Wednesday, December 05, 2012

611. இலங்கைப் பயணம் .. 3 - மீன் பண்ணைகள்

*


 *
பயணப் பதிவுகள்;








*

முதல் பதிவு

இரண்டாம் பதிவு

மூன்றாம் பதிவு 

நான்காம் பதிவு

ஐந்தாம் பதிவு

ஆறாம் பதிவு

ஏழாம் பதிவு

எட்டாம் பதிவு

ஒன்பதாம் பதிவு

பத்தாம் பதிவு

பதினொன்றாம் பதிவு

பன்னிரெண்டாம் பதிவு







*   


இலங்கைப் பயண நாட்கள்: 2012, அக்டோ. 15 முதல் 21 வரை.  


DAILY DIARY 

16-ம் தேதி:

கொழும்புவிலிருந்து கிளம்பி இரத்தினபுரி செல்லும் சாலையில் சென்று Nara என்னுமிடத்திலுள்ள ஒரு மீன் பண்ணைக்குச் சென்றோம். எனக்கு இரத்தினபுரிக்கே போகணும்னு ஆசை. ஆத்தில உள்ள மணலைத் தோண்டினால் இரத்தின்ங்கள் கிடைக்குமாமே! ஒரு காலத்தில் அப்ப்டித்தானிருந்ததாம். ஆனால் இப்போது எல்லாமே குத்தகைக்கு விட்டு விட்டார்களாம். பெரிய மெஷின்கள் மணலை அள்ளி புறந்தள்ளி ரத்தினக் கற்களை ஒதுக்குமாம். உரிமையாளருக்கு மட்டுமே என்ன கிடைத்த்து என்று தெரியுமாம் என்று நண்பர் ஒருவர் கூறினார். சரி .. ரத்தின்ங்களை ஒதுக்கி வைத்து விட்டு, நாம் பார்க்கப் போன மீன் பண்ணைகளைப் பற்றி பார்ப்போம்:


*


நாங்கள் பார்த்ததில் மிகப்பெரிய பண்ணை இதுவே. அழகுக் கடல் பிராணிகளைப் பிடித்து, வளர்த்து ஏற்றுமதி செய்யும் பண்ணை.
*


Sea anemone என்னும் கடல் பிராணிகளைப் படங்களிலும், சினிமாக்களிலும் பார்த்திருக்கிறேன். இங்கு அவைகளைத் தொட்டியில் உயிரோடு பார்க்கும் அனுபவம் கிடைத்தது.
*


பண்ணையின் முதலாளியையும் சந்தித்தோம். பரம்பரையாக நடந்து வரும் பண்ணை போலும். தன் அயல்நாட்டுத் தொடர்புகள், வியாபார முறைகள் பற்றி பேசினார்.
*



மிக விலையதிகமான சில மீன்களைப் பற்றியும் கூறினார். ஒரே ஒரு மீன் $ 2000 மதிப்புள்ள மீனகளை ஏற்றுமதி செய்ததையும் பற்றிக் கூறினார். 









மீனவ நண்பர்களுக்கு’  நிறைய நேரடி அனுபவம் கிடைத்தது. அதுவும் மிகப் பெரிய முறையில் இருந்த அப்பண்ணையின்  செயல்பாடு அவர்களுக்கு மிக நல்ல அனுபவமாக இருந்தது. மிக அழகான பல கடல் உயிரிகள் .. பார்க்க மிகவும் அழகு.  இவைகளை வீட்டில் வைத்து வளர்ப்பதற்கும் தனித் திறமையே வேண்டுமாம்.

*     *     *       * 

மதியச் சாப்பாடு இலங்கைச் சாப்பாடாக இருக்க வேண்டுமென்றோம். நண்பர் மால் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். 



இரு பெண்கள் நடத்தும் ஒரு சிறிய உணவகம். 

என்ன ஏது என்று தெரியாமல் ‘ஒரு மாதிரி’யாக ஆர்டர் கொடுத்தோம். சிகப்பரிசி .. நண்டு ... இறால் ,,, கீரை ... ஒரு கதம்பமாக இருந்தது. 







