Monday, July 07, 2008

262. இது தசாவதாரம் விமர்சனப் பதிவு அல்ல

இது தசாவதாரம் விமர்சனப் பதிவு அல்ல. அந்தப் படம் பார்த்த கதை. அவ்வளவே.

போன வெள்ளிக்கிழமை. தங்க்ஸோடு சினிமா பார்த்திர்ரதுன்னு முடிவு செய்து, மதுரையிலேயே தசா நடக்கிறதில்ல எது நல்ல தியேட்டர் என்று நாலுபேருகிட்ட விசாரிச்சி, வீட்ல இருந்து ரொம்ப தொலைவில் - திருநகரில் - உள்ள இம்பாலா படக் கொட்டகையை முடிவு செஞ்சி அதுக்காகவே அங்க இருக்கிற தங்க்ஸின் அண்ணன் வீட்டுக்குச் செய்தி சொல்லியாச்சி. அவங்க வீட்டுக்குச் சீக்கிரமே போனாலும் படம் எத்தனை மணிக்குச் சரியா போடுவாங்கன்னு தெரிஞ்சுக்கணுமே. ஏன்னா நம்ம பதிவுலக மக்கள் எல்லோரும் ஒருமித்து சொன்ன ஒரே விஷயம் முதல் 15 நிமிடம் உலகத்தரம் அப்டின்னு. அதை மிஸ் பண்ணிடக்கூடாதே அப்டின்றதுக்காக போற வழியில் இருந்த கொட்டகைக்குப் போய் எப்போன்னு கேட்டுடலாம்னு நேரே அங்க போனோம்.

கொட்டகைக்கு முன்னால் போய் நின்னதும் வாயில்காப்பாளர் எங்களை நோக்கி ஓடிவந்தார். எப்போ படம் அப்டின்னு கேட்டோம். மதியம் இரண்டரைக்கு என்றார். காலைக்காட்சி அப்போது நடந்து கொண்டிருந்தது. டிக்கெட் எல்லாம் சுலபமா கிடைக்குமா என்று கேட்டேன். கிடைக்கும். ஆனால் இப்பவே வாங்கிக்கொள்ளுங்களேன் என்றார். சரி,இறங்கி வாங்குவோம்னு நினைத்த போதே தானே வாங்கித் தருவதாக மிக அன்பாகச் சொன்னார். இருந்தும் தியேட்டர் எப்படி இருக்கிறதென்றும் பார்ப்போமே என்று எண்ணி உள்ளே சென்றேன்.

தடபுடலாக பயங்கர மரியாதையோடு என்னோடுகூடவே காப்பாளரும் வந்தார். சீட்டு கொடுக்குமிடம் வந்தது எவ்வளவு என்றேன். காப்பாளர் எனக்கான முடிவை அவரே எடுத்துவிட்டார். 'சார், உங்கள பார்த்ததுமே நினச்சிட்டேன்; 100 ரூபாய் டிக்கெட் எடுங்க' என்றார். நம்மைப் பார்த்தாலே அப்படியா ஈனா வானா மாதிரி தெரியுது அப்டின்னு நானா நினச்சிக்கிட்டேன். இந்த கொட்டகையைக் கையைக் காட்டினவர்களோ ஒரு டிக்கெட் 50 ரூபாய் என்றுதான் சொல்லியிருந்தார்கள். அதை அவரிடமே சொன்னேன். இல்ல சார், இது பாக்ஸ்; வந்து பாருங்க அப்டின்னு கையைப் பிடிக்காத குறையா கூட்டிட்டு போனார். நானும் கூடப் போய் பார்ப்போமேன்னு போய்ட்டேன். ஒரு வாசலைத் திறந்தவர் உள்ளே அழைத்தார். உள்ளே போனதும் டக்குன்னு விளக்கைப் போட்டுட்டார். மொத்தம் 4 பேர். 4 வரிசைகளில் இரண்டிரண்டு சோஃபா. 4 பேரில் இரண்டு பேர் இளம் ஜோடி. தட தடன்னு ரெண்டும் ஒருமாதிரி எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்ததுகள். காப்பாளரையும் விரைந்து வெளியே இழுத்து வந்தேன். இப்படி கரடியா மாறிட்டோமே அப்டின்னேன். எனக்கு தெரியுமா, சார் அப்டின்னு அப்பாவியா கேட்டார். இந்த பாக்ஸ் மட்டும் குளிரூட்டப்பட்டது என்றார். சரின்னு மூணு சீட்டு வாங்கிட்டு வீட்டுக்குப் போய்ட்டு 2.20-க்குத் திரும்பி வந்தோம். படம் முடிந்து கொட்டகையை சுத்தப்படுத்திட்டு 2.45 மணியளவில் படம் போட்டார்கள். காப்பாளர் இப்போது மீண்டும் வந்து விளக்கு ஸ்விட்ச் எங்க இருக்குன்னு சொல்லிட்டு, வேற ஏதும் வேணுமான்னு கேட்டார்; இல்லைன்னேன். எதுன்னாலும் சொல்லுங்க,சார் அப்டின்னு ஒரே கவனிப்பு. இந்த முறை எங்க 'பாக்ஸில்' எங்களைத் தவிர்த்து இன்னும் ரெண்டு ஜோடி. அதுல ஒண்ணு .. சரி..சரி... அத விடுங்க. படத்தைப் பார்ப்போம்.

