Friday, January 24, 2014

704. நான் ஏன் இந்து அல்ல .... 6




*
தொடர் பதிவுகள்:   1 ......     2 .....     3 .....  4..........  5..............  6 ...........  7..................

*                                        4 ......      5 ......


*








 அத்தியாயம்  5

 இந்துக் கடவுள்களும் நாமும் :
நமது பெண் தெய்வங்களும்  இந்துக்களும்



5
உண்மையில் வன்முறை என்பது இந்துத்துவத்தின் முக்கியச் சாதனம். இந்துக் கடவுள்கள் ஆயுத பாணிகளாக இருப்பதற்கு இதுவே காரணம்.


பார்ப்பனக்கோட்பாளர்கள் தெய்வீக ஊக்கம் அல்லது தெய்வீகக் கட்டளை எனும் பேரால் அடிமைத் தனத்தைத் திணித்து, அதை மீறுவது பாவம் என்றும் போதித்து வந்துள்ளனர். … ஆனால் எந்த மதமும் அடிமைகளைத் தொடர்ந்து அடிமைகளாக வைத்திருப்பதில் வெற்றியடையவில்லை.(114)

இந்துத்வா, தலித் பகுஜன்களையும் இந்துக்கள் என்றே கூறி வந்துள்ளது.ஆனால் அதே நேரத்தில் அந்தக் கடவுள்கள் எல்லாம் வெளிப்படையாகவே தலித் பகுஜன்களுக்கு எதிரானதாகவே இருந்து வருகின்றன.

தலித் பகுஜன்கள் எதிர்க்கும் போதெல்லாம் இந்தியப் பார்ப்பன சக்திகள் தங்கள் கடவுள் உணர்வுகளைக் கிளப்பி அதனை ஒடுக்குகின்றன. 1990ல் மண்டல் அறிக்கை நடைமுறைப்படுத்தப் பட்ட போது அகில இந்திய அளவில் இந்துக்கள் நடத்திய கலகம் இதற்கு ஒரு தெளிவான எடுத்துக் காட்டாகும்.

இந்தியாவின் ஆதிக்குடிகளான ஆதி திராவிடர்களை அழித்த அன்னிய ஆரிய நாடோடிகளின் தலைவனான இந்திரன் வேதங்களில் சிறப்பிக்கப் படுகிறான்.(115)
பிரம்மா .. என்ற இந்த அறிவுக் கடவுள், தலித் பகுஜன் மக்களைத் தாக்குவதற்குரிய ஆயுதம் உடையவனாக இருக்கிறான்.

இவனுடைய முகத்தில் பிறந்தவர்கள் பார்ப்பனர்கள் என்றும், மார்பில் சத்திரியர்கள் என்றும், தொடையில் பிறந்தவர்கள் வைசியர்கள் என்றும், பாதத்தில்  பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள்  சாதிய ஏற்றத் தாழ்வை உருவாக்கினார்கள்.(116)
வேதங்கள் பார்ப்பனியத்தின் பல்வேறு விதமான கொடூரமான உணர்வுகளின் வெளிப்பாடாக உள்ளன.

இலக்கியங்கள்  அனைத்தும் தலித் பகுஜன்களுக்கு எதிரானது தான்.
பார்ப்பனர்கள் பெண்களைப் படிக்க எழுத அனுமதிக்காதபடியால் கல்விக்கரசி என்று அழைக்கப்படுகிற சரஸ்வதி எந்த நூலும் எழுதவில்லை.

பிரம்மா எல்லா விதத்திலும் பார்ப்பனன் என்பதோடு எல்லா விதமான உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்தும் விலகியிருந்தவன்.(117)

தலித்பகுஜன்கள் கல்வி கற்காதவாறு பார்த்துக் கொள்வது பார்ப்பனப் பெண்களின் வேலையாகவும் , சொத்து சேர்ந்து விடாதபடி பார்த்துக் கொள்வது சத்திரியப் பெண்களின் வேலையாகவும் நியமித்தது பார்ப்பனீயம். இத்தகைய செயல்கள் தலித் பகுஜன்களைப் பார்ப்பனீய அமைப்பிற்குள் உள்வாங்கி, அதே நேரத்தில் இழிவானவர்களாக வைத்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.(120)

மலை சாதி மக்கள் இந்து மதத்தை ஏற்றுக் கொள்ளச் செய்ய பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்கள் போதுமானதாக இல்லை. எனவே சிவனையும், பார்வதியையும் கடவுளாக உருவாக்கி விட்டார்கள்.(122)

சிவசேனாவுக்கும், பாரதீய ஜனதாவுக்குமிடையே உள்ள பிரிவு என்பது சைவ, வைணவப் பிரிவுகளின் வெளிப்பாடாக இருந்தாலும் இராமன் உருவத்தைக் காட்டி ஓட்டுப் பெறுவதில் இருவரும் ஒன்றுபட்டே நிற்கிறார்கள்.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் புத்தரும் ஒருவராகப் பிற்காலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இந்து மதத்தின் உள்வாங்கல் தந்திரத்திற்கு இது ஒரு உதாரணம்.(123)

வாமன அவதாரம்: இந்து, பார்ப்பனீயத்தில் நம்பிக்கையற்று ஒரு சாதியற்ற சமுதாயத்தைப் படைக்க விரும்பிய தலித் பகுஜன் அரசனான பாலி சக்கரவர்த்தியைக் கொல்வதற்காகவே வாமன அவதாரம் எடுத்தததாகக் காட்டப்படுகிறது.

ஒரு தலித் பகுஜன் ராஜ்ஜியம் இந்துத் துரோகத்தால் வெல்லப்பட்டது.(124)

கிருஷ்ணன்: திடீரென்று கிருஷ்ணன் விஷயத்தில் மட்டும் ஏன் ஒரு சமரசம் செய்யப்பட்டது? சத்திரியனாகப் பிறந்திருந்தாலும் கூட கர்ணன் ஒரு தலித் பகுஜன் குடும்பத்தினரால் வளர்க்கப் பட்டது கண்டனத்திற்கு உள்ளான போது, இதே பின்னணியில் வளர்ந்த கிருஷ்ணன் ஏன் கண்டிப்படவில்லை.(124)  ... இதற்கெல்லாம் விரிவான விளக்கங்களும், விவாதங்களும் தேவை. (125)

உதாரணமாக 1999-93ல் நடந்த மண்டல் அறிக்கை அமுலாக்கப் போராட்டத்தையும், ராம ராஜ்ஜிய எதிர்ப்புப் போராட்டத்தையும் சொல்லலாம். இவற்றை மையமாக வைத்து பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் மையப்பகுதியில் தலித் பகுஜன்கள் பெருங் கலகங்களை நடத்தினார்கள்யாதவர்கள் முன்னின்று நடத்திய இந்தப் போராட்டத்தின் வாயிலாகத் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கும், பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும் இடையே ஒரு கூட்டணி உருவானது. இந்தப் போராட்டத்தில் மண்டல் அறிக்கையைத் தயாரித்த மண்டல் (ஒரு யாதவர்) முலாயம்சிங் யாதவ், ராம்ராஜ்ஜியத்தை எதிர்த்து மண்டல் ராஜ்ஜியத்தை ஆதரித்த லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் இந்து பார்ப்பனியம் உருவாக்கிய மேலாண்மையை உடைக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் யாவரும் அறிந்ததே. இதற்கு எதிராக லோத்தா சாதியைச் சேர்ந்த கல்யாண்சிங், உமாபாரதி என்று இரு தலைவர்களைப் பார்ப்பனிய பாரதீய சனதா கட்சி தன் பக்கம் சேர்த்துக் கொண்டது. தேர்தல் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கல்யாண்சிங் முதல்வரானாலும், உண்மையான அதிகாரம் பார்ப்பனப் பண்டிதர்களிடமே இருந்தது.(126-7)

எப்படியாவது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடையே இருந்த உறவை உடைப்பதற்குப் பார்ப்பன இந்துத்துவ சக்திகள் சிந்தித்து ஒரு பயங்கரமான நிலை எடுத்தார்கள். அதன்படி பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதிக்கு ஆதரவளித்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் கூட்டை உடைத்தார்கள்.
யாதவர்களின் தலைமையிலான பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் அட்டவணைச் சாதியினருக்கும் இடையிலான கூட்டைச் சிதைப்பதற்கும்  பாரதிய சனதா பெரு முயற்சிகளை மேற்கொண்டது.