ஒரு வழியாக ‘ஒரு கை’ பார்த்தோம். நன்றாகவே இருந்தது. 





*   *    *     *



திரும்பி கொழும்பு வரும் வழியில் மில்லவா என்ற ஒரு எஸ்டேட் சென்றோம்.




அந்தக் காட்டுக்குள் ஒரு சிறு குடும்பம் ஒரு பண்ணை நடத்தி வந்தது. நாங்கள் போகும்போது அங்கு குடும்பத் தலைவியும் அவர்களது சிறு மகளும் இருந்தார்கள். மொழிப் பிரச்சனை ...! ஆனாலும் அந்தச் சிறு பெண் பெயர்: சுகாஸ்னி என் கையை இயல்பாகப் பற்றி கொண்டு அவர்கள் பண்ணையை எனக்குச் சுற்றிக் காண்பித்தது. அது சொன்னது எனக்கு எதுவும் புரியவில்லை. ஆயினும் தலையை ஆட்டிக் கொண்டே அவளுடன் சென்றேன். ஒன்று மட்டும் புரிந்தது. சுகாஸ்னிக்கு அங்குள்ள மீன்களின் பெயர்கள் எல்லாமே அத்துப்படி!அவளுக்கு விளையாட்டுத் தோழிகள் வீட்டுக்குப் பக்கத்தில் யாரும் இல்லை. மீன்கள் தான் அவளுக்குத் தோழிகள் போலும் !









காட்டுக்கு நடுவில் சின்னக் குடித்தனம்... கடுமையான உழைப்பு... நல்ல .வருமானம் என்றும் நினைக்கிறேன். வளர்க ...




*
*  

இன்னும் கொஞ்சம் பயணப் படங்கள் ... இங்கே ...  
இங்கே


*

 

610. இலங்கைப் பயணம் ...2




*
பயணப் பதிவுகள்;








*

முதல் பதிவு

இரண்டாம் பதிவு

மூன்றாம் பதிவு 

நான்காம் பதிவு

ஐந்தாம் பதிவு

ஆறாம் பதிவு

ஏழாம் பதிவு

எட்டாம் பதிவு

ஒன்பதாம் பதிவு

பத்தாம் பதிவு

பதினொன்றாம் பதிவு

பன்னிரெண்டாம் பதிவு






*
எங்க ஊர் மதுரையின் விமான நிலையமும் பன்னாட்டு நிலையமாக மாறி விட்டதாம். நாலைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த ‘ஆதி காலத்து’ நிலையம் சிறிது மாறியுள்ளது. முதலில் ஸ்ரீலங்காவிற்குத் தான் இங்கிருந்து சேவை தொடங்கியுள்ளது. ஸ்ரீலங்காவின் விமான சேவையும் மதுரைக்கு ஆரம்பித்து விட்டார்கள். 

*

*
மதுரை சின்ன ஊர் தானே! பாஸ்போர்ட்டை வாங்கி சோதித்த இருவரும் சில கேள்விகள் கேட்டார்கள். என்ன வேலை என்று கேட்டார்கள். சொன்னதும் ஒரே மகிழ்ச்சி அவர்கள் முகத்தில். இருவரும் எங்கள் கல்லூரியின் பழைய  மாணவர்களாம். கல்லுரியின் இப்போதைய சோகக் கதை பற்றிக் கேட்டார்கள்.