படம் எனக்குப் பிடிச்சிது; தங்க்ஸுக்குப் பிடிக்கலை. ஸ்ரேயாவும் தலைவரும் வந்து ஒரு பாட்டு பாடினா எப்படி இருந்திருக்கும்; சும்மா எல்லோரும் ஓடிக்கிட்டே, அடிச்சிக்கிட்டே இருந்தா .. என்ன இது அப்டின்னிட்டாங்க. குசேலன் கூட்டிட்டுப் போயிடவேண்டியதுதான், சிவாஜி மாதிரி.

ஒண்ணு புரிஞ்சிது. கமல் ஒரே தப்பை திரும்பவும் செஞ்சிக்கிட்டே இருக்கிறார். நானும் இந்தப் படம் அவரின் magnum opus என்றெல்லாம் சொன்னதும் என்னமோ ஏதோ என்று நினச்சிட்டேன். நம்ம பதிவர்களும் எப்படி ஒவ்வொரு 'அவதாரத்துக்கும்' வைத்த பெயர்கள் கூட எப்படி தசாவதாரத்தோடு தொடர்புள்ளன; வண்ணாத்திப் பூச்சி பறக்கிறது - choas theory - அது இதுன்னு பில்டப் கொடுத்திருந்தாங்களா, வேற மாதிரி நினச்சிட்டுத்தான் போனேன்.

போன பிறகுதான் தெரிஞ்சுது நம்ம டைரடக்கர்கள் எல்லோருமே தங்கள் படம் வெளியாவதற்கு முன் கொடுக்கும் பேட்டியில் 'இந்தப் படத்தில் எல்லோருக்கும் பிடித்த - காதல், பைட், செண்டிமெண்ட், நகைச்சுவை - எல்லாமும் இருக்கும் என்பார்களே அந்தமாதிரி படம்தான் இது அப்டின்னு. நான் வேற வித்தியாசமான genre என்று நினச்சது மாதிரி இல்லாம, இதுவும் எல்லாப் படமும் மாதிரியான 'ஒரே மாதிரிப்' படம் அப்டின்னு தெரிஞ்சிது. ஒரு விசயகாந்த் படத்தில் அவரை வில்லன் துப்பாக்கியால் சுட அது அவர் நெஞ்சில் பட்டு அப்படியே திரும்பி சுட்டவன் மேல் பாய்ந்து சுட்டவனையே கொன்றுவிடும்! இங்க கொஞ்சம் மாத்தி குண்டு பட்டு அவ்தார்சிங்கின் கேன்ஸர் சுகமாயிரும். உன் காதலன் உன்னைக் காப்பாற்ற திரும்பி வருவான் என்று சொல்லும்போது அசின் அதெல்லாம் வரமாட்டான் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கமல் உள்ளே நுழைய, அந்தக் கணத்திலேயே கதாநாயகிக்குக் காதல் வந்திருமே அதெல்லாம் நமக்குப் புதுசா என்ன? கதாநாயகனைத் துப்பாக்கியால் எத்தனை ரவுண்டு சுட்டாலும் அப்போ மட்டும் குண்டு குறி தவறிப் போகுமே அது நாம் எத்தனை உலகத்தரமான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பார்த்திருப்போம். அத்தனை பெரிய பெருமாள் சிலையையே கடலுக்குள் இருந்து கரைக்குக் கொண்டுவந்து போட்ட சுனாமி அலைகள் நம் கதாநாயகன், கதாநாயகி இருந்த படகை மட்டும் தொடாமலே சென்று விடுமே அதெல்லாம் Our film heroes are non-destructible என்ற தத்துவத்தை ருசிப்பிக்குமே, அது புதுசா என்ன?