மாயாவதி முதலமைச்சரானதும் மதுராவில் உள் ஆலயம் பற்றியும், பாபர் மசூதி பற்றியும் பார்ப்பனர்களின் திட்டத்திற்கு எதிரான நிலை எடுத்தார். பார்ப்பனர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் பெரியார் ஈவேராவின் சிலையை லக்னோவில் நிறுவுவதில் வெற்றி கண்டார். தலித் பகுஜன்களுக்கு எதிரான இந்துக் கடவுள்களின் தன்மைகளை யாரைவும் விட பெரியார் அதிகமாகத் தோலுரித்துக் காட்டியவர். (127)


சத்திரியர்களைப் போல யாதவர்களையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள பார்ப்பனியம் தயாராக இருக்கவில்லை.

கிருஷ்ணனின் கதையாடல் தந்திரமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இளைஞனான கிருஷ்ணன் யாதவ கலாச்சாரத்தில் வளர்ந்தவன். ஆனால் வளர்ந்து பெரியவனான ‘அரசியல் கிருஷ்ணன் தன்னை யாதவனாக அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. அவனது செயற்பாடுகள் சத்திரியனுக்கு உரியதாக இருந்தது. பார்ப்பனத் தர்மத்தைக் காப்பதாகவே இருந்தது. ..  அவனுடைய மனைவிகள் அனைவரும் சத்திரியப் பெண்களாகவே இருந்தார்கள். கிருஷ்ணனுடைய எட்டு மனைவிகளும் சத்திரியர்களே.(128) 

கிருஷ்ண அவதாரம் என்பது பார்ப்பனிய அரசியலுக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
கிருஷ்ணனின் திட்டம் என்பது பலமான வருணாசிரம உடன்பாட்டு முறையை உருவாக்கவும், தலித் பகுஜன்கள் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டு அதைப் பாதுகாக்கவுமான திட்டமுமாகும்.

மகாபாரதக் கதை கெளடில்யக் கற்பனையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. பொதுச்சொத்து தனிச்சொத்தான காலம் அது.

சிறுபான்மையரான பாண்டவர்கள் (பார்ப்பனர், சத்திரியர், வைசியர் கூட்டு என்பது மொத்தத்தில் பதினைந்து சதவிகிதம் தான்) பெரும்பான்மையினரான கெளரவர்களை எதிர்த்து நடத்திய யுத்தம். ஐந்து பாண்டவர்கள் நூறு கெளரவர்களை எதிர்த்து நடத்திய யுத்தம். நூறு கெளரவர்களும் பார்ப்பனியத் தர்மத்துக்கு எதிராக பெரும்பான்மை தலித் பகுஜன்களுக்கு ஆதரவாகவும், அதே சமயத்தில் ஐந்து பாண்டவர்களும் சிறுபான்மையினரான பார்ப்பனர்களின் தர்மத்திற்கு ஆதரவாகவும் நின்று நடந்த போராட்டம். நிலத்திற்க்கவும் அரசாட்சிக்காகவும் நடத்திய போராட்டத்தில் கிருஷ்ணன் சிறுபான்மையினருக்கே ஆதரவாகப் போராடுகிறான்.  அது மட்டுமல்ல, பெரும்பான்மையினருக்கு எதிராகச் சூழ்ச்சியையும், நயவஞ்சகத்தையும் நெறியற்ற பார்ப்பன தர்மங்களையும் பயன்படுத்துகிறான். சிறுபான்மையினரைவெற்றியடையச் செய்கிறான். பெரும்பான்மையான கெளரவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். (129)

ஒரு நல்ல முடிவிற்காக எந்த விதமான வழிமுறைகளையும் கையாளலாம் என்பது கிருஷ்ணனின் கொள்கை. சிறுபான்மையினரின் தர்மத்தை ஆதரிப்பது மூலம் வன்முறை, காட்டுமிராண்டித்தனம், துரோகம் ஆகியவற்றை கிருஷ்ணன் நியாயப் படுத்துகிறான். துரோகத்தனத்தால் தான் கர்ணன் கொல்லப்படுகிறான்.

... கிருஷ்ணன் எதிர்த்தரப்பினர் யாராக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று வற்புறுத்துகிறான். ஏனெனில் அவர்கள் பார்ப்பனீயத் தர்மத்திற்கு எதிராகக் கலகம் செய்தவர்கள். பார்ப்பனக் கோட்பாட்டை ஆதரிக்கும் முகமாக வன்முறையையும், வர்ண தர்மத்தையும், கர்மவினைக் கோட்பாட்டையும் கீதையில் போதித்தான்.
நிலத்திற்காகவும் அரசதிகாரத்திற்காகவும் நடந்த இந்தப் போராட்டத்தில் பெரும்பான்மையினரைத் தோற்கடித்த பிறகு கீதையின் மூலம் ஒரு பலமான பார்ப்பனிய அமைப்பை உருவாக்கி, தலித் பகுஜன் எழுச்சியும் எதிர்ப்பும் வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. (130)

எப்படியோ விடுதலை பெற்ற இந்தியாவில், எழுச்சி கொண்ட தலித் பகுஜன் கருத்தியலுக்குப் பார்ப்பனிய காந்தியமும், நம்பூதிரிபாட்டின் கம்யூனிசமும் பிரச்சினையானது. செத்துக் கொண்டிருந்த இந்துத்துவத்தை நவீனப்படுத்தி உயிர்ப்பித்தவர் காந்தி. பார்ப்பன கம்யூனிஸ்டுகள் தம் பங்கிற்கு தலித்துகள் கிளர்ந்தெழுந்து விடாமல் அடக்கி வைத்தார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியத்தை காந்தி இந்து மயமாக்கினார். இந்து மயமாக்கப்பட்ட தேசியத்தைப் பார்ப்பன கம்யூனிஸ்டுகள் பார்க்கத் தவறினர். (131)

கிருஷ்ணனையும் கீதையையும் உருவாக்கிய பிறகு சத்திரியர்களுடைய ஆதிக்கமும் கூடத் தொடர இயலவில்லை. பார்ப்பனர்களுக்கு எதிராக ஒருவர் கூட சுட்டு விரலை நீட்ட முடியாதபடிக்கு வருணாசிரமம் கோலோச்சியது. வட இந்தியாவில் எல்லாப் பிரிவினரும் நம்பிக்கை இழந்த நிலையில் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள்.  பார்ப்பனர்கள் தலித் பகுஜன்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த தென்னிந்தியாவிலும் தங்களுடைய ஆதிக்கத்தைப் பரப்ப நினைத்தார்கள்.

ராமாயணக் கதையில் ... தலித் பகுஜன் ஆட்சியை வீழ்த்துவதற்கான சூழ்ச்சியை ரிஷிகள் வகுக்கவும் ராமன் அந்தப் பொறுப்பை நிறைவேற்றவும் முடிவெடுக்கப்பட்டது. விஸ்வாமித்திரனும், வசிஷ்டனுமே இராமாயணக் கதையை இயக்கிய முக்கிய சக்திகளாவர். இவர்கள் இராமனின் குல குருக்கள். அவர்களது வார்த்தைகளை யாரும் மீறக் கூடாது. (132)

தென்னிந்தியாவில் வாழ்ந்த தலித் பகுஜன் சமூகத்தைப் பார்ப்பன மயமாக்க மேற்கொண்ட நடவடிக்கைகளின் கதையே இராமாயணம். அதோடு பார்ப்பன ஆணாதிக்கத்தையும் உருவாக்க முனைந்த கதை. இந்த நோக்கத்தோடு தான் பார்ப்பன ரிஷிகள், ராமன், சீதை, செட்சுமணனோடு வந்து இங்குள்ள மலைவாழ் பழங்குடி மக்களின் பலராட்சியையும், சுதந்திர பகுஜன்களின் அரசுகளையும் அழித்துச் சிதைத்தார்கள். புகழ்பெற்ற தலித் பகுஜன் தலைவியாகிய தாடகையைக் கொன்று அவளது அரசைப் பார்ப்பன மயமாக ஆக்கினார்கள். புகழ் பெற்ற சம்புகனைக் கொன்று அவனது ஆட்சியைப் பறித்துக் கொண்டார்கள். கிஷ்கிந்தாவை ஆண்டு வந்த மலைவாழ் பழங்குடி இன அரசன் வாலி இராமனுடைய ஆதிக்க நடவடிக்கைகளுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

இராமன் அதே மலைஜாதி தலித் பகுஜன்களை ஒன்று சேர்த்து எப்படியோ இலங்கையை அடைந்து இராவணனைத் தாக்கிக் கொன்றான்.  தலித் பகுஜன்களின் அரசு இராவணனோடு வீழ்ச்சியுற்று தென்னிந்தியா, பார்ப்பன ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டது. இராவணன் இறந்த பிறகு பல பார்ப்பன ரிஷிகள் வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்குக் குடிபெயர்ந்தார்கள். சாதியற்ற சமூகமாக இருந்த தென்னிந்தியாவில் பார்ப்பனர்கள் நுழைந்து அதைச் சாதி அடிப்படையிலான சமூகமாக மாற்றி பார்ப்பனிய ஆணாதிக்கக் கருத்தியலைப் புகுத்தி தங்களுடைய அதிகாரத்தை நிலை நிறுத்தினார்கள்.

