகளில் ஒரு கிஸ்ஸிங்கை காண்பிக்கக் கூடாது என்பதற்காக 3-5 நிமிடம் வரை அலையில் பெண்ணைப் புரட்டிப் போட்டு, மழையில் மஞ்சள் சேலையில் போட்டு நனைத்து எடுத்து, மரத்தைச் சுத்தி ஓட விட்டு மூச்சு வாங்க வைத்து ... இதுவே ஒரு சோதனையாக ஆகிவிடுகிறது.

இரண்டு மணி நேரம் இல்லாமல் ஒன்றரை மணி நேரத்தில் முடித்தால் இது மாதிரி படங்கள் இன்னும் நன்கு அமையும்.

தமிழ்ப்பண்பாட்டை மறந்து விட்டு ஒரு நாலைந்து வினாடிக்கு ஒரு கிஸ் சீனை வச்சிட்டீங்கன்னா... எங்களுக்கும் வசதி; உங்களுக்கும் செலவு குறைவு. கிளுகிளுப்புன்னு சொல்லி எங்களில் பலரையும் ஏமாத்திடலாம் ஈசியா...!



 *

5 comments:

வலிப்போக்கன் said...

தியெட்டரில் போயி படம் பார்ப்பதும்..அவர்கள் கஷ்டப்பட்டு தமிழ்பண்பாட்டை வளர்ப்பதும் எம்மால் காண முடியாது என்பதால்... தங்கள் மூலம் தனி ஒருவனை பார்த்துவிட்டேன். அய்யா..

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி ஐயா
தம +1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

டம் பார்த்தேன். நன்றாகயிருந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த ஆங்கிலத் திரைப்படமொன்றில் (The Cat என்று நினைக்கிறேன்) ஒரு பெண்ணின் தலையில் ஒரு Chipஐ வைத்து அவளை வைத்துக்கொண்டு பலரைக் கொல்வார்கள். அவள் செய்வது அவளுக்கே தெரியாது. எங்கிருந்தோ அவளுக்கு அவ்வாறாகக் கொல்லும்படி கட்டளை வரும், செய்வாள். இந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்கு அப்படம் நினைவிற்கு வந்தது.

”தளிர் சுரேஷ்” said...

படம் பார்க்கவில்லை! பார்க்க வேண்டும்! சிறப்பான விமர்சனம்!

சார்லஸ் said...

சார்

நானும் படம் பார்த்தேன் . சமீபத்தில் வந்த சுவாரசியமான படம் . ஆனால் மசாலாத்தனங்களை விட மாட்டேன் என்கிறார்கள். பாட்டு , பைட்டு , பிட்டு என்று கலந்து கட்டிதான் கொடுக்கிறார்கள். நாம் செய்ய முடியாததை தனி ஒருவன் செய்வதுதான் எல்லா திரைப்படங்களிலும் இருக்கும். இதற்கு தலைப்பே தனி ஒருவன் ! பிறகென்ன நம்ப முடியாததெல்லாம் சேர்த்து கொடுத்து விட்டார்கள். படைப்பு ரசிக்கும்படி இருந்தது.

Post a Comment