இதெல்லாம் சாதாரண ரசிகனுக்கும் போய்ச்சேரும் விஷயங்கள். ஆனால் தன் மேதாவித்தனத்தைக் காண்பிக்கவும், நம் பல பதிவர்கள் போன்ற மேதாவிகளின் புத்திசாலித்தனத்துக்குத் தீனியாகவும் கேக் மேல் இருக்கும் icing போல் சில விஷயங்களைச் சேர்த்திருக்கிறார். அவைகள்தான் அந்த choas theory, வண்ணாத்திப் பூச்சி, ஒவ்வொரு 'அவதாரத்துக்கும்' வைத்த பெயர்கள், அந்த continuity எல்லாமுமே. இந்த முலாம் பூச்சுதான் இத்தனை காரசார விமர்சனங்களுக்கும் காரணம். இது ஒரு 'ஒரிஜினல் நயம் பொழுதுபோக்குப் படம்' அப்டின்னு முதலிலேயே சொல்லியிருந்தால் இதைவிட இந்தப் படத்துக்கு வரவேற்பு இருந்திருக்குமென நினைக்கிறேன்.

ஹே ராம் ஒரு இளைஞனின் கதை என்று மட்டும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதைவிட்டு விட்டு அந்தக் கதைக்குப் பல வரலாற்றுப் பூச்சுக்கள், அரசியல் வர்ணங்கள் கொடுத்ததால்தான் தேவையற்ற விவாதங்கள் படம் வருவதற்கு முன்பே. அந்த விவாதங்களே படத்திற்கு எதிர்விளைவானது. கடும் உழைப்பும், பெரும் திறனும் பின் தள்ளப்பட்டு விட்டன. கமலின் படங்களுக்கு அவைகள் வெளியாவாதற்கு முன் கொடுக்கப்படும் hype அந்தப் படங்களைப் பற்றிய தவறான புரிதல்களையோ, எதிர்பார்ப்புகளையோ கொடுத்து மக்களைத் திசை திருப்பிவிடுகின்றன.

பாலகுமாரன் கதையான குணா நல்ல வேளை இதிலிருந்து கொஞ்சம் பிழைத்தது. சாதாரணமாக ஒரு கடத்தல் கதை போல் இருந்தாலும், பின்புலத்தில் பரமாத்மா (அபிராமி), ஜீவாத்மா (குணா) இடையிலான உறவு என்ற தத்துவமும், இன்னும் சில உள்ளடங்கிய தத்துவங்களும் படத்தின் வெளிப்படையான கடத்தல் கதைக்குள் பொதிந்து வைக்கப்பட்டன. புரிந்தால் புரிந்து கொள்ளப்படட்டும் இல்லாவிட்டில் இருக்கவே இருக்கிறது காதல் - கடத்தல் என்ற கதையாடல் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து, அதிகப் பிரச்சனைகள் இல்லாமல் ஓடியது.

கமல் படங்களுக்குக் கொடுக்கப்படும் இந்த hype இல்லாவிட்டால் அவரது படங்கள் இன்னும் ரசிக்கப்படும் என்றே தோன்றுகிறது.

அதென்ன .. எல்லாரும் சொல்லி வச்சாப்புல தசா.வில ஜெயப் பிரதாவைப் பத்தி ஒண்ணுமே கண்டுக்கலை .. சே.. ஓல்டுன்னாலும் கோல்டு கோல்டுதான்!

Thursday, July 03, 2008

261. தசாவதாரம் - ஒரு காதோட்டம்*

*பார்வை / கண் தொடர்பானவைகளைக் கண்ணோட்டம் என்பதுபோல், ஏன்
ஒலி தொடர்பானவைகளைக் காதோட்டம் என்று சொல்லக்கூடாது.

தசாவதாரம் படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனாலும் பாட்டுக்களை - சில பாட்டுகளையாவது அடிக்கடி கேட்டாயிற்று. இரண்டு பாட்டு நன்றாகவே இருக்கு - முகுந்தா முகுந்தா பாட்டும், கல்லைமட்டும் கண்டால் பாட்டும். அதன்பின் கட்டாயம் ஒரு குத்துப் பாட்டு இருக்கவேண்டும் என்ற தற்கால தமிழ்ப்பட இலக்கணத்திற்கு ஏற்ப உலக நாயகனே அப்டின்னு ஒரு குத்துப்பாட்டு. அது போக கமல் பாடிய இன்னொரு பாட்டு .. அப்புறம் யாரோ ஷாலினி சிங் என்று ஒருவராம் அவர் பாடிய - என்னெவென்றே புரியாத பாட்டு ஒன்று - இப்படியாக ...