இவ்விதமாக தென்னிந்தியாவில் பார்ப்பனீயம் மேலிருந்து புகுத்தப்பட்டது. … தென்னிந்தியச் சிவில் சமூகத்தில் பார்ப்பனீயத்திற்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது. … பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தை (13-ம் நூற்றாண்டில்) பசவா நடத்தினார். பதினேழாம் நூற்றாண்டில் வேமனாவின் இயக்கமும், வீரப்பிரும்மாவின் இயக்கமும், பின்னர் பூலேயின் இயக்கமும், நாராயண குருவின் இயக்கமும் உருவாயின.  இருபதாம் நூற்றாண்டில் அம்பேத்கர், பெரியார் இயக்கங்களும் உருவாயின. பார்ப்பன எதிர்ப்புணர்வு தென்னிந்தியாவிலிருந்து பரவியது. வட இந்தியாவில் உருவான பகுஜன சமாஜ் கட்சி என்பது தென்னிந்தியாவில் இருந்து பரவிய பார்ப்பன எதிர்ப்பு அரசியல் கலாட்சாரத்தின் நீட்சியாகும். (134)

(பகுஜன) பொச்சம்மா ஆலயத்தின் காரணமாக ஒரு சிறு இனக்கலவரம் கூட தோன்றியதாகச் சொல்ல முடியாது. இந்த மாதிரி கலகங்கள் இராமன், கிருஷ்ணன், நரசிம்மன், ஆலயங்களில் இருந்து தான் ஆரம்பமாகின்றன. அதே போல் முஸ்லிம்களின் மசூதியிலிருந்தும் தோன்றியிருக்கின்றன.(138)

கட்டமைசம்மா அம்மனின் கிருபையால் பயிர்கள் செழித்து வளர்கின்றன . இப்போது இந்த நம்பிக்கை சிறிது சிறிதாக்க் குறைந்து வருகின்றது. இப்போது பயிர்களின் தரம் ரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் பொறுத்ததே  என்று மக்கள் (நம்பத்)புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். (139)

இந்து மதமே எல்லோருக்குமான மதம் என்று சொல்லும் போது தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியவர்களுக்குப் பொதுவான அம்சம் இந்து மதத்தில் என்ன இருக்கிறது என்று கேட்க வேண்டும்.(147)


*


Thursday, January 02, 2014

703. தருமி பக்கம் (12) - அந்தக் காலத்தில . . . .




*
அதீதம் இணைய இதழில் வந்தப் பதிவின் மறுபதிப்பு


 *



இரண்டரை வயதிலிருந்து ஐந்தாவது வயதில் அப்பா & புது அம்மாவோடு மதுரை வந்து பள்ளியில் சேர்வது வரை வாழ்க்கை காசியாபுரத்தில் தான் கழிந்தது. வீட்டில் அனைவரும் ஏதாவது வேலை செய்பவர்களே. அப்பம்மா, சித்தி - இருவரும் காட்டு வேலைக்கு அனேகமாக போய் விடுவார்கள். வீட்டில் இருந்த மூத்த அத்தைமார்கள் இருவரும் ஆசிரியை வேலைக்குப் படித்து விட்டு, பாட்டையா வைத்து நடத்திய பள்ளியில் வேலை செய்து வந்தார்கள். நான் வீட்டில் இருந்த போது அத்தைமார்களில் மூத்தவர் nun ஆவதற்காக, போய் விட்டார். அடுத்த அத்தை நம் பள்ளிக்கூடத்தில் டீச்சராக இருந்தார்கள். அவர்கள் பொறுப்பில் நான். அவர்களோடு நானும் பள்ளிக்குப் போய் விடுவேன்.

அத்தையோடு வேலை பார்த்த இன்னொரு டீச்சரும், அத்தையும் நல்ல நண்பர்கள். அவர்களும் எங்களோடு மதியம் சாப்பிட எங்கள் வீட்டுக்கு வந்து விடுவார்கள். அந்த டீச்சர் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இன்னொரு ஊரிலிருந்து வருவார்கள் என்று நினைக்கிறேன். அவர்களைப் பற்றிச் சொல்லும் போது ‘குருவன்கோட்டை’ என்ற ஊர் பெயரைச் சொல்லுவார்கள். அந்த டீச்சரையே குருவங்கோட்டை டீச்சர் என்று தான் சொல்வார்கள். அவர்களை எனக்கு நிறைய பிடிக்கும்.இந்த இரண்டு பேர் கைகளைப் பிடித்துக் கொண்டு நான் பள்ளிக்குப் போகும் காட்சி இன்னும் சிறிது நிழலாடுகிறது.

குருவங்கோட்டை டீச்சர் பற்றி ஒண்ணே ஒண்ணு நினைவுக்கு வருகிறது. அப்பாவுக்கு அடுத்த கல்யாணத்திற்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த டீச்சர் பெயரும் அடிபட்டது. எனக்கும் இவர்கள் அம்மாவாக வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.

வீட்டில் செல்லப் பிள்ளை. பள்ளியிலும் சின்னப் பையனாக இருந்ததால் எல்லோருக்கும் செல்லம். ஊரில் எங்கு போனாலும், ‘பாவம் ... தாயில்லாப் பிள்ளை’ என்று பாவம் போல் பார்க்கும் உறவினர்கள். இதைச் சொல்லும் போது மட்டும் வயசான பிறகு கூட கஷ்டமாக இருக்கும். ஆனால் எனக்கு எந்த இழப்பும் அப்போது இருந்ததோ என்னவோ ... அப்படியேதும் நினைவில்லை. அதை நினைக்கும் படி ஒரு நிகழ்வு அவ்வப்போது ஒன்று நடக்கும். அப்பா மதுரையிலிருந்து ஊருக்கு வருவார்கள். அப்பா வந்ததும் எல்லோருக்கும் அம்மா நினைவு வந்து விடும் போலும். உடனே என்னை மாற்றி மாற்றி தூக்கி வைத்துக் கொண்டு எல்லோரும் அழுவார்கள். நானும் அழுதிருக்கிறேன். அவ்வளவு தான்.

அப்பா மதுரையிலிருந்து வரும் போது ஏதாவது வாங்கி வருவார்கள். அதில் இரண்டு மட்டும் நன்கு நினைவில் இருக்கிறது. இந்தக் காலத்தில் திராட்சைப் பழம் பல வகைகளில் இருப்பது போல் அப்போது இல்லை. கொட்டைஇல்லாத பழமெல்லாம் இப்போது கிடைக்குதே ... அதெல்லாம் அப்போதெல்லாம் சுத்தமா கிடையாது. நல்லா புளிக்கும் பச்சைத் திராட்சை தான் எங்கும் கிடைக்கும். அதோடு கொஞ்சம் லேசாகப் புளிக்கும் கருப்புத் திராட்சை அப்பா வாங்கி வருவார்கள். அப்போது அதெல்லாம் (எளிதில்)கிடைக்காத தின்பண்டம்! அதெல்லாம் மதுரையிலிருந்து தான் வரணும்!