*
விமானத்துக்குள் பணிப்பெண்கள் ஏதேதோ சைகைகளில்  செய்கிறார்களே .. இதுவரை இது யாருக்காவது புரிந்திருக்குமா என்று நினைத்தேன்.  ஒரு கதை வாசித்தேன். அப்போது விமானப் பணிப் பெண்கள் இது போல் ஏதோ செய்வார்கள் என்று படித்ததும், பழைய பயணத்தில் இப்படி ஏதும் செய்தார்களா என்று யோசித்துப் பார்த்தேன். அப்படி ஏதும் நினைவில் இல்லை. அதனால் இந்த முறை



                                                                                                        அவர்கள் ஏதாவது செய்கிறார்களா என்று பார்த்து விட வேண்டும்     என்று நினைத்திருந்தேன். அதற்காக உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்தேன்.     பேசியவர் எந்த மொழியில்                                                         
பேசினார் என்று தெரிந்து கொள்ளவே கஷ்டமாகப் போச்சு. பணிப்பெண் ஆடிய ஆட்டமும் என்னவென்று தெரியவில்லை.


*




விமானத்தில் ஏறும் முன் அதன் வாசலில் சூரியன் படம் ஒன்று போட்டிருந்தது. முதலில் புரியவில்லை. பின்னால் தான தெரிந்தது Spice Jet நம்மூர் சூரியக் குடும்பத்தினரின் சேவை என்று தெரிந்தது.


ஒரு மணி நேரம் தானே. புகைப்படம் எடுக்கவே முதலில் 15 நிமிடமும், கடைசியில் 15 நிமிடமும் சரியாகப் போனது.






 விமானம் இலங்கைக்கு மேல் பறக்க ஆரம்பித்தது. விமான தளத்தில் இறங்கும் போது எதிர் வரிசையில் ஒரு விமானம் புறப்பட தயாராக ஓடிக் கொண்டிருந்தது. அது --->
அமெரிக்காவிலிருந்து வாங்கிய இலங்கை ராணுவ விமானம்!
கொஞ்சம் ‘சுருக்’கென்றது.



இறங்கும் போது  நல்ல மழை வரவேற்றது.


*
*
இன்னும் கொஞ்சம் பயணப் படங்கள் ... இங்கே ...

*
 

Monday, December 03, 2012

609. பிச்சைப் பாத்திரம் ஏந்தினோம் .. அய்யனே ..அய்யனே ...




*



அட .. இந்த சென்னைவாசி மகராசங்களை ஒதுக்கி வச்சுட்டு பார்த்தா த.நா.வில் இருக்குற பாவி மக்க எல்லோருமே கோவில் முன்னால் உக்காந்து கொண்டு, இந்த தலைப்பைப் பாடிக்கொண்டிருக்கும் பாவப்பட்ட பிச்சைக்காரங்க மாதிரிதான் எனக்கு மனசுல தெரியுது.

காலையில் ரெண்டு மணி நேரம். அதிலேயும் கொஞ்சம் கரண்ட் திருடிர்ராங்க. சரியா ரெண்டு மணி நேரம் அப்டின்னு சொல்லுவாங்க... ஆனால் அதில ஒரு பத்து இருபது நிமிஷம் லேட் பண்ணிதான் கரண்டு கொடுப்பாங்க . அதன் பின் நாலு மணி நேரம் இருண்ட காலம். பிறகு அடுத்த ரெண்டு மணி நேரம். அதுக்குப் பிறகு மாலை நேரம் வந்திருச்சின்னா ..கோவிலுக்கு வந்துட்ட போற மகராசங்க அந்தப் பிச்சைக்காரங்களுக்கு ஏதேனும் மனசு வந்துச்சுன்னா சில்லறை போட்டுட்டு போவாங்களே .. அது மாதிரி அப்பப்போ கொஞ்சூண்டு கரண்ட் வரும் .. வராம போகும். ஒரு ரூபாய் போடுற ஆள்ட்ட ரெண்டு ரூபாய் கொடுத்தாதான் எடுத்துக்குவேன்னு எந்தப் பிச்சைக்காரனும் சொல்ல முடியுமா? ஏதோ .. பெரிய மனசு பண்ணி ஐயா .. அம்மா .. போடுதுன்னு எடுத்துக்குவாங்கல்லா .. அது மாதிரி தான் நாங்களும். சத்தமா கூட நாங்க எங்க எதிர்பார்ப்பை யார்ட்டயும் சொல்றதில்லை. நம்ம மம்மி என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றாங்க ..? நமக்கு என்ன கொடுப்பினையோ அது தானே நமக்குக் கிடைக்கும் .. இல்லீங்களா? நம்ம சட்டி பெருசுன்னா அதுக்காக பிச்சை போடுறவங்க பெருசாவா போடப்போறாங்க ... ஆண்டவன், நம்ம சின்னூண்டு நெத்தியில எப்படி எழுதி வச்சிட்டான் .. என்ன பண்றது சொல்லுங்க !