பாட்டுக்களை அக்கு வேற ஆணி வேற ஆக்கி அலசுற அளவுக்கு நமக்கு இசைஞானம் கிடையாது. ஆனாலும் படத்தைப் பற்றி எழுதினவர்களில் பலரும் இசை நன்றாக இல்லை; இசைஞானி அல்லது இசைப் புயல் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்லியுள்ளனர். அதில்தான் எனக்கு ஒரு சந்தேகம்.

எந்த இசையமைப்பாளர் என்றாலும் எல்லா பாடல்களையும் நன்றாக அமைத்துவிடுவதில்லை. (ஏனோ, எம்.எஸ்.வி.யின் "அந்தக் காலத்து" பாவமன்னிப்பும், ஞானியின் "அந்தக் காலத்து" காதல் ஓவியமும், ஏ.ஆர். ரஹ்மானின் "அந்தக் காலத்து" டூயட்டும் நினைவுக்கு வருகின்றன.இந்தப் படங்களில் எந்தப் பாடலைத்தான் சோடை சொல்ல முடியும்?) மற்றபடி, எந்த படத்திலும், ஏதோ ஐந்தாறு பாட்டில் இரண்டு மூன்று தேறும். அவ்வளவே. அந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால் ஹிமேஷும் தேறிவிட்டார் என்றே தோன்றுகிறது. ஆனால் எல்லோரும் நம்ம ஆளுகள் ரெண்டுபேரைப் பற்றியே சொல்லியிருக்கிறார்கள். அதில் என் கேள்வி என்னன்னா, இப்போதெல்லாம் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்த படங்களில் எத்தனை பாட்டுக்கள் தேறுகின்றன என்பதுதான். கடைசியாக வந்த பெரிய படம் சிவாஜி. ஏதோ சூப்பர் ஸ்டார் முகத்துக்காக அந்தப் படப் பாடல்கள் அதிகமாகக் கேட்கப்பட்டனவேயொழிய மற்றபடி அந்தப் படப் பாடல்கள் எதுவுமே தேறாத வகைதான் என்பது என் எண்ணம். ஒருவேளை அவர் இப்போதெல்லாம் முழுக்கவனத்தை தன் தமிழ்ப்படப் பாடல்களுக்குக் கொடுக்க முடியாததால் இருக்கலாம். 'உலகத்தரமான' இசை கொடுக்க வேண்டியதிருப்பதால் இங்கே லோக்கல் படங்களுக்கு பழைய முனைப்போடு கொடுக்க முடியாமல் இருக்கலாம். இப்போதெல்லாம் இங்கே உள்ள இசை அமைப்பாளர்களே நல்ல பாடல்களாகவே கொடுத்துதான் வருகின்றனர். ஆனாலும் நாம்தான் நாமே மேலே தூக்கி வைத்த ரஹ்மானை இன்னும் அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறோம். தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரை அவரின் பழைய இடத்திலிருந்து அவர் இறங்கி நாளாகிவிட்டது என்றே நினைக்கிறேன்.

ஒருவேளை இசைஞானியிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்திருந்தாலாவது இன்னொரு நல்லது நடந்திருக்கும். நிச்சயமாக இரண்டு பாடல்களுக்கு மேல் நல்ல பாட்டுக்கள் கிடைத்திருக்கும். அதைவிடவும், எப்போதுமே பின்னணி இசையில் அவரது ராஜாங்கமே தனிதான். காதலுக்கு மரியாதையின் கடைசி சீன்கள் நினைவுக்கு வருகின்றன. அதே போல் பம்பாய் படத்தின் ஆழமான அந்த இறுதி கலவரக் காட்சிகளில் ரஹ்மானின் பின்னணி இசை கர்ணகடூரமாய் பார்வையாளர்களைக் காட்சியோடு ஒன்ற முடியாதபடி செய்ததும் நினைவுக்கு வருகிறது. தசாவதாரத்தைக் கொடுத்திருந்தால் அதேபோல் 'விளையாட' ரஹ்மானுக்கு நிறைய காட்சிகள் இருந்திருக்கும். நல்ல வேளை ...

*

Sunday, June 29, 2008

260. தோரணம் ...