ஒரு தடவை எனக்கு அப்பா ஒரு மூன்று சக்கர சைக்கிள் வாங்கி வந்தார்கள். இப்போவெல்லாம் மற்ற பொருட்கள் மாதிரி இது போன்ற சைக்கிள்களும் disposable தானே! ஆனால் அப்பா எனக்காக வாங்கி வந்த சைக்கிள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டில் இருந்தது. மூன்று தலைமுறைகளை அது பார்த்து விட்டது. என் பிள்ளைகள் அதனை ஓட்ட முடியாது போயிற்று; ஆனால் தம்பி, தங்கைகள், அவர்கள் பிள்ளைகள் என்று அத்தனை வருஷம் இருந்தது. ஏனெனில், இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. எல்லாமே solid iron.  வெறும் முரட்டு இரும்புக் கம்பி தான் handle bar. கைப்பிடிக்கு ஒரு ரப்பர் கைப்பிடி இருக்கும். உட்காரும் இடமும் சரியான கனத்தில் ஒரு இரும்புத் தகடு வளைத்து வைத்திருக்கும். சக்கரங்களும் செம சாலிட். டயர் இருக்கும் இடத்தில் கட்டி ரப்பரில் சக்கரத்தின் வளைவுக்குள் ஆழமாகச் செருகி இருக்கும். சைக்கிள் நல்ல பச்சைக் கலர். சக்கரங்களின் பக்கச் சுவர்கள் மட்டும் சிகப்பு. (எங்கள் வீட்டில் ‘ஆகி வந்த’ இன்னொரு பொருளும் இதே போல் மூன்று தலைமுறை தாண்டி வந்தது. எனக்குப் பயன்படுத்திய தொட்டில் கம்பு அது. பட்டையாக, கறுப்பு நிறத்தில் ஒன்று இருந்தது - மூன்று தலைமுறைக்கு!)

அடேயப்பா ..! ஊருக்குள் வந்த முதல் மூன்று சக்கர சைக்கிளாக அது தான் இருக்க வேண்டும்! யாரும் அது மாதிரி மூன்று சக்கர சைக்கிள்களை ஊரில் பார்த்திருக்க மாட்டார்கள்! அனேகருக்கும், பெரியவர்களுக்கும் சேர்த்து அது ஒரு அரிய காட்சிப் பொருளாக இருந்தது. சைக்கிள் வந்தது, துணி மாதிரி ஒன்றினால் - flannel மாதிரி - அது சுற்றப்பட்டு வந்து சேர்ந்தது. வீட்டில் ‘ஹாலில்’ ஒரு தூண் சொன்னேனே அது பக்கத்தில் எப்போதும் நிற்கும். எனக்கு ஓட்டத் தெரியாது. என்னைவிட ஓரிரு வயது மூத்த அண்ணன் துரைசாமி வீட்டுக்கு வந்திருவான். அவன் சைக்கிளை வீட்டில் தட்டடி தாண்டி, தெற்குப் பக்கம் வெற்றிடமாக இருந்த இடத்திற்குத் தூக்கிக் கொண்டு வருவான். நான் அவனோடு வந்து சைக்கிளில் உட்கார்ந்தால் அவன் என்னை வேகமாக பின்னாலிருந்து தள்ளிக் கொண்டு வருவான். எல்லோருக்குமே சின்னப் பிள்ளைப் பருவத்தில் ஒரு accident நடக்குமே ... சைக்கிள் accident .. அது எனக்கும் நடந்தது. காலை பெடலுக்குள் விட்டு, அடிப்பட்டு, ரத்தம் ... துரைசாமி என்னை உட்டுட்டு, பயந்து ஓடியே போய்ட்டான்.

இந்த துரைசாமியை வயதான காலத்தில் ஊருக்குப் போகும் போது  தேடிப்போய் பார்ப்பேன். நன்றாக கள் குடித்துப் பழகிக் கிடந்தான். நான் போகும் போது, எல்லோர் காதுக்கும் எட்டுவது மாதிரி என்னை ‘டேய்’னு சத்தமா கூப்பிட அவனுக்கு ரொம்ப பிடிக்கும். ‘என் தம்பின்னு’ எல்லோருக்கும் சத்தமாக அறிமுகம் செய்வான். நான் ‘இளைஞனாக’ இருந்த போதே, அவன் கல்யாணம் ஆகி, பிள்ளைக் குட்டிகளோடு ‘கிழவனாகப்’ போயிருந்தான்.

accidentகுப் பிறகு நானே ஓட்டிப் பழகிட்டேன். அத்தைமார்கள் கைப்பிடித்து பள்ளி போன நான், சைக்கிளில் அவர்களோடு பள்ளிக்குப் போனேன். வீட்டுக்குப் பின்னால் தானே பள்ளி. அங்கே பள்ளி மைதானத்தில் ஒரு ’வாதமடக்கி மரம்’ ஒன்று பெரியதாக நிற்கும். இந்த மரத்தை நான் நிறைய எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன். ஆனால் மதுரையிலோ வேறு இடங்களிலோ அந்த மரத்தைப் பார்த்ததில்லை. அதன் காய்களை கிளி நன்கு சாப்பிடும். நாமளும் சாப்பிடலாம்; ஆனால் சாப்பிட்டால் காது சரியாகக் கேட்காமல் போய் விடும் என்பார்கள். (யாரும் இப்போ என்னை கூப்பிட்டீங்களா? .. காதில் ஒண்ணும் விழலை; அதான் கேட்டேன்!) 
அந்த மரத்தின் அடிப்பகுதி சிறிது வளைந்து மேலே போகும். அந்த வளைவு தான் நம் வண்டிக்கு parking lot!

பாட்டையா வீட்டில் அப்போது இன்னொரு பழைய பொருள் இருந்தது. பழைய கிராம போன் பெட்டி. சினிமாவில பார்க்கிறது மாதிரி பெரிய குழாய்

 அது.. இதெல்லாம் இதில் கிடையாது. சரியாக ஒரு சதுரப்பெட்டி .. மூடியோடு இருக்கும். HMV கிராம போன். பெட்டியின் மூடியின் உள்பக்கம் பாட்டு கேட்கும் நாய் உட்கார்ந்திருக்கும். அந்த நாயின் பெயர் என்ன என்று தேடிப்பார்த்தேன். - Nipper! அந்தப் பெட்டியும், அதனோடு நாலைந்து ரிக்கார்டுகளும் இருக்கும். எல்லாம் கிறித்துவ சாமிப் பாட்டுகள். எப்போதாவது மேலிருந்து கீழ் இறங்கும். அதுவும் பொதுவாக அதைப் பார்க்கவே யாராவது வருவார்கள். அப்போது நாலைந்து பாட்டு போடுவார்கள். அதற்கு “ஊசி’ கிடைப்பதெல்லாம் கஷ்டம்னு சொல்லி நிப்பாட்டிடுவாங்க. அந்தப் பெட்டிக்குள்ள இருந்து எப்படி சத்தம் வருகிறது  என்று எனக்கு அன்றும் சரி, இன்றும் சரி. ஒரே ஆச்சரியம் தான்.



*



Monday, December 30, 2013

702. வித்தியாசமான ஒரு இரவு





*


பழைய மாணவர்களுக்கும் வயசாகிக் கொண்டே போகிறது. நட்பு மட்டும் இளமையோடு இன்னும் இருப்பது ஆச்சரியமும், மகிழ்ச்சியும் தருகிறது. சென்னைக்கு சமீபத்தில் ஒரு வாரம் போனேன். (மாணவ) நண்பன் வீட்டுக்கும் போனேன். பழைய கதைகள் – எத்தனை முறை பேசினாலும் அலுக்காத, முப்பது ஆண்டுகளுக்கு முன்பான கதைகள் – நிறைய பேசினோம். அவனது குடும்பம், நண்பர்கள் என்று பலரிடமும் கதைகள் அரங்கேறின. புதிய கதைகள் எல்லாம் சேர்ந்தன.

அடுத்த நாள் மாலை ஒரு நண்பர் வீட்டிற்குப் போகிறேன்; நீங்களும் வாருங்கள் என்றான். சரி என்று உடன் போனேன். அவனது நண்பர் வீட்டிற்குள் நுழையும் போது, அந்த வீடு ‘அழகு வீடுகள்’ என்ற போட்டியில் பரிசு பெற்றது என்றான். வெளியில் இருந்து பார்க்கும் போதே கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பரிசுக்குக் காரணம் வீட்டுக்காரரா அல்லது கட்டிட அமைப்பாளரா என்று கேட்டேன். இரண்டு பேரும் இல்லை; வீட்டுக்காரம்மா தான் காரணம் என்றான்.