நம்மள மாதிரி ஒரு பதிவர் என்ன பண்ணுவார்னு சொல்றேனே .. சில நாள் காலையில் 6 - 8 கரண்ட் வரும்.  அப்போ காலையில் பொட்டி பக்கமே வர முடியாது. காலையில் எழுந்திருக்க,  விளையாடிட்டு வர ... அதுக்குத் தான் 8 மணி ஆகிடுமே. எப்போடா 12 மணி ஆகும்னு காத்துக்கிட்டு இருக்கணும் வெளியே எங்கேயும் போனாலும் 12 மணிக்கு வீட்டு வரணும்னு ஒரு நினைப்பு  ஓடிக்கிட்டே இருக்கும். 12 - 2 மணிக்கு கரண்டு வருதுன்னு வச்சுக்குவோம். பொட்டியைத் திறந்து மயில் பாத்து, லேசா தமிழ்மணம் பக்கம் போனோம்னு வச்சுக்கங்க. அன்னா இன்னான்னு ஒரு மணி அல்லது ஒன்றரை மணி ஆய்டும். அப்போதான் தங்க்ஸ் வெரட்டி வெரட்டி சோறு தின்னுட்டு போன்னு வெரட்டுவாங்க. இதுலேயே கதை முடிஞ்சிரும்.

அடுத்து 6 மணிக்கு மறுபடி திட்டிவாசல் திறக்கும்னு உக்காந்திருக்கணும். இந்த 6 - 7 மணிக்கு க்ரண்ட் எதிர்பார்க்கிறது .. அது வர்ரது ... போறது இருக்கே ... அடப் பாவி மனுஷங்களான்னு T.N.E.B.யை மனசார திட்டணும் போல இருக்கும். ஏன்னா இந்த டைமிங்கில் பொட்டி முன்னாடி உக்காந்திங்கன்னு வச்சுக்குவோம். வாழ்க்கையே விரக்தியாயிடும். ஏன்னா இதுவரை பல தடவை அது மாதிரி நடந்திருக்கு. என்னன்னா ... 6 மணிக்கு கரண்ட் வந்திருச்சேன்னு சந்தோசமா பொட்டி முன்னால் உக்காருவீங்க. மயில் பொட்டியை திறப்பீங்க .. அம்புட்டுதான் ...  கரண்ட் போயிரும். வழக்கம் போல கரண்ட் போனதும் தங்க்ஸ் கூட விளக்கு ஏதுமில்லாமல் கொசுக்கடிக்கி ஆளாகி முன்னறையில் உக்காந்திருப்போம். பத்து நிமிஷம் கழிச்சி படார்னு கரண்ட் வந்திரும். ஆசை ஆசையாய் மறுபடி பொட்டி முன்னால் உக்காந்து திறப்பீங்க .. படார்னு எல்லாம் போயிரும். மீண்டும் முன்னறை .. கொசு .. அடுத்து கொஞ்ச நேரத்தில் மறுபடி சோதனை வரும். இப்படியே முன்னறைக்கும் பொட்டிக்கும் நடுவில் ரிலே ரேஸ் இருக்கும். வாழ்க்கையின் உச்ச கட்ட எரிச்சல் அப்போதான் வரும். ஆனாலும் என்ன பண்ண் முடியும். ’மனசுக்குள்ள பிச்சை பாத்திரம் ஏந்தினோம் .. அய்யனே .. அய்யனே’ன்னு பாடிக்கிட்டு கொசுவோடு போட்டி போட்டுக்கொண்டு இருக்கணும்.