*

Euro Cup 2008
போட்டிகள் ரொம்ப மும்முரமா நடக்குது; எப்பவுமே ஸ்டேடியம் நிரம்பி வழியுது. பந்தயம் நடக்கிற ஒவ்வொரு வினாடியும் ஆரவாரத்தோடு பார்வையாளர்களால் ரசிக்கப் படுகிறது. பந்தய மைதானத்தையும் பார்வையாளர்களையும் பிரிக்கும் இடம் நல்ல அகலமாக இருக்கிறது. பழைய சில பந்தயங்களில் பார்வையாளர்கள் மைதானத்திற்குள் இறங்கிய விபரீதமெல்லாம் இப்போது நடக்க முடியாதபடி இந்த தூரம் பார்வையாளர்களை மைதானத்திலிருந்து பிரித்து வைக்கிறது. இருந்தாலும் இதுவும் பற்றாதது போல், இருக்கும் அந்த இடைவெளியில் florescent வண்ணத்தில் மேலுடை அணிந்துகொண்டு மிக நெருக்கமாக வளையம் அமைத்து, பார்வையாளர்களைப் பார்த்த வண்ணம் விளையாட்டுக்கு முதுகைக் காண்பித்துக் கொண்டு காவலுக்கு பலர் வரிசையாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.


இதில் ஆச்சரியமான ஆச்சரியம் என்னன்னா, விளையாட்டின் எந்த நேரத்திலும் அவர்கள் கொஞ்சம் கூட திரும்பி விளையாட்டைப் பார்ப்பதில்லை. விளையாட்டின் கடைசி நிமிடங்களில் நடக்கும் திருப்புமுனைக் கோல்களும் அதனால் பார்வையாளர்களின் நடுவில் நடக்கும் எதிர்வினைகளும் கூட இந்த ஆட்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை, விளையாட்டு பக்கம் அவர்கள் திரும்புவதேயில்லை என்பதைப் பார்க்கும்போது மிக ஆச்சரியாக இருந்தது.

எப்படி இவர்களால் தங்கள் முதுகுப் பக்கம் அரங்கேறும் காரியங்களால் எவ்வித கவனத் திருப்புதல் இல்லாமல் இருக்க முடிகிறது? எப்படி கால்பந்து விளையாட்டினால் கவனம் சிதறாமல் கர்ம சிரத்தையாகத் தங்கள் காவல் வேலையைப் பார்க்க முடிகிறது என்று யோசித்த போது ---ஒருவேளை கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டுக்கள் இருப்பதே அறியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமே இந்த வேலைக்குப் பொறுக்கி எடுத்திருப்பார்களோ ??



உவ்வ்வே

நம்ம ஊர் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் பார்த்தால் கையையும், பந்தையும் விளையாட்டு வீரர்கள் நக்கி எடுப்பதைப் பார்த்து 'உவ்வ்வேன்னு' நினச்சா, இந்த கால்பந்து விளையாட்டுகளில் சரியாக வீரர்களை close up-ல் காண்பிக்கும் நேரத்தில்தான் சரியாக அவர்கள் எச்சில் துப்பித் தொலைக்கிறார்கள். :(

Voodoo

கடைசியில் துருக்கியின் ஊடு மந்திரம் அரையிறுதியாட்டத்தில் கை கொடுப்பதுபோல் தோன்றி கடைசியில் செயலாகாமல் போய் விட்டது.


Wimbledon

விம்பிள்டன் பந்தயங்களைப் பார்க்கிறேனோ இல்லையோ அவைகளைப் பற்றி The Hindu-வில் எழுதும் நிர்மல் சேகரின் கட்டுரைகளைப் படிப்பது ஒரு தனி சுவாரசியம்தான். அதிலும் எதிர்பார்க்கப் பட்ட ஒரு விளையாட்டுக்காரர் தோல்வியடைந்தால் அப்போது அவர் எழுதும் கட்டுரையின் அழகே அழகு. ஆனால் நல்ல வேளை இந்த ஆண்டு இதுவரை அப்படிப்பட்ட கட்டுரை எழுத ஏதும் வாய்ப்பு இதுவரை வரவில்லை - ஜோக்கோவிச்சின் தோல்வி எதிர்பார்க்காததாக இருந்தாலும்.


சானியா

இந்த முறை சானியா இரண்டாவது சுற்றில் முதல் செட்டில் 6:0 என்ற கணக்கில் தோற்று இரண்டாவதை வென்று மூன்றாவதில் மிகவும் கிட்ட வந்த வெற்றிக் கனியை நழுவ விட்டது மிகவும் சோகம். என்னதான் சமீபத்தில் நடந்த அறுவை மருத்துவத்தை அதற்குக் காரணமாகச் சொன்னாலும், இப்படி ஒரு தோல்வியை அவர் தழுவியிருக்க வேண்டியதில்லை.


நாடலும், வீனஸும் ..

இந்த இருவரும் இந்த ஆண்டு வெற்றியாளர்களாக வரவேண்டும் என்பது என் ஆசை. என்ன நடக்கிறதென்று பார்க்கணும்.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். பாவம் இந்த வீனஸ். இதுவரை அவருக்கு ஒரு நல்ல sports costume designer கிடைக்கவேயில்லை.