வீட்டுக்குள் நுழைந்தோம். வரவேற்பறையில் சில நிமிடங்கள் மட்டும் இருந்தோம். அங்கே மாட்டியிருந்த படங்கள்; ஜன்னல்களின் கண்ணாடிகள் என்று அங்கங்கு அழகு தெரிந்தது. முதலில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடத்திற்குப் போவோம் என்று வீட்டின் அடுத்த பக்கம் இருந்த ஒரு அறைக்குச் சென்றோம். பெரிய அறை. ஒரு பக்கம் சுவர் முழுவதும் வெள்ளித் திரை இடம் பிடித்திருந்தது. அதன் முன்னால் என்னென்னவோ சைஸ்களில் பல வித speakers வரிசை கட்டி நின்றன. இருக்கைகள் மூன்றடுக்கில் – gallery style – பனிரெண்டு, பதினைந்து பேர் அமர்வது போல் மிக வசதியான இருக்கைகள். முதல் வரிசையில் அமர்ந்தேன். வீட்டுக்காரர் இரண்டாவது, அல்லது மூன்றாவது வரிசைக்கு வாருங்கள் என்றார். இரண்டாவது வரிசையில் அமர்ந்தேன். ஆஹா ... சோபா என்னை விழுங்கி விட்டது. அதை ரசித்துக் கொண்டிருக்கும்போதே அழகாக மெல்லியதாக முன்னும் பின்னும் ஆடியது. ரசனை தான்!

ஒரு படம் போட்டார்கள். படம் பார்க்க நேரம் இல்லை; இரண்டு மூன்று பாட்டு மட்டும் கேட்போம் என்றான் நண்பன். எந்தப் பாட்டு என்றார்கள். 70-80 ராஜா என்றேன். இரண்டே பாட்டு வைத்துக் கேட்டோம். ‘நதியில் ஆடும் பூவனம் ...’ என்ற பாட்டும், ‘பூவில் வண்டு கூடும் கண்டு...’ (காதல் ஓவியம்) என்ற பாட்டுகள் ஒலித்தன. அது வேறு ஒரு உலகத்திற்கு நம்மைக் கடத்தின. கேட்கும் போதே மனதிற்குள் ஒரு விகசிப்பு வந்ததென்னவோ உண்மை; ம்ம்.. அது அந்தக் காலம்! மூன்று ராஜாக்களின் காலம்!

கதவைத் திறந்து உள்ளே போனதும் ஒரு பொதுவிடம். அதிலிருந்து மூன்று வெவ்வேறு பாதைகள். ஓரத்தில் ஒரு அழகான தூண். அந்த தூணிற்கும் சுவற்றிற்கும் நடுவில் ஒன்றரை அடி அகலம், ஒன்றரை அடி உயரத்திற்கு ஒரு smiling Budha. பள பளவென்று பச்சைக் கிறிஸ்டலில் நம்மைப் பார்த்துச் சிரித்தார். அங்கிருந்து ஒரு மாடிப்படி; இன்னொரு பக்கம் ஒரு சுவாமி அறை. அந்த அறையைப் பார்க்கவில்லை; ஆனால் அதன் கதவும், உயரமும் வித்தியாசமாக இருந்தன.

அடுத்து சாப்பாட்டறைக்குள் நுழைந்தோம். நிறைய வித்தியாசமான பெரிய அறை. நாம் உட்கார உயயயர ஸ்டூல். பளிங்கு மேடை. மேடையின் அந்தப் பக்கம் என்னென்னவோ சாப்பாடு காத்திருந்தது – நடப்பன, பறப்பன, நீந்துவன, முளைப்பன …. இன்னும் இரு நண்பர்கள் இணைந்தார்கள். ஒருவர் மருத்துவர். அழகியல் மருத்துவர். இன்னொருவர் திரைப்பட இயக்குனர் – பெயர்களெல்லாம் இங்கு எதற்கு? வீட்டுக்காரர் ஒரு படத் தயாரிப்பாளர் ஆகிக்கொண்டிருக்கிறார். தயாராக இருந்த படக் கதையை முந்திய நாளே நண்பனின் வீட்டிலேயே வாசித்திருந்தேன். அந்த இயக்குனரிடம் சிறிது பேசிக்கொண்டிருந்தோம். மருத்துவர் எடுத்த ஒரு செய்திப் படத்தையும் பார்த்தோம். அதை மறு பரிசீலனை செய்வது, நீளத்தைக் குறைப்பது பற்றி விவாதித்தார்கள். எனக்கு எல்லாம் புதியதாக இருந்தது – ’பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்ப்பது போல்’ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குனரும், மருத்துவரும் விடை பெற்றுப் போனார்கள்.

 மணி பதினொன்றைத் தாண்டி விட்டது. வீட்டின் மேல் மாடிக்குச் சென்றோம். படியின் முடிவு இருட்டாக இருப்பது போலிருந்தது. பாதிப் படிகள் தாண்டியதும் மேலே இருந்த விளக்கு தானாகவே பளிச்சானது! – light sensitive lights! மெத்தை ஏறியதும் அடுத்து இரு விளக்குகள் இதைப் போல் பளிச்சிட்டன. இரு அறைகள்; ஒன்றோடு ஒன்று நெருங்கி, ஆனால் தனித் தனியாக இருந்தன. ஒரு அறைக்குள் நுழைந்தோம். பாடகர் குழுவிற்கான இடம். மைக், அது இது என்று பல இருந்தன.

அடுத்த அறைக்குப் போனோம். அது ஒரு tech-room. அறையின் சுவர்கள் முழுவதையும் அடைத்துக் கொண்டு பெரிய பெரிய speakers. அனேகமாக ஒவ்வொரு speaker-ம் நாலடி நீளம் இரண்டடி அகலம் இருக்குமென நினைக்கிறேன்.
amplifiers






வகை வகையாக amplifiers; அறையின் நடுவில் voice mixing machine என்று நினைக்கிறேன். அதுவும் பெரியதாக நின்றது ... இல்லை ..
 படுத்திருந்தது.





கதவுகளுக்குப் பின்னால் இருந்த “ஒலி முழுங்கிகள்” ..!




அஷ்வினின் அமெரிக்கப் பட்டச் சான்றிதழ்




அம்புட்டு பெருசு! கதவுகளின் பின்னாலும், எதிர்ப் புறத்திலும் சில ஒலி முழுங்கிகள் நின்றன. நல்ல acoustic system.  அதன் தலைக்கு மேலே, அடுத்த அறையில் நடப்பதைப் பார்ப்பது போல் ஒரு பெரிய டி.வி.ஸ்க்ரீன். இரண்டு அறையும் ஒலி, ஒளித்தொடர்போடு இருந்தன.

இவ்வளவு எல்லாம் எதற்கு! அங்கு இரு நாற்காலிகள் இருந்தன. இரண்டுமே hi-tech chairs போலும். பார்க்கவே வித்தியாசமாக இருந்தன. எவ்வளவு நேரம் இருந்தாலும் பிரச்சனை தராத நாற்காலிகளாம். நமக்கும் ஒண்ணு இருந்தால் பதிவுகள் நிறைய போடலாமோவென நினைத்தேன்...!

தயாரிப்பாளரின் மகன் அஷ்வின் அமெரிக்கா போய் இசைக் கல்லூரியில் பட்டம் பெற்ற பையன். சின்னப் பையன் தான். ஆனால் தொழிலில் கெட்டி என்றான் நண்பன். இந்த ரிக்கார்டிங் தியேட்டர் மாதிரி சென்னையில் மட்டுமல்ல; வேறு எங்கேயும் இருக்காது என்றார்கள். தயாரிப்பாளர் பையன் அமெரிக்காவில் படித்து முடித்ததும், அங்கேயே ஸ்டூடியோ அமையப் போகும் அறையின் அளவு என்று எல்லாம் சொல்லி அதற்காகவே அங்கிருந்து எல்லாக் கருவிகளையும் வாங்கி வந்தேன் என்று தயாரிப்பாளர் சொன்னார். அந்த இரு அறைகளிலும் மொத்தம் இரண்டு கோடிக்கு மேல் பணம் கொட்டிக் கிடப்பதாகச் சொன்னார்கள்.