ஒரு நாள் என்னமோ போறாத காலம்! பொட்டி முன்னால் கரண்ட் இல்லாதப்போ  கூட கொஞ்ச நேரம் உக்காந்துட்டேன். inverter-க்கு சரியான பசி போலும். கரண்ட் வந்ததும் அது நிறைய சாப்பிட்டிருச்சி. ராத்திரி ஒண்ணரை மணிக்கு கரண்ட் போச்சு ... inverter தூங்கப் போயிருச்சி. நமக்குத் தூக்கம் போச்சு. அந்த நேரத்தில் முன் அறைக்கு போய் காத்து வருதான்னு பார்த்தா ஒண்ணும் இல்லை.  நாங்க வீடல வழக்கமா சொல்றது மாதிரி சொல்லணும்னா ‘கடவுள் switch  போட மறந்துட்டார்’. காத்தும் வரலை; தூக்கமும் வரலை. அதுனால இப்போவெல்லாம் கரண்ட் சாமி வரலைன்னா உடனே பொட்டியை விட்டு படார்னு எழுதிருச்சிர்ரது தான். வேற வழி.

இதுக்கெல்லாமா நாம மம்மியை குறை சொல்ல முடியும். ஆனாலும் இன்னும் மனசுக்குள்ள ஒரு சின்ன ஆசை. எங்களுக்கு 14 மணி நேரம் கரண்ட் இல்லை; இந்த மதராஸி மக்களுக்கு இதில இன்னும் கொஞசம் பங்கு கொடுக்கக் கூடாதான்னு. சூடு அங்க வச்சாதான் அரசுக்கும் சூடு வச்சது மாதிரி இருக்கும்னு அடியேனுக்குத் தோணுது. எல்லாம் ஒரு நப்பாசை தான்!


 பிச்சைப் பாத்திரம் ஏந்தினோம் .. அய்யனே ... என் அய்யனே ...

 பாத்துப் போடுங்க’ய்யா ... !







*

608. கோபாலும், நாராயணனும் ... - காணாமல் போன நண்பர்கள் ...8





*

அதீதம் இணைய இதழில் பதிவிட்ட என் கட்டுரையின் மீள் பதிவு:


*


கோபாலும் நாராயணனும் ...
காணாமல் போன நண்பர்கள் ... 8

 1958 - 60 ..... 

1960-ல்  S.S.L.C. தேர்வு எழுதினோம். ஆனால் அப்போது மாணவர்களான எங்களுக்கோ ... இல்லை ..  எங்கள் பெற்றோருக்கோ ஸ்பெஷலாக காய்ச்சல் ஏதும் வரவில்லை! அதெல்லாம் இப்போ உள்ள மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் தான். எங்கள் காலத்தில் அப்படியேதும் பெரியஅழுத்தம்ஏதும் கிடையாது. படித்தோம் .. அரசுத் தேர்வு என்பது மட்டும் அடிக்கடி எங்கள் பேச்சில் இருக்கும்.  முனைந்து படிக்க வேண்டுமென்றெல்லாம் என் போன்ற மக்குப் பசங்களுக்கு அதிகம் தெரியாது. மற்ற வகுப்புகளை விட இன்னும் கொஞ்சம் சீரியசாக இருந்தோம். அவ்வளவே ...