நாடலுக்குக் கால்சட்டை தைப்பவர்களுக்கு இன்னும் கொஞ்சூண்டு துணி சேர்த்து எடுத்துக் கொடுக்கலாம். பாவம், அவர் ரொம்ப டைட்டான கால்சட்டையோடு ஒவ்வொரு முறையும் service போடுவதற்கு முன் கஷ்டப் படுகிறார்.!!!!



விம்பிள்டன் விளையாட்டுக்களில் புதிதாக (நான் இந்த வருடம்தான் அதைப் பார்க்கிறேன்) ஸ்கோர் போர்டுகளில் வீரர்களின் பாய்ண்ட்டுகளுக்குக் கீழே remaining Challenges என்று இரு வீரர்களின் பெயரோடு எண்களைக் போடுகிறார்கள். அது என்னவென புரியவில்லை.


*
பிற்சேர்க்கை: for future reference

ஒரு வழியா விம்பிள்டன் முடிஞ்சிது. நினச்ச ரெண்டு விளையாட்டுக்காரர்களும்தான்

Monday, June 23, 2008

259. துருக்கியின் voodoo மந்திரம்


EURO CUP 2008



ஐரோப்பிய கால்பந்து கோப்பை ஆட்டங்களை இதுவரை முனைந்து உட்கார்ந்து பார்த்ததில்லைதான். போகிற போக்கில் பார்த்துட்டு போறதுதான் பழக்கம். உலகக் கோப்பை மாதிரி விழுந்து விழுந்து பார்க்கிறதெல்லாமில்லை. ஆனாலும் இந்த முறை அப்பப்போ பார்த்துக் கொண்டு இருந்த போது இந்த துருக்கி அணி என்ன மந்திரமோ மாயமோ தெரியவில்லை .. துருக்கி ஆளை ரொம்பவே இறுக்கிப் பிடித்துப் பார்க்க வைத்துவிட்டது. அவர்கள் அரையிறுதி ஆட்டத்துக்குள் நுழைந்த விதம் மிகவும் ஆச்சரியமாக அமைந்துவிட்டது.

லீக் ஆட்டத்தில் செக். நாட்டுடன் மோதிய ஆட்டம் பார்த்தேன். ஆரம்பித்திலிருந்தே பந்து என்னவோ துருக்கியின் பக்கமே இருந்தாலும் அடுத்தடுத்து செக். அணி இரு கோல்கள் போட்டு முன்னணியில் இருந்தது. அதோடு, தெரிந்த முகம் ஒன்றே ஒன்று- Koller - இருந்ததால் செக். அணிக்கு என் மானசீக ஆதரவை அளித்துக் கொண்டு ஆட்டம் பார்த்துக் கொண்டிருந்தேன். மொத்த 90 நிமிடங்களில் 75 நிமிடங்கள் முடிந்து விட்டிருந்தது. துருக்கி அணி இனி என்னதான் ஆடினாலும் ‘பப்பு வேகாது’ என்ற நிலையில் 75வது நிமிடத்தில் ஒரு கோல் துருக்கி அணி போட்டது. கொஞ்சம் அவர்களுக்குத் தெம்பு வந்தது. சமனாவது செய்துவிடலாமென நினைத்து விளையாடினார்கள். இரு அணிகளுமே தொடர்ந்து அதே வேகத்தில் ஆடின. இந்த சமயத்தில் வெளியே பெஞ்சில் substitute ஆக இருந்த செக். அணி Boars-க்கு நடுவர் மஞ்சள் அட்டை காண்பித்தது ஏனென்று தெரியாவிட்டாலும் வேடிக்கையாக இருந்தது. ஏனெனில் இதுவரை விளையாடாது வெளியே இருக்கும் வீரருக்கு ‘அட்டை’ கொடுப்பதை நான் இப்போதுதான் முதல் முறையாகப் பார்த்தேன். சூடான இந்த ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் துருக்கி அணியின் Nichat ஒரு கோலும், அடுத்து 89வது நிமிடத்திலேயே அவரே அடுத்த கோலும் போட துருக்கி செக்.கை 2:1 என்ற கோல் கணக்கில் வென்றது.