 நண்பன் அந்தப் படத்திற்காக ஒரு பாட்டெழுதிக் கொடுத்திருந்தான். அதில் ஒரு பகுதிக்கு மட்டும் அஷ்வின் இசை அமைத்திருந்தார். அதைப் போட்டுக் காண்பித்தார்கள். அந்தப் பாடலின் நடுவில் ஒரு இசைக்கோர்ப்பை சேர்க்க அன்று முயற்சி எடுத்தார்கள். அடுத்த அறையில் ஒருவர் டிரம் ஒன்றை வாசித்தார் – தட்டையாக இருக்குமே ... அந்த டிரம். இஸ்லாமியப் பாடகர்கள் கையில் வைத்து வாசிப்பார்களே அந்த ட்ரம்.

(அதைப் பார்த்ததும் ப்ழைய ஞாபகம் ஒன்று வந்தது. இந்த நண்பன் மாணவனாக இருந்த போது அவனது வகுப்போடு உல்லாசப் பயணம் ஒன்றிற்குச் சென்றோம்.  ரயிலில் சென்று கொண்டிருந்தோம். இளம் இரவு. இரு பக்கத்திலிருந்த மக்களின் உத்தரவு பெற்று பாட்டு, ஆட்டம் என்று தொடங்கினோம். அப்போது இந்த நண்பன் நன்றாகப் பாடுவான். கையில் ஒரு டோலக் ஒன்றை வைத்துக் கொண்டு அதைத் தட்டிக்கொண்டு பாட ஆரம்பித்தான். நன்றாக இருந்தது. ‘நேயர் விருப்பத்தின்படி’ இரண்டாம் பாட்டு பாடிக் கொண்டு இருந்தான். அப்போது தள்ளியிருந்த இடத்தில் இருந்து ஒருவர் எழுந்து வேகமாக எங்களை நோக்கி வந்தார். தகராறு வருமோ என்று பயந்து கொண்டிருந்தேன். வந்தவர் இவன் கையிலிருந்த டோலக்கை வாங்கி வைத்துக் கொண்டு, ‘நீங்க பாடுங்க தம்பி, நான் தாளம் போடுகிறேன்’ என்றார். இவன் பாட ... அவர் தாளமிட ... அடேயப்பா ... இருவரும் சேர்ந்து பின்னி விட்டார்கள். நல்ல ஒரு கச்சேரி. அந்த நினைவு மீண்டும் இப்போது நினைவுக்கு வந்தது).

இப்போது விட்ட இடத்திலிருந்து தொடருவோம் ... நண்பனும், அஷ்வினும் அவருக்குத் தங்கள் தேவையைச் சொல்ல அவர் அதை இசைக்க ... எல்லாம் கணினியில் ஏற ... பின் அதனை ஓட விட்டு ... சிலச் சில மாற்றங்கள் செய்து ... இசைத் தொழில் தொடர்ந்து கொண்டிருந்தது. (நான் பக்க ... பக்க .. என்று பேய் விழியோடு முழித்துக் கொண்டிருந்தேன்!) ட்ரம்மில் அவர்கள் எதிர்பார்த்த இசை வரவில்லை. சரி வேறு கருவி வைத்து அதைப் பின்னால் சேர்க்கலாம் என்றதும், அடுத்த அறையில் இருந்த இசைக்காரருக்கு அது ஒரு சவால் மாதிரியானது. உடனே கைகளால் வாசித்துக் கொண்டிருந்த ட்ரம்மை அகற்றி விட்டு, வாயில் கை வைத்து அடித்து பல இசைத் தாளங்களைக் கொண்டு வந்தார். அதில் ஒன்றை தேர்ந்தெடுத்தனர்.

நண்பன் rhythm போட்டு முடிச்சாச்சு ... இனி tempo .. melody சேர்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். நல்லது, நடக்கட்டும் என்று பார்த்திருந்தேன். நடப்பவை எல்லாம் பெரும் புதியவைகளாக எனக்குத் தெரிந்தன. அது சரி ... என்றைக்கு இது மாதிரியான நிஜ home theatre, musical composition எல்லாம் live-ஆக பார்க்க முடியும்?

அந்த இரவு வித்தியாசமான, பல அனுபவங்கள் தந்த இரவாக இருந்தது.

வீடு திரும்பும் போது இரவு முடிந்து, பகல் வெளிச்சம் மெல்ல எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.




*



 

Thursday, December 19, 2013

701. தருமி பக்கம் (11) - அந்தக் காலத்தில ....




 *



அந்தக் காலத்தில ....
* இரண்டரை வயதிலிருந்து ஐந்து வயதில் மதுரை வந்து பள்ளியில் சேரும் வரை வாழ்க்கை காசியாபுரத்தில் அப்பம்மா, அத்தைமார்கள், சித்தி இவர்கள் அணைப்பில் வாழ்க்கை ஓடியது. அதனால் தானோ என்னவோ போன பதிவில் சொன்னது போல் பாட்டையா வீட்டின் ஒவ்வொரு பகுதியும் வாழ்வோடு இணைந்த பகுதிகளாக மாறி விட்டன. நினைத்து பார்த்தால் காலையில் எழுந்ததும் என்னைப் பல் விளக்க ஒவ்வொருவரும் எடுக்கும் முயற்சியிலிருந்து ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகிறது. அதென்னவோ அந்தக் காலத்திலிருந்து இன்று வரை காலையில் படுக்கையில் இருந்து எழுந்து வர மனசே வருவதில்லை. இப்பவே இப்டின்னா ... அப்போ எப்படி இருந்திருக்கும்.

பெருசுக கஷ்டப்பட்டு எழுப்பி பல் விளக்க பெரும் முயற்சி எடுக்கணும். நான் சொன்ன சமையலறை பக்கத்தில் இருக்கும் திண்ணை இருக்கிறதே .. அதில் இரண்டு கல் தூண்கள் இருக்கும். லேசான செவலைக் கலரில் சுரசுரப்புடன் இருக்கும் இரு தூண்கள். ஒன்று ஆட்டு உரல் பக்கம் ஒதுங்கி இருக்கும். இன்னொன்று எல்லோரும் புழங்கும் இடத்தில் இருக்கும். தூணின் அடிப்பகுதி ஒரு சதுரக் கல். அதன் மேல் இந்தத் தூண். அதனால் சதுரக்கல்லின் நாலு பக்கமும் கொஞ்சம் முக்கோண வடிவத்தில் free space இருக்கும். அது தான் எல்லோருக்கும் பல் விளக்க சாம்பல் வைக்கும் இடம்.

அதில் எனக்குப் பிடித்த வழக்கமான பக்கத்தில் போய் உட்கார்ந்து விடுவேன். இந்த இடத்தில் இருந்தால் தான் உட்கார்ந்து கொண்டே மெல்லப் பல் விளக்க முடியும். பல் விளக்க உட்காரும் அந்த வேளையில் சமையல் கட்டின் தென்கிழக்கு மூலையில் அப்பம்மா உட்கார்ந்து ஒரு பெரிய மண்பானையில் மோர் கடைவார்கள். மத்து நீளமாக இருக்கும். காலை நீட்டி வைத்து அதில் மத்தை எப்படியோ உருட்டி அப்பம்மா கடைவார்கள். கடையும் ஒலி சீராக வரும். (இன்னும் காதில் கேட்கிறது!)  நான் பல் விளக்குவதற்கு அந்த சத்தம் ஒரு BGM மாதிரி இருக்கும்.

அப்பம்மா மோர் கடைவது பற்றிச் சொன்னேனா ... முதலில் அந்த மோர்ப்பானை அம்புட்டு பெருசா இருக்கும். மதுரை வந்த பின் விடுமுறைக்கு ஊருக்கு வருவோமா அப்போது பார்த்த போது, அந்தப் பானையின் அளவு கொஞ்சம் கொஞ்சமா சிறிதாகிக் கொண்டே வந்தது. பானை சிறிதானது. சின்னப் பானை போய் கலயம் வந்தது. மோர் கடைவது நின்று போச்சு. நான் கல்லூரிக்குப் போன பிறகு நிலைமை மோசமாகப் போனது. கலயம் போய் செம்பில் பால் மட்டும் இருந்தது. கொஞ்ச நாளில் பால் வாங்க ஆரம்பித்தார்கள். எனக்கு தயிர், மோர், நெய் எல்லாம் பிடிக்குமா. பாவமாக இருக்கும். அப்பம்மா பக்கத்து வீட்டில் போய் மோர் வாங்கி வருவார்கள். நெய் இப்போது சாப்பிடுவதில்லை என்று அப்பம்மாவிடம் பொய் சொல்லி விட்டேன்.