படிப்பது ஏற்கெனவே சொன்னது போல் அதிகமாக சாலை விளக்குகளுக்கு  அடியில் தான். பாதி நேரம்  அரட்டையும் விளையாட்டும் இருக்கும். எல்லாம் எங்கள் தெருப் பசங்களின் கூட்டாகத்தானிருக்கும். S.S.L.C. தேர்வுக்காக இன்னும் சில நண்பர்களின் தொடர்பு கிடைத்தது.  கோபாலும், நாராயணனும். இருவருமே என் வகுப்புத் தோழர்கள். நாராயணன் என்னை விட நன்றாகப் படிப்பான். கோபால் என்னைவிட கொஞ்சம் கம்மி. நாராயணன் கொஞ்சம் பணக்காரப் பையன். கோபால் என்னை விட சிறிது கம்மி. கோபாலும் நாராயணனும் என்னைவிட நெருங்கிய நண்பர்கள். கோபால் நாராயணன் வீட்டுக்குப் படிக்க வர ஆரம்பித்தான். நானும் சில நாள் அங்கே நாராயணன் வீட்டுக்கும் போவேன்.

பல நாள் கோபால் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் என்னோடு படுத்துக் கொள்வான். அவன் சுத்த பயந்தாங்கோளி. அவனை அடிக்கடி  பயமுறுத்துவேன். எங்கள் பக்கத்து வீட்டு மெத்தையில் ஒரு ஆள் தற்கொலை பண்ணிக் கொண்டதாகச்  சொல்வார்கள். முதலில் எனக்குப் பயமாக இருந்தது. ஆனால் அங்கேயே இருந்த்தால் அந்தப் பேய் எனக்கு தோஸ்த் ஆகி விட்ட்தா ... இல்லை .. நான் அதோடு பழகி விட்டேனோ தெரியவில்லை. எனக்குப் பயம் போய் விட்டது. கோபால் தூங்க ஆரம்பிக்கும் நேரம் பார்த்து அந்த தற்கொலை பற்றிப் பேசுவேன். கோபால் எழுந்திருந்து உட்கார்ந்து கையெடுத்துக் கும்பிடுவான். அவன் தூங்கி நான் உடனே தூங்காவிட்டால் இடுப்பில் இருக்கும் பெல்டை எடுத்து கூறையில் இருந்து தொங்க விட்டு அவனை எழுப்பி .. பாம்புன்னு சொல்லி .. கத்தவைப்பதும் ஒரு ஜாலி!  படிக்க வந்த நண்பனை இப்படி அலற விடுவதில் அப்படி ஒரு சந்தோஷம்!

கோபாலோடு சில நாள் நாராயணன் வீட்டுக்குப் போயிருக்கிறேன். நான் இருந்ததோ சரியான ஒண்டுக் குடித்தனம். என்னைப் போல் ஆட்களுக்கு நாராயணன் வீடு ரொம்ப வித்தியாசமாக இருக்கும். அவன் வீடு தெற்கு வெளி வீதியிலிருந்து தாயுமானம் பிள்ளை மருத்துவ மனைக்கு ஒரு சந்து போகுமே .. அந்த மூலையில் மெயின் ரோட்டில் தான் அவன் வீடு. நான் வழக்கமாக மளிகைச் சாமான்கள் வாங்கப் போகும் அருணாசல அண்ணாச்சியின் கடைக்கு நேர் எதிரே அவன் வீடு. உள்ளே நுழைந்ததும் இட்து பக்கம் ஒரு பெரிய சமையலறை. அடுத்து ஒரு பெரிய வெற்றிடம் கூரை ஏதுமில்லாமல் இருக்கும். அதன் பின் அவன் வீடு. நாலைந்து படிகள் வைத்து உயரமாக, கொஞ்சம் பெரிதாக இருக்கும். அதற்குள் அதிகம் போனதில்லை. ஆனால் இடது பக்கம் ஒரு படிக்கட்டு மெத்தைக்குச் செல்லும். அதில் ஒரு பெரிய அறை. அதுதான் நாராயணனின் அறை. அவனுக்குப் படிக்க நிறைய வசதி இருக்கும். ஏன் நமக்கெல்லாம் இப்படி வசதியெல்லாம் இல்லை என்ற எண்ணம் அந்த அறைக்குள் நுழையும்போது எனக்குத் தோன்றும்.