சரிதான். துருக்கிக்கு இது ஒரு நல்ல அதிர்ஷ்டமான நாள் போலும் என்று நினைத்து, இந்த விளையாட்டு கொடுத்த ஆர்வத்தில் அதன் அடுத்த பந்தயத்தையும் பார்க்கலாமென உட்கார்ந்தேன். அடுத்த அதன் ஆட்டம் க்ரோஷியாவுடன். கால் இறுதிச் சுற்று. வெற்றி பெற்ற அணி அரை இறுதிச் சுற்றுக்குள் நுழையும். சும்மா சொல்லக்கூடாது; இரண்டு அணிகளுமே முனைந்து விளையாடின. முழுநேரமும் விளையாடியும் எந்த அணியும் கோல் எதுவும் போடவில்லை. 90 நிமிடங்கள் முடிந்து, அடுத்து இரு 15 நிமிட நேரம் கொடுக்கப் பட்டதிலும் ஏதும் கோல் விழவில்லை என்ற நிலையில் இருக்கும்போது 29வது நிமிடத்தில் – அதாவது (90+30) ஆட்டத்தின் 119 வது நிமிடத்தில் துருக்கி கோல்கீப்பர் கொஞ்சம் அசந்த போது க்ரோஷியா அணி முதல் கோலைப் போட்டது. இன்னும் ஒரு நிமிடமே இருக்கிறதென்ற நிலையில் சரி … ஆட்டம் முடியப் போகிறது; வேறு வேலையைப் பார்ப்போம் என்று ரிமோட்டைத் தேடி குனிந்தெடுக்கப் போகும்போது பயங்கர ஆரவாரம் கேட்க என்னவென்று பார்த்தால் அந்தக் கட்டக் கடைசி நிமிடத்தின் இறுதியில் துருக்கி ஒரு கோல் போட்டு சமன் செய்தது.

எனக்கு எப்பவுமே இந்த பெனால்டி முறை பிடிப்பதில்லை. கடைசியில் எல்லாமே இதுவரை அந்த அணியில் விளையாடிய மீதி 10 பேரின் பங்கை எல்லாம் மீறி கோல்கீப்பர் ஒருவரால் மட்டுமே தீர்மானிக்கப் படுவது என்பது கொடிதாகத் தெரியும்.என்னைப் போன்ற ஒருவரைச் சில வினாடிகள் கூட்டத்தில் காட்டினார்கள். பெனால்டி அடிக்கப் படும்போது அந்த மனிதர் வேறு பக்கம் பார்த்திருக்க, அவரோடு இருந்த பெண் அவருக்கு running commentary கொடுத்துக் கொண்டிருந்தாள்! நம்ம கேசு போல என்று நினைத்துக் கொண்டேன்.

பெனால்டி ஆரம்பித்தது. முதல் ஷாட் க்ரோஷியாவுக்குத்தான். முதல் பந்தே வெளியே அடிக்கப் பட்டது. துருக்கியின் ஷாட் சரியாக உள்ளே அடிக்கப் பட்டது. துருக்கி: க்ரோஷ்யா= 1:0 இரண்டாவது: இரு அணிகளும் சரியாக அடித்து விட்டார்கள். 2:1 மூன்றாவது ஷாட்: க்ரோஷிய அணி இம்முறையும் வெளியே அடிக்க, துருக்கி வீரர் சரியாக அடித்தார்;. 3:1 க்ரோஷியாவின் முதல் கோல் விழுவதற்குக் காரணமாக இருந்த துருக்கி கோல்கீப்பர், க்ரோஷியாவால் நாலாவதாக அடிக்கப் பட்ட பந்தை தடுக்க … 4:2 என்ற கோல் கணக்கில் துருக்கி வென்று அரையிறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது. ஜெர்மனியோடு மோத வேண்டும். பார்க்க வேண்டும் இம்முறையும் அந்த voodoo மந்திரம் வேலை செய்கிறதா என்று?!

Monday, June 16, 2008

258. தருமியின் சின்னச் சின்ன ஆசைகளும், சில கேள்விகளும் - 1

*


முன்னுரை:

"சின்னச் சின்ன ஆசைகளும், கேள்விகளும்" என்ற தலைப்பில் ஒரு தொடர்பதிவொன்று போட்டுவர ஆசை பல நாளாக. இதில் என் சமுதாயம் சார்ந்த ஆசைகளையும், கேள்விகளையும் அவ்வப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை. ஆசைகளே கேள்விகளாகவும், கேள்விகள் எல்லாமே ஆசைகளிலிருந்து பிறப்பதாயும் உள்ளன. தினசரி செய்தித்தாள் வாசிக்கும்போதோ, சாலையில் போய்க்கொண்டிருக்கும்போதோ மனத்தில் பிறக்கும் கேள்விகளையும், ஆசைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள இப்பதிவு. ஒவ்வொன்றாய் இல்லாமல் அவ்வப்போது ஒரு தொகுப்பாக நாலைந்து அல்லது அதற்கும் கொஞ்சம் குறைவாகவோ கூடுதலாகவோ என் ஆசை / கேள்விகளோடு சந்திக்கிறேன்.