அடடா ... தொழுவத்தைப் பற்றிச் சொல்லவேயில்லையே. வீட்டிலிருந்து சிறிது தள்ளி பள்ளிக்கும் போகும் வழியில் தொழுவம் இருக்கும். காளை மாட்டுக்கும், பசு மாடுகளுக்கும், எருமை மாடுகளுக்கும் என்று தனித் தனி இடங்கள். இன்னொரு மூலையில் குப்பை கூளமாக பெரிதாகக் கிடக்கும். இந்தத் தொழுவத்தோடு பார்த்தால், மதுரையில் இருந்த வீடு தொழுவத்தில் நாலில் ஒரு பங்காகத்தான் இருக்கும். நிறைய மாடுகள் இருந்தன. பானையும் பெரியதாக இருந்தது. மாடுகள் குறைய பானையும் சிறிதாகி, மாடுகளும் இல்லாமல் ஆகி, கடைசியில் பால் கடையில் வாங்கும் நிலைக்குப் போய் விட்டது. மெத்தையில் நெல் குதிர் சிறுத்து, இல்லாமல் போனதும், பால் பானை மறைந்ததும் எனக்குச் சோகமான விஷயங்களாக இருந்தன. காலம் அப்படி மாறிப் போனது.

பல் விளக்கி முடித்ததும் மோர் ஊற்றி சோறு தருவார்கள். நன்றாகப் பிசைந்து தயிரும் மோரும் கலந்து கும்பாவில் தருவார்கள். அந்தப் பித்தளைக் கும்பாவில் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். என்னமா .. விஞ்ஞான ரீதியாக அப்பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள்! சாப்பிடுவது நீராகாரம். சிந்தாமல் சிதறாமல் அதைக் குடித்துக் கொண்டே சாப்பிட என்ன வசதி ..! வளர்ந்த பிறகு அங்கிருந்து கும்பா ஒன்றை மதுரைக்கு எடுத்து வர நினைத்தேன். கடைசி வரை செய்யவில்லை. கடைசியில் ஒரு தடவை கேட்ட போது, ‘அட போய்யா .. கும்பாவெல்லாம் எப்பவோ போயிரிச்சே..!’ அப்டின்னுட்டாங்க.

 பல் விளக்கி முடித்ததும் அடுத்தது பள்ளிக்கூடம் தான். என் காலைச் சாப்பாடு முடிகிறதோ இல்லையோ, அல்லது அதற்கு முன்பே அப்பம்மாவும், சித்தியும் காட்டு வேலைக்குப் போய் விடுவார்கள். இரண்டு அத்தைகள் .. அதன் பின் ஒரு அத்தை வீட்டில் இருந்தார்கள். பாட்டையா ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார் – ஜோசப் ஆரம்பப் பள்ளி. அப்போவெல்லாம் பள்ளிக்கூடங்கள் நடத்துவது காசு பார்க்க அல்ல! உண்மையிலேயே அப்போது அது ஒரு சேவை தான்.

என்னோடு சின்ன அத்தைகள் இருவரும்
எங்கள் கிராமத்திற்கு வரும் வழியில் நல்லூர் என்ற ஊர். கொஞ்சம் பெரிய ஊர். அதோடு பல ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளி, அதில் வேலை பார்க்கும் ஆசிரியர் குடும்பங்கள், பெரிய கோவில் ஒன்று – ஊர் கொஞ்சம் தட புடலாகத்தான் இருக்கும். படிச்சவங்க நிறைய பேர் அங்கே. ஆனால் எங்கள் ஊரில் அப்படியெல்லாம் இல்லை. அந்த ஊரில் இருந்த கிறித்துவர்கள் பிரிவினைக் கிறித்துவர்கள் – protestants. எங்கள் ஊரில் சின்ன எண்ணிக்கையில் இருந்த கிறித்துவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள். எங்கள் வீடு, பெரிய பாட்டையா வீடு. இந்த இருவர் வீடு மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் நிலையில் அன்று இருந்தவர்கள். மற்ற சில குடும்பங்கள் அப்படியில்லை. அதனால் கோவில் என்று ஒன்றும் கிடையாது. ஆகவே பாட்டையா ஒரு பள்ளிக்கூடம் -cum - கோவில் ஒன்று ஆரம்பித்தார். வீட்டில் படிக்கும் பெண்கள் வேலை பார்த்துக் கொள்ளலாமே என்ற ஏற்பாடு. பள்ளிக்கூடத்தையே தேவை இருக்கும்போது கோவிலாக மாற்றிக் கொள்ளலாமே என்று அதையே பள்ளியும் கோவிலாகவும் வைத்துக் கொண்டார்கள்.

மொத்தம் எனக்கு நான்கு அத்தைகள். அனைவரும் படித்து விட்டு, அப்பள்ளியில் தொடர்ந்து, ஆள் மாற்றி மாற்றி அங்கு வேலை பார்த்தார்கள். என்னைத் தனியாக வீட்டில் விட்டு விட்டா போக முடியும். அதனால் இரண்டரை,  மூன்று வயதிலேயே அத்தைமார்கள் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தேன்.

”படிப்பாளி” !!!




 
ரொம்ப சின்ன வயதிலேயே பள்ளிகூடம் போக ஆரம்பித்ததால் தானோ என்னவோ, படிப்பு வராத படு மக்காகிப் போய் விட்டேன் போலும்!




*

Saturday, December 07, 2013

700. மொழியாக்கத்தில் அடுத்த நூல் -- அசோகர்





*

முதன் முதலாக ஒரு நவீனத்தை மொழி மாற்றம் செய்து பதிப்பித்தது ஒரு பெரும் புது அனுபவமாக இருந்தது. அந்த ‘ஒரே நூலுக்கு இரு பரிசுகள்’ பெற்றது என்னை வானத்துக்குத் தூக்கிச் சென்றது என்று சொன்னால் அது முழு உண்மை. கொஞ்சம் நாள் வானத்தில் மிதந்து கொண்டிருந்தேன். ஏற்கெனவே நானாக ஒரு நூலை  எடுத்து பெரும்பாகத்தை மொழி பெயர்த்துக் கொண்டிருக்கும் போது அந்நவீனம் பதிப்பாக வெளி வந்து விட்டது. ஆர்வத்தோடு ஆரம்பித்த முதல் முயற்சி இப்படியானதே என்ற சோகத்தை அமினா தான் குணப்படுத்தியது. 

அமினா ‘வெற்றி’ பெற்றதும். ‘ஆஹா ... இனி மொழி பெயர்ப்பு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும்’ என்று வானத்தைப் பார்த்து நின்றேன். வானம் பொய்த்து வரண்டு போய் இருந்தது. சோகத்தில் நின்றேன். அப்போது அடுத்த வாய்ப்பு வந்தது.

இம்முறை வந்தது ஒரு நவீனமல்ல. வரலாற்று நூல். படிக்கிற காலத்தில் வரலாறு கொஞ்சம் அல்ல; நிறையவே உதைத்தது. வரலாற்று நிகழ்வுகளை ஆண்டுகளோடு நினைவு வைத்திருப்பது எனக்கு எளிதாகவா இருக்கும்! முதல் முறையாக இந்த நூலை வாசிக்கும் போது Robert Ludlum என்ற ஆங்கில ஆசிரியர் நினைவுக்கு வந்தார். நம்மூர் ‘கஜினி’யின் மூலமான The Bourne Identity என்ற நூலின் ஆசிரியர். இவரது கதைகளை முன்பொரு காலத்தில் நிறைய வாசித்திருக்கிறேன். இவரது கதைகளின் முதல் எழுபது, எண்பது பக்கங்களுக்கு கதை ஒன்றுமே புரியாது. பல ’நூல்கள்’ அங்கங்கே ஆரம்பிக்கும். ஏறத்தாழ எண்பது பக்கங்களுக்கு மேல் ‘நூல்கள்’ எல்லாம் ஒன்று சேர்ந்து, திரிந்து ஒரு கதையாக உருவெடுக்கும். இதே கதை தான் இங்கே. 20 x 20 மேட்ச் நடக்கும் தில்லியின் கிரிக்கெட் கிரவுண்டில் நூல்  ஆரம்பித்து. முகமது கோரிக்குப் போய், அவரைத் தாண்டி அலெக்சாண்டருக்குப் போய் ... வரலாற்றை அழகாக rewind  போய், அதன் பின் வேகமாக் forward செய்து இன்றைய நிலைக்கு வருகிறார். புத்த மதமும், அதை வேரூன்றச் செய்த பெருமன்னன் அசோகரும் ஆச்சரியமாகக் கண்முன் விரிகிறார்கள். வாசிக்கவும், வாசித்த பின் மொழியாக்கம் செய்யவும் மிகவும் நன்றாக இருந்தது. ஆனாலும் ஒரு நவீனத்தை மொழி பெயர்ப்பது போல், இந்த நூல் எளிதாக இல்லை. சிரமம் அதிகம் தான். அதனால் மொழி பெயர்க்க எடுத்த நேரமும் அதிகம்.