மேற்குப் பக்கம் ஒரு ஜன்னல் இருக்கும். அதற்கருகில் ஒரு பாய் விரித்து வைத்திருக்கும். இந்த வேலை, சமையல் வேலையெல்லாம் பார்ப்பதற்கு அவர்கள் வீட்டில் ஒரு பெரிய வேலைக்கார அண்ணன் இருப்பார். அந்தப் பாயில் கணக்குப் பிள்ளை மேசைன்னு ஒண்ணு சொல்லுவாங்களே .. அது ஒண்ணு இருக்கும். மேல் மூடி சாய்வாக இருக்கும். அதைத் திறந்தால் உள்ளே நமது புத்தகமெல்லாம் வச்சுக்கலாம். அந்த மேசையின் ஓரத்தில் ஒரு சின்ன க்ளிப் ஒண்ணு இருக்கும். மேசையின் இட்து பக்க ஓரத்தில் இருக்கும். அந்த க்ளிப்பில் ஒரு சின்ன குண்டு பல்பும் அதைச் சுற்றி ஒரு சின்ன ஷேடும் இருக்கும். அந்த ஷேடிலிருந்து இரண்டு கம்பி வளையங்கள் இருக்கும். அவைகளை பல்பின் மேல் அமுக்கினால் அப்படியே க்ளிப் மாதிரி ஒட்டிக்கும். வேண்டிய பக்கம் அதைத் திருப்பலாம். அட .. இதெல்ல்லாம் பெருசா ..? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படாது! ஏன்னா நான் சொல்றது 52 வருஷத்துக்கு முந்திய விஷயம். அப்போ இதெல்லாம் பெரிய அதிசயம். அந்த மாதிரி சின்ன குண்டு பல்பெல்லாம் ரொம்ப அரிது. கட்டாயம் அது ஒரு வெளிநாட்டுச் சரக்காகத் தான் இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் ட்யூப் லைட் கூட கிடையாது.

ட்யூப் லைட் அப்டின்னதும் இன்னொண்ணும் நினைவுக்கு வருது. அந்தக் காலத்தில பஸ்ஸில் ராத்திரியெல்லாம் சின்னச் சின்ன பல்பு விளக்குகள் தானிருக்கும். கண்டக்டர்கள் எல்லாம் அந்த லைட் கிட்ட வந்து தான் டிக்கெட் எல்லாம் போடுவார்கள். கொஞ்ச ஆண்டுகள் போன பிறகு முதல் தடவையாக ட்யூப் லைட் போட்டு பஸ் போனதைப் பார்த்த போது மிக அதிசயமாக இருந்தது. என்னவோ .. அழகா .. லைட் போட்ட ஒரு பெரிய வீடு அப்படியே ரோட்டில் ஓடுவது போல் தெரிந்தது இன்னும் நினைவில் உள்ளது.

சரி ... நாம நாராயணன் வீட்டுக்கு, அங்கிருந்த விளக்கிற்கு வருவோம் ...  அந்த விளக்கைப் பார்க்கவே எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த லைட் போட்டால் அந்த மேசையில் மட்டும் வெளிச்சம் அடிக்கும். இந்த மாதிரி லைட் எல்லாம் வாங்கிக் கொடுத்தால் நாமும் நாராயணன் மாதிரி நல்லா படிக்கலாம்னு ஒரு பக்கம் மைன்ட் வாய்ஸ் கேக்கும்! 

அவ்வப்போது நாராயணன் வீட்டுக்கு கோபாலுடன் படிக்கப் போயிருந்தாலும் நாராயணனுடன் படித்ததை விட அவனோடு விளையாடியது தான் அதிகம். நாராயணன வீட்டுக்கு எதிரில், அண்ணாச்சி கடைக்கு அடுத்ததாக ஒரு கார்ப்பரேஷன் பள்ளி இருந்தது. அந்தப் பள்ளிக்கூட வாசல் தான் எங்களுக்கு ஒரு விளையாட்டு மைதானம்’!  