முதல் பதிவு:

1. நெடுநாளைய ஆசை இது; நெஹ்ரு காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது நமது அரசியல்வாதிகளிடம் காசுப் பித்து. எத்தனை எத்தனை ஊழல் குற்றச் சாட்டுகள். இதோ சட்டம் அவர்கள் மேல் பாய்ந்துவிடும் என்று பாம்பு-கீரி வித்தை காட்டுபவன் போல், நம் C.B.I.-யும் இன்னும் ஏனைய அரசு அதிகார மையங்களும் வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள். open and shut case என்று டான்ஸி வழக்கைச் சொன்னார்கள்; லல்லு மாட்டுக்குக் காட்டுவதுபோல் நம் C.B.I.-க்குத் 'தண்ணி' காட்டி விட்டார். யாரோ ஒரு டெல்லி அமைச்சர், அவரின் குளியலறை முதற்கொண்டு 500 ரூபாய் நோட்டுகளைச் சாக்கில் கட்டி வைத்ததாகப் பிடித்தார்கள் - எல்லாம் என்ன ஆயிற்றோ? கொலைக்குற்றம் சாட்டப் பட்ட அமைச்சர்களும் நீதிமன்றங்களிலிருந்து வெளியே வந்ததும் மீண்டும் அமைச்சராகிறார்கள்.

எப்போதாவது ஒரே ஒரு அரசியல்வாதியாவது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்கள் சேர்த்த சொத்தும் பறிமுதல் செய்யப் படவேண்டுமென்ற என் நீண்ட கால ஆசை என்றாவது நிறைவேறுமா?

2. பெருகி வரும் வாகனங்கள், பெருக முடியாத சாலைகள்- அமெரிக்க மாமாக்கள் மாதிரி...ஸ்பாட் பைன்... இல்லாட்டா...ஏற்கெனவே என் முந்திய பதிவொன்றில் சொன்னது மாதிரி ஏதாவது நடந்து நாட்டுக்கும் நமக்கும் நல்லது நடந்துவிடாதா என்ற எக்கம் என்று நிறைவேறும்?

3. தலையில் ஒழுங்காக தலைக்கவசம் போட்டுச் செல்லும் ஒரு போலீஸ்காரரையாவது பார்க்க ஆசையாக இருக்கிறது. (சென்ற வாரம் முழுச் சீருடையில் - traffic police uniform-ல் அலைபேசியில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டிச் சென்ற ட்ராபிக் போலீஸ்காரருடன் போட்ட சண்டைக்குப் பிறகும்கூட இதுமாதிரி ஆசைகள் வருவது நிற்க மாட்டேன் என்றால் அது என் தப்புதானோ?)

4. தொலைக்காட்சிப் பெட்டி விளம்பரங்களில் வரும் ஆறே நாட்களில் சிகப்பழகாக்கும் க்ரீம்களும், பட்டுப் போன்ற கூந்தல் தரும் ஷாம்பூக்களும் நம்பமுடியாத, நடக்க முடியாத விஷயங்கள் என்று மக்களுக்குப் புரிந்துவிட்டால் எப்படியிருக்கும்?

5. ஆனாலும் அந்த ஷாம்பு விளம்பரங்களில் வரும் பெண்களின் கூந்தல் என்ன sythentic product-ஆல் செய்யப்படுகிறது என்ற விவரம் யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

6. நடைபெறும் ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகளில் சரியாக தலைக்கு நேர்மேலே காமிரா இருப்பதாகச் சில காட்சிகள் "சுடப்பட்டு" காண்பிக்கப் படுகின்றன. அதற்கு முந்திய ப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளிலும் ஒரு காமிரா கோணம் மிக உயரமான இடத்திலிருந்து மைதானத்தின் வெளிப்புறம் காண்பிக்கப் பட்டு பிறகு அப்படியே விளையாடுபவர்களின் தலைக்கு மேல் உயரமான கோணத்தில் காண்பிக்கப்ட்டன. நிச்சயமாக ரிமோட் வைத்து எடுக்கப் படும் படங்கள் என்பது மட்டுமே புரிகிறது. ஆனாலும் அவ்வளவு பெரிய கால்பந்து மைதானத்தின் "நடு செண்டரில்" எப்படி அது முடிகிறது? நடுவில் கம்பி போட்டு காமிராவை நகர்த்த முடியுமா, என்ன?

பி.கு. கடைசி இரு கேள்விகளை தூங்கிப் போனதாகத் தெரியும் 'விக்கிப் பசங்க' கிட்டதான் கேட்கணுமோ?
*