ஒரு வழியாக மொழி பெயர்ப்பு முடியும் தருவாயில் அந்த நூலின் ஆசிரியரே இங்கிலாந்திலிருந்து, இந்தியாவிற்கு, அதுவும் மதுரைக்கு வருகிறார் என்ற தகவல் கிடைத்தது. சந்திக்க வாய்ப்பும் கிடைத்தது. என்னை விட நாலு வயது சீனியர்! உடல் நலக் குறைபாடுகள் என்றான பின்பும், மருத்துவத்திற்குப் பிறகு நாடு கடந்து நாடு வந்து, அடுத்த  நூலுக்கு தயாராகும் அவரைப் பார்க்கும்

CHARLES  ALLEN

போது எனக்குக்  கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது. ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவரைப் பற்றி ஏற்கெனவே இணையத்தில் பார்த்து விட்டுச் சென்றிருந்தேன். ஆங்கிலோ-இந்தியர். ஆனாலும் இப்போது இங்கிலாந்து சென்று விட்டார். பல நூல்களின் ஆசிரியர். கடைசியாக - சென்ற ஆண்டு, 2012-ல் - எழுதிய நூலைத்தான் நான் மொழி பெயர்த்துள்ளேன். நூல்: ASHOKA; THE SEARCH FOR INDIA'S LOST EMPEROR.. நானூறு பக்கங்களைத் தாண்டிய நூல். மிக அதிகமான

ஆதாரங்களை வைத்து தன் நூலைப் படைத்துள்ளார். மிக மிக அழகான படங்கள். எப்படி அந்தக் காலத்தில் எடுத்த படங்கள் இவ்வளவு அழகு என்று தோன்றும் கலைப் பொக்கிஷங்கள்.

நூலின் போக்கில், நன்கு சிலரை இடித்துரைக்கிறார். கலைப் பொக்கிஷங்களையும், கோவில்களையும் இடித்து எரிக்கும் அந்நியப் படையெடுப்பாளர்கள்; பழைய அந்நிய கலைப்பொருட்களின் அருமை தெரியாமல் அவைகளை இடித்துப் போட்ட ஆங்கிலேய  அதிகாரிகள்; நம் கலைப்பொருட்களின் பெருமை புரியாத மக்கள்; ஆனாலும் எல்லோரையும் விட,  இவற்றின் அருமை தெரியாத நமது Archaeological Survey of India - ASI - என்று யாரையும் அவர் விடவில்லை. நூலை வாசிக்கும் போது வாசகனுக்கே வயித்தெரிச்சல் தரும் இவர்களைப் பற்றி ஆங்காங்கே சொல்லிச் சென்றுள்ளார்.

 உலகத்தையே ஆட்டிப் படைத்து, இன்றைய பல உலகப் பிரச்ச்னைகளுக்குக் காரணமாக உள்ளார்களே என்று எனக்கு எப்போதும் ஆங்கிலேயர்கள் மீது கோபம் உண்டு. என்னைப் போல் பலரை ஆசிரியர் சந்திருத்திருப்பார் போலும். அப்படி கோபம் உள்ளவர்களும் கூட கட்டாயம் பெருமைப் படுத்த வேண்டிய பல ஆங்கிலேய அதிகாரிகள், உயிரையும், உடல் நலத்தையும் பொருட்டாகக் கருதாது வரலாற்றுத் தடங்களைத் தேடிக் கண்டுபிடித்த பலரைப் பற்றிக் கூறும்போது அவர் கூறியது போல் அவர்களெல்லோரும் மிகவும் பெருமைக்குரியவர்கள் என்று நெஞ்சாரத் தோன்றியது. நாம் நன்றி செலுத்த வேண்டிய பெரும் மனிதர்கள் அவர்கள். நம் வரலாற்றை நாம் அறிய அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், தியாகமும் அளவில் அவ்வளவு பெரிது; உயர்ந்தது. ”உயிரை மதிக்காத பெரும் முயற்சிகள்” என்று வழக்கமாக எழுதுவோமே ... அப்படிப்பட்ட முயற்சிகளை உண்மையிலேயே மேற்கொண்ட பல நல்ல ஆங்கிலேயே வரலாற்று ஆய்வாளர்களை இந்த நூலின் நெடுகிலும் கண்டேன்.இந்தியாவிற்கும், இலங்கைக்கும் உள்ள தொடர்புகள் வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதை எடுத்துத் தந்துள்ளார். இலங்கையில் படைக்கப்பட்ட வரலாற்று ஏடுகள் நம் நாட்டு வரலாறு பற்றிக் கூறுவதும் நம்மை ஆச்சரியப் படுத்துகின்றன.

‘எதிர் வெளியீடு’ இந்நூலைத் தேர்ந்தெடுத்தமைக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் ஆசிரியர்  தன் நூலைப் பற்றிச் சொல்லும் போது, இங்கிலாந்தில் விற்றதை விட, இந்த நூல் வட இந்தியாவில் பல மடங்கு அதிக நூல்கள் விற்றதாகக் கூறினார். உண்மை தானே. நமது நாட்டு வரலாற்றை, இதுவரை தெரியாத, நாம் அறியாத வரலாற்றுப் பகுதியை, அதுவும் இஸ்லாமியர் படையெடுப்பிற்கு முன்புள்ள மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை, சான்றுகளோடு இந்நூலில் தருகிறார்.

நூலை வாசித்து முடிக்கும் போது, நம்மையறியாமலேயே நமது நாட்டின் மீது, நம் நாட்டு பழங்காலத்து வரலாற்றின் மீது, நூலின் நாயகன் அசோகன் மீது நமக்கு பெருமையும் மகிழ்ச்சியும் பெருகுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்ன அசோகரின் வார்த்தைகளின் நிஜம் நம்மை இன்றும் சுடும்; திருத்தும். அவனது பரந்த சிந்தனைகள் எவருக்கும் நிச்சயம் ஆச்சரியமளிக்கும்.நூலின் ஆசிரியர் சொல்வது போல், வரலாற்றில் இது போன்ற ஒரு “பெரும் சிந்தனையும், மக்களை வழி நடத்துவதும்” எந்த மன்னனிடமிருந்தும் உலகத்தில் வந்ததேயில்லை என்பது நமது பெருமைக்குரிய விஷயம். நாட்டின் வழியெங்கும் கிணறுகள் வெட்டினான் என்று சிறு வயதில் ப்டித்திருப்போம். கிணற்றுக்குப் பக்கத்தில் மரங்களை நட்டு மக்கள் அவ்விடங்களைத் தங்குமிடங்களாக - motels !!  - மாற்று எண்ணம் அப்பெருமன்னனுக்கு வந்ததே என்பதே ஆச்சரியம்!

இதையும் விட மனிதர்களுக்கு நலமளிக்க மருந்துச் செடிகளை தன் சாம்ராஜ்யம் முழுமையும் பயிரிட்டிருக்கிறான். எனக்கு வியப்பளித்த மற்றொன்று - சில பிராணிகளைக் கொல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளான். - red list of threatened species !! மதங்களைப் பற்றி அவன் சொல்லும் கருத்துகள் மனித ஜன்மம் இந்த உலகில் இருக்கும் வரை நம்மோடு இருக்க வேண்டிய உயர் கருத்துகளாகும்.

அசோகர் பெரும் மன்னன் மட்டுமல்ல; அவன் பெரும் மனிதன்.

இந்நூலை மொழி பெயர்த்தமைக்காக எனக்குப் பெரும் மகிழ்ச்சி.வரலாற்றின் நாமறியாத ஒரு புதிய பகுதியை, நம் மொழியில், அதனை  உங்களோடு பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சி இது.



*