கோலிக்குண்டு, பம்பரம் எல்லாம் அங்குதான் விளையாடுவோம். கோலிக்குண்டு விளையாட்டில் பேந்தா என்று ஒரு விளையாட்டுதான் அடிக்கடி விளையாடுவோம். அதில் நாராயணன் பயங்கர எக்ஸ்பெர்ட்.. பேந்தா எப்படி விளையாடணும் தெரியுமா?  ஒரு சதுரம் அதுக்குள்ள குறுக்கா ஒரு கோடு .. தரையில வரைவோம்.
 அதிலிருந்து ஒரு பத்து அடி தாண்டி ஒரு கோடு. அங்க இருந்து குண்டுகளை உருட்டி விடணும். யார் கோலிக் குண்டு அந்தச் சதுரத்திற்கு அருகில் இருக்கிறதோ அவன் ஜெயிச்சவன். மத்தவங்க குண்டு எல்லாம் அந்த சதுரத்திற்குள் வைத்து விட வேண்டும். ஜெயித்தவன் தன் குண்டு வச்சி, சதுரத்திற்குள் இருக்கும் குண்டுகளை சதுரத்திற்கு வெளியே வரும்படி அடிக்கணும். குண்டு வெளியே வந்ததும் ஜெயிச்சவன் சொல்ற் ஆளுக மட்டும் குண்டை எடுத்துக்குவோம். கடைசியா ஒருத்தன் மாட்டிக்குவான். அவன் குண்டை மற்றவர்கள் மாற்றி மாற்றியடித்து அந்தச் சதுரத்திலிருந்து விரட்டி விடணும். யாராவது குறி வைத்து அடிக்கும் போது அடிக்காவிட்டால் அவன் அவுட்.. தோத்தவன் கடைசியில் முட்டிக் கையால் அந்தக் குண்டை சதுரம் வரைக்கு தேக்கணும்’.  நாராயணன் கோலிக்குண்டை அடிக்கும் போது அவனது வலது நடுவிரல் நல்லா வளையும். ஏறக்குறைய புறங்கையை தொடுறது மாதிரி வளையும். அதனால தூரத்தில் உள்ள குண்டையெல்லாம் குறியா அடிச்சிருவான். அதுனால அவ்னோடு சைடு சேர்ரதுல பேந்தா விளையாடும்போது போட்டியாக இருக்கும். 

அதோடு எனக்கு அப்போ ஒரு தியரி: நாராயணனின் கையெழுத்து நல்லாயிருக்கும். அவன் விரல் அப்படி அழகா வளையறதுனால தான் அவனால அழகா எழுத முடியுது என்பது என் அப்போதைய தியரி!

மூணு பேரும் S.S.L.C. முடிச்சோம். வேற வேற கல்லூரியில் சேர்ந்தோம். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு கோபாலைச் சந்தித்தேன். நாராயணன் கலைக் கல்லூரியில் ஒரு ஆண்டு முடித்து விட்டு, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விட்டான் என்றும் அதிகம் தொடர்பில் இல்லையென்றும் சொன்னான்.

பின்னாளில் பார்த்த போது கோபால் அரசு நூலகத்தில் வேலை பார்ப்பதாகக் கூறினான். அதன் பின் பல ஆண்டுகள் கழித்து கோபாலைப் பார்த்தேன். மதுரை, சிம்மக்கல்லில் உள்ள தலைமை நூலகத்தில் பொறுப்பாளராக Librarian – இருப்பதாக்க் கூறினான். நாராயணன் பற்றி ஏதும் தகவல் உண்டா என்று கேட்டேன். கோபாலுக்கு ஏதும் தெரியவில்லை. நான் ஒருமையில் கோபாலுடன் பேசினேன். கோபாலுக்கு அப்படிப் பேச மனம் வரவில்லை. மரியாதையாகப் பேசினா(ன்)ர் !

ஏனோ .. என்னை மாதிரி இல்லாமல் மற்றவர்கள் எல்லோரும் இப்படி நல்ல மனிதர்களாக மாறிப் போனார்கள் ...!

*